ப்ரதித்வந்தி [Pratidwandi] [প্রতিদ্বন্দ্বী][1972 ] [பெங்காலி ] [இந்தியா]


த்யஜித் ரே இந்தியகலை மற்றும் அழகியல்  சினிமாவின் பிரம்மா, இவரின் கேமரா கோணங்கள் தனித்துவமானவை, ஒவ்வொரு காட்சியிலும் புதுமை புகுத்துவதிலேயே சதா சிந்தனையாக இருந்தவர். இவரின் படங்கள் அனைத்திலுமே ஒரு ஆத்மார்த்தமான சிருஷ்டி நிறைந்திருக்கும், ப்ளாக் அண்ட் ஒயிட்டில் இவர் எடுத்த திரைப்படங்கள் காலம் கடந்து நிற்கின்றன, நிற்கும், அகில உலக அளவில் இயக்குனர் ஜாம்பவான்கள் அனைவருமே போற்றி, ஒத்துக்கொண்டு ,மதிக்கும் ஒப்பற்ற ஆளுமை சத்யஜித்ரே,மார்ட்டின் ஸ்கார்ஸஸி இவரது படங்கள் அத்தனையையும் மிகவும் விரும்பி தன்னார்வத்துடன் செப்பனிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் அதிகம் பேசப்படாத ,குடத்திற்குள் வைத்த விளக்கு போன்ற ஒரு படைப்பு தான் கொல்கத்தா ட்ரிலஜி, இதில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரதித்வந்தி, [ஆங்கிலத்தில்   The Adversary] மிக முக்கியமான படம், அடுத்த தவணையான 1971 ல் வெளிவந்த சீமாபத்தா [ஆங்கிலத்தில் Company Limited], மூன்றாவதாக 1976 ஆம் ஆண்டு வெளிவந்த ஜன ஆரன்யா[ஆங்கிலத்தில்  The Middleman] இம்மூன்றுமே 1970களில் இந்தியாவில் வங்கதேசத்தில்  நீக்கமற நிறைந்திருந்த தவறான பொருளாதாரக் கொள்கை, அரசு&தனியார்  அலுவலகங்களில் பெருகிவிட்டிருந்த ஊழல்கள்,தில்லுமுல்லுகள்,  வேலையில்லா திண்டாட்டம், கொடிய பசி பஞ்சம் பட்டினி,நக்ஸல் பாரி இயக்கம், அமைப்பு சேரா யதார்த்தவாதம், சந்தர்ப்பவாதம் போன்றவற்றை பட்டவர்த்தனமாகப் பேசும் நேர்மையான படைப்புகள்.ரேவின் தன்னிகறற்ற சர்காசிசத்தின் ஊடாக நாம்  நடந்து முடிந்த  ஒரு வரலாற்றை ,மானுடவியலை காணமுடியும்.

தன் படைப்புகளில் ரே பயன்படுத்திய யுக்திகள், காலம் கடந்தும் பேசப்படுபவை, ஃப்ரென்சு நியூ வேவ் சினிமாவின் பாதிப்பில் ரே உருவாக்கிய படம் இது. ரே இதில் ஏகப்பட்ட ஜம்ப் கட்களை உபயோகித்திருப்பார்.ரேவிடம் படைப்புத்திறனும் அதை  லாபி செய்யும் திறமையும் ஒருங்கே குடிகொண்டிருந்தது, அவரது பெரும்பாலான படங்கள் ஆங்கிலத்தில் பெயரும், போஸ்டரும் கொண்டிருந்தன, அத்தனை படங்களுமே பெரும்பாலானவை உலக திரைப்படவிழாக்களில் பங்குபெற்று உயர்ந்த விருதுகளையும், சம்பிரதாயமில்லாத பாராட்டுக்களையும் வென்றுள்ளன என்பதே ரேவின் தனித்திறமைக்கு சான்று, ரே அடிப்படையில் ஒரு ஓவியர் என்பதால் அவரின் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமே ஒரு ஓவியம் போன்ற ஒரு தோற்றம் பொருந்திவரும், அவரின் பெண்கள் கதாபாத்திரங்கள்,ஆண்கள் கதாபாத்திரங்கள்,இயற்கையான அழகை பரைசாற்றும் படி   அமைந்திருக்கும், சாதாரணத்தில் இருக்கும் அழகியலைக் ரேவின் கண்கள் மிகத்துல்லியமாக  படம் பிடித்துக்காட்டும்,அவரே பல சமயம் கதாபாத்திரங்களுக்கு ஒப்பனை  இடத்துவங்கிவிடுவார்.

ப்ரதித்வந்தி என்றால் எதிராளி அல்லது போட்டியாளன் என்பது பொருள்,படத்தின் துவக்கத்திலேயே மருத்துவம் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் சித்தார்த்தாவின்[Dhritiman Chatterjee ] தந்தையின் சவ  புறப்பாட்டை பார்க்கிறோம்,ராம் ராம் சத்யஹ!! என்னும் கோஷம் பிண்ணனியில் ஒலிக்கிறது, இதில் நவீன யுக்தியாக படத்தின் கதாபாத்திரங்களின்  வழமையான உணர்ச்சி கொந்தளிப்பான காட்சிகளை ரே நெகெடிவ்வில் [X-ray digressions] காட்டியிருந்தார், அது சவத்தை மாடியிலிருந்து இறக்கி கீழே கொண்டு வைத்து, அதை சிதை மூட்டும் வரையிலும் தொடர்கிறது, அதன்பின்பு கொல்கத்தாவின் நகரவாழ்க்கையை நிதர்சனமாக காட்டுகிறார்.

 இப்போது சித்தார்தா   கொடிய வெயிலில் வேலை தேடி நேர்முகத் தேர்வுக்கு போகிறான், அவன் முறை வந்தவுடன் கேட்கும் கேள்விகள்,அவனின் பதில்கள்,ஏற்கனவே இளங்கலை பாட்டனி முடித்துவிட்டு,மருத்துவம் இரண்டாம் வருடம் படித்தவன் தந்தையின் திடீர் மரணத்தால் படிப்பை கைவிட வேண்டியதாகிவிட்டதை அறிகிறோம், அவனுள்ளே ஒரு கம்யூனிஸ்ட் அனுதாபி இருந்தாலும் அவன் தீவிர கம்யூனிஸ்டு அல்லன், அவன் இருத்தலியலால் பீடிக்கப்பட்டு தனக்கென ஒரு  வேலையை தேடிக்கொள்ள பிரயத்தனப்படுகிறான், ஆனால் வேலைவாய்ப்புகள் பிரகாசமாயில்லை, வேலைக்கு ஆள் எடுத்தாலுமே சிபாரிசு கொண்டுதான் ஆளை   அமர்த்துவதை அறிகிறோம்,  ரத்தத்தில் கொஞ்சம் ரோசம் , சூடு சுரணை இருந்தால் எங்கிலும்  வேலை கிடைக்காத நிலை,

 சித்தார்த்தாவின் தங்கை ஸுடாப்பா [Krishna Bose] , நல்ல வேலையில் காரிய தரிசியாக இருக்கிறாள், ஆனால் அவள்  தன் முன்னேற்றத்துக்கு வேண்டி தன் பெண்மையையே விட்டுக்கொடுக்க வேண்டியதாயிருக்கிறது, அவளின் 40 களில் இருக்கும் மேலதிகாரி, அவளுக்கு ஓவர் டைம் என்னும் பெயரில் தன் பாலியல் இச்சையை தணித்துக்கொள்கிறான்,அவனின் மனைவி சித்தார்த்தாவின் அம்மாவிடம் வந்து முறையிட்டு மகளை வேலையை விட்டு நிறுத்தி தன் குடும்பத்தை வாழ விடக் கேட்கிறாள், ஆனால் தங்கையோ வேலையை விடுவதாகயில்லை, அடுத்த மாதம் முதல் தான் தன் மேலதிகாரியின் அந்தரங்க காரியதரிசியாக பதவி உயர்வு பெற்றிருப்பதாகவும், அதன் மூலம் தனக்கு 200 ரூபாய் சம்பள உயர்வு கிடைத்திருப்பதாகவும்,  பெருமை பீத்திக்கொள்கிறாள்,

சிறுவயதில் தன் அண்ணனிடம் மிகுந்த பாசம் கொண்ட தங்கை அவள்,கால ஓட்டத்தில் மிகுந்த சுயநலமியாக அகிவிட்டிருக்கிறாள். தன் மேக்கப் செலவுகள்,நடனம் கற்றுக்கொள்ளும் செலவுகளுக்கே தன் வருமானத்தில் பெரும்பங்கை செலவிடுகிறாள், இது தவிர மாடலிங்கும் செய்ய ஆரம்பித்திருக்கிறாள், உடம்பை கடை விரித்து அதில் வருமானம் ஈட்டினால் பிழை இல்லை என்னும் நவீன சித்தாந்தம் பேசித் திரிகிறாள், சித்தார்த்தாவின் தம்பி  டுனுவோ [Debraj Ray ] தீவிர நக்ஸல் பாரி இயக்கத்தில் பங்கு கொண்டு களப்பணியாற்றி வருகிறான்,திடீர் திடீரென உடம்பில் காயங்களுடன் வரும் தம்பியை பார்ப்பது  சித்தார்த்தாவிற்கு கலக்கத்தை தருகிறது.ஆக தங்கையும் தம்பியும் சித்தார்த்தாவை சிறிதும் மதிப்பதில்லை,


தங்கள் முடிவுகளை தாங்களே எடுக்கத் துவங்கி விட்டது தெரிந்தாலும் சித்தார்த்தாவினால் விட்டு விலகி விட முடியவில்லை.தங்கையுடன் சித்தார்த்தா சிறுவயதில் சென்ற சுற்றுலாவின் போது,அவள் அங்கே காட்டிய ஒரு பறவையின் இனிய சங்கீதத்தை அடிக்கடி நினைவு கூறுகிறான் சித்தார்த்தா, அதை இந்த ஜனசந்தடி மிகுந்த கொல்கத்தா நகரினூடே தேடியவன் ஒரு சமயம் தன் தம்பியுடன் மெல்லிய விஸ்கி போதையுடன் புது மார்க்கெட் சென்றும் தேடுகிறான்,அங்கே அவன் தேடிய பறவை கிடைப்பதில்லை,

 தம்பி நக்ஸல் பாரிகளுடன் சேர்ந்து சுற்றியலைந்து தேவையான பொருளை ஈட்டிக்கொள்ளுவதை அறிந்திருக்கிறான், ஆனாலும் சித்தார்த்தாவின் செலவுகளுக்கு அவன் வாயை விட்டு கேட்டாலுமே தம்பியும் தங்கையும் பணம் தருவதில்லை, அந்த அளவுக்கு சுயநலமிகளாக இருக்கின்றனர். சித்தார்த்தா ஒரு சமயம் தன் மருத்துவக்கல்லூரி புத்தகங்கள் இரண்டினை விற்று சேகுவாரேவின் கெரில்லா வார்ஃபேர் என்னும் புத்தகத்தை வாங்கி தன் தம்பிக்கு பிறந்தநாள் பரிசளித்திருக்க,அதை தம்பி சித்தார்த்தாவிடமே திருப்பித்தந்து அதை விற்று பணம் வாங்கிக்கொள் என்கிறான்.

தங்கையின் மேலதிகாரியின் சொகுசு பங்களாவிற்கு போன் செய்துவிட்டுப்  பார்க்கச் செல்லுகிறான் சித்தார்த்தா, அங்கே காத்திருக்கையில் மேலதிகாரியை சுட்டுக்கொள்ளுவது போல நினைத்துப்பார்க்கிறான் [ரேவின் இப்படத்தில் தன் வழமையான பாணியிலிருந்து விலகி கனவுக்காட்சிகளையும் புகுத்தியிருந்தார் ] ஆனால் நிஜத்தில் ,இவனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை, தங்கையின் ராஜினாமாவைப்பற்றி  பேசப்போனவனை மேலதிகாரி லாவகமாக பேசி  மடக்கி, இங்கேயே நான் வரும் வரை காத்திரு, நான் உனக்கு,எனக்குத் தெரிந்த நிறுவனத்தில்  வேலைக்கு சேர்க்க சிபாரிசு கடிதம் தருகிறேன்  என தூண்டில் வீசி விட்டு அகல்கிறான்,

சித்தார்த்தா அங்கே இருக்கப் பிடிக்காமல் விருட்டென வெளியேறி விடுகிறான், அங்கே சாலையில் ஒரு பென்ஸ் கார் பாதசாரி சிறுமியை இடித்து விட்டு நிற்க, அதன் உரிமையாளரை, தெருவில் வருவோர் போவோர் எல்லாம் சேர்ந்து ,அதுவரை தாங்கள் தேக்கி வைத்திருந்த ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வை தர்ம அடிகளாக மாற்றி , துவைத்து எடுப்பதைப்  பார்க்கிறான், அவர்களோடு சித்தார்த்தனும் சேர்ந்து கொள்ள ஆயத்தமாகிறான், காரினுள்ளே அந்த உரிமையாளனின் மகள் பயந்த படி இவனைப்பார்த்ததும் மேலும் வீரிட, இவன் சுய நினைவுக்கு வந்தவன் விலகிச்செல்கிறான்.ரே துயரமான ஒரு காட்சியிலும் பொதிந்திருக்கும் அழகியலையும் அவல நகைச்சுவையையும்  நுட்பமாக  அங்கே வெளிப்படுத்துகிறார்,

 ஒரு காட்சியில் ,சித்தார்த்தா வெயிலின் கொடுமையால் போக்கிடம்  இன்றி  சினிமா தியேட்டருக்குள் நுழைந்து படத்துக்கு காத்திருக்க,அங்கே இந்திராகாந்தி  அம்மையார் தன் அரசின் வருமானத்தை, பல புதிய வரிவிதிப்புகளின் மூலம் பல்கிப் பெருக்கிய  சாதனை,  நியூஸ் ரீலாக திரையில் வருகிறது,  அவனுக்கு தலையை வலித்துக்கொண்டு வருகிறது, மேலே பால்கனியில் நக்ஸல்பாரியின் ஆட்கள் ஒருவரால் நிறுவப்பட்ட அதிக சக்தி  இல்லாத குண்டு வெடிக்க, திரைப்படம் ரத்து செய்யப்படுகிறது, சித்தார்த்தா இப்போது ஒரு  நினைவுச்சின்னம் ஒன்றின் நிழலில் புதிதாக சிகரட் பிடிக்க, அங்கே வரும் ஹிப்பிகள் கஞ்சா புகைத்துக்கொண்டு,ஒன்றும் இல்லாததில் எல்லாம் சந்தோஷத்தை தேட முயற்சிப்பதை பார்க்கிறான்,

அங்கே பசுவை அவர்கள் பார்க்க அதற்கும் ஒரு கொண்டாட்டம்,இந்த சிதிலமடைந்த ஒரு நினைவுச்சின்னத்தை பெரிய பொக்கிஷமாக கருதி அதற்கும் ஒரு கொண்டாட்டம், என ஹிப்பியின் வாழ்க்கை மிகவும் நகைப்புக்கிடமாக இருப்பதை அறிகிறான் சித்தார்த்தா. தியேட்டரின் கூட்ட நெரிசலில் தன்னுடைய வாட்சின் பாலன்ஸ் ஸ்ட்ராப் பட்டை அறுந்து  போக அதை மாற்ற 8-50ரூபாய் ஆகும் என சிப்பந்தி சொல்கிறார், தன்னிடம் அத்தனை ரூபாய் இல்லாததால் மாற்றாமல் வாட்சை வாங்கி வருகிறான்.

ஒரு கடையில் சென்று தலைவலிக்கான சாரிடான் மாத்திரையை 60 பைசா கொடுத்து வாங்கியவன், நீரும் வாங்கி வெறும் வயிற்றில் விழுங்குகிறான், போக்கிடம் இருந்தாலும்,வீட்டுக்கு உடனே போக விரும்பாதவன்,தன் நண்பர்கள் அறைக்கு செல்கிறான்.அங்கே அவனின் நண்பன் ஒருவன் செஞ்சிலுவை சங்கம் கொடுத்த மோல்டட் உண்டியலில் இருந்து ரூபாய் நாணயங்களை லாவகமாக நோண்டி எடுக்கிறதைப் பார்க்கிறான். இவன் அதை தவறு என உரைத்து பிடுங்க, நண்பன் ,தனக்கு தேவை அன்றைய தினத்தை ஓட்ட ரூபாயே அன்றி இவன் புத்திமதிகள் அல்ல என்கிறான்,

2 மைல்கள் கால்கடுக்க நடந்து உண்டியல் குலுக்கியதற்கு தனக்கு ஏதேனும் பயன் இருக்க வேண்டாமா?என மேலும் கேட்கிறான் நண்பன்.இது போல உலகத்தரமான எள்ளல்களை ரே காட்சிப்படுத்தியிருப்பார். சித்தார்த்தா காணும் கனவுகள் ரேவினால் மிகப் புதுமையாக படமாக்கப்பட்டுள்ளன. தம்பியுடனான வாதத்தின் போது தன் தலை ஜில்லெட்டின் எந்திரத்தில் இருந்து விழும் கூரிய தகட்டால் துண்டாடப்படுவது போன்றும்,தன் தம்பியை வங்காள போலீசார் குழு ரைஃபிளால் குறிவைத்து சுட்டு வீழ்த்துவது போன்றும், தன் தங்கை கடற்கரை மணலில் பிகினியுடன் மாடலிங்கிற்கு நிற்க அவளை காமாந்தகர்களின் கண்கள் மொய்ப்பது போன்றும் பலகாட்சிகளை உதாரணமாகச் சொல்வேன்.

சித்தார்த்தாவுக்கும் அவன் தம்பிக்கும் நடக்கும் விவாதங்கள், மிகவும் சுவையானவை, நக்ஸல் பாரிகளுடன் இணைந்து கொலைகூட செய்யத்துணிகிற தம்பியைப் பார்த்து, நீ சிறு வயதில் கோழியை கொல்வதைக் கூட கண் கொண்டு பார்க்க மாட்டாய்,நீயா இப்படி மாறிப் போனாய் என்கிறான், தம்பியோ ஃப்ரெஞ்சு புரட்சியின் போது உன் போன்ற சான்றோர் ஏராளம் பேர் ஜில்லெட்டின் எந்திரத்தில் அமர்த்தி தலை கொய்யப்பட்டனர்,கால ஓட்டத்தில் எதுவும் இங்கே நடக்கும் என்கிறான்.

இப்போது சித்தார்த்தாவை அவன் தம்பி ஒரு முக்கியமான இடத்துக்கு அழைத்துப்போகிறேன் என்று கூட்டிப்போகிறான்,அதற்கு முன்பாக ஒரு உயர்தர சீன உணவகத்துக்கு அழைத்துப்போகிறான், அங்கே வைத்து சீன உணவை மிகுந்த பரீட்சயத்துடன்  ஆர்டர் செய்கிறான்,  பின்னர் அரிஸ்டோக்ராட் விஸ்கி 2 லார்ஜ் தருவிக்கிறான், குடித்தவுடன்,இருவரும் சீன உணவுகளை விழுங்கிவிட்டு, ஜனசந்தடியில்லாத ஒரு பகுதியில் உள்ள வீட்டின் மாடிக்கு சென்று தம்பி கதவை தட்டுகிறான்,உள்ளே பிள்ளைகள் சத்தம் கேட்க,கதவை திறந்த ஒரு இளம் தாய் ஒருத்தி,கதவை திறக்கமுடியாது என விளையாடிவிட்டு,கதவை அடைக்கிறாள்,குழந்தைகள் விளையாட வழிபண்ணிவிட்டு,இருவரையும் உள்ளே விட்டவள்,வேகமாய் கதவை அடைக்கிறாள்,

தம்பியை அவள் மிகவும் உரிமையுடன் அழைக்கிறாள்,சித்தார்த்தா அருவருப்பும் கூச்சமும் ஒருங்கே கொண்டிருக்கிறான்,தம்பி அவளை நோக்கி,சித்தார்த்தாவை நன்கு கவனிக்க சொல்ல,அவள் குளித்துவிட்டு வருகிறேன் என்கிறாள்,சித்தார்த்தா சிகரெட் பொருத்த,பற்ற வைக்க நெருப்புக்கு குனிகிறாள்,அவளும் கேட்டு வாங்குகிறாள்,தம்பி இருவருக்குமாக இரண்டு பெரிய ரூபாய் தாள்களை,அவளது ஒப்பனை மேசை அறையை இழுத்து, அதனுள் திணிக்கிறான்,பின்னர் அவளுடைய கூந்தலை தன் கைகளால் அலைந்தபடி,இந்தக் கூந்தலில்  யாரையும் இவள் முடிந்து விடுவாள் என்கிறான். சித்தார்த்தாவிற்கு மிகவும் கோபமும் ஆற்றாமையும் வருகிறது, தன் அத்தியாவசிய செலவுக்கு வாய்விட்டுக் கேட்டும் உதவாதவன் இப்படி பரத்தையருக்கும் குடிக்கும் லாகிரிக்கும் செலவிடுவதை வெறுக்கிறான்.அங்கேயிருந்து தம்பி கத்த கத்த  அகல்கிறான்.

வீதியில் இறங்கி நடந்தவனை ,ஒரு இருண்ட வீட்டின் முன்பாக நின்று ஒரு இளம் பெண் ,உங்களைத்தானே நில்லுங்கள், என்று இறைஞ்சுகிறாள், இவன் அடுத்த கேஸா? என திகைக்க, அவள் என் வீட்டில் ஃப்யூஸ் போய்விட்டது, ஃப்யூசுக்கு வயரை வைத்துள்ளேன், ஆனால் மாட்ட பயமாயிருக்கிறது, உதவுங்கள், என்கிறாள், இவன் நெருப்புக்குச்சி கிழித்து அந்த வெளிச்சத்திலேயே ஃப்யூசை மாற்றித்தர, அவள் அவனுக்கு பழச்சாரை தந்து அமர வைத்து பேசுகிறாள், அவள் கேயா [ Jayshree Roy] என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள், சித்தார்த்தாவை அடிக்கடி தெருவில் பார்த்திருப்பதாக சொன்னவள், அவளின் அம்மா சிறுவயதிலே ,இறந்து விட, அப்பா வேறு ஒரு பெண்மணியுடன் தொடர்பில் இருப்பதாகவும் ,அவளையே விரைவில் மணக்கப்போவதாகவும் சொல்கிறாள்,

கேயா விரைவில் தில்லிக்கு சென்று கல்லூரி சேரப்போவதாக சொல்கிறாள். அவனுடன் கடிதத் தொடர்பில் இருப்பேன், சித்தார்த்தாவுக்கு வேலை கிடைத்தவுடன் வாழ்வில் இருவரின் அடுத்த நடவடிக்கை குறித்து பேசலாம், என தீர்க்கமாக சொல்கிறாள். சித்தார்த்தாவை நேரம் கிடைக்கையில் வீட்டுக்கு வந்து போகக் கேட்கிறாள் கேயா. இருவருக்கும் சிலநாட்களில் நல்ல நட்பு உண்டாகிறது, சித்தார்த்தா கொல்கத்தாவை விட்டு வெளியேற விரும்பவில்லை என கேயாவிடம் சொல்ல,அவள் ஏமாற்றம் அடைகிறாள், எந்நேரமும் வருமானவரித்துறை அதிகாரியான தன் தந்தைக்கு தில்லிக்கு மாற்றம் வரலாம் என்கிறாள், அவள் ஊரைவிட்டுப்போக தயாரானது சித்தார்த்தாவுக்கு உள்ளூர ஏமாற்றமாயிருக்கிறது,

இப்போது கேயாவை காதலிக்கவும்,மணம் புரியவும் கூட தனக்கு தகுதி தேவையிருப்பதின் அவசியத்தை உணர்கிறான் சித்தார்த்தா, தன் தூரத்து உறவினர் ஒருவர் வேலைக்கு சிபாரிசுக் கடிதம் தர சித்தார்த்தா   நேர்முகத்தேர்வு ஒன்றுக்கு செல்கிறான், அங்கே கொல்கத்தாவில் மருந்து விற்பனை பிரதிநிதி வேலை எதுவும் காலி இல்லை, ஆனால் மேற்கு வங்காளத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஊரான Balurghat ல் ஒரு மருந்து டெலிவரி ஆள் வேலை இருப்பதாகவும், இப்போது அதை ஏற்று, முன்னேறும்படி அந்த அதிகாரி வலியுறுத்த இவன் தன் முடிவைச் சொல்ல 10 தினங்கள் கேட்கிறான்.ஆனால் அங்கே செல்ல விரும்பவில்லை,மறுநாளே கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் நிறூவனத்துக்கு நேர்முகத்தேர்வுக்குச் செல்கிறான்.

ரேவின் ஒரு அற்பணிப்பிற்கு உதாரணமாக இந்த ஒரு நேர்முகத்தேர்வு காட்சியை சொல்லுவேன், அங்கே 4 பேரைத் தேர்வு செய்யவேண்டிய காலியிடங்களுக்கு 275 பேர் குழுமியிருக்க, கொடிய வெயிலில் நேர்முகத் தேர்வு நடக்கிறது, அது ஒரு அழுக்கு காரிடார்,அங்கே இருந்த 2 மின்விசிறியில் ஒன்று பழுது பட்டிருக்க, ஒன்று அழுது வடிந்த படி சுற்றிக்கொண்டிருக்கிறது, வேலை தேடுவோர் பசியைப் போக்க சிகரெட்டாய் குடித்து மணல் வாளியில் சொருகிக்கொண்டிருக்க, சித்தார்த்தாவின் முறை வருவதற்கு இன்னும் 100 ஆட்கள் போக  வேண்டும், அவன் வந்திருக்கும் ஆட்களை நோட்டம் இடுகிறான்,

அதில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு  தினுசு, ஒருவன் கோட் சூட்டுமாக இடம் வலமாக பீடு நடைபோட்டவன், புழுக்கத்தின் மிகுதியால்  அதை கழற்றி விட்டு  சுருதி குறைத்து இப்போது சொங்கி நடை போடுகிறான், அவன் ஆறடி உயரமிருப்பதால்  அவ்வேலை தனக்கு கிடைக்காது என ஐந்தரை அடி இருக்கும் ஒருவன் புலம்புவதை கவனிக்கிறான் சித்தார்த்தா.காரிடாரில் காத்திருக்கும் ஒவ்வொருவரும் எலும்புக்கூடுகளாக உருமாறும் அக்காட்சி குறிப்பிடத்தக்கது,அந்த எலும்புக்கூடுகளை மிக சிரத்தையாக நிற்கவும்,சாயவும்,அமரவும்,கூன் போடவும் வைத்திருந்தார் ரே,[12 வருடம் கழித்து வந்த மூடுபனி படத்தில் பாலு மகேந்திரா ஒரு பிளாஸ்டிக் லேப் எலும்புக்கூட்டை க்ளைமேக்ஸ் காட்சிக்கு மெத்தனமாக பயன் படுத்தியது ஏனோ நினைவுக்கு வந்தது] அப்போது ஒருவன் அசதி மற்றும் பசி மிகுதியால் மயங்கி விழ, அவனை சிலர் அப்புறப்படுத்துகின்றனர்,

அக்காட்சியுடன் சித்தார்த்தாவுக்கு தன் மருத்துவக் கல்லூரி வகுப்பில் கேட்ட எலும்புக்கூடுகள் பற்றிய பாடம் வந்து போகிறது, மற்றொரு சாலை கடக்கும் காட்சியில் ஒரு பெண்ணின் ஒயிலான நிமிர்ந்த மார்பகங்களைப் பார்த்த சித்தார்த்தாவுக்கு மருத்துவக்கல்லூரியில் தான் கேட்ட மார்பகங்களைப் பற்றிய பாடம் நினைவுக்கு வருகிறது, மற்றொரு காட்சியில் தன் தோழியின் வீட்டில் அவளின் சித்தி தலைவலிக்கு மாத்திரையை அவர் தொண்டைக்குள் அத்தனை பெரிய மாத்திரை இறங்காது என சலித்துக்கொண்டே விழுங்க, , சித்தார்த்தாவுக்கு மருத்துவக்கல்லூரியில் தான் கேட்ட தொண்டை பற்றிய பாடம் நினைவுக்கு வருகிறது, இப்படி மிகப் புதுமையான, சுவையான பல கனெக்‌ஷன்களை கையாண்டிருந்தார் ரே.

அதற்குப் பின்னும் சித்தார்த்தாவினால் சும்மா இருக்க முடியவில்லை, சிலரை சேர்ந்துக் கொண்டு, அறை வாசலில் இருந்த காவலாளியை தள்ளிவிட்டு, அறையின் உள்ளே சென்றவன் அங்கே நேர்முகத் தேர்வு எடுப்பவரிடம் , வெளியே குழுமியுள்ளோர் அமர ஏற்பாடு செய்யுமாறு சொல்ல,அவர்கள் விட்டேத்தியாக , இதுவும்  அவர்களின் பொறுமைக்கு ஒரு சோதனை தான், இதை சகித்துக்கொள்பவன் தான் நல்ல சிப்பந்தியாக இருக்க முடியும்,உன் பெயர் என்ன? என் /உன்/ அவர்கள் நேரத்தை வீணாக்காதே!!! என்கின்றனர். சித்தார்த்தன் தன் இடம் வலம் நோக்க, உடன் வந்தவர் யாருமே இல்லை, அவனும் வெளியேறி மீண்டும் காத்திருக்க,இன்னும் பெரும் திரளான நபர்கள் மீதமிருக்க,காவலாளி அவர்களை நோக்கி உணவு இடைவேளை அரைமணிக்கு பிறகு மீண்டும் நேர்முகத்தேர்வு நடக்கும் , நீங்கள் எல்லாம் கலையலாம், என்கிறான். சித்தார்த்தாவுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டு விழித்துக் கொள்ள, அறைக்குள்  வேகமாய் நுழைந்தவன், அங்கே மூன்று அதிகாரிகளையும் அடித்து துவைக்கிறான், நாற்காலியால் தாக்கி விட்டு வெளியேறுகிறான்.

ஒருவாரம் கடந்த நிலையில் சித்தார்த்தா Balurghat என்னும் ஊருக்கே வேலைக்கு சேர வருகிறான், அங்கே ஒரு அழுக்கு அறைக்குள் தங்க வைக்கப்படுகிறான், இவனை போன்றே அங்கே வேலைக்கு வந்தவர் ஒரு அறையில் குழுவாக தங்கியிருப்பதை பார்க்கிறான், அயற்சியுடன் வெளியே பால்கனிக்கு வந்தவன் அங்கே சவ ஊர்வலம் செல்வதை வேடிக்கை பார்க்கிறான். ராம் ராம் சத்யஹ!! என்னும் கோஷம் பிண்ணனியில் ஒலிக்க, அங்கே அவன் அதுநாள் வரை தேடிக்கொண்டிருந்த பறவையின் சங்கீதமும் கேட்கிறது.தொலைவில் அப்பறவையையும் பார்க்கிறான், அதுமுதல் சித்தார்த்தா ஒரு புதிய ஆரம்பத்தை எதிர்நோக்குகிறான்.

தற்கால கலைசினிமாவின் முக்கிய இயக்குனரான சுதிர் மிர்ஸா இயக்கிய Hazaron Khwashein Aisi 1970களின் எமர்ஜென்ஸியையும் , நக்ஸல்பாரி இயக்கத்தையும் நேர்மையாக சித்தரித்த படம், அதிலும் கதாநாயகனின் பெயர் சித்தார்த்தா தான் ,இயக்குனர்  சத்யஜித்ரேவிற்கு செய்த ஒரு ட்ரிப்யூட்  என நினைக்கிறேன். படம் அவசியம் பாருங்கள், உங்கள் கண்ணோட்டத்தில் கருத்துக்களை இங்கே பகிருங்கள். தேடிப்பார்க்கும் தூரத்தில் தான் இத்தகைய பொக்கிஷங்கள் இருக்கின்றன, யூட்யூபில் முழுப்படமும் ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கிறது.இந்த கொல்கத்தா ட்ரிலஜியின் அடுத்த இரண்டு தவணைப் படங்களையும் விரைவில் எழுதுவேன்.

Release Year: 1970
Producer: Priya Films (Nepal Dutta, Asim Dutta)
Screenplay & Direction: Satyajit Ray, Based on the novel: 'Pratidwandi' by Sunil Ganguli.
Cinematography: Soumendu Roy, Purnendu Bose
Editing: Dulal Dutta
Art Direction: Bansi Chandragupta
Sound: J. D. Irani, Durgadas Mitra
Music: Satyajit Ray


Cast:

Dhritiman Chatterjee ... Siddhartha Chaudhuri
Jayshree Roy ... Keya
Debraj Ray ... Tunu
Krishna Bose ... Sutapa
Mamata Chatterjee ... Sanyal's wife
Kalyan Chowdhury ... Shiben
Indira Devi ... Sarojini
Soven Lahiri ... Sanyal
Pisu Majumdar ... Keya's father
Dhara Roy ... Keya's aunt
Shefali ... Lotika

ப்ரதித்வந்தி முழுப்படமும் யூட்யூபிலிருந்து:-
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)