மான்செஸ்டர் பை தி ஸீ
Manchester by the Sea
2016 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படம்.
மனச்சோர்வு, குற்ற உணர்ச்சி, இழப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான கதை. தன் சகோதரனின் மரணத்திற்குப் பிறகு அவனது பதின்ம வயது மகனுக்கு சட்டப்பூர்வ பாதுகாவலராக மாறும் ஒரு மனிதனின் வாழ்க்கையை இது உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது.
இத்திரைப்படத்தின் அடிநாதம் மனிதர்களால் கடந்து செல்லவே முடியாத, ஆயுள் முழுக்க துரத்தும் பேராழமான துக்கமும் குற்ற உணர்ச்சியும்தான்.
ஒரு விபத்தால் தன் சொந்தக் குழந்தைகளை இழந்து, அந்தப் பழி உணர்வில் தனக்குத்தானே தண்டனை விதித்துக் கொண்டு வாழும் ஒரு மனிதனின் சிதைந்த மனநிலையை இப்படம் பேசுகிறது.
காலம் எல்லா காயங்களையும் குணப்படுத்திவிடும் என்ற பொதுவான சினிமாப் பார்வையை உடைத்து, சில இழப்புகளிலிருந்து மனிதர்களால் இறுதிவரை மீளவே முடியாது என்ற கசப்பான எதார்த்தத்தை இப்படம் அப்பட்டமாகப் பதிவு செய்கிறது.
அதேசமயம், இந்த அடர்ந்த சோகத்திற்கு நடுவிலும், அண்ணனின் மறைவால் அனாதையாக நிற்கும் மருமகனைப் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம், அவனுடன் ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் பாசம் என வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் ஒரு மனிதனின் தவிப்பே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.
மீள முடியாத துயரத்திலும் வாழப் பழகும் மனித மனங்களின் எதார்த்தமே இப்படத்தின் உயிர்நாடி.
காசி அஃப்லெக் முதன்மைக் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மிஷெல் வில்லியம்ஸ், கைல் சேண்ட்லர், லூகாஸ் ஹெட்ஜஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இவர்களின் எதார்த்தமான நடிப்பு படத்திற்குப் பெரும் பலமாக அமைந்தது.
இத்திரைப்படத்தை கென்னத் லோனர்கன் நேர்த்தியாக எழுதி இயக்கியுள்ளார். மனிதர்களின் ஆழமான துக்கத்தையும், அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஒருவரின் மனநிலையையும் எவ்வித சமரசமும் இன்றி திரையில் கொண்டு வந்ததற்காக இவர் பெரும் பாராட்டைப் பெற்றார்.
ஜோடி லீ லிப்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாசசூசெட்ஸ் நகரின் குளிர்காலக் பின்னணியையும், அங்குள்ள பனி படர்ந்த பகுதிகளையும் கதையின் சோகமான சூழலுக்கு ஏற்ப தனது கேமராவில் நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளார்.
லெஸ்லி பார்பர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதையின் கனத்த உணர்வுகளுக்கு ஏற்ப பின்னணி இசையையும் பாடல்களையும் அமைத்ததோடு, சில புகழ்பெற்ற செவ்வியல் இசைக் கோவைகளையும் இதில் பயன்படுத்தியுள்ளார்.
இத்திரைப்படம் 89 ஆவது அகாடமி விருதுகளில் சிறந்த திரைப்படம் உட்பட ஆறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
காசி அஃப்லெக் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதையும், கென்னத் லோனர்கன் சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதையும் வென்றனர். கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகளையும் இத்திரைப்படம் வென்று சாதனை படைத்தது.
மான்செஸ்டர் பை தி சீ திரைப்படத்தின் உருவாக்கத்திற்குப் பின்னால் பல சுவாரசியமான பின்னணிக் கதைகள் உள்ளன.
நடிகர் மாட் டேமனும் ஜான் கிராசின்ஸ்கியும் இணைந்துதான் உணர்ச்சி ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு கைவினைஞரைப் பற்றிய இக்கதைக் கருவை முதலில் உருவாக்கினர்.
மாட் டேமன் இப்படத்தை இயக்கி, ஜான் கிராசின்ஸ்கி கதாநாயகனாக நடிக்கவே திட்டமிட்டிருந்தனர். கதையை முழுமையாக உருவாக்க அவர்கள் கென்னத் லோனர்கனை அணுகினர்.
ஆனால் லோனர்கன் திரைக்கதையை எழுதி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனதால், அதற்குள் இருவரும் வேறு படங்களில் பிஸியாகிவிட்டனர்.
திரைக்கதையின் ஆரம்ப வரைவைப் படித்த மாட் டேமன், இதன் ஆழத்தைப் புரிந்து கொண்டு கென்னத் லோனர்கனையே இப்படத்தை இயக்குமாறு வற்புறுத்தினார். தான் நடிக்க வேண்டிய முதன்மைக் கதாபாத்திரத்திற்கு கேசி அஃப்லெக்கை மாட் டேமனே பரிந்துரைத்தார்.
கேசி அஃப்லெக்கைத் தவிர வேறு யாருக்கும் இந்தத் துரோகத்தையும் துக்கத்தையும் சுமக்கும் கதாபாத்திரத்தைக் கொடுக்க தனக்கு மனமில்லை என்று மாட் டேமன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இயக்குநர் கென்னத் லோனர்கன் நாடகப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நடிகர்களை இரண்டு வாரங்கள் ஒன்றாக அமர வைத்து நாடகப் பாணியில் வசனங்களைப் பேசிப் பழக வைத்தார்.
இது நடிகர்கள் தங்களுக்குள் ஒரு இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், கதாபாத்திரங்களின் உணர்வை உள்வாங்கவும் பெரிதும் உதவியது.
இப்படத்தின் இசையமைப்பாளர் லெஸ்லி பார்பர், கதாநாயகனின் உள்மன சோகத்தைப் பிரதிபலிக்கும் இசைக்காக ஒரு விநோதமான முறையைக் கையாண்டார்.
ஓப்ரா பயிலும் தனது மகள் ஜகோபா பார்பர்-ரோஸெமாவை அவரது கல்லூரி விடுதி அறையில் பாட வைத்து, அதை ஸ்கைப் செயலி வழியாகப் பதிவு செய்தார்.
அந்தச் சிறிய அறையின் மூடிய சூழல், படத்தின் கதைக்குத் தேவையான மிகத் துல்லியமான, அழுத்தமான சோக ஒலியைத் தந்தது.
ஆஸ்கார் விருது வரலாற்றில் ஒரு புதிய சாதனையையும் இத்திரைப்படம் படைத்தது.
இணையவழி டிஜிட்டல் ஓடிடி தளமான அமேசான் ஸ்டுடியோஸ் மூலம் வெளியிடப்பட்டு, ஆஸ்கார் விருதின் மிக உயரிய 'சிறந்த திரைப்படம்' பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமையை இது பெற்றது.
சண்டான்ஸ் திரைப்பட விழாவில் அமேசான் நிறுவனம் இதன் விநியோக உரிமையை சுமார் 10 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது, அந்த விழாவின் மிகப்பெரிய வர்த்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இப்படத்தின் அசல் திரைக்கதை முடிவிலும், படப்பிடிப்புத் தளத்திலும் பல சுவாரசியமான மாற்றங்கள் நிகழ்ந்தன.
படத்தின் இறுதி காட்சியாக இயக்குநர் கென்னத் லோனர்கன் முதலில் வேறு ஒரு முடிவைத்தான் திட்டமிட்டிருந்தார். கதாநாயகனும் அவனது மனைவியும் தங்களது குழந்தைகளுடன் அண்ணனின் படகில் மகிழ்ச்சியாக இருக்கும் பழைய நினைவலைகளை, ட்ரோன் கேமரா மூலம் தூரத்திலிருந்து படம்பிடித்துக் காட்டுவதே அந்தத் திட்டமாகும்.
ஆனால், அப்போது இருந்த பட்ஜெட் பற்றாக்குறையால் அந்த விலையுயர்ந்த காட்சியை அவர்களால் படமாக்க முடியாமல் போனது.
படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த பிறகு, அந்தக் காட்சியை எடுத்திருக்கலாம் என்று தயாரிப்பாளர்கள் வருத்தப்பட்டனர்.
படத்தில் வரும் மிக முக்கியமான மாசசூசெட்ஸ் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லறையில் குளிர்காலத்தில் இறுதிச்சடங்கு நடத்த முடியாத சூழல் எதார்த்தமாகப் படமாக்கப்பட்டது.
உண்மையில் அந்தப் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்போது நிலத்தடி மண் முழுமையாக உறைந்துபோய்விடும் என்பதால், வசந்த காலம் வரும் வரை உடல்களைப் புதைக்க முடியாது என்ற அந்த ஊரின் நிஜமான வாழ்வியல் முறையை இயக்குநர் லோனர்கன் நேரில் ஆராய்ந்து திரைக்கதையில் சேர்த்திருந்தார்.
படத்தின் பின்னணி இசைக்காகப் பயன்படுத்தப்பட்ட 'அடாஜியோ இன் ஜி மைனர்' என்ற செவ்வியல் இசைக்கோவை பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
எடிட்டிங் செய்யும்போது தற்காலிகமாக வைக்கப்பட்ட அந்த இசை, காட்சியின் சோகத்திற்கு மிகப்பொருத்தமாக இருந்ததால் அதையே இறுதி செய்துவிட்டதாக இயக்குநர் தெரிவித்தார்.
ஆனால், ஏற்கனவே பல புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் இந்த இசை பயன்படுத்தப்பட்டிருந்ததால் சில விமர்சகர்கள் இதை விரும்பவில்லை.
மேலும், படத்தில் அசல் இசையை விட இந்த பாரம்பரிய செவ்வியல் இசை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, ஆஸ்கார் அகாடமி அமைப்பு இப்படத்தின் பின்னணி இசையை விருதுப் போட்டிக்குப் பரிசீலிக்க மறுத்துவிட்டது.
இப்படத்தில் பதின்ம வயது மகனாக நடித்த லூகாஸ் ஹெட்ஜஸ் ஆரம்பத்தில் இந்த நீலக் காலர் தொழிலாளர் குடும்பப் பின்னணிக்கு செட் ஆவார் என்று இயக்குநர் நினைக்கவில்லை.
லூகாஸின் நிஜ வாழ்க்கை பின்னணி முற்றிலும் வேறாக இருந்ததால் இயக்குநர் தயங்கினாலும், அவரது சிறப்பான தணிக்கை நடிப்பைப் பார்த்தே தேர்வு செய்தார்.
இறுதியில் அவர் ஆஸ்கார் பரிந்துரை பெறும் அளவுக்கு நடித்தார்.
திரைக்கதை உலகிலும் இப்படம் 21 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம் வாக்களித்த சிறந்த 101 திரைக்கதைகளின் பட்டியலில் இது முக்கிய இடத்தைப் பிடித்தது.
மேலும், புகழ்பெற்ற ரோலிங் ஸ்டோன் இதழ் வெளியிட்ட 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 திரைப்படங்களின் பட்டியலில் 36 ஆவது இடத்தைப் பிடித்து இப்படம் சாதனை படைத்துள்ளது.
இத்திரைப்படத்தின் உருவாக்கத்தில் இயக்குநர் கென்னத் லோனர்கன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார்.
மாசசூசெட்ஸ் வீதியில் நடந்து செல்லும் ஒரு பாதசாரியாக வந்து, கதாநாயகன் கேசி அஃப்லெக்கின் வளர்ப்பு முறை குறித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் நபர் வேறு யாருமல்ல, படத்தின் இயக்குநர் லோனர்கன் தான்.
தனது சொந்தப் படங்களிலேயே மிகக் குறுகிய காட்சிகளில் தோன்றும் அவரது பழக்கம் இப்படத்திலும் தொடர்ந்தது.
படத்தில் கேசி அஃப்லெக் மற்றும் மிஷெல் வில்லியம்ஸ் இருவரும் விவாகரத்திற்குப் பிறகு தற்செயலாகச் சந்தித்துப் பேசும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிதான் ஒட்டுமொத்த ஹாலிவுட் விமர்சகர்களாலும் உற்றுநோக்கப்பட்டது.
அந்தக் காட்சியில் அழுகையையும் துக்கத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு, மிகக் குறைவான முகபாவனைகளுடன் நடிக்க கேசி அஃப்லெக் கடுமையாக உழைத்தார்.
உணர்ச்சிகளை வெளிப்படையாகக் கொட்டாமல், மனதிற்குள்ளேயே அடக்கி வைக்கும் நியூ இங்கிலாந்து மக்களின் இயல்பை அப்படியே கொண்டுவர அவர் கையாண்ட அந்த அடக்கம் தான் அவருக்கு ஆஸ்கார் விருதைப் பெற்றுத் தந்தது.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் உண்மையான மாசசூசெட்ஸ் கடல்சார் நகரங்களான குளௌசெஸ்டர், எசெக்ஸ், பெவெர்லி மற்றும் ஸ்வாம்ப்ஸ்காட் போன்ற இடங்களில் கடும் குளிர்காலத்தில் படம்பிடிக்கப்பட்டன.
அப்பகுதிகளில் வாழும் மீனவர்கள் மற்றும் உழைக்கும் வர்க்க மக்களின் எதார்த்தமான வாழ்வியலையும், அவர்கள் பேசும் தனித்துவமான உச்சரிப்பு முறையையும் (New England accent) திரைக்கதையில் மிகத் துல்லியமாகக் கொண்டுவர படக்குழுவினர் அங்குள்ள உள்ளூர் மக்களுடன் பல நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர்.
திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 9 மில்லியன் டாலர் என்ற மிகக் குறைந்த அளவில் இருந்தாலும், உலகம் முழுவதும் இது சுமார் 79 மில்லியன் டாலர்களை வசூலித்து அசத்தியது.
வணிக ரீதியான பிரம்மாண்டக் காட்சிகள் ஏதுமின்றி, மனித மனதின் சோகத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு கலைப் படம், பாக்ஸ் ஆபீஸில் தனது பட்ஜெட்டை விட எட்டு மடங்கு அதிகமாக வசூலித்தது ஹாலிவுட் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது.
ஆஸ்கார் விருது வரலாற்றில் சிறந்த படத்திற்கான பரிந்துரையைப் பெற்றதோடு மட்டுமன்றி, நியூயார்க் பத்திரிகை வெளியிட்ட 'ஆஸ்காரில் சிறந்த திரைப்பட விருதை தவறவிட்ட மிகச்சிறந்த திரைப்படங்கள்' என்ற வரலாற்றுப் பட்டியலிலும் இத்திரைப்படம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துத் தன் தரத்தை நிரூபித்துள்ளது.
==============================
படத்தின் கதை:-
லீ சேண்ட்லர் (காசி அஃப்லெக்) மாசசூசெட்ஸ் மாநிலத்தின் குயின்சி நகரில் ஒரு தரைத்தள குடியிருப்பில் தனியாக வசித்து வரும், மனச்சோர்வு நிறைந்த, பிறருடன் அதிகம் பழகாத ஒரு துப்புரவுப் பணியாளர் .
ஒரு நாள் அவர் ஒரு பாரில் மது அருந்தும்போது தன்னிடம் பேச முற்படும் ஒரு பெண்ணை உதாசீனப்படுத்துகிறார், பின்னர் அங்குள்ள இரண்டு நபர்களுடன் தேவையின்றி சண்டையில் ஈடுபடுகிறார்.
மான்செஸ்டர் பை தி சீ நகரில் வசிக்கும் மீனவரான அவரது அண்ணன் ஜோ சேண்ட்லர் (கைல் சேண்ட்லர்) மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக லீக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
ஆனால் லீ மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே ஜோ இறந்துவிடுகிறார். ஜோவின் பதின்ம வயது மகன் பேட்ரிக் சேண்ட்லரிடம் (லூகாஸ் ஹெட்ஜஸ்) இந்த மரணச் செய்தியை நேரில் சொல்ல வேண்டும் என்பதில் லீ பிடிவாதமாக இருக்கிறார்.
இறுதிச்சடங்கு ஏற்பாடுகளைச் செய்யும்போது, குளிர்காலம் என்பதால் நிலம் உறைந்திருக்கிறது என்றும், வசந்த காலம் வரும் வரை ஜோவின் உடலை அடக்கம் செய்ய முடியாது என்றும் அவர்களுக்குத் தெரியவருகிறது.
இதனால் லீ தற்காலிகமாக ஜோவின் வீட்டிலேயே தங்கி, வசந்த காலம் வரை மான்செஸ்டரில் இருக்கத் திட்டமிடுகிறார்.
ஜோவின் வழக்கறிஞரை லீ சந்திக்கும்போது, ஜோ தன் மகன் பேட்ரிக்கின் சட்டப்பூர்வ பாதுகாவலராக லீயை நியமித்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்.
கடந்த கால நினைவுகளில், லீ முன்பு மான்செஸ்டர் நகரில் தனது மனைவி ராண்டி எலிங்டன் (மிஷெல் வில்லியம்ஸ்) மற்றும் மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தது தெரியவருகிறது.
ஒரு இரவு, வீட்டில் நண்பர்களுக்குப் பார்ட்டி கொடுத்துவிட்டு போதையில் இருந்த லீ, நெருப்பு உலைக்கு முன்னால் இருக்கும் பாதுகாப்புத் திரையை வைக்க மறந்துவிடுகிறார்.
இதனால் ஏற்பட்ட எதிர்பாராத வீட்டுத் தீ விபத்தில் அவரது மூன்று குழந்தைகளும் இறந்துபோகின்றனர்.
காவல்துறை விசாரணை இதை ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து என்று கூறி லீ மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தாமல் விடுகிறது.
ஆனால் குற்ற உணர்ச்சியால் சிதைந்துபோன லீ, காவல் நிலையத்திலேயே ஒரு காவலரின் துப்பாக்கியைப் பறித்துத் தற்கொலைக்கு முயல்கிறார், உடனே அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்துக் காப்பாற்றுகின்றனர்.
இதன் பிறகு லீ மற்றும் ராண்டி விவாகரத்து செய்துகொள்கின்றனர், லீ அந்த ஊரை விட்டே வெளியேறுகிறார்.
இப்போது மீண்டும் மான்செஸ்டரில் குடியேற வேண்டும் என்பதால் இந்த பாதுகாவலர் பொறுப்பை ஏற்க லீ தயங்குகிறார்.
பேட்ரிக்கை தன்னுடன் பாஸ்டன் நகருக்கு அழைத்துச் செல்ல லீ திட்டமிடுகிறார், ஆனால் மான்செஸ்டர் நகரோடு ஆழமான பிணைப்பைக் கொண்டிருக்கும் பேட்ரிக் அதற்கு முரண்டு பிடிக்கிறான்.
இறுதியாக பள்ளி ஆண்டு முடியும் வரை மான்செஸ்டரிலேயே தங்க லீ ஒப்புக்கொள்கிறார்.
அதே பகுதியில் வசிக்கும், தன்னை சிறுவயதிலேயே பிரிந்து சென்ற தாய் எலிஸ் ஹென்டர்சனுடன் (கெர்ட்சன் மோல்) வாழ பேட்ரிக் ஆசைப்படுகிறான்.
எலிஸ் முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தைக் கைவிட்டவர் என்பதால் லீ இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார், எனினும் பேட்ரிக் அவளை மதிய உணவின் போது சந்திக்கிறான்.
எலிஸ் இப்போது கிறிஸ்தவ மதத்தைத் தழுவி, மதுப்பழக்கத்திலிருந்து மீண்டு, ஜெஃப்ரி கார்னர் (மத்தேயு பிரோடெரிக்) என்ற நபரைத் திருமணம் செய்ய நிச்சயம் செய்துகொண்டிருக்கிறார்.
அந்த மதிய உணவு சந்திப்பு மிகவும் சங்கடமாக முடிகிறது, பேட்ரிக்கால் அவளுடன் இயல்பாகப் பழக முடியாமல் போகிறது.
மேலும், இனிமேல் எலிஸுடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால் தனக்குத்தான் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று ஜெஃப்ரி வற்புறுத்துவது பேட்ரிக்குக்கு வருத்தத்தை அளிக்கிறது.
எலிஸின் குடிப்பழக்க மீட்பு பற்றி லீ சாதகமாகக் கருத்துத் தெரிவிக்கும்போது, தன் சித்தப்பா எப்படியாவது தன்னைத் தன் தாயிடம் தள்ளிவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார் என்று பேட்ரிக் தவறாகப் புரிந்து கொள்கிறான், ஆனால் லீ அதை மறுக்கிறார்.
இந்த உறவுச் சிக்கலைத் தீர்க்க, லீ மான்செஸ்டரில் தனது தங்குதலை நீட்டிக்க சில முயற்சிகளை மேற்கொள்கிறார், பேட்ரிக்குடன் அதிக நேரத்தைச் செலவிடவும் முற்படுகிறார்.
ஜோவின் படகு, பேட்ரிக்கின் காதலிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இருவருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டாலும், காலப்போக்கில் அவர்களுக்குள் ஒரு பிணைப்பு மீண்டும் உருவாகிறது.
இருந்தாலும், மான்செஸ்டரில் வசிப்பது லீக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது, ஏனெனில் நகரின் ஒவ்வொரு பகுதியும் அவரது கடந்த காலத் துயரத்தை நினைவுபடுத்துகின்றன.
அந்தத் தீ விபத்து தற்செயலானது அல்ல என்று இன்னும் சில உள்ளூர் மக்கள் நம்புவதையும் சில காட்சிகள் உணர்த்துகின்றன.
ஒரு நாள், லீ தற்செயலாகத் தன் முன்னாள் மனைவி ராண்டியை வீதியில் சந்திக்கிறார், அவளுக்கு இப்போது ஒரு புதிய குழந்தை இருக்கிறது.
ராண்டி அழுதுகொண்டே, விவாகரத்தின் போது தான் லீயை மோசமாக நடத்தியதற்காக மன்னிப்புக் கேட்டு, ஒரு முறை மதிய உணவு சாப்பிட அழைக்கிறார்.
ஆனால் தான் அந்த மன்னிப்பிற்குத் தகுதியற்றவன் என்று கருதும் லீ, அதைத் தவிர்க்கிறார். ராண்டி அவரிடம் மீண்டும் உறவைப் புதுப்பிக்கக் கோரி, தன்னைத்தானே அழித்துக் கொள்ள வேண்டாம் என்று கெஞ்சும்போது, லீ உணர்ச்சிப் பெருக்கால் நிலைகுலைந்து அங்கிருந்து ஓடிவிடுகிறார்.
மன வேதனையடைந்த லீ, ஒரு பாரில் மது அருந்திவிட்டு அங்கிருக்கும் அந்நியர்களிடம் வம்புக்குச் சென்று சண்டையிட்டு அடிபட்டு மயங்கி விழுகிறார்.
ஜோவின் நண்பரான ஜார்ஜ் எலிங்டன் (சி. ஜே. வில்சன்) வீட்டில் லீ கண்விழித்து, தன் நிலையை நினைத்துக் கண்ணீர் விட்டு அழுகிறார்.
காயமடைந்த லீயின் நிலையையும், அவரது இறந்த குழந்தைகளின் புகைப்படங்களையும் வீட்டில் பார்க்கும் பேட்ரிக், தன் சித்தப்பாவின் வலியைப் புரிந்துகொள்கிறான்.
பேட்ரிக் மான்செஸ்டரிலேயே தொடர்ந்து வசிக்க ஏதுவாக, ஜார்ஜும் அவரது மனைவியும் பேட்ரிக்கை சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்க லீ ஏற்பாடு செய்கிறார், தான் பாஸ்டனில் ஒரு வேலையைத் தேடிக் கொள்ளத் திட்டமிடுகிறார்.
லீயால் ஏன் மான்செஸ்டரிலேயே தங்க முடியவில்லை என்று பேட்ரிக் கேட்கும்போது, லீ என்னால் இந்த வலியோடு போராடி ஜெயிக்க முடியவில்லை என்று கூறுகிறார்.
வசந்த காலத்தில் ஜோவின் உடலை அடக்கம் செய்த பிறகு, லீயும் பேட்ரிக்கும் நடந்து செல்லும்போது, பேட்ரிக் எப்போது வேண்டுமானாலும் வந்து தங்குவதற்கேற்ப பாஸ்டனில் ஒரு கூடுதல் அறை கொண்ட வீட்டைத் தான் தேடி வருவதாக லீ கூறுகிறார்.
இறுதி காட்சியில், பேட்ரிக்குக்குச் சொந்தமான, பழுதுபார்க்கப்பட்ட ஜோவின் படகில் லீயும் பேட்ரிக்கும் இணைந்து மீன்பிடிக்கச் செல்கையில் இப்படம் நிறைகிறது.
மான்செஸ்டர் பை தி சீ திரைப்படம் உறவுகளின் முக்கியத்துவத்தையும், பொறுப்புகளையும், மனிதர்களின் வாழ்வியல் எதார்த்தத்தையும் மிக ஆழமான செய்தியாக முன்வைக்கிறது.
வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் பேரழிவுகள் மற்றும் இழப்புகளுக்குப் பிறகும், மனிதர்கள் தங்களின் கடமைகளிலிருந்தும் பொறுப்புகளிலிருந்தும் தப்பி ஓடிவிட முடியாது என்பதை இப்படம் உணர்த்துகிறது.
தன் அண்ணனின் திடீர் மரணத்தால் தவிக்கும் பதின்ம வயது மகனுக்கு அரணாக நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, தன் சொந்த மனவேதனைகளைத் தள்ளிவைத்துவிட்டு அந்தப் பொறுப்பை ஏற்கும் ஒரு மனிதனின் வழியே பொறுப்புணர்வின் அவசியத்தை இப்படம் காட்டுகிறது.
அதேபோல், வற்புறுத்தலின் பேரில் திணிக்கப்படும் உறவுகளை விட, ஒருவருக்கொருவர் காட்டும் புரிதலும் பரஸ்பர ஆதரவும் தான் உண்மையான பிணைப்பை உருவாக்கும் என்பதை லீ மற்றும் பேட்ரிக் கதாபாத்திரங்களின் மூலம் அறியலாம்.
எல்லாக் கதைகளும் மகிழ்ச்சியான சுமுகமான முடிவை நோக்கித்தான் நகர வேண்டும் என்ற அவசியமில்லை,சில நேரங்களில் சூழ்நிலைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, தங்களால் இயன்ற வழியில் வாழ்க்கையைத் தொடர்வதே ஆகச்சிறந்த நகர்வு என்ற எதார்த்தமான வாழ்வியல் உண்மையை இப்படம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.