ஒரு மனிதன் தனது வாழ்நாளில் தேடும் அமைதி உண்மையில் எங்கே இருக்கிறது? உலகத்தை விட்டு விலகுவதிலா,
மனிதர்களுக்குள் வாழ்வதிலா, அறிவைச் சேர்ப்பதிலா, அல்லது ‘நான்’ என்ற உணர்வையே கேள்விக்குள்ளாக்குவதிலா?
1989-ல் வெளிவந்த பே யோங்-கியூனின் Why Bodhi dharma has left to the east ? “போதி தர்மா ஏன் கிழக்கே சென்றார்?” என்ற தென் கொரியத் திரைப்படம் இந்தக் கேள்விகளுக்கு நேரடியான பதில்களைத் தர முயல்வதில்லை.
இந்தத் திரைப்படத்தில் போதிதர்மர் நேரடியாக வரும் கதாபாத்திரம் அல்ல.
போதிதர்மர் என்பது கி.பி. 5–6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய புத்தத் துறவி. அவர் இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்று, அங்கு தியானப் புத்தமத மரபான சான் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்ததாக மரபு கூறுகிறது. பின்னாளில் இந்த மரபே ஜப்பானில் ஜென் என அறியப்பட்டது.
திரைப்படத்தின் தலைப்பு “போதிதர்மா ஏன் கிழக்கே சென்றார்?” என்பது அவருடைய அந்தப் பயணத்தைச் சுட்டுகிறது. ஆனால் திரைப்படத்தின் கதை போதிதர்மரின் வாழ்க்கைக் கதை அல்ல; மூன்று புத்தத் துறவிகளின் வழியாக வாழ்க்கை, மரணம், ‘நான்’ என்ற உணர்வு, பற்றின்மை, ஞானம் ஆகியவற்றை ஆராய்கிறது.
மாறாக, அந்தக் கேள்விகளுக்குள் பார்வையாளரையே மெதுவாக அழைத்துச் செல்கிறது.
அதனால்தான் இது வழக்கமான கதையைப் பார்க்கும் அனுபவமாக இல்லாமல், ஒரு நீண்ட தியானத்தில் அமர்ந்திருப்பது போன்ற அனுபவமாக மாறுகிறது.
இந்தப் படத்தின் மிகப் பெரிய தனித்துவம் அதன் அணுகுமுறையில்தான் இருக்கிறது.
இயக்குநர் பே யோங்-கியூன் ஒரு ஓவியராக அறியப்பட்டவர்; திரைப்படத்தை உருவாக்குவதற்காக ஏழு ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார்.
ஒரே ஒரு கேமராவைக் கொண்டு படமாக்கி, படத்தொகுப்பையும் தன் கையால் செய்திருக்கிறார்.
இந்தப் பின்னணி வெறும் தயாரிப்பு வரலாறு அல்ல; திரைப்படத்தின் காட்சிமொழியைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான திறவுகோல்.
ஒவ்வொரு காட்சியையும் அவசரமாக நகர்த்துவதற்குப் பதிலாக, ஒரு ஓவியத்தைப் பார்ப்பது போல காட்சிகளுக்குள் பார்வையாளரைத் தங்கவிடுகிறார்.
படத்தின் மையத்தில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த புத்தத் துறவிகளின் ஆன்மிக உலகம் இருக்கிறது.
ஒரு சிறுவன், ஒரு இளம் துறவி, ஒரு வயதான ஞானி என்ற இந்த அமைப்பு மனித வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்களைப் பற்றிய தகவல்களை வெறும் கதாபாத்திர அறிமுகமாக மட்டும் இயக்குநர் பயன்படுத்துவதில்லை.
வாழ்க்கை, அறிவு, கடமை, தனிமை, ஆசை, மரணம், நிலையற்ற தன்மை ஆகியவற்றைப் பற்றி பார்வையாளர் சிந்திக்கச் செய்யும் மனிதர்களாக அவர்களை உருவாக்குகிறார்.
குறிப்பாக வயதான ஞானியின் இருப்பு, “அறிந்துகொள்வது” என்பதற்கும் “உணர்ந்துகொள்வது” என்பதற்கும் இடையிலான வேறுபாட்டை ஆழமாக உணரச் செய்கிறது.
திரைக்கதை வழக்கமான காரணம்–விளைவு கொண்ட பரபரப்பான சம்பவங்களின் தொடராக அமைக்கப்படவில்லை.
இது ‘ஹ்வாடு’ எனப்படும் ஜென் புத்தமதப் புதிர்களைச் சுற்றி சிந்தனையை உருவாக்குகிறது.
“என் பெற்றோர் உருவாகுவதற்கு முன்பு என்னுடைய உண்மையான முகம் என்ன?” போன்ற கேள்விகள் பார்வையாளரிடம் ஒரு புதிராக மட்டுமல்லாமல், தனிமனித அடையாளத்தைப் பற்றிய கேள்வியாகவும் வந்து நிற்கின்றன.
மற்றொரு கேள்வி மரணத்துடன் ‘நான்’ என்ற உணர்வுக்கு என்ன ஆகிறது என்பதைச் சிந்திக்க வைக்கிறது.
இவற்றுக்கு திரைப்படம் எளிய விளக்கங்களை வழங்காமல் இருப்பதே அதன் வலிமை. பதில் கிடைக்காத கேள்வியுடன் அமர்ந்திருப்பதற்கே படம் நம்மைத் தயார்படுத்துகிறது.
இதனால் திரைப்படத்தின் வேகம் இன்றைய வழக்கமான திரைப்படங்களைப் போல இருக்காது.
அவசரமான திருப்பங்களையோ தொடர்ச்சியான உரையாடல்களையோ எதிர்பார்த்து அமர்ந்தால், இந்தப் படம் மெதுவாக நகர்வதாகத் தோன்றலாம்.
ஆனால் அந்த மெதுவான நகர்வே இத்திரைப்படத்தின் திரைப்பட மொழியாகிறது.
அமைதி, இடைவெளி, இயற்கையின் இயக்கம், மனித முகங்கள், நீண்ட நேரம் நிலைக்கும் காட்சிகள் ஆகியவை சேர்ந்து ஒரு தியான மனநிலையை உருவாக்குகின்றன.
இங்கு “எதுவும் நடக்கவில்லை” என்று தோன்றும் தருணங்கள்கூட பார்வையாளரின் உள்ளே ஏதோ நடக்கச் செய்கின்றன.
ஒளிப்பதிவு இந்த அனுபவத்தின் முக்கியமான தூணாக இருக்கிறது. பே யோங்-கியூன் தானே ஒளிப்பதிவையும் மேற்கொண்டிருப்பதால், இயற்கை வெறும் பின்னணியாகத் தெரியவில்லை.
மலை, காடு, நீர், வானம், வெளிச்சம், நிழல் ஆகியவை மனிதர்களுக்கு இணையான முக்கியத்துவத்துடன் காட்சிகளுக்குள் இருக்கின்றன.
குறிப்பாக இயற்கையையும் மனிதர்களையும் தனித்தனியாகப் பார்க்காமல், ஒரே வாழ்க்கைச் சூழலின் பகுதிகளாகப் பார்க்கும் விதம் படத்திற்கு தனித்துவமான அழகைத் தருகிறது.
ஓவியரின் கண் கேமராவின் வழியாக வேலை செய்வதை உணர முடிகிறது.
காட்சியமைப்பிலும் இதே அணுகுமுறை தொடர்கிறது. தொலைதூர மலை மடத்தின் அமைதி, இயற்கையுடன் கலந்த மனித வாழ்க்கை, ஒளிக்கும் இருளுக்கும் இடையிலான மாறுபாடு ஆகியவை கதையை அலங்கரிப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை.
அவை திரைப்படத்தின் சிந்தனையை உருவாக்கும் காட்சிப் பொருட்களாக மாறுகின்றன.
ஒரு மனிதன் உலகில் எவ்வளவு சிறியவன் என்பதையும், அதே நேரத்தில் அவனுடைய உள்ளார்ந்த கேள்விகள் எவ்வளவு பெரியவை என்பதையும் காட்சிகள் உணர்த்துகின்றன.
படத்தொகுப்பும் இதே பொறுமையைப் பின்பற்றுகிறது. காட்சிகளை வேகமாக வெட்டி பார்வையாளரின் கவனத்தைப் பிடிக்க முயல்வதற்குப் பதிலாக, ஒரு காட்சியின் அமைதியையும் அதன் உணர்வையும் அனுபவிக்க நேரம் கொடுக்கிறது.
இந்த மெதுவான படத்தொகுப்பு திரைப்படத்தின் ஆன்மிகத் தன்மையை வலுப்படுத்துகிறது. இங்கு இடைவெளி என்பது வெற்றிடம் அல்ல; சிந்திப்பதற்கான இடம்.
இசை மற்றும் ஒலியமைப்பிலும் அளவுக்கு மீறிய பயன்பாடு இல்லை. இயற்கையின் ஒலிகள், அமைதி, சூழலின் மெல்லிய சத்தங்கள் ஆகியவை பார்வையாளரை அந்த மலை உலகத்துக்குள் இழுத்துச் செல்கின்றன.
பல திரைப்படங்களில் இசை உணர்ச்சியை நமக்குச் சொல்லிவிடும். இங்கு அமைதியே பல நேரங்களில் உணர்ச்சியின் மொழியாகிறது.
அதனால் காட்சிகளைப் பார்ப்பதற்கும் அவற்றைக் கேட்பதற்கும் இடையே ஒரு தனித்துவமான அனுபவம் உருவாகிறது.
நடிப்பும் அதே கட்டுப்பாட்டைக் கொண்டது. ஹே-ஜின் (இ-பான்-யோங்), கி-போங் (சின்-வோன்-சொப்), ஹ்யே-கோக் ஆகிய மூன்று மையப் பாத்திரங்களின் வெளிப்பாடு மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளால் கட்டமைக்கப்படவில்லை.
குறிப்பாக துறவிகளின் உலகில் உள்ள அமைதியும் உள்ளார்ந்த போராட்டமும் முகபாவனைகள், உடல்மொழி, பார்வை, மௌனம் ஆகியவற்றின் வழியே வெளிப்படுகின்றன.
இதனால் நடிப்பு “நடிப்பது” போலத் தெரியாமல், அந்த மனிதர்கள் உண்மையில் வாழ்கிறார்கள் என்ற உணர்வைத் தருகிறது.
கலை இயக்கமும் ஆடை வடிவமைப்பும் திரைப்படத்தின் காலத்தையும் சூழலையும் இயல்பாக உருவாக்குகின்றன.
எந்தவொரு அம்சமும் பார்வையாளரின் கவனத்தைத் தன்னிடம் இழுக்கும் வகையில் அலங்கரிக்கப்படவில்லை.
மடம், இயற்கைச் சூழல், துறவிகளின் எளிய வாழ்க்கை ஆகியவை ஒன்றோடொன்று இயற்கையாகப் பொருந்துகின்றன.
இதனால் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் கதை என்பதைத் தாண்டி, காலத்திலிருந்து சற்றே விலகி நிற்கும் உலகமாகத் தோன்றுகிறது.
இத்திரைப்படத்தின் மனிதநேயப் பார்வையும் குறிப்பிடத்தக்கது. இது புத்தமதத்தைப் பற்றிய போதனைத் திரைப்படமாக மட்டும் செயல்படுவதில்லை.
ஒருவர் தனது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், கடமைக்கும் தனிப்பட்ட அமைதிக்கும் இடையே என்ன உறவு, மனிதன் எதற்கு ஆசைப்படுகிறான், அவன் எதைத் தன்னுடையது என்று நினைக்கிறான், மரணத்தை எப்படி எதிர்கொள்கிறான் போன்ற உலகளாவிய கேள்விகளை முன்வைக்கிறது. அதனால் புத்தமதப் பின்னணி தெரியாத பார்வையாளருக்கும் இதன் கேள்விகள் அந்நியமாகத் தோன்றுவதில்லை.
திரைப்படத்தின் தலைப்பே ஒரு புதிராக அமைந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்று ஜென் மரபுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் போதிதர்மரைச் சுட்டிக்காட்டும் இந்தத் தலைப்பு, புவியியல் பயணத்தைப் பற்றிய கேள்வியாக மட்டும் இல்லை.
ஒரு மனிதன் ஏன் ஒரு திசையில் செல்கிறான், அவன் உண்மையில் எதைத் தேடிச் செல்கிறான் என்ற பெரிய கேள்விக்கான கதவாக அது செயல்படுகிறது.
ஆனால் திரைப்படம் அந்தத் தலைப்புக்கு ஒரு எளிய விளக்கத்தை வழங்காமல் இருப்பதே அதன் அழகு.
தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தப் படம் தனித்துவமானது. ஏழு ஆண்டுகள் தனிப்பட்ட உழைப்புடன் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்பதும், இயக்கம், திரைக்கதை, தயாரிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பல பொறுப்புகளை ஒரே கலைஞர் ஏற்றுக்கொண்டிருப்பதும் அதன் உருவாக்கத்தில் காணப்படும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இது மிகப்பெரிய தயாரிப்பு வளங்களின் வலிமையால் உருவான திரைப்படம் அல்ல; ஒரு தனிப்பட்ட கலைப் பார்வையை முழுமையாகத் திரைப்படமாக மாற்றிய முயற்சி.
இதன் உலகளாவிய வரவேற்பும் குறிப்பிடத்தக்கது. 1989-ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவின் “ஒரு குறிப்பிட்ட பார்வை” பிரிவில் படம் திரையிடப்பட்டது.
அதே ஆண்டில் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருதையும், சமயநல்லிணக்க நடுவர் குழுவின் விருதையும் பெற்றது.
மேலும், அமெரிக்காவில் திரையரங்குகளில் வெளியான முதல் தென் கொரியத் திரைப்படம் என்ற முக்கியமான சாதனையையும் பெற்றது.
1993-ல் நியூயார்க்கில் அதன் அமெரிக்கத் திரையரங்கு வெளியீடு தொடங்கி, பின்னர் முப்பதுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவடைந்தது.
“போதி தர்மா ஏன் கிழக்கே சென்றார்?” என்பது அனைவரையும் ஒரே விதமாகக் கவரும் திரைப்படம் அல்ல. வேகமான கதை, அதிக உரையாடல், தொடர்ச்சியான திருப்பங்கள் ஆகியவற்றை விரும்புபவர்களுக்கு இதன் மெதுவான லயம் சவாலாக இருக்கலாம்.
ஆனால் திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல், ஒரு கலை அனுபவமாகவும் உள்நோக்கிய பயணமாகவும் பார்க்கத் தயாராக இருப்பவர்களுக்கு இது மிகவும் அரிதான அனுபவம்.
இது பதில்களைச் சொல்லிவிடும் திரைப்படம் அல்ல; உங்கள் மனதில் ஒரு கேள்வியை விதைத்து, திரை அணைந்த பிறகும் அந்தக் கேள்வியுடன் உங்களைத் தனியாக விட்டுச் செல்லும் திரைப்படம்.
அதனால்தான் பல தசாப்தங்களுக்குப் பிறகும் இதைப் பார்ப்பதற்கான காரணம் அதன் கதை மட்டுமல்ல—அது நம்மை நாமே பார்க்கச் செய்யும் விதம்தான்.
===============================
படத்தின் கதை:-
ஒரு அனாதைச் சிறுவனான ஹே-ஜின், இளம் துறவியான கி-போங், வயதான ஜென் ஞானியான ஹ்யே-கோக் ஆகிய மூவரைச் சுற்றியே கதை நகர்கிறது.
ஹே-ஜின் ஒரு புத்த மடத்தில் வளர்ந்து வரும் சிறுவன். கி-போங் இளம் வயதிலேயே உலக வாழ்க்கையைத் துறந்து, அமைதியையும் முழுமையான ஆன்மிக நிறைவையும் தேடி புத்தத் துறவியாகியிருக்கிறான்.
ஹ்யே-கோக் உயரமான மலையில், மற்றவர்களிடமிருந்து விலகி அமைந்துள்ள தொலைதூர மடத்தில் தனிமையாக வாழும் வயதான ஞானி.
வாழ்க்கை, மரணம், அறிவு, ஆசை, பற்றுதல் ஆகியவற்றின் உண்மையைத் தேடிக்கொண்டிருக்கும் அவரிடம் கி-போங் அனுப்பப்படுகிறான்.
கதை தொடங்கும் போது ஹே-ஜின் ஒரு பறவையைக் காயப்படுத்துகிறான். குளித்துக்கொண்டிருக்கும்போது அவனால் அந்தப் பறவைக்கு காயம் ஏற்படுகிறது.
காயமடைந்த பறவையின் துணைப் பறவை அங்கிருந்து பறந்து செல்லாமல், தன் துணைக்கு என்ன ஆகிறது என்பதைப் பார்ப்பதுபோல் அருகிலேயே தங்கியிருக்கிறது.
காயமடைந்த பறவையை ஹே-ஜின் எடுத்துச் சென்று குணப்படுத்த முயல்கிறான். ஆனால் பின்னர் அந்தப் பறவை இறந்துவிடுகிறது.
இதற்குப் பிறகு, ஒரு மாடு தன்னை அடைத்து வைத்திருக்கும் வேலியை உடைத்துக்கொண்டு வெளியேறி காட்டுக்குள் ஓடிச் செல்லும் காட்சி வருகிறது.
இதற்கிடையில், மடத்தின் தலைமைத் துறவி கி-போங்கை அழைத்து, மலைப்பகுதியில் தனியாக வாழும் ஹ்யே-கோக்கிடம் சென்று அவருக்கு உதவும்படி அறிவுறுத்துகிறார்.
கி-போங் உலக வாழ்க்கையைத் துறந்ததன் நோக்கம் அமைதியையும் பரிபூரணத்தையும் அடைவதே. அதனால் அவர் வயதான ஞானியிடம் சென்று அவருடன் தங்குகிறார்.
ஆனால் ஹ்யே-கோக் சாதாரண ஆசிரியரைப் போல புத்தக அறிவையோ விளக்கங்களையோ கற்றுக்கொடுப்பதில்லை.
அறிவின் நிலையற்ற தன்மையை அவர் ஏற்கனவே உணர்ந்திருக்கிறார். எனவே, கி-போங்கின் கேள்விகளுக்கு நேரடியான பதில்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, பதில் ஒன்றுக்குள் அடங்காத ஆன்மிகப் புதிர்களைக் கொடுத்து அவற்றைத் தானாகவே உணரச் செய்கிறார்.
அவர் கி-போங்கிடம் இரண்டு முக்கியமான கேள்விகளை முன்வைக்கிறார்.
முதலாவது, “என் தந்தையும் தாயும் உருவாகுவதற்கு முன்பு என்னுடைய உண்மையான முகம் எது?” என்பதாகும்.
இரண்டாவது, “நிலவு உன் இதயத்தை ஆக்கிரமிக்கும் நேரத்தில், அதாவது ஞானம் அல்லது மரணம் வரும் நிலையில், உன்னுள் இருக்கும் ‘நான்’ என்ற எஜமானன் எங்கே செல்கிறான்?” என்பதாகும்.
இவை சாதாரண விடை சொல்லக்கூடிய கேள்விகள் அல்ல. அவற்றை மனதில் தொடர்ந்து வைத்துக்கொண்டு உணர்வதன் மூலமே உண்மையை அடைய முடியும் என்று ஹ்யே-கோக் கருதுகிறார்.
அதனால் அவற்றை “பற்களுக்கு இடையில் கடித்து வைத்திருப்பதைப் போல” விடாமல் பிடித்துக்கொண்டு விடையைத் தேடும்படி கி-போங்கிடம் கூறுகிறார்.
அவற்றை உணர்ந்து தீர்க்க முடிந்தால் அசைக்க முடியாத அமைதியை அடைய முடியும் என்று அவர் சொல்கிறார்.
ஒரு கட்டத்தில் ஹ்யே-கோக்குக்குத் தேவையான மருந்தை வாங்குவதற்காக கி-போங் மலைப்பகுதியிலிருந்து ஊருக்குச் செல்கிறான்.
அதற்கான பணத்தை அவன் பிச்சை எடுத்து பெற்றிருக்கிறான். மருந்து வாங்கச் சென்றபோது, அங்கே அவன் தன் கண்பார்வையற்ற தாயையும் சந்திக்கிறான்.
வயதாகியிருக்கும் அவளால் தன்னையே சரியாகப் பார்த்துக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுகிறாள். தன் தாயின் நிலையை நேரில் பார்த்த பிறகு கி-போங்கின் மனம் கலங்குகிறது.
உலக வாழ்க்கையைத் துறந்து மலைக்குச் சென்று ஆன்மிக அமைதியைத் தேடிக்கொண்டிருக்கும் அவன், உண்மையில் தன்னுடைய தாய் மற்றும் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமையை விட்டுவிட்டு வந்திருக்கிறான் என்பதை உணர்கிறான்.
இதனால் அவன் தன் துறவற வாழ்க்கையே சுயநலமானது போலத் தோன்றுகிறது.
அந்த மனநிலையுடன் கி-போங் மீண்டும் மலை மடத்திற்குத் திரும்புகிறான்.
ஹ்யே-கோக்கிடம், தான் மீண்டும் மனிதர்களிடையே சென்று வாழ விரும்புவதாகவும், மனித வாழ்க்கையின் அழுக்குகளையும் துன்பங்களையும் ஏற்றுக்கொண்டு சமூகத்திற்குள் திரும்ப விரும்புவதாகவும் கூறுகிறான்.
ஆனால் அவனுடைய இந்த முடிவை ஹ்யே-கோக் கடுமையாகக் கண்டிக்கிறார். இருந்தாலும் அவனை வலுக்கட்டாயமாகத் தடுக்கவில்லை.
எனவே கி-போங் மடத்தை விட்டு தனது பழைய மனித வாழ்க்கைக்குத் திரும்புவதற்காகப் புறப்படுகிறான்.
ஆனால் மலையிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
அந்த வெள்ளத்தில் கி-போங் சிக்கி கிட்டத்தட்ட மூழ்கிவிடுகிறான். அவனை ஹே-ஜின் கண்டுபிடிக்கிறான். பின்னர் ஹ்யே-கோக் அவனை மீட்டு காப்பாற்றுகிறார்.
கி-போங் மயக்க நிலையில் இருக்கிறான். அவன் மீண்டும் சுயநினைவு பெறும்போது, ஹே-ஜின் அவனிடம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறான்:
ஹ்யே-கோக் நீண்ட நேரமாகத் தியானத்தில் இருக்கிறார்; ஆனால் இப்போது அவர் மிகவும் உடல்நலக்குறைவாக இருக்கிறார்.
இதைக் கேட்ட கி-போங் அதிர்ச்சியடைகிறான். தன்னை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக ஹ்யே-கோக் தனது உயிர்சக்தியையே தியாகம் செய்திருக்கிறார் என்பதை அவன் உணர்கிறான்.
உலக வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்த கி-போங்கின் மனம் இப்போது முற்றிலும் மாறுகிறது.
தன்னைப் பற்றிய அக்கறையைவிட, தன்னை காப்பாற்றிய குருவின் வாழ்க்கை அவனுக்கு முக்கியமாகிறது. அவன் ஹ்யே-கோக்கைச் சந்திக்கச் செல்கிறான்.
ஹ்யே-கோக் கி-போங்கிடம் தன்னுடைய இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கும்படி கேட்கிறார்.
தன் உடலை மலைமேட்டின் மீது வைத்து எரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். அப்படிச் செய்தால்தான் தான் தனது “மூல இடத்திற்குத்” திரும்ப முடியும் என்று அவர் கூறுகிறார்.
கி-போங் அந்த வாக்குறுதியை ஏற்றுக்கொள்கிறான்.
அப்போது, அருகில் நடைபெறவிருக்கும் முழுநிலவு நாளைய திருவிழா பற்றிய செய்தி அவர்களிடம் வருகிறது. அந்த விழாவுக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கி-போங் விரும்புகிறான்.
ஹே-ஜினையும் தன்னுடன் அழைத்துச் செல்ல நினைக்கிறான். அந்த நேரத்தில் ஹ்யே-கோக்கின் உடல்நிலை சற்றுச் சீரானது போலத் தெரிகிறது.
அதனால் அவர் இருவரையும் விழாவுக்குச் செல்ல அனுமதிக்கிறார். ஆனால் திரும்பி வரும்போது தனக்குத் தேவையான அளவு மண்ணெண்ணெயைக் கொண்டு வரும்படி கி-போங்கிடம் கூறுகிறார்.
கி-போங்கும் ஹே-ஜினும் திருவிழாவுக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் ஒரு மயக்கும் நடனத்தைப் பார்க்கிறார்கள்.
அந்த நடனத்தை ஆடுபவர் வேறு யாருமல்ல; வயதான ஹ்யே-கோக்கே வேறொரு வடிவத்தில் தோன்றுவதாக வெளிப்படுகிறது.
விழா முடிந்து பிரகாசமான முழுநிலவு இரவில் இருவரும் மலை மடத்திற்குத் திரும்புகிறார்கள்.
ஆனால் அவர்கள் திரும்பி வந்தபோது ஹ்யே-கோக் இறந்துவிட்டிருப்பதை அறிகிறார்கள்.
கி-போங் ஏற்கனவே அவரிடம் அளித்திருந்த வாக்குறுதியை நினைவுகூர்கிறான். குருவின் உடலை அவர் விரும்பியபடி மலைமேட்டில் எடுத்துச் சென்று எரிக்க வேண்டும்.
மரணம், உடைமை, ஆசை, பற்றுதல், அறிவின் வீண்மை ஆகியவற்றின் உண்மையான பொருளும் பொருளற்ற தன்மையும் ஒவ்வொரு கணத்திலும் அவனுக்குள் ஆழமாகத் தோன்றத் தொடங்குகிறது.
கி-போங் ஹ்யே-கோக்கின் உடலை ஒரு மரப்பெட்டிக்குள் வைக்கிறான்.
அந்தப் பெட்டியை விறகுக் கட்டுகளைச் சுமக்கும் முதுகுச் சுமையின் மீது வைத்து, மலைப்பாதையில் மெதுவாக மேலே ஏறத் தொடங்குகிறான். இது அவன் முன்பு விறகுகளைச் சுமந்து சென்றபோது பயன்படுத்திய அதே சுமையைப் போன்றது.
உடலின் பாரம் மட்டுமல்லாமல், குருவின் மரணத்தையும் அதன் பொருளையும் தன்னுள் சுமந்தபடி அவன் கடினமான மலைப்பாதையை ஏறுகிறான்.
இரவு நேரத்தில் அவன் இறுதியாக உடலை எரிக்கும் இடத்தை அடைகிறான். அங்கு மரப்பெட்டியை வைத்து தீ மூட்ட முயற்சி செய்கிறான்.
ஆனால் லேசான மழைத்தூறல் பெய்வதால் தீ பற்றவில்லை. அப்போது ஹ்யே-கோக் முன்பு தன்னிடம் மண்ணெண்ணெய் கொண்டு வரச் சொன்னதை கி-போங் நினைவுகூர்கிறான்.
உடனே மீண்டும் மடத்திற்குச் சென்று மண்ணெண்ணெயை எடுத்துக்கொண்டு வருகிறான். அதை கொண்டு வந்து மரப்பெட்டியின் மீது ஊற்றி தீ மூட்டுகிறான்.
இரவு முழுவதும் கி-போங் எரியும் உடலின் அருகிலேயே அமர்ந்திருக்கிறான். குருவை இழந்த துயரம், மரணத்தின் தவிர்க்க முடியாத உண்மை, தன்னுடைய வாழ்க்கை, ஆசைகள், பற்றுதல்கள் ஆகிய அனைத்தும் அவனுடைய மனதை ஆழமாகப் பாதிக்கின்றன.
எரியும் உடலைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதுவரை புத்தக அறிவாலும் போதனைகளாலும் புரிந்துகொள்ள முயன்ற மரணத்தின் உண்மையை அவன் நேரடியாக எதிர்கொள்கிறான்.
அந்த எரியும் உடலைச் சுற்றி மாடும் ஹே-ஜினும் தோன்றுகிறார்கள். இருவரும் அந்தத் தீயை ஆழமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இளம் வயதின் அறியாமையும் கட்டுப்பாடற்ற ஆசைகளும் கூட மரணத்தின் முன்னால் அமைதியாகிப் போவதைப் போன்ற காட்சி அங்கே உருவாகிறது.
காலை வரும்போது இறுதிச் சடங்கின் நெருப்பு முழுவதும் அணைந்துவிடுகிறது. கி-போங் சாம்பலின் நடுவே முழங்காலிட்டு அமர்கிறான்.
தனது விரல்களால் அந்தச் சாம்பலைத் தேடுகிறான். ஹ்யே-கோக்கின் உடல் முழுவதும் எரிந்து அழிந்துவிட்டாலும், சில எலும்புத் துண்டுகள் மட்டும் எஞ்சியிருப்பதை அவன் கண்டுபிடிக்கிறான்.
அவற்றைச் சேகரிக்கிறான். பின்னர் ஒரு கல்லைப் பயன்படுத்தி அந்த எலும்புகளைப் பொடியாக்குகிறான்.
அதன்பின் அந்த எலும்புத் தூளை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் செல்கிறான். அதைத் தண்ணீரிலும், மண்ணிலும், மரங்களிலும், செடிகளிலும் தூவுகிறான்.
ஹ்யே-கோக் இறப்பதற்கு முன்பு, தன் உடலை எரித்து தனது “மூல இடத்திற்குத்” திரும்ப வேண்டும் என்று கூறியிருந்தார்.
இப்போது கி-போங் அந்த உடலின் எஞ்சியதையும் உலகின் பல்வேறு இயற்கைத் தன்மைகளுக்குள் கலந்து விடுவதன் மூலம் குருவை அவர் கூறிய அந்த மூல இடத்திற்கே திருப்பி அனுப்புகிறான்.
இந்தச் செயலைச் செய்யும் போது, ஹ்யே-கோக் தன்னிடம் முன்பு கூறிய புதிர்களின் உண்மையை கி-போங் இறுதியாக உணர்கிறான்.
மரணம் எதையாவது முழுமையாக அழித்துவிடுகிறதா, ஒருவருடைய “நான்” என்ற உணர்வு எங்கே செல்கிறது, மனிதன் எதைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறான் என்பவை போன்ற கேள்விகளுக்கு வெளியில் இருந்து ஒரு பதிலைப் பெறுவதற்குப் பதிலாக, அவற்றின் உண்மையை அவன் நேரடியாக அனுபவிக்கிறான்.
இதன் மூலம் ஹ்யே-கோக் கூறிய அசைக்க முடியாத அமைதியை அவன் அடைகிறான்.
அதன்பின் கி-போங் மீண்டும் மடத்திற்குத் திரும்புகிறான். அங்கு ஹே-ஜினிடம் ஹ்யே-கோக்கிடம் மீதமுள்ள சில பொருட்களை கவனித்துக்கொள்ளும்படி கூறுகிறான்.
பின்னர் அவன் மடத்தை விட்டு வெளியேறுகிறான்.
இதற்குப் பிறகு ஹே-ஜினின் வாழ்க்கையில் ஒரு புதிய நிலை தொடங்குகிறது.
அவன் சிறுவனாக இருந்த நிலையிலிருந்து மெதுவாக வளர்ந்து, ஹ்யே-கோக்கிடம் கற்றவற்றைத் தன்னுள் ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறான்.
ஒரு விளையாட்டுக் காட்சியில், முந்தைய இரவில் நடந்த இறுதிச் சடங்கைத் தானே சிறிய அளவில் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறான்.
வயதான குருவிடம் எஞ்சியிருந்த பொருட்களைச் சேகரித்து, அவற்றை எரிக்கிறான்.
கி-போங் முந்தைய இரவில் குருவின் உடலை எரித்ததைப் போலவே, ஹே-ஜினும் இப்போது சிறிய அளவில் அதே செயலைச் செய்கிறான்.
இந்தச் செயலின் வழியாக, ஹே-ஜின் ஹ்யே-கோக் கற்றுக்கொடுத்த நிலையற்ற தன்மையை நினைவுகூர்கிறான்.
மறுநாள் காலையில் அவன் எழுந்து வழக்கம்போல் ஓடைக்குச் சென்று தண்ணீர் எடுக்கிறான். அந்த நேரத்தில் முன்பு காயமடைந்து இறந்த பறவையின் துணைப் பறவை வழக்கம்போல சத்தமிட்டு அவனுடைய கவனத்தைத் திருப்ப முயல்கிறது.
ஆனால் இந்த முறை ஹே-ஜின் அந்தப் பறவையின் சத்தத்தைக் கவனிப்பதில்லை.
ஹே-ஜினின் கற்றல் இப்போது நிறைவடைந்திருக்கிறது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமானது அல்ல என்பதையும், உருவான அனைத்தும் மாறி மறையும் என்பதையும் அவன் உணர்ந்துவிட்டான்.
அவன் மடத்திற்குள் சென்று ஹ்யே-கோக் வாழ்ந்த அறைக்குள் நுழைகிறான்.
பின்னர் அந்த அறையின் கதவை மூடுகிறான். வயதான குரு இறந்துவிட்ட நிலையில், அந்த இடத்தை இப்போது ஹே-ஜின் ஏற்றுக்கொண்டிருக்கிறான்.
இறுதியில், முன்பு நிழலில் மட்டுமே காட்டப்பட்டுக்கொண்டிருந்த மாடு மீண்டும் தோன்றுகிறது.
இம்முறை அது தனியாக இல்லை; அதன் அருகில் ஒருவர் நடந்து செல்கிறார். அவர்கள் இருவரும் வெளிச்சத்தில் நகர்கிறார்கள்.
அதே நேரத்தில் பறவை பறந்து செல்கிறது. ஹ்யே-கோக்கின் மரணம், கி-போங்கின் உணர்வு, ஹே-ஜினின் வளர்ச்சி ஆகியவற்றின் தொடர்ச்சியாக, பழைய நிலை முடிந்து புதிய நிலை உருவாகிறது.
#கீதப்ப்ரியன்உலகசினிமா
#கீதப்ப்ரியன்க்ளாஸிக்
#கீதப்ப்ரியன்ஏசியன்க்ளாஸிக்