விண்டர் லைட் Winter Light 1963

கடவுள் உண்மையில் இருக்கிறாரா என்ற கேள்வியைவிட, கடவுள் அமைதியாக இருக்கிறார் என்று மனிதன் உணரும் தருணம் எவ்வளவு பயங்கரமானது?

 அந்தக் கேள்வியை உரக்கக் கேட்காமல், பார்வையாளரின் மனதுக்குள் மெதுவாக இறக்கிவைக்கும் திரைப்படம்தான் இங்மர் பெர்க்மனின் விண்டர் லைட் Winter Light. 

1963-ல் வெளியான இந்த 81 நிமிட ஸ்வீடன் திரைப்படம், மதத்தைப் பற்றிய படம் என்ற எளிய அடையாளத்துக்குள் அடங்கிவிடாதது. 

நம்பிக்கை, சந்தேகம், தனிமை, மனித அச்சம், அன்பு, கடவுளின் மௌனம் ஆகியவற்றை மிகக் குறைந்த காட்சிகளிலும் மிக அதிகமான மன அழுத்தத்துடனும் ஆராயும் படைப்பு இது.

பெர்க்மனின் இயக்கத்தின் மிகப் பெரிய பலம், பெரிய சம்பவங்களைத் தேடாமல் மனிதனின் உள்ளுக்குள் இருக்கும் சிறிய அசைவுகளையே நாடகமாக மாற்றுவதில் இருக்கிறது.

 இங்கு வெளிப்புற உலகம் பெரிதாக இயங்குவதில்லை; மனிதர்களின் முகங்களும், மௌனங்களும், தயக்கங்களும், சொல்லப்படாமல் நிற்கும் உணர்ச்சிகளுமே திரைப்படத்தின் உண்மையான இயக்கமாக மாறுகின்றன.

 அதனால் படம் வேகமாகச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் பார்வையாளருக்கு இது மெதுவானதாகத் தோன்றலாம்.

 ஆனால் அந்த மெதுவான நடைதான் கதாபாத்திரங்களின் ஆன்மிகக் குழப்பத்தை நமக்குள் ஊடுருவச் செய்கிறது.

திரைக்கதையை பெர்க்மன் மூன்று அத்தியாயங்களைக் கொண்ட  இசையைப் போன்ற கட்டமைப்பில் உருவாக்கியிருப்பது அதன் இறுக்கத்தை உணரச் செய்கிறது. 

தேவையற்ற கிளைக் கதைகள் இல்லை; ஒவ்வொரு உரையாடலும் மனிதனின் நம்பிக்கையையும் மனநிலையையும் ஆராயும் கருவியாகிறது. 

குறிப்பாக, மதத்தைப் பற்றி பேசும் திரைப்படமாக இருந்தாலும், பதில்களைத் தயாராக வழங்குவதில்லை. 

ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது; அதற்கு இன்னொரு கேள்வி உருவாகிறது. இதனால் பார்வையாளர் திரைப்படத்தைப் பார்ப்பவராக மட்டும் இல்லாமல், தன்னுடைய நம்பிக்கைகளையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளும் ஒருவராக மாறுகிறார்.

தோமஸ் எரிக்சன் (குன்னர் ப்யோர்ன்ஸ்ட்ராண்ட்) என்ற பாத்திரத்தில் வெளிப்படும் உள்ளார்ந்த சிக்கல்தான் படத்தின் உணர்ச்சி மையம்.

 ஆனால் அந்தக் கதாபாத்திரத்தைப் பெர்க்மன் நல்லவன்–கெட்டவன் என்ற எளிய அளவுகோலில் உருவாக்கவில்லை. 

அவனுடைய பலவீனங்கள், சுயநலம், அன்புக்கான ஏக்கம், ஆன்மிகத் தடுமாற்றம் ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்படும் மனிதத் தன்மைகளாகவே இருக்கின்றன.

 அதனால் அவனைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் பார்வையாளர் தன்னையே அளவிடத் தொடங்குகிறார்.

மார்த்தா லுண்ட்பெர்க் (இங்க்ரிட் துலின்) பாத்திரமும் அதே அளவு சிக்கலானது. அவள் வெறும் காதல் பாத்திரமாக எழுதப்படவில்லை. 

அன்பு என்பது மற்றொருவரை மாற்றிவிடும் சக்தியா, அல்லது பதில் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து அன்பு செலுத்தும் மனித இயல்பா என்ற கேள்வியை அவளுடைய இருப்பு எழுப்புகிறது. 

இவ்வாறு முக்கியமான ஒவ்வொரு பாத்திரமும் ஒரு குறிப்பிட்ட கருத்தின் பிரதிநிதியாக இல்லாமல், தனித்தனி வேதனைகளும் தேவைகளும் கொண்ட மனிதர்களாக நிற்கின்றனர்.

நடிப்பில் மிகப்பெரிய சிறப்பு வெளிப்படையான உணர்ச்சிப் பெருக்கைத் தவிர்ப்பதுதான்.

 முகத்தில் தோன்றும் சிறிய மாற்றம், குரலில் ஏற்படும் இடைவெளி, கண்களின் பார்வை, நீண்ட மௌனம் ஆகியவற்றின் வழியே உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன.

 குறிப்பாக தோமஸின் உள்மனக் குழப்பத்தை குன்னர் ப்யோர்ன்ஸ்ட்ராண்ட் மிகக் கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பால் உருவாக்குகிறார்.

 பார்வையாளரை நோக்கி “இந்த மனிதன் இப்போது இப்படித்தான் உணர்கிறான்” என்று படம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல், அதை நாமே உணரும்படி செய்கிறது.

ஸ்வென் நிக்விஸ்டின் ஒளிப்பதிவு இந்த திரைப்படத்தின் தனித்துவத்தை மேலும் உயர்த்துகிறது.

 குளிர்ச்சியான, இயற்கையான ஒளி, தேவாலயத்தின் வெறுமையான பரப்பு, மனித முகங்களைத் தெளிவாகப் பதிவு செய்யும் நெருக்கமான காட்சிகள் ஆகியவை சேர்ந்து ஒரு காட்சியுலகை உருவாக்குகின்றன. 

ஒளி இங்கே வெறும் காட்சியைப் பார்க்க உதவும் தொழில்நுட்பம் அல்ல; கதாபாத்திரங்களின் மனநிலையோடு இணைந்த திரைப்பட மொழியாக மாறுகிறது. 

அதிகப்படியான அலங்காரமின்றி உருவாக்கப்பட்ட இந்தப் படங்களின் கடுமையான எளிமை, மனித முகத்தைத் தானே ஒரு காட்சியாக மாற்றுகிறது.

படத்தொகுப்பும் இதே கட்டுப்பாட்டைப் பின்பற்றுகிறது. காட்சிகளை வேகமாக வெட்டி உணர்ச்சியைத் தூண்டுவதற்குப் பதிலாக, பார்வையாளருக்கு ஒரு தருணத்துக்குள் தங்குவதற்கான இடத்தை அளிக்கிறது. 

அதனால் ஒரு பார்வை, ஒரு மௌனம், ஒரு உரையாடலின் இடைவெளி ஆகியவை வழக்கத்தைவிட அதிக எடையைப் பெறுகின்றன. 

படம் நம்மைத் தொடர்ந்து இழுத்துச் செல்லவில்லை; நாமே அதற்குள் சென்று பார்க்க வேண்டிய சூழலை உருவாக்குகிறது.

இசையில், திரைப்படத்தில் தனிப்பட்ட பின்னணி இசை இல்லாதது மிகவும் குறிப்பிடத்தக்க முடிவு. 

தேவாலய ஆர்கன் இசை மட்டுமே இசை உலகின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இதனால் காட்சிகளின் உணர்ச்சியை இசை கட்டுப்படுத்துவதில்லை.

 மாறாக, மௌனம், குரல்கள், தேவாலயத்தின் இயற்கையான ஒலிகள் ஆகியவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

 இதன் விளைவாக படம் பார்ப்பதைக் காட்டிலும் கேட்பதிலும் ஒரு தனியான அனுபவத்தை உருவாக்குகிறது.

கலை இயக்கத்திலும் ஆடை வடிவமைப்பிலும் பெர்க்மன் ஆடம்பரத்தைத் தவிர்க்கிறார்.

 சாதாரண உடைகள், எளிமையான தேவாலயச் சூழல், கிராமப்புற ஸ்வீடனின் இயல்பான பின்னணி ஆகியவை திரைப்படத்திற்கு அலங்காரமற்ற நிஜத்தன்மையைத் தருகின்றன.

 தேவாலயம் ஒரு மதக் கட்டிடமாக மட்டுமல்லாமல், மனிதனின் நம்பிக்கையும் சந்தேகமும் நேருக்கு நேர் நிற்கும் மனவெளியாக மாறுகிறது.

காலப்பின்னணியும் படத்தின் மனநிலைக்கு முக்கியமானது. அணு ஆயுதப் போட்டி உலகளாவிய அச்சத்தை உருவாக்கியிருந்த காலகட்டத்தில், மனித வாழ்க்கையின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் தனிப்பட்ட ஆன்மிக நெருக்கடியையும் பெர்க்மன் இணைக்கிறார்.

 ஆனால் இதை அரசியல் திரைப்படமாக மாற்றாமல், உலகின் பெரும் அச்சம் ஒரு தனி மனிதனின் உள்ளத்தில் ஏற்படுத்தும் அதிர்வாகவே அணுகுகிறார். 

இதுவே 1963-ல் உருவான படமாக இருந்தாலும், இன்றைய பார்வையாளருக்கும் அது அந்நியமாகத் தெரியாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று.

பெர்க்மனின் திரைப்பட மொழியில் மிக முக்கியமான அம்சம், “கடவுள் இருக்கிறாரா?” என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் அல்ல; 

அந்தக் கேள்வியுடன் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை உணர்த்துவதுதான். 

இப்படைப்பு மதநம்பிக்கையைப் பிரச்சாரம் செய்யவும் இல்லை; அதைக் கேலி செய்யவும் இல்லை. 

நம்பிக்கை உடையும் தருணத்தையும், மனிதன் அதற்குப் பிறகு தன்னை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதையும் மிக நேர்மையாக அணுகுகிறது. 

இதனால் மத நம்பிக்கை உள்ளவருக்கும், அதில் நம்பிக்கை இல்லாதவருக்கும், ஆன்மிகக் கேள்விகளில் ஒருபோதும் ஈடுபடாதவருக்கும் கூட வெவ்வேறு விதமான சிந்தனைகளைத் தூண்டக்கூடிய படமாகிறது.

மனிதநேயத்தின் கோணத்தில் பார்த்தால், படம் கடவுளைப் பற்றிய கேள்வியை மனிதர்களுக்கிடையேயான அன்பின் கேள்வியிலிருந்து பிரிக்கவில்லை. 

ஒருவரை நேசிப்பது, அவரை காப்பாற்ற முடிவது, மற்றொருவரின் துயரத்தை உண்மையில் புரிந்துகொள்வது போன்ற அடிப்படை மனித அனுபவங்களே இங்கே ஆன்மிகக் கேள்விகளுடன் கலக்கின்றன. 

அதனால் படம் தத்துவ விவாதமாக மட்டுமே நிற்காமல், மிகவும் தனிப்பட்ட உணர்ச்சி அனுபவமாக மாறுகிறது.

திரைப்படத்தின் தனித்துவம் அதன் “குறைவு”களில்தான் இருக்கிறது. குறைந்த நேரம், குறைந்த கதாபாத்திரங்கள், குறைந்த இடங்கள், குறைந்த இசை, குறைந்த காட்சியழகு—ஆனால் மிகப்பெரிய கேள்விகள். எதையும் பெரிதாக்கிக் காட்டாமல், எளிமையைப் பயன்படுத்தி உணர்ச்சியின் ஆழத்தை அதிகரிப்பது பெர்க்மனின் கலைத்திறன்.

 அதனால்தான் இந்தப் படம் பார்வையாளரை மகிழ்விக்க முயலும் திரைப்படமாக இல்லாமல்,  அமைதியாக உட்கார வைத்து சிந்திக்கச் செய்யும் திரைப்படமாகிறது.

உலகளாவிய விமர்சன வரவேற்பிலும் இப்படைப்புக்கு முக்கியமான இடம் கிடைத்தது.

 அமெரிக்க விமர்சனங்கள் ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், அதன் காட்சியமைப்பு, சிந்தனையின் தீவிரம், நடிப்பு ஆகியவை தொடர்ந்து பாராட்டப்பட்டன. 

1963-ஆம் ஆண்டில் தேசிய விமர்சக வாரியத்தின் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்றது;

 பின்னர் Cahiers du Cinéma ஆண்டின் சிறந்த பத்து திரைப்படங்களில் மூன்றாவது இடத்தை வழங்கியது. 

ரோஜர் ஈபர்ட் இதை தனது “Great Movies” பட்டியலில் சேர்த்து அதன் கடுமையான எளிமையையும் ஆழமான சக்தியையும் பாராட்டினார். 

பெர்க்மனே தன் திரைப்படங்களில் இதை மிகவும் விரும்பிய படைப்பாகக் குறிப்பிட்டிருப்பதும் அதன் தனித்துவத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

Winter Light அனைவருக்கும் எளிதாக ரசிக்கக்கூடிய திரைப்படம் அல்ல. 

ஆனால் சினிமா என்பது வெறும் கதையைச் சொல்லும் கருவி அல்ல; மனிதனின் உள்ளே பதில் இல்லாமல் கிடக்கும் கேள்விகளையும் திரையில் உயிர்ப்பிக்க முடியும் என்பதை அறிய விரும்புபவர்களுக்கு இது தவிர்க்க முடியாத அனுபவம்.

 படம் முடிந்த பிறகும் அதன் கேள்விகள் முடிவதில்லை. படம் முடிந்த பின் கதையை நினைவுகூர்வதைவிட, “நான் நம்புவது என்ன?”, “நான் நேசிப்பது உண்மையில் என்ன?”, “பதில் கிடைக்காதபோது மனிதன் எதைப் பற்றிப் பிடித்துக்கொள்கிறான்?” என்ற கேள்விகள் மனதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும்.

 அதுவே இப்படத்தை பார்க்கப்பட வேண்டியதன் மிகப்பெரிய காரணம், இப்படத்தை பார்த்த பிறகு எம்.டி.வாசுதேவன் உருவாக்கிய மிகவும் அர்த்தமுள்ள காத்திரமான படைப்பு தான் "நிர்மால்யம் ".

===============================
படத்தின் கதை:-

ஸ்வீடனின் கிராமப்புறத்தில் உள்ள ஒரு சிறிய தேவாலயத்தில் மதிய நேரப் பிரார்த்தனை முடிவடைகிறது.

 அங்கு வழக்கம்போல் கூட்டம் பெரிதாக இல்லை; சிலர் மட்டுமே வந்திருக்கிறார்கள். அவர்களில் மீனவர் ஜோனஸ் பெர்சன் (மேக்ஸ் வான் சிடோ), அவரது கர்ப்பிணி மனைவி கரின் பெர்சன் (குன்னெல் லிண்ட்ப்லோம்), மேலும் தேவாலயப் பாதிரியாரான தோமஸ் எரிக்சனின் (குன்னர் ப்யோர்ன்ஸ்ட்ராண்ட்) முன்னாள் காதலியும், தற்போது ஆசிரியையாக இருப்பவருமான மார்த்தா லுண்ட்பெர்க் (இங்க்ரிட் துலின்) ஆகியோர் இருக்கிறார்கள்.

பிரார்த்தனை முடிந்ததும், உடல்நிலை சரியில்லாமல் சளி பிடித்திருந்தாலும் தோமஸ், வேறொரு ஊரில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவிருக்கும் அடுத்த பிரார்த்தனைக்குச் செல்லத் தயாராகிறார். 

ஆனால் அதற்கு முன்பு ஜோனஸும் கரினும் அவரைச் சந்திக்க வருகிறார்கள்.

 அண்மையில் சீனா அணுகுண்டை உருவாக்கி வருவதாகக் கேள்விப்பட்டதிலிருந்து ஜோனஸ் கடுமையான மனவேதனையில் இருக்கிறான்.

 உலகமே அழிவை நோக்கிச் செல்கிறது என்ற பயம் அவனை ஆட்கொண்டிருக்கிறது.

 அவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்ள முயலும் தோமஸ் அவனிடம் சிறிது நேரம் பேசுகிறார். 

ஆனால் உடனடியாக அவனுக்கு என்ன ஆலோசனை கூறுவது என்று தோமஸுக்கே தெரியவில்லை. 

எனவே, முதலில் மனைவியை வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டுவிட்டு மீண்டும் தனியாக வரும்படி ஜோனஸிடம் கூறுகிறார்.

ஜோனஸும் கரினும் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்திலேயே மார்த்தா தோமஸிடம் வருகிறாள்.

 அவள் தோமஸை மிகவும் நேசிக்கிறாள். ஆனால் தோமஸ் அவளிடம் காட்டும் அக்கறை குறைந்து வருவதால் அவள் வேதனையில் இருக்கிறாள்.

 அவள் முன்பு தோமஸுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறாள்; அதை அவர் படித்தாரா என்று கேட்கிறாள். 

தோமஸ் இன்னும் அந்தக் கடிதத்தைப் படிக்கவே இல்லை. ஜோனஸின் துயரத்தைப் போக்குவதற்குக்கூட தன்னால் முடியவில்லை என்று அவன் மார்த்தாவிடம் கூறுகிறார்.

 அதைவிட மோசமாக, ஜோனஸுக்கு நம்பிக்கையைப் பற்றிப் பேச வேண்டிய தோமஸுக்கே இப்போது எந்த நம்பிக்கையும் இல்லை.

 இப்படிப்பட்ட நிலையில், இன்னொருவருக்கு எப்படி நம்பிக்கையைக் கொடுப்பது என்று அவருக்குத் தெரியவில்லை.

மார்த்தா தனது காதலை வெளிப்படையாகச் சொல்கிறாள். ஆனால் தோமஸ் தன்னை உண்மையில் நேசிப்பதில்லை என்பதையும் அவள் உணர்கிறாள். 

அதனால் மனவேதனையுடன் அங்கிருந்து செல்கிறாள். பின்னர் தோமஸ் அவள் எழுதிய கடிதத்தைப் படிக்கத் தொடங்குகிறார்.

அந்தக் கடிதத்தில் மார்த்தா, தோமஸ் தன்னை எவ்வாறு புறக்கணித்துவருகிறார் என்பதை விரிவாக எழுதுகிறாள்.

 ஒருகாலத்தில் தனது உடலில் ஏற்பட்ட ஒரு தோல் நோய் போன்ற தடிப்பால் தனது தோற்றம் மாறியபோது, தோமஸ் தன்னிடம் வெறுப்புடன் நடந்துகொண்டதை அவள் நினைவுகூர்கிறாள். 

அந்த வேதனையான காலத்தில் தோமஸின் மதநம்பிக்கையும் பிரார்த்தனைகளும் தன்னை எந்த வகையிலும் காப்பாற்றவில்லை என்று அவள் கூறுகிறாள். 

மதம் இல்லாமலேயே தன் குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் நிறைந்திருந்ததாகவும் எழுதுகிறாள். 

அதனால் இயேசுவைப் பற்றிப் பேசும் தோமஸிடம் உண்மையான அன்பும் நம்பிக்கையும் ஏன் இல்லை என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

 கடிதத்தை முழுவதுமாகப் படித்துவிட்டு தோமஸ் சோர்வில் தூங்கிவிடுகிறார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு ஜோனஸ் மீண்டும் திரும்பி வருகிறான். 

அவனுக்கு உதவ வேண்டும் என்ற பொறுப்பு தோமஸுக்கு இருக்கிறது. ஆனால் ஜோனஸிடம் பேசும்போது தோமஸ் அளிக்கும் ஆறுதலும் ஆலோசனையும் தடுமாறுகின்றன. 

இறுதியில் தன்னிடம் நம்பிக்கையே இல்லை என்பதை தோமஸ் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

தோமஸ் தனது பழைய நம்பிக்கையைப் பற்றி ஜோனஸிடம் கூறுகிறார். ஒருகாலத்தில் கடவுள் மனிதர்களை நேசிக்கிறார் என்று நம்பியதாகவும், அதில் தன்னையும் குறிப்பாக கடவுள் நேசிக்கிறார் என்று எண்ணியதாகவும் சொல்கிறார்.

 அந்த நம்பிக்கை உண்மையில் கடவுளை விடத் தன்னையே மையமாகக் கொண்ட ஒரு சுயநலமான நம்பிக்கையாக இருந்திருக்கலாம் என்று அவன் இப்போது உணர்கிறார்.

இதற்குப் பின்னால் தோமஸின் கடந்தகால அனுபவம் இருக்கிறது. ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் காலத்தில் லிஸ்பனில் பணியாற்றியபோது, உலகில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் இழைத்த கொடுமைகளை அவர் பார்த்திருக்கிறார். 

மனிதர்களை நேசிக்கும், அவர்களைக் காப்பாற்றும் கடவுள் இருக்கிறார் என்ற தனது நம்பிக்கையுடன் அந்தக் கொடுமைகளை அவனால் ஒத்திசைக்க முடியவில்லை.

 ஆனால் அந்த முரண்பாட்டை எதிர்கொள்ளத் துணியாமல், அவர் அந்தக் கொடுமைகளைப் பற்றியே சிந்திக்காமல் தன்னைத் தானே விலக்கிக்கொண்டார்.

இப்போது ஜோனஸின் அணுகுண்டுப் பயத்தையும், உலகில் மனிதர்களின் கொடுமையையும் எதிர்கொள்ளும்போது, தோமஸின் பழைய நம்பிக்கை முழுவதுமாக உடைந்துவிடுகிறது. 

கடவுள் இல்லை என்று மறுத்துவிட்டால் உலகில் நடக்கும் மனிதக் கொடுமைகளுக்கு எந்த விளக்கமும் தேவைப்படாது என்று அவர் ஜோனஸிடம் கூறுகிறார். 

கடவுள் இல்லையென்றால், மனிதனின் கொடுமை மனிதனுடையதே; அதற்கு மேலிருந்து எந்த அர்த்தத்தையும் தேட வேண்டியதில்லை என்பதே அவருடைய எண்ணமாகிறது.
இதைக் கூறிவிட்டு ஜோனஸ் அங்கிருந்து செல்கிறான்.

 தோமஸ் தேவாலயத்தில் உள்ள சிலுவையின் முன் நிற்கிறார். தன்னை இத்தனை காலமாகப் பிடித்திருந்த நம்பிக்கையிலிருந்து இப்போது விடுதலை பெற்றுவிட்டதாக அவன் அறிவிக்கிறார்.

இந்த உரையாடலை தேவாலயத்தில் மறைந்து நின்று கேட்டுக்கொண்டிருந்த மார்த்தா, தோமஸ் தனது பழைய கடவுள் நம்பிக்கையை விட்டுவிட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறாள்.

 தன்னிடம் தோமஸ் இப்போது நெருக்கமாக வருவார் என்று அவள் நம்புகிறாள். அவனை அணைத்துக்கொள்கிறாள்.

 ஆனால் தோமஸ் அவளுடைய அன்புக்கு மீண்டும் எந்த உணர்ச்சிப்பூர்வமான பதிலும் அளிக்கவில்லை.

அந்த நேரத்தில் விதவை மக்டலீனா லெட்ஃபோர்ஸ் (எல்சா எபெசென்) அங்கு வந்து ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்கிறாள். 

சிறிது நேரத்துக்கு முன்பு அங்கிருந்து சென்ற ஜோனஸ், துப்பாக்கியால் தன்னையே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறான்.

தோமஸ் உடனடியாக அந்த இடத்துக்குச் செல்கிறார். அங்கு காவல்துறையினர் ஜோனஸின் உடலை மூடுவதற்கு உதவுகிறார். 

அவர் அதிர்ச்சியில் வெளிப்படையாக எந்த உணர்ச்சியையும் காட்டாமல், அமைதியாக அந்தப் பணியில் ஈடுபடுகிறார். 

மார்த்தாவும் நடந்ததை அறிந்து நடந்தே அங்கு வந்து சேர்கிறாள். பின்னர் இருவரும் மார்த்தாவின் வீட்டை நோக்கிச் செல்கிறார்கள்.

 சளி பிடித்திருக்கும் தோமஸுக்கு மருந்து எடுத்துக்கொள்ள மார்த்தா தனது வீட்டுக்குள் வரும்படி அழைக்கிறாள்.

மார்த்தாவின் வீட்டுடன் இணைந்திருக்கும் அவளுடைய வகுப்பறையில் இருவரும் இருக்கும்போது, தோமஸ் திடீரென்று அவள்மீது கடுமையாகப் பேசத் தொடங்குகிறார். 

முதலில், அவர்களுடைய உறவைப் பற்றி ஊரில் பரவும் பேச்சுகளால் தான் சோர்ந்து போயிருந்ததாகவும், அதனால்தான் அவளை நிராகரித்ததாகவும் கூறுகிறார். ஆனால் இதைக் கேட்டும் மார்த்தாவின் காதல் குறையவில்லை.

அதனால் தோமஸ் இன்னும் கொடூரமாகப் பேசுகிறார். மார்த்தாவின் பிரச்சினைகளாலும், தன்னைப் பார்த்துக்கொள்ள அவள் தொடர்ந்து முயல்வதாலும், அவள் இடைவிடாமல் பேசிக்கொண்டிருப்பதாலும் தான் சோர்ந்துவிட்டதாகக் கூறுகிறார். 

மேலும், தன் மறைந்த மனைவியுடன் மார்த்தாவை ஒப்பிடுகிறார். தான் உண்மையாக நேசித்த ஒரே பெண் தனது மனைவிதான் என்றும், அந்த இடத்தை மார்த்தா ஒருபோதும் அடைய முடியாது என்றும் கூறுகிறார்.

இந்த வார்த்தைகள் மார்த்தாவை கடுமையாகப் பாதிக்கின்றன. இருந்தாலும் அவள் தோமஸை விட்டுவிடவில்லை. ஜோனஸின் வீட்டுக்குச் சென்று அவனது மனைவியிடம் நடந்ததைத் தெரிவிக்க அவருடன் செல்ல சம்மதிக்கிறாள்.

இருவரும் ஜோனஸ்–கரின் வீட்டை அடைகிறார்கள். ஜோனஸ் தற்கொலை செய்துகொண்ட செய்தி கரினுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 கணவனை இழந்த அதிர்ச்சியையும், இனி தனது குழந்தைகளுடன் வாழ்க்கையை எப்படித் தொடர்வது என்ற பயத்தையும் தாங்க முடியாமல் கரின் படிக்கட்டுகளில் சரிந்து விழுகிறாள். 

தன் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்று அவள் வேதனையுடன் கேட்கிறாள். தோமஸ் அவளுக்கு உதவுவதாக ஒரு முறையான, உணர்ச்சியற்ற உறுதியை மட்டும் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.

இதற்கிடையில் பிற்பகல் மூன்று மணிக்கான பிரார்த்தனை நடைபெற வேண்டிய இரண்டாவது தேவாலயத்துக்கு தோமஸும் மார்த்தாவும் செல்கிறார்கள். 

ஆனால் அங்கு யாரும் வரவில்லை. தேவாலயத்தில் தோமஸைத் தவிர உடல் ஊனமுற்ற பணியாளர் அல்கோட் ஃப்ரோவிக் (அல்லன் எட்வால்), தேவாலய இசைக்கலைஞர் ஃப்ரெட்ரிக் ப்லோம் (ஒலோஃப் தூன்பெரி) ஆகிய இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.

தோமஸ் உடைமாற்றும் அறையில் இருக்கும்போது அல்கோட் அவரிடம் இயேசுவின் சிலுவைத் துன்பத்தைப் பற்றிக் கேட்கிறான்.

 இயேசுவின் உடல் அனுபவித்த வேதனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன் என்று அவன் சிந்திக்கிறார். 

அந்த உடல் வேதனை நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஆனால் இயேசு தன்னைப் பின்பற்றிய சீடர்களிடமிருந்து தொடர்ந்து மறுப்பையும் துரோகத்தையும் எதிர்கொண்டார். 

இறுதியில் சிலுவையில் இருந்தபோதும் கடவுளிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

அல்கோட்டின் கேள்வி மிகவும் நேரடியானது: இயேசு அனுபவித்த உடல் வேதனையைவிட, கடவுள் அமைதியாக இருந்தது இன்னும் மோசமான வேதனையாக இல்லையா? இதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த தோமஸ், அது உண்மைதான் என்று பதிலளிக்கிறார்.

மற்றொரு பக்கத்தில் ஃப்ரெட்ரிக், மார்த்தாவிடம் பேசுகிறான். இந்தச் சிறிய ஊரையும் தோமஸையும் விட்டுவிட்டு அவள் தனது வாழ்க்கையை வாழச் செல்ல வேண்டும் என்று அவன் அறிவுறுத்துகிறான்.

 இல்லையெனில், தங்களுடைய கனவுகள் நசுங்கிப்போனதைப் போல அவளுடைய கனவுகளும் நசுங்கிவிடும் என்று எச்சரிக்கிறான். 

ஆனால் மார்த்தா அவனுடைய அறிவுரையை ஏற்கவில்லை. அவள் அங்கேயே இருந்து பிரார்த்தனை செய்யத் தொடங்க முடிவு செய்கிறாள்.

தேவாலயத்துக்குள் யாரும் வராததால் பிரார்த்தனையை நடத்த வேண்டுமா வேண்டாமா என்று ஃப்ரெட்ரிக்கும் அல்கோட்டும் சந்தேகிக்கிறார்கள். 

இருந்தாலும் தோமஸ் பிரார்த்தனையை நடத்த முடிவு செய்கிறார். யாரும் வரவில்லை என்றாலும் தேவாலய மணிகள் ஒலிக்கப்படுகின்றன.

தோமஸ் பிரார்த்தனையைத் தொடங்குகிறார். வெறிச்சோடிய தேவாலயத்தில் அவர் தனியாகவே வழிபாட்டை நடத்துகிறார். 

அவர் முதலில் புனிதப் பாடலின் வார்த்தைகளை உச்சரிக்கிறார்: “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வவல்லமையுள்ள ஆண்டவரே; வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்திருக்கின்றன.”

அவ்வாறு, கடவுள்மீது இருந்த தனது நம்பிக்கையை இழந்துவிட்டதாகச் சொன்ன ஒரே நாளிலேயே, யாரும் இல்லாத தேவாலயத்தில் தோமஸ் மீண்டும் வழிபாட்டைத் தொடங்குகிறார். 

அவருடைய உள்ளத்தில் நம்பிக்கை மீண்டும் வந்துவிட்டதா, அல்லது கடவுளின் மௌனத்தை ஏற்றுக்கொண்டபடியே தனது கடமையைத் தொடர்கிறானா என்பது தெளிவாகத் தீர்மானிக்கப்படாமல், அவன் வழிபாட்டைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்,இத்தருணத்தில் படம் நிறைகிறது.

#கீதப்ப்ரியன்உலகசினிமா
#கீதப்ப்ரியன்க்ளாஸிக்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (233) ஆஸ்கர் (152) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)