சென்னை
தேனாம்பேட்டை, முக்கால் கிரவுண்டு நிலத்தில் பச்சைப் பசேல் என கண்ணுக்கு
குளிர்ச்சியாக வீட்டுத் தோட்டம் நம்மை வரவேற்கிறது. போர்டிகோவை அடுத்து,
வேலி, காம்பவுண்டு சுவர், வாசல் கேட் என எங்கும் பசுமையின் சாயல். செடிகள்,
கொடிகள், பூக்கள் என மிக ரம்யமான சூழல். தொட்டியில் சிரிக்கும் சிவப்பு
ரோஜாக்கள். இப்படி, ஆரோக்கியத்தின் அரண்மனையாக வீற்றிருக்கிறது, உஷா
ஸ்ரீதரின் இல்லம்.
''தோட்டத்தினால் வீட்டுக்கு அழகு மட்டுமல்ல, உடல், மன ஆரோக்கியத்துக்கு நல்ல மருந்தாக இருக்கிறது” என்கிறார் உஷா. ''சின்ன வயசிலிருந்தே மரம், செடி, கொடிகளோடே வளர்ந்தேன். எங்க அப்பா ஒரு தோட்டப் பிரியர். இங்கே வீடு கட்டியதும், முன்புறம் இருந்த மண் தரையில் முதலில் லான் (பச்சைப் புல்வெளி), குரோட்டன்ஸ் மாதிரியான செடிகள்தான் வெச்சிருந்தோம். ஆனால், அதெல்லாம் சும்மா அழகுக்குத்தான். வீணாக இடத்தை அடைச்சிட்டு இருக்கோன்னு தோணுச்சு. வீட்டுக்கு உபயோகமா காய்கறி போட்டால் என்னன்னு நினைச்சு, இப்ப அஞ்சு வருஷமா, காய்கறித் தோட்டத்துல இறங்கிட்டேன். அந்தந்த சீஸனுக்கு ஏத்த மாதிரி, காய்கறி விதைகளைப் போட்டு, தண்ணி பாய்ச்சி, முழுக்க முழுக்க நானே பராமரிப்பேன்!
ஆர்கானிக் உரம்தான் பயன்படுத்தறேன். உரம் போட்டு வரும் காய்கள் மாதிரி, இயற்கை விவசாயத்தில் வர்ற காய்கள் பளபளன்னு இருக்காது. ஆனா, உயிர்ச்சத்துக்கள் அதில்தான் வீணாகாம நமக்குக் கிடைக்கும். நான் போடற ஒரே உரம் ஆட்டுப்புழுக்கைதான். கொஞ்சம் விலை அதிகம். ஆனால், சிறந்த உரம். மாட்டுச்சாணத்துல கூட ஒவ்வொரு சமயம் புழுக்கள் இருக்கும். ஆனா, ஆட்டுப்புழுக்கையில் அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. அப்பப்போ ஒரு கை அள்ளிப் போட்டிருவேன். பூச்சி அதிகமா வர்றதில்லை. அப்படியும் வந்தா, மாட்டுக் கோமியம்தான் மருந்து!
வீட்டின் பக்கவாட்டுச் சுவரில் படர்ந்து இருந்த வெற்றிலைக் கொடியைப் பார்த்ததும் நமக்கு ஆர்வம் மேலிட, பறித்துக் கொடுத்த வெற்றிலையை வாயில் போட்டால், கும்பகோணம் வெற்றிலையின் வாசத்தில் வாய் மணத்தது. ''சுவரோரமா வெத்தலை நாத்து ஒண்ணு வச்சாப் போதும். அதுபாட்டுக்கு நல்லா வளரும். தொட்டியில் கூட வைக்கலாம். சாப்பிட்டதும் ரெண்டு வெத்தலையை மென்னு சாப்பிட்டோம்னா, ஜீரணத்துக்கு நல்லது. கால்சியம் சத்தும் கிடைக்கும். அதுமாதிரி கறிவேப்பிலை, கத்தாழை வச்சிருக்கேன். கத்தாழை மடலைக் கீறி, அதுக்குள்ள இருக்கிற வெள்ளை நிறச் சோற்றைச் சாப்பிட்டால், எப்படிப்பட்ட வயித்துப் புண்ணும் சரியாயிடும். உடல் உஷ்ணத்தைக் குறைச்சு, குளிர்ச்சியைக் கொடுக்கும். தலையில் பொடுகு இருந்தாலும் போடலாம். சர்வ ரோக நிவாரணி கத்தாழை! அதையும் ஒரே ஒரு இணுக்கு வச்சாலே நல்லா வந்துடும்!
''நித்யமல்லி கடையில் கிடைக்காது. பூஜைக்கு உகந்தது. தோட்டவேலை பார்க்கிறதால, தேவையில்லாத கலோரிகள் குறைஞ்சு, உடம்பு லேசா இருக்கு. எனக்கு அதுதான் யோகா, எக்ஸர்சைஸ் எல்லாம்! நாலு களையைக் கொத்திட்டு நிமிர்ந்தா, வேர்த்துக் கொட்டும். ஸ்ட்ரெஸ் இருந்தாலும், தோட்டத்தில் இருக்கிற புல்லைப் பிடுங்கறதுல மனபாரம் குறைஞ்ச மாதிரி லேசா இருக்கும்!
''உடலுக்கு ஆரோக்கியம்... மனசுக்கு ஆசுவாசம்.. வயிற்றுக்கு நல்ல காய்கள்.. கண்ணுக்குக் குளுமை.. பொழுதும் போகும்.. இத்தனையும் கொடுக்கிற ஒரே விஷயம் தோட்டம் தான்" தோட்டத்தில் பறித்த காய்கறிகள் போல `ஃப்ரெஷ்’ஷாகச் சிரிக்கிறார் உஷா.
- பிரேமா நாராயணன்