இயற்கையைத் தன் தேவைக்காகப் பயன்படுத்தும்போது அதை அழிக்காமல்,
சேதாரமில்லாமல் அதனோடு இயைந்த வாழ்க்கையை வாழ்பவர்களே, உண்மையில் தொன்மையான
நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள். வாழ்க்கைக்-கும், தேவைக்கும் உதவுகின்ற
இயற்கையை கொண்டாடுகின்ற, இயற்கையைப் போற்றிவணங்கும் நெடுங்கால
நாகரீகத்திற்குச் சொந்தக்காரர்கள், தமிழர்கள். தேசியத் திருநாளான பொங்கல்
விழா, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பண்பாட்டு நிகழ்வாகவே
கொண்டாடப்படுகிறது. இப்படி பெருமைவாய்ந்த தமிழ்ச் சமூகத்தின் இன்றைய நிலை,
நினைத்தால் நெஞ்சம் வெடித்துவிடும்படியாக இருக்கிறது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்துவகை திணை நிலங்களையும்,
பல்வேறு இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டது, நம் தமிழ்நாடு. குடிக்கும்
தண்ணீர் முதல் சுவாசிக்கும் காற்று வரை எதுவும் காசு கொடுத்தால்தான்
கிடைக்கும் என்ற அவலநிலைக்கு, தமிழகம் படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் ஆறு, மலை, கடல், சமவெளி என எங்கெங்கு கனிமவளங்கள் உள்ளனவோ, அவை
அனைத்தும் சிலரின் லாபவெறிக்காக சூறையாடப்பட்டு, இயற்கைச் சமநிலையும்
அழிக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், காட் போன்ற ஒப்பந்தங்களின் மூலமே
ஏகாதிபத்தியங்கள், வறிய நாடுகளை அடிமைப் படுத்தி வருகின்றன. பன்னாட்டு
நிறுவனங்களின் கொள்ளைக்காக, இயற்கையில் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும்
விற்பனைப் பண்டமாக மாற்றியுள்ளனர்.
கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என தமிழகத்தைச் சுற்றியுள்ள அரசுகள் தம்
இயற்கை வளங்களை எவ்விதத்திலும் வீணாகவிடாமல் தடுத்து பாதுகாத்து வருகின்றன.
அதிலும் 44 ஆற்றுப்படுகைகளைக் கொண்ட கேரளம், தன் ஆறுகளில் இருந்து ஒருபிடி
மணலை எடுக்கக்கூட அனுமதிக்காமல் பாதுகாத்து வருகிறது. ஆனால், தமிழக அரசோ
ஆற்று மணல், தாது மணல், கிரானைட் உள்பட அனைத்து இயற்கை வளங்களையும் சில தனி
நபர்களின் சுரண்டல் வேட்டைக்காக தமிழகத்தையே சூறையாட அனுமதித்துவிட்டு,
கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது.
பல லட்சம் கோடி மதிப்புள்ள கனிமங்கள் எவ்வித வரைமுறையும் இன்றி
கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இதில், பன்னாட்டு நிறுவனங்களே நேரடியாகவும்
தமக்கு சேவை செய்யக்கூடிய எடுபிடிகள் மூல்மாகவும் வளங்கள் கொள்ளையில்
ஈடுபட்டுள்ளன. இதற்கு எந்த கணக்கு வழக்கும் இல்லை. அரசும்,
அதிகாரவர்க்கமும் கைகோர்த்து நின்று இதற்கு பாதுகாப்பு கொடுக்கின்றன.
தாதுக்கனிமக் கொள்ளையை அனுமதித்தது மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய், தனியார் கொள்ளையடித்ததில் ஐந்து விழுக்காடுகூட இருக்காது.
குமரி மாவட்டத்தின் மிடாலம் கிராமம் தொடங்கி நெல்லை மாவட்டம் வழியாக,
தூத்துக்குடி மாவட்டம் வேம்பாறு வரை சுமார் 150 கி.மீட்டர் தொலைவு
கடற்கரையோரத்திலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் அரியவகை தாதுமணல்
நிறைந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், நாகை மாவட்ட கடலோரப் பகுதிகள்
சிலவற்றிலும், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் சில இடங்களிலும்,
திருச்சி மாவட்டம், முசிறி, துறையூர் தொட்டியம் வட்டத்தில் சில இடங்களிலும்
தாதுமணல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இங்குள்ள மணலில் இல்மனைட், கார்னெட், ரூடைல், சிர்கான், மோனோசைட்,
சில்லுமேனைட் போன்ற தாதுக் கனிமங்கள் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் அரியவகை
தாதுக் கனிமங்களாகும். உலகின் சில இடங்களில் மட்டுமே இவை கிடைக்கிறது.
இந்த் தாது மணலில் இயற்கையிலேயே கதீர்வீச்சு அதிகம் இருக்கும்.
உலகின் மொத்த தாதுமணல் இருப்பு 480 மில்லியன் டன் என்றும் இதில்
இந்தியாவில் 278 மில்லியன் டன் உள்ளது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தாதுமணலில் 60 விழுக்காடு தமிழகக் கடலோரங்களில், குறிப்பாக
தெற்கு மாவட்டங்களில் கிடைக்கிறது.
மேற்குத் தொடர்ச்சிமலையில் குறிப்பாக பொதிகை மலைப்பகுதியில் இக்கனிமங்கள்
உருவானாலும், மலையில் இருந்த கனிமங்களை ஆறுகள்தான் கடலில் கொண்டுபோய்ச்
சேர்த்தன. பொதுவாக வங்கக்கடலில் தென்கிழக்கிலிருந்துதான் அலைகள் தாக்கும்.
இதனால் கடல் நீரோட்டம் வடக்கு நோக்கி இருக்கும். தரையில் கிடக்கும் மணலை
வாரிச்சுருட்டிக்கொண்டு வடக்கு நோக்கி கிளம்பும் அலைகளை தூத்துக்குடி
துறைமுகம், ராமேஸ்வரம் மேட்டுபகுதியில் தடுக்கப்படுகிறது. இதனாலேயே
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில்
இத்தாது மணல் தங்கிவிடுகின்றது.
இல்மனைட் அதிகமிருக்கும் கடற்கரைப் பகுதி கருப்பு நிறமாகவும், கார்னெட்
அதிகமிருக்கும் கடற்கரை பகுதி சிகப்பு நிறமாகவும் காட்சி அளிக்கிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih45zU0XoEf0DQ2RUCAh_Pp-Og1y9IDQo3hzZhlp_IYi9lw5YsoxlHyATD42yVoHjRh3vnLe5geHtQ172hwkwGqtQcc65r7xb3veO_zmtguOCEnsOQuolFBBY8q-PRggDFr0MZvu-64tw/s1600/20.jpg) |
அலங்கோலமாக்கப்பட்ட பெரியதாழை கடற்கரை |
காந்தத்தால் ஓரளவு ஈர்க்கப்பட்ட அந்த கருப்பு மணலில் இரும்பு ஆக்ஸைடு
மட்டுமல்லாமல் வேறொரு உலோக ஆக்ஸைடும் சேர்ந்திருந்தது. ஏற்கனவே அறியப்பட்ட
உலோகத்திலிருந்து அந்த உலோகம் வேறுபட்டு இருந்தது. அந்த உலோகம்
டைட்டானியம். பத்து டன் தாது மணலை எடுத்து தூய்மைப்படுத்தினால் அதிலிருந்து
ஒரு டன் இல்மனைட் கிடைக்கும்.
5 டன் இல்மனைட் மூலம், ஒரு டன் டைட்டானியம் தயாரிக்கலாம். இத்தகைய தாதுவளம்
கொண்ட மணல் இங்கு இருப்பது யாருக்கும் தெரியாமல் இருந்த வரை எந்த ஒரு
பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNm9d1jRULXJUCZlZqPBBrSRYTCjCs63nEA9qctZxSBD6fUiPL8WcPLG0v13P3MfY7LK4jR3_BdD4c_GoB2JAL8qc5VthbBf9iy2m0guGp1zQ7kVsNY3NmCRDsurO2LMC4ZzKVz6ffXuU/s1600/vvm.jpg) |
ஆய்வுக்குழுவினர் முன்பு விளக்கமளித்துவிட்டு வெளியேறும் வைகுண்டராஜன் |
1900களில் பிரிட்டன் ஏகாதிபத்தியம் தமிழகத்தை ஆண்டபோது தென்தமிழகத்தில்
இருந்து ஜெர்மனிக்கு பனைநாரால் கட்டப்பட்ட பொருட்கள் பலவும் ஏற்றுமதி
செய்யப்பட்டன. அந்தக் கயிறுகளில் ஒட்டிக்கொண்டு இருந்த கடற்கரை மணலை
ஆராய்ந்த ஜெர்மானியர்கள், அம்மணல் தாதுமணல் எனக் கண்டறிந்தனர். இம்மணலில்
கதிரியக்கத்தன்மை கொண்ட இல்மனைட், ரூடைல்,கார்னெட், மோனோசைட் போன்ற
தாதுஉப்புக்கள் ஒளிர்வதைக் கண்டறிந்தனர். உலகச்சந்தையில் பல கோடி ரூபாய்
மதிப்புள்ளள இம்மணல் கடற்கரையோரங்களில் கேட்பாரற்றுக் கிடப்பதை
அறிந்தபின்பு தான் இப்பகுதிக்கு அவலம் நேரத் தொடங்கியது.
மத்திய அரசின் அணுசக்தித்துறையின் கீழ் இயங்கும் அணுக்கனிம ஆய்வு நிறுவனம்
நடத்திய ஆய்வில் தமிழகத்தின் கடற்பகுதி மற்றும் தேரிமணல் பகுதிகளில், 34.80
கோடி டன் இல்மனைட், 13.00 கோடி சிலிமனைட், 10.70 கோடி டன் சிர்கான், 1.80
கோடி டன் மோனோசைட் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுமார் 175 மில்லியன் டன்
தாதுகனிம வளங்கள் தமிழகத்தில் இருப்பதாக வேறு ஒரு ஆய்வு
தெரியப்படுத்தியுள்ளது.
உலகில் தாதுமணல் இருப்பு 460 மில்லியன் டன். இதில் 278 மில்லியன் டன்
இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் உள்ள தாதுமணலில் 60 விழுக்காடு
தமிழகத்தின் கடலோரங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கிடக்கிறது.
உலக சந்தையில் ஒரு டன் தாது மணல் கார்னெட் ரூ20,000, இல்மனைட் ரூ79,000,
சிர்கான் ரூ1,32,000, ரூடைல் 1,80,000 வரையும், மோனோசைட் ரூ5, லட்சம் என
விலைபோகிறது. இதில் இல்மனைட் அμசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி
கப்பல்களிலும், ரூடைல் போர்விமானம் மற்றும் விண்வெளி உபகரணங்களிலும்,
சிர்கான் அணுமின் நிலையங்களிலும், மோனோசைட் அணுகுண்டு தயாரிக்கவும் என
அணுஆற்றலை உள்ளடக்கிய அதிமுக்கிய தாது மணல் வகைகளாகும்.
அரியவகை தாதுமணலை சர்வதேச சந்தையில் விற்று, கொள்ளைலாபம் பார்க்க
முதன்முதலில் இறங்கியது ஜெர்மன் நாட்டு நிறுவனம் ஒன்று. 1910-களில்
முதன்முதலாக குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் ஜெர்மன் நிறுவனம், மணல்
ஆலையை அமைத்தது. முதல் உலகப் போரின்போது 1914-ஆம் ஆண்டில் இது இங்கிலாந்து
அரசின் வசம் மாறியது. பிரிட்டன் ஏகாதிபத்தியம் வெளியேறியபின், 1950-களில்
இந்திய அரசு தனியார் ஒருவருடன் சேர்ந்து இந்த மணல் ஆலையை இந்திய அருமணல்
நிறுவனம் என நடத்தியது. பின்னர் இந்த தாது மணலில் இருந்து அணுஉலைக்குத்
தேவையான கனிமங்களை பிரித்தெடுக்க முடியும் என்பது கண்டறியப்பட்டவுடன்,
தனியார் பங்களிப்பை முழுதும் நீக்கி 1963-ல் இந்திய அரசின் கட்டுப்பாட்டில்
முழுமையாக இந்த ஆலை வந்தது.
1980-களில் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற நாசகாரக் கொள்கை என்பதை
நடைமுறைப்படுத்த தொடங்கியவுடன், தனியார்களும் இந்த தாது கனிம வளங்களை
நடத்துவதற்கு அனுமதி பெற்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது நாட்டை
கொள்ளையடிப்பதற்குத் திறந்துவிட்டதில் முதன்மைப் பங்கு வகிக்கும் காங்கிரசு
கட்சியின் ஆதரவு பெற்றவர்களே, முதலில் இத்தாது மணல் அள்ளுவதற்கான
(கொள்ளைக்கான)அனுமதியைப் பெற்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த தனுஷ்கோடி
ஆதித்தனின் மனைவியை இயக்குனராகக் கொண்ட இந்தியன் கார்னெட்ஸ் கம்பெனிக்கு,
முதன்முதலில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் அள்ள அனுமதி
தரப்பட்டது. அதேபோல் குமரிமாவட்டத்தில் குமரி மினரல்ஸ் என்ற பெயரில் உள்ள
நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இந்தியன் கார்னெட் நிறுவனம் தாது
மணல் அள்ளத் தொடங்கியது. ஊரை அடித்து உலையில் போடும் வெளிநாட்டுக்கு நாட்டை
விற்றுக்கொண்டு இருக்கும் காங்கிரசு கட்சியினரே, இந்த கார்னெட் மணல்
கொள்கையை தீவிரமாக தொடங்கி வைத்தனர்.
1989-களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை, கீரைக்காரன்தட்டு கிராமத்தில்
தொடங்கப்பட்ட வி.வி. மினரல்ஸ் நிறுவனம், இன்று தாது மணல் அள்ளுவதில்
(கொள்ளையடிப்பதில்) முதன்மையானதாக உள்ளது. முன்பு இதில் இந்தியன் கார்னெட்
கம்பெனி, மணல் மாணிக்கம் ஆகியோரே முதன்மையாக இருந்தனர். மணல் மாணிக்கத்தோடு
முதலில் மிகவும் நெருக்கமாக இருந்த கனிம வளத்துறை முன்னாள் அதிகாரி
செல்வராஜின் துணையோடு, வைகுண்டராசனால் தொடங்கப்பட்டதுதான் வி.வி. மினரல்ஸ்
நிறுவனம்.
காலூன்றிய சாம்ராஜ்யம்
தமிழகத்தில் தாது மணல் கனிம வியாபாரத்தில், வைகுண்டராசன் குடும்பத்தாரின்
வி.வி. மினரல்ஸ், பீச் மினரல்ஸ் (பி.எம்.சி) இண்டஸ்டிரியல் மினரல்
நிறுவனங்களும் (மிவிசி) எஸ்.டி.எஸ். மாணிக்கம், தயா தேவதாஸ், நாகராசன்
ஆகியோரின் நிறுவனங்களும் உள்ளன. தமிழகத்தில் உள்ள 78 தாது மணல் குவாரிகளில்
60-க்கும் மேற்பட்டவை வைகுண்டராசன் குடும்பத்தாரின் நிறுவனங்களாகவே உள்ளன.
தற்போது 15 கிலோமீட்டர் நீளமான கடற்கரையை அரசே 30 ஆண்டுகளுக்கு
குத்தகையும், விரிந்து பரந்துள்ள 2300 ஏக்கர் பரப்புள்ள மணல் பரப்பும்
கொண்ட பட்டா நிலங்கள் தங்கள வசம் உள்ளது என தங்களது இணையதளத்தில்
பெருமையுடன் அறிவிக்கின்றன வைகுண்டராசனின் தாது மணல் நிறுவனங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-4y3WFh7IFfMAORRHNqbzgLiM8eAEmUP2-lxE7nQUXGJMXP2JvvFQpGN8fi8Q7rxDkMJIgaSKvA5dpAX4SAJ0oJWiaAXYYEKJTSr0VNVMNSwv-WtZEkx56pU1N2LIQHV521WbiFosiBU/s1600/12.jpg) |
|
உலகம் முழுவதும் உள்ள இல்மனைட் மொத்த விற்பனையாளராகச் செயல்படுவது
ஆஸ்திரேலியாவின் மொனரல்ஸ் அன்ட் டிரேடிங் லிமிடெட் நிறுவனமாகும். இந்த
ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு வி.வி. மினரல்ஸ் நிறுவனமே முதன்மையான இல்மனைட்
சப்ளையர் ஆக உள்ளது. இந்தியாவில் மிகப் பெரிய உற்பத்தியாளர் மற்றும்
ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளதோடு, உலக அளவில் இரண்டாவது இடத்தில்
வி.வி. மினரல்ஸ் நிறுவனம் உள்ளது. ஒவ்வொரு டன் தாதுமணலும் சராசரியாக ஒரு
லட்சத்திற்கும் குறையாமல் சர்வதேச சந்தையில் விற்கப்படும்நிலையில்,
இந்நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடும் தாது மணல் குவாரிகளுக்கான தொகை
அற்பமானது. தாது மணல் நிறுவனங்களுக்கு 100 ஏக்கர் நிலம் முழுவதும் சேர்ந்து
ஒரு ஆண்டுக்கு ரூ.16.00க்கும், 50 ஏக்கர் நிலம் முழுவதும் சேர்ந்து ஒரு
ஆண்டுக்கு ரூ.9-க்கும் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது தமிழக
அரசு.
நெல்லை மாவட்டத்தில் 2011 வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ள 52 குவாரிகளில்,
கரை சுற்று உவரி ஊராட்சியில் உள்ள இரண்டு குவாரிகள் மட்டுமே 10.10.5
ஹெக்டேர், 36.34.0 ஹெக்டேர் பரப்பளவு கொண்டவை. மற்றவை அனைத்தும் ஒற்றை
இலக்க ஹெக்டேர் பரப்பளவு கொண்டவை. ஆனால் ஜெயலலிதா அரசு பதவி ஏற்றவுடன்
12.8.2011 அன்று 750 ஏக்கர் (300 ஹெக்டேர்) பரப்பளவு உள்ள மிகப்பெரிய
பரப்பளவை தாது மணல் குவாரிக்காக 30 ஆண்டுகள் குத்தகைக்கு 2011 ஆகஸ்ட் மாதம்
அனுமதி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் குவாரி எதற்கும் இந்த அளவு பரப்பை
இதுவரை குத்தகைக்கு கொடுத்தது இல்லை. மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய
அருமணல் நிறுவனத்துக்காக 114 ஹெக்டேர் அனுமதி கொடுத்தது என்பது மட்டுமே,
மிக அதிகமாக பரப்பாக இருந்தது. இவ்வளவு பரந்த பரப்பை இதனால் பாதிப்புக்கு
உள்ளாகக்கூடிய மக்களின் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமல், மக்களுக்கே
தெரிவிக்காமல் ஒரே அரசு உத்தரவு மூலம் 750 ஏக்கர் நிலமும் வைகுண்டராசனின்
வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தினருக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளது.
இந்திய சுரங்கக் கழகம் அனுமதி அளித்துள் 111 கார்னெட் மணல் குவாரிகளில் 96
குவாரி வைகுண்டராசன் குடும்பத்தாருக்குச் சொந்தமானது. இந்திய அரசால் அனுமதி
தரப்பட்ட 44 இல்மனைட் குவாரிகள் அனைத்தும் வைகுண்டராசனுக்கே சொந்தமானவை.
சாம, பேத, தான, தண்ட முறைகளைப் பயன்படுத்தி அனைத்து போட்டி நிறுவனங்களையும்
விரட்டியடித்து, இவர்களே தாது மணல் கொள்ளையில் முன்னுரிமை பெற்றவர்களாக
விளங்குகின்றனர். ஆனால் விதிகளை மீறுவதில் வி.வி. மினரல்ஸ், அரசு நிறுவனம்,
மற்றவர்கள் என எல்லாருமே ஒரேமாதிரிதான் செயல்படுகின்றனர்.
அபாயங்கள்
* குமரி முதல் தூத்துக்குடி வரை நடந்தே செல்லக்கூடி யதாக இருந்த கடற்கரை
முழுவதும் மணல் அள்ளப் பட்டுவிட்டதால் கடற்கரை என்பதே கிட்டத்தட்ட இல்லாமல்
போய்விட்டது. கடலும் ஊரும் ஒன்றாகி விட்டது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJgoy-9uY_9PxFCm3H5ENVMWlOaGwFX3Z89P4H-vfzoHTbad4OR8lBxyIguVzsl17Pb16rtSE23xhs7BFrfkNv2K3JVo_M5r1cxzv5AYkJ5l_pm2_-gYGgS-dkWQvEgZLD7vLYkdBadHM/s1600/10.jpg) |
உவரியில் ஊரோடு கலந்த கடல் |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGSkfbnmrTh3iyx1cEOp4mRT9ASjH56TM82a0SNXFoX7mhdXVgur-E-WWee1IfxDovSKU8jXTHnLuPQrjMiouCtuGb5IWrBAXAhTEHraOMQy-U8449NF4plHxsYThaSbsTfYZ8OZA42zw/s400/9.jpg) |
அமைதியாக.. |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBbI2Y7KjKPni-_AsqvSM3bQjevFquCeOdLJEsQCMlTLYbJvqkrFhRosG5pU2EeXslfMZSLsNJb-BVsypes5QyiA2MBxwqdv9olw4q7ZO8ygl6Q0oB3bOgRb75RxmhD4h6_vW6oGhB8Do/s400/8.jpg) |
ஆர்ப்பரித்து.. |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgurM-afD-STRipvRzVHnpZN4oGXImJ9C35Lr8dz7Ks5P-OiHedqrARetiz_s2eR_CxvNRCphBO-YdjsHaGvThMnI-xe6YljyxNmrIPmI44WAnXgbldKoddX26HeKDrEegA672we87XReQ/s1600/6.jpg) |
தேவாலயத்தை விழுங்கும் வேகத்தில்.. |
* கடலோரமாக இருந்த தேரி எனப்படும் மணற்குன்றுகள் முழுக்க வெட்டி அழிக்கப்
பட்டது. மேலும் தேரியில் இருந்த புதர்காடுகள், தாவரங்கள், மரங்கள்
அனைத்தும் வெட்டி எறியப்பட்டு விட்டது. கடற்கரையும், கடற்கரை ஒட்டி நிலத்
தாவரங்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் கடலில் உள்ள ஒட்டலிகளான
நண்டு , ஆமை , கடலோரம் வந்து முட்டையிடுவதும் , குஞ்சுபொரிப்பதும் நின்று விட்டது. உயிர்ச்சுழல் முழுக்க பாதிக்கப்பட்டு விட்டது.
* கடலோரமும், கடலுக்குள்ளும் தாதுமனல் தோண்டி எடுக்கப்பட்டதால், அந்த
இடங்களில் நீரில் உள்ள தாதுச் சத்துக்கள் குறைந்துவிட்டது. இதனால்
கடலுக்குள் சில கோர வடிவிலான புற்கள், சில கடல்பாசிகள் வளர்வதில்லை. இதனால்
இவற்றின் மூலம் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் மீன் இனங்கள் குறைந்து
உயிர்ச் சூழலின் மேன்மை அழிக்கப்பட்டு விட்டது.
* கடற்கரையில் இருந்து தாதுமணல் முழுக்க அள்ளப்பட்டு விட்டதாலும், மணல் ஆலை
கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அமிலத் தன்மையுடன் கடலில்
கலக்கப்படுகிறது.இதனால் கடல் நீர் பல கிலோமீட்டர் தூரம் செந்நிறமாக மாறி
உள்ளது. மேலும் கடற்கரையோரம் நீரில் ஆர்சானிக், சயனைட், போன்றவை கலந்து
விசமாகி வருகிறது. அமிலத் தன்மை வாய்ந்த கடல் நீரால் பவளப் பாறை, சில வகைப்
பாசிகள் செழித்து வளர முடியவில்லை. இப்பகுதிக்கு வரும் மீன்களுக்கு உணவு
ஆதாரங்கள் பறிப்போய் விட்டது. கடலோரம் வாழும் மீனில் விசத்தன்மை கொண்டவையாக
மாறி வருகிறது.
* கடலோரம் முழுக்க தாதுமணல் அள்ளப்பட்டு நீரோட்டம் மாறி வருகிறது. கடலில்
பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மீன்வளம் மிகவும் குறைந்து விட்டது.
* கடலோரம் முழுக்க கடற்கரை அழிக்கபப்ட்டு விட்டதால், கடல்நீர் ஊருக்குள்
புகுந்து மக்கள் வீடுகள் மூழ்கியும், இடிந்தும் வருகிறது. மக்கள் தனது
வாழ்விடங்களை இழந்து வருகின்றனர். தொடர்ந்து கடலோரமாக கடற்கரையில் தாதுமணல்
அள்ள்ப்பட்டு விட்டதால் கடல்நீரின் அழுத்தத்தை தாங்கி நின்ற கடற்கரை மண்
அள்ளப்பட்டதால் கடல்நீர் உட்புகுந்து, (கிணறு, ஆழ்துளைக் குழாய்க்கிணறு
உள்பட) அனைத்து குடிநீர் ஆதாரங்களிலும் உப்புநீர், கடல்நீர் புகுந்து அவை
அழிந்துவிட்டன.
*கடலோர கிராமங்களில் இன்று ஒரு குடம் குடிநீர் ரூ.4 ரூபாய் என விலை கொடுத்து வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
* தாது மணல் அள்ளப்பட்ட தால் பல தாது சத்துக்க்ளை கடல் இழந்து விட்டது.
இதனால் கடலில் பவளப்பாறைகள், பல்வேறுவகை பாசிகள், கோரை வடிவிலான புற்கள்
வளருவதில்லை. இதனால் இவற்றின் மூலம் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய
முடியாமல் மீன் இனங்கள் குறைந்து விட்டது. இதனால் மீன்கள், ஆழ்கடல்
பகுதிக்குச் சென்று விட்டன.
* யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடாவின் உயிர்க் கோளக் காப்பகம்
அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலுக்குள் உள்ள பாறைகளில் கார்னைட்
இருக்கிறது எனவும், தண்ணீர் எடுத்து செல்ல பைப் லைன் போட வெடிவைத்து
எடுக்கப்பட்டதால், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்நிலை அழிந்து, உயிர்ம பன்மைய
சூழல் அழிக்கப்பட்டு விட்டது.
* தேரிகளை அழித்து அந்த இடங்களில் ஆழமாய்த் தோண்டி தாதுமணல்
எடுக்கப்பட்டதால் காற்று, மழை போன்றவற்றால் தொடர் மண்ணரிப்பு
ஏற்பட்டுள்ளது,
* ஆழம் குறைந்த கடலோரங்களில் ஆலைகள் உருவாகும் பகுதிக்கு சுவாசத்
திற்காகவும், உணவிற்காகவும் மீன்கள் அதிகம் வரும். ஆனால் தாது சத்து
குறைந்த நீரினாலும், மணலை சுத்திகரிப்பு செய்த அமிலம் கலந்த நீரை கடலில்
விடுவதால் தாதுச்சத்து இல்லாமல் அங்கு வரும் மீன்களுக்கு சுவாசக் கோளாறு,
மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவை ஆழமான கடல் பகுதிக்கு ஓடிவிட்டன.
* கடலோரங்களில் குறைந்த ஆழ பகுதிகளில் கிடைக்கும் சிங்கி இறால், அயிலை
மீன், குதிப்பு மீன் உட்பட 30 வகையான மீன் இனங்களை தாதுமணல் கொள்ளைக்கு
பின் காண முடியவில்லை. அவை அழ்கடல் பகுதிக்கு சென்று விட்டன. பலநேரம்
கடலில் மீன் செத்தே மிதக்கின்றன. கடலில் மீன்வளம் குறைந்து விடுவதால்,
மக்களின் வருமானம் குறைந்து வேலையின்றி வாடுகின்றனர். பலரும் தங்கள் வாழும்
ஊரை விட்டு வேலை தேடி வெளியூர் செல்கின்றனர். வெளிநாடு செல்கின்றனர்.
மனநிம்மதி இழக்கின்றனர். மீன்வளம் குறைந்து தொழில் இன்றி இருப்பதால்,
மக்களுக்குள் சமூக அமைதி குறைந்து சண்டை, சச்சரவு ஏற்படுகிறது. இதை
ஒழுங்குபடுத்தவேண்டிய அரசு என்ன செய்கிறது?
சட்டமும் விதிகளும்..கைகட்டி..!
2005, மே மாதம் 11-ந் தேதி தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்ட அரசாணை
எண்: 114-ன் படி, அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்கள், மாவட்ட வருவாய்
அலுவலர்(டி.ஆர்.ஓ), கோட்டாட்சியர்(ஆர்.டி.ஓ), வட்டாட்சியர், துணை உதவி
இயக்குனர்கள் (புவியியல்+ கனிம வளங்கள்) இயக்குனர்கள், கூடுதல் இணை, துணை,
உதவி இயக்குனர்கள் (புவியியல்+ கனிம வளங்கள்) ஆகியோருக்கு கனிமச்
சுரங்களில் சென்று, ஆய்வு, சர்வே, விசாரணை நடத்த அதிகாரம்
வழங்கப்பட்டுள்ளது.
2006 செப்டம்பர் 18- ம் தேதி தமிழக அரசு கெஜட்டில் வெளியான அரசாணை எண்
114-ன் படி, காவல்துறை ஆய்வாளர் மட்டத்திற்கு மேலான காவல்துறை
அதிகாரிகளுக்கு சட்டவிரோத கனிமவளத் திருட்டு, கடத்தலுக்கு
பயன்படுத்தப்படுத்தும் வாகனங்களை, இயந்திரங்களைக் கைப்பற்ற காவல்துறைக்கு
அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும்2009- ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி சென்னை
உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி “சட்ட விரோத குவாரி தொழிலை தடுக்க
மாவட்ட அளவில், வட்ட அளவில் சிறப்புக்குழுக்கள், அரசாணை எண்:135, 2009
நவம்பர் 13 தேதியின் படி தமிழக அரசால் உருவாக்கப்பட்டது.
1. மாவட்ட ஆட்சியர், 2. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், 3. மாவட்ட
வனத்துறை அதிகாரி 4. மாவட்ட வருவாளிணி துறை அதிகாரி, 5. மண்டல
போக்குவரத்துத் துறை அதிகாரி, 6.வருவாளிணி கோட்டாட்சியர்(ஸிளி) 7.காவல்துறை
துணை கண்காணிப்பாளர் 8. உதவி இயக்குநர் (பஞ்சாயத்து), 9.உதவி இயக்குநர்(
டவுன் பஞ்சாயத்து), 10. நகராட்சி ஆணையர்கள், 11. தமிழ்நாடு மாசுக்
கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அளவிலான அதிகாரி, 12. துணை அல்லது உதவி
இயக்குநர்கள்(கனிம வளத்துறை) -செயலர்/ ஒருங்கிணைப்பாளர், நிர்வாக பொறியாளர்
ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு கனிமவள சுரண்டல் தொடர்பான தங்கள் மாவட்டத்தின் விவரங்களை
சேகரித்து கண்டறிய வேண்டும். தாலுகா அளவிலான குழுவைக் கண்காணிக்க வேண்டும்.
மாதம் ஒரு முறை இக்குழு தவறாது கூடி சட்டவிரோத குவாரிகள்/ கனிமங்கள்
கடத்தல்/ சுற்றுச்சூழல் பாதிப்புகளை கண்டறிந்து மாநில சிறப்புக்குழுவிற்கு
அறிக்கை அனுப்பவேண்டும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyrWQQEt1znfXyyx8j4Gw6uioy_dlbjjuk_MHBWt3WCmL5LeBCFfpV7SWeZzrldAnj25dsaZbUlXJjgqgBlficQ7_cCwxr_MRKjjI-IOjlO-JMNtamiTFzQeBxNyDP4-Mbf2Vj6Nymvg0/s1600/19.jpg) |
பெரியதாழையில் நிறம் மாறிய கடல்நீர் |
மாவட்ட ஆட்சியர்கள், கீழ்க்காணும் நபர்களைக் கொண்ட தாலுகா அளவிலான குழுவை அமைக்கவேண்டும்.
1. வட்டாட்சியர் - ஒருங்கிணைப்பாளர்
2. காவல்துறை ஆய்வாளர்
3. வனத்துறை அதிகாரி
4. மாவட்ட புவியியல் & கனிமவளத்துறை பிரதிநிதி
5. மண்டல போக்குவரத்து அலுவலர் பிரதிநிதி
6. கிராம நிர்வாக அலுவலர்
7. சார்பு ஆளிணிவாளர்
8. உதவி பொறியாளர்
இக்குழு அடிக்கடி குவாரிப்பகுதிகள், வாகனங்களை சோதித்து கனிமத் திருட்டைத்
தடுத்து, மாவட்டக்குழுவிற்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவர்கள் அறிக்கை
அனுப்பாவிட்டால், அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டவிரோதமாக கனிமங்கள் திருடப்பட்டு இருந்தால்
1.கிராம நிர்வாக அலுவலர்
2.வட்டாட்சியர்
3.மாவட்ட புவியியல் & கனிமவளத்துறை பொறுப்பு அதிகாரி
4.அந்த பகுதியின் பொறுப்பு காவல்துறை அதிகாரி
ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்காததற்கு பொறுப்பு அதிகாரிகள் ஆவார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து அரசுக்கு
அறிக்கை அனுப்ப வேண்டும்.
இவை அனைத்தும் தெளிவாக, அரசின் உத்தரவாக, நீதிமன்ற ஆணையாக வெளியிடப்பட்டு
உள்ளவைதான். ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தன்குழி மக்களின்
சார்பில் கடந்த ஓராண்டாக பல்வேறு அதிகாரிகளுக்கும் ஆதாரப்பூர்வமாக புகார்
மனுக்கள் கொடுக்கப்பட்டும், கூத்தன்குழி ஊராட்சியின் சார்பில் 13.6.2013
அன்று தாதுமணல் திருட்டு பற்றி தீர்மானம் போட்டும்கூட தாதுமணல் நிறுவனங்கள்
மீது ஒரு சிறு நடவடிக்கை கூட இல்லை.
குழியும் பறித்த குதிரை!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJeXinPnkgPuakGLpx9oyjNU5c1FWrTQCer856TczAxC12hL_B5_xlA9yv0RrA4VkKSWXQnvb-5yPzZVSfTt0s4T45GOK4c6i-VNYt_OqgezMf3Q5LkIxJzzhyq0_2uEYf7nJzYfrN1iw/s400/11.jpg) |
|
நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும், கடலோர மக்களும் பல
ஆண்டுகளாக தொடர்ந்து மீனவர் குறைதீர் கூட்டத்திலும், ஒவ்வொரு வாரமும்
திங்கள்கிழமை நடைபெறும் மனுவாங்கும் நாளிலும், அஞ்சல்வழியிலும், நேரிலும்
பலமுறை புகார் கொடுத்துள்ளனர்.ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட ஆட்சியராகப்
பணியாற்றிய சுந்தரம் இ.ஆ.ப.(ஓய்வு) நவலடி சரவணகுமார் ஆகியோரின் புகார்கள்,
தூத்துக்குடி காந்திமதிநாதன் புகார்கள், கூத்தன்குழி ஆண்டன் அவர்கள் மதுரை
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு மற்றும் பலரும் தாதுமணல்
நிறுவனங்கள் மீது தொடுத்துள்ள பல்வேறு வழக்குகள், இருபது ஆண்டுகளாக கடலோர
கிராமங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் மீனவமக்களின் போராட்டங்கள், சமூக
அக்கறையுள்ள அமைப்புகள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் போராட்டங்கள், பல
அரசின் பொது சொத்துக்கள் அழிப்பு மற்றும் சூறையாடல், நில அபகரிப்பு, மணல்
குவாரியில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மர்ம மரணங்கள், பல்வேறு
பத்திரிகைகளில் வெளிவந்த தாது மணல் கொள்ளை பற்றிய செய்திகள் என ஏராளமான
தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அரசால் அமைக்கப்பட்ட குழுவோ, தாதுமணல்
கொள்ளையர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே அப்பட்டமான
உண்மை.
மேலும், இந்தக் குழு தனக்கு விதிக்கப்பட்ட கடமையிலிருந்து தவறினால்
சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று அரசாங்கத்தின் ஆணை
இருந்தும்கூட, எவ்வித செயல்பாடும் இன்றி பிணம்போலக் கிடக்கும் இந்தக் குழு
மீது எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசால் இதுவரை எடுக்கப்படவே இல்லை.
மாறாக, குதிரை கீழே குப்புறத் தள்ளியது மட்டுமில்லாமல் குழியையும் பறித்தது
என்பது போல, தாது மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடி வரும் கூத்தன்குழி
பொதுமக்கள் மீது திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பாளர் தூண்டுதலில்
10-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் காவல்துறையால் போடப்பட்டுள்ளன.
தாதுமணல் கொள்ளையை எதிர்த்த போராட்டத்தில், முன்னணியில் இருந்த கூத்தன்குழி
ஒன்றிய உறுப்பினர் போஸ்கோ மீது பொய்யான குற்றச்சாட்டை சேரன்மாதேவி
கோட்டாட்சியர் ரோகினி ( திருநெல்வேலி எஸ்.பி. விஜயேந்திர பிதாரி மனைவி)
சுமத்தி, போஸ்கோவுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், அவரின்
ஹாலோபிளாக் கம்பெனியில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரையும்
தூக்கிச்சென்றனர் அதிகாரிகள்.
மணல் ஆலைகளின் சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுக்கவேண்டிய அதிகாரிகள்,
தாதுமணல் நிறுவன ஊழியர்களைப்போல செயல்படுகின்றனர். தாதுமணல் நிறுவனத்தினர்
எவ்வளவு அதிக தவறுகள் செய்கின்றனரோ, அந்த அளவு அதிகாரிகளுக்கு வருமானம்
போய்ச்சேர்கிறது.
கடைநிலை ஊழியர் முதல் மாவட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் வரை
தாதுமணல் நிறுவனங்களின் விரலசைவுக்கு ஏற்பவே கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக
செயல்பட்டு வருகின்றனர். தாதுமணல் தொடர்பான விபரங்களை அரசின் பல
துறைகளிலும் பெறவே முடியவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்
கொடுக்கப்படாததால் மாநில தகவல் ஆணையம்வரை எடுத்துச் செல்லப்பட்டு, பலமுறை
25,000வரை அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டும்கூட, அதிகாரிகள் தகவல்
தருவது அரிது. சட்டமும் அதிகாரிகளின் செயல்பாடுகளும் கொள்ளையர்களுக்கு
சாதகமாகவேதான் செயல்படுகிறது.
தாதுமணல் கொள்ளையர்களின் இரும்புக்கோட்டையாக இந்த மூன்று மாவட்ட கடலோரப்
பகுதிகளும் மாறிவிட்டன. மக்களுக்கு சேவை செய்பவர்களாகவோ இயற்கைவளங்களைக்
காப்பாற்றுபவர்களாகவோ பெரும்பாலான அதிகாரிகள் இல்லை. மக்களின்
வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள், இயற்கையைக் கொள்ளையடிக்கும்
கூட்டத்தின் ஏவலாளர்களாக மட்டுமே உள்ளனர் என்பது மீண்டும், மீண்டும்
நிரூபணம் ஆகிவருகிறது.
இந்த அதிகாரவர்க்க அமைப்பு முறை, மக்களால் கேள்வி கேட்க முடியாததாக
இருக்கும்வரை, வெளிப்படையான, நேர்மையான செயல்பாடு இல்லாதவரை, தவறுசெய்யும்
அதிகாரிகளை மக்களால் தண்டிக்க முடியாதவரை, மக்களுக்கு பதில்கூற வேண்டியது
தன் கடமை என அதிகாரிகளுக்கு உணர்த்தப்படாத வரை, இயற்கை வளங்கள் கொள்ளை
போவது, நாடு சுரண்டப்படுவது தொடரவே செய்யும்.
பொதுவாக, தாதுக்கனிமக் கொள்ளை, விதிமீறல்கள், ஊழல்கள் பற்றியே எல்லோராலும்
விவாதிக்கப்படுகிறது. இவற்றுக்குக் காரணமான அரசின் தவறான கொள்கைகளைப்
பற்றியும் சுரண்டல் கூட்டத்தின் பின்புலம் பற்றியும் விவாதங்களையும்
முன்னெடுக்க வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்களுக்காக, தமிழகத்தின் இயற்கைவளங்களை எந்த வரைமுறையும்
இல்லாமல் சூறையாட, இந்திய அரசு தாராளமாக அனுமதிக்கிறது. இந்தக் கொள்(கை)ளை
முடிவைத் தட்டிக்கேட்கக்கூட வழியில்லாமல், தலையாட்டிபொம்மை போலவே தமிழக
அரசு இருக்கிறது. இந்த தேசத்தின் இயற்கை வளங்களை, வாழ்வாதாரங்களைப்
பாதுகாப்பது என்பது ஒரு தற்சார்பு கொண்ட தேசியஅரசால் மட்டுமே முடியும்
என்பதையே இது உணர்த்துகிறது.
- முகிலன்,
(கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு உறுப்பினர்)
http://pudhumoli.blogspot.in/2014/01/30.html?spref=fb
படங்கள் நன்றி: விகடன், தி ஹிண்டு, ஃப்ரன்ட்லைன்