இப்படத்தில் கிறிஸ்டன் பெல், இடினா மென்செல், ஜோஷ் காட் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்து நடித்துள்ளனர்.
இதன் காட்சிகள் அனிமேஷன் முறையில் அகலத்திரையில் ஒளிப்பதிவு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.
இப்படத்திற்கு கிறிஸ்டோஃப் பெக் பின்னணி இசையமைத்துள்ளார்.
ராபர்ட் லோபஸ் மற்றும் கிறிஸ்டன் ஆண்டர்சன்-லோபஸ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இத்திரைப்படம் சிறந்த அனிமேஷன் படம் , சிறந்த அசல் பாடல் ("Let It Go") ஆகிய இரு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்றதோடு, கோல்டன் குளோப், பாஃப்டா , ஐந்து அன்னி விருதுகள், கிரிடிக்ஸ் சாய்ஸ் மற்றும் கிராமி விருதுகளையும் பெற்றுள்ளது.
இப்படத்தின் அடிநாதம் பயத்தை விடுத்துத் தன்னைத்தானே முழுமையாக ஏற்றுக்கொள்வதும், நிபந்தனையற்ற குடும்ப அன்பின் வலிமையும் ஆகும்.
பிறரிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டும் தன்மைகளை ஒரு குறையாகக் கருதித் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், சுய அடையாளத்தை தைரியமாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
இப்படைப்பின் தனித்துவம் , பல தசாப்தங்களாகத் தொடரப்பட்ட மரபுவழித் தேவதைக் கதைகளின் இலக்கணங்களை முற்றிலும் உடைத்து நொறுக்கியதே ஆகும்.
ஆபத்தில் இருக்கும் ஒரு பெண்ணைக் காப்பாற்ற ஒரு இளவரசன் தான் வரவேண்டும் என்ற வழக்கமான டிஸ்னி பாணியைத் தகர்த்து, இரு சகோதரிகளுக்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பையும் தியாகத்தையுமே சாபங்களை முறியடிக்கும் "உண்மையான அன்பின் செயல்" என்று காட்டியது இதன் ஆகச்சிறந்த புரட்சிகரமான திருப்பம்.
இப்படத்தில் தனியாக ஒரு 'கொடுமையான வில்லன்' என்று எவருமில்லை; மாறாக, எல்சாவின் பாத்திர படைப்பின் மூலம் மனிதர்களின் அக உலகப் பயம், குற்ற உணர்ச்சி மற்றும் தனிமைப்படுத்தல் ஆகிய அக உணர்வுகளே கதையின் முதன்மைப் போராட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
அனிமேஷன் தொழில்நுட்பத்தில் பனித்துகள்களின் ஒளியமைப்பைக் கையாண்ட காட்சி வசீகரமும், கதையின் போக்கையே மாற்றியமைத்த "லெட் இட் கோ" போன்ற உலகத்தரம் வாய்ந்த இசைப் பாடல்களும், பெண் கதாபாத்திரங்களின் சுய அடையாளத்திற்கு முக்கியத்துவம் அளித்த வசன அமைப்புகளும் இணைந்து 'ஃபுரோசன்' திரைப்படத்தை ஆஸ்கர் வரலாற்றில் தனித்துவமான படைப்பாக மாற்றியுள்ளன.
ஆன்சு கிறிஸ்டியன் ஆண்டர்சனின் "தி ஸ்னோ குயின்" என்ற புகழ்பெற்ற தேவதைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டது.
தொடக்கத்தில் எல்சா கதாபாத்திரத்தை ஒரு கொடூரமான வில்லியாகவே படக்குழுவினர் வடிவமைத்திருந்தனர்.
ஆனால், திரைக்கதை எழுத்தாளர் ஜெனிபர் லீ மற்றும் இசையமைப்பாளர்கள் உருவாக்கிய "லெட் இட் கோ" என்ற பாடல் கதையின் போக்கையே முழுமையாக மாற்றியது.
அந்தப் பாடலின் ஆழத்தைப் புரிந்துகொண்ட ஜெனிபர் லீ, எல்சாவை வில்லிகுணம் கொண்டவளாகக் காட்டாமல், தன் சக்தியைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் ஒரு பாசமுள்ள சகோதரியாக மாற்றி ஒட்டுமொத்த திரைக்கதையையும் மாற்றி எழுதினார்.
இதன் திரைக்கதையில் அண்ணா, எல்சா ஆகிய இரு சகோதரிகளின் உணர்வுகளுக்கும், அவர்களுக்கு இடையேயான சிக்கலான உறவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
பயம் மற்றும் குற்ற உணர்ச்சியால் எல்சா தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதும், அவளது அன்பிற்காக அண்ணா ஏங்குவதும் திரைக்கதையின் முக்கிய நகர்வாக அமைந்தது.
ஓலாஃப் போன்ற கதாபாத்திரங்களின் நகைச்சுவையான எதார்த்தமான வசனங்கள் படத்தின் உணர்வுப்பூர்வமான சூழலைச் சமன்படுத்தி, அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கத்தை முழுமையடையச் செய்தன.
இப்படத்தின் ஒளிப்பதிவு உருவாக்கம் கணினி அனிமேஷன் தொழில்நுட்பத்தின் வழியே, பனி படர்ந்த நார்வே நாட்டின் இயற்கை எழிலையும் அரேண்டல் பேரரசின் அழகையும் பிரம்மாண்டமாகப் படம்பிடிப்பதில் கவனம் செலுத்தியது.
கிளாசிக் டிஸ்னி படங்களான 'ஸ்லீப்பிங் பியூட்டி' மற்றும் 'லேடி அண்ட் தி டிராம்ப்' ஆகியவற்றின் காட்சி செழுமையை நினைவூட்டும் வகையில், இதனை சினிமாஸ்கோப் அகலத்திரையில் படமாக்க இயக்குநர்கள் முடிவு செய்தனர்.
முப்பரிமாண அனிமேஷன் முறையில் பனித்துகள்களின் அசைவுகள், ஒளியின் பிரதிபலிப்புகள் மற்றும் எல்சாவின் பிரம்மாண்டமான பனிக்கோட்டை உருவாகும் காட்சிகள் ஆகியவை மிக நுணுக்கமான காட்சி மொழியுடன் வடிவமைக்கப்பட்டன.
ஒட்டுமொத்தப் படமும் வெறும் அனிமேஷனாகத் தோன்றாமல், ஒரு நேரடித் திரைப்படத்திற்கான கேமரா கோணங்கள் மற்றும் ஒளியமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத் திரையரங்குத் தரத்திலான காட்சி வசீகரத்துடனும், அனிமேஷன் ஒளிப்பதிவு உத்திகளுடனும் நறுக்கென உருவாக்கப்பட்டுள்ளது.
நார்வேஜிய சாமி (Sámi) கலாச்சார இசையமைப்பாளர் புரோடே ஃபீல்ஹெய்ம் மற்றும் கிறிஸ்டோஃப் பெக் ஆகியோரின் பின்னணி இசை இப்படத்தின் உணர்வுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
அனிமேஷன் மொழிபெயர்ப்புகளை எளிதாக்க பாடல்களில் கடினமான வார்த்தை விளையாட்டுகள் தவிர்க்கப்பட்டன.
இத்திரைப்படம் உலக அளவில் பல்வேறு உயரிய விருது மேடைகளில் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துக் கொண்டாடியது.
குறிப்பாக, 71-வது கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்றதன் மூலம், இந்த அங்கீகாரத்தைப் பெறும் முதல் வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் படம் என்ற பெருமிதத் தருணத்தை டிஸ்னிக்கு தேடித்தந்தது.
===============================
படத்தின் கதை:-
அரண்டல் நாட்டு இளவரசியான எல்சாவிற்கு [இடினா மென்செல்] இயற்கையிலேயே பனி மற்றும் பனிக்கட்டிகளை உருவாக்கும் அமானுஷ்ய மந்திர சக்திகள் இருக்கின்றன.
ஒருநாள் விளையாடும்போது எதிர்பாராதவிதமாகத் தன் மந்திர சக்தியால் தனது தங்கை அண்ணாவை [கிறிஸ்டன் பெல்] எல்சா காயப்படுத்திவிடுகிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர், கிராண்ட் பாப்பி என்பவரின் தலைமையிலான பூதங்களின் (Trolls) இருப்பிடத்திற்கு இருவரையும் அழைத்துச் செல்கிறார்கள்.
அங்கு கிராண்ட் பாப்பி அண்ணாவைக் குணப்படுத்துவதுடன், அவளது நினைவிலிருந்து எல்சாவின் மந்திர சக்தி பற்றிய நினைவுகளை மட்டும் முழுமையாக அழித்துவிடுகிறார்.
ஏனெனில், அச்சம் அவளது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எல்சா தன் சக்தியைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளும் வரை, அவளது மந்திரம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகக் கோட்டையின் கதவுகளை மூடி, அவளைத் தனிமைப்படுத்தியிருக்க அவர்களது பெற்றோர் முடிவெடுக்கிறார்கள்.
இந்த நீண்ட காலத் தனிமை சகோதரிகளுக்கு இடையே ஒரு பெரும் இடைவெளியை உருவாக்குகிறது. அவர்கள் வளரிளம் பருவத்தை எட்டும்போது, ஒரு துரதிர்ஷ்டவசமான கப்பல் விபத்தில் அவர்களது பெற்றோர் இறந்துவிடுகிறார்கள்.
பல வருடங்களுக்குப் பிறகு எல்சாவின் முடிசூட்டு விழா நாளில், வரலாற்றிலேயே முதன்முறையாகக் கோட்டையின் கதவுகள் பொதுமக்களுக்காகத் திறக்கப்படுகின்றன.
இந்த விழாவிற்குப் பல்வேறு நாட்டுப் பிரமுகர்கள் வருகை தருகிறார்கள். அவர்களுள் தெற்குத் தீவுகளின் அழகான இளவரசனான ஹான்ஸும் ஒருவன்.
அவனைக் கண்டதும் அண்ணா முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறார். ஹான்ஸ் உடனடியாக அண்ணாவிற்குத் திருமண முன்மொழிவு செய்கிறான்.
ஆனால், பார்த்தவுடனேயே எப்படித் திருமணம் செய்யலாம் என்று எல்சா இந்தத் திருமணத்திற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இந்த வாக்குவாதத்தின்போது கோபமடைந்த எல்சா, உணர்ச்சிவசப்பட்டுத் தன் கட்டுப்பாட்டை இழக்க, அவளது பனிச் சக்தி அங்கிருந்த பயந்துபோன அரசவைக்கு முன்னால் தற்செயலாக வெளிப்பட்டுவிடுகிறது.
சதிகாரனான வெசெல்டன் பிரபு எல்சாவை ஒரு சூனியக்காரி என்று குற்றம் சாட்ட, பயந்துபோன எல்சா அங்கிருந்து தப்பித்து வடக்கே உள்ள மலைக்கு ஓடிவிடுகிறாள்.
அங்குதான் அவளுக்கு முதல்முறையாகத் தனிமையில் சுதந்திரம் கிடைக்கிறது. அவள் தனக்காக ஒரு பிரம்மாண்டமான பனிக்கோட்டையைக் கட்டி, ஒரு துறவியைப் போல வாழ முடிவு செய்கிறாள்.
ஆனால், தன் சக்தியால் அரண்டல் நாடு முழுவதும் ஒரு நிரந்தரக் கடுமையான குளிர்காலத்திற்குள் மூழ்கியிருப்பதை அவள் அறியவில்லை.
தன் அக்கா எல்சாவைத் தேடிக் கண்டுபிடித்துக் குளிர்காலத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக அண்ணா துணிச்சலுடன் வட மலைக்குப் பயணப்படுகிறார்.
போகும்போது கோட்டையின் நிர்வாகப் பொறுப்பை ஹான்ஸிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார்.
வழியில் அவர் கிறிஸ்டாஃப் என்ற பனிக்கட்டி வியாபாரியையும், அவனது கலைமானான ஸ்வென்னையும் சந்திக்கிறார்.
எல்சா இருக்கும் வட மலைக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு அண்ணா அவர்களை வற்புறுத்திச் சம்மதிக்க வைக்கிறார்.
அந்தப் பயணத்தின்போது, எல்சாவின் மந்திர சக்தியால் உயிர்பெற்ற, மிக எதார்த்தமாகப் பேசும் ஓலாஃப் [ஜோஷ் காட்] என்ற பனிமனிதனை அவர்கள் சந்திக்கிறார்கள்.
எல்சா இருக்குமிடத்திற்கு வழிகாட்ட ஓலாஃப் ஒப்புக்கொள்கிறான். பனிக்கோட்டையை அடைந்ததும், அரண்டல் நாடு உறைந்துபோய்க் கிடக்கும் நிலையை எல்சாவிடம் அண்ணா கூறுகிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் எல்சாவிற்குள் பயம் தொற்றிக்கொள்ள, அவளது சக்தியிலிருந்து வெளிப்பட்ட பனி எதிர்பாராதவிதமாக அண்ணாவின் இதயத்தைத் தாக்குகிறது.
நிலைமை மோசமாவதைத் தடுக்கவும், அண்ணாவைப் பாதுகாப்பாக வெளியேற்றவும் எல்சா ஒரு ராட்சத பனி அரக்கனை உருவாக்கி அவர்களைக் கோட்டையை விட்டு வெளியே துரத்துகிறது.
அண்ணாவின் இதயம் மெல்ல மெல்ல உறைந்து மரணத்தை நோக்கிக் கொண்டிருப்பதால், அவனைக் காப்பாற்றக் கிறிஸ்டாஃப் பூதங்களான ட்ரால்ஸ் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கிறான்.
அங்கு கிராண்ட் பாப்பி, "உண்மையான அன்பின் செயல்" மட்டும்தான் உறைந்த இதயத்தைக் கரைக்க முடியும் என்று கூறுகிறார்.
இதனால் ஹான்ஸின் உண்மையான அன்பின் முத்தம் அண்ணாவைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் கிறிஸ்டாஃப்பும் ஓலாஃப்பும் அவசர அவசரமாக அண்ணாவைக் கோட்டைக்கு அழைத்து வருகிறார்கள்.
ஆனால் அதற்குள் ஹான்ஸ் எல்சாவைப் பிடித்துக் கோட்டையில் சிறைவைத்திருக்கிறான்.
அண்ணாவிற்கு முத்தமிட்டுக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, ஹான்ஸ் தன் முகமூடியைக் கழற்றுகிறான்.
அண்ணாவைத் திருமணம் செய்து, பின்னர் எல்சாவைக் கொன்றுவிட்டு அரண்டல் நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சியைக் கைப்பற்றவே தான் திட்டமிட்டிருந்ததாகத் தன் சுயரூபத்தை வெளிப்படுத்துகிறான்.
இதற்கிடையில் சகோதரிகள் இருவரும் சிறையிலிருந்து தப்பிக்கிறார்கள்.
கிறிஸ்டாஃப் அண்ணாவின் மேல் உண்மையான காதல் கொண்டிருப்பதை ஓலாஃப் புரிந்துகொண்டு, அண்ணாவை அவனுடன் சேர்க்க உதவுகிறான்.
அதே நேரத்தில், தப்பித்துச் செல்லும் எல்சாவை எதிர்கொள்ளும் ஹான்ஸ், அவளது சக்தியால்தான் அண்ணா இறந்துவிட்டதாகப் பொய் கூறுகிறான்.
இதைக் கேட்டு நிலைகுலைந்து எல்சா அழத் தொடங்க, அவளால் உருவாக்கப்பட்ட பனிப்புயல் திடீரென அப்படியே நிற்கிறது.
அப்போது ஹான்ஸ் எல்சாவைக் வாளால் கொல்லப் போவதைக் தூரத்திலிருந்து அண்ணா காண்கிறார்.
கிறிஸ்டாஃபிடம் சென்று தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தபோதிலும், தன் அக்காவைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அண்ணா இடையில் பாய்ந்து எல்சாவிற்கும் ஹான்ஸின் வாளுக்கும் நடுவே நிற்கிறார்.
அந்த அடுத்த நொடியே அண்ணா முழுமையாகப் பனிக்கட்டியாக உறைந்துபோகிறார்.
ஹான்ஸின் வாள் உடைந்து விழுகிறது. உறைந்துபோன தன் தங்கையைக் கட்டியணைத்து எல்சா கதறி அழுகிறார்.
ஆனால், சில நொடிக் கண்ணீருக்குப் பிறகு அண்ணா மெல்ல மெல்லப் பனி உருகி மீண்டும் உயிர் பெறுகிறார்.
ஏனெனில், தன் அக்காவைக் காக்க அவர் செய்த அந்தத் தியாகமே மிக உயரிய "உண்மையான அன்பின் செயல்" ஆகும்.
தன் சக்தியைக் கட்டுப்படுத்துவதற்கான உண்மையான சாவி "அன்பு" தான் என்பதை எல்சா இதன் மூலம் புரிந்துகொள்கிறார்.
உடனே அவர் தன் சக்தியால் அரண்டல் நாட்டின் உறைபனிப் பருவத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறார்.
உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்ததாலும், எல்சா தன் சக்திகளை முழுமையாகக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டதாலும், அரண்டல் நாட்டு மக்கள் அவளைத் தங்கள் மகாராணியாக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள்.
தேசத்துரோகம் மற்றும் கொலை முயற்சி குற்றங்களுக்காக ஹான்ஸ் கைது செய்யப்பட்டுத் தன் நாட்டுக்கு நாடுகடத்தப்படுகிறான்.
எல்சா கிரிஸ்டாஃப்பை அரச பனிக்கட்டி விநியோகஸ்தராக நியமிக்கிறார்.
கிரிஸ்டாஃப்பும் அண்ணாவும் தங்கள் காதலை முத்தத்தின் மூலம் பகிர்ந்துகொள்கிறார்கள்.
இறுதியில், அண்ணாவும் எல்சாவும் தங்கள் உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறார்கள்.
இனிமேல் ஒருபோதும் கோட்டையின் கதவுகளை அடைக்க மாட்டேன் என்று எல்சா தன் தங்கைக்கு வாக்குறுதி அளிக்கையில் படம் நிறைகிறது.
இத்திரைப்படம் சொல்லும் செய்தி, பயத்தை எதிர்கொண்டு தன்னைத்தானே முழுமையாக ஏற்றுக்கொள்வதும், நிபந்தனையற்ற குடும்ப அன்பின் வலிமையுமே ஆகும்.
சமூகத்தின் விமர்சனங்களுக்குப் பயந்து நம்மிடம் இருக்கும் தனித்துவமான திறமைகளை ஒரு குறையாகக் கருதித் தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதை எல்சாவின் பாத்திரம் உணர்த்துகிறது.
இரு சகோதரிகளுக்கு இடையே இருக்கும் தூய்மையான பாசமும், ஒருவருக்காக மற்றவர் செய்யும் தியாகமுமே சாபங்களை முறியடிக்கும் மிக உயரிய "உண்மையான அன்பு" என்பதை இப்படம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு