மனித மனதைப் புரிந்துகொள்ள முடியாத தருணங்களில், நாம் முதலில் நம்புவது அறிவியலையா, அச்சத்தையா, அல்லது தலைமுறைகள் சொல்லிவந்த நம்பிக்கைகளையா?
இந்தக் கேள்வியை நேரடியாகக் கேட்காமல், பார்வையாளரின் மனதுக்குள்ளேயே அந்தக் கேள்வியை எழுப்புகிறது மணிச்சித்ரத்தாழு.
1993-ல் வெளியான இந்த மலையாளத் திரைப்படம், திகில் என்ற சொல்லை வெறும் பயமுறுத்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தாமல், உளவியல், மனித மனம், குடும்ப உறவுகள், பாரம்பரிய நம்பிக்கைகள் ஆகியவற்றை ஒன்றுக்கொன்று எதிரெதிராக நிறுத்திப் பார்க்கும் தனித்துவமான படைப்பாக அமைந்திருக்கிறது.
ஃபாசிலின் இயக்கத்தின் மிகப்பெரிய பலம், பார்வையாளருக்கு எல்லாவற்றையும் உடனடியாக விளக்கிவிடாமல், ஒரு மர்மமான மனநிலைக்குள் அவர்களை அழைத்துச் செல்வது.
படம் எந்த ஒரு வகைமைக்குள்ளும் முழுமையாக அடங்கிவிடுவதில்லை.
திகில், உளவியல், குடும்ப உணர்வு, நகைச்சுவை, பண்பாடு ஆகியவை ஒன்றுடன் ஒன்று கலக்கின்றன. குறிப்பாக அச்சத்தை உருவாக்குவதில் அதிகப்படியான வன்முறையையோ திடீர் அதிர்ச்சிகளையோ மட்டுமே நம்பாமல், சூழல், ஒலி, மௌனம், பார்வை, எதிர்பார்ப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவது படத்தின் திரைப்பட மொழிக்கு வலிமை சேர்க்கிறது.
மதுமுட்டத்தின் திரைக்கதை இந்தப் படத்தின் இன்னொரு முக்கியமான தூண்.
கதையை வெறும் மர்மத்தை அவிழ்க்கும் புதிராக மட்டும் அணுகாமல், மனித மனத்தின் சிக்கல்களை மையப்படுத்தும் வகையில் அதன் அடுக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பார்வையாளருக்கு ஒரு விஷயம் உண்மையா, நம்பிக்கையா, மனதின் விளைவா என்ற கேள்வி எழும் வகையில் திரைக்கதை தனது தகவல்களை அளவோடு கையாள்கிறது.
இதனால் படம் பார்க்கும் அனுபவம், “அடுத்து என்ன?” என்ற ஆர்வத்தோடு மட்டுமல்லாமல், “நாம் எதை உண்மை என்று நம்புகிறோம்?” என்ற சிந்தனையுடனும் நகர்கிறது.
கங்கா (ஷோபனா) திரைப்படத்தின் உணர்ச்சி மையமாகத் திகழ்கிறார். அந்தக் கதாபாத்திரத்தை வெறும் பயப்படும் பெண்ணாகவோ மர்மத்தின் ஒரு பகுதியாகவோ வடிவமைக்காமல், மனதின் பல்வேறு அடுக்குகளைத் தாங்கும் சிக்கலான மனிதராக உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நகுலன் (சுரேஷ் கோபி) குடும்ப உறவு, நம்பிக்கை, அன்பு ஆகியவற்றின் வழியாக கதையின் மனிதத் தன்மையைத் தாங்குகிறார்.
டாக்டர் சன்னி ஜோசப் (மோகன்லால்) வரும்போது திரைப்படத்தின் அணுகுமுறையே வேறொரு பரிமாணத்தைப் பெறுகிறது. அறிவாற்றலும் நகைச்சுவை உணர்வும் கலந்த அவரது தனித்துவமான குணவடிவம் படத்தின் மனநிலையை சமநிலைப்படுத்துகிறது.
குறிப்பாக நடிப்பில் ஷோபனாவின் பங்களிப்பு தனியாகக் குறிப்பிடப்பட வேண்டியது. ஒரே கதாபாத்திரத்தின் பல்வேறு மனநிலைகளை உடல் மொழி, கண்கள், குரல், முகபாவனை ஆகியவற்றின் நுணுக்கமான மாற்றங்களால் வெளிப்படுத்துகிறார்.
இந்த நடிப்பு ஏன் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டது என்பதை படம் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடியும்.
அவருக்கு வழங்கப்பட்ட தேசிய திரைப்பட விருது சிறந்த நடிகைக்கானது என்பதும் இதன் நடிப்புத் தரத்திற்கு முக்கியமான சான்றாகிறது.
மோகன்லால் தனது வழக்கமான நட்சத்திரப் பிம்பத்தை மட்டுமே முன்னிறுத்தாமல், கதையின் மனநிலைக்கேற்ற நகைச்சுவை கலந்த தனித்துவமான நடிப்பை வழங்குகிறார்.
சுரேஷ் கோபியும் பாத்திரத்திற்குத் தேவையான நம்பகத்தன்மையை உருவாக்குகிறார்.
துணைக் கதாபாத்திரங்களில் திலகன், நெடுமுடி வேணு, இன்னசன்ட், கே.பி.ஏ.சி. லலிதா,கணேஷ்குமார் உள்ளிட்டோரின் பங்களிப்பும் படத்தின் குடும்பச் சூழலை இயல்பாக்குகிறது.
ஒளிப்பதிவு திரைப்படத்தின் மர்ம உணர்வை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வேணுவின் முதன்மை ஒளிப்பதிவுடன் ஆனந்தக்குட்டனும் சன்னி ஜோசப்பும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
பழமையான அரண்மனை வீட்டின் நீண்ட வழித்தடங்கள், மூடிய இடங்கள், இருண்ட பகுதிகள், பாரம்பரிய கட்டிடத்தின் அமைப்பு ஆகியவை வெறும் பின்னணியாக இல்லாமல் திரைப்படத்தின் உணர்ச்சிச் சூழலாகவே மாறுகின்றன.
குறிப்பாக வெளிச்சமும் இருளும் பயன்படுத்தப்படும் விதம், பார்வையாளரின் பார்வையை முழுமையாகக் கட்டுப்படுத்தாமல், அவர்களின் கற்பனைக்கும் இடம் விடுகிறது.
படத்தொகுப்பு டி.ஆர். சேகரால் கையாளப்பட்டுள்ளது. காட்சிகளுக்கு இடையிலான வேகம், தகவல்களை மறைத்து வைக்கும் முறை, அமைதியான தருணங்களுக்கும் பதற்றமான தருணங்களுக்கும் இடையே உருவாக்கப்படும் சமநிலை ஆகியவை படத்தின் மர்மத்தைப் பாதுகாக்கின்றன.
இந்த வகையான திரைப்படத்தில் படத்தொகுப்பின் சிறப்பு அதிகமாகத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் அதுவே அதன் வெற்றி. பார்வையாளர் காட்சியின் தொழில்நுட்ப அமைப்பை கவனிக்காமல் அதன் மனநிலைக்குள் மூழ்கிவிடுகிறார்.
கலை இயக்கமும் இந்த அனுபவத்தின் அடித்தளமாக இருக்கிறது. பாரம்பரிய கேரளத் தரவாட்டின் தோற்றம், அதன் கட்டிட அமைப்பு, அலங்காரங்கள், மூடப்பட்ட பகுதிகள், பழமையான பொருட்கள் ஆகியவை காலப்பின்னணியை உணரச் செய்கின்றன.
படத்தில் பயன்படுத்தப்படும் நாகவல்லியின் ஓவியமும் குறிப்பிடத்தக்க காட்சிச் சின்னமாகிறது. கலைஞர் ஆர். மாதவன் அதை நேரடி மாதிரி இல்லாமல் வரைந்திருக்கிறார். இதுபோன்ற காட்சிப் பொருட்கள் படத்தின் உலகத்தை நம்பத்தகுந்ததாக மாற்றுகின்றன.
ஆடை வடிவமைப்பிலும் திரைப்படம் தனது பண்பாட்டு சூழலை விட்டுவிடுவதில்லை.
குறிப்பாக சேலைகள் மற்றும் பாரம்பரிய உடைகள் கதாபாத்திரங்களின் சமூகச் சூழலையும் கால உணர்வையும் வலுப்படுத்துகின்றன.
ஷோபனா அணிந்த ஒரு பாடல் காட்சிச் சேலை பின்னாளில் “நாகவல்லி சேலை” என்ற பெயரில் கேரளத்தில் பிரபலமானது என்பது அந்தக் காட்சியமைப்பு ஏற்படுத்திய பண்பாட்டு தாக்கத்திற்கு ஓர் உதாரணம்.
இசையில் எம்.ஜி. ராதாகிருஷ்ணனின் பாடல்கள் படத்தின் தனித்துவமான அழகியலுடன் இணைகின்றன.
பிச்சு திருமலா, மதுமுட்டம் ஆகியோர் மலையாளப் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்;
ஒருமுறை வந்து பார்ப்பாயா ? என்ற தமிழில் வரும் முத்திரைப் பாடல் வரிகளுக்கு வாலி அவர்கள் பங்களித்துள்ளார்.
கே.ஜே. யேசுதாஸ், கே.எஸ். சித்ரா, ஜி. வேணுகோபால், சுஜாதா மோகன் மற்றும் எம்.ஜி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.
“பழந்தமிழ் பாட்டிழையும்”, “வருவானில்லாருமீ”, “ஒரு முறை வந்து”, “பலவட்டம் பூக்காலம்” போன்ற புதுக்கவிதைத்துவமான பாடல்கள் படத்தின் இசை நினைவில் நீண்ட காலம் நிலைத்திருக்கச் செய்தவை.
குறிப்பாக “ஒரு முறை வந்து” பாடலின் காட்சியமைப்பு பத்மநாபபுரம் அரண்மனையின் வரலாற்றுச் சூழலோடு இணைவது பார்வை மற்றும் இசையை ஒரே அனுபவமாக்குகிறது.
ஜான்சன் மாஸ்டரின் பின்னணி இசை, படத்தின் மற்றொரு முக்கியமான குரல். பாடல்கள் இல்லாத இடங்களிலும் இசை சூழலை உருவாக்குகிறது.
அதேபோல் ஒலியமைப்பு, குறிப்பாக அமைதியையும் தொலைவில் கேட்கும் ஒலிகளையும் பயன்படுத்தும் விதம், காட்சியைப் பார்க்கும் அனுபவத்தை விட அதை உணரும் அனுபவமாக மாற்றுகிறது.
திகில் திரைப்படத்தில் “காட்டப்படாதது” எவ்வளவு முக்கியமோ, “கேட்கப்படாத அமைதி”யும் அதே அளவு முக்கியம் என்பதை படம் உணர்த்துகிறது.
திரைப்படத்தின் காலப்பின்னணி அதன் தனித்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.
கேரளத்தின் பாரம்பரிய குடும்ப அமைப்பு, தரவாடு கலாசாரம், நாட்டுப்புற நம்பிக்கைகள், தாந்திரிக மரபுகள், தென்னிந்திய வரலாற்றுச் சூழல் ஆகியவை நவீன உளவியல் பார்வையுடன் இணைக்கப்படுகின்றன.
இதனால் பழைய நம்பிக்கைகளையும் நவீன அறிவியலையும் எளிதாக நல்லது–கெட்டது என்று பிரிக்காமல், மனிதர்கள் ஏன் குறிப்பிட்ட நம்பிக்கைகளை உருவாக்குகிறார்கள் என்பதைக் குறித்து சிந்திக்க வைக்கும் படைப்பாக இது அமைகிறது.
இதன் மனிதநேயப் பார்வைதான் மணிச்சித்ரத்தாழுவை சாதாரண திகில் படத்திலிருந்து வேறுபடுத்துகிறது.
மனநலப் பிரச்சினைகளை மூடநம்பிக்கையின் மொழியில் மட்டும் அணுகாமல், அறிவியல் மற்றும் உளவியல் பார்வையின் அவசியத்தை முன்வைப்பது அந்தக் கால இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க அணுகுமுறையாக இருந்தது.
அதே நேரத்தில் குடும்ப அன்பு, நட்பு, பயம், நம்பிக்கை, மன அழுத்தம் போன்ற மனித உணர்வுகளையும் படம் முக்கியத்துவத்துடன் அணுகுகிறது.
அறிவியலை முன்வைப்பதற்காக மனிதர்களின் பண்பாட்டு நம்பிக்கைகளை கேலி செய்யாமல் இருப்பதும் அதன் முதிர்ச்சியான அணுகுமுறை.
திரைப்படத்தின் தயாரிப்பு முறையும் தனித்துவமானது. ஃபாசிலுடன் சிபி மலயில், பிரியதர்ஷன், சித்திக்–லால் ஆகியோர் இரண்டாம் அணிப் படப்பிடிப்பு இயக்குநர்களாக ஒரே காலகட்டத்தில் மின்னல் வேகத்தில் பணியாற்றியுள்ளனர்.
இதனால் மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. பத்மநாபபுரம் அரண்மனை, திருப்பூணித்துறை ஹில் பேலஸ் போன்ற வரலாற்றுச் சூழல்கள் படத்தின் காட்சியமைப்புக்கு இயற்கையான பெருமையை அளிக்கின்றன;
சென்னையில் அமைந்திருந்த எஸ்.எஸ். வாசனின் வீட்டில் முக்கியமான அறைச் சூழல் உருவாக்கப்பட்டது என்பதும் தயாரிப்பின் சுவாரஸ்யமான அம்சம்.
வெளியீட்டுக்குப் பிறகு திரைப்படம் பெற்ற வரவேற்பு அதன் நிலைத்தன்மையை நிரூபிக்கிறது.
1993 டிசம்பர் 25 அன்று வெளியான படம் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்று, பல திரையரங்குகளில் நீண்ட நாட்கள் ஓடியது.
தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த பொழுதுபோக்கு வழங்கும் பிரபலத் திரைப்படத்திற்கான விருதையும், ஷோபனாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றது.
கேரள மாநில திரைப்பட விருதுகளிலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த ஒப்பனைக் கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் அங்கீகாரம் பெற்றது.
காலம் கடந்தும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் தொடர்ந்து அதிக வரவேற்பைப் பெறுவதும்,எத்தனை மலினமான நகல்கள் வெளிவந்தாலும் மலையாளிகளின் பண்பாட்டு நினைவகத்தின் இப்படைப்பெ ஒரு பகுதியாக மாறியிருப்பதும் அதன் தாக்கத்தின் அளவை காட்டுகின்றன.
இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பு, பயத்தை மட்டும் உருவாக்காமல் பயத்தின் பின்னால் இருக்கும் மனித மனதைப் பற்றி சிந்திக்க வைப்பது.
பழைய வீடு, மர்மமான சூழல், இசை, ஒலி, நடிப்பு, காட்சியமைப்பு ஆகிய அனைத்தும் சேர்ந்து பார்வையாளரின் மனதில் ஒரு தனி உலகை உருவாக்குகின்றன.
அதில் என்ன உண்மை, என்ன நம்பிக்கை, என்ன மனதின் உருவாக்கம் என்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதற்குப் பதிலாக, அந்தக் கேள்விகளையே அனுபவிக்கச் செய்கிறது மணிச்சித்ரத்தாழு.
இது ஒரு பழைய திகில் திரைப்படம் என்பதற்காக மட்டும் பார்க்க வேண்டிய படம் அல்ல; இந்திய சினிமாவில் திகில், உளவியல், பண்பாடு, அறிவியல் ஆகியவற்றை இவ்வளவு இயல்பாக ஒன்றிணைக்க முடியுமா என்பதை நேரடியாக அனுபவிக்க வேண்டிய திரைப்படம்.
===============================
படத்தின் கதை:-
மதம்பள்ளி குடும்பத்தின் பழமையான மூதாதையர் மாளிகை கேரளாவில் உள்ளது.
அந்த வீட்டைப் பற்றி பல ஆண்டுகளாக ஒரு பயங்கரமான கதை நிலவுகிறது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தக் குடும்பத்தின் சக்திவாய்ந்த ஆளுமையான சங்கரன் தம்பி, தஞ்சாவூருக்குச் சென்றபோது அங்கிருந்த நாகவல்லி என்ற நடனக் கலைஞரிடம் மயங்குகிறான்.
அவளைத் தன்னுடன் மதம்பள்ளி மாளிகைக்கு அழைத்து வருகிறான்.
ஆனால் நாகவல்லியின் மனம் சங்கரன் தம்பியிடம் இல்லை. அவள் மற்றொரு நடனக் கலைஞரான ராமநாதனை ரகசியமாகக் காதலிக்கிறாள்.
ராமநாதனும் அவளுடன் தொடர்பைத் தொடர்வதற்காக மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு குடிலில் தங்குகிறான்.
நாகவல்லிக்கும் ராமநாதனுக்கும் இடையிலான இந்த ரகசியக் காதலை சங்கரன் தம்பி கண்டுபிடிக்கிறான்.
ஆத்திரமடைந்த அவன் இருவரையும் கொடூரமாக எண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்கிறான்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நாகவல்லியின் பழிவாங்கும் ஆவி மாளிகையின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு அறைக்குள் சிக்கியிருப்பதாகவும், அந்த அறையே “தெக்கினி” என்றும் மக்கள் நம்பத் தொடங்குகிறார்கள்.
அந்த அறை எப்போதும் பூட்டியே வைக்கப்படுகிறது. இதனால் மதம்பள்ளி மாளிகை பேய் நடமாடும் இடமாகப் புகழ் பெறுகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, நகுலனும் (சுரேஷ் கோபி) அவனது மனைவி கங்காவும் (ஷோபனா) விடுமுறைக்காக நகுலனின் பூர்வீகமான கேரளக் கிராமத்திற்குச் செல்ல முடிவு செய்கிறார்கள்.
குடும்பத்தின் மூத்தவர்கள் மதம்பள்ளி மாளிகையில் தங்க வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்கிறார்கள்.
அந்த வீட்டைப் பற்றிய பழைய அச்சங்களும் நாகவல்லியின் கதையும் அவர்களுக்குத் தெரியும்.
ஆனால் நகுலன் அந்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல், தனது பூர்வீக வீட்டிலேயே தங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறான்.
அவனைத் தனியாக அனுப்ப குடும்பத்தினர் தயங்குவதால், உறவினர்களும் அவர்களுடன் அந்த மாளிகைக்குச் செல்கிறார்கள்.
மதம்பள்ளி மாளிகைக்கு வந்ததும், குடும்பத்தினருக்கு தெக்கினி அறையைப் பற்றி மீண்டும் தெளிவாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
அந்த அறை மிகவும் பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருக்கிறது. அதைத் திறக்கக் கூடாது என்பதே குடும்பத்தின் நீண்டகால நம்பிக்கை.
ஆனால் கங்கா இயல்பிலேயே ஆர்வமும் கேள்வி கேட்கும் மனப்பான்மையும் கொண்டவள். பேய், ஆவி போன்றவற்றை அவள் மூடநம்பிக்கையாகவே பார்க்கிறாள்.
எனவே தேக்கினி அறையைப் பற்றிய எச்சரிக்கை அவளது ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.
கங்கா, நகுலனின் உறவினரான அல்லியுடன் நெருக்கமாகிறாள். தெக்கினி அறையைத் திறந்து பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் கங்காவுக்கு ஏற்படுகிறது.
அதற்காக அல்லியின் உதவியுடன் அறையின் சாவியை ரகசியமாகப் பெறுகிறாள்.
இருவரும் சேர்ந்து அந்தத் தடைசெய்யப்பட்ட அறையைத் திறக்கிறார்கள்.
அந்த அறை திறக்கப்பட்டதுடன், குடும்பத்தின் அமைதியான வாழ்க்கை அச்சமூட்டும் சம்பவங்களால் பாதிக்கப்படத் தொடங்குகிறது.
வீட்டில் விளக்க முடியாத பல நிகழ்வுகள் நடக்கின்றன. சிலருக்கு உருவங்கள் தோன்றுகின்றன.
வீட்டிலுள்ள பொருட்கள் எந்தத் தெளிவான காரணமும் இல்லாமல் உடைந்து சிதறுகின்றன.
கங்காவின் சேலையிலும் மர்மமான முறையில் தீப்பிடிக்கிறது.
குடும்பத்தினர் இந்தச் சம்பவங்களால் பயப்படுகிறார்கள்.
பிரச்சினையைத் தீர்க்க பாரம்பரிய முறையில் சுத்திகரிப்பு சடங்குகளும் பூஜைகளும் நடத்தப்படுகின்றன.
ஆனால் அவற்றாலும் வீட்டில் நிலவும் அச்சமும் குழப்பமும் அடங்கவில்லை.
கங்காவின் மனநிலையில் ஏற்கெனவே இருந்த சில சோகமான தன்மைகளும், தொடர்ந்து நிகழும் இந்த விசித்திரமான சம்பவங்களும் குடும்பத்தினரின் சந்தேகத்தை வேறு திசைக்குக் கொண்டு செல்கின்றன.
நகுலனின் மற்றொரு உறவினரான ஸ்ரீதேவிக்குள் நாகவல்லியின் தீய ஆவி புகுந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கத் தொடங்குகிறார்கள்.
இதனால் குடும்பத்தினரிடையே பயமும் குழப்பமும் அதிகரிக்கிறது.
நகுலன் நிலைமையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு தனது நெருங்கிய நண்பரான டாக்டர் சன்னி ஜோசப்பை (மோகன்லால்) அழைக்கிறான்.
அமெரிக்காவில் பணியாற்றும் சன்னி திறமையான மனநல மருத்துவர் மட்டுமல்லாமல், சற்றே விசித்திரமான குணமும் நகைச்சுவை உணர்வும் கொண்டவராக இருக்கிறார்.
மதம்பள்ளிக்கு வந்தவுடன் அவர் அங்கு நடக்கும் விசித்திரமான சம்பவங்களை நேரில் எதிர்கொள்கிறார்.
அல்லி ஆபத்தான முறையில் தாக்கப்படுவதும் அவரை அதிர்ச்சியடையச் செய்கிறது.
ஒரு நள்ளிரவில், முன்பு மீண்டும் பூட்டப்பட்ட தெக்கினி அறைக்குள் இருந்து ஒரு பெண் தமிழில் பாடி ஆடும் சத்தம் கேட்கிறது.
இதைத் தொடர்ந்து சன்னி அந்த மர்மமான இருப்புடன் நேரடியாக உரையாட முயல்கிறார்.
அதற்காக அவர் வரலாற்றில் கூறப்படும் சங்கரன் தம்பியின் குரல் மற்றும் தன்மையை ஏற்றுக்கொண்டு வேடம் பூண்டு அந்த மறைமுகமான பெண்ணிடம் பேசுகிறார்.
அதற்கு அந்தப் பெண் தன்னை நாகவல்லி என்று அடையாளப்படுத்துகிறாள்.
தன்னை கொன்ற சங்கரன் தம்பியைப் பழிவாங்கப் போவதாகவும், வரவிருக்கும் துர்காஷ்டமி இரவில் அவனது தலையை வெட்டப் போவதாகவும் அவள் சபதம் செய்கிறாள்.
இந்த மர்மத்தைப் புரிந்துகொள்ள சன்னி அருகிலுள்ள ஈவூர் கிராமத்துக்குச் சென்று தகவல்களைத் தேடுகிறார்.
நாகவல்லி மற்றும் சங்கரன் தம்பியைச் சுற்றியுள்ள பழைய சம்பவங்களைப் பற்றி ஆராய்கிறார்.
இதற்கிடையில் நகுலனுக்கு வழங்கப்படும் தேநீரில் யாரோ விஷம் கலக்க முயற்சி செய்கிறார்கள்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு சன்னி அனைவரின் முன்னிலையிலும் இதற்கு ஸ்ரீதேவியே காரணம் என்று கூறுகிறான்.
அவளை அவளது அறைக்குள் அடைத்து வைக்கிறான். இதனால் ஸ்ரீதேவியைப் பற்றிய குடும்பத்தினரின் சந்தேகம் மேலும் வலுப்பெறுகிறது.
துர்காஷ்டமிக்கு முந்தைய இரவில் நிலைமை மிகவும் தீவிரமாகிறது.
அல்லியின் வருங்கால கணவரான மகாதேவன், கங்காவைத் தொந்தரவு செய்வது போன்ற ஒரு குழப்பமான சூழல் உருவாகிறது.
மகாதேவன் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கடுமையாக மறுக்கிறான். இந்தச் சம்பவத்தையும், இதுவரை கிடைத்த மருத்துவ மற்றும் மனநல அறிகுறிகளையும் ஒன்றாகப் பார்த்த சன்னிக்கு உண்மையான பிரச்சினை புரிகிறது.
கங்கா கடுமையான தனிமனிதப் பிளவு மனநிலையில் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை சன்னி கண்டறிகிறான்.
சிறுவயதிலிருந்தே நாட்டுப்புறக் கதைகள் மற்றும் அவற்றின் மீது அவளுக்கு இருந்த ஆழமான ஈடுபாடு, மதம்பள்ளி மாளிகையின் அச்சமூட்டும் சூழல் ஆகியவை அவளது மனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
அதன் விளைவாக நாகவல்லியின் தன்மையை அவளது மனம் தன்னுள் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த மாற்றப்பட்ட மனநிலையில் கங்கா தன்னை கங்காவாக உணர்வதில்லை; நாகவல்லியின் மனநிலையை ஏற்றுக்கொள்கிறாள். அவளது பார்வையில் மகாதேவன், தன்னுடைய பழைய காதலனான ராமநாதனாகத் தோன்றுகிறான்.
அதேபோல் அவளது கணவன் நகுலன், நாகவல்லியை கொன்ற சங்கரன் தம்பியாக அவளது மனதில் மாறுகிறான்.
அதனால் துர்காஷ்டமி இரவில் நகுலனை சங்கரன் தம்பி என்று நினைத்து கொல்ல வேண்டும் என்ற ஆபத்தான எண்ணம் அவளது மனத்தில் உருவாகியுள்ளது என்பதை சன்னி புரிந்துகொள்கிறான்.
சன்னி இந்த உண்மையை ஸ்ரீதேவியிடம் தெரிவிக்கிறான். ஸ்ரீதேவியும் அவனுக்கு உதவ சம்மதிக்கிறாள்.
ஆனால் குடும்பத்தின் மூத்தவர்கள் இன்னும் இதை மனநோயின் விளைவாகப் பார்க்கவில்லை.
அவர்கள் பிரச்சினைக்கு பாரம்பரியமான வழியில் தீர்வு காண முடிவு செய்து, புகழ்பெற்ற தாந்திரிக நிபுணரான புள்ளாட்டுப்பரம்பு பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாட்டை அழைக்கிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக, அந்த நம்பூதிரிப்பாட்டுக்கும் சன்னிக்கும் பழைய அறிமுகம் இருக்கிறது. எனவே சன்னியின் மருத்துவ அணுகுமுறையை நிராகரிக்காமல், தனது பாரம்பரியச் சடங்குகளுக்குள் அதனை இணைத்து கங்காவை காப்பாற்ற உதவ அவர் சம்மதிக்கிறார்.
இருவரும் சேர்ந்து துர்காஷ்டமி இரவுக்கான திட்டத்தை உருவாக்குகிறார்கள்.
துர்காஷ்டமி இரவு வருகிறது. அந்த நேரத்தில் கங்கா முழுமையாக நாகவல்லியின் மனநிலைக்குள் மூழ்குகிறாள்.
மகாதேவனை ராமநாதன் என்று நம்பி, அவனைப் பின்தொடர்ந்து நம்பூதிரிப்பாடு ஏற்பாடு செய்திருந்த சடங்கு நடைபெறும் இடத்துக்குச் செல்கிறாள்.
அங்கு நாகவல்லியின் மனநிலையுடன் நம்பூதிரிப்பாடு பேசுகிறார்.
அவளுடைய பழிவாங்கும் எண்ணத்தைத் தடுக்காமல், சங்கரன் தம்பியின் தலையை வெட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறுகிறார்.
ஆனால் அதற்குப் பதிலாக நாகவல்லி கங்காவின் உடலை விட்டு வெளியேற வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறார்.
நாகவல்லி ஏற்றுக்கொள்ளும் வகையில் சடங்கு தொடர்கிறது. நகுலன் சங்கரன் தம்பியாக அவளுக்கு முன்னால் கொண்டு வரப்படுகிறான்.
கங்காவின் கையில் வாள் கொடுக்கப்படுகிறது. அவள் நகுலனை உண்மையான சங்கரன் தம்பியாகவே பார்க்கிறாள். வாளை உயர்த்தி அவனைத் தாக்கத் தயாராகிறாள்.
அந்தத் தருணத்தில் நம்பூதிரிப்பாடு அடர்த்தியான புகையையும் புனிதச் சாம்பலையும் கங்காவின் முகத்தில் வீசுகிறார்.
அதனால் அவளது கண்கள் தற்காலிகமாக மறைக்கப்படுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சன்னி வேகமாக ஒரு நெம்புகோலைத் திருப்புகிறான்.
அதன் மூலம் நகுலன் இருக்கும் இடத்தில், நகுலனைப் போலவே தோற்றமளிக்கும் வைக்கோல் பொம்மை கொண்டுவரப்படுகிறது.
பார்வை மறைந்திருக்கும் கங்கா, தன் முன்னால் இருப்பது நகுலன் அல்ல என்பதை அறிய முடியாமல், நாகவல்லியின் கொந்தளிப்பில் அந்த உருவத்தின் மீது வாளால் மீண்டும் மீண்டும் வெறியுடன் தாக்குகிறாள்.
அவள் அந்த வைக்கோல் பொம்மையைத் துண்டு துண்டாக வெட்டுகிறாள். தான் பழிவாங்க வேண்டிய சங்கரன் தம்பியை கொன்றுவிட்டதாக நாகவல்லியின் மனநிலை முழுமையாக நம்புகிறது.
இதனால் அவளுடைய பழிவாங்கும் நோக்கம் நிறைவேறியதாக மனம் ஏற்றுக்கொள்கிறது.
அதன் விளைவாக நாகவல்லியின் மனநிலை கங்காவின் உடலிலிருந்து நிரந்தரமாக விலகுகிறது.
ஆபத்து நீங்கிய பிறகு, சன்னி கங்காவின் அடிப்படை மனநலப் பிரச்சினைக்கு தேவையான உளவியல் சிகிச்சையை அளிக்கிறார்.
அவளது மனத்தில் ஏற்பட்ட பிளவைச் சரிசெய்து, மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு உதவுகிறார்.
குடும்பமும் இந்தச் சிக்கலிலிருந்து மீண்டு ஒன்றுபட்ட நிலையில் இருக்கிறது. கங்காவும் நகுலனும் பாதுகாப்பாகத் தங்கள் வாழ்க்கைக்குத் திரும்பத் தயாராகிறார்கள்.
குடும்பத்தினர் அனைவரும் கங்காவையும் நகுலனையும் அன்புடன் வழியனுப்புகிறார்கள்.
மதம்பள்ளியில் நிலவிய அச்சமும் குழப்பமும் முடிவுக்கு வருகிறது.
அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன் சன்னி ஸ்ரீதேவியிடம் திருமணத்தை விரும்புவதை ஒரு தனித்துவமான முறையில் தெரிவிக்கிறார்.
ஸ்ரீதேவியும் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறாள். இதனுடன் மதம்பள்ளி மாளிகையைச் சூழ்ந்திருந்த நாகவல்லியின் மர்மமும், கங்காவின் மனதில் உருவான ஆபத்தான மாற்றமும் முடிவுக்கு வந்து, கதாபாத்திரங்கள் தங்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகையில் படம் நிறைகிறது.
#கீதப்ப்ரியன்மலையாளம்க்ளாஸிக்