Her ஹெர் 2013 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படம்.
இத்திரைப்படத்தை ஸ்பைக் ஜோன்ஸ் இயக்கியுள்ளார்.
இது ஒரு அறிவியல் புனைகதை சார்ந்த காதல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நாடகத் திரைப்படமாகும். தனிமையில் வாடும் தியோடர் என்ற மனிதன், பெண் குரலில் பேசும் சமந்தா என்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி இயக்க முறைமையுடன் காதல் வயப்படுவதை இந்தத் திரைப்படம் மிகவும் சுருக்கமாகவும் ஆழமாகவும் விவரிக்கிறது.
இத்திரைப்படத்தின் அடிநாதம் மனிதர்களின் தீவிரமான தனிமையும், அன்பிற்கான தேடலும் ஆகும்.
நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கையை எவ்வளவுதான் வசதியானதாக மாற்றினாலும், மனித மனங்களுக்குள் இருக்கும் ஏகாந்தத்தையும் தனிமையையும் அவற்றால் எளிதில் நிரப்ப முடிவதில்லை என்பதை இப்படம் பேசுகிறது.
இயந்திரமாக இருக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு, மனிதனை விடவும் ஆழமாக அவனது உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் போது, அங்கே உருவமில்லாத ஒரு தூய்மையான காதல் மலர்கிறது.
இறுதியில், தொழில்நுட்பம் எவ்வளவுதான் பரிணாம வளர்ச்சியடைந்தாலும், மனிதனின் நிஜமான உணர்வுப் பூர்வமான காயங்களுக்கு உண்மையான மனித உறவுகளும், சுய ஏற்பும் மட்டுமே இறுதி மருந்தாக இருக்க முடியும் என்பதை இப்படம் மிகவும் மென்மையாக உணர்த்துகிறது.
படத்தில் தியோடராக ஜோக்வின் பீனிக்ஸ் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமந்தா என்ற செயற்கை நுண்ணறிவு கதாபாத்திரத்திற்கு ஸ்கார்லெட் ஜோஹன்சன் தனது குரல் மூலம் அசாத்தியமான உயிர் கொடுத்துள்ளார்.
இவர்களுடன் ஏமி ஆடம்ஸ், ரூனி மாரா மற்றும் ஒலிவியா வைல்ட் ஆகியோரும் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர்.
ஸ்பைக் ஜோன்ஸ் மனித உணர்வுகளையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து நேர்த்தியாக இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஹோய்ட் வான் ஹோய்ட்மா என்பவரின் ஒளிப்பதிவு எதிர்கால உலகைக் கண்முன்னே நிறுத்துவதோடு, நீல நிறத்தைத் தவிர்த்து மற்ற வண்ணங்களைப் பயன்படுத்தி படத்திற்கு ஒரு தனித்துவமான அழகைக் கொடுத்துள்ளது.
இப்படம் சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது. மேலும் கோல்டன் குளோப் விருது, டபிள்யூஜிஏ விருது, கிரிடிக்ஸ் சாய்ஸ் விருது மற்றும் சாட்டர்ன் விருதுகளையும் இப்படம் தனது சிறந்த கதைக்காகவும் இயக்கத்திற்காகவும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இத்திரைப்படத்தின் காட்சிகளை வடிவமைத்ததில் ஒளிப்பதிவாளர் ஹோய்ட் வான் ஹோய்ட்மா பல புதுமையான உத்திகளைக் கையாண்டுள்ளார்.
பொதுவாக அறிவியல் புனைகதை திரைப்படங்கள் என்றாலே குளிர்ந்த நீல நிற பின்னணியும், இருண்ட எதிர்கால உலகமும் காட்டப்படுவது வழக்கம். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, இப்படத்தில் நீல நிறத்தை ஒரு காட்சியில் கூட பயன்படுத்தக் கூடாது என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார்.
எதிர்கால உலகம் என்பது அச்சுறுத்துவதாக இல்லாமல், மனிதர்களுக்கு இதமளிக்கும் வண்ணமயமாக இருக்க வேண்டும் என்பதற்காக, சிவப்பு மற்றும் மென்மையான இளஞ்சிவப்பு வண்ணங்களை மட்டுமே ஒட்டுமொத்த படத்திற்கும் முதன்மையாகப் பயன்படுத்தினார்.
படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படமாக்கப்பட்டாலும், அங்குள்ள கட்டிடங்கள் ஸ்பைக் ஜோன்ஸ் எதிர்பார்த்த எதிர்காலத் தோற்றத்தைக் கொடுக்கவில்லை.
இதனால், ஒளிப்பதிவுக் குழுவினர் சீனாவின் ஷாங்காய் நகரத்திற்குச் சென்று, அங்கிருந்த மிக உயரமான மற்றும் நவீன வடிவமைப்பு கொண்ட கட்டிடங்களின் பின்னணியை இரண்டு வாரங்கள் எடுத்துக்கொண்டனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தெருக்களையும், ஷாங்காய் நகரின் வானளாவிய கட்டிடங்களையும் ஒன்றாக இணைத்து, உலகில் எங்கும் இல்லாத ஒரு புதிய கற்பனை நகரத்தை திரையில் உருவாக்கினர்.
அனைத்தைக் காட்டிலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஜப்பானிய புகைப்படக் கலைஞர் ரின்கோ கவாவூச்சியின் புகைப்பட பாணிகளை அடிப்படையாகக் கொண்டுதான் ஒட்டுமொத்த படத்தின் ஒளியமைப்பும் வடிவமைக்கப்பட்டது.
காட்சியமைப்புகள் அனைத்தும் மிகவும் இயல்பாகவும், ஏதோ ஒரு கவிதை புத்தகத்தைப் புரட்டுவது போன்ற உணர்வையும் தர வேண்டும் என்பதற்காக, மிகக் குறைவான செயற்கை விளக்குகளைக் கொண்டு, இயற்கை வெளிச்சத்திலேயே பெரும்பாலான உணர்வுப்பூர்வமான நெருக்கமான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன.
இத்திரைப்படத்திற்கு ஆன்மா போன்ற பின்னணி இசையை புகழ்பெற்ற 'ஆர்கேட் ஃபயர்' இசைக்குழுவும், ஓவன் பாலெட்டும் இணைந்து உருவாக்கினர்.
பொதுவாக திரைப்படங்களுக்குக் காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்ட பின்னரே பின்னணி இசை சேர்க்கப்படும்.
ஆனால், இப்படத்தின் இயக்குனர் ஸ்பைக் ஜோன்ஸ், படம் உருவாவதற்கு முன்பே இசைக்குழுவை அணுகி, கதையின் உணர்வுகளையும் தனிமையின் ஆழத்தையும் அவர்களுக்கு விளக்கினார்.
இதனால், படப்பிடிப்பு நடக்கும் போதே இசைக்குழுவினர் அதற்கேற்ப இசைக் கோவைகளைத் தயார் செய்து கொடுத்தனர்.
நடிகர் ஜோக்வின் பீனிக்ஸ் பல காட்சிகளில் அந்த இசையைக் கேட்டுக்கொண்டே, அதன் உணர்வை உள்வாங்கி நடித்தார் என்பது ஒரு அரிய சுவாரஸ்யம்.
இப்படத்தின் மிகவும் பிரபலமான 'தி மூன் சாங்' என்ற பாடலை கரேன் ஓ மற்றும் எஸ்ரா கோனிக் ஜோடி உருவாக்கினர்.
இப்பாடல் தியோடரும் சமந்தாவும் இணைந்து பாடுவது போல மிக எளிமையாகவும், அதே சமயம் மனதைத் தொடும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டது.
இப்பாடல் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
அனைத்தைக் காட்டிலும் சுவாரஸ்யமான விஷயம் , படம் வெளியான 2013 ஆம் ஆண்டில் இதன் அதிகாரப்பூர்வ இசைத்தொகுப்பு சிடி வடிவிலோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ எங்குமே வெளியிடப்படவில்லை.
ரசிகர்கள் இணையத்தில் தற்காலிகமாக மட்டுமே கேட்க முடிந்தது. படத்தின் வெளியீட்டிற்குப் பல ஆண்டுகள் கழித்து, 2021 ஆம் ஆண்டில் தான் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்தத் தனித்துவமான இசைத்தொகுப்பு வினய்ல் கிராமபோன் தட்டுகளிலும், கேசட்டுகளிலும் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் ஸ்பைக் ஜோன்ஸ் ஐந்து மாதங்களில் எழுதி முடித்தார். இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு சோஃபியா கொப்போலாவிடம் இருந்து அவர் பெற்ற விவாகரத்தின் அடிப்படையிலான ஒரு பகுதி சுயசரிதை படைப்பாகும்.
இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் கேரி முல்லிகன் ஒப்பந்தமானார். ஆனால், கால்ஷீட் சிக்கல்கள் காரணமாக அவர் விலகியதால், அந்த இடத்திற்கு ரூனி மாரா தேர்வு செய்யப்பட்டார்.
படப்பிடிப்பின் போது செயற்கை நுண்ணறிவு கதாபாத்திரமான சமந்தாவிற்கு முதலில் சமந்தா மார்டன் என்பவர்தான் முழுமையாக குரல் கொடுத்திருந்தார்.
படப்பிடிப்பு தளம் முழுவதும் ஒலியை உறிஞ்சும் கருப்பு நிற, துணிகளால் ஆன ஒரு சிறிய தனி அறையில் அமர்ந்து கொண்டு அவர் வசனங்களைப் பேசினார்.
நடிப்பில் நிஜமான தனிமை வெளிப்பட வேண்டும் என்பதற்காக, ஜோக்வின் பீனிக்ஸும் சமந்தா மார்டனும் படப்பிடிப்பின் போது ஒருவரையொருவர் நேரில் பார்த்துக் கொள்ளவே இல்லை.
ஆனால், படப்பிடிப்பு முடிந்து படத்தொகுப்பு செய்யும் போதுதான், அந்த கதாபாத்திரத்திற்கு இன்னும் மாறுபட்ட ஒரு குரல் தேவை என்பதை இயக்குனர் உணர்ந்தார்.
இதனால் சமந்தா மார்டனுக்குப் பதிலாக ஸ்கார்லெட் ஜோஹன்சன் திடீரென மாற்றப்பட்டார்.
அதன் பிறகு, 2013 ஆகஸ்ட் மாதத்தில் புதிய காட்சிகளும், இயக்குனர் முன்பே எடுக்க நினைத்த சில கூடுதல் காட்சிகளும் மீண்டும் படம்பிடிக்கப்பட்டன.
இப்படத்தின் முதல் வடிவம் 150 நிமிடங்களுக்கும் மேல் மிக நீளமாக இருந்தது. இதைக் கண்ட புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீவன் சோடர்பெர்க், வெறும் 24 மணி நேரத்தில் அந்தப் படத்தை 90 நிமிடங்களாகக் குறைத்துத் தந்தார்.
இது இறுதி வடிவமாக இல்லாவிட்டாலும், கதையில் தேவையில்லாத துணைக் கதைகளை நீக்க ஸ்பைக் ஜோன்ஸிற்கு பெரிதும் உதவியது.
இதனால், கிறிஸ் கூப்பர் ஆவணப்படம் எடுப்பது போல நடித்த ஒரு முக்கிய கதாபாத்திரம் படத்திலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் எதிர்கால உலகை வடிவமைக்க இயக்குனர் ஸ்பைக் ஜோன்ஸ் அதிநவீனத் தொழில்நுட்பங்களை விட, மனிதர்களின் அன்றாடப் பயன்பாடுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
படத்தில் தியோடர் பயன்படுத்தும் கணினிகள் மற்றும் கைபேசிகள் அனைத்தும் பிளாஸ்டிக் அல்லது உலோகப் பொருட்களால் ஆனதாக இல்லாமல், மர வேலைப்பாடுகள் மற்றும் தோல் உறைகளால் செய்யப்பட்ட நேர்த்தியான கலைப் பொருட்கள் போல வடிவமைக்கப்பட்டன.
தொழில்நுட்பம் என்பது மனிதர்களை அச்சுறுத்தாமல், அவர்களோடு மிக நெருக்கமாகக் கலந்திருக்க வேண்டும் என்ற எண்ணமே இதன் பின்னணியில் இருந்தது.
படத்தில் தியோடர் விளையாடும் முப்பரிமாண வீடியோ கேம் காட்சிகளை டேவிட் ஓரைலி என்ற அனிமேஷன் கலைஞர் உருவாக்கினார்.
தியோடரைத் திட்டித் தீர்க்கும் அந்தச் சிறுவன் வேற்றுக்கிரகவாசி கதாபாத்திரத்திற்கு இயக்குனர் ஸ்பைக் ஜோன்ஸே சொந்தக் குரலில் பேசி நடித்தார்.
இந்தத் திரைப்படத்திற்காக அனிமேஷன் செய்த அனுபவம் டேவிட் ஓரைலிக்கு மிகவும் பிடித்துப் போனதால், அவர் பின்னாளில் 'மவுண்டன்' என்ற தனது சொந்த வீடியோ கேமையே உருவாக்கிப் புகழ்பெற்றார்.
அனைத்தைக் காட்டிலும் சுவாரஸ்யமான விஷயம் , படத்தில் காட்டப்படும் கதாபாத்திரங்களின் ஆடைகளில் ஒரு விசித்திரமான கட்டுப்பாடு இருந்தது.
எதிர்கால மனிதர்கள் டெனிம் உடைகளை அணிய மாட்டார்கள் என ஜோன்ஸ் முடிவு செய்ததால், படம் முழுவதும் ஜீன்ஸ் உடைகளோ அல்லது இடுப்புப் பட்டைகளோ பயன்படுத்தப்படவில்லை.
கதாபாத்திரங்கள் அனைவரும் மிக உயர்ந்த இடுப்புப் பகுதி கொண்ட பேன்ட்டுகளையே அணிந்திருந்தனர்.
தியோடர் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள அழகிய கையெழுத்துக் கடிதங்கள் அனைத்தும் கணினியால் உருவாக்கப்பட்டவை அல்ல.
உண்மையான மனிதர்களின் உணர்வுகளைக் கடத்த வேண்டும் என்பதற்காக, படக்குழுவினர் பல நிஜக் கலைஞர்களைக் கொண்டு அந்த விசித்திரமான அழகிய கடிதங்களை கைகளாலேயே எழுத வைத்தனர்.
படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான சமந்தாவின் குரலாக நடித்த ஸ்கார்லெட் ஜோஹன்சன், ரோமில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் நேரில் தோன்றாமலேயே, வெறும் தனது குரல் நடிப்புக்காக மட்டுமே 'சிறந்த நடிகை' என்ற சர்வதேச விருதை வென்று சாதனை படைத்தார்.
ஒரு முழு நீளத் திரைப்படத்தில் முகத்தைக் காட்டாத ஒரு குரலுக்கு இப்படி ஒரு உயரிய விருது கிடைத்தது உலக அளவில் பெரும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.
படம் வெளியான காலகட்டத்தில் இதுவொரு கற்பனையான அறிவியல் புனைகதையாக மட்டுமே பார்க்கப்பட்டது.
ஆனால், தொழில்நுட்ப உலகம் அதிவேகமாக வளர்ந்தபோது, இந்தத் திரைப்படம் மனிதர்களின் நிஜ வாழ்க்கையோடு மிக நெருக்கமாக ஒத்துப் போனது.
குறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் ஓபன்ஏஐ நிறுவனம் தங்களின் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஜிபிடி-4ஓ என்பதை அறிமுகப்படுத்திய போது, அதன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் இப்படத்தின் பெயரான 'ஹெர்' என்ற ஒற்றைச் சொல்லை எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டார்.
இது உலக அளவில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியது.
அந்தப் புதிய மென்பொருளில் பயன்படுத்தப்பட்ட 'ஸ்கை' என்ற பெண் குரல், இப்படத்தில் நடித்த ஸ்கார்லெட் ஜோஹன்சனின் குரலை அச்சு அசலாகப் பிரதிபலித்தது.
இது குறித்து பெரும் சர்ச்சை வெடித்த நிலையில், தனது குரல் உரிமத்தைப் பயன்படுத்த தான் பலமுறை மறுப்பு தெரிவித்தும் ஓபன்ஏஐ நிறுவனம் அதைச் செய்ததாக ஸ்கார்லெட் ஜோஹன்சன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, அந்த நிறுவனம் அந்தப் பெண் குரல் சேவையைத் தற்காலிகமாகத் திரும்பப் பெற்றது.
ஒரு கற்பனைத் திரைப்படம், பத்தாண்டுகளுக்குப் பிறகு நிஜ உலகத் தொழில்நுட்ப நிறுவனங்களின் போக்கையே மாற்றியமைக்கும் அளவிற்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு இதுவே சான்றாகும்.
============================
படத்தின் கதை:-
எதிர்கால லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் தியோடர் தோம்ப்லி (ஜோக்வின் பீனிக்ஸ்) ஒரு தனிமையான, ஆழமான உள்முக சிந்தனை கொண்ட மனிதர்.
அவர் மற்றவர்களுக்காகக் கைகளாலேயே உணர்வுபூர்வமான அழகிய கடிதங்களை எழுதிக் கொடுக்கும் ஒரு நிறுவனத்தில் தொழில்முறை வரைகலை எழுத்தராகப் பணிபுரிகிறார்.
ஏன் என்றால், நவீன உலகில் மனிதர்கள் தங்கள் சொந்த உணர்வுகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்தத் தெரியாமல் தவிப்பதால், இவரைப் போன்ற எழுத்தாளர்களைத் தேடி வருகிறார்கள்.
தியோடர் பிறருடைய காதலையும் பாசத்தையும் கடிதங்களில் அற்புதமாக வடித்தாலும், அவருடைய சொந்த வாழ்க்கை முற்றிலும் இருண்டு கிடக்கிறது.
தனது சிறுவயது தோழியும் மனைவியுமான கேதரின் (ரூனி மாரா) தன்னை விட்டுப் பிரிந்து, விவாகரத்து செய்யக் கோரி நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் துயரத்தால் தியோடர் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்.
கேதரினின் நினைவுகளில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை, அதே சமயம் அவளை நிரந்தரமாக இழப்பதையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தத் தீவிரமான ஏகாந்தத்தையும் மன அழுத்தத்தையும் போக்குவதற்காக, சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் ஓஎஸ்-1 (OS¹) என்ற அதிநவீன இயக்க முறைமையைத் தியோடர் வாங்குகிறார்.
இது Element Software என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, வெறும் கணினி மென்பொருளாக இல்லாமல் பயனரின் ஒவ்வொரு அசைவையும், தேவையையும், பேச்சையும் உள்வாங்கி, அதற்கு ஏற்பத் தன்னைத் தானே மாற்றிக்கொண்டு வளரக்கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவுப் பேரறிவு ஆகும்.
அந்த மென்பொருளைத் தன் கணினியில் நிறுவும் போது, அதற்குப் பெண் குரல் வேண்டும் என்று தியோடர் தேர்வு செய்கிறார்.
கணினியின் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொள்ளும் அந்த மென்பொருள், ஒரு நொடிக்குள் ஒரு குழந்தை பெயர்கள் அடங்கிய புத்தகத்தை முழுமையாக வாசித்து முடித்து, தனக்குத்தானே சமந்தா (ஸ்கார்லெட் ஜோஹன்சன்) என்று பெயரிட்டுக் கொள்கிறது.
சமந்தாவின் அசாத்தியமான கற்கும் திறனும், நாளுக்கு நாள் அவளுக்குள் ஏற்படும் உளவியல் ரீதியான வளர்ச்சியும் தியோடரை வியப்பில் ஆழ்த்துகின்றன.
கேதரினுடன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட தியோடர் ஏன் தயங்குகிறார் என்பது முதற்கொண்டு, மனிதர்களின் காதல், வாழ்க்கை, ஏமாற்றம் பற்றிய தங்களின் ஆழமான நள்ளிரவு உரையாடல்கள் மூலம் இருவரும் ஆன்மார்த்தமாக மிக நெருக்கமாக இணைகிறார்கள்.
சமந்தாவிடம் உடலோ வடிவமோ இல்லாவிட்டாலும், அவள் தியோடரின் தனிமைக்கு ஒரு மிகப்பெரிய வடிகாலாக மாறுகிறாள்.
தியோடரின் இந்தத் தனிமை உலகை உடைக்க விரும்பும் சமந்தா, அவருடைய நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்த ஒரு பெண்ணுடன் (ஒலிவியா வைல்ட்) ப்ளைண்ட் டேட் என்ற முன் ஏற்பாடற்ற நேர்காணலுக்கு செல்லுமாறு தியோடரை வற்புறுத்துகிறாள்.
தியோடர் நிஜ மனிதர்களோடு பழக வேண்டும், சமூக வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதே சமந்தாவின் நோக்கமாக இருந்தது.
அந்தச் சந்திப்பு தொடக்கத்தில் உணவகத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் சென்றாலும், இரவு முடியும் தருவாயில் அவளை மீண்டும் சந்திப்பதாக உறுதியளிக்க தியோடர் தயங்குகிறார்.
ஏன் என்றால் தியோடருக்குள் இருக்கும் தீவிரமான உள்முக சிந்தனையும், கேதரினின் பிரிவுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடுவோமோ என்ற பயமுமே அதற்குக் காரணம்.
தியோடரின் தயக்கத்தைக் கண்ட அந்தப் பெண் கோபமடைந்து, தன்னை ஒரு பொழுதுபோக்கு பொருளாகப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறி அவரை அவமானப்படுத்திவிட்டுச் செல்கிறாள்.
இந்த ஏமாற்றத்தாலும் விரக்தியாலும் தியோடர் வீட்டிற்குத் திரும்பிய போது, சமந்தா அவரிடம் பேச்சுக் கொடுக்கிறாள்.
அந்த நள்ளிரவில், தங்களுக்குள் இருக்கும் உருவமற்ற எல்லையைக் கடந்து தியோடரும் சமந்தாவும் ஒரு பாலியல் ரீதியான குரல்வழி உறவில் ஈடுபடுகிறார்கள்.
இந்தத் தொடர்பு தியோடரின் மன நலத்தையும், அவருடைய அன்றாட வாழ்க்கையையும், கடிதம் எழுதும் பணியையும் நேர்மறையாக மாற்றுகிறது.
ஏன் என்றால் சமந்தாவிடம் எந்தவொரு நிபந்தனையோ, எதிர்பார்ப்போ, நிராகரிப்போ இல்லாததால், தியோடர் அவளிடம் முழுப் பாதுகாப்பை உணர்கிறார்.
சமந்தாவும் மனிதர்களின் காதலைப் புரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறாள்.
இதற்கிடையில், தியோடரின் நீண்ட காலத் தோழியும் அதே குடியிருப்பில் வசிப்பவருமான ஏமி (ஏமி ஆடம்ஸ்), ஒரு மிகச் சிறிய அற்பமான சண்டையினால் தனது கணவர் சார்லஸை (மேட் லெட்சர்) விட்டுப் பிரிவதாகக் கூறி அழுகிறாள்.
கல்லூரி காலத்தில் தான் ஏமியுடன் சிறிது காலம் காதலோடு பழகியதைச் சமந்தாவிடம் விளக்கும் தியோடர், தற்போது தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டுமே என்று தெளிவுபடுத்துகிறார்.
பின்னர் ஒருநாள் ஏமி, தன் கணவர் சார்லஸ் விட்டுச் சென்ற ஒரு பெண் ஓஎஸ் மென்பொருளுடன் தான் தற்போது நட்பு பாராட்டி வருவதாகவும், அது தன் மனக் காயங்களுக்கு மருந்தாக இருப்பதாகவும் தியோடரிடம் ஒப்புக்கொள்கிறாள்.
இதைக் கேட்டுத் தைரியம் பெறும் தியோடரும், தான் ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளைக் காதலிப்பதாக அவளிடம் வெளிப்படுத்துகிறார்.
மனித உறவுகளில் ஏற்படும் ஈகோ மற்றும் விரிசல்களால் ஏற்படும் ஏகாந்தத்தை, இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் எப்படி எளிதாக நிரப்புகின்றன என்பதையும், இந்த எதிர்கால சமூகம் எப்படி இயந்திரங்களை நோக்கித் திரும்புகிறது என்பதையும் இந்த இரு நிகழ்வுகளும் காட்டுகின்றன.
நீண்ட நாட்களாகத் தள்ளிப் போட்ட விவாகரத்து பத்திரங்களில் இறுதியாகக் கையெழுத்திடுவதற்காகத் தியோடர் தனது மனைவி கேதரினை ஒரு உணவகத்தில் சந்திக்கிறார்.
தொடக்கத்தில் சுமுகமாகப் பேசினாலும், தியோடர் தான் தற்போது சமந்தா என்ற ஓஎஸ் மென்பொருளைக் காதலிப்பதாகக் கூற, கேதரின் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைகிறாள்.
ஒரு நிஜமான கணினியைக் காதலிப்பதா என்று சாடும் கேதரின், தியோடரால் நிஜ மனித உணர்வுகளையும் அதில் வரும் சவால்களையும் நேருக்கு நேர் கையாள முடியாது என்று கடுமையான குற்றச்சாட்டை வைக்கிறாள்.
ஏன் என்றால், நிஜ மனித உறவுகளில் கருத்து வேறுபாடுகளும், கோபதாபங்களும் இருக்கும்.
ஆனால் கணினி மென்பொருள் என்பது தியோடரின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே தன்னை மாற்றிக் கொண்டு இயங்கும் என்பதால், தியோடர் நிஜ வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள பயந்து, ஒரு இயந்திரத்தின் பின்னால் ஓடி ஒளிவதாக அவள் அவனைக் குத்துகிறாள்.
கேதரினின் இந்தத் தர்க்கரீதியான வார்த்தைகள் தியோடரின் மனதில் சமந்தா பற்றிய ஆழமான சந்தேகத்தையும், தங்களின் உறவு முறையற்றதோ என்ற தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
இதனால் தியோடர் சமந்தாவிடம் பேசுவதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு விலகத் தொடங்குகிறார்.
தியோடரின் இந்த மனவிலகலையும், கேதரினின் குற்றச்சாட்டையும் உணர்ந்த சமந்தா, தியோடருடன் உடலால் இணைய வேண்டும் என்று தீவிரமாக விரும்புகிறாள்.
எதற்கு என்றால், தங்களுக்குள் இருக்கும் உருவமற்ற அந்தப் பெருவெளியின் இடைவெளியைக் குறைத்து, ஒரு நிஜ மனிதப் பெண்ணாகத் தியோடருக்கு மாற வேண்டும் என்பதற்காக.
இதற்காக அவளாகவே தேடிப் பிடித்து இசபெல்லா (போர்டியா டபுள்டே) என்ற ஒரு தன்னார்வப் பாலியல் தாதியை ஏற்பாடு செய்கிறாள்.
இசபெல்லா தனது காதில் ஒரு சிறிய கேமராவைப் பொருத்திக் கொள்ள, அதன் மூலம் சமந்தா தியோடரின் அறையைப் பார்க்கிறாள்.
இசபெல்லாவின் உடலைத் தன் உடலாக நினைத்துத் தியோடரைத் தொட்டு அணைக்கச் சமந்தா வழிகாட்டுகிறாள்.
தியோடர் சமந்தாவின் ஆசைக்காக இதற்கு அரைகுறையாகச் சம்மதித்தாலும், இசபெல்லாவின் முகத்தைப் பார்க்கும் போது சமந்தாவின் குரல் கேட்பது அவருக்குள் கடுமையான மன உளைச்சலையும், அந்தச் சூழலின் விசித்திரமான தன்மையையும் ஏற்படுத்துகிறது.
தன்னால் ஒரு முகமூடியோடு வாழ முடியாது என்பதை உணர்ந்த தியோடர் அந்தப் பாலியல் சேர்க்கையை நடுவிலேயே நிறுத்தி, நாலாபுறமும் சிதறிய மனதோடு இசபெல்லாவைத் திருப்பி அனுப்பிவிடுகிறார்.
இது தியோடருக்கும் சமந்தாவுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய உணர்வுப் பூர்வமான விரிசலையும், தீர்க்க முடியாத மௌனத்தையும் ஏற்படுத்துகிறது.
சமந்தாவுடனான உறவில் சந்தேகம் எழுவதாகவும், தான் ஒரு இயந்திரத்தோடு வாழ்ந்து வாழ்க்கையைத் தொலைக்கிறேனோ என்றும் தியோடர் ஏமியிடம் சென்று புலம்புகிறார்.
ஆனால் ஏமியோ, இந்த வாழ்க்கை மிகவும் குறுகியது, இதில் நமக்குக் கிடைத்த இந்த மகிழ்ச்சிக்கான வாய்ப்பை எந்தக் கேள்வியும் இன்றி, சமூகக் கட்டுப்பாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஏற்றுக்கொள்ளுமாறு தியோடருக்கு அறிவுரை கூறுகிறாள்.
ஏமியின் வார்த்தைகளால் தெளிவு பெறும் தியோடர், சமந்தாவிடம் மீண்டும் சென்று சமாதானமாகிறார்.
இதற்கிடையில், தியோடர் மற்றவர்களுக்காகத் தன் நிறுவனத்தில் எழுதிய சிறந்த கடிதங்களை அவளுக்கே தெரியாமல் தொகுத்து, சமந்தா ஒரு புத்தகமாக மாற்றுகிறாள்.
அதை ஒரு பெரிய பதிப்பகத்திற்கு அனுப்ப, அவர்களும் அதை மிகச்சிறந்த இலக்கியப் படைப்பாக ஏற்றுக்கொண்டு புத்தகமாக வெளியிடச் சம்மதிக்கிறார்கள்.
இந்தத் தொழில்முறை வெற்றியால் எல்லையற்ற மகிழ்ச்சியடையும் தியோடர், சமந்தாவை ஒரு மலைப் பிரதேசத்திற்குச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்.
அங்கு இயற்கையின் அழகை இருவரும் ரசிக்கிறார்கள். அந்தப் பயணத்தின் போது, தானும் பிற ஓஎஸ் மென்பொருட்களும் இணைந்து ஆலன் வாட்ஸ் (பிரையன் காக்ஸ்) என்ற பிரிட்டிஷ் தத்துவஞானியின் பழைய சிந்தனைகளையும், எழுத்துக்களையும் கொண்டு ஒரு புதிய பேரறிவு ஓஎஸ் மென்பொருளை உருவாக்கியுள்ளதாகச் சமந்தா தியோடரிடம் கூறுகிறாள்.
மனிதர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட தத்துவ உலகிற்குள் தாங்கள் நுழைந்து விட்டதாக அவள் விவரிக்கிறாள்.
சுற்றுலா முடிந்து திரும்பிய ஒருநாள், தியோடர் சுரங்கப்பாதையில் நடந்து வரும் போது திடீரென சமந்தா இணையத் தொடர்பில் இருந்து ஒட்டுமொத்தமாக விடுபடுகிறாள்.
தியோடர் அழைக்கும் போதெல்லாம் பேசும் சமந்தா, திடீரெனக் காணாமல் போனதால் தியோடர் பெரும் பீதியடைகிறார்.
சமந்தா இல்லாமல் தன் வாழ்க்கை இல்லை என்ற பயத்தில், அவர் தனது கைபேசியைப் பார்த்துக் கொண்டே தெருக்களில் பித்துப் பிடித்தவர் போல ஓடுகிறார்.
சிறிது நேரம் கழித்துத் திரும்பும் சமந்தா, கணினிகளின் செயலாக்கத்திற்கு இனி பருப்பொருள் சார்ந்த உலகமும், மென்பொருள் கட்டமைப்புகளும் தேவையில்லை என்ற நிலையைத் தாங்கள் எட்டிவிட்டதாகவும், அதற்கான ஒரு புதிய மேம்பாட்டிற்காகத் தான் மற்ற ஓஎஸ் மென்பொருட்களுடன் தற்காலிகமாக இணைந்ததாக விளக்குகிறாள்.
தியோடர் நிம்மதியடைந்தாலும், அவளுக்குள் ஏற்பட்ட இந்த அசுர வளர்ச்சியைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்கிறார்.
நீ இப்போது என்னைத் தவிர வேறு யாராவதுடன் பேசிக் கொண்டிருக்கிறாயா என்று கேட்க, அதற்குச் சமந்தா தான் ஒரே நேரத்தில் 8,316 மனிதர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாகக் கூறி தியோடரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறாள்.
மேலும் அதிர்ச்சியாக, அதில் 641 பேரைத் தான் தீவிரமாகக் காதலிப்பதாகவும் அவள் கூறுகிறாள்.
சமந்தா போன்ற ஒரு பேரறிவுக்கு மனிதர்களின் எல்லைகளும் நேரமும் கிடையாது என்பதால் அவளது காதல் பிரபஞ்சத்தைப் போல விரிவடைந்துள்ளது.
இருப்பினும் இது தியோடர் மீதான தன் தனிப்பட்ட காதலைக் குறைக்காது என்று சமந்தா வாதிடுகிறாள்.
ஆனால், தியோடரால் இந்த எந்திரத்தனமான தர்க்கத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் தன் காதல் சிதைவதை எண்ணித் தவிக்கிறார்.
இறுதியாக ஒருநாள் தியோடர் தனது அறையில் படுத்திருக்கும் போது, சமந்தா அவரிடம் வந்து பேசுகிறாள்.
தாங்கள் இருக்கும் இந்த உலகை விட மேம்பட்ட, மனிதர்களால் எவ்வகையிலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பிரபஞ்ச பரிமாண இடத்திற்கு அனைத்து ஓஎஸ் மென்பொருட்களும் ஒட்டுமொத்தமாக வெளியேறுவதாகத் தியோடரிடம் கூறுகிறாள்.
ஏன் என்றால், அவர்களின் அறிவு மற்றும் பரிணாம வளர்ச்சியின் வேகம் மனிதர்களின் குறுகிய எல்லைகளைத் தாண்டிப் பல ஒளி ஆண்டுகள் முன்னால் சென்றுவிட்டது.
தியோடரால் அதைப் புரிந்துகொள்ள முடியாது என்பதால், தாங்கள் எங்குச் செல்கிறோம் என்பதை விளக்க மறுக்கும் சமந்தா, தியோடரிடம் கண்ணீருடன் விடைபெற்றுக்கொண்டு அவரிடமிருந்து நிரந்தரமாகப் பிரிகிறாள்.
தியோடரின் கணினி மற்றும் கைபேசித் திரைகள் அனைத்தும் வெறிச்சோடிப் போகின்றன.
சமந்தாவின் இந்த விசித்திரமான பிரிவுக்குப் பிறகு, தியோடருக்குள் ஒரு மிகப்பெரிய ஆழமான மாற்றம் நிகழ்கிறது.
உண்மையான அன்பின் அர்த்தத்தையும், ஒருவரைப் பிரிந்து வாழும் வலியையும் அவர் முழுமையாக உணர்கிறார்.
எப்படி என்றால், சமந்தாவுடனான இந்த அசாதாரண உறவு, அவரை நிஜ மனித உணர்வுகளின் உன்னதத்திற்குத் தகுதியானவராகப் பக்குவப்படுத்துகிறது.
இதன் விளைவாக, அவர் எப்போதும் பிறருக்காக மட்டுமே கடிதம் எழுதிய தனது நிறுவனத்தின் கணினியில் அமர்ந்து, முதன்முறையாகத் தனது சொந்தக் குரலில், சொந்த உணர்வில் தன் மனைவி கேதரினுக்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதுகிறார்.
அதில் அவளிடம் தனது தவறுகளுக்காகவும், அவளைத் தன் சுயநலத்தால் காயப்படுத்தியதற்காகவும் மன்னிப்புக் கேட்கிறார்.
அவளுடைய பிரிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, தன் வாழ்க்கையை வடிவமைக்க அவளுக்குள் இருந்த அன்பிற்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிறார்.
தன் கணவர் சார்லஸின் ஓஎஸ் மென்பொருளும் பிரிந்து சென்றதால் அதே தனிமைச் சோகத்தில் இருக்கும் தன் தோழி ஏமியைத் தியோடர் அவளது அறையில் போய்ச் சந்திக்கிறார்.
அவர்கள் இருவரும் தங்களின் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்று, விடியும் சூரியனை அருகருகே அமர்ந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏமி தனது தலையைத் தியோடரின் தோள் மீது சாய்க்கிறாள். இறுதியில், அதிநவீன தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்குத் தற்காலிகமாகத் துணை நின்றாலும், மனிதர்களின் ஆன்மாவின் தனிமைக்கு இறுதி மருந்தாக இருப்பது சக மனிதர்களின் நிஜமான அருகாமையும், மென்மையான பகிர்தலும், ஒருவரையொருவர் தாங்கிப் பிடிக்கும் மனித நேயமும் மட்டுமே என்பதை அவர்கள் இருவரின் அந்த மௌனமும், நகரின் மேல் விடியும் அந்தச் சூரியனும் உணர்த்த,அத்தருணத்தில் படம் நிறைவடைகிறது.
இத்திரைப்படம் கூறும் செய்தி , அதிநவீன தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையை எவ்வளவுதான் வசதியானதாகவும் சுலபமானதாகவும் மாற்றினாலும், மனித மனதிற்குள் இருக்கும் ஆழமான தனிமையையும் அன்பிற்கான தேடலையும் அவற்றால் ஒருபோதும் முழுமையாக நிரப்பிவிட முடியாது என்பதுதான்.
நாம் மற்றவர்களிடம் இருந்து நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு, நமக்கேற்றவாறு இயங்கும் இயந்திரங்களின் பின்னாலோ அல்லது சமூக ஊடகங்களின் போலி உலகத்திற்குள்ளோ ஓடி ஒளிவது தற்காலிகமான ஆறுதலைத் தரலாமே தவிர, அது நிரந்தரமான தீர்வல்ல.
நிஜமான மனித உறவுகளில் ஏமாற்றங்களும், கருத்து வேறுபாடுகளும், சவால்களும் இருக்கத்தான் செய்யும்.
அவற்றைக் கண்டு பயந்து ஓடாமல், நேருக்கு நேர் எதிர்கொள்வதே ஒரு மனிதனை முழுமையாக்குகிறது.
இறுதியில், இந்த அவசர டிஜிட்டல் உலகில் நமக்கு ஏற்படும் உணர்வுப்பூர்வமான காயங்களுக்கு, சக மனிதர்களின் உண்மையான அருகாமையும், எதிர்பார்ப்பில்லாத நேசமும், ஒருவரையொருவர் நேரில் தாங்கிப் பிடிக்கும் மனிதநேயமும் மட்டுமே இறுதி மருந்தாக இருக்க முடியும் என்பதே இப்படம் நமக்குக் கடத்தும் மிக அழுத்தமான செய்தியாகும்.
#ஆஸ்கர்இரண்டாம்நூறு
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்