எழுத்தாளர் மிலன் குந்தேராவின் உலகப் புகழ்பெற்ற நாவலைத் தழுவி, பிலிப் காஃப்மேன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளியான "The Unbearable Lightness of Being"
"தி அன்ப்யரபிள் லைட்னெஸ் ஆஃப் பீயிங்" (தாங்கமுடியாதபடிக்கு விட்டேர்த்தியாக வாழ்தல் ) திரைப்படம், காதலின் ஆழத்தையும் வாழ்வின் தத்துவார்த்த முரண்பாடுகளையும் பேசும் ஒரு உன்னதமான படைப்பு.
1968 ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'பிராக் வசந்தம்' மற்றும் சோவியத் ஆக்கிரமிப்பின் பின்னணியில், மனித சுதந்திரம், அரசியல் ஒடுக்குமுறை மற்றும் பாலியல் உறவுகள் ஆகியவற்றை இப்படம் மிக நுட்பமாக ஆராய்கிறது.
எந்தப் பொறுப்புகளும் இல்லாத இலேசான வாழ்க்கையை விரும்பும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், காதலை ஒரு 'பளுவாக' நினைக்கும் எளிய பெண் மற்றும் துரோகங்களையே சுதந்திரமாக எண்ணும் ஒரு பெண் கலைஞர் ஆகியோருக்கு இடையிலான உணர்வுப் போராட்டமே இப்படத்தின் தொடக்கப் புள்ளியாக அமைகிறது.
டேனியல் டே-லூயிஸ், ஜூலியட் பினோச் மற்றும் லினா ஒலின் ஆகியோரின் அசாத்திய நடிப்பில் உருவான இத்திரைப்படம், வாழ்வின் நிலையாமையைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தி, உலக சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.
மனித வாழ்க்கையின் தேடல்களும் முடிவுகளும் எவ்வளவு 'பளுவானவை' அல்லது எவ்வளவு 'இலேசானவை' என்ற தத்துவப் போராட்டமே இத்திரைப்படத்தின் அடிநாதமாகும்.
காதலையும் உடலுறவையும் பிரித்து, எந்தப் பொறுப்பும் இல்லாத இலேசான வாழ்க்கையை விரும்பும் தோமாஸ் மற்றும் சபினா ஒருபுறம்,காதல், அர்ப்பணிப்பு, பொறாமை என அனைத்தையும் வாழ்வின் பிரிக்க முடியாத பளுவாக நினைக்கும் தெரெஸா மறுபுறம் என இரு துருவங்களுக்கு இடையிலான மோதலாக இக்கதை நகர்கிறது.
வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறை மட்டுமே வாழக்கூடியது என்பதால், நாம் எடுக்கும் முடிவுகள் சரியானவையா தவறானவையா என்று ஒப்பிட்டுப் பார்க்க நமக்கு மறுவாய்ப்பு கிடைப்பதே இல்லை.
இதனால் மனிதனின் அத்தனை செயல்களும் தார்மீக எடையை இழந்து 'தாங்க முடியாத அளவுக்கு இலேசாகிவிடுகின்றன' என்பதை அரசியல் ஒடுக்குமுறை மற்றும் காதலின் பின்னணியில் படம் பேசுகிறது.
இறுதியில், அனைத்து சுதந்திரங்களையும் இழந்த பிறகுதான், ஒருவருக்காக நம்மை அர்ப்பணிப்பதில் உள்ள அந்தப் 'பளுவே' வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்பதைத் தோமாஸ் உணர்வதோடு படம் இந்த தத்துவ உண்மையை நிலைநாட்டுகிறது.
பிலிப் காஃப்மேனின் அசாத்திய இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், மிலன் குந்தேராவின் தத்துவார்த்த நாவலைத் திரைக்கு ஏற்றவாறு மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியதில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.
நாவலின் பக்கங்களில் இருந்த சிக்கலான தத்துவக் கோட்பாடுகளையும், மனித மனங்களின் முரண்பாடுகளையும் சிதைத்துவிடாமல், சுவாரசியமான ஒரு திரைக்கதையாக மாற்றி அமைத்ததில் இயக்குநரின் பங்கும் திரைக்கதை ஆசிரியர் ஜான்-கிளாட் காரியரின் பங்கும் அளப்பரியது.
1968-ன் பிராக் வசந்த காலத்தின் அரசியல் எழுச்சியையும், அதைத் தொடர்ந்து வந்த சோவியத் ராணுவத்தின் கொடூரமான ஆக்கிரமிப்பையும், கதாபாத்திரங்களின் அந்தரங்க உணர்வுகளோடு பிணைத்து நகரும் திரைக்கதை, படத்தின் நீளத்தை மறக்கடித்து ரசிகர்களைக் கதைக்குள் ஈர்க்கிறது.
இப்படத்தின் ஆகப்பெரும் பலம் அதன் நடிகர்களின் அசாத்தியமான நடிப்புத் திறனாகும். தோமாஸ் என்ற பெண் பித்தராகவும், பின்னர் காதலுக்காகத் தன் வாழ்வையே இழக்கும் அறுவை சிகிச்சை நிபுணராகவும் டேனியல் டே-லூயிஸ் வாழ்ந்திருக்கிறார்.
அவரது அலட்சியமான பார்வையும், பின்னர் ஏற்படும் அகமாற்றமும் அற்புதம். அவருக்கு இணையாக, தெரெஸா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜூலியட் பினோச், கணவனின் துரோகத்தால் ஏற்படும் வலியையும், தவிப்பையும், ஏமாற்றத்தையும் தனது கண்கள் மூலமாகவே கடத்தி ஒட்டுமொத்தப் பாராட்டுகளையும் அள்ளுகிறார்.
சுதந்திரப் பறவையாக, துரோகங்களை ரசிக்கும் சபினா பாத்திரத்தில் லினா ஒலின் காட்டியிருக்கும் மிடுக்கும் கவர்ச்சியும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன.
இப்படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்டிய பெருமை ஒளிப்பதிவாளர் ஸ்வென் நிக்விஸ்ட்டையே சாரும்.
புகழ்பெற்ற இயக்குநர் இங்மார் பெர்க்மேனுடன் பணியாற்றிய இவர், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஒரு ஓவியம் போல செதுக்கியுள்ளார்.
பிராக் நகரத்தின் அழகையும், போரின் கொடூரத்தையும், காதலின் நெருக்கத்தையும் வண்ணங்களின் வழியே அவர் கடத்திய விதம் அசாத்தியமானது.
லியோஸ் ஜனசெக்கின் கிளாசிக்கல் இசையும் படத்தொகுப்பும் படத்தின் தத்துவார்த்தத் தன்மைக்கு மேலும் ஒரு ஆழமான பரிமாணத்தை வழங்குகின்றன.
இந்த ஒட்டுமொத்தக் கூட்டுமுயற்சியின் காரணமாக, இத்திரைப்படம் சிறந்த தழுவல் திரைக்கதை மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், புகழ்பெற்ற பிரிட்டிஷ் அகாடமி விருதுகளில் (BAFTA) சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை வென்றதுடன், உலகளவில் பல மதிப்புமிக்க விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுச் சாதனை படைத்தது.
படத்தின் கதை:-
கம்யூனிச செக்கோஸ்லோவாக்கியாவின் பிராக் நகரில் வாழும் வெற்றிகரமான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான தோமாஸ் (டேனியல் டே-லூயிஸ்), தன்னைப்போலவே எதற்கும் கட்டுப்படாத சுதந்திர சிந்தனை கொண்ட ஓவியரான சபினா (லினா ஒலின்) என்ற பெண்ணுடன் காதல் மற்றும் பாலியல் உறவு வைத்துள்ளார்.
காதலையும் உடலுறவையும் பிரித்துப் பார்க்கும் தோமாஸ், ஒரு பிரத்யேக அறுவை சிகிச்சைக்காக ஒரு நகரின் தங்குவிடுதிக்கு செல்ல நேரிடுகிறது.
அங்கு, தன் தற்போதைய வாழ்க்கையில் திருப்தியில்லாத, அறிவுசார்ந்த தேடல்களைக் கொண்ட தெரெஸா (ஜூலியட் பினோச்) என்ற எளிய பணிப்பெண்ணைச் சந்திக்கிறார்.
அவளது அப்பாவித்தனத்தால் ஈர்க்கப்படும் தோமாஸ் அவளுடன் பழகுகிறார். பின்னர், தெரெஸா தன் கிராமத்து வாழ்க்கையைத் துறந்து தோமாஸைத் தேடி பிராக் நகரிற்கே வந்து அவருடன் குடியேறுகிறாள்.
இது தோமாஸின் வழக்கமான பல பெண் தொடர்புகளுக்குப் பெரும் சவாலாக மாறுகிறது.
தெரெஸாவுக்கு ஒரு வேலை தேடித்தர நினைக்கும் தோமாஸ், சபினாவின் உதவியோடு அவளுக்குப் புகைப்படக் கலைஞர் வேலையைப் பெற்றுத் தருகிறார்.
சபினாவும் தோமாஸையும் காதலர்கள் என்பதைத் தெரெஸா புரிந்துகொள்ளும்போது அவளுக்குள் பொறாமையும் தவிப்பும் ஏற்பட்டாலும், இரு பெண்களுக்கு இடையே ஒரு ஆழமான நட்பு மலர்கிறது.
தோமாஸ் தன் பழைய பழக்கங்களை மாற்றிக்கொள்ளாவிட்டாலும், தெரெஸாவின் நிபந்தனையற்ற அன்பிற்காக அவளை ஒரு எளிய சடங்குடன் திருமணம் செய்துகொள்கிறார்.
அந்தத் திருமண நிகழ்வின்போது இருவரும் இடைவிடாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இருப்பினும், தோமாஸின் தொடர் பெண் பித்தத்தனம் தெரெஸாவைத் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.
அவள் அவரை விட்டுப் பிரிய நினைத்தாலும், அதே காலகட்டத்தில் செக்கோஸ்லோவாக்கியா மீது சோவியத் ராணுவம் தொடுக்கும் ஆக்கிரமிப்புப் போர் அவளைத் தோமாஸுடன் மேலும் பிணைக்கிறது.
இந்த அரசியல் குழப்பங்களுக்கு நடுவே, சோவியத் படைகளுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களைத் தெரெஸா தன் கேமராவில் துணிச்சலாகப் படம் பிடித்து, அந்த ஃபிலிம் சுருள்களை மேற்கத்திய நாடுகளுக்குக் கடத்துவதற்காக வெளிநாட்டினரிடம் ஒப்படைக்கிறாள்.
பிராக் வசந்த காலத்தின் சுதந்திரத்தை நசுக்கி, அங்கு உருவாகும் அடக்குமுறை போலீஸ் ஆட்சியில் வாழ விரும்பாமல், தோமாஸ், தெரெஸா மற்றும் சபினா ஆகிய மூவரும் நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்திற்குத் தப்பிச் செல்கிறார்கள்.
இதில் சபினா முதலாவதாக வெளியேற, அவரைத் தொடர்ந்து தயக்கத்துடனே தோமாஸும் தெரெஸாவும் புறப்படுகிறார்கள்.
முதலில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு வரும் சபினா, அங்கு பிரான்ஸ் (டெரெக் டி லின்ட்) என்ற திருமணமான பல்கலைக்கழகப் பேராசிரியரைச் சந்தித்துக் காதலில் விழுகிறாள்.
பிரான்ஸ் அவளுக்காகத் தன் மனைவி மற்றும் குடும்பத்தையே கைவிடத் துணிகிறான்.
ஆனால், அவனது இந்த அர்ப்பணிப்பும் தீவிரமான காதலும் தன் உணர்வுகளுக்கு ஒரு பெரிய பளுவாக மாறித் தன்னை முடக்கிவிடுமோ என்று அஞ்சும் சபினா, அவனது திட்டத்தைக் கேட்டதும் அவனுக்குத் தெரியாமல் அவனை விட்டு விலகி ஓடுகிறாள்.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்து வாழ்க்கையோடு ஒத்துப் போக முடியாமல் தெரெஸா தவிக்கிறாள், அங்குள்ள சுவிஸ் மக்கள் அவளை அன்போடு நடத்தவில்லை.
மேலும், புதிய நாட்டிலும் தோமாஸ் தன் பெண் பித்தத் தனத்தைத் தொடர்வதைக் கண்டு முற்றிலும் விரக்தியடையும் தெரெஸா, சோவியத் ஆக்கிரமிப்பில் இருக்கும் தன் தாயகமே பரவாயில்லை என்று முடிவெடுத்து, தோமாஸிற்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு பிராக் நகரிற்கே தனியாகத் திரும்புகிறாள்.
அவள் சென்றதால் கடுமையான வருத்தமடையும் தோமாஸ், அவளைத் தேடி மீண்டும் தாயகம் வருகிறார்.
ஆனால், எல்லையில் கம்யூனிச அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்வதால், அவரால் மீண்டும் நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது.
தன் பொருட்டே அவர் எல்லாவற்றையும் துறந்து தாயகம் திரும்பினார் என்பதை அறியும் தெரெஸா பெருமகிழ்ச்சி அடைந்து, இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.
பிராக் நகரில் தோமாஸ் மீண்டும் மருத்துவப் பணியைத் தொடர முயல்கிறார்,ஆனால் சோவியத் படையெடுப்பிற்கு முன்பு கம்யூனிச அரசை விமர்சித்து அவர் எழுதிய ஒரு காரசாரமான கட்டுரை அவரை ஒரு அரசியல் எதிரியாக மாற்றியிருக்கிறது.
அந்த உளவு அரசு, தன் கட்டுரை கம்யூனிச எதிர்ப்பு உணர்வைத் தூண்டியதாக ஒப்புக்கொண்டு தோமாஸை ஒரு மன்னிப்புக் கடிதத்தில் கையெழுத்திடச் சொல்லி வற்புறுத்துகிறது.
தன் தார்மீகக் கொள்கைகளை விற்க மறுத்து தோமாஸ் கையெழுத்திட மறுப்பதால், அவர் மருத்துவம் பார்க்க முடியாதபடி கறுப்புப் பட்டியலில் வைக்கப்படுகிறார்.
பிழைப்பிற்காக அவர் ஜன்னல் துடைக்கும் தொழிலாளியாக மாறுகிறார்; அப்போதும் ஒரு உயர் கம்யூனிச அதிகாரியின் மகளால் ஈர்க்கப்பட்டுத் தன் பாலியல் லீலைகளைத் தொடர்கிறார்.
அந்தப் பெண் அவரை ஏற்கனவே யாரென்று அடையாளம் தெரிந்தவள் போலப் பழகுகிறாள்.
மறுபுறம், ஒரு உணவகத்தில் பணிபுரியும் தெரெஸாவை ஒரு பொறியாளர் (ஸ்டெல்லான் ஸ்கார்ஸ்கார்ட்) தவறான நோக்கோடு அணுகித் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறான்.
தோமாஸின் தொடர் துரோகங்களால் வேதனையடையும் தெரெஸா, உணர்ச்சியற்ற ஒரு ஒற்றை உடலுறவில் அந்தப் பொறியாளருடன் ஈடுபடுகிறாள்.
ஆனால், அடுத்த கணமே கடுமையான குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அவள், அந்தப் பொறியாளர் தங்களை உளவு பார்க்கும் ரகசிய போலீஸ் (StB) அமைப்பின் ஆளாக இருப்பானோ என்றும், தங்களையும் தோமாஸையும் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்றும் மரண பயம் கொள்கிறாள்.
இந்தத் தவிப்பைத் தாங்க முடியாமல் ஒரு கால்வாய்க் கரையில் அவள் தற்கொலை செய்ய முற்படும்போது, தற்செயலாக அந்தப் பாதையைக் கடந்து செல்லும் தோமாஸ் அவளைக் காப்பாற்றி, ஆறுதல் கூறித் தன் காதலால் அவளை மீட்டெடுக்கிறார்.
நகர வாழ்க்கையின் இந்த அரசியல் நெருக்கடிகளாலும் சந்தேகங்களாலும் சோர்வடையும் தெரெஸா, பிராக் நகரை விட்டு வெளியேறும்படி தோமாஸை வற்புறுத்துகிறாள்.
கடவுச்சீட்டு இல்லாத நிலையைத் தோமாஸ் நினைவூட்டினாலும், தெரெஸா ஒரு யோசனை கூறி அவரை கிராமப்புறத்திற்கு அழைத்துச் செல்கிறாள்.
அங்கு தோமாஸின் பழைய நோயாளி ஒருவரான பவெல் (பவெல் லாண்டோவ்ஸ்கி) அவர்களை வரவேற்றுத் தன் கிராமத்தில் தங்க வைக்கிறார்.
அந்த கிராமத்தில், பிராக் நகரின் அரசியல் உளவு வேலைகளும், பாலியல் சலனங்களும் இல்லாத ஒரு அமைதியான, அழகான வாழ்க்கையை அவர்கள் வாழத் தொடங்குகிறார்கள்.
அவர்களுக்கு நேர்மாறாக, அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த சபினா, எதற்கும் கட்டுப்படாத தன் பழைய போஹிமியன் வாழ்க்கை முறையையே தொடர்ந்து வாழ்கிறாள்.
ஒரு நாள், தோமாஸும் தெரெஸாவும் ஒரு கிராமத்துப் பாதையில் நடந்த கார் விபத்தில் ஒன்றாக உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சிகரமான செய்தி ஒரு கடிதம் மூலம் சபினாவை வந்தடைகிறது.
அது அவளைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
அவர்கள் விபத்தில் மடிவதற்குச் சற்று முன்பாக நடக்கும் காட்சியோடு இத்திரைப்படம் முடிகிறது.
ஒரு மழை நாளில் தங்களது பண்ணை டிரக் வண்டியை ஓட்டிக்கொண்டு கிராமத்துப் பாதையில் செல்லும்போது, தோமாஸ் தெரெஸாவிடம், இத்தனை காலப் போராட்டங்களுக்குப் பிறகு தனக்குள் இருக்கும் அத்தனை சுமைகளும் நீங்கி, தான் எவ்வளவு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் என்று அமைதியாகக் கூறுவதோடு வாழ்வின் அத்தனை தத்துவார்த்தப் பக்கங்களுடன் இக்கதை நிறைவடைகிறது.
வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறை மட்டுமே வாழக்கூடியது என்பதால், நாம் எடுக்கும் எந்த ஒரு முடிவும் நிரந்தரமானதோ அல்லது மறுபரிசீலனைக்கு உரியதோ அல்ல.
எனவே, வாழ்வின் தருணங்களை அதன் போக்கிலேயே பாரமின்றி ஏற்கும்போதே மனிதன் அமைதி காண்கிறான் என்பதே இத்திரைப்படம் வழங்கும் முக்கிய செய்தியாகும்.
பொறுப்புகளற்ற சுதந்திரமும், தப்பியோடும் எண்ணமும் மனிதனை இலேசாக மாற்றினாலும், அது ஒருகட்டத்தில் அவனுக்குத் தாங்க முடியாத தத்துவார்த்தச் சூனியத்தையே பரிசாகத் தருகிறது.
மாறாக, உண்மையான காதலும், ஒருவருக்காக நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ளும் பொறுப்பும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமுள்ள பளுவைத் தருகின்றன.
அரசியல் அடக்குமுறையோ, தனிமனித துரோகங்களோ எதுவாக இருந்தாலும், இறுதிவரை ஒருவருக்கொருவர் துணையாக நின்று அன்பைப் பகிர்வதில்தான் வாழ்வின் ஆகச்சிறந்த மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்பதை இப்படம் உணர்த்துகிறது.
#கீதப்ப்ரியன்இங்லிஷ்க்ளாஸிக்