"A Pasage to India" "ய பேஸேஜ் டு இண்டியா" திரைப்படம் 1984 ஆம் ஆண்டு வெளியானது, 1920-களின் பிரிட்டிஷ் இந்தியாவை பின்னணியாகக் கொண்ட இப்படைப்பு, காலனித்துவத்தின் இறுக்கமான சமூகக் கட்டமைப்பிற்குள் சிக்கிக்கொள்ளும் இரு பிரிட்டிஷ் பெண்கள் மற்றும் ஒரு இந்திய மருத்துவரின் பயணத்தைச் சித்தரிக்கிறது.
மராபர் குகைகளில் நடக்கும் ஒரு மர்மமான சம்பவம், வெறும் தனிப்பட்ட மோதலாக மட்டுமன்றி, இந்திய-பிரிட்டிஷ் உறவுகளுக்கிடையிலான இனவெறி மற்றும் அவநம்பிக்கையைத் தோலுரித்துக் காட்டும் ஒரு சமூகப் பிரளயமாக மாறுகிறது.
மனித மனங்களின் ஆழத்தையும், உண்மையான புரிதலுக்கான தேடலில் உள்ள தடைகளையும் கலைநயத்துடன் காட்சிப்படுத்தும் ஒரு காவியப் படைப்பு இத்திரைப்படம்.
காலனித்துவத்தின் அதிகார மமதை மற்றும் இனவாதச் சுவர்களுக்கு இடையே, மனிதர்களை இணைக்க முயலும் நட்பின் தவிப்பும், புரிதலின்மையால் அந்த உறவுகள் சிதையும் வலியே இப்படத்தின் அடிநாதம். பண்பாடுகளுக்கு இடையிலான இடைவெளியையும், மனித ஆன்மாவின் தனிமையையும், ஒருபோதும் அடைய முடியாத சமத்துவத்தின் இயலாமையையும் இது ஆழமாகப் பதிவு செய்கிறது.
உலக இலக்கியத்திலும் சினிமாவிலும் இப்படைப்பு ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
நவீன இலக்கியத்தில், காலனித்துவத்தின் உளவியல் சிக்கல்களை ஒரு நாவல் இவ்வளவு ஆழமாகப் பதிவு செய்தது மிக அரிது.
இது ஒரு வரலாற்று ஆவணமாகவும் மனித இருப்பின் மர்மங்களைப் பேசும் தத்துவார்த்தப் படைப்பாகவும் இன்றும் தனித்துவமாகத் திகழ்கிறது.
சினிமாவில், டேவிட் லீனின் இந்தத் திரைப்படம் காவியத் தரத்திலான காட்சிப்படுத்துதலுக்கும், நுணுக்கமான திரைக்கதைக்கும் உலக அளவில் ஒரு பாடப்புத்தகமாகவே கருதப்படுகிறது.
அரசியல் மேலாதிக்கம், இனவெறி மற்றும் தனிமனித உறவுகளின் சிதைவு ஆகியவற்றை உணர்ச்சிகரமான கோணத்தில் அணுகியதால், இது உலக சினிமாவின் மிகச் சிறந்த சமூக விமர்சனப் படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, ஒரு தேசத்தின் அரசியலும் தனிமனிதனின் அகப்போராட்டமும் எப்படி ஒன்றையொன்று பாதிக்கின்றன என்பதை விளக்கும் ஒரு உன்னதப் படைப்பாக, இது இன்றும் உலகக் கலைத் தளத்தில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இ.எம். ஃபோர்ஸ்டரின் நாவலைத் திரைக்கதையாக மாற்றிய டேவிட் லீன், மிகக் குறுகிய காலனித்துவ அரசியல் மற்றும் மனித உணர்வுகளின் சிக்கல்களைப் பின்னிப் பிணைத்து ஒரு அழுத்தமான திரைக்கதையை அமைத்திருந்தார்.
டாக்டர் அஜிஸாக நடித்த விக்டர் பானர்ஜி, இந்தியனின் தவிப்பையும் தன்மானத்தையும் தனது நுணுக்கமான முகபாவனைகளில் வெளிப்படுத்தியிருந்தார்.
மிஸஸ் மூராக பெக்கி ஆஷ்கிராஃப்ட் மற்றும் அடேலாவாக ஜூடி டேவிஸ் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களின் அகப்போராட்டத்தை அப்படியே திரையில் கடத்தியிருந்தார்கள்.
டேவிட் லீனின் முதிர்ச்சியான இயக்கமும், இந்தியாவின் பிரம்மாண்டமான நிலப்பரப்பைத் துல்லியமாகப் படம் பிடித்து காட்டிய எர்னஸ்ட் டே-யின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஒரு தனித்துவமான காவியத் தன்மையைத் தருகின்றன.
மாரிஸ் ஜாரின் பின்னணி இசை, இந்தியாவின் மர்மமான குகைப் பகுதிகளை உணர்த்தும் வகையில் ஒருவித மெய்சிலிர்க்க வைக்கும் ஒலியாகப் திகழ்கிறது.
இப்படம் சிறந்த துணை நடிகை மற்றும் பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதுகளை வென்றது.
டேவிட் லீன் உண்மையான இந்தியச் சூழலைப்படம்பிடிக்க பாடுபட்டதும், அஜிஸ் மற்றும் ஃபீல்டிங் இடையிலான நட்பு முறிவை ஒரு பெரும் வரலாற்றுத் துயராகக் கட்டமைத்ததும் இப்படத்தின் சுவாரஸ்யங்களாகும்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்றது.
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, மைசூர், ராம்நகர் , உதய்பூர் (ராஜஸ்தான்) ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
இதில் குகைக்காட்சிகள், ராம்நகர் அருகே உள்ள மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டன.
படத்தின் கதை:-
1920-களில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலம். அடேலா குவெஸ்டட் (ஜூடி டேவிஸ்) என்ற இளம் பெண், இங்கிலாந்திலிருந்து இந்தியா வருகிறார்.
மிஸஸ் மூர் (பெக்கி ஆஷ்கிராஃப்ட்) என்பவருடன் அவர் வருகிறார்.
மிஸஸ் மூரின் மகன் ராணி ஹேஸ்லாப் (நைஜல் ஹேவர்ஸ்), சந்த்ராப்பூர் என்ற ஊரில் ஆங்கிலேய ஆட்சித்துறை அதிகாரியாக இருக்கிறார்.
அவரை அடேலா திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா என்பதை முடிவு செய்யவே இந்தப் பயணம்.
இந்தியா வந்தவுடன் அடேலாவிற்கும் மிஸஸ் மூருக்கும் ஒரு பெரிய ஏமாற்றம்.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களைத் தங்களைவிடக் கீழானவர்களாகக் கருதி, அவர்களிடமிருந்து விலகியே வாழ்கிறார்கள்.
இது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ரிச்சர்ட் ஃபீல்டிங் (ஜேம்ஸ் பாக்ஸ்) என்ற பள்ளிக் கண்காணிப்பாளர், அவர்களை நாராயண் கோட்போல் (அலெக் கின்னஸ்) என்ற முதியவருடன் இவர்களை அறிமுகப்படுத்துகிறார்.
அதே நேரத்தில், ஒரு மசூதியில் வைத்து டாக்டர் அஜிஸ் அகமதுவை (விக்டர் பானர்ஜி) மிஸஸ் மூர் சந்திக்கிறார்.
பிரிட்டிஷ் அதிகாரிகளைப் போலப் பாரபட்சம் காட்டாமல், மிஸஸ் மூர் அன்பாகப் பேசியதால் அஜிஸுக்கு அவரை பிடித்துப்போகிறது.
இந்தியாவைப் பார்க்கத் துடிக்கும் அந்தப் பெண்களுக்கு,அவ்வூரின்
சிறப்பம்சமான மராபர் குகைகளைக் காட்ட அஜிஸ் ஆசைப்படுகிறார்.
இடையில் நடந்த விருந்து ஒன்றில், ஆங்கிலேயர்களின் திமிரையும் இனவெறியையும் மிஸஸ் மூர் வெளிப்படையாகத் தன் மகனிடம் கண்டித்து வாக்குவாதம் செய்கிறார்.
இந்தச் சூழலில், மராபர் குகைப் பயணம் தொடங்குகிறது.
குகைக்குள் சென்ற மிஸஸ் மூர், அங்குள்ள விசித்திரமான எதிரொலியாலும் கூட்ட நெரிசலாலும் மூச்சு முட்டி வெளியே வருகிறார்.
எனவே, அடேலாவும் அஜிஸும் மட்டும் ஒரு வழிகாட்டியுடன் மேலே செல்கிறார்கள்.
அஜிஸ் சிகரெட் பிடிக்கத் தனியே ஒதுங்க, அடேலா ஒரு குகைக்குள் நுழைகிறார்.
உள்ளே எதோ ஒரு பயத்தில் அவர் கதறுகிறார். அஜிஸ் திரும்பி வந்து பார்த்தால், அடேலாவைக் காணவில்லை.
சிறிது நேரத்தில், அவர் ஆடைகள் கிழிந்த நிலையில் குகையிலிருந்து அழுதுகொண்டே ஓடுவதை அஜிஸ் பார்க்கிறார்.
உடனே அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரிகள் அடேலாவை மீட்டுச் செல்கிறார்கள்.
திரும்பி வந்ததும், அஜிஸ் மீது அடேலாவை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
இது அந்த ஊரில் பெரும் கலவரத்தை ஏற்படுத்துகிறது. ஃபீல்டிங் மட்டுமே அஜிஸ் குற்றமற்றவர் என உறுதியாக நம்புகிறார்.
மிஸஸ் மூரும் அஜிஸ் அப்பாவியானவர் என்று நம்பினாலும், அவர் அங்கிருந்து இங்கிலாந்து கிளம்பும்போது வழியிலேயே இறந்துவிடுகிறார்.
நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போது, அடேலா உண்மையை உணர்கிறார்.
குகையில் அஜிஸ் தன்னைத் துன்புறுத்தவில்லை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.
தன்மீது நடந்தது வன்புணர்வு முயற்சி அல்ல, அது ஒரு குழப்பம் என்று சொல்லி புகாரைத் திரும்பப் பெறுகிறார்.
அஜிஸ் விடுதலையாகிறார். ஆனால், ஆங்கிலேயர்கள் அவரை கீழ்தரமாக நடத்திய விதம் அஜிஸின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்திவிடுகிறது.
அடேலா அவமானத்துடன் இங்கிலாந்து திரும்புகிறார். அவருக்குத் துணையாக ஃபீல்டிங் மட்டுமே நிற்கிறார்.
அஜிஸ் அந்த ஊரை விட்டுச் சென்று காஷ்மீரில் புதிய மருத்துவமனையைத் தொடங்குகிறார்.
ஆண்டுகள் பல கடக்கின்றன. அடேலா மூலம் ஃபீல்டிங், மிஸஸ் மூரின் மகள் ஸ்டெல்லா மூர்-ஃபீல்டிங்கை (சாண்ட்ரா ஹோட்ஸ்) மணக்கிறார்.
நீண்ட காலத்திற்குப் பிறகு, அஜிஸ் தன் நண்பன் ஃபீல்டிங்கை மீண்டும் சந்திக்கிறார்.
அன்று நீதிமன்றத்தில் அடேலா காட்டிய நேர்மையை, இத்தனை காலத்திற்குப் பிறகு அஜிஸ் புரிந்துகொள்கிறார்.
தான் தவறாக எண்ணியதற்கு வருந்தி, அடேலாவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதுகிறார்.
ஆங்கிலேயரின் ஆணவம், இந்தியர்களின் எதிர்பார்ப்பு, மற்றும் இரு கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள இடைவெளியால் ஒரு நட்பு எப்படிச் சிதைகிறது என்பதை இந்தக்கதை மிக உணர்ச்சிகரமாகச் சொல்கிறது.
இறுதியில், தவறு செய்தவர்கள் தங்கள் தவறை உணர்வதும், உண்மையான மனிதநேயம் வெற்றி பெறுவதுமே இந்தக் கதையின் சாராம்சம்.
ஆதிக்க மனோபாவமும் இனவாதமும் நிலவும் சமூகத்தில், மனித நேயம் மற்றும் உண்மையான நட்புறவு என்பது எவ்வளவு பலவீனமானது என்பதை இப்படம் உணர்த்துகிறது.
எந்தவொரு அதிகாரப் படிநிலையும் மனிதர்களுக்கு இடையிலான தடையற்ற பிணைப்பைத் தடுக்கும் வரை, முழுமையான புரிதல் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும் என்பதே இதன் ஆழமான செய்தியாகும்.
கமல்ஹாசனின் 'ஹேராம்' திரைப்படம், இப்படத்தின் தாக்கத்தை அதன் சில கலை நுணுக்கங்களையோ தன்னுள் கொண்டிருப்பதாகப் பல சினிமா விமர்சகர்கள் குறிப்பிடுவர்.
குறிப்பாக, ஒரு காலனித்துவ பின்னணியில் தனிமனிதன் தன் அடையாளத்தைத் தேடும் விதமும், அரசியல் சூழல் எப்படி ஒருவனின் மனசாட்சியை மாற்றுகிறது என்பதும் இரு படைப்புகளுக்கும் இடையிலான பொதுவான புள்ளிகள்.
'இப்படம் குகையை எப்படி ஒரு குறியீடாகக் கொண்டு மனித ஆன்மாவின் தனிமையையும், இனவெறியையும் அணுகியதோ, அதேபோல் 'ஹேராம்' படத்தின் வரலாற்றுப் பின்னணியில் இந்திய சுதந்திரப் போராட்டம் மற்றும் வகுப்புவாதப் பதற்றங்களை ஒரு தனிமனிதனின் கோணத்தில் கமல் காட்டியிருப்பார்.
இரு படங்களிலும் வரலாற்று நிகழ்வுகள் தனிமனித உறவுகளையும், அவர்களின் முடிவுகளையும் எப்படித் தீர்மானிக்கின்றன என்பது அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
ஒரு வரலாற்றுத் தருணத்தின் கொடூரத்தையும், அந்தச் சூழலில் அகப்படும் மனிதர்களின் தவிப்பையும், நுணுக்கமான அரசியல் விமர்சனத்தோடு அணுகிய விதத்தில் 'ஹேராம்' இப்படைப்பின் ஒரு பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
தொழில்நுட்ப ரீதியாக ஹேராம் பயன்படுத்திய அந்தத் தனித்துவமான வண்ண அமைப்பு (Color Palette) மற்றும் வரலாற்றுத் தன்மையைக் காப்பாற்ற கையாண்ட தொழில்நுட்பங்கள், டேவிட் லீனின் இந்த காவியத் திரைப்படத்தின் நுணுக்கமான காட்சி மொழியிலிருந்து உத்வேகம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
#கீதப்ப்ரியன்இங்லிஷ்க்ளாஸிக்