அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஜூடி கார்லண்டின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2019 இல் வெளியான வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் "ஜூடி".
பீட்டர் க்வில்டர் எழுதிய எண்ட் ஆஃப் தி ரெயின்போ என்ற நாடகத்தைத் தழுவி ரூபர்ட் கூல்ட் இதனை இயக்கியுள்ளார்.
ரெனே ஜெல்வெகர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த இப்படம் கலைஞர்களின் அந்திமக் காலத்து வலிகளையும் கடந்த காலத்தின் வடுக்களையும் ஒருசேரப் பேசுகிறது.
1939 இல் தி விஸார்ட் ஆஃப் ஓஸ் படத்தில் நடித்தபோது ஸ்டுடியோக்களால் ஜூடிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் 1968 இல் லண்டனில் அவர் நடத்திய மேடை நிகழ்ச்சிகளையும் மையமிட்டு திரைக்கதை நகர்கிறது.
சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் உலக சினிமாவிற்கு ஒரு கலைஞரின் ஆன்மாவை நெருக்கமாகக் காட்டியது.
டெலுரைடு மற்றும் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டபோது இது விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஒரு மாபெரும் நட்சத்திரத்தின் வீழ்ச்சியையும் மீட்சியையும் சமகாலத் தன்மையுடன் அணுகிய விதம் உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றது.
ஒரு கலைஞரின் வாழ்வு அதிகார வர்க்கத்தால் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பதை இப்படம் இரக்கத்துடனும் அதே சமயம் மிகத் தெளிவான பார்வையுடனும் பதிவு செய்கிறது.
சிறுவயதில் திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அவரது பிற்கால வாழ்வை எப்படி நரகமாக்கின என்பதை மிக நுட்பமாகச் சித்தரித்திருப்பது திரைக்கதையின் பலம்.
மேலோட்டமான புகழைத் தாண்டி ஒரு தாயாகவும் தனிமனிதனாகவும் அவர் எதிர்கொண்ட பொருளாதார மற்றும் மனரீதியான நெருக்கடிகள் மனதை உலுக்குகின்றன.
ஜூடி திரைப்படத்தின் அடிநாதமாக விளங்குவது ஒரு கலைஞரின் அடையாளம் சிதைக்கப்படுவதும் அதன் விளைவாக ஏற்படும் தீராத ஏக்கமுமாகும்.
சிறு வயதிலேயே அவரது உண்மையான பெயர் மற்றும் இயல்புகள் பறிக்கப்பட்டு ஜூடி கார்லண்ட் எனும் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது.
அந்த பிம்பத்திற்கு உயிர் கொடுக்க அவர் தனது இளமைப் பருவம், உணவு, உறக்கம் என அனைத்தையும் பலிகொடுக்க வேண்டியிருந்தது.
அந்தப் பிம்பத்தின் பாரத்தைத் தாங்க முடியாமல் அவர் திணறுவதும் அதே பிம்பத்தை உலகிற்குத் தொடர்ந்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் அவர் தள்ளப்படுவதும் தான் இப்படத்தின் ஆழமான துயரம்.
மற்றொரு கோணத்தில் பார்த்தால் இப்படம் ஒரு மனிதனின் பாதுகாப்பற்ற உணர்வை மையமாகக் கொண்டது. மேடையில் நின்றால் மட்டுமே தனக்கு மதிப்பு இருப்பதாக அவர் நம்புவதும் மேடையை விட்டு இறங்கியதும் தான் ஒரு சாதாரண தோல்வியுற்ற பெண்ணாக மாறிவிடுவதாக அவர் அஞ்சுவதும் அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.
அந்த பாதுகாப்பு இல்லாத சூழலே அவரை தவறான உறவுகளிடமும் தவறான பழக்கங்களிடமும் தள்ளுகிறது.
இப்படம் ஒரு போராட்டமான மீட்சியைப் பற்றியது. தன் மீது திணிக்கப்பட்ட அந்தப் பிம்பத்திலிருந்து விடுபட முடியாமல் அவர் தவித்தாலும் தனது இறுதித் தருணம் வரை தன்னைத் தானே மீட்டுக்கொள்ள அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவரது விடாமுயற்சியைக் காட்டுகிறது.
அவர் பாடும் பாடல்கள் வெறும் வரிகள் அல்ல மாறாக அவர் இழந்த அந்தச் சாதாரண வாழ்க்கையைத் தேடும் ஒரு அலறலாகும்.
தான் ஒரு நட்சத்திரமாக இல்லாமல் ஒரு தாயாக ஒரு சாதாரண பெண்ணாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற அந்த நிறைவேறாத ஆசைதான் இப்படத்தின் உண்மையான அடிநாதமாகத் துடிக்கிறது.
இயக்குநர் ரூபர்ட் கூல்ட் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பிணைக்கும் விதத்தில் நேர்த்தியான ஒரு படைப்பை வழங்கியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் ஓலே பிராட் பிர்கேலண்ட் லண்டனின் இரவு விடுதிகளையும் அரங்கங்களையும் ஒருவிதமான ஏக்கத்துடன் காட்சிப்படுத்தியுள்ளார்.
1930களின் ஹாலிவுட் வண்ணமயமான அதே சமயம் ரகசியங்கள் நிறைந்த இருண்ட உலகமாகவும் 1960களின் லண்டன் ஒரு தனிமை நிறைந்த களமாகவும் நுணுக்கமாகக் காட்டப்பட்டுள்ளது.
பத்தே ,பி பி சி பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் உருவான இப்படம் 2019 செப்டம்பரில் அமெரிக்காவிலும் அக்டோபரில் இங்கிலாந்திலும் வெளியானது.
பத்து மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் நாற்பத்தி மூன்று மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட ரசிகர்களிடம் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரெனே ஜெல்வெகர் ஜூடி கார்லண்டாகவே வாழ்ந்துள்ளார். அவரது உடல்மொழி குரல் மாற்றம் மற்றும் முகபாவனைகள் ஜூடியின் வலியை அச்சு அசலாகப் பிரதிபலிக்கின்றன.
ஜெஸி பக்லி, பின் விட்ராக், ரூஃபஸ் செவெல் மற்றும் மைக்கல் காம்பன் போன்றோர் தங்களுக்குரிய பாத்திரங்களில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர்.
குறிப்பாக மேடையில் ஜூடி பாடும்போது ரெனே காட்டும் உணர்ச்சிகள் நடிப்பின் உச்சமாகத் தெரிகின்றன.
திரைப்படத்தின் இசை அதன் ஆன்மாவாகத் திகழ்கிறது. கேப்ரியல் யாரெட் இசையமைப்பில் உருவான பின்னணி இசை கதையின் கனத்தை அதிகரிக்கிறது.
ஜூடி கார்லண்டின் புகழ்பெற்ற பன்னிரண்டு பாடல்களை ரெனே ஜெல்வெகர் சொந்தக் குரலில் பாடி அசத்தியுள்ளார். ஓவர் தி ரெயின்போ மற்றும் தி டிராலி சாங் போன்ற பாடல்கள் பழைய நினைவுகளைத் தூண்டும் வகையில் மிக அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
விருதுகளில் ரெனே ஜெல்வெகரின் நடிப்பு உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. அவர் சிறந்த நடிகைக்கான அகாடமி விருது கோல்டன் குளோப் விருது எஸ் ஏ ஜி விருது பாஃப்டா விருது மற்றும் விமர்சகர்களின் தெரிவு விருது என அந்த ஆண்டின் மிக முக்கியமான அனைத்து விருதுகளையும் வென்றார்.
இப்படத்தின் ஒப்பனை மற்றும் ஆடை அலங்காரமும் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ஜூடி கார்லண்டின் பாடல்களைப் பாடுவதற்காக நடிகை ரெனே ஜெல்வெகர் ஒரு வருடம் முழுவதும் தீவிர குரல் பயிற்சி மேற்கொண்டார்.
அவர் திரைப்படத்திற்காகப் பாடல்களைப் பதிவு செய்ததோடு நில்லாமல் லண்டனின் புகழ்பெற்ற ஹாக்னி எம்பயர் அரங்கில் நேரடிப் படப்பிடிப்பின் போதும் ரசிகர்களுக்கு முன்னால் நேரடியாகப் பாடினார்.
ஜூடி கார்லண்டின் தனித்துவமான மேடைத் தோற்றத்தைப் பிரதிபலிக்க அவரது கூன் விழுந்த உடல்மொழி மற்றும் கழுத்து அசைவுகளை ரெனே மிக நுட்பமாகப் பயின்றார்.
இதற்காக ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு முன்னால் இரண்டு மணி நேரம் ஒப்பனைக்காகவும் செயற்கை மூக்கு மற்றும் விக் போன்றவற்றை அணிவதற்கும் அவர் செலவிட்டார்.
திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் உள்ள வெஸ்ட் லண்டன் பிலிம் ஸ்டுடியோஸ் மற்றும் பைன்வுட் ஸ்டுடியோஸில் படமாக்கப்பட்டன.
ஜூடியின் லண்டன் வாழ்க்கையை மிக தத்ரூபமாகக் காட்ட 1960களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஆடை வடிவமைப்புகள் மற்றும் அரங்குகள் மிகக் கவனமாக உருவாக்கப்பட்டன.
பத்தாம் வகுப்பு படிக்கும் போதே புகழின் உச்சத்துக்கும் துயரத்திற்கும் சென்ற ஜூடியின் இளமைக்காலப் பாத்திரத்தில் நடித்த டார்சி ஷா அசல் ஜூடியின் சிறுவயது வீடியோக்களைப் பார்த்து அவரது மேடை நளினத்தைக் கற்றுக் கொண்டார்.
இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு டெலுரைடு திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டபோது அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கைதட்டித் தங்கள் வரவேற்பைத் தெரிவித்தனர்.
ஜூடி கார்லண்டின் ஐந்தாவது கணவராக நடித்த ஃபின் விட்ராக் மற்றும் மூன்றாவது கணவராக நடித்த ரூஃபஸ் செவெல் ஆகிய இருவருமே நிஜ வாழ்க்கையில் ஜூடியின் குடும்பத்தாருடன் ஆலோசனைகள் நடத்தித் தங்கள் பாத்திரங்களைச் செதுக்கினர்.
இப்படத்தின் இசைத் தொகுப்பில் சாம் ஸ்மித் மற்றும் ரூஃபஸ் வைன்ரைட் போன்ற புகழ்பெற்ற பாடகர்களுடன் ரெனே ஜெல்வெகர் இணைந்து பாடிய டூயட் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
திரைப்படத்தில் ஜூடி கார்லண்டின் மேடை ஆளுமையை வெளிப்படுத்த ரெனே ஜெல்வெகர் பயன்படுத்திய ஆடைகள் அனைத்தும் அசல் ஜூடி அணிந்திருந்த உடைகளின் துல்லியமான நகல்கள்.
இந்த ஆடை வடிவமைப்புகளுக்காக மட்டும் பல மாதங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டு அறுபதுகளின் லண்டன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பட்டு மற்றும் ஜரிகை துணிகள் பயன்படுத்தப்பட்டன.
ஒளிப்பதிவாளர் ஓலே பிராட் பிர்கேலண்ட் படப்பிடிப்பின் போது ஜூடியின் மனநிலையை வெளிச்சம் மூலம் காட்ட முயன்றார். மேடையில் அவர் இருக்கும்போது மிக பிரகாசமான ஒளியையும் அவர் தனிமையில் இருக்கும்போது நிழல்கள் படிந்த மங்கலான ஒளியையும் பயன்படுத்தி அவரது உள்மன போராட்டத்தை காட்சிகளாக மாற்றினார்.
இப்படத்தின் திரைக்கதை ஆசிரியரான டாம் எட்ஜ் ஜூடி கார்லண்டின் கடைசி கால கடிதங்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களின் நினைவுக் குறிப்புகளை ஆய்வு செய்து உரையாடல்களை அமைத்தார்.
குறிப்பாக லண்டன் ரசிகர்களுடன் அவர் உரையாடும் காட்சிகள் நிஜமாகவே நடந்த சம்பவங்களின் அடிப்படையில் கோர்க்கப்பட்டவை.
நடிகர் மைக்கல் காம்பன் இப்படத்தில் பெர்னார்ட் டெல்ஃபான்ட் என்ற பாத்திரத்தில் தனது முதிர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். இது அவரது திரையுலக வாழ்வின் மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
படப்பிடிப்பு தளத்தில் ரெனே ஜெல்வெகரின் அர்ப்பணிப்பைக் கண்டு வியந்த அவர் ஜூடியின் ஆன்மா ரெனேவிடம் புகுந்துவிட்டதாக ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார்.
படத்தின் இறுதிக் காட்சியில் வரும் ஓவர் தி ரெயின்போ பாடல் படமாக்கப்பட்ட போது அரங்கில் இருந்த துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் உண்மையாகவே கண் கலங்கினர்.
படத்தின் கதை:-
1939 ஆம் ஆண்டில் மெட்ரோ கோல்ட்வின் மேயர் ஸ்டுடியோவின் தலைவரான லூயிஸ் பி மேயர் (ரிச்சர்ட் கார்டெரி) "தி விஸார்ட் ஆஃப் ஓஸ்" (The Wizard of Oz) படப்பிடிப்பு தளத்தில் 16 வயது சிறுமியான ஜூடி கார்லண்டிடம் (டார்சி ஷா) உனக்கு மற்ற பெண்களிடம் இல்லாத ஒரு அபூர்வ வரம் இருக்கிறது என்று கூறுகிறார்.
ஹாலிவுட்டின் குழந்தை நட்சத்திரமான ஷெர்லி டெம்பிளை விடவும் பெரிய வெற்றிகளை ஜூடியால் பெற முடியும் என்று அவர் நம்புகிறார்.
ஆனால் ஜூடியின் வாழ்க்கை ஒரு கனவு போல அமையவில்லை. ஸ்டுடியோவின் கடுமையான கட்டுப்பாடுகளால் அவர் தனது விருப்பத்திற்கு மாறாக ஆம்பெட்டமைன் மாத்திரைகளை உட்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்.
மிக்கி ரூனியுடன் (கஸ் பார்பி) அவர் டேட்டிங் செல்லும் போது கூட இத்தகைய ஒரு சம்பவம் நடக்கிறது. வேலைப்பளு காரணமாக அவர் உறங்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.
ஜூடி தனது சோர்வை வெளிப்படுத்தும் போதெல்லாம் மேயர் அவரை உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அச்சுறுத்தி பணிய வைக்கிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜூடி கார்லண்ட் (ரெனே ஜெல்வெகர்) தனது நாற்பதுகளில் இருக்கிறார். தனது மூன்றாவது கணவர் சிட்னி லஃப்ட் (ரூஃபஸ் செவெல்) மூலம் பிறந்த குழந்தைகளான லோர்னா (பெல்லா ராம்சே) மற்றும் ஜோயி (லெவின் லாயிட்) ஆகியோருடன் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
ஒரு முறை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பழைய கட்டண பாக்கி காரணமாக வெளியேற்றப்படுகிறார்கள்.
வேறு வழியின்றி தன்னைப் பிரிந்து சென்ற சிட்னியிடமே ஜூடி தஞ்சமடைய நேரிடுகிறது.
ஒரு விருந்தில் ஜூடிக்கு இரவு விடுதி உரிமையாளரான மிக்கி டீன்ஸ் (ஃபின் விட்ராக்) அறிமுகமாகிறார்.
1968 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஜூடியின் மேடை நாகரீகம் மற்றும் மனநிலை மாற்றங்களால் அவருக்கான வரவேற்பு குறைகிறது.
இதனால் லண்டனில் நிகழ்ச்சிகள் நடத்த அவருக்கு அழைப்பு வருகிறது. தனது குழந்தைகளை சிட்னியிடம் விட்டுவிட்டு லண்டன் செல்வது அவருக்கு மிகவும் கடினமாக இருந்தாலும் பணத் தேவைகளுக்காக அவர் அந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
லண்டனில் ஜூடியின் போதைப்பொருள் பழக்கம் அவரது மேடை செயல்பாடுகளைப் பாதிக்கிறது.
சிறுவயதில் மேயர் தன்னை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பழைய நினைவுகள் அவருக்கு மேடையிலேயே வந்து செல்கின்றன.
லண்டன் பிரீமியர் காட்சிக்கு அவர் தாமதமாக வந்தாலும் உதவியாளர் ரோசலின் வைல்டர் (ஜெஸ்ஸி பக்லி) மற்றும் பிறரின் உதவியால் ஒருவாறு தயாராகி மேடை ஏறுகிறார்.
அங்கு தி டிராலி சாங் பாடலைப் பாடும்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை வரவேற்கிறார்கள்.
ஒரு இரவு நிகழ்ச்சியை முடித்து வரும்போது தனது ரசிகர்களான இரண்டு ஓரினச்சேர்க்கையாளர்களுடன் ஜூடி பழகுகிறார்.
அவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் உணவருந்தி கெட் ஹேப்பி பாடலைப் பாடுகிறார்.
அப்போது மிக்கி டீன்ஸ் லண்டனுக்கு வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தருகிறார். பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இது ஜூடியின் ஐந்தாவது திருமணமாகும். இருப்பினும் தனது குழந்தைகளின் பிரிவும் போதைப்பொருள் மீதான ஏக்கமும் அவரை வாட்டுகின்றன.
குரல் நிபுணரான ஒரு மருத்துவரிடம் ஜூடி பரிசோதனை செய்கிறார். அப்போது தனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குரல் வளத்தைப் பாதிக்கும் ஒரு அறுவை சிகிச்சை நடந்ததாக அவர் கூறுகிறார்.
உடல் மற்றும் மன ரீதியான சோர்வு காரணமாக அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார்.
இதற்கிடையில் மிக்கி டீன்ஸ் ஏற்பாடு செய்த ஒரு பண ஒப்பந்தம் தோல்வி அடைவதால் ஜூடி தொடர்ந்து மேடையில் பாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
ஒரு நிகழ்ச்சியில் ஜூடி மேடையிலேயே மயங்கி விழுந்ததால் ரசிகர்கள் அவரை ஏளனம் செய்கிறார்கள்.
இதனால் அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.
ஆனால் தனது கடைசி இரவு மேடை நிகழ்ச்சியில் மீண்டும் தோன்றி ஒரு பாடலை பாட அவர் அனுமதி கேட்கிறார்.
ஓவர் தி ரெயின்போ பாடலைப் பாடும்போது அவர் பாதியிலேயே உடைந்து அழுகிறார்.
ஆனால் அவரது ரசிகர்களின் ஊக்கத்தால் அந்தப் பாடலை முழுமையாகப் பாடி முடிக்கிறார்.
அப்போது நீங்கள் என்னை மறக்க மாட்டீர்கள் அல்லவா என்று ரசிகர்களிடம் கேட்கிறார்.
அவர்கள் தரும் வாக்குறுதியை ஏற்று தனது நிகழ்ச்சியை முடிக்கிறார்.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு 1969 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ஜூடி கார்லண்ட் தனது 47 வது வயதில் மரணிக்கையில் படம் நிறைகிறது.
ஜூடி திரைப்படம் ஒரு கலைஞரின் வாழ்விலுள்ள புகழையும் அதற்குப் பின்னால் இருக்கும் இருண்ட பக்கங்களையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்கிறது.
சிறு வயதிலேயே திரையுலகிற்கு வரும் குழந்தைகள் எவ்வாறு அதிகார வர்க்கத்தால் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் அவர்களின் இயல்பான குழந்தைப் பருவம் சிதைக்கப்படுவதையும் இப்படம் வேதனையுடன் காட்டுகிறது.
லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஸ்டுடியோக்கள் ஒரு கலைஞரை மனிதனாகப் பார்க்காமல் வெறும் வருமானம் தரும் இயந்திரமாகப் பார்ப்பதன் விளைவு எவ்வளவு கொடூரமானது என்பதை லூயிஸ் பி மேயரின் கதாபாத்திரம் உணர்த்துகிறது.
சிறு வயதில் ஜூடிக்குக் கொடுக்கப்பட்ட ஊக்க மருந்துகள் மற்றும் முறையற்ற கட்டுப்பாடுகள் அவரது பிற்கால வாழ்வை முழுமையாகச் சிதைத்து விடுகின்றன.
இது ஒரு மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் முறையான தூக்கம் எவ்வளவு அவசியம் என்பதைச் சொல்கிறது.
ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கைதட்டல்களுக்கு நடுவிலும் ஒரு கலைஞன் எதிர்கொள்ளும் தனிமை மற்றும் தனது குழந்தைகளுடன் இருக்க ஏங்கும் ஒரு தாயின் தவிப்பு ஆகியவை படத்தின் மூலம் ஆழமாக வெளிப்படுகின்றன.
உடல்நலக் குறைவு மற்றும் மன அழுத்தம் எனப் பல தடைகள் இருந்தாலும் மேடையேறும்போது ஜூடி காட்டும் அர்ப்பணிப்பு ஒரு கலைஞன் தனது கலையின் மீது வைத்திருக்கும் தீராத காதலைக் காட்டுகிறது.
இறுதியில் ஜூடி ரசிகர்களிடம் கேட்கும் என்னை மறக்க மாட்டீர்கள் அல்லவா என்ற கேள்வி ஒரு கலைஞன் உலகத்திடம் எதிர்பார்ப்பது வெறும் புகழை அல்ல மாறாக உண்மையான அன்பையும் அங்கீகாரத்தையும் மட்டுமே என்பதை உணர்த்துகிறது.
இப்படம் நட்சத்திரங்களின் மின்னும் வாழ்க்கைக்குப் பின்னால் மறைந்திருக்கும் கண்ணீரையும் அதிகார வர்க்கத்தின் சுரண்டலையும் சொல்லும் ஒரு வலியின் சாட்சியாகத் திகழ்கிறது.