தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது.
இத்திரைப்படத்தின் இயக்கம் வெஸ் ஆண்டர்சன்.
இது நகைச்சுவை நாடகக் கலை படைப்பு. ஜுப்ரோவ்கா என்ற கற்பனையான ஐரோப்பிய மலைப்பகுதி விடுதியில் பணிபுரியும் ஒரு மேலாளரும் அவரது உதவியாளரும் ஒரு கொலைப் பழியிலிருந்து தப்பிக்கவும், விலைமதிப்பற்ற ஓவியத்தைக் கைப்பற்றவும் எதிர்கொள்ளும் சாகசங்களை இப்படம் விவரிக்கிறது.
தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் திரைப்படத்தின்அடிநாதம் மறைந்துபோன ஒரு காலத்தின் மீதான ஏக்கம், கால ஓட்டத்தின் அழிவுகளுக்கு மத்தியிலும் மாறாத மனிதநேயம் மற்றும் துரோகங்களை வெல்லும் உன்னதமான நட்பு ஆகியவையாகும்.
ஒருபுறம் பாசிசமும் அதிகார வர்க்கத்தின் பேராசையும் சேர்ந்து மனிதர்களின் வாழ்வையும், அவர்கள் போற்றி வளர்த்த கலைநயம் மிக்க நாகரிகத்தையும் எப்படித் தடம் தெரியாமல் அழிக்கிறது என்பதை இப்படம் மிக ஆழமாகப் பேசுகிறது.
மறுபுறம், அந்த இருண்ட காலத்திலும் கஸ்டவ் மற்றும் ஜீரோ என்ற இரு வேறு துருவங்களுக்கு இடையே மலரும் விசுவாசமும், தூய்மையான அன்பும் மட்டுமே மனித ஆன்மாவை இறுதிவரை உயிர்ப்போடு வைத்திருக்கும் உன்னத சக்தியாகக் காட்டப்படுகிறது.
அழகு, நேர்த்தி மற்றும் ஒழுக்கத்தை உயிர்மூச்சாகக் கொண்ட கடந்த கால சகாப்தம் போரின் கொடூரத்தால் வீழ்ந்தாலும், அந்த நினைவுகளைத் தன் நெஞ்சில் சுமந்து வாழும் மனிதர்களின் வழியே அந்த உன்னத நாகரிகத்தின் ஆன்மா ஒருபோதும் மரிப்பதில்லை என்ற தத்துவமே இத்திரைப்படத்தின் அடிநாதமாகத் திகழ்கிறது.
படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ரால்ப் ஃபைன்ஸ் நடிப்பு உலகளவில் பெரும் பாராட்டைப் பெற்றது.
அவருடன் இணைந்து நடித்த டோனி ரெவலோரி மற்றும் மாபெரும் நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பு கதைக்கு உயிரூட்டியது.
வெஸ் ஆண்டர்சனின் இயக்கம் மிகவும் தனித்துவமானதாகக் கருதப்படுகிறது.
கதையை நகர்த்தும் விதம், கதாபாத்திரங்களை வடிவமைத்த முறை மற்றும் நாடகத் தன்மையுடன் கூடிய இயக்கம் ஆகியவை படத்திற்குப் பெருமை சேர்த்தன.
ராபர்ட் யோமேன் ஒளிப்பதிவு இப்படத்தின் மிகப்பெரிய பலமாகும். குறிப்பிட்ட காலக் கட்டங்களை உணர்த்துவதற்காக மூன்று வெவ்வேறு திரை விகிதங்களைப் பயன்படுத்தியதும், துல்லியமான காட்சிக் கோணங்களும், வண்ணக் கலவைகளும் ஒளிப்பதிவின் உச்சமாகக் கருதப்படுகின்றன.
இப்படம் ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த பின்னணி இசை ஆகிய நான்கு பிரிவுகளில் அகாடமி விருதுகளை வென்றது.
சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான பரிந்துரைகளையும் பெற்றதுடன் கோல்டன் குளோப் மற்றும் பாஃப்டா போன்ற பல சர்வதேச விருதுகளையும் அள்ளிக் குவித்தது.
தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராபர்ட் யோமேன் இந்த படத்திற்காகப் பயன்படுத்திய நுட்பங்களும், படப்பிடிப்புத் தளத்தில் எதிர்கொண்ட சவால்களும் சினிமா வரலாற்றில் மிகவும் சுவாரஸ்யமான பக்கங்களாகும்.
இயக்குனர் வெஸ் ஆண்டர்சனின் விருப்பத்திற்கு ஏற்ப, இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் முற்காலத்திய அகாடமி திரை விகிதத்தில் (1.37:1 Ratio) படமாக்கப்பட்டன.
இந்தத் திரையமைப்பு வழக்கமான படங்களை விட தலைக்கு மேல் அதிக இடைவெளியைத் தருவதாகும்.
இதற்காக ஒளிப்பதிவுக் குழுவினர் 1930களின் பழம்பெரும் ஹாலிவுட் படங்களை மணிக்கணக்கில் ஆய்வு செய்து, தங்களை அந்தத் திரைக் கட்டமைப்புக்குத் தயார்படுத்திக் கொண்டனர்.
1968ஆம் ஆண்டுக்கான காட்சிகளை அகலத்திரையில் காட்ட, நவீன லென்ஸ்கள் தரும் அதீத துல்லியத்தைத் தவிர்த்து, ஒருவித பழமையான தன்மையைத் தரும் டெக்னோவிஷன் குக் அனாமார்பிக் லென்ஸ்களைத் தேடிப் பிடித்துப் பயன்படுத்தினர்.
படப்பிடிப்பு நடந்த ஜெர்மனியின் கோர்லிட்ஸ் நகரம் மிகக் கடுமையான குளிர்காலத்தைக் கொண்டிருந்தது.
பனிப்பொழிவு மற்றும் மிகக் குறைவான பகல் வெளிச்சம் காரணமாகத் திட்டமிட்டபடி கேமராவை இயக்க முடியாமல் ஒளிப்பதிவுக் குழுவினர் திணறினர்.
அந்த மெதுவான ஃபிலிம் சுருள்களுக்கு அதிக வெளிச்சம் தேவைப்பட்டதால், பகல் காட்சிகளை மின்னல் வேகத்தில் எடுத்தனர். இரவு காட்சிகளை அந்திப் பொழுது மங்கும் சில நிமிடங்களிலேயே எடுத்து முடிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.
விடுதியின் பிரம்மாண்ட உள் அரங்கம் ஒரு கைவிடப்பட்ட பழைய துணிக்கடையில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் கூரையில் உள்ள கண்ணாடி வழியே இயற்கை வெளிச்சம் வருவது போலக் காட்டுவதற்காக, ஒளிப்பதிவாளர் ஒரு விசித்திரமான முறையைக் கையாண்டார்.
கூரையின் மேல் பெரிய மஸ்லின் துணியைக் கட்டி, அதற்கு மேல் இருபது பிரம்மாண்ட விளக்குகளைப் பொருத்தி ஒளியைச் சிதறவிட்டார்.
இது உள்ளே இருந்த மஞ்சள் நிற விளக்குகளின் வெளிச்சத்தோடு கலந்து ஒரு மாயாஜாலக் காட்சித் தன்மையை உருவாக்கியது.
ஆனால் வேலைக்காரர்கள் தங்கும் சிறிய அறைகளைப் படமாக்கும்போது, வரலாற்று உண்மைத்தன்மைக்காக சாதாரண ஃப்ளோரசன்ட் விளக்குகள் மற்றும் காகித விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி நிழல்களோடு விளையாடினார்.
படத்தில் வரும் அதிவேகக் கேமரா சுழற்சி காட்சிகளுக்காக பிரத்யேக கருவிகள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக, சிறைச்சாலையிலிருந்து தப்பிக்கும் காட்சியில் ஒரு துளையிலிருந்து விளக்கு கீழே விழும் காட்சியைப் படமாக்க, கேமராவைத் தாங்கும் கோபுர மேடையைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, விளக்கு கீழே போவதோடு சேர்ந்து கேமராவையும் தரை நோக்கி இறக்கி ஒரு புதுமையான கோணத்தை உருவாக்கினர்.
பனிச்சறுக்கு மற்றும் காடுகளின் வழியே துரத்தும் காட்சிகளில் தீவிரமான வேகத்தைக் கொண்டுவர, கேமரா கோணங்களோடு ஸ்டாப்-மோஷன் நுட்பங்களையும், கணினி கிராபிக்ஸ் துகள்களையும் மிக ரகசியமாகக் கலந்து ஒளிப்பதிவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றனர்.
தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் திரைப்படத்தின் பின்னணி இசை உருவாக்கத்தின் பின்னணியில் இயக்குனர் வெஸ் ஆண்டர்சனும் இசையமைப்பாளர் அலெக்சாண்டர் டெஸ்பிளாட்டும் மேற்கொண்ட பயணமும், அவர்கள் கையாண்ட உத்திகளும் பல விசித்திரமான ஆச்சரியங்களைக் கொண்டவை.
இயக்குனர் வெஸ் ஆண்டர்சன் வழக்கமாகத் தனது திரைப்படங்களில் புகழ்பெற்ற தற்காலப் பாப் பாடல்களைப் பயன்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டவர்.
ஆனால், இப்படம் ஒரு ஐரோப்பியப் பின்னணியைக் கொண்டிருந்ததால், அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பாரம்பரிய இசை வடிவம் தேவை என்று முடிவு செய்தார். இதற்காக அவரும் அவரது இசை மேற்பார்வையாளரான ராண்டல் போஸ்டரும் சுமார் ஆறு மாத காலம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இசை நிபுணர்களை நேரில் சந்தித்து, கதையின் ஆன்மாவிற்குப் பொருத்தமான இசையைத் தேடி தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இறுதியில், கிழக்கு ஐரோப்பிய நாட்டுப்புற இசையின் வடிவமே இப்படத்திற்குச் சரியானது என்று முடிவெடுக்கப்பட்டது. ரஷ்ய நாட்டின் பாரம்பரியத் தந்தி வாத்தியமான பாலலைக்கா (Balalaika) என்ற கருவியே இந்த ஒட்டுமொத்தப் படத்தின் இசை மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதற்காக, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த சுமார் ஐம்பது பாலலைக்கா வாத்தியக் கலைஞர்கள் அடங்கிய ஒரு பிரம்மாண்டக் குழுவை மாஸ்கோவிலிருந்து வரவழைத்து ஒத்திகைகள் நடத்தப்பட்டன.
ரஷ்யாவின் புகழ்பெற்ற ஓசிபோவ் மாநில நாட்டுப்புற இசைக்குழுவும் இந்த உருவாக்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
இசையமைப்பாளர் அலெக்சாண்டர் டெஸ்பிளாட், வழக்கமான ஆர்கெஸ்ட்ராக்களில் பயன்படுத்தப்படும் வயலின், செலோ போன்ற மேலைநாட்டு நரம்பு வாத்தியங்களை இப்படத்தின் பதிவிலிருந்து முற்றிலும் தவிர்த்தார்.
அதற்குப் பதிலாக, பாலலைக்கா வாத்தியங்களுடன் சேர்த்து சிம்பலோம் (Cymbalom) எனப்படும் கம்பி இசைக்கருவி, ஆர்கன் எனப்படும் காற்றழுத்த விசைப்பலகை மற்றும் முரட்டுத்தனமான முழக்கங்களை எழுப்பும் கொம்புக் கருவிகளைப் பயன்படுத்தினார்.
படத்திற்கு ஒருவித மர்மமான , விசித்திரமான உணர்வைத் தருவதற்காக, சில காட்சிகளில் வெறும் ட்ரோன்ஸ் பின்னணி ஒலிகளை மட்டுமே கொண்டு இசையமைத்தார்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனித்துவமான மெல்லிசைப் பாதையையும், கருப்பொருளையும் உருவாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு டெஸ்பிளாட்டிற்கு இருந்தது.
படத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு இசைக் கோவைகளை அவர் உருவாக்கினார்.
கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை இசையிலேயே பிரதிபலிக்கும் வகையில், சில காட்சிகளின் வேகத்திற்கு ஏற்ப வாத்தியங்களின் இசை வேகத்தையும் படப்பிடிப்புத் தளத்தின் காட்சிகளுக்கு முன்பே வடிவமைத்து, படத்தொகுப்பிற்குப் பெரும் உதவியாக இருக்கும் வகையில் இசையை அமைத்துக் கொடுத்தார்.
இயக்குனர் வெஸ் ஆண்டர்சனும் அவரது நண்பர் ஹியூகோ கின்னஸும் 2006ஆம் ஆண்டிலேயே இந்தத் திரைப்படத்திற்கான பதினெட்டு பக்கக் கதையை எழுதிவிட்டனர்.
ஆனால், ஒரு தொடர்ச்சியான திரைக்கதையை அமைக்க முடியாமல் திணறியதால் அந்த முயற்சி அப்படியே முடங்கியது. அதன் பிறகு, ஆஸ்திரிய எழுத்தாளர் ஸ்டீபன் ஸ்விக் என்பவரின் நாவல்களையும், கடந்த நூற்றாண்டு வியன்னாவின் வரலாற்றுப் பதிவுகளையும் தற்செயலாகப் படித்த ஆண்டர்சனுக்கு ஒரு புதிய உத்வேகம் பிறந்தது.
அந்தத் தாக்கத்தில், முடங்கிக் கிடந்த கதையை வெறும் ஆறே வாரங்களில் முழுமையான திரைக்கதையாக மாற்றி எழுதினார்.
படத்திற்கான இடங்களைத் தேர்வு செய்ய படக்குழுவினர் ஹங்கேரி, இத்தாலி மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் பழமையான விடுதிகளுக்குச் சென்று அங்கிருந்த மேலாளர்களிடம் பல நாட்கள் நேர்காணல் நடத்தினர்.
உண்மையான மேலாளர்களின் அன்றாட வேலை முறைகள், சவால்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை முழுமையாகக் கேட்டறிந்து, அதன் பின்னரே கஸ்டவ் என்ற முதன்மைக் கதாபாத்திரத்தின் குணங்களைச் செதுக்கினர்.
படப்பிடிப்பு நடந்த பழைய துணிக்கடைத் தளத்தின் மேல் தளங்களிலேயே கேமராக்கள், ஆடைகள் மற்றும் தயாரிப்பு அலுவலகங்கள் அனைத்தும் இயங்கின.
படப்பிடிப்பின் போது அனைத்து நட்சத்திர நடிகர்களும் கோர்லிட்ஸ் நகரில் இருந்த ஒரு சிறிய ஹோட்டலில் ஒன்றாகத் தங்க வைக்கப்பட்டனர்.
அங்கு இயக்குனர் முதல் ஆடை வடிவமைப்பாளர் மற்றும் நடிகர்கள் வரை அனைவரும் ஒரே மேஜையில் அமர்ந்து இரவு உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இந்த குடும்பம் போன்ற சூழல், நடிகர்கள் தங்களின் நடிப்புத் திறனை இன்னும் இயல்பாக வெளிப்படுத்த உதவியது.
கதையின் முக்கிய அங்கமான மென்ட்ல்ஸ் என்ற இனிப்புக் கடையின் இனிப்புப் பண்டத்தை உருவாக்க, கோர்லிட்ஸ் நகரின் நிஜக்கடை தின்பண்ட நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
வெஸ் ஆண்டர்சனின் துல்லியமான காட்சித் தேவைக்காக, அந்த இனிப்புப் பண்டத்தின் வடிவம், வண்ணம் மற்றும் அதன் மேல் வைக்கப்படும் கிரீம் ஆகியவற்றின் வடிவமைப்பு இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, டஜன் கணக்கான வெவ்வேறு இனிப்புகள் செய்து பார்க்கப்பட்டு சோதிக்கப்பட்டன.
படத்தின் மிக முக்கியமான முகம் மார்க் கூலியர் என்ற ஒப்பனைக் கலைஞர் ஆவார். டில்டா ஸ்விண்டனை, தொண்ணூற்று மூன்று வயது முதாட்டியாக மாற்றுவது மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இதற்காக மென்மையான சிலிகான் ரப்பரால் ஆன செயற்கைத் தோல்களை விசித்திரமான பிளாஸ்டிக் அச்சுகளில் தயாரித்து, தினமும் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அவரது முகத்தில் ஒட்டி, மிக நுணுக்கமாக அந்த ஒப்பனையைச் செய்து முடித்தனர்.
படத்தில் வரும் புகழ்பெற்ற ஆப்பிள் ஏந்திய சிறுவன் என்ற ஓவியத்தை உருவாக்குவது ஒரு மாபெரும் சவாலாக இருந்தது. ஆங்கிலேய ஓவியர் மைக்கேல் டெய்லர் என்பவரால் சுமார் நான்கு மாதங்கள் எடுத்துக்கொண்டு இந்த ஓவியம் வரையப்பட்டது.
இந்த ஓவியத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எட் முன்ரோ என்ற இளம் நாடக நடிகர், கோடை விடுமுறையின் போது ஒரு பழைய பள்ளிக்கூடத்தில் வைத்து வாரக்கணக்கில் அமர வைக்கப்பட்டார்.
அவருக்கு வெல்வெட் ஆடைகள், ஃபர் கோட்டுகள் என ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆடைகளை மாற்றி மாற்றி அணிவித்து, புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, இயக்குனரின் ஒப்புதலுக்குப் பின்பே ஓவியம் வரையத் தொடங்கப்பட்டது.
அந்த நடிகர் ஓவியர் முன்பாக அசையாமல் ஒரே பாவனையில் மணிக்கணக்கில் அமர வேண்டியிருந்ததால், ஆடையின் கனத்தோடு பெரும் சிரமத்தை எதிர்கொண்டார்.
அதேபோல், படத்தில் தோன்றும் அனைத்துக் கடிதங்கள், கடவுச்சீட்டுகள், காவல் துறை அறிக்கைகள், செய்தித்தாள்கள் மற்றும் பணத்தாள்கள் போன்ற ஆவணங்களை உருவாக்க அன்னி அட்கின்ஸ் என்ற புதிய கிராபிக்ஸ் வடிவமைப்பாளர் நியமிக்கப்பட்டார்.
கணினி தொழில்நுட்பத்தைத் தவிர்த்து, நிஜமான பழங்காலத் தன்மையைக் கொண்டுவர அவர் ஒரு பழைய தட்டச்சுப் எந்திரத்தை பயன்படுத்தினார். மேலும், அந்த ஆவணங்கள் பல ஆண்டுகள் பழமையானவை போன்ற தோற்றத்தைத் தருவதற்காக, காகிதங்களைத் தேநீரில் நனைத்து, பின்னர் அவற்றை ஹேர் டிரையர் (Hair dryer) கொண்டு உலர வைக்கும் விசித்திரமான முறையைக் கையாண்டார்.
இப்படத்தின் பிரம்மாண்டக் காட்சிகளில் முக்கால்வாசி நிஜமான கட்டிடங்கள் அல்ல, அவை அனைத்தும் பேபெல்ஸ்பெர்க் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான மினியேச்சர் மாதிரிகள் ஆகும். சைமன் வைஸ் என்ற நிபுணரின் தலைமையில், ஹோட்டலின் பதினெட்டில் ஒரு பங்கு அளவிலான சிறிய மாதிரி வடிவம் சிலிகான் மற்றும் பித்தளை வேலைப்பாடுகளுடன் மூன்று மீட்டர் உயரத்தில் செய்யப்பட்டது.
அந்த ஹோட்டல் ஜன்னல்களின் வழியே வெளிச்சம் வருவது போலக் காட்டுவதற்காக, துணிக்கடை அரங்கில் எடுக்கப்பட்ட நிஜமான புகைப்படங்களை மிகச் சிறிய பெட்டிகளுக்குள் ஒட்டி, ஜன்னல்களுக்குப் பின்னால் விளக்குகளைப் பொருத்தினர்.
காடுகளின் வழியே பனிச்சறுக்கு நடக்கும் காட்சிக்காக, மரத்தூள் மற்றும் மெல்லிய சர்க்கரைப் பொடியைப் பயன்படுத்திப் பனிப்பொழிவு உருவாக்கப்பட்டது.
ஆடை வடிவமைப்பாளர் மிலேனா கனோனெரோ, ஹோட்டல் ஊழியர்களின் சீருடைகளுக்காகப் பாரம்பரியமான நீல அல்லது கறுப்பு நிறங்களைத் தவிர்த்து, ஊதா மற்றும் மெரூன் நிற ஆடைகளைப் பயன்படுத்தினார்.
இதற்காகப் போலந்து நாட்டின் ஒரு தையல் பட்டறையில் நூற்றுக்கணக்கான சீருடைகள் பிரத்யேகமாகத் தைக்கப்பட்டன.
வில்லன் ஜோப்ளிங் அணிந்திருக்கும் புகழ்பெற்ற தோல் கோட்டிற்குள் ஆயுதங்களை மறைத்து வைப்பதற்கான ரகசிய அறைகள் தைக்கப்பட்டிருந்தன.
மேலும் அவரது கைகளில் இருக்கும் வெள்ளி மோதிரங்கள், இயக்குனரின் நெருங்கிய நண்பரான வாரிஸ் அலுவாலியா என்ற நகை வடிவமைப்பாளரால் தனித்துவமாகச் செதுக்கப்பட்டன.
நட்சத்திர நடிகர் ஜானி டெப் முதலில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால், கால அட்டவணைப் பற்றாக்குறை மற்றும் சில காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விலக நேர்ந்தது, பின்னர் அந்தப் பாத்திரம் மற்றொரு சிறந்த நடிகருக்குக் கைமாறியது.
இப்படத்தின் விளம்பர உத்திகளுக்காகத் தயாரிப்பு நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட சில விசித்திரமான வழிகளைக் கையாண்டது. படத்தில் வரும் மென்ட்ல்ஸ் கடையின் அடுக்கு இனிப்புப் பண்டத்தை ரசிகர்கள் தங்களின் வீடுகளிலேயே எப்படிச் செய்வது என்பதற்கான பிரத்யேக சமையல் வழிகாட்டி காணொளிகளைத் தயாரித்து வெளியிட்டனர்.
உலகெங்கிலும் உள்ள சமையல் ஆர்வலர்கள் இந்த இனிப்பைச் செய்து பார்த்து அனுப்பிய காணொளிகளை, தொலைக்காட்சி சமையல் அலைவரிசைகளில் விளம்பரமாகப் பயன்படுத்தி ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தினர்.
புகழ்பெற்ற ப்ராடா நிறுவனம் இப்படத்திற்காக வடிவமைத்த பிரத்யேகப் பயணப் பெட்டிகளை, பெர்லின் நகரில் உள்ள தங்களின் முதன்மைக் கடைகளில் காட்சிக்கு வைத்துப் படத்திற்கான விளம்பரத்தை அதிகரித்தது.
திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, இப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்ற பாக்ஸ் சர்ச்லைட் நிறுவனம் ஒரு புதிய உத்தியைக் கையாண்டது.
ஜுப்ரோவ்கா நாட்டின் கலாச்சாரம், அரசியல் வரலாறு மற்றும் அதன் பாரம்பரிய உடைகள் போன்ற விபரங்களைக் கொண்ட போலி இணையதளங்களை இணையத்தில் உருவாக்கி, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அது ஒரு உண்மையான நாடு போன்ற பிரமையைத் திரைப்பட வெளியீட்டிற்கு முன்பே ஏற்படுத்தியது.
வழக்கமாக ஆஸ்கார் விருதுகளுக்கான பந்தயத்தில் கலந்துகொள்ளும் படங்கள் அனைத்தும் ஆண்டின் இறுதிப் பகுதியான அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில்தான் வெளியாவது ஹாலிவுட்டின் நீண்டகால வழக்கமாகும்.
ஆனால், இப்படம் மார்ச் மாத தொடக்கத்திலேயே வெளியானதால், இது ஆஸ்கார் விருதுப் பட்டியலுக்குள் வராது என்றே பல திரை விமர்சகர்கள் கருதினர்.
ஆனால், திரையரங்குகளில் வெளியான பிறகு ஏற்பட்ட மாபெரும் வரவேற்பு மற்றும் குறுவட்டு வடிவங்களில் இப்படம் மாதக்கணக்கில் மக்களிடையே தொடர்ச்சியாகப் பேசப்பட்டதன் காரணமாக, அந்தப் பாரபட்சங்களை உடைத்தெறிந்து ஆஸ்கார் விருதுகளின் இறுதிப் பட்டியல் வரை முன்னேறி நான்கு விருதுகளையும் வென்று சாதனை படைத்தது.
திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட பல அரிய பொருட்கள், ஆடைகள் மற்றும் ஹோட்டலின் பிரம்மாண்டமான மினியேச்சர் மாதிரிகள் ஆகியவற்றை உலக மக்கள் நேரில் காணும் வகையில் பாரிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற திரைப்படக் காப்பகத்திலும் (Cinémathèque française) மற்றும் லண்டனில் உள்ள வடிவமைப்பு அருங்காட்சியகத்திலும் (Design Museum) ஐந்து நூறுக்கும் மேற்பட்ட கலைப் பொருட்களைக் கொண்டு ஒரு மாபெரும் நடமாடும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்படத்தின் ஒட்டுமொத்தக் கலை நேர்த்தியையும், உழைப்பையும் கௌரவிக்கும் விதமாக, அமெரிக்காவின் புகழ்பெற்ற லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் அமைப்பு, உலக சினிமா வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கியமான திரைப்படங்களின் தேசியப் பதிவேட்டில் இத்திரைப்படத்தை இணைத்துக் கொண்டது.
இதன் மூலம், இப்பதிவேட்டில் மிகக் குறுகிய காலத்தில் இணைக்கப்பட்ட சமகாலத்தின் இளம் திரைப்படம் என்ற வரலாற்றுப் பெருமையையும், அசைக்க முடியாத புகழையும் இப்படைப்பு பெற்றது.
படத்தின் கதை:-
முன்னாள் ஜுப்ரோவ்கா நாட்டின் ஒரு பழைய கல்லறையில், ஒரு இளம் பெண் எழுத்தாளர் டாம் வில்கின்சன் என்பவரின் நினைவிடத்திற்கு வருகிறாள். அவள் கைகளில் அந்த எழுத்தாளர் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தைந்தாம் ஆண்டு எழுதிய தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் என்ற புகழ்பெற்ற நாவல் இருக்கிறது.
அந்த நாவலின் கதை, ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தெட்டாம் ஆண்டுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
எழுத்தாளர் (ஜூட் லா) தனக்கு ஏற்பட்ட எழுத்து முடக்கத்திலிருந்து விடுபடுவதற்காக, ஒரு காலத்தில் மிகவும் ஆடம்பரமாக இருந்து, பின்னர் தன் பொலிவை இழந்த அந்த ஹோட்டலுக்குள் செல்கிறார்.
அங்கு அவர் தங்கியிருக்கும் போது, அந்த ஹோட்டலின் உரிமையாளரான ஜீரோ முஸ்தாபா (எஃப் முர்ரே ஆபிரகாம்) என்பவரைச் சந்தித்து, அவர் எவ்வாறு ஒரு ஏழையிலிருந்து மாபெரும் கோடீஸ்வரராக உயர்ந்தார் என்ற கதையை இரவு உணவின் போது கேட்டுத் தெரிந்துகொள்கிறார்.
அதன் பின்னர் கதை 1932 ஆம் ஆண்டுக்கு மாறுகிறது. போர் உலுக்கிய தன் நாட்டை விட்டுத் தப்பி ஓடிவரும் இளம் வயது ஜீரோ (டோனி ரெவலோரி), தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டலில் ஒரு சாதாரண லாபி பாயாக வேலைக்குச் சேருகிறான்.
அங்கு அவனுக்கு அந்த விடுதியின் புகழ்பெற்ற மேலாளரான மொன்சியர் கஸ்டவ் (ரால்ப் ஃபைன்ஸ்) என்பவரின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் கிடைக்கின்றன.
கஸ்டவ் மிகவும் விசித்திரமானவர், அவர் அந்த ஹோட்டலுக்கு வரும் வயதான மற்றும் பெரும் பணக்காரப் பெண்களைத் தன் தனித்துவமான வசீகரத்தால் கவருவதை வழக்கமாகக் கொண்டவர்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவரான மேடம் டி (டில்டா ஸ்விண்டன்) என்ற வயதான பிரபுத்துவப் பெண்ணுடன் கஸ்டவிற்கு கடந்த இருபது ஆண்டுகளாக ஒரு ரகசியக் காதல் உறவு இருந்து வருகிறது.
மேடம் டி தனது கடைசி விடுமுறைப் பயணத்தை முடித்துவிட்டுச் சென்ற சில நாட்களிலேயே, அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக ஜீரோ மூலமாகக் கஸ்டவ் அறிகிறார்.
கஸ்டவ் உடனடியாக ஜீரோவை அழைத்துக் கொண்டு, மேடம் டியின் ஸ்க்லாஸ் லுட்ஸ் என்ற மாளிகைக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
அங்கு மேடம் டியின் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி, அவரது வழக்கறிஞரான டெபுடி வில்மோஸ் கோவாக்ஸ் (ஜெஃப் கோல்ட்பிளம்) வாசிக்கும் உயிலைக் கேட்கக் காத்திருக்கிறார்கள்.
கோவாக்ஸ் அந்த உயிலை வாசிக்கும்போது, மேடம் டி தனது உலகப் புகழ்பெற்ற மறுமலர்ச்சிக் கால ஓவியமான ஆப்பிள் ஏந்திய சிறுவன் என்ற ஓவியத்தைக் கஸ்டவிற்குப் பரிசாக உயில் எழுதியிருப்பதாக அறிவிக்கிறார்.
இதைக் கேட்டு மேடம் டியின் மூத்த மகன் டிமிட்ரி (ஆட்ரியன் பிராடி) கடும் ஆத்திரமடைந்து, கஸ்டவை ஒரு திருடன் என்று சாடி அவனைக் கைது செய்யக் கோருகிறான்.
அங்கிருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த கஸ்டவ் மற்றும் ஜீரோ இருவரும், அந்தப் பூர்வீக ஓவியத்தின் பாதுகாப்பு கருதி, அதை யாருக்கும் தெரியாமல் மாளிகையிலிருந்து திருடி எடுத்துக் கொண்டு தப்புகிறார்கள்.
ஆனால், டிமிட்ரி சும்மா இருக்கவில்லை. மேடம் டியின் நம்பிக்கைக்குரிய வேலைக்காரனான செர்ஜ் எக்ஸ் (மாத்தியூ அமல்ரிக்) என்பவரை மிரட்டி, கஸ்டவ் தான் மேடம் டியைக் கொலை செய்தார் என்று பொய் சாட்சி சொல்ல வைக்கிறான்.
இதன் காரணமாக, செர்ஜ் தலைமறைவாகிவிட, கஸ்டவ் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் காவல் துறையால் கைது செய்யப்பட்டு செக்பாயிண்ட் நைன்டீன் என்ற சிறையில் அடைக்கப்படுகிறான்.
சிறைக்குள் சென்றாலும் கஸ்டவ் தன் வசீகரத்தை இழக்கவில்லை. அங்கு லூத்விக் (ஹார்வி கீட்டல்) தலைமையிலான ஒரு கைதிக் கும்பலுடன் கஸ்டவ் நட்பு கொள்கிறான்.
அவர்கள் சிறையிலிருந்து தப்பிக்க ஒரு ரகசியத் திட்டம் தீட்டுகின்றனர்.
இந்தத் திட்டத்திற்கு உதவுவதற்காக, ஜீரோ தன் காதலியும் மென்ட்ல்ஸ் பேக்கரியின் இளம் பணியாளருமான அகதா (சவோர்ஸ் ரோனன்) என்பவரின் உதவியை நாடுகிறான்.
அகதா தான் தயாரிக்கும் அடுக்கு இனிப்புப் பண்டங்களுக்குள் சிறையில் சுரங்கம் தோண்டுவதற்கான சிறிய இரும்புக் கருவிகளை மறைத்து வைத்து ஜீரோவிடம் கொடுக்க, அவன் அதைச் சிறைக்குள் கடத்துகிறான்.
கஸ்டவும் மற்ற கைதிகளும் அந்தத் துளையிடும் கருவிகளைக் கொண்டு சிறையின் தரையைத் தோண்டி, ஒரு இரவு நேரத்தில் வெற்றிகரமாகத் தப்பித்து நாலாபுறமும் சிதறி ஓடுகிறார்கள்.
அதே நேரத்தில், டிமிட்ரி தனது கொடூரமான கூலிப்படை கொலையாளியான ஜே ஜி ஜோப்ளிங் (வில்லெம் டஃபோ) என்பவனை ஏவி, உண்மைக்குத் தடையாக இருக்கும் வழக்கறிஞர் கோவாக்ஸையும், செர்ஜ் இருக்கும் இடத்தை தெரிவிக்காத அவனது சகோதரியையும் கொடூரமாகக் கொலை செய்கிறான்.
சிறையிலிருந்து தப்பிய கஸ்டவும் ஜீரோவும் மீண்டும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.
தங்களின் குற்றமற்ற தன்மையை நிரூபிக்க, உலகெங்கிலும் உள்ள ஹோட்டல் மேலாளர்களின் ரகசியக் கூட்டமைப்பான சொசைட்டி ஆஃப் தி கிராஸ்டு கீஸ் என்ற அமைப்பின் உதவியை நாடுகிறார்கள்.
அந்த அமைப்பில் இருக்கும் எம் ஐவன் (பில் முர்ரே) போன்ற பிற மேலாளர்களின் சங்கிலித்தொடர் உதவிகள் மூலம், தலைமறைவாக இருக்கும் வேலைக்காரன் செர்ஜ் ஒரு மலை உச்சியில் உள்ள மடாலயத்தில் ஒளிந்திருப்பது தெரியவருகிறது.
கஸ்டவும் ஜீரோவும் அங்கு சென்று செர்ஜை நேரில் சந்திக்கிறார்கள்.
அப்போது செர்ஜ் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையை உடைக்கிறான். டிமிட்ரி தான் சொத்துக்காகத் தன் தாய் மேடம் டியைக் கொலை செய்தான் என்றும், அந்த உண்மைகளை மறைக்கவே தன்னை மிரட்டிக் கஸ்டவ் மீது பழி போட வைத்தான் என்றும் கூறுகிறான்.
மேலும், மேடம் டி தன் மகனின் கொடூர புத்தியை அறிந்து ஏற்கனவே ஒரு இரண்டாவது ரகசிய உயிலை எழுதியிருந்ததாகவும், தான் கொலை செய்யப்பட்டால் மட்டுமே அந்த உயில் செல்லுபடியாகும் என்றும், அது இப்போது ஒரு பாதுகாப்பான இடத்தில் மறைக்கப்பட்டுள்ளதாகவும் செர்ஜ் கூறுகிறான்.
ஆனால், செர்ஜ் முழு விபரத்தையும் சொல்லி முடிப்பதற்குள், அங்கு பின்தொடர்ந்து வரும் கொலையாளி ஜோப்ளிங், செர்ஜைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டுத் தப்புகிறான்.
இதனால் தங்களுக்கு இருந்த ஒரே சாட்சியையும் கஸ்டவ் இழக்கிறார்.
அங்கிருந்து தப்பியோடும் ஜோப்ளிங்கை நோக்கிக் கஸ்டவும் ஜீரோவும் பனிச்சறுக்கு மூலம் ஒரு பயங்கரமான துரத்தல் வேட்டையை நடத்துகிறார்கள்.
அந்தப் போராட்டத்தின் முடிவில், ஒருமலைசிகரத்தின் விளிம்பில் கஸ்டவ் தொங்கிக்கொண்டிருக்க, ஜோப்ளிங் அவரைக் கீழே தள்ள முயல்கிறான்.
அப்போது துணிச்சலாகச் செயல்படும் ஜீரோ, ஜோப்ளிங்கைப் பின்னால் இருந்து பலம் கொடுத்து மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொன்று கஸ்டவைக் காப்பாற்றுகிறான்.
ஆனால், அதற்குள் அங்கு வந்து சேரும் ஜுப்ரோவ்கா நாட்டுப் போலீஸ் அதிகாரி ஆல்பர்ட் ஹென்கெல்ஸ் (எட்வர்ட் நார்டன்) தலைமையிலான படைப்பிரிவினரிடம் இருந்து தப்பிக்க, கஸ்டவும் ஜீரோவும் தொடர்ந்து தலைமறைவாக ஓடுகிறார்கள்.
இதற்கிடையில் நாட்டில் போர் மேகங்கள் சூழ்ந்து, குகைகள் மற்றும் எல்லைகள் ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன.
கஸ்டவ், ஜீரோ மற்றும் அகதா மூவரும் தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டலுக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால், அந்த ஆடம்பர விடுதி இப்போது ஒரு ராணுவத் தலைமையகமாக மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள்.
அந்த விடுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் ஏந்திய சிறுவன் ஓவியத்தை எடுத்துக்கொண்டு விற்றுவிடலாம் என்று அகதா ரகசியமாக உள்ளே நுழைகிறாள்.
அவள் ஓவியத்தை எடுத்துக் கொண்டு வெளியேற முயம்போது, அங்கு வரும் டிமிட்ரி அவளைப் பார்த்துவிடுகிறான்.
அவளது கையில் இருக்கும் ஓவியப் பெட்டியைக் கண்டு சந்தேகமடைந்து அவளைத் துரத்துகிறான். அகதாவைக் காப்பாற்ற கஸ்டவும் ஜீரோவும் அங்கு ஓடி வருகிறார்கள்.
ஆத்திரமடைந்த டிமிட்ரி துப்பாக்கியால் சுட, அது அங்குள்ள ஜுப்ரோவ்கா ராணுவ வீரர்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு பெரிய துப்பாக்கிச் சண்டையாக மாறுகிறது.
அந்த குழப்பத்தில் தப்பிக்க முயலும் அகதாவும் ஜீரோவும் ஹோட்டல் பால்கனியிலிருந்து தவறி கீழே விழுகிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக, கீழே நின்றிருந்த மென்ட்ல்ஸ் இனிப்பு வண்டியின் மேல் விழுந்து இருவரும் உயிர் தப்புகிறார்கள்.
அதன் பின்னர், அந்த ஓவியப் பெட்டியின் பின்புற மரச்சட்டத்திற்குள் மேடம் டி மறைத்து வைத்திருந்த அந்த இரண்டாவது ரகசிய உயில் பத்திரமாகத் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
அந்த உயிலில், தான் கொலை செய்யப்பட்டால் தனது ஒட்டுமொத்தச் சொத்துக்களும், இந்த தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டலும் மொன்சியர் கஸ்டவிற்கே சேர வேண்டும் என்று மேடம் டி எழுதியிருப்பது வெளிச்சத்திற்கு வருகிறது.
நீதிமன்றத்தில் கஸ்டவ் முழுமையாக நிரபராதி என்று அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறார்.
குற்றவாளியான டிமிட்ரி தண்டனையிலிருந்து தப்பிக்க நாட்டை விட்டே ஓடிவிடுகிறான்.
சொத்துக்கள் கைக்கு வந்ததும் கஸ்டவ் அந்த ஹோட்டலின் முழு உரிமையாளராக மாறுகிறார்.
ஜீரோவை அந்த விடுதியின் முதன்மை மேலாளராக உயர்த்தி அழகு பார்க்கிறார். ஜீரோ மற்றும் அகதா இருவருக்கும் கஸ்டவ் முன்னின்று மிக விமரிசையாகத் திருமணம் செய்து வைக்கிறார்.
சில காலத்திற்குப் பிறகு, அவர்கள் மூவரும் ஒரு தொடர்வண்டியில் பயணம் செய்யும்போது, எல்லையில் இருக்கும் கொடூரமான ராணுவ வீரர்கள் ஜீரோவின் அகதி ஆவணங்களைச் சோதித்து அவனைக் கைது செய்ய முயல்கிறார்கள்.
தன் உயிரினும் மேலான நண்பன் ஜீரோவைக் காப்பாற்றக் கஸ்டவ் அந்தத் தடியடி வீரர்களுடன் துணிச்சலாகப் போரிடுகிறார். ஆனால், அந்தப் போராட்டத்தில் கஸ்டவ் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
கஸ்டவின் மரணத்திற்குப் பிறகு, அவரது ஒட்டுமொத்தச் சொத்துக்களும் ஜீரோவிற்கு வந்து சேருகின்றன.
துரதிர்ஷ்டவசமாக, சில வருடங்களிலேயே அகதாவும் அவளது குழந்தையும் பிரஷ்யன் காய்ச்சல் என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறார்கள்.
தன் வாழ்நாளின் இறுதிவரை, தன் காதலி அகதா மற்றும் தனக்கு வாழ்வளித்த நண்பன் கஸ்டவ் ஆகிய இருவரின் நினைவாக மட்டுமே, அந்தப் பொலிவிழந்த மாபெரும் ஹோட்டலைத் தன் கைவசம் வைத்துப் பராமரித்து வருகிறார் வயதான ஜீரோ முஸ்தாபா.
இந்த சோகமான வரலாற்றுப் பின்னணியைக் கேட்டு முடிக்கும் அந்த எழுத்தாளர், தன் நாவலை நிறைவு செய்கிறார்.
இறுதியில், அந்த இளம் பெண் அந்த நாவலைப் படித்து முடித்துக் கல்லறையில் வைத்து அஞ்சலி செலுத்துவதோடு இக்கதை முற்றுப்பெறுகிறது.
தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் திரைப்படம் மனித வாழ்வின் நிலையாமையையும், பாசிசத்தின் கொடூரத்தையும், அதற்கு எதிரான மனிதநேயத்தின் வலிமையையும் மிக ஆழமாகப் பேசுகிறது.
அதிகார வெறியும், போரும், பாசிசமும் எவ்வளவு பிரம்மாண்டமான கலைநயம் மிக்க ஒரு சாம்ராஜ்யத்தையும், மனிதர்களின் அழகிய வாழ்வையும் நொடிப் பொழுதில் சிதைத்துவிடும் என்ற கசப்பான உண்மையை இப்படம் நமக்கு உணர்த்துகிறது.
அதே நேரத்தில், கடுமையான அரசியல் சூழல்களிலும், ஆபத்துகளிலும் மனிதர்களுக்குள் இருக்கும் மாறாத விசுவாசம், உண்மையான நட்பு மற்றும் தூய்மையான அன்பு ஆகியவை மட்டுமே இறுதிவரை ஆன்மாவை வாழ வைக்கும் மாபெரும் சக்திகள் என்பதை கஸ்டவ் மற்றும் ஜீரோவின் பிணைப்பு நமக்குக் காட்டுகிறது.
கடந்த காலத்தின் பொன்னான நினைவுகளையும், நாகரிகத்தையும் மனிதன் எவ்வளவுதான் ஆசையோடு பாதுகாக்க நினைத்தாலும், கால ஓட்டத்தின் மாற்றங்களையும் அதன் அழிவையும் யாராலும் தடுக்க முடியாது என்ற தத்துவார்த்தமான செய்தியையும் இப்படம் நறுக்கென விவரிக்கிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு