அன்னா கரீனினா Anna Karenina 2012



'அன்னா கரீனினா' Anna Karenina ஜோ ரைட் இயக்கத்தில், டாம் ஸ்டாப்பர்டின் திரைக்கதை அமைப்பில், லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற நாவலைத் தழுவி 2012-ஆம் ஆண்டு வெளியான வரலாற்று நாடகத் திரைப்படம் .

லியோ டால்ஸ்டாயின் 'அன்னா கரீனினா' உலக இலக்கியத்திலும், குறிப்பாக ரஷ்ய இலக்கிய வரலாற்றிலும் மனித மனதின் உளவியல் ஆழத்தை விவரிக்கும் ஒரு பொக்கிஷமாக திகழ்கிறது.

ரஷ்ய இலக்கியத்தில் இதன் முக்கியத்துவம் என்னவெனில், அக்காலத்திய ரஷ்ய உயர்சாதி சமூகத்தின் போலித்தனமான ஒழுக்க நெறிமுறைகளையும், தனிமனித சுதந்திரத்திற்கும் சமூக விதிகளுக்கும் இடையிலான மோதலை இது மிகத் துணிச்சலாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

டால்ஸ்டாய் இதில் வெறும் காதல் கதையை மட்டும் பேசாமல், மனிதர்களின் அந்தரங்க ஆசைகள், குற்ற உணர்வுகள் மற்றும் ஆத்மார்த்தமான ஆன்மீகத் தேடல்களை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து காட்டியுள்ளார்.

இதன் தனித்துவம், நாவலின் தொடக்கத்தில் இடம்பெறும் "அனைத்து இன்பமான குடும்பங்களும் ஒன்றுபோல இருக்கின்றன, ஆனால் ஒவ்வொரு துயரமான குடும்பமும் அதன் சொந்த வழியில் துயருறுகின்றன" என்ற புகழ்பெற்ற வரியில் அடங்கியுள்ளது.

அன்னா கரீனினாவின் சோகமான கதைக்களத்துடன், லெவினின் கிராமப்புற எளிய வாழ்க்கை மற்றும் ஆன்மீகத் தேடல் ஆகியவற்றை இணைத்து, 19-ஆம் நூற்றாண்டு ரஷ்ய மக்களின் ஒட்டுமொத்த வாழ்வியலையும் உலக இலக்கியத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தில் தந்துள்ளது இதன் தனித்துவமாகும்.

ரஷ்யப் பேரரசு காலத்தில் உயர்சாதி சமூகத்தின் போலித்தனங்களுக்கு எதிராகத் துணிந்து நின்று தனது காதலனுக்காகச் சமூகத்தின் விதிகளுக்குச் சவால் விடும் அன்னா கரீனினா என்ற பெண்ணின் சோகமான வாழ்க்கைப் பயணத்தை இப்படம் பேசுகிறது.

கீரா நைட்லி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஜூட் லா மற்றும் ஆரோன் டெய்லர்-ஜான்சன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பெரும்பாலான காட்சிகள் ஒரு நாடக மேடையின் பின்னணியில் பிரம்மாண்டமாகவும் புதுமையான முறையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இத்திரைப்படத்தின் தனிச்சிறப்பு.
இதன் கலைநயத்திற்காகவும் வித்தியாசமான இயக்கத்திற்காகவும் பரவலான கவனத்தைப் பெற்றது.

இத்திரைப்படம், ரஷ்ய உயர்சாதி சமூகத்தின் போலித்தனமான ஒழுக்க நெறிமுறைகளையும், அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுகிற உணர்ச்சிகரமான காதலையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் அந்தரங்க உணர்வுகளும் சமூகத்தின் மதிப்பீடுகளும் மோதிக்கொள்ளும் புள்ளியை இப்படம் துல்லியமாக ஆராய்கிறது.

அன்னாவும் வுரொவ்ஸ்கியும் காட்டும் தீவிரமான காதலும் மோகமும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல் வாழத் தூண்டுகிறது.

ஆனால், அந்தத் தீராத காதல் இறுதியில் அன்னாவின் அகவாழ்வைச் சிதைத்து, சமூகத்தால் முற்றிலும் ஒதுக்கப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படும் துயரத்தில் போய் முடிகிறது.
இப்படம் மனித வாழ்க்கை ஒரு நாடக மேடை என்ற தத்துவத்தை பேசுகிறது.

பெரும்பாலான காட்சிகள் ஒரு பழைய நாடக அரங்கின் பின்னணியிலேயே நகர்கிறது. இது உயர்சாதி சமூகத்தின் உறவுகளும் வாழ்வியலும் எவ்வளவு செயற்கையானவை, மாயையானவை என்பதை பார்வையாளர்களுக்கு ஆழமாக உணர்த்துகிறது.

இத்திரைப்படத்தை லியோ டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரபல நாடக ஆசிரியரான டாம் ஸ்டாப்பர்ட் மிகச்சிறப்பான முறையில் திரைக்கதை அமைத்துள்ளார்.

லியோ டால்ஸ்டாயின் மூல நாவலில் உள்ள ரஷ்யக் கிராமப்புறங்களின் விரிவான விவரிப்புகள், பரந்த நிலப்பரப்புகள் மற்றும் பல பக்கங்களைக் கொண்ட நீண்ட தத்துவார்த்த விவாதங்கள் ஆகியவை திரைப்படத்தில் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ளன. நாவலின் பலகட்ட கதையோட்டத்தை எளிமைப்படுத்தி, காட்சிகளை ஒரே நாடக அரங்கிற்குள் சுருக்கி, திரைக்கதை ஆசிரியர் டாம் ஸ்டாப்பர்ட் நாடகத்தன்மை நிறைந்த ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்துள்ளார். நாவலில் லெவினின் ஆன்மீக மற்றும் விவசாய முயற்சிகள் விரிவாகப் பேசப்பட்டிருக்கும், ஆனால் திரைப்படத்தில் அது கதைக்குத் தேவையான அளவுக்கு மட்டும் சுருக்கப்பட்டுள்ளது. மேலும், நாவலில் வரும் சில துணை கதாபாத்திரங்களின் பின்னணிகள் மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்கள் குறைக்கப்பட்டு, அன்னா மற்றும் வுரோன்ஸ்கியின் இடையேயான காதலும், சமூகத்தின் போலித்தனமும் மட்டுமே திரைக்கதையின் முக்கிய மையமாக மாற்றப்பட்டுள்ளது.

படத்தின் இயக்கம் ஜோ ரைட் ; வழக்கமான வரலாற்றுப் படங்களைப் போல இல்லாமல், பெரும்பான்மைக் காட்சிகளை ஒரு பழைய நாடக அரங்கின் மேடைக் கட்டமைப்பிற்குள் கொண்டுவந்து, நாடகத்தனமும் சினிமாவும் கலந்த ஒரு வித்தியாசமான மற்றும் புதுமையான கதை ஆக்க முறையை அவர் கையாண்டுள்ளார்.

நடிகர்களில், அன்னா கரீனினா கதாபாத்திரத்தில் கீரா நைட்லியும், அவரது கணவர் கரீனினாவாக ஜூட் லாவும், காதலன் வுரோன்ஸ்கியாக ஆரோன் டெய்லர்-ஜான்சனும் தங்களின் உணர்ச்சிகரமான மற்றும் யதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர்.

இவர்களுடன் ஸ்டீவாவாக மேத்யூ மெக்பாடியன், டொல்லியாக கெல்லி மேக்டொனால்டு, கிட்டியாக அவிவிகர், லெவினாக டோம்னல் கிளீசன் மற்றும் ஒலியா வில்லியம்ஸ், மிச்சேல் டாக்டரி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவிற்காக சீமஸ் மெம்கார்வி நாடக மேடை விளக்குகளையும் கேமரா கோணங்களையும் அற்புதமாகக் கையாண்டு காட்சிகளுக்குத் தத்ரூபமான உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் டாரியோ மரியனெல்லி ரஷ்ய பாரம்பரிய இசையின் சாயலோடு அமைத்த பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் சோகத்தையும் உணர்ச்சிகளையும் பார்வையாளர்களிடம் ஆழமாகக் கடத்தியுள்ளன.

இப்படத்தின் உடை அலங்காரத்திற்காகப் பணிபுரிந்த ஜாக்குலின் துர்ரன் தனது அசாத்திய திறமைக்காகத் தகுந்த பாராட்டைப் பெற்று, சிறந்த உடை அலங்காரத்திற்கான ஆஸ்கர் மற்றும் பாஃப்டா ஆகிய இரண்டு புகழ்பெற்ற விருதுகளையும் வென்றுள்ளார்.

இப்படத்தின் கலை இயக்கத்திற்காக சாரா கிரீன்வுட் மற்றும் கேட்டி ஸ்பென்சர் ஆகியோர் பாஃப்டா மற்றும் கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகளை வென்றதுடன், ஒட்டுமொத்தமாக இப்படம் உலக அளவில் பல்வேறு முக்கிய விருதுகளையும் பல உயரிய பரிந்துரைகளையும் குவித்துள்ளது.

படத்தின் கதை:-

ரஷ்யப் பேரரசில் 1874-ஆம் ஆண்டு காலத்தில் இக்கதை தொடங்குகிறது.

இளவரசி டார்யா, செல்லமாக "டொல்லி" (கெல்லி மேக்டொனால்டு) என்று அழைக்கப்படுபவர், தன் கணவரான இளவரசர் ஸ்டீபன் "ஸ்டீவா" ஒப்லோன்ஸ்கி (மேத்யூ மெக்பாடியன்) தன்னை ஏமாற்றி பாலியல் தொழிலாளியிடம் சென்றதை அறிந்ததால் அவரைப் பிரிந்து தன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

ஸ்டீவாவின் தங்கை அன்னா கரீனினா (கீரா நைட்லி). அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தன் வயதான கணவரும் மூத்த அரசதந்திரியுமான அலெக்ஸி கரீனினா (ஜூட் லா) மற்றும் தன் மகன் செரியோஷாவுடன் வாழ்ந்து வருகிறார்.

தன் அண்ணன் ஸ்டீவாவின் குடும்பத்தைக் காப்பாற்றவும், டொல்லி தன் கணவனை மன்னிக்க வைக்கவும் அன்னா மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொள்கிறாள்.

அதே நேரத்தில், ஸ்டீவா தன் பழைய நண்பரான கொன்ஸ்டன்டின் "கோஸ்டியா" லெவினைச் (டோம்னல் கிளீசன்) சந்திக்கிறார்.

லெவின் ஒரு நிலப்பிரபுத்துவக் குடிப்பிறந்தவர், ஆனால் மாஸ்கோ நகரத்து உயர்சாதியினரைக் காட்டிலும் கிராமப்புற வாழ்க்கையையே அதிகம் நேசிப்பதால் அவர்கள் இவரைப் புறக்கணிக்கிறார்கள்.

லெவின், ஸ்டீவாவின் மனைவியின் தங்கை இளவரசி கிட்டி ஷெர்பாட்ஸ்கயா மீது தான் காதல் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.

ஸ்டீவா அவருக்குக் காதல் திருமணம் செய்யப் பரிந்துரைக்கிறார்.

ஆனால் கிட்டியோ, பணக்கார குதிரைப்படை அதிகாரியான அலெக்ஸி வுரோன்ஸ்கியைத் திருமணம் செய்ய விரும்புவதால் லெவினின் காதலை மறுத்துவிடுகிறாள்.

இதற்கிடையில், லெவின் தன் மூத்த சகோதரரான நிக்கோலாயைச் சந்திக்கிறார்.

நிக்கோலாய் தன் பரம்பரைச் சொத்துக்களைத் துறந்துவிட்டு, மாஷா என்ற முன்னாள் பாலியல் தொழிலாளியுடன் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருகிறார்.

நிக்கோலாய் தன் தம்பி லெவினிடம் ஒரு கிராமத்து விவசாயிப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.

மாஸ்கோ செல்லும் ரயிலில், அன்னா தற்செயலாக வுரோன்ஸ்கியின் தாயான கவுண்ட்டெஸ் வுரோன்ஸ்காயாவைச் (ஒலிவியா வில்லியம்ஸ்) சந்திக்கிறார்.

அந்தத் தாயோ தன் சொந்த பாலியல் தொழில் வாழ்க்கையாலும் முறையற்ற உறவுகளாலும் சமூகத்தால் தனிமைப்படுத்தப்பட்டவர்.

அந்தத் ரயிலில் வுரோன்ஸ்கியைச் சந்திக்கும் அன்னா, அவரிடம் உடனடியாக ஈர்க்கப்படுகிறாள்.

மாஸ்கோ வந்தடைந்ததும், அன்னா டொல்லியைச் சந்தித்து தன் அண்ணன் ஸ்டீவாவை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்மதிக்க வைக்கிறாள்.

பின்னர் ஒரு பிரம்மாண்டமான நடன விருந்து விழாவில், கிட்டி வுரோன்ஸ்கியுடன் ஒரே ஒருமுறை மட்டுமே நடனமாடுகிறாள்.

ஆனால் வுரோன்ஸ்கியோ அந்த இரவு முழுவதும் கிட்டியைக் கண்டுகொள்ளாமல் அன்னாவின் பின்னாடியே செல்கிறார்.

இதனால் கிட்டி மனம் உடைந்துபோகிறாள். வுரோன்ஸ்கி அன்னாவை எங்கு சென்றாலும் தான்பின்தொடர்வேன் என்று கூறுகிறார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்குத் திரும்பியதும், அன்னாவும் வுரோன்ஸ்கியும் மிக விரைவில் ஊர் முழுவதும் கிசுகிசுக்கப்படும் அளவுக்குத் தங்கள் காதலை வெளிப்படுத்தத் தொடங்குகிறார்கள்.

வுரோன்ஸ்கிக்கு தாஷ்கண்டில் ஒரு பதவி உயர்வு காத்திருந்தாலும், அவர் அதை மறுத்துவிடுகிறார்.

அன்னாவும் அவர் தன்னை விட்டுப் பிரிந்து செல்வதை விரும்பவில்லை. விரைவில் அவர்களும் இரவில் ரகசியமாகச் சந்தித்து உடலுறவில் ஈடுபடுகிறார்கள். ஸ்டீவா லெவினைச் சந்தித்து, கிட்டியும் வுரோன்ஸ்கியும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்ற உண்மையைச் சொல்கிறார்.

இதனால் மனம் நொந்த லெவின் தன் கிராமத்திற்குத் திரும்பி, விவசாய வாழ்க்கையில் முழுமையாக மூழ்கி, ஒரு கிராமத்து ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமா என்று யோசிக்கிறார்.

அன்னா தன் மகன் செரியோஷாவுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு வெளியே உள்ள கரீனினா தோட்டத்திற்குச் செல்கிறாள்.

அங்கு அன்னா வுரோன்ஸ்கியைச் சந்தித்து தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறுகிறாள். வுரோன்ஸ்கியோ அவள் தன் கணவர் கரீனினாவை விட்டுவிட்டுத் தன்னுடன் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறான்.

இதற்கிடையில், அன்னா தன் கணவர் கரீனினாவை குதிரைப் பந்தயத்திற்கு வருமாறு அழைக்கிறாள்.

ஆனால் அங்கு வுரோன்ஸ்கியின் குதிரை பந்தயத்தின் போது கீழே விழும்போது அவள் காட்டிய பதற்றமும் வெளிப்பட்ட உணர்வுகளும் அவளது கணவருக்கு தெளிவாகப் புரிந்துவிடுகிறது.

பந்தயத்திற்குப் பின், அன்னா தன் கணவரிடம் தான் வுரோன்ஸ்கியின் காதலி என்பதைத் தைரியமாக ஒப்புக்கொள்கிறாள்.

அதற்கு கரீனினோ அவள் வுரோன்ஸ்கியுடன் உள்ள தொடர்பை உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறான்.

சில மாதங்களுக்குப் பிறகு, அன்னா வுரோன்ஸ்கியைச் சந்திக்கிறாள்.

வுரோன்ஸ்கியோ தன் ராணுவப் பணிகள் காரணமாகவே தன்னைச் சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறுகிறான்.

இதற்கிடையில், வுரோன்ஸ்கி அன்னாவுடைய வீட்டிற்கு ரகசியமாக வந்து சென்றதைக் கண்டுபிடித்த கரீனினோ, அவனிடமிருந்த கடிதங்களை விவாகரத்துக்கான ஆதாரமாகத் திருடிச் செல்கிறான்.

கரீனினோ ஸ்டீவா மற்றும் டொல்லியைச் சந்தித்து தான் அன்னாவை விவாகரத்து செய்யப் போவதாகத் தெரிவிக்கிறான்.

அவர்களும் அவளை மன்னிக்கச் சொல்லி கெஞ்சுகிறார்கள், ஆனால் அவன் பிடிவாதமாக மறுத்துவிடுகிறான்.

அதே நேரத்தில், காதலில் பிரிந்திருந்த லெவினும் கிட்டியும் மீண்டும் இணைந்து தங்கள் காதலை வெளிப்படுத்தித் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

அன்னாவுக்குக் குழந்தை பிறக்கும் நேரம் நெருங்குகிறது பிரசவ வலி முன்கூட்டியே ஏற்படுகிறது, அவள் வுரோன்ஸ்கியை உடனடியாக வரவழைக்கிறாள்.

ஆனால் அதே நேரத்தில் உடல்நலக்குறைவால் தவிக்கும் போது, வுரோன்ஸ்கியால் தன் கணவர் கரீனினாவைப் போன்ற ஒரு நல்ல மனிதராக எப்போதுமே இருக்க முடியாது என்று மனம் தெளிந்து புலம்புகிறாள்.

அன்னா இறந்துவிடுவாள் என்று கருதி அங்கு வரும் கரீனினோ, அவளைத் தன் மனதார மன்னிக்கிறான்.

அதிசயமாக அன்னா பிரசவத்திலிருந்து பிழைத்துக்கொள்கிறாள், மேலும் தன் கணவருடனேயே வாழ முடிவு செய்கிறாள்.

ஆனால், வுரோன்ஸ்கி அன்னாவைத் தன் மனதை மாற்றச் சொல்லி வற்புறுத்துகிறான்.

இறுதியில் அன்னாவும் தன் கணவனையும் மகனையும் விட்டுவிட்டு, தன் பச்சிளம் பெண் குழந்தை ஆனியாவுடன் வுரோன்ஸ்கியுடன் இத்தாலிக்குத் தப்பிச் செல்கிறாள்.

லெவினும் கிட்டியும் லெவினின் சொந்த கிராமத்திற்குத் திரும்பிச் செல்கிறார்கள்.

அங்கு லெவினின் அண்ணன் நிக்கோலாய் நோயுற்று, மாஷாவுடன் ஒரு சிறிய தானிய கிடங்கில் பரிதாபகரமான நிலையில் வாழ்ந்து வருகிறார்.

கிட்டி அங்கு வருவதைத் தவிர்க்க லெவின் மாஷாவை அனுப்பிவிடுவதாகக் கூறுகிறார். ஆனால் கிட்டியோ சமூகத்தின் எந்தவொரு கெட்ட பெயருக்கும் அஞ்சாமல், நிக்கோலாயையும் மாஷாவையும் தாங்களே அன்போடு கவனித்துக் கொள்கிறாள்.

இதைக் கண்டு லெவினுக்கு கிட்டியின் மீதுள்ள காதல் பன்மடங்கு அதிகரிக்கிறது.
இதற்கிடையில் இத்தாலியிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்குத் திரும்பும் அன்னா, தன் மகன் செரியோஷாவின் பிறந்தநாளுக்கு அவனுக்குப் பரிசுகள் கொடுக்கச் செல்கிறாள்.

ஆனால் கணவர் கரீனினோ அவளை வீட்டிற்குள் அனுமதிக்காமல் அவமானப்படுத்தித் துரத்திவிடுகிறான்.

இதனால் மனவேதனை அடைவடையும் அன்னா, வுரோன்ஸ்கி தன்னைப் பிரிந்து வேறு யாருடனோ தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கத் தொடங்குகிறாள்.

சமூகத்தில் தன் தோழியான இளவரசி மியாக்யாவுடன் (மிச்சேல் டாக்டரி) ஒப்ரா நாடகத்திற்குச் செல்கிறாள்.

ஆனால் அங்குள்ள உயர்சாதி மக்கள் அனைவரும் அவளை ஒரு ஒதுக்கப்பட்டவள் போலப் புறக்கணித்து அவமானப்படுத்துகிறார்கள்.

தன் கௌரவத்தைக் காப்பாற்ற அன்னா அந்த இடத்திலும் அமைதியாகப் புன்னகைத்தாலும், தன் ஹோட்டல் அறைக்குத் திரும்பியதும் முற்றிலும் உடைந்து அழுகிறாள். தூங்குவதற்காக மார்பின் போதை மருந்தைப் பயன்படுத்தத் தொடங்குகிறாள்.

டொல்லி அன்னாவைச் சந்தித்து, கிட்டி மாஸ்கோவில் குழந்தையைப் பெற்றெடுக்கச் சென்றுள்ளதாகவும், ஸ்டீவாவின் போக்கிலும் குணத்திலும் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் தான் அவனுடன் வாழ்வதை ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் கூறுகிறாள்.

ஒருநாள், வுரோன்ஸ்கி தன் தாயின் வணிகப் பணிகளைத் கவனிப்பதற்காகச் செல்ல வேண்டும் என்று அன்னாவை விட்டுப் பிரிகிறான்.

ஆனால் இளவரசி சோரோகினா (காரா டெலிவின்) வுரோன்ஸ்கியை அவளது தாயின் வீட்டிலிருந்து அழைத்து வருவதைக் காணும் அன்னா, வுரோன்ஸ்கியின் தாய் அவனுக்கு சோரோகினாவைத் திருமணம் செய்து வைக்கப் பார்க்கிறார் என்று தீவிரமாக நம்பிப் பீதியடைகிறாள்.

உடனே வுரோன்ஸ்கியின் தோட்டத்திற்குத் திரும்புகிறாள்.

அங்கு செல்லும் வழியில் ரயிலில் பயணம் செய்யும் போது, வுரோன்ஸ்கியும் சோரோகினாவும் தன்னை ஏளனம் செய்து சிரிப்பதாகவும், ஒன்றாக இணைந்திருப்பதாகவும் கற்பனை செய்து தன் மனநிலையை முற்றிலுமாக இழக்கிறாள்.

மாஸ்கோ ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததும், அன்னா தன் மனதிற்குள்ளேயே "ஓ கடவுளே, என்னை மன்னியுங்கள்" என்று முணுமுணுத்தவாறே வேகமாகச் செல்லும் ரயிலின் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறாள்.

அந்தத் தருணம் உடனடியாக அதிர்ச்சியில் உறைந்துபோன வுரோன்ஸ்கியின் முகத்தை கண்ணுருகிறோம்.

படத்தின் இறுதியில், லெவின் வேலை முடித்துத் தன் வீட்டிற்குத் திரும்பி வந்து கிட்டி தன் குழந்தையைக் குளிப்பாட்டுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறான்.

ஸ்டீவாவும் அவனது குடும்பத்தினரும் லெவினின் வீட்டில் மகிழ்ச்சியாக உணவருந்துகிறார்கள்.

பணி ஓய்வு பெற்ற கரீனினோ தன் வசம் உள்ள செரியோஷா மற்றும் ஆனியாவுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பதுடன் கதை பூரணமாக நிறைவடைகிறது.

சமூகத்தின் போலித்தனமான விதிகளை விட மனித மனதின் உண்மையான உணர்வுகளும் காதலும் மேலானவை என்பதை இப்படம் ஆழமாகப் பேசுகிறது. அதேசமயம், சமூகத்தின் ஒப்புதலைத் துறந்து தனிமனித சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கும்போது ஏற்படும் தனிமை, அவமானம் மற்றும் அகப்போராட்டம் இறுதியில் எத்தகைய அழிவையும் துயரத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் என்ற கடுமையான யதார்த்தத்தையும் இத்திரைப்படம் எச்சரிக்கையாக உணர்த்துகிறது.

#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு 



Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (135) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)