தாமஸ் விண்டர்பெர்க் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான ட்ருக், ட்ரங்க் அல்லது "அனதர் ரவுண்ட் " திரைப்படம் மது அருந்துவதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிறந்த அவல நகைச்சுவை படைப்பு.
நான்கு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வாழ்வில் நிலவும் சலிப்பினை போக்கிக் கொள்ளவும் படைப்பாற்றலை அதிகரிக்கவும் ஒரு வினோதமான பரிசோதனையில் ஈடுபடுகிறார்கள்.
மனிதர்கள் பிறக்கும்போதே இரத்தத்தில் 0.05 சதவீத மது குறைபாட்டுடன் பிறக்கிறார்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அவர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு மது அருந்திவிட்டு பள்ளிக்குச் செல்கிறார்கள்.
இது அவர்களின் தனிப்பட்ட வாழ்விலும் தொழில் வாழ்விலும் ஆரம்பத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இத்திரைப்படத்தின் அடிநாதம் வெறும் மதுப்பழக்கத்தைப் பற்றியது மட்டுமல்ல, அது தொலைந்துபோன வாழ்வின் உத்வேகத்தை மீண்டும் கண்டடைவதைப் பற்றியது.
நடுத்தர வயதில் ஏற்படும் மனச்சோர்வு, அன்றாட வாழ்வின் சலிப்பு மற்றும் தனிப்பட்ட உறவுகளில் ஏற்படும் விரிசல் ஆகியவற்றால் முடங்கிப்போன நான்கு மனிதர்கள், தங்களை மீண்டும் உயிர்ப்புள்ளவர்களாக மாற்றிக்கொள்ள எடுக்கும் முயற்சியே இப்படத்தின் மையக்கருவாகும்.
வாழ்வின் மீதான பற்றுதலை இழந்து இயந்திரத்தனமாக வாழும் ஒரு மனிதன், மதுவின் துணையோடு தனது தயக்கங்களை உடைத்து மீண்டும் எவ்வாறு மலர்கிறான் என்பதையும், அதே மது எல்லை மீறும்போது அது எப்படிப்பட்ட அழிவைத் தரும் என்பதையும் இப்படம் சமநிலையுடன் பேசுகிறது.
படத்தின் இறுதியில் வரும் மட்ஸ் மிக்கெல்சனின் அந்த எழுச்சியான நடனம், துயரங்களுக்கு மத்தியிலும் வாழ்வைக் கொண்டாட வேண்டும் என்கிற தத்துவத்தையே பிரதிபலிக்கிறது.
"அனதர் ரவுண்ட்" வாழ்வின் தேக்க நிலையிலிருந்து விடுபட்டு, மீண்டும் ஒருமுறை மன எழுச்சியுடன் வாழ்வைத் தொடங்குவதற்கான வேட்கையைச் சொல்லும் படைப்பாகும்.
இப்படம் மது அருந்துவதை ஆதரிக்கவோ அல்லது முழுமையாக எதிர்க்கவோ செய்யாமல் அதன் விளைவுகளைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
படத்தின் இறுதிக் காட்சி வரை ரசிகர்களை ஒருவித தத்துவார்த்தமான உணர்வுக்குள் இது கடத்திச் செல்கிறது.
படத்தின் இயக்கம் மற்றும் திரைக்கதை மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இயக்குனர் தாமஸ் விண்டர்பெர்க் தனது மகளின் மறைவிற்குப் பிறகு இப்படத்தின் கதையை மிகவும் உணர்வுப்பூர்வமாக மாற்றி அமைத்தார்.
படமாக்கம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இப்படம் மிகவும் இயல்பான நம்பகமான சூழலில் படமாக்கப்பட்டுள்ளது.
நடிகர்களின் முக பாவனைகளும் கேமரா கோணங்களும் கதையின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
2020 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
பின்னர் டென்மார்க் மற்றும் பல நாடுகளில் வணிக ரீதியாக வெளியாகி வெற்றி பெற்றது.
இப்படத்தின் வெற்றிக்கு முதன்மையான காரணம் நடிகர்களின் இயல்பான நடிப்பாகும். மட்ஸ் மிக்கெல்சன் தனது அபாரமான நடிப்பால் மார்ட்டின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
அவருடன் நடித்த மற்ற மூன்று ஆசிரியர்களும் தங்களின் இயல்பான நடிப்பால் படத்தின் ஓட்டத்திற்கு வலு சேர்த்தனர்.
இசை மற்றும் பின்னணி ஒலியும் படத்தின் உணர்ச்சிகரமான தருணங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தின.
விருதுகள் ரீதியாக இப்படம் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை இப்படம் வென்றது.
மேலும் பாஃப்டா மற்றும் ஐரோப்பிய திரைப்பட விருதுகள் எனப் பல சர்வதேச அங்கீகாரங்களை இப்படம் குவித்தது.
ஒரு சாதாரணக் கருவை எடுத்துக்கொண்டு அதை வாழ்வின் மீதான பெரும் தேடலாக மாற்றியதில் தான் இப்படம் தனித்து நிற்கிறது.
இயக்குனர் தாமஸ் விண்டர்பெர்க் இந்தத் திரைப்படத்தை வியன்னாவில் உள்ள ஒரு திரையரங்கில் தான் எழுதிய நாடகத்தைத் தழுவி உருவாக்கினார்.
ஆரம்பத்தில் உலக வரலாறு மதுவினால் எப்படியெல்லாம் மாறியிருக்கும் என்ற கோணத்தில் ஒரு கொண்டாட்டமான கதையாகவே இது திட்டமிடப்பட்டது.
படப்பிடிப்பு தொடங்கிய நான்கு நாட்களில் இயக்குநரின் மகள் ஐடா ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.
முதலில் மார்ட்டின் கதாபாத்திரத்தின் மகளாக ஐடா நடிப்பதாக இருந்தது.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகுதான் சலிப்பான வாழ்வை எதிர்கொள்வது பற்றிய கதையாக இருந்த இது வாழ்வின் உந்தல் மற்றும் உயிர்ப்புடன் இருப்பது பற்றிய கதையாக மாற்றி எழுதப்பட்டது.
மேலும் ஐடாவின் வகுப்பறையிலேயே அவளது சக மாணவர்களுடன் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.
படத்தில் குடித்திருப்பது போலத் தத்ரூபமாக நடிப்பதற்காக நான்கு முக்கிய நடிகர்களும் இயக்குநருடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட அளவு மது அருந்திவிட்டு தங்களின் உடல்மொழியில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தனர்.
அதிகப்படியான போதையில் இருப்பவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைப் புரிந்துகொள்ள யூடியூப் தளத்தில் உள்ள காணொளிகளைக் கண்டும் அவர்கள் பயிற்சி பெற்றனர்.
இப்படம் முதலில் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட வேண்டியிருந்தது ஆனால் கொரோனா பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகளால் அந்த விழா ரத்து செய்யப்பட்டது.
2025 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 திரைப்படங்களுக்கான வாசகர் விருப்பப் பட்டியலில் இப்படம் 243 வது இடத்தைப் பிடித்தது.
சுமார் 33.5 மில்லியன் டேனிஷ் குரோனர் பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் 21.7 மில்லியன் டாலர்களை வசூலித்து மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றியையும் ஈட்டியது.
படத்தில் காட்டப்படும் ரத்தத்தில் 0.05 சதவீத மது அளவு குறையாமல் பராமரிக்க வேண்டும் என்கிற வினோதமான தத்துவத்தை முன்வைத்தவர் ஃபின் ஸ்கார்டெருட் என்ற நோர்வே நாட்டு மனநல மருத்துவர் ஆவார்.
உண்மையில் அவர் தனது ஒரு புத்தகத்தின் முன்னுரையில் மதுவைப் பற்றி ஒரு தத்துவார்த்தமாகச் சொல்லியிருந்த கருத்தையே படத்தின் நான்கு ஆசிரியர்களும் ஒரு பரிசோதனையாகச் செய்கிறார்கள்.
படம் வெளியான பிறகு அந்த மருத்துவர் இக்கதை மதுவின் ஆபத்துகளையும் அதன் மீதான விழிப்புணர்வையும் மிகச் சரியாகக் கையாண்டுள்ளதாகப் பாராட்டினார்.
படத்தின் தயாரிப்புப் பணிகளின்போது மது அருந்தியவர்களின் உடல்மொழியை மிகச்சரியாகக் கொண்டுவர மட்ஸ் மிக்கெல்சன் உள்ளிட்ட நடிகர்கள் மிகுந்த மெனக்கெடலைச் செய்தனர்.
குறிப்பாக அதிகப்படியான போதையில் இருக்கும்போது கண்கள் எவ்வாறு ஒருமுகப்படாமல் சிதறும் என்பதையும் பேச்சு எவ்விதம் குளறும் என்பதையும் துல்லியமாக வெளிப்படுத்தினார்கள்.
மட்ஸ் மிக்கெல்சன் ஒரு முன்னாள் ஜாஸ் பாலே நடனக் கலைஞர் என்பது அவரது நிஜ வாழ்க்கைப் பின்னணியாகும்.
படத்தில் அவர் ஆடும் அந்த அற்புதமான இறுதி நடனக் காட்சி அவரது நிஜமான திறமையை வெளிப்படுத்தும் விதமாகவே இயக்குனர் திட்டமிட்டு இணைத்தார்.
படத்தின் தலைப்பு டென்மார்க் மொழியில் ட்ருக் என்பதாகும் இதன் பொருள் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதைக் குறிக்கும் ஒரு கொச்சையான சொல்லாகும்.
ஆனால் ஆங்கிலத்தில் இதற்கு அனதர் ரவுண்ட் எனப் பெயரிடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்றது.
படத்தில் மார்ட்டின் ஒரு வரலாற்று ஆசிரியராக இருப்பதால் அவர் தனது பாடங்களில் ஹிட்லர் மற்றும் சர்ச்சில் போன்ற உலகத் தலைவர்களின் மதுப் பழக்கங்களை உதாரணம் காட்டிப் பேசுவது போன்ற காட்சிகள் மிகத் தத்ரூபமாக அமைக்கப்பட்டன.
இத்திரைப்படம் 51 வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் தொடக்கத் திரைப்படமாகத் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதை:-
டென்மார்கின் கோபன்ஹாகன் நகரில் உள்ள ஒரு ஜிம்னேசியம் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் மார்ட்டின், டாமி, பீட்டர் மற்றும் நிக்கோலாய் ஆகிய நால்வரும் நண்பர்களுமாவர்.
பள்ளியில் உந்துதலற்ற மாணவர்கள் , சலிப்பான வாழ்க்கையோடு போராடி வருகிறார்கள்.
வரலாற்றாசிரியரான மார்ட்டின் தனது கற்பித்தல் முறை மாணவர்களின் தேர்ச்சிக்கு தடையாக இருப்பதாக அவர்களின் பெற்றோர்களால் வெறுத்து குற்றம் சாட்டப்படுகிறார்.
நண்பர் நிக்கோலாயின் நாற்பதாவது பிறந்தநாள் விருந்தின் போது அவர்கள் மனநல மருத்துவர் ஃபின் ஸ்கார்டெருட் என்பவரின் தத்துவத்தை பற்றி விவாதிக்கிறார்கள்.
மனிதர்கள் பிறக்கும்போதே ரத்தத்தில் மதுவின் அளவு 0.05 சதவீதம் குறைவாகவே பிறக்கிறார்கள் என்றும், அந்த அளவை மதுவின் மூலம் பராமரித்தால் ஒரு மனிதன் அதிக படைப்பாற்றலுடனும் நிதானத்துடனும் செயல்பட முடியும் என்றும் அவர்கள் அறிகிறார்கள்.
இந்த கோட்பாட்டை சோதித்துப் பார்க்க முடிவெடுக்கும் நண்பர்கள் தங்களின் அனுபவங்களை ஒரு குழு அறிக்கையாக பதிவு செய்யத் தொடங்குகிறார்கள்.
மார்ட்டின் மன அழுத்தத்தாலும் குடும்பத்தின் அந்நியப்படுதலாலும் இந்த சோதனையில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்.
நண்பர் நிக்கோலாயின் மனைவி அவர் மீது காட்டும் வெறுப்பும் இதற்கு ஒரு காரணமாகிறது.
வார நாட்களில் பகல் நேரங்களில் மட்டும் மது அருந்துவது, மாலை எட்டு மணிக்கு மேல் மற்றும் வார இறுதி நாட்களில் குடிக்கக் கூடாது என்ற விதிகளுடன் அவர்கள் செயல்படுகிறார்கள்.
பள்ளி நேரங்களில் மது அருந்தினாலும் அவர்கள் ஒருபோதும் வாகனம் ஓட்டுவதில்லை , சட்டப்படியான மது அளவான 0.05 சதவீதத்திற்குள்ளேயே இருக்கிறார்கள்.
மிகக்குறுகிய காலத்தில் அவர்களின் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை வியக்கத்தக்க வகையில் மேம்படுகிறது.
மார்ட்டின் தனது மனைவி அனிகா (மரியா பொன்னேவி) மற்றும் குழந்தைகளுடன் மீண்டும் நெருக்கமடைகிறார்.
அவரது வரலாற்று பாடங்கள் மாணவர்களிடம் பெரும் மதிப்பைப் பெறுகின்றன.
உற்சாகமடைந்த நண்பர்கள் மதுவின் அளவை 0.1 பூஜ்ஜியம் சதவீதமாக உயர்த்துகிறார்கள்.
அதன் பின்னரும் நன்மைகள் தெரிவதால் ஒரு கட்டத்தில் மதுவின் உச்சபட்ச எல்லையை தொட்டுப் பார்க்க அவர்கள் முடிவெடுக்கிறார்கள்.
ஒரு இரவு போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பும் மார்ட்டின் மற்றும் நிக்கோலாய் தங்களின் குடும்பத்தினரிடம் சிக்கிக்கொள்கிறார்கள்.
மார்ட்டினின் மனைவி அவர் பல வாரங்களாக குடிப்பதை தாங்கள் அறிவோம் எனக் கூறி மோதலில் ஈடுபடுகிறார்.
மேலும் அவர் தனது திருமண உறவில் தான் நிகழ்த்திய துரோகத்தையும் ஒப்புக்கொள்கிறார்.
இதனால் இந்த பரிசோதனை கைவிடப்பட்டு மார்ட்டின் தனது மனைவியை விட்டு பிரிகிறார்.
குழுவில் இருந்த மற்றவர்கள் குடிப்பதை நிறுத்தினாலும் டாமியால் (தாமஸ் போ லார்சன்) அந்த பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை.
அவர் பள்ளி கூட்டத்திற்கு மது போதையில் வந்து தலைமை ஆசிரியரிடம் சிக்கிக்கொள்கிறார்.
ஒரு நாள் தனது நாயுடன் படகில் கடலுக்குள் சென்ற டாமி அங்கிருந்து கீழே விழுந்து நீரில் மூழ்கி உயிரிழக்கிறார்.
டாமியின் இறுதிச்சடங்கிற்குப் பிறகு மார்ட்டின் (மாட்ஸ் மிக்கெல்சன்), பீட்டர் (லார்ஸ் ரான்தே) மற்றும் நிக்கோலாய் (மேக்னஸ் மில்லாங்) ஆகிய மூவரும் உணவகத்தில் கூடி மதுவுடன் அவரது நினைவுகளைப் பகிர்கிறார்கள்.
அப்போது மார்ட்டினுக்கு அவரது மனைவியிடம் இருந்து தான் அவர் பிரிவால் ஏக்கமுறுவதாக குறுஞ்செய்தி வருகிறது.
அந்த நேரத்தில் துறைமுகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
முன்னாள் ஜாஸ் பாலே நடனக் கலைஞரான மார்ட்டின் நண்பர்களின் வற்புறுத்தலால் மாணவர்களுடன் இணைந்து மிக ஆக்ரோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் நடனமாடுகிறார்.
இறுதியில் அந்த உற்சாகத்தின் உச்சத்தில் அவர் கடலுக்குள் குதிப்பதோடு கதை நிறைவடைகிறது.
இப்படத்தில் மார்ட்டினாக மாட்ஸ் மிக்கெல்சன், டாமியாக தாமஸ் போ லார்சன், நிக்கோலாயாக மேக்னஸ் மில்லாங், பீட்டராக லார்ஸ் ரான்தே, அனிகாவாக மரியா பொன்னேவி, அமாலியாவாக ஹெலன் ரெய்ங்கார்ட் நியூமேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியராக சுஸ் வோல்ட், மார்ட்டினின் மகன்களாக மேக்னஸ் ஸ்ஜோருப் மற்றும் சிலாஸ் கொர்நேலியஸ் வான், மாணவர்களாக ஆல்பர்ட் ருட்பெக் லிண்ட்ஹார்ட், ஃபிரடெரிக் வின்டர் ராஸ்முசென், ஆக்செல் வெட்செகார்ட் மற்றும் அயா கிரான் ஆகியோர் நடித்துள்ளனர். மார்ட்டின் கிரீஸ் ரொசெந்தால் உணவகத்தின் தலைமை ஊழியராக நடித்துள்ளார்.
மதுவின் மூலம் வாழ்வின் சலிப்பை வென்றுவிடலாம் என்கிற தற்காலிகக் கவர்ச்சியும் அதன் விபரீத முடிவுகளுமே இப்படம் சொல்லும் மையச் செய்தியாகும்.
ஆசிரியர்களான மார்ட்டின் (மாட்ஸ் மிக்கெல்சன்), டாமி (தாமஸ் போ லார்சன்), பீட்டர் (லார்ஸ் ரான்தே) மற்றும் நிக்கோலாய் (மேக்னஸ் மில்லாங்) ஆகியோர் தங்களின் தேக்கமடைந்த வாழ்க்கையை மாற்ற மதுவை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆரம்பத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் உற்சாகம், குடும்ப நெருக்கம் மற்றும் பணியிடத்தில் கிடைக்கும் மரியாதை போன்றவை மதுவை ஒரு தீர்வாகக் காட்டினாலும், அதன் அளவு அதிகரிக்கும்போது ஏற்படும் சிதைவுகளைப் படம் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
வாழ்க்கையில் ஏற்படும் சலிப்பு, தனிமை மற்றும் தோல்விகளை எதிர்கொள்ள குறுக்கு வழிகளைத் தேடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை டாமியின் மரணம் உணர்த்துகிறது.
அதே சமயம், மார்ட்டின் தனது இழப்புகளுக்குப் பிறகும் மாணவர்களின் கொண்டாட்டத்தில் இணைந்து ஆடும் அந்த இறுதி நடனம், மதுவை விடவும் வாழ்வின் மீதான பிடிப்பும் மகிழ்ச்சியுமே ஒரு மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதைச் சொல்கிறது.
மது என்பது ஒரு தற்காலிகத் தப்பித்தல் மட்டுமே தவிர, அது வாழ்வின் நிரந்தரத் தீர்வாகாது என்பதை இப்படைப்பு ஆழமாகப் பதிவு செய்கிறது.
அனிகா (மரியா பொன்னேவி) உடனான மார்ட்டினின் விரிசல், நிக்கோலாயின் குடும்பச் சிக்கல்கள் போன்றவை மதுவினால் உறவுகளைச் சீர் செய்ய முடியாது என்பதைக் காட்டுகின்றன.
மனிதர்கள் தங்களின் பலவீனங்களை மறைக்க எடுக்கும் முயற்சிகள் இறுதியில் அவர்களை இன்னும் பெரிய பள்ளத்திலேயே தள்ளும் என்கிற எதார்த்தத்தை இந்தப் படம் விவரிக்கிறது.
கொண்டாட்டத்திற்கும் பேரழிவிற்கும் இடையே இருக்கும் மிக மெல்லிய கோட்டை இப்படம் மிக நுணுக்கமாகச் சொல்லியிருக்கிறது.