மினாரி (Minari ) 2020 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படம், இதனை லீ ஐசக் சுங் எழுதி இயக்கியுள்ளார், இப்படம் சுங்கின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சுயசரிதை பாணியிலான படைப்பாகும்.
1980களில் தென்கொரியாவிலிருந்து அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்திற்கு குடிபெயர்ந்த ஒரு குடும்பம் அங்கு விவசாயம் செய்து பிழைக்க எடுக்கும் முயற்சிகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் இப்படம் மிக யதார்த்தமாக விவரிக்கிறது.
இப்படம் ஒரு குடும்பத்தின் பிணைப்பு மற்றும் கனவுகளைப் பற்றிய ஆழமான கதையைச் சொல்கிறது , ஜேக்கப் மற்றும் மோனிகா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் ஒரு நகரும் வீட்டில் குடியேறுகிறார்கள் ,அங்கு ஜேக்கப் கொரிய காய்கறிகளைப் பயிரிட்டு வெற்றி பெற நினைக்கிறார்.
ஆனால் அவர்கள் வறுமை மற்றும் உடல்நலக் குறைபாடு போன்ற பல இடர்ப்பாடுகளைச் சந்திக்கின்றனர் , இந்தச் சூழலில் அவர்களின் பாட்டி சூன் ஜா கொரியாவிலிருந்து வந்து அவர்களுடன் இணையும்போது கதை புதிய பரிமாணத்தைப் பெறுகிறது.
உலக அளவில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது, அமெரிக்காவில் எடுக்கப்பட்டாலும் இதில் பேசப்படும் உணர்வுகள் எல்லைகளைக் கடந்தவை என்பதால் இது ஒரு சர்வதேசத் தரத்திலான படைப்பாகக் கருதப்படுகிறது.
புலம்பெயர்ந்த மக்களின் வலியை உலகளாவிய கோணத்தில் இப்படம் பிரதிபலிக்கிறது.
உலக சினிமா விமர்சகர்கள் இப்படத்தை ஒரு உன்னதமான படைப்பு என்று கொண்டாடினர் , இது ஒரு சாதாரணக் கதையை மிகவும் நேர்த்தியாகவும் இதயத்தைத் தொடும் வகையிலும் சொல்லியிருப்பதாகப் பாராட்டப்பட்டது ,குறிப்பாக குழந்தைகளின் பார்வையில் சொல்லப்படும் காட்சிகள் மற்றும் குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள மெல்லிய விரிசல்களைப் படம் பிடித்துள்ள விதம் மேதமை வாய்ந்தது என்று புகழப்பட்டது.
லீ ஐசக் சுங் தனது சிறுவயது நினைவுகளைத் திரையில் கொண்டு வருவதில் மிகுந்த நிதானத்தைக் கையாண்டுள்ளார்.
தேவையற்ற நாடகத்தனம் இன்றி காட்சிகளை இயல்பாக நகர்த்திச் சென்றதே இயக்குநரின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது , ஒரு எளிய கதையை உலகத்தரம் வாய்ந்தத் திரைப்படமாக மாற்றியதில் அவரின் பங்கு முக்கியமானது .
லச்லன் மில்னே ஒளிப்பதிவு ஆர்கன்சாஸ் நிலப்பரப்பின் அழகையும் அந்த விவசாய நிலத்தின் பசுமையையும் தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளது.
காட்சிகளின் ஊடாக ஒரு அமைதியான சூழலை உருவாக்கி பார்வையாளர்களைக் கதையோடு ஒன்றச் செய்கிறது , எடிட்டிங் மற்றும் கலை இயக்கம் ஆகியவையும் படத்தின் காலக்கட்டத்தை மிகச் சரியாகப் பிரதிபலித்தன.
இப்படம் முதலில் 2020 சன்டான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
பின்னர் 2021 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது கோவிட் பெருந்தொற்று காலத்திலும் இத்திரைப்படம் இணைய வழியிலும் திரையரங்குகளிலும் பெரும் வசூலை ஈட்டியது ஸ்டீவன் யூன் மற்றும் ஹான் யே ரி ஆகியோர் கணவன் மனைவியாகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர்.
குறிப்பாகப் பாட்டியாக நடித்த யூன் யு ஜங் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
சிறுவன் ஆலன் கிம் மற்றும் நோயல் கேட் சோ ஆகியோரும் தங்களின் பங்கை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
எமில் மோசெரி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் படத்தின் சூழலுக்கு ஏற்ப மென்மையான மனதை வருடும் இசையை அவர் வழங்கியுள்ளார் .
இந்த இசை படத்தின் உணர்ச்சிகரமான தருணங்களுக்கு மேலும் வலு சேர்த்தது .
மினாரி திரைப்படம் 93வது அகாடமி விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநர் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
பாட்டியாக நடித்த யூன் யு ஜங் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்று இந்த விருதைப் பெறும் முதல் கொரிய கலைஞர் என்ற சாதனையைப் படைத்தார்.
இது தவிர கோல்டன் குளோப் விருதினையும் இப்படம் வென்று பெருமை சேர்த்தது இவ்வாறாக இப்படம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி உலகத் தரம் வாய்ந்த படைப்பாக நிலைபெற்றுள்ளது
மினாரி திரைப்படத்தின் அடிநாதம் ஒரு புலம்பெயர்ந்த குடும்பத்தின் பிழைப்புக்கான போராட்டத்தையும் அவர்களின் மாறாத நம்பிக்கையையும் மையமாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக எங்கு விதைத்தாலும் செழித்து வளரும் மினாரி எனப்படும் நீர்ப்பசலை கீரையை ஒரு குறியீடாகக் கொண்டு இந்தத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது ,
புதிய நிலத்தில் வேரூன்றத் துடிக்கும் ஜேக்கப் மற்றும் மோனிகா தம்பதியினருக்கு இடையே ஏற்படும் கருத்து மோதல்கள் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் என குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை இப்படம் வெளிப்படுத்துகிறது.
இயற்கையோடு இணைந்த ஒரு எளிய வாழ்க்கையைத் தேடிச் செல்லும் தந்தைக்கும் குடும்பத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளும் தாய்க்கும் இடையிலான போராட்டமே இப்படத்தின் முக்கிய கருப்பொருளாக உள்ளது .
தோல்விகள் மற்றும் இழப்புகள் ஏற்படும்போது ஒரு குடும்பத்தை ஒன்றாக இணைத்து வைத்திருப்பது அவர்களின் அன்பு மட்டுமே என்பதை இப்படம் மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது.
பாட்டியின் வருகைக்குப் பிறகு குழந்தைகளின் பார்வையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அந்த நிலத்தின் மீது அவர்களுக்கு உண்டாகும் பிணைப்பு ஆகியவை கதையின் ஆன்மாவாகத் திகழ்கின்றன.
இப்படம் அமெரிக்கக் கனவு என்பதன் மறுபக்கத்தை மிக எதார்த்தமாகப் பேசுகிறது வெற்றி என்பது வெறும் பணத்திலோ அல்லது விளைச்சலிலோ மட்டும் இல்லை என்பதைத் தீ விபத்திற்குப் பிறகு அந்தக் குடும்பம் ஒன்றாகச் சேர்ந்து தரையில் உறங்கும் காட்சி உணர்த்துகிறது.
மினாரி கீரை எப்படி எந்தப் பராமரிப்பும் இன்றி தானாகவே ஓடை ஓரம் செழித்து வளர்கிறதோ அதேபோல் மனிதர்களும் அன்பும் உறுதியும் இருந்தால் எந்தச் சூழலிலும் தப்பிப் பிழைத்து வளர முடியும் என்ற உயரிய தத்துவத்தை இப்படம் தன் அடிநாதமாகக் கொண்டுள்ளது
முதலில் இயக்குனர் லீ ஐசக் சுங் வில்லா கேதரின் மை ஆண்டோனியா என்ற நாவலைத் திரையாக்கவே விரும்பினார் , ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால் தனது சொந்த வாழ்க்கையை எழுதத் தொடங்கினார்.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் தனது சிறுவயது நினைவுகள் எங்கே மறந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர் ஒரே வாரத்தில் இந்தத் திரைக்கதையின் முடிச்சை எழுதி முடித்தார்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் அறைக்குச் செல்லும் வரை தனது பெற்றோர் இதைப் பற்றித் தவறாக நினைப்பார்களோ என்று பயந்து அவர் இந்தத் தகவலை அவர்களிடம் சொல்லவே இல்லை.
படத்தின் வசனங்கள் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின்னரே கொரிய மொழியின் வட்டார வழக்குக்கு மாற்றப்பட்டன.
இதில் நடிகை யூன் யு ஜங் மற்றும் ஹான் யே ரி ஆகியோர் பெரும் உதவி புரிந்தனர் .
படத்தில் நடித்த ஸ்டீவன் யூன் நிஜ வாழ்க்கையிலும் ஒரு கொரிய அமெரிக்கர் என்பதால் அவர் தனது கதாபாத்திரத்துடன் எளிதில் ஒன்றிப்போனார் .
குறிப்பாகப் படத்தில் வரும் பாட்டி கதாபாத்திரம் லீ ஐசக் சுங்கின் நிஜப் பாட்டியைப் போலவே இருக்கக் கூடாது என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்தார் ,எனவே யூன் யு ஜங் தனது சொந்த பாணியில் அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்தில் வெறும் 25 நாட்களில் முடிக்கப்பட்டது.
சன்டான்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்ப வேண்டும் என்ற நெருக்கடியில் படப்பிடிப்பு நடக்கும்போதே எடிட்டிங் பணிகளும் இணையாக நடைபெற்றன .
கோல்டன் குளோப் விருதுகளில் இப்படம் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவில் சேர்க்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஏனெனில் இது அமெரிக்காவில் அமெரிக்க இயக்குநரால் தயாரிக்கப்பட்ட படம் என்றாலும் இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வசனங்கள் கொரிய மொழியில் இருந்ததால் இந்த விதிமுறை பின்பற்றப்பட்டது.
இது ஹாலிவுட்டில் மொழி மற்றும் தேசம் குறித்த புதிய விவாதங்களைத் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் லீ ஐசக் சுங் தனது வாழ்வு உண்மையிலேயே எப்போது தொடங்கியது என்று யோசித்தபோது அவர் கைகொண்ட தத்துவம் மற்றவர்களை வியந்து நோக்குவதை நிறுத்திவிட்டு தனது கடந்த காலத்தை நினைவுகூரத் தொடங்கிய போது தான் தொடங்கியது என தெளிந்தார்.
இதற்காக அவர் தஸ்தயெவ்ஸ்கி போன்ற இலக்கிய மேதைகளின் எழுத்து நடையை ஒரு உந்துதலாகக் கொண்டார்.
படத்தில் வரும் பாட்டி கதாபாத்திரம் தேவாலய காணிக்கைப் பெட்டியில் இருந்து பணத்தை மீண்டும் எடுக்கும் காட்சி நிஜத்தில் இயக்குநருக்கு உடன்பாடு இல்லாத ஒன்றாக இருந்தது.
ஆனால் நடிகை யூன் யு ஜங்கின் ஆலோசனையின் பேரில் அது சேர்க்கப்பட்டு பின்னாளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
திரைப்படத்தின் முதன்மை நாயகி ஹான் யே ரி இந்த வாய்ப்பு வந்தபோது முதலில் மறுத்தார் ஏனெனில் மோனிகா கதாபாத்திரம் தென்கொரியாவிலேயே பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
இறுதியில் அவரே அந்த உணர்வைச் சரியாகப் பிரதிபலித்தார் .
படத்தின் எடிட்டர் ஹாரி யூன் படப்பிடிப்புத் தளத்திலேயே காட்சிகளைத் தொகுக்கும் பணியைச் செய்தார் .
இது மிகக் குறைந்த பட்ஜெட்டில் 2 மில்லியன் டாலர்களுக்குள் படத்தை முடிக்க உதவியது .
ஆஸ்கார் மேடையில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றபோது யூன் யு ஜங் தனது எதார்த்தமான பேச்சால் உலகையே கவர்ந்தார்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஓக்லஹோமா மாகாணத்தின் துல்சா பகுதியில் படமாக்கப்பட்டன.
ஆர்கன்சாஸ் பின்னணியைக் கொண்டுவர இந்தத் துல்சா களம் பயன்படுத்தப்பட்டது.
இப்படத்திற்கு இசை அமைத்த எமில் மோசெரி மிகவும் அரிதான மெல்லிசைகளை உருவாக்கி அது ஒரு கனவுலகிற்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்வது போன்ற உணர்வைத் தந்தார் .
மினாரி கீரை நதிக்கரையில் தானாகவே செழிக்கும் தன்மையை ஒரு தப்பிப்பிழைக்கும் கலையாகப் படத்தில் காட்டியது.
புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் தத்துவத்தை மிகச் சுருக்கமாக விளக்கும் ஒரு குறியீடாக அமைந்தது இவ்வாறாக இப்படம் ஒரு எளிய மனிதனின் போராட்டத்தை உலகளாவிய காவியமாக மாற்றியது
படத்தின் கதை:-
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு வெற்று நிலத்திற்குத் தனது குடும்பத்தோடு குடிபெயர்கிறார் ஜேக்கப் ஈ (ஸ்டீவன் யூன்). கலிபோர்னியாவில் இருந்து வந்த அவருக்கு இந்த மண்ணில் கொரிய நாட்டு காய்கறிகளைப் பயிர் செய்து டல்லாஸ் நகரில் விற்க வேண்டும் என்பது பெரிய கனவு.
ஆனால் அவரது மனைவி மோனிகா ஈ (ஹான் யே-ரி) இந்த முடிவில் மகிழ்ச்சியாக இல்லை. வசதிகள் இல்லாத அந்த நகரும் வீடு மற்றும் இதய நோய் உள்ள மகன் டேவிட் ஈ (ஆலன் கிம்) சிகிச்சைக்காக மருத்துவமனை வெகு தொலைவில் இருப்பது அவரை அச்சப்படுத்துகிறது.
பண்ணை வேலைகளைப் பார்த்தபடி தம்பதியினர் இருவரும் கோழிப்பண்ணையில் குஞ்சுகளைத் தரம் பிரிக்கும் வேலைக்குச் செல்கிறார்கள்.
இவர்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகளை மகள் ஆன் ஈ (நோயல் கேட் சோ) மற்றும் டேவிட் கவலையுடன் கவனிக்கிறார்கள்.
குழந்தைகளைப் பராமரிக்க மோனிகாவின் தாய் சுன்-ஜா (யூன் யுக-ஜங்) கொரியாவிலிருந்து வருகிறார்.
டேவிட் தனது பாட்டியைப் பிடிக்காமல் தவிர்க்கிறான். ஏனெனில் அவர் மற்ற பாட்டிகளைப் போலப் பலகாரங்கள் சுடுவதில்லை.
மாறாக கொரிய சீட்டு விளையாடுகிறார்.
இருப்பினும் பாட்டி சுன்-ஜா டேவிட்டிடம் அன்பாகப் பழகுகிறார்.
அருகில் உள்ள ஓடையோரம் தான் கொண்டு வந்த மினாரி விதைகளை நடுகிறார். எந்தச் சூழலிலும் வளரும் அந்தச் செடியின் உறுதியைப் பற்றி டேவிட்டிற்கு விளக்குகிறார்.
ஒரு கட்டத்தில் ஜேக்கப் வெட்டிய கிணறு வறண்டு போக குடும்பம் பெரும் பண நெருக்கடியில் சிக்கி ஜேக்கப் மற்றும் மோனிகா உறவில் விரிசல் அதிகமாகிறது.
இதற்கிடையில் பாட்டிக்குத் திடீரென பக்கவாதம் ஏற்பட்டு அவரது ஒரு பக்கம் செயலிழந்து போகிறது.
டேவிட்டின் இதயப் பரிசோதனைக்காக குடும்பம் நகரம் செல்கிறது. அங்கு டேவிட்டின் இதய ஓட்டை தானாகவே மூடி வருவதாகத் தெரிந்து அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஜேக்கப்பிற்கும் காய்கறிகளை விற்க ஒரு பெரிய வியாபாரி கிடைக்கிறார்.
ஆனால் ஜேக்கப் குடும்பத்தை விடத் தனது பண்ணைக்கே முக்கியத்துவம் தருவதை உணர்ந்த மோனிகா அவரை விட்டுப் பிரிவதாகக் கூறுகிறார்.
அவர்கள் வீட்டிற்குத் திரும்பிய போது பெரும் விபத்து காத்திருக்கிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பாட்டி தற்செயலாகப் பண்ணை விளைபொருட்கள் இருந்த கொட்டகையைத் தீயிட்டுக் கொளுத்தி விடுகிறார்.
ஜேக்கப் தனது உழைப்பைத் தீயிலிருந்து மீட்கப் போராடுகிறார். இறுதியில் பயிர்களை விடத் தனது மனைவியே முக்கியம் என மோனிகாவைத் தீயிலிருந்து மீட்டு வெளியே வருகிறார்.
குற்ற உணர்ச்சியில் பாட்டி எங்கோ திகைத்து ஓடத் துடிக்கும் போது இதய நோய் உள்ள டேவிட் ஓடிச் சென்று அவரைத் தடுத்துத் தாங்கிப் பிடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறான்.
அனைத்தையும் இழந்தாலும் அந்தக் குடும்பம் ஒன்றாகத் தரையில் படுத்து உறங்குகிறது. சில காலம் கழித்து ஜேக்கப் மற்றும் மோனிகா புதிய நம்பிக்கையுடன் கிணறு தோண்ட நிபுணர் உதவியை நாடுகிறார்கள்.
ஜேக்கப்பும் டேவிட்டும் ஓடையோரம் சென்று பாட்டி நட்ட மினாரி செடிகள் எவ்விதப் பராமரிப்பும் இன்றி மிகச் செழிப்பாக வளர்ந்திருப்பதைக் கண்டு வியக்கிறார்கள்.
எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் குடும்பம் ஒன்றாக இருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம் என்பதை அந்த மினாரி செடிகள் உணர்த்துகையில் படம் நிறைகிறது.
மினாரி திரைப்படம் ஒரு எளிய செடியின் வழியாக வாழ்வின் மிக ஆழமான உண்மையை உரக்கச் சொல்கிறது. எந்தச் சூழலிலும் எத்தகைய கடினமான மண்ணிலும் தப்பிப் பிழைத்துச் செழித்து வளரும் மினாரி செடியைப் போலவே மனித வாழ்வும் போராட்டங்களுக்குப் பின் துளிர்விடும் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.
ஒரு மனிதன் காணும் பெரிய கனவுகள் மற்றும் பணத்தை விடவும் இக்கட்டான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்கும் குடும்ப உறவுகளே மிக உயரியது என்பதே இதன் முதன்மைச் செய்தியாகும்.
ஜேக்கப் தனது பிடிவாதத்தால் உருவாக்கிய கிணறு வறண்டு போனாலும் பாட்டி எவ்விதப் பராமரிப்பும் இன்றி ஓடையோரம் நட்ட மினாரி செடிகள் செழித்து வளர்வது இயற்கையோடு இயைந்து வாழ்வதன் அவசியத்தைக் காட்டுகிறது.
அதேபோல் உடல்நலக் குறைபாடு உள்ள டேவிட் தனது பாட்டியைக் காப்பாற்ற ஓடும்போது அவனது மன உறுதி அவனது உடல் பலவீனத்தை வென்று நிற்கிறது.
நாம் நம்மைப் பலவீனமானவர்கள் என்று கருதுவதை விடவும் நமக்குள் இருக்கும் உள்மன வலிமையே நம்மைப் பாதுகாக்கும் என்பதை இது விளக்குகிறது.
இறுதியில் அத்தனை உழைப்பும் தீயால் அழிந்தாலும் அந்தக் குடும்பம் சிதறிப் போகாமல் ஒன்றாகத் தரையில் படுத்து உறங்குவது அன்பினால் இணைந்த குடும்பம் எத்தகைய இழப்பையும் தாங்கி மீண்டும் வேர் ஊன்றி வளரும் என்ற நம்பிக்கையை வழங்குகிறது.
மினாரி என்பது கிழக்கு ஆசிய நாடுகளான கொரியா ஜப்பான் மற்றும் சீனாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு நீர்வாழ் தாவரமாகும்.
இது அறிவியல் ரீதியாக ஓனந்தே ஜாவானிகா (Oenanthe javanica) என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக நீர் நிலைகளின் ஓரங்களிலும் சதுப்பு நிலங்களிலும் தானாகவே மிகச் செழிப்பாக வளரும் தன்மையுடையது.
இந்தச் செடி மற்ற தாவரங்களைப் போல அதிகப் பராமரிப்பை எதிர்பார்ப்பதில்லை. ஒருமுறை ஒரு இடத்தில் வேர் ஊன்றிவிட்டால் அந்த மண்ணின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு மிக வேகமாகப் பரவும்.
இதன் காரணமாகவே இது பிழைப்புக்காகப் புலம்பெயரும் மக்களின் மன உறுதிக்கும் மீண்டு எழும் பண்பிற்கும் ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
மினாரி செடியின் தண்டுகள் மற்றும் இலைகள் சமையலில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இது லேசான கசப்பு மற்றும் இனிப்பு கலந்த ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டது.
கொரிய சமையலில் சூப் வகைகள் மற்றும் சாலட்களில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மருத்துவக் குணம் கொண்டதாக இது கருதப்படுகிறது.
இயற்கையிலேயே இந்தச் செடி நீரைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அழுக்கான நீர்நிலைகளில் கூட இது வளர்ந்து அந்த நீரின் தன்மையை மேம்படுத்தும். மினாரி திரைப்படத்தில் பாட்டி சுன்-ஜா கூறுவது போல இந்தச் செடி செல்வந்தர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரும் பறித்துப் பயன்படுத்தும் வகையில் எங்கும் எளிமையாகக் கிடைப்பதால் இது ஒரு மக்கள் செடியாகவும் அன்பின் அடையாளமாகவும் போற்றப்படுகிறது.
ஒருமுறை மினாரி செடி அழிந்துபோனாலும் அதன் வேர்கள் மண்ணுக்குள் உயிருடன் இருந்து அடுத்த பருவத்தில் மீண்டும் துளிர்விட்டு எழும் பண்பு மனித வாழ்வின் நம்பிக்கைக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.