தி ஃபேவரிட் The Favorite 2018

"தி ஃபேவரிட் "திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியான  வரலாற்று அவல நகைச்சுவை திரைப்படம். 

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேட் பிரிட்டன் அரசவையில் நிலவிய அதிகாரப் போட்டியை மையமாக வைத்து இக்கதை நகர்கிறது.

 அரசியின் அன்பைப் பெற இரு அந்தரங்க காரியதரிசிப் பெண்களுக்கு இடையே நடக்கும் தந்திரமான போராட்டத்தை மிக நுணுக்கமாக இப்படம் விவரிக்கிறது.

இப்படத்தின் அடிநாதம்  அதிகாரத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் இடையிலான அந்த மெல்லிய கோடுதான். 

இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதிகாரம் என்பது ஒருவரை எவ்வளவு உச்சத்திற்குக் கொண்டு செல்கிறதோ அதே அளவு அவரைத் தனிமைப்படுத்தும் என்பதையே மையமாகத் தொட்டுச் செல்கிறது.

அரசி ஆன் உலகையே ஆளும் அதிகாரம் படைத்தவர் ஆனால் தனது உடல் உபாதையாலும் மன அழுத்தத்தாலும் ஒரு குழந்தையைப் போலப் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 

இந்த பலவீனமே அவரைச் சுற்றியுள்ள அதிகாரப் போட்டிக்கு எரிபொருளாக மாறுகிறது. ஒருபுறம் சாராவின் கண்டிப்பான மற்றும் நேர்மையான அதிகாரம் அரசியின் நலனை முன்னிறுத்தினாலும் அது அரசியை ஒரு கட்டத்தில் மூச்சுத்திணறச் செய்கிறது.

 மறுபுறம் அபிகேல் காட்டும் போலிப் பணிவும் வசதியான பொய்களும் அரசியின் அகங்காரத்தை திருப்தி செய்தாலும் அவை அரசியை மெல்ல மெல்ல ஒரு சூனியமான தனிமைக்கே இட்டுச் செல்கின்றன.

வறுமை மற்றும் அதிகாரம் ஆகிய இரண்டு துருவங்களுக்கு இடையே ஒரு மனிதனின் குணம் எப்படி உருமாறுகிறது என்பதை அபிகேலின் பாத்திரம் துல்லியமாக விளக்குகிறது.

 சமூகத்தின் ஆகக்கீழ் மட்டத்திலிருந்து வரும் அபிகேல் தனது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளத் துரோகத்தையும் வஞ்சகத்தையும் ஆயுதங்களாக எடுக்கிறார்.

 ஆனால் அவர் அடைந்த அந்த உயர்குடி வெற்றி அவரை ஒரு சுதந்திரமான மனிதராக மாற்றவில்லை. மாறாக அரசியின் கால்களைப் பிடித்துவிடும் ஒரு விலை உயர்ந்த அடிமையாகவே அவரை ஆக்குகிறது. 

இது அதிகாரம் என்பது யாரையும் விடுவிப்பதில்லை மாறாக ஒருவரை ஒரு பொன் கூண்டிற்குள் அடைக்கிறது என்ற கசப்பான உண்மையை உணர்த்துகிறது.

அன்பு என்ற பெயரில் நடக்கும் இந்த அதிகாரப் போட்டியில் இறுதியில் எஞ்சுவது வெறுமையும் விரக்தியும் மட்டுமே. உண்மையான கண்டிப்பை விட இனிப்பான சூழ்ச்சிக்கு மனித மனம் பலியாகும் என்பதைச் சாரா மற்றும் அபிகேல் இடையிலான மோதல் காட்டுகிறது. 

படத்தின் இறுதியில் திரையில் விரியும் அரசியின் விரக்தியான முகமும் அபிகேலின் மண்டியிட்ட கோலமும் ஒரு செய்தியை உரக்கச் சொல்கின்றன , அதிகாரத்தின் உச்சியில் இருப்பவன் தன்னை ஆள்பவன் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் அவன் சூழல்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் அடிமையாகவே இருக்கிறான் என்பதே இப்படத்தின் ஆழமான அடிநாதமாகும்.

வழக்கமான வரலாற்றுத் திரைப்படங்களின் பாணியிலிருந்து விலகி மனித உணர்வுகளின் இருண்ட பக்கங்களையும் அதிகார போதையையும் நையாண்டி கலந்து சொன்ன விதத்தில் இது தனித்துவமாக நிற்கிறது. 

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தைப் பிரதிபலித்தாலும் நவீன காலத்தின் அரசியல் மற்றும் தனிமனிதப் பேராசையை இது பிரதிபலிக்கிறது.

 அரசியின் தனிமை மற்றும் அவரது இயலாமையைப் பயன்படுத்திக் கொள்ளும் இருவேறு குணாதிசயங்களைக் கொண்ட பெண்களின் மோதல் இதில் மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 நேர்மையான , கடுமையான அன்பு ஒருபுறம் மற்றும் தந்திரமான ஆனால் இனிமையான துரோகம் மறுபுறம் என இருமுனைப் போட்டியைச் திரைக்கதை மிக ஆழமாக அலசுகிறது.

இயக்குநர் யோர்கோஸ் லாந்திமோஸ் தனது வழக்கமான விசித்திரமான பாணியை இதிலும் புகுத்தியுள்ளார்.

 மனிதர்களுக்கு இடையே இருக்கும் சிக்கலான உறவுகளை தனித்துவமான இருண்ட நகைச்சுவையோடு அணுகியுள்ளார். 

காட்சிகளில் இருக்கும் பிரம்மாண்டத்தை விடவும் கதாபாத்திரங்களின் மனவோட்டத்திற்கு அவர் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார்.

இப்படத்தின் படமாக்கம் மிகவும் வியக்கத்தக்கது. ஒளிப்பதிவாளர் ராபி ரையன் ஃபிஷ்-ஐ லென்ஸ் மற்றும் வைட் ஆங்கிள் லென்ஸ்களைப் பயன்படுத்தி அரண்மனையின் பரந்து விரிந்த இடங்களை ஒரு சிறைச்சாலையைப் போலக் காட்டியுள்ளார். 

இயற்கை ஒளியையும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தையும் மட்டுமே பயன்படுத்தி அந்தக்காலச் சூழலைத் திரையில் தத்ரூபமாகப் பிரதிபலித்துள்ளார்.

2018 ஆகஸ்ட் 30 அன்று வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது. 

பின்னர் ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளியாகி விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 15 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 96 மில்லியன் டாலர் வசூல் செய்து வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

ஒலிவியா கோல்மன் அரசியாக வாழ்ந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். அவரது உடல் மொழி மற்றும் முகபாவனைகள் அரசியின் வலியையும் அதிகாரத்தையும் ஒரே நேரத்தில் கடத்துகின்றன. 

எம்மா ஸ்டோன் மற்றும் ரேச்சல் வைஸ் ஆகியோரின் நடிப்பு ஒருவருக்கு ஒருவர் சளைக்காத வகையில் மிகச் சிறப்பான முக்கோணப் போட்டியைத் திரையில் உருவாக்கியுள்ளது.

இசை இப்படத்தின் ஆன்மாவாகத் திகழ்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் செவ்வியல் இசையோடு நவீன கால இசையமைப்புகளையும் இணைத்து ஒருவித பதற்றமான சூழலை ஒலியமைப்பில் உருவாக்கியுள்ளனர்.

 பாடல்களுக்குப் பதிலாக இசைக் கருவிகளின் சத்தமும் அமைதியும் மாறி மாறி வந்து காட்சிகளின் கனத்தை அதிகரிக்கின்றன.

வெனிஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் ஜூரி விருது மற்றும் சிறந்த நடிகைக்கான வோல்பி கோப்பை ஆகியவற்றை வென்று தனது விருதுப் பயணத்தைத் தொடங்கியது.

 பிரிட்டிஷ் அகாடமி விருதுகளில் ஏழு விருதுகளையும் பத்து ஆஸ்கார் பரிந்துரைகளையும் பெற்றது. 

ஆஸ்கார் மேடையில் ஒலிவியா கோல்மன் சிறந்த நடிகைக்கான விருதைத் தட்டிச் சென்றார்.

 இதையே இயக்குனர் லந்திமோஸ் ஒரு நையாண்டி கலந்த இருண்ட நகைச்சுவை மூலம் மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார்.

வரலாற்று ரீதியாக இப்படம் சில அடிப்படை உண்மைகளை எடுத்துக்கொண்டாலும் பல இடங்களைச் சினிமாவுக்காகப் புனைவாகவும் நையாண்டியாகவும் மாற்றியுள்ளது. 

அரசி ஆன் மற்றும் சாரா சர்ச்சில் ஆகியோருக்கு இடையிலான நட்பு உண்மையானது. 

சாரா சர்ச்சில் உண்மையில் அரசியின் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியவர் என்பதும் பின்னர் அபிகேல் ஹில் என்பவரால் அந்தச் செல்வாக்கை அவர் இழந்தார் என்பதும் வரலாற்று உண்மை.

 சாரா அரசியை அவர் எழுதிய அந்தரங்கக் கடிதங்களை வெளியிடப் போவதாக மிரட்டியதும் உண்மையான நிகழ்வுகளே.

 இருப்பினும் படத்தில் வருவது போல அபிகேல் சாராவிற்குத் தேநீரில் விஷம் வைத்ததாகவோ அல்லது சாரா ஒரு விபச்சார விடுதியில் தஞ்சம் புகுந்ததாகவோ எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை.

அரசியின் பாலியல் உறவுகள் குறித்த விவாதம் இன்றும் வரலாற்று ஆசிரியர்களிடையே நீடிக்கிறது. 

சாரா சர்ச்சில் அரசியை மிரட்டிய கடிதங்களில் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவு குறித்த குறிப்புகள் உள்ளன.

 இருப்பினும் அரசி ஆன் தனது கணவரான இளவரசர் ஜார்ஜ் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் என்பதும் அவர்களுக்கு 17 முறை கருவுறுதல் தோல்விகள் (கருச்சிதைவு மற்றும் குழந்தை இறப்பு) ஏற்பட்டன என்பதும் உண்மை. 

ஆனால் படத்தில் அரசியின் கணவர் ஜார்ஜ் காட்டப்படவில்லை,போருக்கு சென்றதாகவும் சித்தரிக்கவில்லை. 
அவர் 1708 வரை உயிரோடுதான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசி ஆன் வளர்த்த 17 முயல்கள் என்பது படத்தின் ஒரு குறியீடாகச் சேர்க்கப்பட்டது. 

அந்த காலகட்டத்தில் காட்டுமுயல்கள்  உணவாகவோ அல்லது தோட்டப் பயிர்களுக்கு ஒரு தொல்லை தரும் விலங்காகவோதான் பார்க்கப்பட்டது. 

அவற்றை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் வழக்கம் அப்போது இல்லை. தனது 17 குழந்தைகளின் இழப்பை அரசியின் தனிமையுடன் இணைத்துக் காட்ட இயக்குனர் பயன்படுத்திய ஒரு கற்பனையான உத்தியே இந்த முயல்கள்.

அரசியின் தோற்றம் , அந்தஸ்து குறித்த தரவுகளில் சில நுணுக்கமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

சாரா சர்ச்சிலை படத்தில் லேடி மார்ல்பரோ என்று அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர் 1702-லேயே மார்ல்பரோவின் டச்சஸ்  என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டார். 

அதேபோல் அபிகேல் ஹில் வறுமையிலிருந்து வந்தவர் என்பது உண்மைதான். ஆனால் அவர் தந்தை அவரைச் சூதாட்டத்தில் பந்தயம் வைத்தார் என்பதற்கும் வலுவான ஆதாரங்கள் இல்லை.

இயக்குனர் லந்திமோஸ் சித்தரித்தது போல இப்படத்தில் சில விஷயங்கள் உண்மையானவை பல விஷயங்கள் கற்பனையானவை.

 வரலாற்று நிகழ்வுகளை அப்படியே படமாக்குவதை விட அந்த கதாபாத்திரங்களுக்கு இடையே இருந்த அதிகாரம் மற்றும் பொறாமை போன்ற உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதே படத்தின் நோக்கமாக இருந்துள்ளது. 

 வரலாற்றின் சட்டகத்திற்குள் ஒரு நவீனக்கால உறவுச்சிக்கலை இப்படம் பேசுகிறது.

திரைக்கதை ஆசிரியர் டெபோரா டேவிஸ் 1998 ஆம் ஆண்டிலேயே இதற்கான முதல் வரைவை எழுதி முடித்துவிட்டார்.

 திரைக்கதையில் முன் அனுபவம் இல்லாத அவர் இதற்காக இரவு நேர வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற்றார். 

வின்ஸ்டன் சர்ச்சில் தனது முன்னோரான மார்ல்பரோ பிரபுவைப் பற்றி எழுதிய நான்கு பாக சுயசரிதையில் விவரித்துள்ள அரசியின் அந்தரங்க முக்கோண உறவை ஆதாரமாகக் கொண்டு இந்த கதையை அவர் உருவாக்கினார். 

இந்தப் படத்தின் கதையில் இடம்பெற்ற ஓரினச்சேர்க்கை அம்சங்கள் மற்றும் ஆண்களுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லாத சூழல் காரணமாகப் பல தயாரிப்பு நிறுவனங்கள் தொடக்கத்தில் இதற்கு நிதி வழங்கத் தயங்கின.

 இறுதியில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகே இப்படம் முழு வடிவம் பெற்று திரைக்கு வந்தது.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாக இயக்குநர் யோர்கோஸ் லாந்திமோஸ் நடிகர்களுக்கு மூன்று வார காலம் விசித்திரமான பயிற்சியை அளித்தார்.

 நடிகர்கள் ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டு மனித முடிச்சுகளைப் போலத் தரையில் உருண்டு கொண்டே வசனங்களைப் பேச வேண்டும். 

ஒரு காட்சியில் என்ன நடக்கிறது என்பதை விட நடிகர்கள் ஒருவருக்கொருவர் உடல் ரீதியாக எவ்வளவு நெருக்கமாகவும் வசதியாகவும் இருக்கிறார்கள் என்பதை அறியவே இந்த வினோதமான பயிற்சியை அவர் மேற்கொண்டார்.

 வசனங்களின் அர்த்தத்தைப் பற்றி நடிகர்கள் அதிகம் யோசிக்கக் கூடாது என்பதே இயக்குநரின் முக்கிய நோக்கமாக இருந்தது.

படத்தின் ஆடை வடிவமைப்பாளர் சாண்டி பவல் மிகக் குறைந்த செலவில் பிரமிக்க வைக்கும் ஆடைகளை உருவாக்கினார். 

அரசியின் கம்பீரத்தைக் காட்ட அவரது ஆடையை எர்மின் எனப்படும் விலையுயர்ந்த ரோமங்களால் முழுமையாகப் போர்த்தினார். 

பொதுவாக அரச குடும்ப ஆடைகள் தங்கம் மற்றும் நகைகளால் இழைக்கப்பட்டிருக்கும் ஆனால் இப்படத்தில் அரசியின் தனிமையைப் பிரதிபலிக்க முற்றிலும் மாறுபட்ட பாணியைக் கையாண்டார். 

அதேபோல் சாரா சர்ச்சில் கதாபாத்திரத்திற்கு ஆண்களைப் போன்ற வேட்டை ஆடைகளை வடிவமைத்தார். 

இப்படத்தில் நடித்த ஆண்களுக்கு அதிக அளவில் ஒப்பனை மற்றும் பெரிய விக் தலைமுடி பயன்படுத்தப்பட்டது.

 பெண்கள் மையமாக இருக்கும் இப்படத்தில் ஆண்களை வெறும் அலங்காரப் பொருளாகக் காட்டவே இத்தகைய முடிவை இயக்குநர் எடுத்தார்.

ஒளிப்பதிவாளர் ராபி ரையன் ஃபிஷ்-ஐ லென்ஸ்களைப் பயன்படுத்தியது படத்தின் காட்சி மொழிக்கு ஒரு தனித்துவமான அழகைத் தந்தது. ஹார்ட்ஃபீல்ட் ஹவுஸ் மாளிகையின் தரைத்தளம் முதல் கூரை வரை அனைத்தையும் ஒரே காட்சியில் காட்ட இது உதவியது. 

படப்பிடிப்பின் போது பெரும்பாலான காட்சிகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே படமாக்கப்பட்டன. 

இதற்காகப் பல நூறு மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்பட்டன. மாளிகையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி மெழுகுவர்த்திகளில் இருந்து உருகும் மெழுகு தரையில் படாமல் இருக்கச் சிறப்பு மெழுகு பிடிப்பான்கள் பயன்படுத்தப்பட்டன.

 ஆக்ஸ்போர்டு போட்லியன் நூலகத்தின் சில முக்கியப் பகுதிகள் நாடாளுமன்றக் காட்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன.

அரசி ஆன் கதாபாத்திரத்திற்கு ஒலிவியா கோல்மன் மட்டுமே இயக்குநரின் ஒரே தேர்வாக இருந்தார். 

சாரா சர்ச்சில் கதாபாத்திரத்திற்கு முதலில் கேட் வின்ஸ்லெட் ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஆனால் பின்னர் அவருக்குப் பதிலாக ரேச்சல் வைஸ் அந்தப் பாத்திரத்தில் நடித்தார். 

எம்மா ஸ்டோன் இந்தப் படத்தில் நடிக்கத் தானாகவே முன்வந்து இயக்குநரை அணுகினார். அவர் தனது பிரிட்டிஷ் உச்சரிப்பைச் சரியாகக் கொண்டுவரத் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார். 

 படத்தின் ஒலியமைப்பு மிகவும் தனித்துவமானது. இதற்கெனத் தனியாக இசையமைப்பாளர் எவரும் நியமிக்கப்படவில்லை.

 ஒலியமைப்பாளர் ஜானி பர் இசைக்கும் சத்தத்திற்கும் இடைப்பட்ட மெல்லிய இடைவெளியைக் கொண்டு ஒருவித பதற்றமான சூழலை உருவாக்கினார். 

விவால்டி மற்றும் பாக் போன்ற புகழ்பெற்ற மேதைகளின் செவ்வியல் இசைக்கோர்ப்புகளுடன் நவீன காலத்து இசையும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 படத்தின் இறுதியில் எல்டன் ஜானின் ஸ்கைலைன் பிஜன் என்ற பாடல் ஒலிக்கிறது. இதில் அவர் ஹார்ப்சிகார்ட் எனும் பழங்கால இசைக் கருவியைப் வாசித்துள்ளது பதினெட்டாம் நூற்றாண்டின் சூழலுக்குப் பொருத்தமாக அமைந்தது.

ஒளிப்பதிவில் ஸ்டெடிகேம் கருவிகளைத் தவிர்த்துவிட்டு கேமரா நகர்வுகளில் ஒருவித திரவத் தன்மையைக் கொண்டுவரத் தொழில்நுட்பக் குழுவினர் கடுமையாக உழைத்தனர். 

இதற்காகப் புதிய வகை கிம்பல் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. வைட் ஆங்கிள் லென்ஸ்கள் மூலம் கதாபாத்திரங்களை ஒரு பெரிய அறையில் தனிமைப்படுத்திக் காட்டிய விதம் ஒரு விளையாட்டு மைதானம் எப்படி மெல்லப் போர்க்களமாகவும் பின்னர் ஒரு சிறைச்சாலையாகவும் மாறுகிறது என்பதைத் தத்ரூபமாகப் படம்பிடித்தது.

 ஹார்ட்ஃபீல்ட் ஹவுஸ் மாளிகையின் தரைத்தளத்தில் இருந்த கருப்பு வெள்ளை பளிங்கு கற்களின் வடிவமே படத்தின் ஆடை மற்றும் அரங்க வடிவமைப்பிற்கான வண்ணங்களைத் தீர்மானிக்க அடிப்படையாக அமைந்தது.

ஆடை வடிவமைப்பாளர் சாண்டி பவல் மிக நுணுக்கமான குறியீடுகளை ஆடைகளில் புகுத்தினார். அபிகேல் அதிகாரம் பெறப் பெற அவரது ஆடைகள் மிகவும் பகட்டானதாகவும் வரிகள் நிறைந்ததாகவும் மாற்றப்பட்டன. 

இது அவர் திடீரெனப் பணக்காரரானவர் என்பதைக் காட்டப் பயன்படுத்தப்பட்ட உத்தி. அதேபோல் சாரா சர்ச்சிலின் ஆடை வடிவமைப்பு 1992 இல் வெளியான ஆர்லாண்டோ திரைப்படத்தின் சாயலைக் கொண்டிருந்தது. 

அரசி ஆன் பெரும்பாலும் இரவு உடைகளிலேயே தோன்றுவது அவரது உடல்நலக் குறைவையும் சோர்வையும் குறிக்கவே திட்டமிடப்பட்டது.

  நடிகர்கள் வரலாற்றுப் புத்தகங்களைப் படித்துத் தயார் செய்வதை விட ஒருவருக்கொருவர் இருந்த உறவை உணர்ந்து நடிக்கவே இயக்குநர் அறிவுறுத்தினார்.
 
வெனிஸ் திரைப்பட விழாவில் தொடங்கி ஆஸ்கார் வரை இப்படம் நிகழ்த்திய சாதனைகள் மிகப்பெரியவை. குறிப்பாக ஒலிவியா கோல்மன் ஆஸ்கார் விருதை வென்றபோது அவர் ஆற்றிய நெகிழ்ச்சியான உரை உலக அளவில் பேசப்பட்டது.

 ஆஸ்கார் வரலாற்றில் ரோமா திரைப்படத்துடன் இணைந்து அந்த ஆண்டின் அதிகப்படியான பத்து பரிந்துரைகளைப் பெற்ற திரைப்படமாக இது சாதனை படைத்தது. 

21-ஆம் நூற்றாண்டின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இன்றும் இப்படம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

 இங்கிலாந்து அரசவை என்பது வெறும் சொகுசு வாழ்க்கை அல்ல அது சூழ்ச்சிகளும் தனிமையும் நிறைந்த ஒரு இருண்ட உலகம் என்பதை இந்தப் படத்தின் ஒவ்வொரு நுணுக்கமும் உலகிற்கு உரக்கச் சொன்னது.

பதினெட்டாம் நூற்றாண்டின் அரசியான ஆனை ஒரு பலவீனமான மற்றும் விசித்திரமான கதாபாத்திரமாகச் சித்தரிக்க பிரிட்டிஷ் வரலாற்று ஆர்வலர்களும் அதிகார அமைப்புகளும் இசைந்ததற்குப் பின்னால் சில முக்கியக் காரணங்கள் உள்ளன. 

இங்கிலாந்து வரலாற்றில் ஆன் என்பவர் மிக நீண்ட காலம் ஒரு மறக்கப்பட்ட அல்லது குறைத்து மதிப்பிடப்பட்ட அரசியாகவே இருந்து வந்தார். 

அவரைப் பற்றிய பிம்பம் பெரும்பாலும் சாராவின் நினைவுக் குறிப்புகளின் மூலமே கட்டமைக்கப்பட்டிருந்தது.

 சாரா தனது குறிப்புகளில் ஆனை ஒரு மந்தமான மற்றும் முடிவெடுக்கத் தெரியாத பெண்ணாகவே சித்தரித்திருந்தார். 

இதனால் படத்தில் காட்டப்படும் பலவீனமான உருவம் ஏற்கனவே மக்கள் மத்தியில் இருந்த ஒரு வரலாற்றுப் பார்வையின் நீட்சியாகவே பார்க்கப்பட்டது.

பிரிட்டிஷ் கலாச்சாரத்தில் அரச குடும்பத்தினரை நையாண்டி செய்வது என்பது நீண்ட கால மரபாக இருந்து வருகிறது. 

விக்டோரியா அரசியையோ அல்லது இரண்டாம் எலிசபெத் அரசியையோ போலன்றி ஆன் ஒரு தொன்மையான வரலாற்று மாந்தராகக் கருதப்படுகிறார். 

கால இடைவெளி அதிகமாக இருப்பதால் அவரைப் பற்றிய விமர்சனங்கள் அல்லது நையாண்டிகள் தற்கால அரச குடும்பத்தின் கௌரவத்தை நேரடியாகப் பாதிக்காது என்று கருதப்பட்டது. 

 இது ஒரு வரலாற்றுப் பாடமாக எடுக்கப்படாமல் ஒரு கலைப் படைப்பாகவும் அவல நகைச்சுவையாகவும் முன்னிறுத்தப்பட்டது.

இயக்குநர் லாந்திமோஸ் ஆனை ஒரு கேலிச்சித்திரமாக மட்டும் காட்டாமல் அவரது ஆழ்ந்த சோகத்தையும் தனிமையையும் நேர்த்தியாகப் பதிவு செய்திருந்தார். 

பதினேழு குழந்தைகளை இழந்த ஒரு தாயின் வேதனையை அவர் காட்டிய விதம் அரசியின் மீதான ஒருவித அனுதாபத்தை பார்வையாளர்களிடம் உருவாக்கியது. 

இது கேலியையும் தாண்டி ஒரு மனிதப் பண்பை வெளிப்படுத்தியதால் வரலாற்று ரீதியாக இதற்குப் பெரிய எதிர்ப்புகள் எழவில்லை. 

படத்தின் தரமும் அது வெளிப்படுத்திய மேதமையும் அதன் சர்ச்சைக்குரிய பக்கங்களை மறைத்து ஒரு சிறந்த உலக சினிமாவாக அதனை நிலைநிறுத்தின.

அரசவை என்பது வெறும் அதிகார மையமல்ல அது மனிதர்களின் பலவீனம் மற்றும் பொறாமைகள் நிறைந்த ஒரு தளம் என்பதை இப்படம் அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியது.

 இங்கிலாந்து போன்ற நாடுகளில் கலை சுதந்திரத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் இத்தகைய துணிச்சலான சித்தரிப்புகளுக்கு வழிவகுத்தது. 

உண்மையான வரலாற்றை விடவும் அந்த கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான உண்மைக்கு இயக்குநர் முக்கியத்துவம் அளித்ததே இத்தனை பெரிய சர்ச்சைக்குரிய கதையை உலகமே கொண்டாடும் வகையில் எடுக்க அனுமதி கிடைத்தது.

============================
படத்தின் கதை:-

1705-ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசம் பிரான்சுடன் கடுமையான போரில் ஈடுபட்டிருந்தது.

 நாட்டின் பேரரசி ஆன் (ஒலிவியா கோல்மன்) உடல்நிலையிலும் மனநிலையிலும் மிகவும் பலவீனமாக இருந்தார். 

வாத நோயால்  அவரது கால்கள் வீங்கி நடக்க முடியாமல் துடித்தார். அவருக்கு 17 முறை கருச்சிதைவு மற்றும் குழந்தை இறப்புகள் ஏற்பட்டிருந்தன, அரசரை கடைசிவரை  இக்கதையில் முக்கியத்துவம் கருதி காட்டுவதில்லை, புத்திர சோகத்தின்  வலியைப் போக்க, தனது 17 குழந்தைகளுக்கு மாற்றாக 17 காட்டு முயல்களைத் தனது சொகுசு அறையிலேயே வளர்த்து வருகிறார்.

அரசிக்கு அரசியலில் பெரிய நாட்டம் இல்லாததால், அவரது நீண்ட காலத் தோழியும் ஆலோசகருமான சாரா சர்ச்சில் (ரேச்சல் வைஸ்) நாட்டைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 

வரியை உயர்த்துவது, போரைத் தொடர்வது போன்ற முக்கிய முடிவுகளைச் சாராவே எடுக்கிறார்.

 அரசியுடனான சாராவின் உறவு வெறும் நட்பையும் தாண்டி பாலியல் ரீதியான ரகசிய உறவாகவும் நீடித்தது.

 இந்தச் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் ராபர்ட் ஹார்லி (நிக்கோலஸ் ஹோல்ட்) சாராவின் அதிகாரத்தைக் குறைக்க தக்க சமயம் பார்த்துக் காத்திருந்தார்.

இந்த நேரத்தில் சாராவின் தூரத்து உறவினரான அபிகேல் ஹில் (எம்மா ஸ்டோன்) வேலை தேடி அரண்மனைக்கு வருகிறார்.

 அபிகேலின் தந்தை ஒரு காலத்தில் சீமானாக இருந்தவர், ஆனால் சூதாட்டத்தில் தனது சொத்துக்கள் அனைத்தையும், ஏன் தனது மகளான அபிகேலையே ஒரு விளையாட்டில் பந்தயமாக வைத்துத் தோற்றுப்போனார்.

 இதனால் மிகவும் கேவலப்பட்டு தரித்திரம் பீடித்த அபிகேல், அரண்மனையில் ஒரு சாதாரண சமையலறைப் பணிப்பெண்ணாகச் சேர்கிறார்.

ஒருநாள் அரசியின் கால்களில் ஏற்பட்ட வீக்கத்தைப் பார்த்த அபிகேல், காட்டில் இருந்து சில மூலிகைகளைக் கொண்டு வந்து பற்றுப் போட்டு அரசியின் வலியைத் தணிக்கிறார். 

அனுமதியின்றி அரசியின் அறைக்குள் நுழைந்ததற்காக சாரா முதலில் அபிகேலை கசையடியால் தண்டித்தாலும், அந்த மூலிகைகள் வேலை செய்ததை உணர்ந்து, அபிகேலை அரசியின் படுக்கையறைப் பணிப்பெண்ணாக பதவி உயர்வு செய்கிறார்.

ஒரு இரவு சாரா மற்றும் அரசி உடலுறவு கொள்வதை அபிகேல் மறைந்திருந்து பார்த்துவிடுகிறார். இதுதான் தனக்கான வாய்ப்பு என உணரும் அபிகேல், மெல்ல மெல்ல அரசியின் அன்பை தானும் பெறத் தொடங்குகிறார்.

 ஹார்லி இவரைத் தனது பக்கம் இழுத்து அரசியின் ரகசியங்களை உளவு பார்க்கச் சொல்கிறார்.

அரசியிடம் சாரா காட்டும் அன்பு மிகவும் அதிகாரபூர்வமானதாகவும் கடினமானதாகவும் இருந்தது. ஆனால் அபிகேல் அரசியை ஒரு குழந்தையைப் போலக் கொஞ்சி, அவரது மனதைக் கவர்கிறார். 

இதைக் கண்டறிந்த சாரா, அபிகேலை வெளியேற்ற முயற்சி செய்கிறார். ஆனால் தந்திரமான அபிகேல், சாராவின் தேநீரில் மெல்ல வேலை செய்யும் மயக்க மருந்து கலந்து கொடுக்கிறார்.

 மயக்கமடைந்த சாரா குதிரையில் செல்லும்போது விபத்தில் சிக்கி, காட்டில் விழுந்து ஒரு விபச்சார விடுதியில் சிக்கிக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு விருந்தாகிறார்.

சாரா தன்னை விட்டுப் பிரிந்து போய்விட்டதாக எண்ணிய அரசி ஏமாற்றமடைகிறார். அந்த இடத்தை அபிகேல் நிரப்புகிறார். 

அரசியின் ஆதரவுடன் கர்னல் மாஷாம் (ஜோ ஆல்வின்) என்பவரைத் திருமணம் செய்துகொண்டு மீண்டும் உயர்குடி 'சீமாட்டி' பரொனஸ் அந்தஸ்தைப் பெறுகிறார் அபிகேல்.

தன் கணவரின் உதவியால் மீண்டு வரும் சாரா, அபிகேலுடன் சமாதானம் செய்ய மறுக்கிறார்.

 அரசியிடம் தனது செல்வாக்கை மீண்டும் பெற முயல்கிறார். அரசி தனக்கு எழுதிய ரகசியக் காதல் கடிதங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார். 

ஒருகட்டத்தில் மனம் மாறி அக்கடிதங்களைச் சாரா எரித்தாலும், அந்த மிரட்டலால் கோபமடைந்த அரசி, சாராவைத் தனது அறையிலிருந்து வெளியேற்றுகிறார்.

நிதியமைச்சர் கோடோல்பின் (ஜேம்ஸ் ஸ்மித்) ஆலோசனையின் பேரில் சாரா அரசியிடம் மன்னிப்புக் கேட்டு ஒரு கடிதம் அனுப்புகிறார்.

 ஆனால் அந்தக் கடிதத்தை அரசியிடம் கொடுக்காமல் அபிகேல் எரித்துவிடுகிறார்.

 சாரா மன்னிப்புக் கேட்கவில்லை என்று கோபமடைந்த அரசி, சாராவையும் அவரது கணவர் ஜான் சர்ச்சிலையும் (மார்க் கேடிஸ்) நாட்டை விட்டே நாடுகடத்த உத்தரவிடுகிறார்.

சாரா சென்ற பிறகு, அபிகேல் தான் நினைத்தபடி அனைத்து அதிகாரங்களையும் பெறுகிறார். 

அரசியிடம் அன்பு செலுத்துவதை நிறுத்திவிட்டு, ஆடம்பர வாழ்க்கையில் திளைக்கிறார். 

ஒருநாள் அரசியின் செல்ல முயல் ஒன்றை அவர் காலால் மிதித்துத் துன்புறுத்துகிறார்.

 மிகவும் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த அரசி, அபிகேலின் இந்தச் செயலைப் பார்த்து அவரது உண்மையான சுபாவத்தைப் புரிந்து கொள்கிறார்.

இறுதியில், அரசி ஆன் தனது படுக்கையிலிருந்து எழுந்து வந்து, மண்டியிட்டுத் தனது காலை பிடித்து விடுமாறு அபிகேலுக்குக் கட்டளையிடுகிறார்.

 அபிகேலின் முடியைப் பிடித்து இழுத்து அவரை அடிமை போல நடத்துகிறார் அரசி. 

யார் ஒருவரிடம் உண்மையான அன்பு இருந்ததோ (சாரா), அவரை இழந்துவிட்டு, அதிகாரத்துக்காகத் தன்னைத் தேடி வந்த ஒரு அடிமையுடன் (அபிகேல்) தனிமையில் சிக்கிக்கொண்ட அரசியின் விரக்தியான முகத்தோடு கதை முடிகிறது.

அதிகாரம் என்பது ஒரு மனிதனை எவ்வளவு உச்சத்திற்குக் கொண்டு செல்கிறதோ அதே அளவு அவனைத் தனிமைப்படுத்தவும் செய்யும் என்பதே இப்படம் சொல்லும் மிக முக்கியமான செய்தியாகும். 

அரசியாக இருக்கும் ஆன் உலகையே ஆளும் அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் தனது அந்தரங்க அறையில் அவர் நோயாலும் இழந்த குழந்தைகளின் நினைவாலும் வாடும் ஒரு சாதாரணப் பெண்ணாகவே இருக்கிறார்.

 அவரைச் சுற்றியுள்ளவர்கள் காட்டும் அன்பு உண்மையானதா அல்லது அவரது அதிகாரத்திற்காகக் காட்டப்படும் போலியானதா என்பதை அறிய முடியாத குழப்பமே அவரது மிகப்பெரிய பலவீனமாக அமைகிறது.

சாரா மற்றும் அபிகேல் ஆகிய இருவருமே அரசியிடம் செல்வாக்கு பெறப் போட்டியிடுகிறார்கள் என்றாலும் அவர்கள் அணுகும் முறை முற்றிலும் வேறானது. சாரா அரசியிடம் காட்டும் அன்பு மிகவும் கடுமையானது மற்றும் நேர்மையானது.

 அரசியின் முகத்திற்கு நேராக உண்மையைச் சொல்லும் சாரா அவரைத் திறமையான ஆட்சியாளராக மாற்ற விரும்புகிறார். 

ஆனால் அபிகேல் வறுமையிலிருந்து தப்பிக்க அரசியின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு பிழைப்புவாதியாக இருக்கிறார். 

அரசி எதை விரும்புகிறாரோ அதைச் செய்து பொய்யான அன்பைக் காட்டி அவர் அரசியைக் கவர்கிறார். இறுதியில் கசப்பான உண்மையைச் சொல்லும் சாரா வெளியேற்றப்படுவதும் இனிப்பான பொய்களைச் சொல்லும் அபிகேல் வெற்றி பெறுவதும் உலகம் பெரும்பாலும் கசப்பான உண்மையை விட வசதியான பொய்களையே விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது.

வெற்றியின் கசப்பான முடிவை இப்படத்தின் இறுதிக்காட்சி மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. 

அபிகேல் தான் நினைத்தபடி அனைத்து எதிரிகளையும் வீழ்த்தி உயர்குடி அந்தஸ்தைப் பெற்று வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியின் முடிவில் அவர் ஒரு அடிமையைப் போல அரசியின் காலடியில் மண்டியிட்டு அமர வேண்டியுள்ளது. 

அதிகாரம் என்பது ஒரு சக்கரம் போன்றது அங்கே யாரும் யாருக்கும் உண்மையான நண்பர்கள் கிடையாது. யாரை நம்புவது என்ற புரிதல் இல்லாத அதிகாரத்தின் முடிவு பெரும் விரக்தியே என்பதை அந்த இறுதித் திரையில் விரியும் அரசியின் முகம் உணர்த்துகிறது.

 வறுமை ஒரு மனிதனை எவ்வளவு தரம் தாழ்த்தும் என்பதையும் அதிகாரம் கிடைத்தால் அதே மனிதன் எவ்வளவு குரூரமாக மாறுவான் என்பதையும் அபிகேல் பாத்திரம் மூலம் இயக்குனர் உணர்த்தியுள்ளார்.

 அடிமட்டத்திலிருந்து வந்த அபிகேல் அதிகாரம் கிடைத்தவுடன் வாயில்லாப் பிராணியான முயலை வதைப்பதன் மூலம் அடக்கப்பட்டவன் அதிகாரம் பெறும்போது இன்னும் கொடூரமானவனாக மாறுவான் என்ற உளவியலைப் இப்படம் பேசுகிறது. 

 அன்பு துரோகம் அதிகாரம் ஆகியவற்றிற்கு இடையிலான மெல்லிய கோட்டைப் பற்றியும் இறுதியில் இவை அனைத்தும் மனிதனை ஒரு சூனியமான தனிமைக்கே இட்டுச் செல்லும் என்பதையும் இப்படம் செய்தியாகச் சொல்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஆஸ்கர் (66) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)