Ida - இடா போலந்து மொழி திரைப்படம் 2013 ஆம்ஆண்டு வெளியானது.
பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இது ஒரு வரலாற்று உளவியல் வகை திரைப்படம்.
1960ளில் போலந்தில் கத்தோலிக்க கன்னியாஸ்திரியாக மாறவிருக்கும் ஒரு இளம் பெண் தன் குடும்பம் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தேடிச் செல்லும் பயணமே இதன் மையகதை.
'இடா' வரலாற்றுப் பேரழிவுகளால் தனிமனிதர்களின் ஆன்மாவிலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் ஏற்படும் ஆழமான வடுக்களையும், அதிலிருந்து பிறக்கும் அடையாளத் தேடலையும் பேசுகிறது.
இரண்டாம் உலகப் போர், யூத இனப்படுகொலை மற்றும் ஸ்டாலினிய அடக்குமுறை போன்ற கொடூரமான வரலாற்று நிகழ்வுகளைப் படம் சத்தமாகப் பேசாமல், ஒரு மௌனமான வளிமண்டலமாக மட்டுமே காட்டி, அதன் பாதிப்புகளை மனிதர்களின் உணர்வுகள் வழியே அழுந்த கடத்துகிறது.
பிறப்பால் யூதராக இருந்து, போர்க்காலச் சூழலால் கத்தோலிக்க மடாலயத்தில் கன்னியாஸ்திரியாக வளரும் ஒரு பெண், தன் உண்மையான அடையாளத்தை அறியும்போது அவளுக்குள் ஏற்படும் அகப் போராட்டமே இதன் மையப்புள்ளி.
வளர்க்கப்பட்ட ஆன்மீக மத நம்பிக்கைக்கும், பிறப்பால் வந்த இன அடையாளத்திற்கும் இடையே நடக்கும் இந்தத் தத்தளிப்பு, மனித வாழ்வின் இரு வேறு துருவங்களைச் சந்திக்க வைக்கிறது.
ஒருபுறம் உலகியல் இன்பங்கள், அதிகாரம், மது மற்றும் பாலியல் வழியே போர்க்காலத் துயரங்களையும் தனிமையையும் மறக்க முயன்று, இறுதியில் விரக்தியில் முடியும் வாண்டாவின் வாழ்க்கை.
மறுபுறம், அதே உலகியல் இன்பங்களை ஒருமுறை அனுபவித்துவிட்டு, அதில் நிரந்தர அமைதி இல்லை என்பதை உணர்ந்து மீண்டும் ஆன்மீகத் துறவை நோக்கித் திரும்பும் இடாவின் முடிவு.
இதன் மூலம், மனித வாழ்வின் தற்காலிக இன்பங்களுக்கும் ஆன்மீகத் தேடலுக்கும் இடையே உள்ள முரண்பாட்டைப் படம் ஆழமாக விவாதிக்கிறது.
போர்க்காலத்தில் தங்களைக் காத்துக்கொள்ள சக மனிதர்களுக்கு இழைத்த துரோகங்களும், அதனால் ஏற்படும் கூட்டுப் பாவம் மற்றும் குற்ற உணர்ச்சியுமே கதையின் மாபெரும் சுமையாகப் பின்னணியில் நகர்கிறது.
வரலாறு தந்த கொடூரமான வடுக்கள், துரோகங்கள் மற்றும் குற்ற உணர்ச்சிகளுக்கு நடுவே, வாழ்வை இழந்த மனிதர்கள் தங்களுக்குள் உண்மையான அமைதியையும், ஆன்மீக விடுதலையையும், சுய அடையாளத்தையும் எவ்வாறு தேடிக் கண்டடைகிறார்கள் என்பதே இப்படத்தின் அடிநாதம்.
அகதா குலேசா மற்றும் அகதா ட்ரெபுச்சோவ்ஸ்கா ஆகிய இரு பெண் ஆளுமைகளின் நடிப்பு கதாபாத்திரங்களின் அகப் போராட்டத்தையும் சோகத்தையும் மிக ஆழமாக வெளிப்படுத்தியுள்ளது.
இயக்குனர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி தேவையற்ற வசனங்களைத் தவிர்த்து மௌனத்தின் மூலமாகவும் குறியீடுகள் மூலமாகவும் கதையை மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார்.
லூகாஸ் ஜால் மற்றும் ரிஸார்ட் லென்செவ்ஸ்கி ஆகியோரின் ஒளிப்பதிவு 4:3 என்ற பழைய திரையமைப்பில் கருப்பு வெள்ளை நிறத்தில் ஒவ்வொரு காட்சியையும் ஒரு ஓவியம் போலவும் பார்ப்பவரை உலுக்கும் விதத்திலும் அமைத்துள்ளது.
சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் போலந்து திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றதோடு பாஃப்டா மற்றும் ஐரோப்பிய திரைப்பட விருதுகள் உட்பட பல சர்வதேச விருதுகளை இப்படம் வென்றுள்ளது.
இப்படத்தின் அசல் ஒளிப்பதிவாளரான ரிஸார்ட் லென்செவ்ஸ்கி, இயக்குனர் பாவ்லிகோவ்ஸ்கியுடன் நீண்ட காலமாகக் பணியாற்றியவர். படத்தின் துவக்கக் கட்டத்தில், 1960களின் போலந்துத் திரைப்படங்களின் ஆன்மாவைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, கருப்பு வெள்ளை வடிவத்தையும் 4:3 என்ற பழைய திரையமைப்பையும் பயன்படுத்தலாம் என்று இயக்குனரிடம் முன்மொழிந்தார்.
தயாரிப்பாளர்கள் இதை எதிர்த்து, 'நீங்கள் ஒன்றும் பிலிம் பள்ளி மாணவர் அல்ல, முட்டாள்தனமாக யோசிக்காதீர்கள்' என்று கேலி செய்தபோதும், இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக நின்றனர்.
ஆனால், படப்பிடிப்புத் துவங்கிய சில நாட்களிலேயே ரிஸார்ட் லென்செவ்ஸ்கி எதிர்பாராதவிதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படத்திலிருந்து விலக நேர்ந்தது.
இதனால் ஒட்டுமொத்தப் படக்குழுவும் அதிர்ச்சியடைந்தது. அப்போது அவருக்கு உதவியாளராக வந்திருந்த, அதுவரை முழுநீளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திராத இளம் ஒளிப்பதிவாளர் லூகாஸ் ஜால் என்பவரிடம் கேமரா பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
துவக்கத்தில் லூகாஸ் ஜால் வெறும் தொழில்நுட்ப உதவியை மட்டுமே செய்வார் என்றுதான் இயக்குனர் நினைத்தார்.
ஆனால் ஜால், லென்செவ்ஸ்கியின் முந்தைய திட்டத்தை அப்படியே நகலெடுக்காமல், அதில் தன் சொந்தப் பார்வையையும் புகுத்தினார்.
கதாபாத்திரங்களின் தலைக்கு மேலே அதிக இடைவெளி விட்டு, அவர்களைத் திரையின் கீழ் மூலையில் வைக்கும் 'அசாதாரணமான பிரேமிங்' முறையை அவர் கையாண்டார்.
இது பார்ப்பவர்களுக்கு ஒருவித அசுவாரஸ்யத்தையும், கதாபாத்திரங்களின் தனிமையையும் கடத்த உதவியது.
படப்பிடிப்பின் பாதியிலேயே போலந்தில் கடுமையான பனிப்புயல் தாக்கியதால், படப்பிடிப்பை இரண்டு வாரங்கள் ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தத் தற்காலிக இடைவேளையை இயக்குனர் பாவ்லிகோவ்ஸ்கியும், லூகாஸ் ஜாலும் ஒரு வரப்பிரசாதமாக மாற்றிக்கொண்டனர்.
அந்த இரண்டு வாரங்களில், புதிய ஒளிப்பதிவுக் கோணங்களை யோசிக்கவும், லொகேஷன்களை மறுபரிசீலனை செய்யவும், அதுவரை எடுத்த காட்சிகளைத் தொகுத்துப் பார்க்கவும் அவர்களுக்குப் போதிய நேரம் கிடைத்தது.
இதுவே படத்தின் காட்சிகளுக்கு ஒரு புதுவிதமான அடர்த்தியையும், ஓவியம் போன்ற அமைப்பையும் தரக் காரணமாய் அமைந்தது.
இறுதியில், ஒரு முதன்மை ஒளிப்பதிவாளர் பாதியில் விலகியதும், பனிப்புயல் வந்து தடுத்ததும் படத்திற்குப் பின்னடைவாக அமையாமல், ஒரு இளம் ஒளிப்பதிவாளரின் தனித்துவமான ஆஸ்கார் அளவிலான ஒளிப்பதிவு உலகிற்கு கிடைக்கக் காரணமாய் அமைந்தது.
இப்படத்தின் மிக முக்கிய தனித்துவமே, இதில் கதாபாத்திரங்கள் தங்களுக்குள் கேட்கும் இசையைத் தவிர, பின்னணியில் பார்வையாளர்களுக்காக ஒலிக்கவிடப்படும் எந்தவொரு பிரத்யேக அசல் பின்னணி இசையும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான்.
இயக்குனர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி படத்தின் வளிமண்டலத்தை மிகவும் யதார்த்தமாகவும், 1960களின் போலந்து நாட்டின் வெறுமையைக் கடத்தும் விதமாகவும் அமைக்க விரும்பினார்.
இதற்காக, கதையோடு இயல்பாக வரும் ஒலிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தார்.
படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் கதாபாத்திரங்கள் தங்களின் அன்றாட வாழ்வில் கேட்கும் இசையாகவே அமையும்படி மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
வாண்டா தனது வீட்டில் ரசிக்கும் கிளாசிக்கல் இசை தட்டுகள் மற்றும் அவர்கள் காரில் பயணிக்கும்போது வானொலியில் ஒலிக்கும் போலந்து பாப் பாடல்கள் என அனைத்தும் அந்தந்தக் காட்சிகளின் உணர்வைக் கடத்த பயன்படுத்தப்பட்டன.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது படத்தின் இறுதிப் படத்தின் இறுதிக்காட்சி. படம் முழுவதும் எந்தவொரு பிரத்யேகப் பின்னணி இசையையும் சேர்க்காத இயக்குனர், படத்தின் இறுதி நிமிடங்களில் இடா நடந்து செல்லும் காட்சியைத் தொகுத்தபோது ஒருவித தவிப்புக்கு உள்ளானார்.
அந்த அமைதி அவருக்குப் போதவில்லை என்று தோன்றியதால், ஒலிச்சேர்க்கை செய்யும் ஸ்டுடியோவில் திடீரென்று ஒரு புதிய பரிசோதனையைச் செய்து பார்க்க விரும்பினார்.
அப்போது, ஜொஹான் செபாஸ்டியன் பாக்கின் புகழ்பெற்ற பியானோ இசைக்கோர்ப்பை அந்த இறுதிக்காட்சியின் பின்னணியில் ஒலிக்கவிட்டார்.
அது ஒரு மைனர் கீயில் அமைந்த சோகமான இசையாக இருந்தாலும், அதே நேரத்தில் ஒருவித அமைதியையும், உலகத்தின் சிக்கலான தன்மைகளை ஏற்றுக்கொண்ட முதிர்ச்சியையும் அந்த இடாவிற்குத் தருவதாக இயக்குனர் உணர்ந்தார்.
திட்டமிட்டு எந்தப் பின்னணி இசையும் சேர்க்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டு, இறுதிக்காட்சியில் ஏற்பட்ட தவிப்பால் அவசரமாக ஸ்டுடியோவில் சேர்க்கப்பட்ட அந்த ஒரு நிமிட பாக்கின் இசைதான், ஒட்டுமொத்தப் படத்திற்கும் ஒரு உன்னதமான ஆன்மீக நிறைவைத் தருவதாக மாறிப்போனது.
படத்தின் இயக்குனர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இங்கிலாந்தில் கழித்த பிறகு, தன் சிறுபிராயத்து போலந்து நாட்டின் நினைவுகளை மீட்டெடுப்பதற்காக முதன்முதலாக போலந்து மொழியில் எடுத்த திரைப்படம் இதுவாகும்.
இப்படத்தின் மையக் கதாபாத்திரமான இடா பாத்திரத்திற்குப் பொருத்தமான பெண்ணைத் தேடி, கிட்டத்தட்ட நானூறுக்கும் மேற்பட்ட தொழில்முறை நடிகைகளை இயக்குனர் நேர்காணல் செய்தார்.
ஆனால், அவற்றுள் எந்தவொரு பெண்ணும் அவரது மனதிற்குத் திருப்தி அளிக்கவில்லை. இந்தச் சூழலில் தான், பாவ்லிகோவ்ஸ்கியின் தோழி ஒருவர் வார்சாவில் உள்ள ஒரு காபி கடையில் புத்தகம் படித்துக்கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணைக் கவனித்தார்.
அகதா ட்ரெபுச்சோவ்ஸ்கா என்ற அந்த இருபது வயதுப் பெண்ணிற்கு அதுவரை நடிப்பில் எந்தவொரு முன் அனுபவமும் இல்லை, எதிர்காலத்தில் நடிகையாக வேண்டும் என்ற விருப்பமும் அவளுக்கு இருந்ததில்லை.
இருப்பினும், இயக்குனரின் முந்தைய படமான 'மை சம்மர் ஆஃப் லவ்' என்ற படத்தின் மீது இருந்த ஈர்ப்பால் மட்டுமே அவள் இயக்குனரைச் சந்திக்க ஒப்புக்கொண்டாள்.
அவளது முகத்தில் இருந்த அந்த மர்மமான அமைதியும், பேசாத கணகளும் தான் தேடிய 'இடா' பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துவதை உணர்ந்த இயக்குனர், அவளையே கதாநாயகியாக்கினார்.
அடுத்ததாக, படத்தின் மற்றொரு முக்கியத் தூணான வாண்டா க்ரூஸ் என்ற பாத்திரம், நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த ஹெலினா வோலின்ஸ்கா-ப்ரூஸ் என்ற பெண்ணின் பாதிப்பில் உருவானதாகும். அவர் ஸ்டாலினிய போலந்து ஆட்சியில் பல விசாரணை வழக்குகளை நடத்திய ஒரு யூத வழக்கறிஞர் ஆவார்.
ஆச்சரியமாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது இயக்குனர் இந்த ஹெலினாவை நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது அவரது கணவர் அங்கே பேராசிரியராக இருந்தார்.
அந்தச் சமயத்தில் ஹெலினாவின் கடந்த காலக் கொடூரமான பின்னணி இயக்குனருக்குத் தெரிந்திருக்கவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு, ஹெலினாவை போலந்து அரசாங்கம் தேடி வருவதை அறிந்த பாவ்லிகோவ்ஸ்கி, அவரது வாழ்க்கையை ஆவணப்படமாக்க முயன்றார். ஆனால், அவளது கணவர் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார்.
அந்த நிஜப் பாத்திரத்தின் ஆளுமையையும், அவளது முரண்பாடான வாழ்க்கையையும் மனதில் வைத்தே, வாண்டா க்ரூஸ் என்ற வலிமையான, மன அழுத்தங்கள் நிறைந்த கதாபாத்திரத்தை இயக்குனர் வடிவமைத்தார்.
கதை விவாதத்தின் போது, இந்தத் திரைக்கதை முதலில் ஆங்கிலத்தில் தான் 'சிஸ்டர் ஆஃப் மெர்சி' என்ற பெயரில் எழுதப்பட்டது.
பின்னரே இயக்குனர் அதனை போலந்து மொழிக்கு மாற்றி, படப்பிடிப்புத் தளத்தில் பல மாற்றங்களைச் செய்தார்.
இத்திரைப்படத்தின் முதற்கட்டத் திரைக்கதையை இயக்குனர் பாவ்லிகோவ்ஸ்கியும் ஆங்கில நாடக ஆசிரியர் ரெபெக்கா லென்கிவிச்சும் இணைந்து உருவாக்கியபோது, அது ஒரு வழக்கமான நாடகத் பாணியிலேயே இருந்தது.
ஆனால் போலந்து நாட்டின் நிதியுதவி கிடைத்தவுடன், படப்பிடிப்புத் தளத்தில் இயக்குனர் பல காட்சிகளைத் தன்னிச்சையாக மாற்றியமைத்தார்.
குறிப்பாக, வசனங்களை பாதியாகக் குறைத்து, நடிகர்களின் முகபாவனைகளுக்கும் மௌனத்திற்கும் அதிக முக்கியத்துவம் தந்தார்.
இது தயாரிப்புத் தரப்பிற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது; ஏனெனில் காகிதத்தில் இருந்ததை விடப் படப்பிடிப்பில் காட்சிகள் மிகவும் மெதுவாகவும் மௌனமாகவும் நகர்ந்தன.
அதேபோல், படத்தின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் காடுகளுக்குள் செல்லும் காட்சிகள், போலந்தின் மிகக் கடுமையான குளிர் காலத்தில் படம்பிடிக்கப்பட்டன.
பனிப்பொழிவுக்கு நடுவே, கைவிடப்பட்ட புதர்மண்டிய ஒரு நிஜமான யூதக் மயானத்தில் தான் அந்தப் புதைகுழித் தேடல் காட்சிகள் எடுக்கப்பட்டன.
அந்தச் சூழல் தந்த நிஜமான குளிரும் நடுக்கமும், நடிகர்களின் முகத்தில் போலித்தனமில்லாத சோகத்தையும், உறைந்துபோன ஒரு வரலாற்றுத் துயரத்தையும் இயற்கையாகவே வரவழைத்தன.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின் போது, படத்தொகுப்பாளர் யாரோஸ்லாவ் காமின்ஸ்கி மற்றும் இயக்குனர் இடையே காட்சிகளின் நீளம் குறித்துப் பல விவாதங்கள் எழுந்தன.
எடிட்டிங் மேஜையில் பல உணர்ச்சிகரமான நீளமான காட்சிகள் துணிச்சலாக வெட்டி எறியப்பட்டன.
பார்வையாளர்களுக்குத் திணிக்கப்பட்ட அழுகையையோ அல்லது நாடகத்தனத்தையோ தராமல், ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டுமே படம் இருக்க வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக இருந்தது.
இப்படம் வெளியான பிறகு போலந்தில் கிளம்பிய அரசியல் புயல் மற்றொரு சுவாரஸ்யமான வரலாற்று முரண்.
போலந்து நாட்டு தேசியவாதிகள், தங்கள் நாட்டு மக்கள் யூதர்களுக்கு இழைத்த துரோகத்தை மட்டுமே படம் காட்டுவதாகக் கூறி, படத்திற்கு முன்னுரை அட்டைகள் வைக்கக் கோரி நாற்பதாயிரத்திற்கும் அதிகமான கையெழுத்துகளைத் திரட்டிப் போராடினர்.
ஆனால், சர்வதேச அளவில் இப்படம் ஆஸ்கார் மேடை வரை சென்று போலந்து சினிமாவிற்கு அதுவரை கிடைக்காத ஆகச்சிறந்த வரலாற்றுப் பெருமையைத் தேடித்தந்தது தான் காலத்தின் விசித்திரமான தீர்ப்பு.
படத்தின் நாயகியாக நடித்த அகதா ட்ரெபுச்சோவ்ஸ்கா, படப்பிடிப்பு முடிந்ததும் திரையுலகை விட்டே விலக முடிவு செய்தார்.
ஆஸ்கார் விருது பெற்ற ஒரு படத்தின் நாயகி, அதன் பிறகு தனக்கு வந்த அத்தனை பெரிய பட வாய்ப்புகளையும் நிராகரித்துவிட்டு, தன் விருப்பப்படி கலை வரலாறு மற்றும் தத்துவக் கல்வியைத் தொடரச் சென்றது உலக சினிமா வட்டாரத்தில் ஒரு வியப்பான செய்தியாகப் பேசப்பட்டது.
அதேபோல், இப்படத்தின் உலகளாவிய விநியோக உரிமையைப் பெற்ற டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 'ஃபண்டாங்கோ போர்ட்டோபெல்லோ' நிறுவனம், ஆரம்பத்தில் இந்த வணிக ரீதியற்ற கருப்பு வெள்ளை படம் பெரிய அளவில் ஓடாது என்றே நினைத்தது.
ஆனால், பிரான்ஸ் நாட்டில் இப்படம் வெளியானபோது, அங்குள்ள சினிமா ரசிகர்களிடையே அது ஒரு மாபெரும் அலையை ஏற்படுத்தியது.
கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பிரெஞ்சு மக்கள் தியேட்டர்களுக்கு வந்து இப்படத்தைப் பார்த்தனர்.
பிரான்ஸ் நாட்டில் அதுவரை வெளியான போலந்து மொழித் திரைப்படங்களிலேயே மிக அதிக வசூல் செய்த படமாக 'இடா' சாதனை படைத்தது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ஐரோப்பிய நாடாளுமன்றம் வழங்கும் புகழ்பெற்ற 'லக்ஸ் பரிசு' இத்திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த விருதின் சிறப்பம்சமே, ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ இருபத்தி மூன்று மொழிகளிலும் இப்படத்தை மொழிபெயர்த்து, சப்டைட்டில் செய்வதற்கான முழுச் செலவையும் அந்த நாடாளுமன்றமே ஏற்றுக்கொண்டதுதான்.
இதன் மூலம், ஒரு சிறிய பிராந்திய மொழிப் படம், ஐரோப்பா முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் மிக எளிதாகச் சென்றடைந்தது.
போலந்து நாட்டின் சினிமா வரலாற்றில், அதற்கு முன்பு பல உலகப் புகழ்பெற்ற இயக்குனர்களின் படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டும் வென்றதில்லை.
ஆனால், எந்தவித வணிகப் பூச்சும் இல்லாமல், மிகக் குறைந்த பட்ஜெட்டில், முற்றிலும் மௌனத்தையும் கருப்பு வெள்ளை நிறத்தையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட 'இடா', அந்த நாட்டின் முதல் ஆஸ்கார் விருதை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது தான் இதன் திரை வரலாற்று சுவாரஸ்யமாகும்.
============================
படத்தின் கதை:-
1960களில் போலந்து நாட்டின் ஒரு கத்தோலிக்க மடாலயத்தில் அன்னா (அகதா ட்ரெபுச்சோவ்ஸ்கா) என்ற இளம் பெண் வசித்து வருகிறாள்.
அவள் உலகியல் வாழ்க்கையைத் துறந்து, முழுமையாக ஒரு கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான இறுதி ஆன்மீகப் பிரமாண வாக்குறுதிகளை எடுக்கும் தருவாயில் இருக்கிறாள்.;
ஆனால், அவளது மடாலயத்தின் தலைமைத் தாய் , அன்னா இந்த இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக, அவளுக்கு வெளியே எஞ்சியிருக்கும் ஒரே சொந்தமான வாண்டா க்ரூஸ் (அகதா குலேசா) என்ற அவளது அத்தையை நேரில் சந்தித்துவிட்டு வர வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.
அதுவரை வெளி உலகையே பார்த்திராத அன்னா, தன் அத்தையைக் காண்பதற்காக வார்சா நகருக்குப் பயணப்படுகிறாள்.
அன்னா வார்சாவில் சந்திக்கும் அவளது அத்தை வாண்டா, அவளுக்கு முற்றிலும் மாறான ஒரு உலகியல் வாழ்க்கையை வாழ்பவளாக இருக்கிறாள்.
அவள் சங்கிலித் தொடராகப் புகைப்பிடிக்கும், அதிக அளவில் மது அருந்தும், பல ஆண்களுடன் தற்காலிகப் பாலியல் உறவு கொள்ளும் ஒரு பெண்ணாகத் திகழ்கிறாள்.
அதே சமயம், அவள் கம்யூனிச எதிர்ப்புப் போராளியாகவும், ஸ்டாலினிய போலந்து ஆட்சியில் பலருக்கு மரண தண்டனை வாங்கித் தந்த ஒரு அரசு வழக்கறிஞராகவும் செல்வாக்கோடு இருந்தவள்.
அன்னாவைச் சந்தித்தவுடன் வாண்டா ஒரு திடுக்கிடும் உண்மையை உடைக்கிறாள். அன்னாவின் உண்மையான பெயர் அன்னா அல்ல, அவளது அசல் பெயர் 'இடா லெபென்ஸ்டைன்' என்பதாகும்.
அவள் பிறப்பால் ஒரு யூதப் பெண் என்றும், இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனிய ஆக்கிரமிப்பு உச்சத்தில் இருந்த காலத்தில் அவளது யூதப் பெற்றோர் கொடூரமாகக் கொல்லப்பட்டதால், அவள் குழந்தையாக இருந்தபோதே பாதுகாப்பிற்காக இந்தச் கத்தோலிக்க மடாலயத்தில் ஒப்படைக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள் என்ற உண்மையை விவரிக்கிறாள்.
இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளைக் கேட்ட பிறகு, தன் பெற்றோருக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கு புதைக்கப்பட்டார்கள் என்பதை அறிய இடா விரும்புகிறாள்.
வாண்டாவும் அவளது கடந்த காலத் துயரங்களுக்கு விடை தேட விரும்புவதால், இருவரும் இணைந்து போலந்தின் கிராமப்புறங்களை நோக்கி ஒரு கார் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
பயணத்தின் வழியில், வாண்டா இடாவிடம் அவள் கன்னியாஸ்திரியாகத் துறவறம் பூணுவதற்கு முன்பாக, இந்த உலகத்தில் இருக்கும் பாவங்களையும், சிற்றின்பங்களையும் ஒருமுறையாவது அனுபவித்துச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துகிறாள்.
அவர்கள் தங்களின் காரில் ஒரு விடுதியை நோக்கிச் செல்லும்போது, வழியில் லிஸ் (டேவிட் ஒக்ரோட்னிக்) என்ற ஒரு இளம் ஆல்டோ சாக்ஸபோன் இசைக் கலைஞரைத் தங்களின் காரில் லிப்ட் கொடுத்து ஏற்றிச் செல்கிறார்கள்.
அவன் அவர்கள் தங்கும் அதே ஊரில் உள்ள ஒரு விடுதியில் அன்று இரவு இசை நிகழ்ச்சி நடத்தச் செல்பவன் .
விடுதிக்குச் சென்றதும், வாண்டா இடாவையும் அந்த இசைக்கலைஞன் லிஸையும் இணைத்து வைக்க முயற்சி செய்கிறாள்.
ஆனால் ஆன்மீகச் சிந்தனையில் இருக்கும் இடா, ஆரம்பத்தில் அதில் விருப்பமில்லாமல் ஒதுங்குகிறாள். எனினும், அன்று இரவு லிஸின் இசைக்குழு தங்களின் நிகழ்ச்சியை முடித்த பிறகு, இடா அவர்களை நேரில் சென்று சந்திக்கிறாள்.
லிஸ் இடாவின் தனித்துவமான அழகாலும் அமைதியாலும் ஈர்க்கப்பட்டு அவளிடம் பேசுகிறான்.
அவர்கள் இருவரும் சிறிது நேரம் தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர், மதுபோதையில் அறையில் மயங்கிக் கிடக்கும் தன் அத்தை வாண்டாவை கவனித்துக் கொள்வதற்காக இடா அங்கிருந்து கிளம்பிச் செல்கிறாள்.
மறுநாள், இடா தன் பெற்றோரின் கல்லறையைக் காட்டும்படி வாண்டாவிடம் கேட்கிறாள். அதற்கு வாண்டா, அவர்கள் எங்கு, எப்படிப் புதைக்கப்பட்டார்கள் என்ற விவரமே யாருக்கும் தெரியாது என்று பதிலளிக்கிறாள்.
எனினும், அவர்கள் தேடலை நிறுத்தாமல், போருக்கு முன்பு தங்களின் குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்த, தற்போது ஃபெலிக்ஸ் ஸ்கிபா (ஆடம் ஷிஷ்கோவ்ஸ்கி) என்ற ஒரு கத்தோலிக்கக் கிறித்தவ விவசாயியின் குடும்பம் ஆக்கிரமித்து வாழ்ந்து வரும் வீட்டிற்குச் செல்கிறார்கள்.
உலகப் போரின் போது ஜெர்மனிய நாஜிக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, இந்த ஸ்கிபா குடும்பத்தினர் தான் இடாவின் லெபென்ஸ்டைன் குடும்பத்தினரைத் தங்கள் வீட்டில் ரகசியமாக மறைத்து வைத்திருந்தனர்,
பின்னர் அந்த வீட்டைத் தாங்களே எடுத்துக் கொண்டனர். வாண்டா அந்த வீட்டிற்குள் நுழைந்து, ஃபெலிக்ஸின் தந்தை எங்கே என்று அதிகாரத்தோடு கேட்கிறாள்.
தொடர்ந்து தேடியதில், ஃபெலிக்ஸின் தந்தையான சிமோன் ஸ்கிபா (ஜெர்சி ட்ரெலா) ஒரு மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருப்பதை அவர்கள் கண்டறிகிறார்கள்.
அவர் லெபென்ஸ்டைன் குடும்பத்தைப் பற்றி நல்லவிதமாகப் பேசினாலும், அவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற உண்மையைச் சொல்ல மறுக்கிறார்.
இந்தச் சமயத்தில், வாண்டா தங்களுக்குள் மறைந்திருந்த மற்றொரு சோகத்தை இடாவிடம் வெளிப்படுத்துகிறாள்.
உலகப் போரில் தான் நாஜிக்களுக்கு எதிராகப் போராடச் சென்றபோது, தன் சிறு வயது மகன் தாட்ஸியோவை இந்த லெபென்ஸ்டைன் குடும்பத்தினருடன் தான் பாதுகாப்பிற்காக விட்டுச் சென்றதாகவும், அவனும் அவர்களோடு சேர்ந்தே இறந்திருக்கக்கூடும் என்றும் கூறுகிறாள்.
இதற்கிடையில், மருத்துவமனையில் இருக்கும் தன் வயதான தந்தை குற்ற உணர்ச்சியால் இறந்துவிடக் கூடாது என்று அஞ்சும் விவசாயி ஃபெலிக்ஸ், ஒரு நிபந்தனையுடன் உண்மையைச் சொல்ல ஒப்புக்கொள்கிறான்.
லெபென்ஸ்டைன் குடும்பத்திற்குச் சொந்தமான அந்த வீட்டின் மீதோ அல்லது நிலத்தின் மீதோ இடா இனிமேல் எந்தவொரு சட்டப்பூர்வ உரிமையையும் கோரக் கூடாது என்றும், தங்களை நிம்மதியாக வாழ விட வேண்டும் என்றும் அவன் கேட்கிறான்.
அதற்கு இடா சம்மதம் தெரிவிக்கிறாள். அதன் பின்னர், ஃபெலிக்ஸ் அவ்விரு பெண்களையும் அருகில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, தன் கைகளாலேயே மண்ணைத் தோண்டி, அங்கு புதைக்கப்பட்டிருக்கும் எலும்புகளை வெளியே எடுக்கிறான்.
அப்போது அவன் அந்த மாபெரும் துரோகத்தை ஒப்புக்கொள்கிறான்.
போர்க்காலத்தில் நாஜிக்களின் பயம் காரணமாக, தானே இடாவின் பெற்றோரையும், வாண்டாவின் சிறு மகனையும் கொன்று அங்கே புதைத்ததாகக் கூறுகிறான்.
அப்போது இடா மிகச் சிறிய குழந்தையாக இருந்ததாலும், அவளது முகம் ஒரு கிறித்தவக் குழந்தையைப் போலப் பார்ப்பதற்கு இருந்ததாலும், அவளை மட்டும் கொல்ல மனமில்லாமல் ஒரு கத்தோலிக்க மடாலயத்தில் கொண்டு போய் விட்டதாகக் கூறுகிறான்.
ஆனால், வாண்டாவின் சிறு மகன் பார்ப்பதற்கு யூத அடையாளத்தோடு இருந்ததால், அவனைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கொடூரமான உண்மையைச் சொல்கிறான்.
தன் பெற்றோர் மற்றும் வாண்டாவின் மகனுடைய எலும்புகளைப் பெற்றுக்கொள்ளும் அவ்விரு பெண்களும், அவற்றை லூப்ளின் நகருக்குச் சென்று கைவிடப்பட்டு, காடு மண்டிக் கிடக்கும் ஒரு பழைய யூத மயானத்தில் உள்ள தங்களின் குடும்பக் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்கிறார்கள்.
இந்தக் கொடூரமான உண்மைகளையும், துரோகத்தையும் எதிர்கொண்ட பிறகு, இடாவும் வாண்டாவும் ஆழமான மன பாதிப்புடன் தங்களின் பழைய வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள்.
வாண்டா வார்சாவிற்குச் சென்று, தன் மன அழுத்தத்தையும் குற்ற உணர்ச்சியையும் போக்க மீண்டும் அதிகப்படியான மது மற்றும் தற்காலிகப் பாலியல் உறவுகளில் மூழ்குகிறாள்.
ஆனால், அவளது மனச்சோர்வு நீங்காமல் மேலும் ஆழமடைவதால், அவள் ஒரு நாள் தன் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
மறுபுறம், மடாலயத்திற்குத் திரும்பிய இடா, இந்த உண்மைகளால் குழப்பமடைந்து, தன் இறுதித் துறவற வாக்குறுதியை எடுப்பதைத் தள்ளிப் போடுகிறாள்.
வாண்டாவின் மரணச் செய்தி கேட்டு மீண்டும் வார்சாவிற்கு வரும் இடா, அவளது இறுதிச் சடங்கில் பங்கேற்கிறாள்.
அங்கே அவள் மீண்டும் சாக்ஸபோன் கலைஞர் லிஸைச் சந்திக்கிறாள்.
அதன் பின்னர், வாண்டாவின் காலி வீட்டிற்குச் செல்லும் இடா, தன் கன்னியாஸ்திரி உடையைக் கழற்றிவிட்டு, வாண்டாவின் ஆடம்பரமான மாலை நேர உடைகளையும், ஹை-ஹீல்ஸ் செருப்புகளையும் அணிந்து கொள்கிறாள்.
வாண்டாவைப் போலவே சிகரெட் பிடிப்பதையும், மது அருந்துவதையும் சோதித்துப் பார்க்கிறாள். பின்னர் லிஸ் இசை நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்குச் சென்று, அவனுடன் சேர்ந்து நடனமாடக் கற்றுக்கொண்டு, அவனுக்கு ஒரு முத்தத்தையும் தருகிறாள்.
அன்று இரவு, இடாவும் லிஸும் தங்களின் எல்லையைக் கடந்து ஒன்றாக உறங்குகிறார்கள்.
மறுநாள் காலை, லிஸ் அவளிடம் தங்களைச் சுற்றியுள்ள துயரங்களை மறந்து, இருவரும் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, மற்றவர்களைப் போல ஒரு சாதாரண வழக்கமான வாழ்க்கையை வாழலாம் என்று அழைக்கிறான்.
ஆனால், அடுத்த நாள் அதிகாலையில், லிஸ் தூங்கிக் கொண்டிருக்கும்போதே இடா அவனுக்குத் தெரியாமல் படுக்கையை விட்டு ரகசியமாக எழுகிறாள்.
அவள் மீண்டும் தன் பழைய கன்னியாஸ்திரி உடையை அணிந்து கொண்டு, உலகியல் இன்பங்களில் நிரந்தர அமைதி இல்லை என்பதை உணர்ந்தவளாக, தன் துறவற வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதற்காக மீண்டும் மடாலயத்தை நோக்கி மௌனமாக நடந்து செல்வதோடு இத்திரைப்படம் நிறைவடைகிறது.
வரலாற்றுப் பேரழிவுகளும் போர்க்காலத் துரோகங்களும் மனித ஆன்மாவில் வடுக்களாய் மாறும்போது, தற்காலிக உலகியல் இன்பங்களால் அந்தப் பெருந்துயரைக் குணப்படுத்த முடியாது.
மாறாக, தன் சுய அடையாளத்தை உணர்ந்து, அக உலகை நோக்கித் திரும்புவதே ஒரு மனிதனுக்கு உண்மையான அமைதியையும் ஆன்மீக விடுதலையையும் தரும் என்பதே இப்படம் சொல்லும் செய்தி.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு