இஃப் பீல் ஸ்ட்ரீட் குட் டாக் " "If Beale Street Could Talk" 2018


பாரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "இஃப் பீல் ஸ்ட்ரீட் குட் டாக் " "If Beale Street Could Talk"

ஜேம்ஸ் பால்ட்வின் எழுதிய இதே பெயரிலான புகழ்பெற்ற நாவலைத் திரையில் உயிர்ப்பித்த படைப்பாகும்.

 1970களின் நியூயார்க் நகரை பின்னணியாகக் கொண்ட இக்கதை கருப்பின மக்களின் வாழ்வியல் சிக்கல்களையும் அநீதிக்கு எதிரான ஒரு குடும்பத்தின் போராட்டத்தையும் ஆழமாகப் பதிவு செய்கிறது.

இப்படத்தின் அடிநாதம்  ஒரு மனிதனின் அடையாளத்தை அழிக்கும் அதிகார வர்க்கத்தின் வன்மம் மற்றும் அந்த வன்மத்திற்கு நடுவிலும் சிதையாமல் இருக்கும் காலவெளிற்ற அதீத பொறுமையாகும். 

இது வெறும் குடும்ப அன்பைப் பற்றியது மட்டுமல்ல மாறாக ஒரு தனிமனிதனின் வாழ்வு அவனது கட்டுப்பாட்டிலேயே இல்லாத ஒரு சமூக அமைப்பின் கீழ் சிக்கிக்கொள்வதை விவரிக்கிறது.

ஃபோனி எனும் இளைஞன் சிற்பக் கலைஞன்  . அவனது படைப்பாற்றல் மற்றும் சுதந்திரமான வாழ்வை சிதைக்க நினைக்கும் அதிகார அமைப்பு ஒரு பொய்யான வழக்கின் மூலம் சிறைக்குள் பூட்டுகிறது. 

ஆனால் அவனது ஆன்மாவை அவர்களால் பூட்ட முடியவில்லை. இப்படத்தின் மிக ஆழமான அம்சம் , அநீதி இழைக்கப்பட்ட பிறகும் கதாநாயகன் கோபத்திலோ வன்முறையிலோ ஈடுபடாமல் தனது நிலையை அமைதியாக ஏற்றுக்கொள்வதுதான். 

இது பலவீனத்தின் அறிகுறி அல்ல மாறாக அநீதியை விடவும் தான் மேலானவன் என்பதைக் காட்டும் ஒரு அறப்போர்.

 இவன் காதலியான டிஷ் கதாபாத்திரம்  எதிர்காலத்தின் மீதான பிடிவாதத்தை உரைக்கிறது.சிறையில் இருக்கும் காதலன் தன் கண் முன்னே அநீதியால் நசுக்கப்படுவதைப் பார்த்தும் அவள் கலங்கி நின்றுவிடாமல் ஒரு உயிரைத் தாங்கி நிற்கிறாள். 

அந்தப் புதிய உயிர்   ஒரு நம்பிக்கை மட்டுமல்ல அது அந்த அநீதிக்கு எதிரான ஒரு மெல்லிய  வலிமையான சவால்.

உலகம் உன்னை ஒரு குற்றவாளியாகவோ அல்லது வெறும் ஒரு புள்ளிவிவரமாகவோ பார்க்க முயற்சிக்கும்போது நீ உனக்கான தனித்துவத்தையும் மனிதத்தன்மையையும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதே மிகப்பெரிய வெற்றியாகும். 

ஃபோனியும் டிஷும் தங்கள் வாழ்வின் வசந்த காலங்களை அநீதியிடம் இழந்திருக்கலாம் ஆனால் அவர்கள் தங்கள் அக உலகைத் தொலைக்கவில்லை. 

 வெறுமனே சமூகக் கொடுமைகளை மட்டும் பேசாமல் ஒரு இனத்தின் பண்பாடு மற்றும் காதலை மிக மென்மையான வண்ணங்களில் காட்சிப்படுத்திய விதம் உலகத் தரம் வாய்ந்தது.

 ஒடுக்கப்பட்டவர்களின் வலியைச் சொல்லும் அதே வேளையில் அவர்களின் ஆன்ம பலத்தையும் அழகியல் உணர்வையும் இது சமமாக முன்வைக்கிறது.

இயக்குனர் பாரி ஜென்கின்ஸ் கதையின் போக்கை நேர்க்கோட்டில் அமைக்காமல் முன்னும் பின்னும் நகர்த்திச் செல்வதன் மூலம் பார்வையாளர்களை ஒரு உணர்ச்சிப்பூர்வமான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார். 

சமூகக் குற்றச்சாட்டுகளை விடவும் கதாபாத்திரங்களின் மௌனமான பார்வைகள் வழியே அதிகார வர்க்கத்தின் வன்மத்தை உணர்த்திய விதம் அபாரமானது.

இயக்குனர்  தனது முந்தைய திரைப்படமான மூன்லைட் போன்றே இதிலும் மனித உணர்வுகளின் மெல்லிய அடுக்குகளை மிக நுணுக்கமாகக் கையாண்டுள்ளார்.

 ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியத்தைப் போலத் தீட்டப்பட்டிருப்பது அவரது கலைத்திறனுக்குச் சான்று.

 கதாபாத்திரங்களின் முகங்களை மிக நெருக்கமாகக் காட்டும் குளோசப் ஷாட்கள் வழியே அவர்களின் அக உலகைத் திரைமொழியில் கடத்தியுள்ளார்.

ஜேம்ஸ் லாக்ஸ்டன் ஒளிப்பதிவில் இந்தப் படம் ஒரு காட்சியின்பத்தை வழங்குகிறது. அடர் நீலம் மற்றும் மென்மையான மஞ்சள் நிற ஒளியமைப்புகள் படத்தின் காலத்தையும் சூழலையும் தத்ரூபமாகப் பிரதிபலிக்கின்றன.

 ஒளிப்பதிவின் கோணங்கள் பார்வையாளர்களை அந்த 1970களின் ஹார்லெம் வீதிகளுக்கே நேரில் அழைத்துச் செல்லும் வல்லமை கொண்டவை.

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முதலாகத் திரையிடப்பட்ட இத்திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

பின்னர் டிசம்பர் மாதம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

 படத்தின் நேர்த்தியான கதை சொல்லல் முறை அனைத்து நாட்டு ரசிகர்களையும் கவர்ந்தது.
கிசி லேன் மற்றும் ஸ்டீபன் ஜேம்ஸ் ஆகியோரின் நடிப்பு படத்தின் உயிரோட்டமாக இருக்கிறது. 

அறிமுக நாயகியாக கிசி லேன் வெளிப்படுத்திய  முதிர்ச்சியான நடிப்பு வியக்க வைக்கிறது,ஸ்டீபன் ஜேம்ஸ் அநீதியால் நசுக்கப்பட்ட ஒரு இளைஞனின் வலியைத் தனது கண்களாலேயே வெளிப்படுத்தி இருக்கிறார்.

 சிறைச்சாலைச் சந்திப்புகளில் இருவருக்கும் இடையே நிகழும் அந்த மௌனமான உரையாடல்கள் மிகச் சிறந்த நடிப்புக்கு உதாரணம்.

நிக்கோலஸ் பிரிட்டெல் அளித்த பின்னணி இசை படத்தின் ஆன்மாவோடு பின்னிப் பிணைந்துள்ளது.
 வயலின் மற்றும் செல்லோ கருவிகளின் இசையமைப்புகள் படத்தின் சோகத்தையும் காதலையும் ஒரே நேரத்தில் கடத்துகின்றன. 

ஒவ்வொரு காட்சியிலும் இசை ஒரு மௌனக் கதாபாத்திரமாக மாறிப் பார்வையாளர்களின் உணர்வுகளைத் தூண்டுகிறது.

இத்திரைப்படம் 91 வது அகாடமி விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான விருதை ரெஜினா கிங்கிற்குப் பெற்றுத் தந்தது. 

 சிறந்த தழுவல் திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளிலும் ஆஸ்கார் பரிந்துரைகளைப் பெற்றது. 

கோல்டன் குளோப் மற்றும் பாஃப்டா போன்ற பல சர்வதேச விருது மேடைகளிலும் இத்திரைப்படம் தனது முத்திரையைப் பதித்துள்ளது.

 ஒரு வரலாற்றுப் பின்னணியில் சொல்லப்பட்ட நவீனக் காவியமாக இத்திரைப்படம் வரலாற்றில் நிலைபெற்றுள்ளது.

 இயக்குனர் பாரி ஜென்கின்ஸ் இந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதையை 2013 ஆம் ஆண்டு கோடை காலத்தில் ஐரோப்பாவிற்குப் பயணம் செய்தபோது எழுதினார். 

அதே பயணத்தின் போதுதான் அவர் தனது ஆஸ்கார் விருது பெற்ற மூன்லைட் திரைப்படத்தின் திரைக்கதையையும் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரே காலகட்டத்தில் உருவான இரண்டு படைப்புகளுமே உலக சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

நாவலாசிரியர் ஜேம்ஸ் பால்ட்வினின் குடும்பத்தினரிடம் இருந்து இந்த நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கான முறையான அனுமதியைப் பெறுவதற்கு பாரி ஜென்கின்ஸ் பல ஆண்டுகள் காத்திருந்தார். 

பால்ட்வினின் எழுத்துக்கள் மிகவும் ஆழமானவை என்பதால் அதன் ஆன்மா சிதையாமல் திரையில் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய பிறகே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

 படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பால்ட்வினின் எஸ்டேட் நிர்வாகத்திடம் திரைக்கதையைச் சமர்ப்பித்து அவர்களின் முழு ஒப்புதலை அவர் பெற்றார்.

இத்திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்த கிசி லேன் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண்களைத் தாண்டி இந்தப் பாத்திரத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டார். 

இதுவே அவருக்கு முதல் முழுநீளத் திரைப்படம் என்பது வியப்பிற்குரிய ஒன்று. அவர் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து வெளிப்படுத்திய விதம் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் லாக்ஸ்டன் மற்றும் இயக்குனர் பாரி ஜென்கின்ஸ் இணைந்து கதாபாத்திரங்கள் நேரடியாகக் கேமராவைப் பார்த்துப் பேசுவது போன்ற காட்சிகளை இதில் அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர். 

இது பார்வையாளர்கள் கதாபாத்திரங்களுடன் நேரடியாக ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது. 

இந்த உத்தி ஜேம்ஸ் பால்ட்வினின் எழுத்து நடைக்கு ஒரு காட்சி வடிவிலான மரியாதையாகக் கருதப்படுகிறது.

 கதாபாத்திரங்களின் முக பாவங்கள் வழியே கதையை நகர்த்தும் இந்த முறை படத்தின் தனித்துவமான அடையாளமாக மாறியது.

படத்தின் இசையமைப்பாளர் நிக்கோலஸ் பிரிட்டெல் இசையமைக்கும் போது அந்த 1970களின் சூழலை இசையில் கொண்டுவர மிகவும் மெனக்கெட்டார். காதலைச் சொல்லும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட மெல்லிய இசை சிறைக் காட்சிகளில் ஒருவிதமான அழுத்தத்தைத் தரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.

 இசையும் ஒளிப்பதிவும் ஒருங்கே இணைந்து ஒரு கவித்துவமான அனுபவத்தை வழங்கியதே இத்திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

 அநீதிக்கு எதிரான ஒரு மெல்லிய குரலாக இத்திரைப்படத்தின் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் இதில் மிளிர்கிறது.

  நாயகன் ஸ்டீபன் ஜேம்ஸ் தனது கதாபாத்திரத்திற்காக 1970களின் ஹார்லெம் இளைஞர்களின் உடல் மொழி மற்றும் பேசும் முறையை மிகத் தீவிரமாகப் பயின்றார்.

 சிறைச்சாலை காட்சிகளில் அவர் காட்டிய அந்த மெலிந்த தோற்றமும் சோர்ந்த கண்களும் கதாபாத்திரத்தின் வலியைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.

படத்தின் ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்ட வண்ணக்கலவைகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டவை. 

 டிஷ் மற்றும் ஃபோனி ஒன்றாக இருக்கும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட தங்கம் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் அவர்களின் காதலையும் நம்பிக்கையையும் குறிக்கின்றன. 

இதற்கு நேர்மாறாகச் சிறைச்சாலை மற்றும் நீதிமன்றக் காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட நீலம் மற்றும் சாம்பல் நிறங்கள் அவர்கள் எதிர்கொள்ளும் கள்ளமௌனமான அநீதியை உணர்த்துகின்றன. 

இந்த வண்ண வேறுபாடு படத்தின் உணர்ச்சிகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் பெரும் பங்கு வகித்தது.

விக்டோரியா ரோஜர்ஸ் பாத்திரத்தில் நடித்த எமிலி ரியோஸ் தனது காட்சிகளைப் படமாக்கும்போது மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குச் சென்றார்.

 பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மன உளைச்சலை வெளிப்படுத்தும் அந்தப் போர்ட்டோ ரிகோ காட்சிகள் படத்தின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தன. 

 ரெஜினா கிங் தனது கதாபாத்திரத்திற்காகப் போர்ட்டோ ரிகோவின் வீதிகளில் அலைந்து திரியும் காட்சிகளில் அங்கிருந்த உள்ளூர் மக்களின் உணர்வுகளை உள்வாங்கி நடித்தார். 

இதுவே அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்க ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.
படத்தின் ஆடை வடிவமைப்பாளர் கரோலின் எஸ்கலின் கதாபாத்திரங்களின் உடைகளைத் தேர்வு செய்யும்போது ஜேம்ஸ் பால்ட்வினின் நாவலில் உள்ள விவரிப்புகளை அப்படியே பின்பற்றினார். 

குறிப்பாக டிஷ் அணியும் மஞ்சள் நிற ஆடை அவளது இளமையையும் அப்பாவித்தனத்தையும் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

 ஆடைகளின் வண்ணங்கள் மற்றும் துணி வகைகள் கூட அந்தந்தக் கதாபாத்திரங்களின் சமூக அந்தஸ்தையும் மனநிலையையும் வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இதில் பயன்படுத்தப்பட்டன.

இயக்குனர் பாரி ஜென்கின்ஸ் படப்பிடிப்பின் போது ஜேம்ஸ் பால்ட்வினின் நாவலை எப்போதும் தனது கையில் வைத்திருப்பார். ஒவ்வொரு காட்சியையும் எடுப்பதற்கு முன்பு அந்த நாவலில் உள்ள வரிகளை நடிகர்களுக்கு வாசித்துக் காட்டுவதை அவர் வழக்கமாகவே கொண்டிருந்தார். 

இது நடிகர்கள் நாவலின் ஆன்மாவை உணர்ந்து நடிக்க உதவியது. படத்தின் எடிட்டிங் பணியின் போது இசை மற்றும் காட்சிகளின் லயத்தை மிகத் துல்லியமாக இணைப்பதற்கு அதிக காலம் எடுத்துக்கொண்டனர். 

ஒரு படத்தின் வெற்றி அதன் நுணுக்கமான வேலைப்பாடுகளில் தான் இருக்கிறது என்பதற்கு இத்திரைப்படம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அநீதி ஒரு மனிதனை முடக்கினாலும் அவனது பண்பாடு சிதையாது என்பதை ஒவ்வொரு காட்சியும் மென்மையாக உணர்த்துகிறது.

நகரத்தின் இரைச்சல்களுக்கு நடுவே கதாபாத்திரங்களின் மெல்லிய மூச்சுக்காற்றையும் ஆடையின் உராய்வுகளையும் கூட துல்லியமாகப் பதிவு செய்ததன் மூலம் பார்வையாளர்களுக்கு அந்த 1970களின் சூழலை மிக நெருக்கமாக உணரவைத்தனர்.

 குறிப்பாகக் காதல் காட்சிகளில் ஒலிக்கும் இசை ஒரு மென்மையான தாலாட்டைப் போலவும் சிறைக் காட்சிகளில் அதுவே ஒரு பாரமான சுமையைப் போலவும் ஒலிக்கச் செய்யப்பட்டது.

படத்தின் கலை இயக்குநர் குழு 1970களின் ஹார்லெம் பகுதியை மறு உருவாக்கம் செய்யப் பழைய புகைப்படங்களையும் ஆவணப்படங்களையும் விரிவாக ஆய்வு செய்தது.

 வீதிகளில் இருந்த விளம்பரப் பலகைகள் முதல் வாகனங்களின் மாடல்கள் வரை அனைத்தும் அந்தந்தக் காலக்கட்டத்திற்குப் பொருத்தமாக இருப்பதை உறுதி செய்தனர். 

ஃபோனி வசிக்கும் அடித்தள வீடு மற்றும் டிஷ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றின் உட்புற வடிவமைப்புகள் அவர்களின் பொருளாதார நிலையையும் கலாச்சாரப் பின்னணியையும் மௌனமாக விவரிக்கும் வகையில் அமைக்கப்பட்டன.

சிறைச்சாலையில் டிஷ் மற்றும் ஃபோனி சந்திக்கும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட கண்ணாடிக் தடுப்புகள் ஒரு குறியீடாகவே பயன்படுத்தப்பட்டன. 

அந்தக் கண்ணாடியில் தெரியும் பிரதிபலிப்புகள் இருவரையும் ஒருபுறம் இணைப்பது போலவும் மறுபுறம் அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பிரிக்க முடியாத சுவரை உணர்த்துவது போலவும் படம் பிடிக்கப்பட்டன. 

ஜேம்ஸ் லாக்ஸ்டனின் இந்த ஒளிப்பதிவு உத்தி படத்தில் ஒரு கவித்துவமான சோகத்தை இழைந்தோடச் செய்தது. 

முகபாவனைகளுக்கு முக்கியத்துவம் தந்து படமாக்கியதன் மூலம் நடிகர்களின் கண்களில் தெரியும் சிறு அசைவுகளைக் கூடக் கதையின் ஒரு பகுதியாக மாற்றினர்.

இயக்குநர் பாரி ஜென்கின்ஸ் படப்பிடிப்புத் தளத்தில் நிலவிய சூழலை மிகவும் அமைதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் வைத்திருந்தார். 

கடினமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய காட்சிகளில் நடிகர்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்கி அவர்களின் இயல்பான வெளிப்பாட்டிற்காகக் காத்திருந்தார். 

பால்ட்வினின் எழுத்துக்களில் உள்ள தத்துவார்த்தமான வரிகளைத் திரைக்கதையில் மிகக் கவனமாகக் கையாண்ட விதம் உலக சினிமா ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. 

ஒரு கறுப்பின இளைஞனின் கதை என்பதைத் தாண்டி இது ஒரு மானுடத்தின் கதையாகவும் நீதிக்கான ஏங்கும் இதயங்களின் குரலாகவும் மாறியதற்கு இந்தப் படக்குழுவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பே காரணம்.

 படப்பிடிப்பின் இறுதி நாளில் ஒட்டுமொத்தக் குழுவும் ஜேம்ஸ் பால்ட்வினின் நினைவாக ஒரு நிமிடம் மௌனம் அனுசரித்துக் கௌரவித்தனர். 

ஒரு நாவலைத் திரையில் கொண்டு வரும்போது அதன் மூலப்பொருள் சிதையாமல் அதே சமயம் நவீனத் தொழில்நுட்பங்களுடன் இணைத்துக் கொடுத்த விதத்தில் இந்தப் படம் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது.

===========================
படத்தின் கதை:-

 1970களின் நியூயார்க் பின்னணியில் ஒரு அழுத்தமான காதல் கதையை விவரிக்கிறது. 

இதன் முதன்மைக் கதாபாத்திரங்கள் டிஷ் என்ற கிளமென்டைன் ரிவர்ஸ் (கிசி லேன்),  ஃபோனி என்ற அலோன்சோ ஹன்ட் (ஸ்டீபன் ஜேம்ஸ்)  இருவரும் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்த நண்பர்கள்.

 இவர்கள் வளர வளர அந்த நட்பு ஆழமான காதலாக மாறுகிறது. அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வதற்காக ஒரு வீட்டைத் தேடும்போது அந்தச் சமூகத்தில் நிலவிய கருப்பின மக்களுக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்கொள்கிறார்கள்.

 இறுதியில் லெவி (டேவ் ஃபிராங்கோ) என்ற யூத இன வீட்டு உரிமையாளர் இவர்களின் காதலை மதித்து ஒரு வீட்டை வாடகைக்கு வழங்குகிறார். 

அந்த மகிழ்ச்சியான தருணங்களுக்கு இடையே, ஒரு நாள் மளிகைக் கடையில் டிஷை ஒரு வெள்ளை இனத்தவன் துன்புறுத்த முயற்சிக்கும்போது ஃபோனி அவனைத் தடுத்து நிறுத்தி வெளியேற்றுகிறான்.

 அங்கிருந்த பெல் (எட் ஸ்க்ரெய்ன்) என்ற வெள்ளை இன காவல்துறை அதிகாரி ஃபோனி மீது வன்மம் கொள்கிறார்.

இதன் தொடர்ச்சியாக விக்டோரியா ரோஜர்ஸ் (எமிலி ரியோஸ்) என்ற பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் அந்த காவல்துறை அதிகாரி வேண்டுமென்றே ஃபோனியைச் சிக்கவைக்கிறார்.

 விக்டோரியா ஃபோனியை அடையாளம் காட்டியதாகக் கூறி அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.

 உண்மையில் அந்தச் சம்பவம் நடந்த நேரத்தில் ஃபோனி தனது காதலி டிஷ் மற்றும் தனது நண்பன் டேனியல் கார்ட்டி (பயன் டைரி ஹென்றி) ஆகியோருடன் தான் இருந்தான். 

ஆனால் அவர்களின் சாட்சியங்கள் செல்லாதவை என மறுக்கப்படுகின்றன. சிறையில் இருக்கும் ஃபோனியைச் சந்திக்கும் டிஷ் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியைக் கூறுகிறாள்.

 ஃபோனி அந்தச் செய்தியைக் கேட்டு நெகிழ்ந்தாலும் தன் குழந்தை பிறக்கும்போது தான் வெளியில் இருக்க முடியாது என்பதை எண்ணி மனமுடைந்து போகிறான்.

டிஷின் குடும்பத்தினர் இந்தச் செய்தியை மிகவும் முதிர்ச்சியுடன் கையாள்கிறார்கள். அவளது தாய் ஷரோன் ரிவர்ஸ் (ரெஜினா கிங்) தந்தை ஜோசப் ரிவர்ஸ் (கோல்மேன் டொமிங்கோ) மற்றும் சகோதரி எர்னஸ்டைன் (டியோனா பாரிஸ்) ஆகியோர் அவளுக்குப் பெரும் அரணாகத் திகழ்கிறார்கள்.

 ஆனால் ஃபோனியின் தாயான ஆலிஸ் ஹன்ட் (அஞ்சானு எல்லிஸ்) மிகவும் மதப்பற்று கொண்டவர் என்பதால் திருமணத்திற்கு முன்பு கருவுற்ற டிஷையும் அந்தக் குழந்தையையும் சபிக்கிறார். 

இது இரு குடும்பங்களுக்கும் இடையே ஒரு கசப்பான சூழலை உருவாக்குகிறது. அதேசமயம் ஃபோனியின் தந்தை ஃபிராங்க் ஹன்ட் (மைக்கேல் பீச்) தனது மகனின் விடுதலையையும் பேரக்குழந்தையையும் கருத்தில் கொண்டு டிஷின் தந்தையுடன் இணைந்து சட்ட போராட்ட நிதி திரட்ட முயற்சிக்கிறார்.

ஃபோனி நிரபராதி என்பதை நிரூபிக்க ஷரோன் பெரும் முயற்சி எடுக்கிறாள். விக்டோரியா ரோஜர்ஸைச் சந்திப்பதற்காக அவள் போர்ட்டோ ரிகோ நாட்டிற்கு பயணம் செய்கிறாள். 

அங்கு விக்டோரியாவிடம் பேசி அவளது சாட்சியத்தை மாற்ற முயற்சிக்கிறாள். காவல்துறையினர் வற்புறுத்தியதால் தான் அவள் ஃபோனியை அடையாளம் காட்டியதாக ஷரோன் நம்புகிறாள். 

ஆனால் அந்த வல்லுறவு சம்பவத்தால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் விக்டோரியா ஷரோனிடம் பேச மறுத்து அழுது கூச்சலிடுகிறாள். 

இதனால் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. இதற்கிடையில் ஃபோனியின் வழக்கறிஞர் ஹேவர்ட் (ஃபின் விட்ராக்) சட்டப் போராட்டம் நடத்துகிறார். 

ஆனால் காலதாமதமும் சூழல்களும் ஃபோனிக்கு எதிராகவே அமைகின்றன. இறுதியில் நீண்ட கால சிறைதண்டனையைத் தவிர்க்கும் பொருட்டு ஃபோனி ஒரு குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான்.

காலப்போக்கில் டிஷ்  அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அலோன்சோ ஜூனியர் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தையுடன் டிஷ் சிறையில் இருக்கும் ஃபோனியைச் சந்திக்கிறாள். 

அவர்கள் சிறைச்சாலைக்குள் அமர்ந்து ஒன்றாகச் சிற்றுண்டி அருந்துகிறார்கள். அங்கு நிலவும் இக்கட்டான சூழல்களுக்கு நடுவிலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பும் அவர்களின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையும் அங்கே மேலோங்கி நிற்கிறது.

 ஃபோனியின் விடுதலையை எதிர்நோக்கி அந்தக் குடும்பம் காத்திருப்பதுடன் இந்தக் கதை முடிகிறது.

அநீதியான சமூக அமைப்பிற்குள் ஒரு தனிமனிதன் தன் சுயமரியாதையையும் மனிதத்தன்மையையும் எவ்வாறு தற்காத்துக்கொள்கிறான் என்பதுதான் இத்திரைப்படத்தின் செய்தி.

அதிகார வர்க்கம் ஒரு கருப்பின இளைஞனைப் பொய் வழக்கில் சிறையில் அடைப்பதன் மூலம் அவனது வாழ்வை முடக்க நினைக்கிறது. 

ஆனால் ஃபோனி சிறைக்குள்ளும் தனது நிதானத்தை இழக்காமல் இருப்பதே அந்த அநீதிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியாகக் காட்டப்படுகிறது.

 வன்முறைக்கு வன்முறையால் பதில் சொல்லாமல் தனது கலையுணர்வையும் மென்மையையும் தக்கவைத்துக்கொள்வது ஒரு அறப்போராகச் சித்தரிக்கப்படுகிறது.

சமூகம் உங்களை ஒரு குற்றவாளியாகவோ அல்லது தேவையற்ற ஒருவராகவோ பார்க்கும்போது உங்கள் குடும்பம் உங்களை எப்படிப் பார்க்கிறது என்பதுதான் உங்கள் பலம். 

டிஷின் குடும்பம் ஃபோனியை ஒரு கைதியாகப் பார்க்காமல் தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாகப் பார்ப்பதுதான் அவனது வாழ்வின் மீதான பிடிப்பைத் தக்கவைக்கிறது.

 அன்பு என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல அது ஒருவரைச் சிதைந்துவிடாமல் காக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு வளையம் என்ற செய்தியை இது உரக்கச் சொல்கிறது.

படம் ஒரு சோகமான முடிவை நோக்கிச் சென்றாலும் இறுதியில் ஒரு நம்பிக்கைக் ஒளியைத் தருகிறது. அநீதி இழைக்கப்பட்டாலும் ஒரு புதிய உயிர்  பிறப்பது என்பது அந்தச் சமூகச் சூழலுக்கு எதிரான ஒரு சவால். 

காலம் உங்களுக்கு எதிராக இருக்கலாம் ஆனால் நீங்கள் உங்கள் மீதான நம்பிக்கையையும் உங்கள் துணையின் மீதான அன்பையும் கைவிடாதவரை நீங்கள் தோற்றுப்போவதில்லை என்பதே இதன் சாராம்சம்.

 இருள் சூழ்ந்த காலங்களிலும் உங்கள் அக ஒளியைத் தொலைக்காமல் இருப்பதே வாழ்வின் வெற்றி என்பதை இந்தப் படம் செய்தியாகத் தருகிறது. 

அநீதியால் ஒருவனின் உடலைச் சிறைப்படுத்த முடியும் ஆனால் அவனது நேர்மையையும் அவன் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் அன்பையும் ஒருபோதும் சிறைப்படுத்த முடியாது.

தி ஃபேவரிட் The Favorite 2018

"தி ஃபேவரிட் "திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியான  வரலாற்று அவல நகைச்சுவை திரைப்படம். 

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேட் பிரிட்டன் அரசவையில் நிலவிய அதிகாரப் போட்டியை மையமாக வைத்து இக்கதை நகர்கிறது.

 அரசியின் அன்பைப் பெற இரு அந்தரங்க காரியதரிசிப் பெண்களுக்கு இடையே நடக்கும் தந்திரமான போராட்டத்தை மிக நுணுக்கமாக இப்படம் விவரிக்கிறது.

இப்படத்தின் அடிநாதம்  அதிகாரத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் இடையிலான அந்த மெல்லிய கோடுதான். 

இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதிகாரம் என்பது ஒருவரை எவ்வளவு உச்சத்திற்குக் கொண்டு செல்கிறதோ அதே அளவு அவரைத் தனிமைப்படுத்தும் என்பதையே மையமாகத் தொட்டுச் செல்கிறது.

அரசி ஆன் உலகையே ஆளும் அதிகாரம் படைத்தவர் ஆனால் தனது உடல் உபாதையாலும் மன அழுத்தத்தாலும் ஒரு குழந்தையைப் போலப் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 

இந்த பலவீனமே அவரைச் சுற்றியுள்ள அதிகாரப் போட்டிக்கு எரிபொருளாக மாறுகிறது. ஒருபுறம் சாராவின் கண்டிப்பான மற்றும் நேர்மையான அதிகாரம் அரசியின் நலனை முன்னிறுத்தினாலும் அது அரசியை ஒரு கட்டத்தில் மூச்சுத்திணறச் செய்கிறது.

 மறுபுறம் அபிகேல் காட்டும் போலிப் பணிவும் வசதியான பொய்களும் அரசியின் அகங்காரத்தை திருப்தி செய்தாலும் அவை அரசியை மெல்ல மெல்ல ஒரு சூனியமான தனிமைக்கே இட்டுச் செல்கின்றன.

வறுமை மற்றும் அதிகாரம் ஆகிய இரண்டு துருவங்களுக்கு இடையே ஒரு மனிதனின் குணம் எப்படி உருமாறுகிறது என்பதை அபிகேலின் பாத்திரம் துல்லியமாக விளக்குகிறது.

 சமூகத்தின் ஆகக்கீழ் மட்டத்திலிருந்து வரும் அபிகேல் தனது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளத் துரோகத்தையும் வஞ்சகத்தையும் ஆயுதங்களாக எடுக்கிறார்.

 ஆனால் அவர் அடைந்த அந்த உயர்குடி வெற்றி அவரை ஒரு சுதந்திரமான மனிதராக மாற்றவில்லை. மாறாக அரசியின் கால்களைப் பிடித்துவிடும் ஒரு விலை உயர்ந்த அடிமையாகவே அவரை ஆக்குகிறது. 

இது அதிகாரம் என்பது யாரையும் விடுவிப்பதில்லை மாறாக ஒருவரை ஒரு பொன் கூண்டிற்குள் அடைக்கிறது என்ற கசப்பான உண்மையை உணர்த்துகிறது.

அன்பு என்ற பெயரில் நடக்கும் இந்த அதிகாரப் போட்டியில் இறுதியில் எஞ்சுவது வெறுமையும் விரக்தியும் மட்டுமே. உண்மையான கண்டிப்பை விட இனிப்பான சூழ்ச்சிக்கு மனித மனம் பலியாகும் என்பதைச் சாரா மற்றும் அபிகேல் இடையிலான மோதல் காட்டுகிறது. 

படத்தின் இறுதியில் திரையில் விரியும் அரசியின் விரக்தியான முகமும் அபிகேலின் மண்டியிட்ட கோலமும் ஒரு செய்தியை உரக்கச் சொல்கின்றன , அதிகாரத்தின் உச்சியில் இருப்பவன் தன்னை ஆள்பவன் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் அவன் சூழல்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் அடிமையாகவே இருக்கிறான் என்பதே இப்படத்தின் ஆழமான அடிநாதமாகும்.

வழக்கமான வரலாற்றுத் திரைப்படங்களின் பாணியிலிருந்து விலகி மனித உணர்வுகளின் இருண்ட பக்கங்களையும் அதிகார போதையையும் நையாண்டி கலந்து சொன்ன விதத்தில் இது தனித்துவமாக நிற்கிறது. 

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தைப் பிரதிபலித்தாலும் நவீன காலத்தின் அரசியல் மற்றும் தனிமனிதப் பேராசையை இது பிரதிபலிக்கிறது.

 அரசியின் தனிமை மற்றும் அவரது இயலாமையைப் பயன்படுத்திக் கொள்ளும் இருவேறு குணாதிசயங்களைக் கொண்ட பெண்களின் மோதல் இதில் மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 நேர்மையான , கடுமையான அன்பு ஒருபுறம் மற்றும் தந்திரமான ஆனால் இனிமையான துரோகம் மறுபுறம் என இருமுனைப் போட்டியைச் திரைக்கதை மிக ஆழமாக அலசுகிறது.

இயக்குநர் யோர்கோஸ் லாந்திமோஸ் தனது வழக்கமான விசித்திரமான பாணியை இதிலும் புகுத்தியுள்ளார்.

 மனிதர்களுக்கு இடையே இருக்கும் சிக்கலான உறவுகளை தனித்துவமான இருண்ட நகைச்சுவையோடு அணுகியுள்ளார். 

காட்சிகளில் இருக்கும் பிரம்மாண்டத்தை விடவும் கதாபாத்திரங்களின் மனவோட்டத்திற்கு அவர் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார்.

இப்படத்தின் படமாக்கம் மிகவும் வியக்கத்தக்கது. ஒளிப்பதிவாளர் ராபி ரையன் ஃபிஷ்-ஐ லென்ஸ் மற்றும் வைட் ஆங்கிள் லென்ஸ்களைப் பயன்படுத்தி அரண்மனையின் பரந்து விரிந்த இடங்களை ஒரு சிறைச்சாலையைப் போலக் காட்டியுள்ளார். 

இயற்கை ஒளியையும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தையும் மட்டுமே பயன்படுத்தி அந்தக்காலச் சூழலைத் திரையில் தத்ரூபமாகப் பிரதிபலித்துள்ளார்.

2018 ஆகஸ்ட் 30 அன்று வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது. 

பின்னர் ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளியாகி விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 15 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 96 மில்லியன் டாலர் வசூல் செய்து வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

ஒலிவியா கோல்மன் அரசியாக வாழ்ந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். அவரது உடல் மொழி மற்றும் முகபாவனைகள் அரசியின் வலியையும் அதிகாரத்தையும் ஒரே நேரத்தில் கடத்துகின்றன. 

எம்மா ஸ்டோன் மற்றும் ரேச்சல் வைஸ் ஆகியோரின் நடிப்பு ஒருவருக்கு ஒருவர் சளைக்காத வகையில் மிகச் சிறப்பான முக்கோணப் போட்டியைத் திரையில் உருவாக்கியுள்ளது.

இசை இப்படத்தின் ஆன்மாவாகத் திகழ்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் செவ்வியல் இசையோடு நவீன கால இசையமைப்புகளையும் இணைத்து ஒருவித பதற்றமான சூழலை ஒலியமைப்பில் உருவாக்கியுள்ளனர்.

 பாடல்களுக்குப் பதிலாக இசைக் கருவிகளின் சத்தமும் அமைதியும் மாறி மாறி வந்து காட்சிகளின் கனத்தை அதிகரிக்கின்றன.

வெனிஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் ஜூரி விருது மற்றும் சிறந்த நடிகைக்கான வோல்பி கோப்பை ஆகியவற்றை வென்று தனது விருதுப் பயணத்தைத் தொடங்கியது.

 பிரிட்டிஷ் அகாடமி விருதுகளில் ஏழு விருதுகளையும் பத்து ஆஸ்கார் பரிந்துரைகளையும் பெற்றது. 

ஆஸ்கார் மேடையில் ஒலிவியா கோல்மன் சிறந்த நடிகைக்கான விருதைத் தட்டிச் சென்றார்.

 இதையே இயக்குனர் லந்திமோஸ் ஒரு நையாண்டி கலந்த இருண்ட நகைச்சுவை மூலம் மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார்.

வரலாற்று ரீதியாக இப்படம் சில அடிப்படை உண்மைகளை எடுத்துக்கொண்டாலும் பல இடங்களைச் சினிமாவுக்காகப் புனைவாகவும் நையாண்டியாகவும் மாற்றியுள்ளது. 

அரசி ஆன் மற்றும் சாரா சர்ச்சில் ஆகியோருக்கு இடையிலான நட்பு உண்மையானது. 

சாரா சர்ச்சில் உண்மையில் அரசியின் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியவர் என்பதும் பின்னர் அபிகேல் ஹில் என்பவரால் அந்தச் செல்வாக்கை அவர் இழந்தார் என்பதும் வரலாற்று உண்மை.

 சாரா அரசியை அவர் எழுதிய அந்தரங்கக் கடிதங்களை வெளியிடப் போவதாக மிரட்டியதும் உண்மையான நிகழ்வுகளே.

 இருப்பினும் படத்தில் வருவது போல அபிகேல் சாராவிற்குத் தேநீரில் விஷம் வைத்ததாகவோ அல்லது சாரா ஒரு விபச்சார விடுதியில் தஞ்சம் புகுந்ததாகவோ எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை.

அரசியின் பாலியல் உறவுகள் குறித்த விவாதம் இன்றும் வரலாற்று ஆசிரியர்களிடையே நீடிக்கிறது. 

சாரா சர்ச்சில் அரசியை மிரட்டிய கடிதங்களில் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவு குறித்த குறிப்புகள் உள்ளன.

 இருப்பினும் அரசி ஆன் தனது கணவரான இளவரசர் ஜார்ஜ் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் என்பதும் அவர்களுக்கு 17 முறை கருவுறுதல் தோல்விகள் (கருச்சிதைவு மற்றும் குழந்தை இறப்பு) ஏற்பட்டன என்பதும் உண்மை. 

ஆனால் படத்தில் அரசியின் கணவர் ஜார்ஜ் காட்டப்படவில்லை,போருக்கு சென்றதாகவும் சித்தரிக்கவில்லை. 
அவர் 1708 வரை உயிரோடுதான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசி ஆன் வளர்த்த 17 முயல்கள் என்பது படத்தின் ஒரு குறியீடாகச் சேர்க்கப்பட்டது. 

அந்த காலகட்டத்தில் காட்டுமுயல்கள்  உணவாகவோ அல்லது தோட்டப் பயிர்களுக்கு ஒரு தொல்லை தரும் விலங்காகவோதான் பார்க்கப்பட்டது. 

அவற்றை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் வழக்கம் அப்போது இல்லை. தனது 17 குழந்தைகளின் இழப்பை அரசியின் தனிமையுடன் இணைத்துக் காட்ட இயக்குனர் பயன்படுத்திய ஒரு கற்பனையான உத்தியே இந்த முயல்கள்.

அரசியின் தோற்றம் , அந்தஸ்து குறித்த தரவுகளில் சில நுணுக்கமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

சாரா சர்ச்சிலை படத்தில் லேடி மார்ல்பரோ என்று அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர் 1702-லேயே மார்ல்பரோவின் டச்சஸ்  என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டார். 

அதேபோல் அபிகேல் ஹில் வறுமையிலிருந்து வந்தவர் என்பது உண்மைதான். ஆனால் அவர் தந்தை அவரைச் சூதாட்டத்தில் பந்தயம் வைத்தார் என்பதற்கும் வலுவான ஆதாரங்கள் இல்லை.

இயக்குனர் லந்திமோஸ் சித்தரித்தது போல இப்படத்தில் சில விஷயங்கள் உண்மையானவை பல விஷயங்கள் கற்பனையானவை.

 வரலாற்று நிகழ்வுகளை அப்படியே படமாக்குவதை விட அந்த கதாபாத்திரங்களுக்கு இடையே இருந்த அதிகாரம் மற்றும் பொறாமை போன்ற உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதே படத்தின் நோக்கமாக இருந்துள்ளது. 

 வரலாற்றின் சட்டகத்திற்குள் ஒரு நவீனக்கால உறவுச்சிக்கலை இப்படம் பேசுகிறது.

திரைக்கதை ஆசிரியர் டெபோரா டேவிஸ் 1998 ஆம் ஆண்டிலேயே இதற்கான முதல் வரைவை எழுதி முடித்துவிட்டார்.

 திரைக்கதையில் முன் அனுபவம் இல்லாத அவர் இதற்காக இரவு நேர வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற்றார். 

வின்ஸ்டன் சர்ச்சில் தனது முன்னோரான மார்ல்பரோ பிரபுவைப் பற்றி எழுதிய நான்கு பாக சுயசரிதையில் விவரித்துள்ள அரசியின் அந்தரங்க முக்கோண உறவை ஆதாரமாகக் கொண்டு இந்த கதையை அவர் உருவாக்கினார். 

இந்தப் படத்தின் கதையில் இடம்பெற்ற ஓரினச்சேர்க்கை அம்சங்கள் மற்றும் ஆண்களுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லாத சூழல் காரணமாகப் பல தயாரிப்பு நிறுவனங்கள் தொடக்கத்தில் இதற்கு நிதி வழங்கத் தயங்கின.

 இறுதியில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகே இப்படம் முழு வடிவம் பெற்று திரைக்கு வந்தது.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாக இயக்குநர் யோர்கோஸ் லாந்திமோஸ் நடிகர்களுக்கு மூன்று வார காலம் விசித்திரமான பயிற்சியை அளித்தார்.

 நடிகர்கள் ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டு மனித முடிச்சுகளைப் போலத் தரையில் உருண்டு கொண்டே வசனங்களைப் பேச வேண்டும். 

ஒரு காட்சியில் என்ன நடக்கிறது என்பதை விட நடிகர்கள் ஒருவருக்கொருவர் உடல் ரீதியாக எவ்வளவு நெருக்கமாகவும் வசதியாகவும் இருக்கிறார்கள் என்பதை அறியவே இந்த வினோதமான பயிற்சியை அவர் மேற்கொண்டார்.

 வசனங்களின் அர்த்தத்தைப் பற்றி நடிகர்கள் அதிகம் யோசிக்கக் கூடாது என்பதே இயக்குநரின் முக்கிய நோக்கமாக இருந்தது.

படத்தின் ஆடை வடிவமைப்பாளர் சாண்டி பவல் மிகக் குறைந்த செலவில் பிரமிக்க வைக்கும் ஆடைகளை உருவாக்கினார். 

அரசியின் கம்பீரத்தைக் காட்ட அவரது ஆடையை எர்மின் எனப்படும் விலையுயர்ந்த ரோமங்களால் முழுமையாகப் போர்த்தினார். 

பொதுவாக அரச குடும்ப ஆடைகள் தங்கம் மற்றும் நகைகளால் இழைக்கப்பட்டிருக்கும் ஆனால் இப்படத்தில் அரசியின் தனிமையைப் பிரதிபலிக்க முற்றிலும் மாறுபட்ட பாணியைக் கையாண்டார். 

அதேபோல் சாரா சர்ச்சில் கதாபாத்திரத்திற்கு ஆண்களைப் போன்ற வேட்டை ஆடைகளை வடிவமைத்தார். 

இப்படத்தில் நடித்த ஆண்களுக்கு அதிக அளவில் ஒப்பனை மற்றும் பெரிய விக் தலைமுடி பயன்படுத்தப்பட்டது.

 பெண்கள் மையமாக இருக்கும் இப்படத்தில் ஆண்களை வெறும் அலங்காரப் பொருளாகக் காட்டவே இத்தகைய முடிவை இயக்குநர் எடுத்தார்.

ஒளிப்பதிவாளர் ராபி ரையன் ஃபிஷ்-ஐ லென்ஸ்களைப் பயன்படுத்தியது படத்தின் காட்சி மொழிக்கு ஒரு தனித்துவமான அழகைத் தந்தது. ஹார்ட்ஃபீல்ட் ஹவுஸ் மாளிகையின் தரைத்தளம் முதல் கூரை வரை அனைத்தையும் ஒரே காட்சியில் காட்ட இது உதவியது. 

படப்பிடிப்பின் போது பெரும்பாலான காட்சிகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே படமாக்கப்பட்டன. 

இதற்காகப் பல நூறு மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்பட்டன. மாளிகையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி மெழுகுவர்த்திகளில் இருந்து உருகும் மெழுகு தரையில் படாமல் இருக்கச் சிறப்பு மெழுகு பிடிப்பான்கள் பயன்படுத்தப்பட்டன.

 ஆக்ஸ்போர்டு போட்லியன் நூலகத்தின் சில முக்கியப் பகுதிகள் நாடாளுமன்றக் காட்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன.

அரசி ஆன் கதாபாத்திரத்திற்கு ஒலிவியா கோல்மன் மட்டுமே இயக்குநரின் ஒரே தேர்வாக இருந்தார். 

சாரா சர்ச்சில் கதாபாத்திரத்திற்கு முதலில் கேட் வின்ஸ்லெட் ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஆனால் பின்னர் அவருக்குப் பதிலாக ரேச்சல் வைஸ் அந்தப் பாத்திரத்தில் நடித்தார். 

எம்மா ஸ்டோன் இந்தப் படத்தில் நடிக்கத் தானாகவே முன்வந்து இயக்குநரை அணுகினார். அவர் தனது பிரிட்டிஷ் உச்சரிப்பைச் சரியாகக் கொண்டுவரத் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார். 

 படத்தின் ஒலியமைப்பு மிகவும் தனித்துவமானது. இதற்கெனத் தனியாக இசையமைப்பாளர் எவரும் நியமிக்கப்படவில்லை.

 ஒலியமைப்பாளர் ஜானி பர் இசைக்கும் சத்தத்திற்கும் இடைப்பட்ட மெல்லிய இடைவெளியைக் கொண்டு ஒருவித பதற்றமான சூழலை உருவாக்கினார். 

விவால்டி மற்றும் பாக் போன்ற புகழ்பெற்ற மேதைகளின் செவ்வியல் இசைக்கோர்ப்புகளுடன் நவீன காலத்து இசையும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 படத்தின் இறுதியில் எல்டன் ஜானின் ஸ்கைலைன் பிஜன் என்ற பாடல் ஒலிக்கிறது. இதில் அவர் ஹார்ப்சிகார்ட் எனும் பழங்கால இசைக் கருவியைப் வாசித்துள்ளது பதினெட்டாம் நூற்றாண்டின் சூழலுக்குப் பொருத்தமாக அமைந்தது.

ஒளிப்பதிவில் ஸ்டெடிகேம் கருவிகளைத் தவிர்த்துவிட்டு கேமரா நகர்வுகளில் ஒருவித திரவத் தன்மையைக் கொண்டுவரத் தொழில்நுட்பக் குழுவினர் கடுமையாக உழைத்தனர். 

இதற்காகப் புதிய வகை கிம்பல் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. வைட் ஆங்கிள் லென்ஸ்கள் மூலம் கதாபாத்திரங்களை ஒரு பெரிய அறையில் தனிமைப்படுத்திக் காட்டிய விதம் ஒரு விளையாட்டு மைதானம் எப்படி மெல்லப் போர்க்களமாகவும் பின்னர் ஒரு சிறைச்சாலையாகவும் மாறுகிறது என்பதைத் தத்ரூபமாகப் படம்பிடித்தது.

 ஹார்ட்ஃபீல்ட் ஹவுஸ் மாளிகையின் தரைத்தளத்தில் இருந்த கருப்பு வெள்ளை பளிங்கு கற்களின் வடிவமே படத்தின் ஆடை மற்றும் அரங்க வடிவமைப்பிற்கான வண்ணங்களைத் தீர்மானிக்க அடிப்படையாக அமைந்தது.

ஆடை வடிவமைப்பாளர் சாண்டி பவல் மிக நுணுக்கமான குறியீடுகளை ஆடைகளில் புகுத்தினார். அபிகேல் அதிகாரம் பெறப் பெற அவரது ஆடைகள் மிகவும் பகட்டானதாகவும் வரிகள் நிறைந்ததாகவும் மாற்றப்பட்டன. 

இது அவர் திடீரெனப் பணக்காரரானவர் என்பதைக் காட்டப் பயன்படுத்தப்பட்ட உத்தி. அதேபோல் சாரா சர்ச்சிலின் ஆடை வடிவமைப்பு 1992 இல் வெளியான ஆர்லாண்டோ திரைப்படத்தின் சாயலைக் கொண்டிருந்தது. 

அரசி ஆன் பெரும்பாலும் இரவு உடைகளிலேயே தோன்றுவது அவரது உடல்நலக் குறைவையும் சோர்வையும் குறிக்கவே திட்டமிடப்பட்டது.

  நடிகர்கள் வரலாற்றுப் புத்தகங்களைப் படித்துத் தயார் செய்வதை விட ஒருவருக்கொருவர் இருந்த உறவை உணர்ந்து நடிக்கவே இயக்குநர் அறிவுறுத்தினார்.
 
வெனிஸ் திரைப்பட விழாவில் தொடங்கி ஆஸ்கார் வரை இப்படம் நிகழ்த்திய சாதனைகள் மிகப்பெரியவை. குறிப்பாக ஒலிவியா கோல்மன் ஆஸ்கார் விருதை வென்றபோது அவர் ஆற்றிய நெகிழ்ச்சியான உரை உலக அளவில் பேசப்பட்டது.

 ஆஸ்கார் வரலாற்றில் ரோமா திரைப்படத்துடன் இணைந்து அந்த ஆண்டின் அதிகப்படியான பத்து பரிந்துரைகளைப் பெற்ற திரைப்படமாக இது சாதனை படைத்தது. 

21-ஆம் நூற்றாண்டின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இன்றும் இப்படம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

 இங்கிலாந்து அரசவை என்பது வெறும் சொகுசு வாழ்க்கை அல்ல அது சூழ்ச்சிகளும் தனிமையும் நிறைந்த ஒரு இருண்ட உலகம் என்பதை இந்தப் படத்தின் ஒவ்வொரு நுணுக்கமும் உலகிற்கு உரக்கச் சொன்னது.

பதினெட்டாம் நூற்றாண்டின் அரசியான ஆனை ஒரு பலவீனமான மற்றும் விசித்திரமான கதாபாத்திரமாகச் சித்தரிக்க பிரிட்டிஷ் வரலாற்று ஆர்வலர்களும் அதிகார அமைப்புகளும் இசைந்ததற்குப் பின்னால் சில முக்கியக் காரணங்கள் உள்ளன. 

இங்கிலாந்து வரலாற்றில் ஆன் என்பவர் மிக நீண்ட காலம் ஒரு மறக்கப்பட்ட அல்லது குறைத்து மதிப்பிடப்பட்ட அரசியாகவே இருந்து வந்தார். 

அவரைப் பற்றிய பிம்பம் பெரும்பாலும் சாராவின் நினைவுக் குறிப்புகளின் மூலமே கட்டமைக்கப்பட்டிருந்தது.

 சாரா தனது குறிப்புகளில் ஆனை ஒரு மந்தமான மற்றும் முடிவெடுக்கத் தெரியாத பெண்ணாகவே சித்தரித்திருந்தார். 

இதனால் படத்தில் காட்டப்படும் பலவீனமான உருவம் ஏற்கனவே மக்கள் மத்தியில் இருந்த ஒரு வரலாற்றுப் பார்வையின் நீட்சியாகவே பார்க்கப்பட்டது.

பிரிட்டிஷ் கலாச்சாரத்தில் அரச குடும்பத்தினரை நையாண்டி செய்வது என்பது நீண்ட கால மரபாக இருந்து வருகிறது. 

விக்டோரியா அரசியையோ அல்லது இரண்டாம் எலிசபெத் அரசியையோ போலன்றி ஆன் ஒரு தொன்மையான வரலாற்று மாந்தராகக் கருதப்படுகிறார். 

கால இடைவெளி அதிகமாக இருப்பதால் அவரைப் பற்றிய விமர்சனங்கள் அல்லது நையாண்டிகள் தற்கால அரச குடும்பத்தின் கௌரவத்தை நேரடியாகப் பாதிக்காது என்று கருதப்பட்டது. 

 இது ஒரு வரலாற்றுப் பாடமாக எடுக்கப்படாமல் ஒரு கலைப் படைப்பாகவும் அவல நகைச்சுவையாகவும் முன்னிறுத்தப்பட்டது.

இயக்குநர் லாந்திமோஸ் ஆனை ஒரு கேலிச்சித்திரமாக மட்டும் காட்டாமல் அவரது ஆழ்ந்த சோகத்தையும் தனிமையையும் நேர்த்தியாகப் பதிவு செய்திருந்தார். 

பதினேழு குழந்தைகளை இழந்த ஒரு தாயின் வேதனையை அவர் காட்டிய விதம் அரசியின் மீதான ஒருவித அனுதாபத்தை பார்வையாளர்களிடம் உருவாக்கியது. 

இது கேலியையும் தாண்டி ஒரு மனிதப் பண்பை வெளிப்படுத்தியதால் வரலாற்று ரீதியாக இதற்குப் பெரிய எதிர்ப்புகள் எழவில்லை. 

படத்தின் தரமும் அது வெளிப்படுத்திய மேதமையும் அதன் சர்ச்சைக்குரிய பக்கங்களை மறைத்து ஒரு சிறந்த உலக சினிமாவாக அதனை நிலைநிறுத்தின.

அரசவை என்பது வெறும் அதிகார மையமல்ல அது மனிதர்களின் பலவீனம் மற்றும் பொறாமைகள் நிறைந்த ஒரு தளம் என்பதை இப்படம் அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியது.

 இங்கிலாந்து போன்ற நாடுகளில் கலை சுதந்திரத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் இத்தகைய துணிச்சலான சித்தரிப்புகளுக்கு வழிவகுத்தது. 

உண்மையான வரலாற்றை விடவும் அந்த கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான உண்மைக்கு இயக்குநர் முக்கியத்துவம் அளித்ததே இத்தனை பெரிய சர்ச்சைக்குரிய கதையை உலகமே கொண்டாடும் வகையில் எடுக்க அனுமதி கிடைத்தது.

============================
படத்தின் கதை:-

1705-ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசம் பிரான்சுடன் கடுமையான போரில் ஈடுபட்டிருந்தது.

 நாட்டின் பேரரசி ஆன் (ஒலிவியா கோல்மன்) உடல்நிலையிலும் மனநிலையிலும் மிகவும் பலவீனமாக இருந்தார். 

வாத நோயால்  அவரது கால்கள் வீங்கி நடக்க முடியாமல் துடித்தார். அவருக்கு 17 முறை கருச்சிதைவு மற்றும் குழந்தை இறப்புகள் ஏற்பட்டிருந்தன, அரசரை கடைசிவரை  இக்கதையில் முக்கியத்துவம் கருதி காட்டுவதில்லை, புத்திர சோகத்தின்  வலியைப் போக்க, தனது 17 குழந்தைகளுக்கு மாற்றாக 17 காட்டு முயல்களைத் தனது சொகுசு அறையிலேயே வளர்த்து வருகிறார்.

அரசிக்கு அரசியலில் பெரிய நாட்டம் இல்லாததால், அவரது நீண்ட காலத் தோழியும் ஆலோசகருமான சாரா சர்ச்சில் (ரேச்சல் வைஸ்) நாட்டைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 

வரியை உயர்த்துவது, போரைத் தொடர்வது போன்ற முக்கிய முடிவுகளைச் சாராவே எடுக்கிறார்.

 அரசியுடனான சாராவின் உறவு வெறும் நட்பையும் தாண்டி பாலியல் ரீதியான ரகசிய உறவாகவும் நீடித்தது.

 இந்தச் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் ராபர்ட் ஹார்லி (நிக்கோலஸ் ஹோல்ட்) சாராவின் அதிகாரத்தைக் குறைக்க தக்க சமயம் பார்த்துக் காத்திருந்தார்.

இந்த நேரத்தில் சாராவின் தூரத்து உறவினரான அபிகேல் ஹில் (எம்மா ஸ்டோன்) வேலை தேடி அரண்மனைக்கு வருகிறார்.

 அபிகேலின் தந்தை ஒரு காலத்தில் சீமானாக இருந்தவர், ஆனால் சூதாட்டத்தில் தனது சொத்துக்கள் அனைத்தையும், ஏன் தனது மகளான அபிகேலையே ஒரு விளையாட்டில் பந்தயமாக வைத்துத் தோற்றுப்போனார்.

 இதனால் மிகவும் கேவலப்பட்டு தரித்திரம் பீடித்த அபிகேல், அரண்மனையில் ஒரு சாதாரண சமையலறைப் பணிப்பெண்ணாகச் சேர்கிறார்.

ஒருநாள் அரசியின் கால்களில் ஏற்பட்ட வீக்கத்தைப் பார்த்த அபிகேல், காட்டில் இருந்து சில மூலிகைகளைக் கொண்டு வந்து பற்றுப் போட்டு அரசியின் வலியைத் தணிக்கிறார். 

அனுமதியின்றி அரசியின் அறைக்குள் நுழைந்ததற்காக சாரா முதலில் அபிகேலை கசையடியால் தண்டித்தாலும், அந்த மூலிகைகள் வேலை செய்ததை உணர்ந்து, அபிகேலை அரசியின் படுக்கையறைப் பணிப்பெண்ணாக பதவி உயர்வு செய்கிறார்.

ஒரு இரவு சாரா மற்றும் அரசி உடலுறவு கொள்வதை அபிகேல் மறைந்திருந்து பார்த்துவிடுகிறார். இதுதான் தனக்கான வாய்ப்பு என உணரும் அபிகேல், மெல்ல மெல்ல அரசியின் அன்பை தானும் பெறத் தொடங்குகிறார்.

 ஹார்லி இவரைத் தனது பக்கம் இழுத்து அரசியின் ரகசியங்களை உளவு பார்க்கச் சொல்கிறார்.

அரசியிடம் சாரா காட்டும் அன்பு மிகவும் அதிகாரபூர்வமானதாகவும் கடினமானதாகவும் இருந்தது. ஆனால் அபிகேல் அரசியை ஒரு குழந்தையைப் போலக் கொஞ்சி, அவரது மனதைக் கவர்கிறார். 

இதைக் கண்டறிந்த சாரா, அபிகேலை வெளியேற்ற முயற்சி செய்கிறார். ஆனால் தந்திரமான அபிகேல், சாராவின் தேநீரில் மெல்ல வேலை செய்யும் மயக்க மருந்து கலந்து கொடுக்கிறார்.

 மயக்கமடைந்த சாரா குதிரையில் செல்லும்போது விபத்தில் சிக்கி, காட்டில் விழுந்து ஒரு விபச்சார விடுதியில் சிக்கிக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு விருந்தாகிறார்.

சாரா தன்னை விட்டுப் பிரிந்து போய்விட்டதாக எண்ணிய அரசி ஏமாற்றமடைகிறார். அந்த இடத்தை அபிகேல் நிரப்புகிறார். 

அரசியின் ஆதரவுடன் கர்னல் மாஷாம் (ஜோ ஆல்வின்) என்பவரைத் திருமணம் செய்துகொண்டு மீண்டும் உயர்குடி 'சீமாட்டி' பரொனஸ் அந்தஸ்தைப் பெறுகிறார் அபிகேல்.

தன் கணவரின் உதவியால் மீண்டு வரும் சாரா, அபிகேலுடன் சமாதானம் செய்ய மறுக்கிறார்.

 அரசியிடம் தனது செல்வாக்கை மீண்டும் பெற முயல்கிறார். அரசி தனக்கு எழுதிய ரகசியக் காதல் கடிதங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார். 

ஒருகட்டத்தில் மனம் மாறி அக்கடிதங்களைச் சாரா எரித்தாலும், அந்த மிரட்டலால் கோபமடைந்த அரசி, சாராவைத் தனது அறையிலிருந்து வெளியேற்றுகிறார்.

நிதியமைச்சர் கோடோல்பின் (ஜேம்ஸ் ஸ்மித்) ஆலோசனையின் பேரில் சாரா அரசியிடம் மன்னிப்புக் கேட்டு ஒரு கடிதம் அனுப்புகிறார்.

 ஆனால் அந்தக் கடிதத்தை அரசியிடம் கொடுக்காமல் அபிகேல் எரித்துவிடுகிறார்.

 சாரா மன்னிப்புக் கேட்கவில்லை என்று கோபமடைந்த அரசி, சாராவையும் அவரது கணவர் ஜான் சர்ச்சிலையும் (மார்க் கேடிஸ்) நாட்டை விட்டே நாடுகடத்த உத்தரவிடுகிறார்.

சாரா சென்ற பிறகு, அபிகேல் தான் நினைத்தபடி அனைத்து அதிகாரங்களையும் பெறுகிறார். 

அரசியிடம் அன்பு செலுத்துவதை நிறுத்திவிட்டு, ஆடம்பர வாழ்க்கையில் திளைக்கிறார். 

ஒருநாள் அரசியின் செல்ல முயல் ஒன்றை அவர் காலால் மிதித்துத் துன்புறுத்துகிறார்.

 மிகவும் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த அரசி, அபிகேலின் இந்தச் செயலைப் பார்த்து அவரது உண்மையான சுபாவத்தைப் புரிந்து கொள்கிறார்.

இறுதியில், அரசி ஆன் தனது படுக்கையிலிருந்து எழுந்து வந்து, மண்டியிட்டுத் தனது காலை பிடித்து விடுமாறு அபிகேலுக்குக் கட்டளையிடுகிறார்.

 அபிகேலின் முடியைப் பிடித்து இழுத்து அவரை அடிமை போல நடத்துகிறார் அரசி. 

யார் ஒருவரிடம் உண்மையான அன்பு இருந்ததோ (சாரா), அவரை இழந்துவிட்டு, அதிகாரத்துக்காகத் தன்னைத் தேடி வந்த ஒரு அடிமையுடன் (அபிகேல்) தனிமையில் சிக்கிக்கொண்ட அரசியின் விரக்தியான முகத்தோடு கதை முடிகிறது.

அதிகாரம் என்பது ஒரு மனிதனை எவ்வளவு உச்சத்திற்குக் கொண்டு செல்கிறதோ அதே அளவு அவனைத் தனிமைப்படுத்தவும் செய்யும் என்பதே இப்படம் சொல்லும் மிக முக்கியமான செய்தியாகும். 

அரசியாக இருக்கும் ஆன் உலகையே ஆளும் அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் தனது அந்தரங்க அறையில் அவர் நோயாலும் இழந்த குழந்தைகளின் நினைவாலும் வாடும் ஒரு சாதாரணப் பெண்ணாகவே இருக்கிறார்.

 அவரைச் சுற்றியுள்ளவர்கள் காட்டும் அன்பு உண்மையானதா அல்லது அவரது அதிகாரத்திற்காகக் காட்டப்படும் போலியானதா என்பதை அறிய முடியாத குழப்பமே அவரது மிகப்பெரிய பலவீனமாக அமைகிறது.

சாரா மற்றும் அபிகேல் ஆகிய இருவருமே அரசியிடம் செல்வாக்கு பெறப் போட்டியிடுகிறார்கள் என்றாலும் அவர்கள் அணுகும் முறை முற்றிலும் வேறானது. சாரா அரசியிடம் காட்டும் அன்பு மிகவும் கடுமையானது மற்றும் நேர்மையானது.

 அரசியின் முகத்திற்கு நேராக உண்மையைச் சொல்லும் சாரா அவரைத் திறமையான ஆட்சியாளராக மாற்ற விரும்புகிறார். 

ஆனால் அபிகேல் வறுமையிலிருந்து தப்பிக்க அரசியின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு பிழைப்புவாதியாக இருக்கிறார். 

அரசி எதை விரும்புகிறாரோ அதைச் செய்து பொய்யான அன்பைக் காட்டி அவர் அரசியைக் கவர்கிறார். இறுதியில் கசப்பான உண்மையைச் சொல்லும் சாரா வெளியேற்றப்படுவதும் இனிப்பான பொய்களைச் சொல்லும் அபிகேல் வெற்றி பெறுவதும் உலகம் பெரும்பாலும் கசப்பான உண்மையை விட வசதியான பொய்களையே விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது.

வெற்றியின் கசப்பான முடிவை இப்படத்தின் இறுதிக்காட்சி மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. 

அபிகேல் தான் நினைத்தபடி அனைத்து எதிரிகளையும் வீழ்த்தி உயர்குடி அந்தஸ்தைப் பெற்று வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியின் முடிவில் அவர் ஒரு அடிமையைப் போல அரசியின் காலடியில் மண்டியிட்டு அமர வேண்டியுள்ளது. 

அதிகாரம் என்பது ஒரு சக்கரம் போன்றது அங்கே யாரும் யாருக்கும் உண்மையான நண்பர்கள் கிடையாது. யாரை நம்புவது என்ற புரிதல் இல்லாத அதிகாரத்தின் முடிவு பெரும் விரக்தியே என்பதை அந்த இறுதித் திரையில் விரியும் அரசியின் முகம் உணர்த்துகிறது.

 வறுமை ஒரு மனிதனை எவ்வளவு தரம் தாழ்த்தும் என்பதையும் அதிகாரம் கிடைத்தால் அதே மனிதன் எவ்வளவு குரூரமாக மாறுவான் என்பதையும் அபிகேல் பாத்திரம் மூலம் இயக்குனர் உணர்த்தியுள்ளார்.

 அடிமட்டத்திலிருந்து வந்த அபிகேல் அதிகாரம் கிடைத்தவுடன் வாயில்லாப் பிராணியான முயலை வதைப்பதன் மூலம் அடக்கப்பட்டவன் அதிகாரம் பெறும்போது இன்னும் கொடூரமானவனாக மாறுவான் என்ற உளவியலைப் இப்படம் பேசுகிறது. 

 அன்பு துரோகம் அதிகாரம் ஆகியவற்றிற்கு இடையிலான மெல்லிய கோட்டைப் பற்றியும் இறுதியில் இவை அனைத்தும் மனிதனை ஒரு சூனியமான தனிமைக்கே இட்டுச் செல்லும் என்பதையும் இப்படம் செய்தியாகச் சொல்கிறது.

ரோமா ROMA 2018

ரோமா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. ஆஸ்கார் விருது பெற்ற புகழ்பெற்ற இயக்குநர் அல்போன்சோ குவாரன் (Alfonso Cuarón) இப்படத்தை இயக்கியுள்ளார். இது அவரது சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மிகச்சிறந்த கலைப்படைப்பாகும்.

மெக்சிகோ நகரத்தின் நடுத்தர வர்க்கக் குடியிருப்பில் 1970 களின் தொடக்கத்தில் ஒரு  பணிப்பெண்ணின் வாழ்வை மிக நெருக்கமான சித்திரமாக இப்படம் முன்வைக்கிறது. 

ஒரு தேசத்தின் அரசியல் மாற்றங்களையும் ஒரு குடும்பத்தின் சிதைவையும் ஒரே புள்ளியில் இணைத்து ஒரு காவியத் தன்மையுடன் கதை தொடங்குகிறது.

மொழிகளைக் கடந்து மானுட உணர்வுகளின் உலகளாவிய மொழியைப் பேசுவதால் இது உலக சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. 

மிக நுணுக்கமான வாழ்வியல் பதிவுகளை ஒரு கலைப் படைப்பாக மாற்ற முடியும் என்பதை உலகிற்கு மெய்ப்பித்துக் காட்டியது.

வெறுமனே ஒரு பெண்ணின் துயரத்தைச் சொல்லாமல் அவள் சார்ந்திருக்கும் சமூகத்தின் வர்க்க முரண்பாடுகளையும் அதிகாரப் படிநிலைகளையும்  இப்படம் விமர்சிக்கிறது. 

இப்படத்தின் அடிநாதம்  மௌனமான தாங்குதிறன் மற்றும் அதிகாரமற்றவர்களின் ஆதிக்கமற்ற அன்புமே ஆகும். சமூகம் ஒரு பெண்ணை அவளது வர்க்கம் மற்றும் இன அடையாளத்தைக் கொண்டு மதிப்பிட்டாலும் அந்தப் பெண் தனக்குள் கொண்டிருக்கும் எல்லையற்ற கருணையே இவ்வுலகைத் தாங்கிப் பிடிக்கிறது என்பதை இந்தப் படம் அடிநாதமாகக் கொண்டுள்ளது.

கிளியோ என்ற கதாபாத்திரம் ஒருபோதும் உரத்துப் பேசுவதில்லை அல்லது தன் உரிமைகளுக்காகப் போராடுவதில்லை. ஆனால் அந்த வீட்டின் ஒவ்வொரு அசைவிலும் அவளது உழைப்பும் மௌனமான இருப்பும் கலந்திருக்கிறது.

 ஒரு பக்கம் மெக்சிகோ தேசமே அரசியல் ரீதியாகவும் வன்முறை ரீதியாகவும் கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது கிளியோவின் உலகம் தன் அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பதிலேயே சுழல்கிறது. 

இந்த அமைதியான அர்ப்பணிப்புதான் சிதைந்து போகும் ஒரு குடும்பத்தை மீண்டும் ஒட்டவைக்கும் சக்தியாக மாறுகிறது.
மேலும் இந்தப் படைப்பு இருப்பு மற்றும் மறைவு ஆகியவற்றின் முரண்பாடுகளைத் தொட்டுச் செல்கிறது. 

அன்டோனியோ அந்த வீட்டின் தலைவராக இருந்தும் அவரது பிரிவு அக்குடும்பத்தை நிலைகுலையச் செய்யவில்லை. மாறாக அதிகாரமோ அந்தஸ்தோ இல்லாத கிளியோவின் இருப்புதான் அக்குடும்பத்தை முற்றிலுமாக அழிந்துவிடாமல் காக்கிறது. 

ஒரு குழந்தையின் மரணத்தையும் ஒரு தந்தையின் துரோகத்தையும் ஒரு பெண் எப்படித் தன் மௌனத்தாலேயே எதிர்கொண்டு மீள்கிறாள் என்பதுதான் இப்படத்தின் ஆன்மா.

தாய்மை என்பது வெறும் உயிரியல் சார்ந்தது மட்டுமல்ல அது ஒரு பாதுகாக்கும் உணர்வு என்பதையும் இப்படம் நுணுக்கமாக உணர்த்துகிறது.

 தனக்குப் பிறக்கவிருந்த குழந்தையை இழந்த கிளியோ பிறிதொரு தாயின் குழந்தைகளைக் காக்கத் தன் உயிரைப் பணயம் வைக்கும்போது அவள் ஒரு உன்னதமான நிலையை அடைகிறாள். 

இந்தத் தியாகமும் அதன் வழியே கிடைக்கும் மன விடுதலையுமே இப்படத்தின் ஆழமான தத்துவமாக ஒளிர்கிறது. சுருக்கமாகச் சொன்னால் ஆர்ப்பாட்டமில்லாத அன்பின் வழியே ஒரு பெண் அடையும் அக எழுச்சியே ரோமா படத்தின் அடிநாதம்.

மௌனமான காட்சிகளின் வழியாகவே ஆழமான அரசியல் கருத்துகளைக் கடத்தும் பாணி இதன் தனிச்சிறப்பு.

 ஒரு இயக்குநராகத் திரைக்கதை வசனம் மற்றும் படத்தொகுப்பு என அனைத்துத் துறைகளிலும் தனது முழுமையான ஆளுமையைச் செலுத்தி ஒரு செழுமையான படைப்பை உருவாக்கியுள்ளார்.

கறுப்பு வெள்ளை வண்ணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்ட விதம் ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது. 

மிக நீண்ட காட்சிகளும் கேமரா நகரும் விதமும் பார்வையாளர்களை அந்த 1970 களின் மெக்சிகோ தெருக்களுக்குள் நேரடியாக அழைத்துச் செல்கின்றன.

நெட்ஃபிக்ஸ் தளத்தின் மூலம் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்த இப்படம் திரையரங்கு வெளியீடு மற்றும் ஓடிடி தளம் ஆகியவற்றுக்கு இடையிலான விவாதங்களைப் புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றது. 

உலகளாவிய விநியோக முறையில் இது ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது.
யலிட்சா அபாரிசியோ கிளியோ எனும் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளார். 

எந்தவித நடிப்புப் பயிற்சியும் இன்றி அவர் வெளிப்படுத்திய நுட்பமான உணர்வுகள் கதாபாத்திரத்திற்கு ஒரு நம்பகத்தன்மையை வழங்கின.

 மற்ற நடிகர்களும் அக்குடும்பத்தின் உறுப்பினர்களாகவே மாறித் திரையில் உலவுகின்றனர்.

படத்தில் தனித்தனியாக இசைக்கோர்ப்புகள் எதுவும் கிடையாது. மாறாக அந்தச் சூழலில் கேட்கும் தெருவோரச் சத்தங்கள் வானொலிப் பாடல்கள் மற்றும் இயற்கை ஒலிகளே ஒரு இசைக்கருவியாக மாறிப் படத்திற்குத் தேவையான உணர்ச்சிகளை ஊட்டுகின்றன.

இப்படம் சிறந்த இயக்குநர் சிறந்த ஒளிப்பதிவு  சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்தது. 

 வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவின் உயரிய விருதான கோல்டன் லயன் உட்பட உலகெங்கிலும் பல நூறு அங்கீகாரங்களைத் தன்வசப்படுத்தியது.

ரோமா திரைப்படத்தின் உருவாக்கத்தில் மறைந்திருக்கும் பல சுவாரசியமான தகவல்கள் இப்படத்தின் கலை நேர்த்தியைப் பறைசாற்றுகின்றன.

 இயக்குனர் அல்போன்சோ குவாரன் தனது பால்ய கால நினைவுகளை அப்படியே திரையில் கொண்டு வர விரும்பினார். இதற்காக அவர் தனது குடும்பத்தினர் வளர்த்த அதே போன்ற நாய் மற்றும் 1970 களில் அவர்கள் பயன்படுத்திய உண்மையான தளவாடப் பொருட்கள் பலவற்றைத் தேடிப் பிடித்து இப்படத்தில் பயன்படுத்தினார்.

படத்தின் நாயகி யலிட்சா அபாரிசியோ இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றவர். அவருக்கு நடிப்பில் எந்த முன் அனுபவமும் கிடையாது. 

உண்மையில் அவரது தோழிதான் இந்த வாய்ப்புக்காகச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் தோழி கர்ப்பமாக இருந்ததால் யலிட்சா அந்த நேர்காணலுக்குச் சென்றார். அங்குதான் அவர் கிளியோ கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

 யலிட்சாவுக்குத் திரைக்கதை முழுமையாகத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
காட்சிகள் ஒவ்வொன்றையும் வரிசைப்படி படமாக்கினார் இயக்குனர். 

நடிகர்களுக்கு அன்றைய தினம் என்ன நடக்கப்போகிறது என்பது முன்கூட்டியே தெரியாது. இது அவர்களின் உணர்ச்சிகள் இயல்பாக வெளிப்பட உதவியது. 

உதாரணமாகக் கிளியோவுக்குப் பிறக்கும் குழந்தை இறந்துவிட்டது என்ற செய்தி யலிட்சாவுக்குப் படப்பிடிப்பின் போதுதான் நிஜமாகத் தெரியவந்தது.

 எனவே அங்கு அவர் வெளிப்படுத்திய அழுகை மிகவும் யதார்த்தமான ஒன்றாக அமைந்தது.
படப்பிடிப்பின் போது ஒரு மிகப்பெரிய சவால் எதிர்கொள்ளப்பட்டது.

 மெக்சிகோ நகரத்தின் முக்கியமான தெருக்களை 1970 களில் இருந்தது போல மாற்றியமைக்க வேண்டியிருந்தது. 

இதற்காக ஒரு கிலோமீட்டர் நீளத்திற்குப் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டது. பழைய கடைகள் விளம்பரப் பலகைகள் மற்றும் அக்கால வாகனங்கள் என அனைத்தும் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டன.

ஒளிப்பதிவை இயக்குனரே கவனித்துக் கொண்டார். பொதுவாகக் கறுப்பு வெள்ளை படங்கள் பழைய காலத்து கேமராக்களில் எடுக்கப்படும். 

ஆனால் குவாரன் மிக நவீனமான 65 எம்எம் டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தினார். இதன் மூலம் மிகத் தெளிவான அதே சமயம் பழைய காலத்து உணர்வைத் தரும் காட்சிகளை அவர் உருவாக்கினார். 

இப்படத்தின் சத்தங்கள் கூட மிகவும் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு திசையிலிருந்தும் வரும் ஒலிகளைத் தனித்தனியாகப் பதிவு செய்து பார்வையாளர்கள் அந்த இடத்திலேயே இருப்பதை போன்ற உணர்வைத் தந்தது இந்தத் தொழில்நுட்பம்.

நடிகர்கள் மட்டுமன்றி ஒளிப்பதிவு மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்குக் கூட முழுமையான கதையை சொல்லவில்லை  இயங்குனர். 

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்புதான் அந்தந்தக் காட்சிக்கான வசனங்கள் மற்றும் தகவல்கள் நடிகர்களுக்குத் தனித்தனியாக வழங்கப்பட்டன. 

இது நடிகர்களிடையே ஒரு உண்மையான குழப்பத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி அதைத் திரையில் பிரதிபலிக்கச் செய்தது.

கடற்கரையில் குழந்தைகளைக் காப்பாற்றும் அந்த முக்கியமான காட்சியில் யலிட்சா அபாரிசியோ உண்மையில் மிகுந்த அச்சத்துடன் நடித்தார். 

நிஜ வாழ்க்கையில் அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் அந்த ஆக்ரோஷமான அலைகளுக்குள் இறங்கியபோது அவர் வெளிப்படுத்திய பதற்றம் நடிப்பு அல்ல. 

அது ஒரு உயிருக்குப் போராடும் மனிதனின் இயல்பான எதிர்வினை. அந்தக் காட்சியை ஒரே நீண்ட ஷாட் முறையில் எடுத்து முடித்தவுடன் ஒட்டுமொத்தக் குழுவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்.

படத்தின் ஒலி வடிவமைப்பு மிகவும் சிக்கலானது. டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு சத்தத்தையும் அதன் திசைக்கேற்ப வடிவமைத்தனர்.

 வீட்டின் ஒரு அறையில் பேசும் சத்தம் மற்றொரு அறையில் எப்படித் தூரமாகக் கேட்குமோ அவ்வாறே ஒலிகள் பிரிக்கப்பட்டன. இதற்காகச் சாதாரணப் படங்களை விடச் சத்தத்தைப் பதிவு செய்ய மிக அதிகக் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

 பின்னணி இசை இல்லாத சூழலில் இந்த இயற்கை ஒலிகளே படத்திற்கு ஒரு ஜீவனைக் கொடுத்தன.
இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான பொருட்கள் இயக்குநரின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவை. 

அவரது உடன்பிறந்தவர்களிடமிருந்து பழைய ஆடைகள் மற்றும் புகைப்படங்களை வாங்கி அதைப் போலவே அச்சு அசலாகப் புதிய பொருட்களை உருவாக்கினர். 

படத்தின் ஒரு காட்சியில் வரும் முதியவர் உண்மையில் மெக்சிகோவின் புகழ்பெற்ற தற்காப்புக் கலை நிபுணர் ஆவார். அவர் படத்தில் ஒரு சவாலான உடற்பயிற்சியைச் செய்யும் காட்சி எந்தவிதத் தொழில்நுட்ப உதவியும் இன்றி நேரடியாகப் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பின் போது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமும் நிகழ்ந்தது. ஒரு தெருவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த உள்ளூர் அதிகாரிகளுக்கும் படக்குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதில் சில தொழில்நுட்பக் கலைஞர்கள் காயமடைந்தனர்  சில உபகரணங்கள் சேதமடைந்தன. இவ்வளவு தடைகளையும் கடந்து உருவான இப்படம் ஆஸ்கார் விருதுக்குச் சென்ற முதல் நெட்ஃபிக்ஸ் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.

 இது இணையவழித் திரைத்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
திரைப்படத்தின் முடிவில் வரும் நன்றி குறிப்பு பகுதியில் லிப்போ எனும் பெயரைக் காணலாம். 

இது அல்போன்சோ குவாரனின் பால்ய காலத்தில் அவரது வீட்டில் பணிபுரிந்த லிபோரியா ரோட்ரிக்ஸ் என்பவரைக் குறிக்கும்.

 இந்தப் படத்தின் முழுக் கதையும் அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதுடன் குவாரன் தனது குழந்தைப் பருவத்தில் தனக்குத் தாய்க்கு நிகராக அன்பைச் சொரிந்த அந்தப் பெண்ணிற்குச் செய்த ஒரு சமர்ப்பணமாகவே இதைக் கருதினார்.

படப்பிடிப்பு நடந்த வீடு இயக்குநரின் உண்மையான வீட்டின் நேரெதிரே அமைந்திருந்த ஒரு கட்டிடம். குவாரன் தனது சொந்த வீட்டைப் பயன்படுத்த விரும்பினார் ஆனால் பல தசாப்தங்களில் அந்த வீடு நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டதால் அதன் பழைய தோற்றத்தை மீட்க முடியவில்லை. 

எனவே அதற்கு நேர் எதிரே இருந்த வீட்டைத் தேர்வு செய்து தனது நினைவுகளில் இருந்த தனது பழைய வீட்டைப் போலவே அதன் உட்புறத்தை முழுமையாக மாற்றியமைத்தார்.

ஒளிப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட நவீன கேமராக்கள் மிகத் துல்லியமான காட்சிகளைப் பதிவு செய்தன. வழக்கமாக வரலாற்றுத் திரைப்படங்கள் ஒருவித மங்கலான அல்லது பழைய உணர்வைத் தரும் வகையில் எடுக்கப்படும். ஆனால் குவாரன் கடந்த காலத்தை மிகத் தெளிவாகவும் இன்றைய காலத்தைப் போலவும் காட்ட விரும்பினார். 

இதற்காக அவர் கறுப்பு வெள்ளை வண்ணத்தைத் தேர்வு செய்தாலும் அதன் தரம் மிக உயர்ந்ததாக இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.

படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு நெட்ஃபிக்ஸ் நிறுவனம் இப்படத்தை வாங்கியது. ஒரு இணையத் தளம் தயாரித்த படம் ஆஸ்கார் போன்ற உயரிய விருதுகளுக்குத் தகுதியானதா என்ற விவாதம் ஹாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அளவில் வெடித்தது. 

புகழ்பெற்ற இயக்குநர்கள் கூட இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் இந்தப் படைப்பின் தரம் அந்த எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கி உலக அளவில் அங்கீகாரம் பெற்றது.

மெக்சிகோவில் இப்படம் வெளியான போது அது ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள வீட்டு வேலை செய்யும் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பு குறித்துப் பெரிய அளவில் விவாதங்கள் தொடங்கின. 

படத்தின் நாயகி யலிட்சா அபாரிசியோ ஒரு சாதாரணப் பெண்ணிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பழங்குடியினப் பெண் என்ற நிலையை அடைந்தது உலகெங்கிலும் உள்ள விளிம்புநிலை மக்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையாக அமைந்தது.

 அதன் மூலம் ஒரு கலைப்படைப்பு வெறும் பொழுதுபோக்கையும் தாண்டி ஒரு சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப முடியும் என்பதை இப்படம் நிரூபித்தது.

===========================

படத்தின் கதை:-

மெக்சிகோவின் கொலோனியா ரோமா பகுதியில் 1970 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடக்கும் உணர்ச்சிகரமான வாழ்வியல் பதிவே இந்தத் திரைப்படம்.

கதையின் நாயகி கிளியோ (யலிட்சா அபாரிசியோ) அந்த வீட்டில் தங்கி வேலை செய்யும் ஒரு மிஸ்டெக் பழங்குடியினப் பெண். 

அதிகாலையில் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்வது முதல் குழந்தைகளைத் தயார் செய்வது வரை அக்குடும்பத்தின் அச்சாணியாக அவள் இருக்கிறாள். 

அன்டோனியோ (பெர்னாண்டோ கிரெடியாகா) ஒரு மருத்துவர். அவர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியே செல்வதாகக் கூறினாலும் உண்மையில் அவர் தன் குடும்பத்தைப் புறக்கணித்து வேறொரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார். 

அவரது மனைவி சோபியா (மரினா டி தவீரா) கணவனின் பிரிவால் ஏற்படும் வேதனையை மறைத்துக் கொண்டு நான்கு குழந்தைகளையும் தன் தாயார் தெரஸாவையும் (வெரோனிகா கார்சியா) கவனித்துக் கொள்கிறார்.

பணிப்பெண் கிளியோ, பெர்மின் (ஜார்ஜ் ஆண்டோனியோ குவெரெரோ) என்ற இளைஞனை நம்பி உடல்ரீதியாக நெருக்கமாகிறாள். ஒரு சினிமா தியேட்டரில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவள் அவனிடம் சொல்லும் அதே தருணத்தில் சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறிவிட்டுப் பெர்மின் அங்கிருந்து தப்பி ஓடுகிறான்.

 அதன்பின் அவன் அவளைச் சந்திக்கவே இல்லை. திக்கற்று நின்ற கிளியோவுக்கு சோபியா அடைக்கலம் தருகிறாள்.

 சோபியாவே அவளைத் தன் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறந்த சிகிச்சை கிடைக்க வழி செய்கிறாள்.

ஒரு கட்டத்தில் பெர்மின் இருக்கும் இடத்தை அறிந்து கிளியோ அவனைச் சந்திக்கச் செல்கிறாள். அங்கே அவன் ஒரு துணை ராணுவப் பயிற்சி முகாமில் தீவிரமாகப் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறான்.

 அவனைச் சந்தித்து கருவுற்றதை முறையிடும்போது அவன் கிளியோவை மிகக் கேவலமாகப் பேசி மிரட்டி அனுப்பிவிடுகிறான்.

கிளியோவின் பிரசவ காலம் நெருங்கும் வேளையில் ஒருநாள் தெரஸா அவளை அழைத்துக்கொண்டு குழந்தைக்குத் தொட்டில் வாங்க கடைக்குச் செல்கிறார்.

 அப்போது வெளியே மெக்சிகோ வரலாற்றில் கறுப்பு தினமாகக் கருதப்படும் கார்பஸ் கிறிஸ்டி படுகொலை நிகழ்கிறது. மாணவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள்.

 வன்முறையாளர்கள் கடைக்குள் புகுந்து ஒரு மாணவனைச் சுட்டுக் கொல்கிறார்கள். அந்தக் கும்பலில் ஒருவனாக இவளை ஏமாற்றிய பெர்மின் கையில் துப்பாக்கியுடன் நிற்கிறான்.

 அவன் கிளியோவைப் பார்த்துத் துப்பாக்கியை நீட்டி மிரட்டிவிட்டுச் செல்கிறான்.
இந்தக் கொடூரமான அதிர்ச்சியில் கிளியோவுக்கு அங்கேயே பனிக்குடம் உடைகிறது. 

சாலைகளில் நிலவிய கலவரத்தாலும் நெரிசலாலும் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. 

அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஏமாற்றும் கணவன் அன்டோனியோ தென்படுகிறார். 

அவர் பணிப்பெண் கிளியோவுக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்துவிட்டு நழுவிச் செல்கிறார்.

 இறுதியில் கிளியோ ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். ஆனால் அந்தப் பிஞ்சு உயிர் கருவிலேயே பிரிந்து போனதால் குழந்தை உயிரற்று பிறக்கிறது.

 தன் மார்போடு அணைக்க வேண்டிய குழந்தையைச் சடலமாகப் பார்க்கும் கிளியோவின் கதறல் பார்ப்பவர் நெஞ்சை உறையச் செய்கிறது.

இந்நிலையில் சோபியாவின் கணவன் அன்டோனியோ தன் உடமைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுகிறான். 

அந்தத் துயரத்திலிருந்து குழந்தைகளை மாற்றச் சோபியா அவர்களைத் துக்ஸ்பான் கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.

 அங்கே கிளியோவும் உடன் செல்கிறாள். சோபியா தன் குழந்தைகளிடம் தந்தை இனி வரப்போவதில்லை என்ற உண்மையைச் சொல்கிறாள்.

கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவர் கடல் அலையின் சீற்றத்தில் சிக்கித் தத்தளிக்கிறார்கள்.

 பணிப்பெண் கிளியோவுக்கு நீச்சல் தெரியாது என்றாலும் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ஆக்ரோஷமான அலைகளுக்குள் இறங்கிப் போராடி இரு குழந்தைகளையும் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வருகிறாள்.

 அனைவரும் கிளியோவை அணைத்துக் கண்ணீர் வடிக்கிறார்கள். அப்போதுதான் கிளியோ தான் உண்மையில் தன் அந்த குழந்தை பிறப்பதையே விரும்பவில்லை என்று தன் உள்ளுக்குள் இருந்த குற்ற உணர்ச்சியை உரக்கச் சொல்லி அழுகிறாள்.

 அன்டோனியோ இல்லாத அந்த வீடு இப்போது வெற்றிடமாகத் தெரிந்தாலும் சோபியாவும் கிளியோவும் ஒருவருக்கு ஒருவர் துணையாக அக்குடும்பத்தை வழிநடத்தத் தயாராகிறார்கள்.

 கிளியோ மீண்டும் தனது அன்றாட வேலைகளைத் தொடங்குகிறாள். வீட்டின் மாடிப் படிக்கட்டுகளில் துணிகளைத் துவைக்க அவள் ஏறிச் செல்லும்போது மேலே வானத்தில் ஒரு விமானம் கடந்து செல்கிறது. 

வாழ்க்கை எத்தனையோ இழப்புகளையும் வலிகளையும் தந்தாலும் அது அதன் போக்கில் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்திப் படம் நிறைவடைகிறது.

ரோமா திரைப்படம் சொல்லும் செய்தி மிகவும் தெளிவானது. சமூகம் மக்களை வர்க்கம், சாதி மற்றும் அதிகார படிநிலைகளால் பிரித்து வைத்திருந்தாலும், துயரம் வரும்போது அந்தப் பிரிவினைகள் அர்த்தமற்றதாகிவிடுகின்றன என்பதே இப்படம் முன்வைக்கும் பிரதான செய்தி.

ஆண்களால் கைவிடப்படும் இரண்டு பெண்கள் வெவ்வேறு பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிக்கும் இடத்தில்தான் வாழ்வின் பிடிமானம் இருக்கிறது. 

பணம் படைத்த சோபியாவாக இருந்தாலும், ஏழ்மையில் இருக்கும் கிளியோவாக இருந்தாலும், ஏமாற்றப்படும்போது இருவருமே சமமாகவே பாதிக்கப்படுகிறார்கள்.

 இதையே சோபியா கிளியோவிடம் ஒரு காட்சியில் நாம் பெண்கள் எப்போதும் தனியாகவே விடப்படுகிறோம் என்று அழுத்தமாகச் சொல்லுவார்.

 நாம் செய்யும் கடமை என்பது வெறும் ஊதியத்திற்காக மட்டுமல்ல, அது ஒரு ஆழமான அன்பின் வெளிப்பாடு என்பதையும் இப்படம் உணர்த்துகிறது. 

கிளியோ அந்த வீட்டின் குழந்தைகளைத் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் கடலில் இறங்கிக் காப்பாற்றுவது, மனித உறவுகள் ஒப்பந்தங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதைச் சொல்கிறது.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், சமூகத்தில் நடக்கும் பெரிய கலவரங்களும் அரசியல் மாற்றங்களும் எப்போதும் கிளியோ போன்ற எளிய மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கனவுகளையும் தான் பலி வாங்குகின்றன என்ற கசப்பான உண்மையை இப்படம் உரக்கச் சொல்கிறது.

 இறுதியில், இழப்புகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், மனிதர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும் என்ற எளிய ஆனால் வலிமையான செய்தியை இப்படம் பதிவு செய்கிறது.

போஹிமியன் ராப்சோடி Bohemian Rhapsody 2018


"போஹிமியன் ராப்சோடி"  2018 ஆம் ஆண்டு வெளியான  இசை சார்ந்த வாழ்க்கை வரலாற்றுச் சித்திரம்.

 பிரிட்டனின் புகழ்பெற்ற ராக் இசைக்குழுவான குயீன் மற்றும் அதன் முதன்மைப் பாடகர் பிரெடி மெர்குரியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் மீண்டெழுதலையும் இப்படம் திரையில் கொண்டு வந்துள்ளது.

பிரெடி மெர்குரியின் மூதாதையர்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பார்சி  இனத்தைச் சேர்ந்தவர்கள். 

இவரது தந்தை போமி புல்சாரா மற்றும் தாய் ஜெர் புல்சாரா ஆகிய இருவரும்    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

 இவர்கள் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த சான்சிபார்  தீவிற்குப் குடிபெயர்ந்தனர். அங்கேயே  பாரோக் புல்சாரா பிறந்தார்.

அவர் பின்பற்றிய மதம் ஜோராஸ்ட்ரியம்.  

பிரெடி மெர்குரியின் இறுதிச் சடங்குகளும் அவரது மத ஆச்சாரப்படியே லண்டனில் ஒரு ஜோராஸ்ட்ரிய மத குருவால் நடத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1970 இல் அந்தக் குழு உருவானது முதல் 1985 இல் வெம்ப்லி மைதானத்தில் அவர்கள் நிகழ்த்திய உலகப் புகழ்பெற்ற லைவ் எய்ட் இசை நிகழ்ச்சி வரையிலான காலத்தை இந்தப் படம் ஒரு காவியமாகப் பதிவு செய்துள்ளது. 

ஒரு சாதாரண மனிதன் உலகளாவிய நட்சத்திரமாக மாறுகையில்  அவனது தனிப்பட்ட வாழ்வின் வலிகளையும் குழப்பங்களையும் படம் நேர்மையுடன் அணுகியுள்ளது.

இப்படத்தின் அடிநாதம்  ஒரு கலைஞனின் அசாத்தியமான ஆளுமைச் சுதந்திரம் , அந்தச் சுதந்திரத்தைச் தக்கவைக்க அவன் கொடுக்கும் விலை பற்றியதாகும். 

சமூகம் தீர்மானித்த ஒழுக்க முறைகள், இசை நிறுவனங்கள் விதித்த வணிகச் சட்டங்கள் மற்றும் குடும்பம் எதிர்பார்த்த பாரம்பரியம் ஆகிய அனைத்தையும் பிரெடி மெர்குரி  தனது இசையாலும் வாழ்வாலும் சவாலுக்கு உட்படுத்துகிறார். 

எவராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு காட்டாற்று வெள்ளம் போலத் தனது கலைத்திறனை வெளிப்படுத்தும் அதே வேளையில், அந்தத் தனித்துவம் அவரைப் பொதுமக்களிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் எப்படி அந்நியப்படுத்துகிறது என்பதை இப்படம் மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது.

வெற்றி என்பது வெறும் கைதட்டல்களோ அல்லது பணமோ அல்ல, அது ஒரு மனிதன் தனது பலவீனங்களைக் கூடத் தனது பலமாக மாற்றிக் கொள்வதில் தான் இருக்கிறது என்பதை இப்படம் உணர்த்துகிறது.

 பிரெடி தனது குரல் குறைபாடாகக் கருதப்படக்கூடிய நான்கு மேலதிகப் பற்களைத் தனது இசைத்திறனின் ரகசியமாகக் கருதுவதும், மரணம் தன்னை நெருங்குவதை உணர்ந்த பின்பும் தனது கலைப்பயணத்தை நிறுத்தாமல் ஒரு மாபெரும் போராட்டமாகத் தொடர்வதும் இப்படத்தின் ஆழமான தத்துவமாகும். 

இது ஒரு மனிதனின் சாதனைப் பயணம் என்பதை விட, ஒருவன் தனது குறைகளையும் பிழைகளையும் நேர்மையுடன் ஏற்றுக்கொண்டு, அந்த உண்மையை இசையாக மாற்றி உலகையேத் தன் பக்கம் திரும்பச் செய்த நேர்மையின் வெற்றி ஆகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவன் தனது வேர்களைத் தொலைத்துவிட்டுப் புகழைத் தேடி அலையும்போது ஏற்படும் வீழ்ச்சியையும், மீண்டும் தனது வேர்களை குழு மற்றும் குடும்பம் கண்டடையும்போது பெறும் எழுச்சியையும் இப்படம் ஒப்பிட்டுக் காட்டுகிறது. 

பிரெடி இறுதியில் அடையும் வெற்றி  இசை சார்ந்தது மட்டுமல்ல, அது தனது அகங்காரத்தைக் கடந்து தன்னை நேசிக்கும் மனிதர்களை அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு ஆன்மீகப் பயணம். 

தான் ஒரு சாமானியன் அல்ல, உலகிற்கு மகிழ்ச்சியை வழங்க வந்த ஒரு 'விதிவிலக்கு' என்பதை உணர்ந்த ஒரு மனிதனின் கம்பீரமான இறுதி முழக்கமே இத்திரைப்படத்தின் உண்மையான அடிநாதமாகும்.

உலக சினிமா அரங்கில் இப்படம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியது. 52 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகளவில் 910 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

இசை சார்ந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களில் இன்றுவரை ஒரு பிரம்மாண்ட வெற்றியாக இது கருதப்படுகிறது. 

குறிப்பாக ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளில் இப்படம் ஒரு பெரும் அலையை உருவாக்கியது. 

சீனாவில் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்து ஒரு கலாச்சார நிகழ்வாகவே இது மாறியது.

உலக சினிமா விமர்சகர்களால் இப்படம் ஒரு கலவையான வரவேற்பைப் பெற்றது. ராமி மாலெக்கின் அபாரமான நடிப்பும் படத்தின் இசை கோவைகளும் ஒட்டுமொத்தமாகப் பாராட்டப்பட்டன. 

ஆனால் பிரெடி மெர்குரியின் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான நிகழ்வுகளைத் திரைக்கதை வசதிக்காக மாற்றி அமைத்தது மற்றும் அவரது தனிப்பட்ட உறவுகளைச் சித்தரித்த விதம் குறித்து சில விமர்சகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். 

ஒரு ஆவணப்படமாக இல்லாமல் ஒரு வணிக ரீதியான திரைப்படமாக இது ஒரு மெல்லிய கோட்டில் பயணிப்பதாகப் பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

இயக்கத்தில் இப்படம் பல சவால்களைச் சந்தித்தது. முதலில் பிரையன் சிங்கர் இப்படத்தை இயக்கத் தொடங்கினார். 

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருந்தபோது ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அவர் நீக்கப்பட்டு டெக்ஸ்டர் பிளெட்சர் மீதமுள்ள பகுதிகளை இயக்கினார்.

 இருப்பினும் இயக்குநர்கள் சங்க விதிகளின்படி பிரையன் சிங்கர் பெயரே இயக்குநராகப் படத்தில் இடம்பெற்றது. 

சிக்கலான தயாரிப்புப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் திரைக்கதையில் ஒருமைப்பாட்டை இவர்களது கூட்டு முயற்சி கொண்டு வந்தது.

லண்டனின் பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம் ஒவ்வொரு காட்சியிலும் நம்பகத்தன்மையைக் கொண்டுவர முயன்றது.

  1985 ஆம் ஆண்டு நடைபெற்ற லைவ் எய்ட் கச்சேரியை மீண்டும் உருவாக்க ஒரு பழைய விமான தளத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டது. 

குயீன் குழுவின் உண்மையான இசைக்கலைஞர்களான பிரையன் மே மற்றும் ரோஜர் டெய்லர் ஆகியோர் ஆலோசகர்களாகப் பணியாற்றியது படத்தின் காட்சி அமைப்பு மற்றும் இசை நுணுக்கங்களுக்கு அதிக வலு சேர்த்தது.

 ஆயிரக்கணக்கான ரசிகர்களைத் திரையில் காட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டன.

2018 அக்டோபரில் லண்டனில் உள்ள வெம்ப்லி அரங்கில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. 

திரையரங்குகளில் ரசிகர்கள் பாடல்களைக் கூடவே பாடி மகிழும் வகையில் சிறப்புத் திரையிடல்களும் பல நாடுகளில் நடத்தப்பட்டன.

 படத்தின் வெற்றி குயீன் இசைக்குழுவின் பழைய பாடல்கள் மீண்டும் உலகளாவிய இசைப் பட்டியல்களில் முதலிடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.

நடிப்பில் ராமி மாலெக் ஒரு புதிய சரித்திரம் படைத்தார். பிரெடி மெர்குரியின் மேடை மேனரிசங்கள், அவரது உடல் மொழி மற்றும் பேச்சுத் திறன் என அனைத்தையும் அப்படியே பிரதிபலித்தார்.

 இதற்காக அவர் பல மாதங்கள் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு இணையாக லூசி பாய்ண்டன்  மேரி ஆஸ்டினாக மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். 

கிதார் கலைஞர் பிரையன் மேயாக க்விலிம் லீ நடித்தது குயீன் ரசிகர்களுக்கு ஒரு நிஜமான அனுபவத்தைக் கொடுத்தது.

இசையே இந்தப் படத்தின் ஆன்மாவாகத் திகழ்கிறது. குயீன் குழுவின் புகழ்பெற்ற பாடல்களான போஹிமியன் ராப்சோடி, வி வில் ராக் யூ மற்றும் வி ஆர் தி சேம்பியன்ஸ் போன்றவை திரையரங்குகளில் ஒரு அதிர்வை ஏற்படுத்தின.

 பிரெடி மெர்குரியின் உண்மையான குரல் பதிவுகளுடன் மார்க் மார்டெல் என்பவரின் குரலும் இணைந்து பயன்படுத்தப்பட்டது. 

படத்தின் ஒலிப்பதிவு மற்றும் ஒலிச் சேர்க்கை ஆகியவை ரசிகர்களுக்கு ஒரு நேரடி இசை கச்சேரியைக் காண்பது போன்ற உணர்வை வழங்கின.

விருதுகள் வரிசையில் இப்படம் ஆஸ்கர் மேடையில் ஒரு மாபெரும் வெற்றியைக் கண்டது. ராமி மாலெக் சிறந்த நடிகருக்கான அகாடமி விருதைப் பெற்றார். 

இது தவிர சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலித்தொகுப்பு மற்றும் சிறந்த ஒலிச் சேர்க்கை என மொத்தம் நான்கு ஆஸ்கர் விருதுகளை இப்படம் அள்ளியது. 

கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் என முக்கியமான விருதுகளை வென்று ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.

 முதலில் இப்படத்தில் பிரெடி மெர்குரியாக நடிக்க சாசா பேரன் கோகன் ஒப்பந்தமானார், ஆனால் அவருக்கும் இசைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர் விலகினார். 

அதன் பின்னரே ராமி மாலெக்   தேர்வு செய்யப்பட்டார். ராமி மாலெக் மிஸ்டர் ரோபோட் எனும் தொடரில் நடித்ததைப் பார்த்த தயாரிப்பாளர்கள், அவரது கண்கள் பிரெடியின் கண்களைப் போலவே தீவிரம் கொண்டிருப்பதாகக் கருதி அவரைத் தேர்ந்தெடுத்தனர்.

 பிரெடியாக மாறுவதற்காக ராமி மாலெக் தனது பற்களின் அமைப்பை மாற்றிக்கொள்ளும் வகையில் பிரத்யேகப் செயற்கைப் பற்களைப் பொருத்திக்கொண்டு பல மாதங்கள் பயிற்சி செய்தார்.

 மேடையில் பிரெடியின் தனித்துவமான அசைவுகளைக் கொண்டுவர அவர் ஒரு நடன இயக்குநருக்குப் பதிலாக ஒரு உடல் அசைவுப் பயிற்சியாளரை நியமித்துக்கொண்டார்.

படத்தின் இறுதிக்காட்சியான லைவ் எய்ட் கச்சேரியை மீண்டும் உருவாக்கப் படக்குழுவினர் காட்டிய மெனக்கெடல் பிரமிக்கத்தக்கது. லண்டனுக்கு அருகிலுள்ள ஒரு பழைய விமான தளத்தில் 1985 ஆம் ஆண்டு இருந்த அதே வெம்ப்லி மைதானத்தின் மேடை மிகத் துல்லியமாக மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. 

படப்பிடிப்பின் முதல் நாள் இந்த மாபெரும் கச்சேரியின் காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்த 20 நிமிட இசை நிகழ்ச்சியை அப்படியே தத்ரூபமாகப் படம்பிடிக்க சுமார் நூற்றுக்கணக்கான கூடுதல் நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

 அவர்கள் ஒவ்வொருவரையும் 360 கோணத்தில் டிஜிட்டல் ஸ்கேன் செய்து, பின் கணினி தொழில்நுட்பம் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூட்டமாகத் திரையில் காட்டினர். 

குயீன் இசைக்குழுவின் உண்மையான ஆவணக் காப்பாளர் கிரெக் ப்ரூக்ஸ் ஒவ்வொரு காட்சியிலும் இடம்பெற்ற பொருட்கள் மற்றும் சூழல்கள் 1970களில் இருந்தது போலவே இருப்பதை உறுதி செய்ய மாதக்கணக்கில் பணியாற்றினார்.

திரையில் வரும் கிதார் கலைஞர் பிரையன் மேயைப் பார்த்த நிஜ பிரையன் மே, தனது சொந்த உருவத்தையே கண்ணாடியில் பார்ப்பது போல இருப்பதாக வியந்து பாராட்டினார். 

 இப்படத்தில் பிரெடியின் குரலுக்காக அவரது பழைய பாடல்களின் பதிவுகளுடன் கனடா நாட்டுப் பாடகர் மார்க் மார்டெலின் குரலும் கலந்து பயன்படுத்தப்பட்டது. 

ராமி மாலெக் இப்படத்திற்காகப் பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டதோடு, பிரெடி மெர்குரியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அவரது தங்கை காஷ்மீராவிடமும் நீண்ட உரையாடல்களை மேற்கொண்டார். 

இத்தகைய நுணுக்கமான உழைப்பே இப்படத்தை ஒரு உலகத்தரமான படைப்பாக மாற்றியது.

இத்திரைப்படத்தில் பிரெடி மெர்குரியின் தனித்துவமான மேடை அசைவுகளை மறுஉருவாக்கம் செய்ய ராமி மாலெக் புகழ்பெற்ற நடிகை லிசா மின்னெல்லியின் பழைய காணொளிகளை உற்று நோக்கினார். 

பிரெடி மெர்குரிக்கு லிசாவின் நடன பாணி மீது இருந்த தீராத ஈர்ப்பே இதற்குக் காரணமாக அமைந்தது. படப்பிடிப்பு தளம் முழுவதும் வரலாற்று நம்பகத்தன்மை நிலவ வேண்டும் என்பதற்காக குயீன் குழுவின் உண்மையான ஆவணக் காப்பாளர் ஒவ்வொரு சிறிய பொருளையும் துல்லியமாகச் சரிபார்த்தார். 

1985 ஆம் ஆண்டு லைவ் எய்ட் மேடையில் வைக்கப்பட்டிருந்த அதே நிறத்திலான குளிர்பானக் கோப்பைகள் முதல் பியானோ மீது படிந்திருந்த தூசு வரை அனைத்தும் தத்ரூபமாகத் திரையில் கொண்டு வரப்பட்டன.

படத்தின் படத்தொகுப்பாளர் ஜான் ஓட்மேன் ஒரு சுவாரசியமான சவாலைச் சந்தித்தார். படத்தின் சில பகுதிகளை பிரையன் சிங்கரும் மீதமுள்ள பகுதிகளை டெக்ஸ்டர் பிளெட்சரும் இயக்கியதால் இரண்டு வெவ்வேறு பாணிகளில் இருந்த காட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் இணைக்க அவர் பெரும் மெனக்கெடலை தந்தார். 

இந்த உழைப்பிற்கு அங்கீகாரமாகவே அவருக்குச் சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. 

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் ரசிகர்கள் திரையரங்குகளில் குயீன் குழுவின் பாடல்களை எழுந்து நின்று பாடும் பாணி ஒரு மிகப்பெரிய அலையாகப் பரவியது. 

இப்படத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட செயற்கைப் பற்களைப் படப்பிடிப்பு முடிந்த பிறகு ராமி மாலெக் தங்கம் பூசச் செய்து ஒரு நினைவாகத் தன்னிடம் வைத்துக் கொண்டார். 121 மில்லியன் டாலர் விளம்பரச் செலவில் உருவான இந்தப் படம் ஒரு இசைக்கலைஞனின் வாழ்வை உலகத் தரத்தில் ஆவணப்படுத்தியது.

பிரெடி மெர்குரியின் பற்கள் அவரது குரல் வளத்திற்கு ஒரு காரணமாக அமைந்ததாக அவர் நம்பியதால் ராமி மாலெக் அந்தத் தோற்றத்தைப் பெற செயற்கைப் பற்களைப் பயன்படுத்தினார். 

லைவ் எய்ட் கச்சேரியின் காட்சிகளைப் படமாக்கிய போது வெம்ப்லி மைதானத்தின் அசல் மேடை அமைக்கப்பட்டது மட்டுமல்லாமல் அன்று வானத்தில் மேகங்கள் இருந்த அதே சூழலும் டிஜிட்டல் முறையில் தத்ரூபமாகத் திரையில் கொண்டு வரப்பட்டது.

ஜப்பானில் போஹிமியன் ராப்சோடி  அந்நாட்டின் மிகச் சிறந்த இசைத் திரைப்படமாகப் புகழப்பட்டது. அங்குள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் இப்படம் வரலாறு காணாத வசூலை ஈட்டியது. 
இப்படத்தின் விளம்பரத்திற்காக மட்டும் சுமார் 121 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது ஒரு இசைச் திரைப்படத்துக்கான மாபெரும் முதலீடாகக் கருதப்படுகிறது.

=========================
படத்தின் கதை:-

1970 ஆம் ஆண்டு படம் துவங்குகிறது,  லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பொதிகளைக் கையாளும் சாதாரணத் தொழிலாளியாகப் பணிபுரியும் பாரோக் புல்சாரா, தனது பெற்றோர் மற்றும் சகோதரி காஷ்மீராவுடன் வசித்து வருகிறார். 

ஒரு இரவு 'ஸ்மைல்' எனும் உள்ளூர் கல்லூரி இசைக்குழுவின் கலை நிகழ்ச்சியைக் காணச் செல்லும் அவர், அங்கே 'பீபா' எனும் ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் மேரி ஆஸ்டினை (லூசி பாய்ண்டன்) சந்தித்து அவர் பால் ஈர்க்கப்படுகிறார்.

 நிகழ்ச்சியின் முடிவில் அந்த இசைக்குழுவின் பாடகர் டிம் ஸ்டாஃபெல், 'ஹம்பி பாங்' எனும் குழுவில் இணைய வேண்டி விலகிச் சென்றதை அறிகிறார். 

மிகுந்த தன்னம்பிக்கையுடன் ட்ரம்ஸ் கலைஞர் ரோஜர் டெய்லர் (பென் ஹார்டி) மற்றும் கிதார் கலைஞர் பிரையன் மே (க்விலிம் லீ) ஆகியோரைச் சந்தித்து, தனது அபாரமான குரல் வளத்தால் அவர்களை வியக்க வைத்தவர் அந்த குழுவில் புதிய பாடகராக இணைகிறார். 

குழுவில் புதிய பாஸிஸ்ட் ஜான் டீக்கன் (ஜோ மஸெல்லோ) இணைந்த பிறகு, அந்த இசைக்குழு பிரிட்டன் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

 பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது குழுவின் வேனை விற்று ஒரு இசை ஆல்பத்தைப் பதிவு செய்ய பிரெடி முதலீடு செய்கிறார்.

 இவர்களின் திறமையைக் கண்ட இஎம்ஐ இசைத்தட்டு நிறுவனத்தின் பிரதிநிதியான பொறியாளர் ராய் தாமஸ் பேக்கரிடம் இசைக்குழுவின் மாதிரிகளை கேட்கிறார்.

பாரோக் புல்சாரா இப்போது தனது பெயரைப் பிரெடி மெர்குரி (ராமி மாலெக்) என்று மாற்றிக்கொண்டு, இசைக்குழுவிற்கு 'குயீன்' என்று பெயரிடுகிறார். 

ஜான் ரீட் எனும் மேலாளர் இவர்களை ஒப்பந்தம் செய்து அமெரிக்க இசை சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். 

பால் பிரெண்டர் இவர்களின் அன்றாடப் பணிகளைக் கவனிக்கிறார். 'டாப் ஆஃப் தி பாப்ஸ்' என்ற புகழ்பெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு 'கில்லர் குயீன்' பாடல் மூலம் இவர்களுக்கு முதல் அபார வெற்றி கிடைக்கிறது. 

பிரெடி சக பாடகி மேரியிடம் திருமண முன்மொழிவை உறுதி செய்தாலும்,இசை சுற்றுப்பயணத்தின் போது தனது பாலின ஈர்ப்பு குறித்து அவர் குழப்பமடைகிறார். 

1975 ஆம் ஆண்டு 'ஏ நைட் அட் தி ஓபரா' எனும் நான்காவது ஆல்பத்தைப் பதிவு செய்யும் போது 'போஹிமியன் ராப்சோடி' எனும் தனது வாழ்நாள் சாதனையை உருவாக்குவதில் பிரெடி தீவிரமாக உழைக்கிறார்.

 ஆனால் அந்தப் பாடல் மிக நீளமாக இருப்பதாகக் கூறி இஎம்ஐ நிறுவன நிர்வாகி ரே ஃபாஸ்டர் அதை வெளியிட மறுக்கிறார். 

இதனால் இசை நிறுவனத்தை விட்டு வெளியேறும் பிரெடி, வானொலி ஜாக்கி கென்னி எவரெட்டுடன் இணைந்து அந்தப் பாடலை வானொலியில் அறிமுகம் செய்கிறார். 

விமர்சகர்கள் இசையை சாடினாலும், அந்தப் பாடல் உலகளாவிய வெற்றியை அடைந்து குயீன் குழுவைச் சர்வதேச நட்சத்திரமாக்குகிறது.

 இதனைத் தொடர்ந்து பிரெடி பாலுடனான உறவைத் தொடங்கி, தான் ஒரு இருபாலின ஈர்ப்பாளர் என்பதை மேரியிடம் மனமுவந்து ஒப்புக்கொள்கிறார். 

ஆனால் மேரி அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறி திருமண முன்மொழிவை முறிக்கிறார்.
 அதன்பின் அவர்கள் நெருங்கிய நண்பர்களாகவே நீடிக்கிறார்கள்.

1980களின் தொடக்கத்தில் 'வி வில் ராக் யூ', 'அனதர் ஒன் பைட்ஸ் தி டஸ்ட்' போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்தாலும், பால் பிரெண்டரின் ஆதிக்கத்தால் குழுவிற்குள் விரிசல் ஏற்படுகிறது. 

ஒரு விருந்தின் போது ஜிம் ஹட்டன் (ஆரோன் மெக்கஸ்கர்) எனும் ஊழியரைச் சந்திக்கும் பிரெடி அவர்பால் ஈர்க்கப்படுகிறார்.

 ஆனால் இந்த ஒருபால் ஈர்ப்பு முன்மொழிவை  மறுதலித்த ஜிம் அவரிடம் தன்னைத் தானே நேசிக்கக் கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.

 இதற்கிடையில் ஜான் ரீடைத் தனி ஆல்பம் செய்யத் தூண்டுமாறு பால் பிரெண்டர் ஆலோசனை கூற, அதனால் ஆத்திரமடைந்த பிரெடி தனது நண்பர்களை ஆலோசிக்காமல் ஜான் ரீடை பணிநீக்கம் செய்கிறார்.

 அவர்'ஜிம் மியாமி பீச்' குழுவின் மேலாளராகிறார். 1982 ஆம் ஆண்டு 'ஹாட் ஸ்பேஸ்' ஆல்பத்தின் செய்தியாளர் சந்திப்பில் பிரெடியின் உடல்நிலை மற்றும் அந்தரங்கம் குறித்து ஊடகங்கள் கேள்விகளால் துளைக்கின்றன. 

பின்னர் 'ஐ வான்ட் டு பிரேக் ஃப்ரீ' பாடலில் இக்குழுவினர் பெண் வேடமிட்டு நடித்தது பெரும் சர்ச்சையாகிறது.

 இதன் பின் பிரெடி தனது குழுவை விட்டுப் பிரிந்து நான்கு மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் சிபிஎஸ் நிறுவனத்திற்காகத் தனி ஆல்பம் செய்ய மியூனிக் செல்கிறார்.

மியூனிக் நகரில் 1984 ஆம் ஆண்டு 'மிஸ்டர் பேட் காய்' ஆல்பத்தைப் பதிவு செய்யும் வேளையில், பால் பிரெண்டருடன் இணைந்து போதை மற்றும் தவறான உறவுகளில் சிக்கித் தவிக்கிறார் பிரெடி. 

அங்கு சென்ற மேரி ஆஸ்டின், அவரை மீண்டும் குயீன் குழுவுடன் இணைந்து 'லைவ் எய்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு உருக்கமாக வேண்டுகிறார். 

இப்போது தன்னை பணிநீக்கம் செய்ததற்கு பழிவாங்க பால் பிரெண்டர் பிரெடியின் அந்தரங்கங்களை ஊடகங்களுக்குப் பகிர்கிறார்.

 லண்டன் திரும்பும் பிரெடி தனது குழுவினரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் குழுவில் இணைகிறார்.

 தான் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு, மீதமுள்ள காலத்தை இசைக்காகவே செலவிட முடிவெடுக்கிறார்.

 1985 ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று வெம்ப்லி மைதானத்தில் நடைபெறும் 'லைவ் எய்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன் ஜிம் ஹட்டன், மேரி மற்றும் தனது குடும்பத்தினரைச் சந்திக்கிறார். 

தனது தந்தையிடம் நற்சிந்தனை, நல்வார்த்தை, நற்செயல் எனும் ஜோராஸ்ட்ரியக் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார்.

 அந்த மாபெரும் மேடையில் குயீன் குழுவினர் வழங்கிய இசை நிகழ்ச்சி வரலாற்றில் மிகச்சிறந்த நேரலை நிகழ்ச்சியாக மாறிப் பெருமளவில் நிதி திரட்ட உதவியது. 

பிரெடி மெர்குரி 1991 ஆம் ஆண்டு தனது 45 வயதில் எய்ட்ஸ் நோயால் ஏற்பட்ட கடும் நிமோனியாவால் உயிரிழந்தார் என்ற தகவலுடன் படம் நிறைவடைகிறது.

இத்திரைப்படம்  ஒரு இசைக் கலைஞனின் வெற்றிக் கதையை மட்டும் சொல்லாமல் ஒரு மனிதன் தன்னைத் தானே தேடிக் கண்டடையும் ஆழமான வாழ்வியல் பயணத்தைப் பாடமாகச் சொல்கிறது. 

ஒரு சாதாரண விமான நிலையத் தொழிலாளி உலகப் புகழ்பெற்ற பிரெடி மெர்குரியாக  உருவெடுப்பதன் மூலம் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எத்தகைய தடைகளையும் தகர்க்கலாம் என்பதை இது உணர்த்துகிறது. 

 புகழ் மற்றும் வெற்றியின் உச்சியில் இருக்கும்போது தவறான வழிகாட்டுதல்களால் ஒருவன் தனிமை எனும் இருளுக்குள் தள்ளப்படக்கூடும் என்பதையும் இது எச்சரிக்கையாக முன்வைக்கிறது.

வாழ்க்கையில் உண்மையான அன்பு மற்றும் நட்பின் முக்கியத்துவத்தை இப்படம் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. பிரெடி தனது குழுவினரை விட்டுப் பிரிந்து சென்றாலும் இறுதியில் தனது உண்மையான பலம் அந்த நட்பில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து திரும்புவது ஒரு கலைஞனின் வளர்ச்சிக்குத் தனித்திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஒரு நல்ல துணையும் குழுவும் அவசியம் என்பதை விளக்குகிறது. 

 தனது அடையாளத்தையும் பாலின ஈர்ப்பையும் உலகிற்கு வெளிப்படுத்த அவர் எடுத்த மனப் போராட்டங்கள் மற்றும் ஜிம் ஹட்டன்  அவருக்குச் சொன்ன சுய அங்கீகாரம் குறித்த அறிவுரைகள் ஆகியவை ஒவ்வொரு மனிதனும் தன்னை முதலில் நேசிக்க வேண்டும் என்ற உயரிய செய்தியைத் தருகின்றன.

 பிரெடியின் தந்தை அவருக்குச் சொல்லும் நற்சிந்தனை நல்வார்த்தை நற்செயல் எனும் வாழ்வியல் தத்துவமே இப்படத்தின் ஆன்மாவாக அமைகிறது.

 தனக்கு மரணம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்த பின்பும் வருத்தப்படாமல் இருக்கும் நேரத்தைச் சமூக நலனுக்காகவும் இசைக்காகவும் அர்ப்பணிக்க அவர் எடுத்த முடிவு ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை விட அவன் என்ன நற்செயல்களை விட்டுச் சென்றான் என்பதே முக்கியம் என்பதை உலகுக்குச் சொல்கிறது. 

குறுகிய காலமே வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கையை மற்றவர்களுக்காகவும் ஒரு மாபெரும் நோக்கத்திற்காகவும் அர்ப்பணிப்பதன் மூலம் ஒரு மனிதன் வரலாற்றில் என்றும் அழியாமல் நிலைக்க முடியும் என்பதே இத்திரைப்படம் சொல்லும் மிகச்சிறந்த செய்தியாகும்.

க்ரீன் புக் Green Book 2018

இயக்குனர் பீட்டர் ஃபாரெல்லி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான "கிரீன் புக்"  உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட  உன்னதமான படைப்பு.

 1962 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் நிலவிய இனவெறி மற்றும் சமூகப் பாகுபாடுகளை ஒரு சாலைப் பயணத்தின் வழியாக இத்திரைப்படம் ஆழமாகப் பதிவு செய்கிறது. 

ஆப்பிரிக்க அமெரிக்க இசைக்கலைஞர் டான் ஷெர்லி மற்றும் அவரது ஓட்டுநராகப் பயணிக்கும் இத்தாலிய அமெரிக்கரான டோனி லிப் ஆகிய இருவருக்குள் மலரும் நட்பே இப்படத்தின் மையக்கருவாக அமைகிறது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க தி நீக்ரோ மோட்டாரிஸ்ட் கிரீன் புக் எனும் வழிகாட்டிப் புத்தகத்தை மையமாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கிரீன் புக் திரைப்படத்தின் அடிநாதம்  இரு வேறு துருவங்களாக இருக்கும் மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் முன்முடிவுகளைக் களைந்து ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்து கொள்வதாகும். 

ஒருபுறம் சமூகத்தால் ஒடுக்கப்பட்டாலும் தனது கலையாலும் அறிவாலும் உயர்ந்த நிலையில் இருக்கும் டான் ஷெர்லி மறுபுறம் பிழைப்பிற்காக எதையும் செய்யும் துணிச்சலும் உலக அறிவும் கொண்ட டோனி லிப் என இருவருமே தங்களுக்குள் ஒரு போலி பிம்பத்தைச் சுமந்து திரிகிறார்கள். 

இந்தப் பயணம் வெறும் சாலை வழிப் பயணம் மட்டுமல்ல அது அவர்களின் மனதிற்குள் நிகழும் ஒரு நெடிய பயணம். 

ஒரு கருப்பினக் கலைஞர் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகளை விடவும் அவர் தனது சொந்த இனத்தவரிடமிருந்தே அந்நியப்பட்டு நிற்பது இத்திரைப்படத்தின் மிக முக்கியமான உணர்ச்சிப் புள்ளியாகும்.

தனிமனித கௌரவம்  ஒருவன் மற்றவர்களுக்குக் காட்டும் மரியாதையில் மட்டுமல்ல தனக்குத் தானே கொடுத்துக் கொள்ளும் மதிப்பிலும் இருக்கிறது என்பதை இக்கதை அழுத்தமாகச் சொல்கிறது.

 டான் ஷெர்லி எதிர்கொள்ளும் ஒவ்வொரு அவமானமும் அவரை உடைப்பதற்குப் பதிலாக அவரை மேலும் உறுதிப்படுத்துகிறது. 

அதே சமயம் டோனி லிப் போன்ற ஒரு முரட்டுத்தனமான மனிதனிடம் இருக்கும் எதார்த்தமான அன்பு எப்படி ஒரு மேதையின் தனிமையைப் போக்க வல்லது என்பதை இது உணர்த்துகிறது. 

சட்டம் மனிதர்களைப் பிரிக்கலாம் ஆனால் பகிரப்படும் உணர்வுகளும் ஒருவருக்காக ஒருவர் எடுக்கும் தார்மீக முடிவுகளும் அந்தச் சட்டங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை இப்படம் நிலைநாட்டுகிறது.

உண்மையான மாற்றம்  மேடைப் பேச்சுகளிலோ அல்லது சட்டப் புத்தகங்களிலோ நிகழ்வதை விடவும் சக மனிதனின் வலியைத் தனது வலியாக உணரும் தருணத்திலேயே தொடங்குகிறது. 

டோனி தனது குடும்பம் மற்றும் இனம் சார்ந்த குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து டானின் உலகைப் பார்க்கும்போது ஒரு புதிய மனிதனாக உருவெடுக்கிறார்.

 அதேபோல் டான் தனது தனிமை எனும் கோட்டையிலிருந்து வெளியே வந்து சாமானிய மனிதர்களின் அன்பை ருசிக்கத் தொடங்குகிறார்.

 பாகுபாடுகள் நிறைந்த உலகிற்கு எதிராக வன்முறையை விடவும் மேன்மையான பண்பும் பிணைப்புமே சிறந்த பதிலடி என்பதை இத்திரைப்படம் அதன் ஆழமான கதைப்போக்கின் மூலம் நிறுவுகிறது.

உலக சினிமா அரங்கில் இப்படம் ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை கலந்த வாழ்வியல் நாடகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 மனிதாபிமானம் மற்றும் இன நல்லிணக்கத்தைப் பேசும் இப்படத்தின் கதை அமைப்பு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தது.

 குறிப்பாக மனித உறவுகளுக்கு இடையே இருக்கும் நுணுக்கமான உணர்வுகளைக் கையாண்ட விதம் இப்படத்தை ஒரு உலகத்தரமான படைப்பாக மாற்றியது. 

பல்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்களும் தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் இதன் உலகளாவிய கருப்பொருள் அமைந்துள்ளது.

விமர்சன ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் சில விவாதங்களையும் உருவாக்கியது. 

டான் ஷெர்லி மற்றும் டோனி லிப் ஆகியோரின் நடிப்பை விமர்சகர்கள் ஏகமனதாகப் பாராட்டினர். அதே சமயம் இனப் பாகுபாடுகளைக் கையாண்ட விதம் குறித்தும் டான் ஷெர்லியின் நிஜ வாழ்க்கை அந்தரங்க சித்தரிப்பு குறித்தும் சில விமர்சனங்கள் எழுந்தன. 

இருந்தபோதிலும் ஒரு தனிமனிதனின் பார்வையில் ஏற்படும் மாற்றம் சமூக மாற்றத்திற்கு எப்படி வித்திடுகிறது என்பதை இப்படம் நேர்த்தியாக விவரிப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

இயக்குநர் பீட்டர் ஃபாரெல்லி இப்படத்தை மிகவும் யதார்த்தமாகவும்  விறுவிறுப்பாகவும் கையாண்டுள்ளார். 

தனது முந்தைய நகைச்சுவைப் படங்களிலிருந்து மாறுபட்டு ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையை மென்மையான நகைச்சுவையுடன் கலந்து வழங்கியுள்ளார்.

 காட்சியமைப்புகள் ஒவ்வொன்றும் 1960 களின் காலக்கட்டத்தை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன.

 ஓட்டுநருக்கும் பயணிக்கும் இடையிலான அதிகாரப் படிநிலை எப்படி ஒரு சமமான நட்பாக மாறுகிறது என்பதைத் தனது இயக்கத்தின் மூலம் அவர் செதுக்கியுள்ளார்.

படமாக்கப்பட்ட விதம் மற்றும் அதன் ஒளிப்பதிவு பார்வையாளர்களை அந்தப் பயணத்திலேயே அழைத்துச் செல்கிறது. 

சீன் போர்ட்டரின் ஒளிப்பதிவு அமெரிக்காவின் நிலப்பரப்புகளையும் நகரங்களையும் அழகியல் உணர்வுடன் படம்பிடித்துள்ளது. 

குறைந்த  திட்டத்தொகையில் உருவாக்கப்பட்டாலும்  தொழில்நுட்பத் தரம் மிகவும் உயர்வாக இருக்கிறது. 

நியூ ஆர்லியன்ஸ் மற்றும் லூசியானா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்ட காட்சிகள் அக்காலத்துச் சூழலை அப்படியே கண்முன் நிறுத்துகின்றன.

யுனிவர்சல் பிக்சர்ஸ் மூலம் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. 

23 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் 321 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. 

சீனாவில் இப்படம் பெற்ற அமோக வரவேற்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு டிஜிட்டல் தளங்களிலும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தற்போதும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

விக்கோ மார்டென்சன் (டோனி லிப்) மற்றும் மஹர்ஷாலா அலி (டான் ஷெர்லி) ஆகியோரின் நடிப்பு இப்படத்தின் மிகப்பெரிய பலம். 

டோனி லிப் கதாபாத்திரத்திற்காக விக்கோ மார்டென்சன் தனது உடல் எடையைக் கூட்டி ஒரு முரட்டுத்தனமான அதே சமயம் அன்பான மனிதராக வாழ்ந்துள்ளார். 

மஹர்ஷாலா அலி ஒரு செவ்வியல் இசைக்கலைஞரின் கம்பீரத்தையும் உள்ளுக்குள் இருக்கும் தனிமையையும் தனது கண்கள் மூலமே கடத்தியுள்ளார். 

லிண்டா கார்டெல்லினி (டோலோரஸ்) டோனியின் மனைவியாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் கிரிஸ் போவர்ஸ் இப்படத்திற்கு மிகச்சிறந்த பின்னணி இசையை வழங்கியுள்ளார்.

 டான் ஷெர்லியின் ஜாஸ் இசை மற்றும் கிளாசிக்கல் இசைக் கோர்ப்புகள் படத்தின் ஆன்மாவாகத் திகழ்கின்றன.

 இசையின் மூலம் ஒரு மனிதன் எப்படித் தனது வலிகளை மறக்கிறான் என்பதையும் மக்களுடன் இணைகிறான் என்பதையும் இசைக்கோர்வைகள் உணர்த்துகின்றன.

 இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசைத்தட்டுக்கள் டிஜிட்டல் தளங்களில் பல மில்லியன் முறை கேட்கப்பட்டு சாதனை படைத்துள்ளன.

91 ஆவது அகாடமி விருதுகளில் இப்படம் சிறந்த திரைப்படம் சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை ஆகிய மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றது. 

மஹர்ஷாலா அலி தனது சிறந்த நடிப்புக்காக இரண்டாவது முறையாக ஆஸ்கார் விருதைப் பெற்றார்.

 கோல்டன் குளோப் விருதுகள் மற்றும் பாஃப்டா விருதுகளிலும் இப்படம் பல முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றது. 

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் மக்களின் விருப்பமான திரைப்பட விருதைப் பெற்றது இதன் வெற்றிப் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

டோனி லிப் பாத்திரத்திற்காக விக்கோ மார்டென்சன் தனது உடல் எடையை சுமார் 20 கிலோ வரை அதிகரித்துக் கொண்டார். 

இப்படத்தின் திரைக்கதையை டோனி லிப்பின் உண்மையான மகனான நிக் வாலெலோங்கா எழுதியுள்ளார் . 

படத்தின் இசையமைப்பாளர் கிரிஸ் போவர்ஸ் நடிகர் மஹர்ஷாலா அலிக்கு பியானோ வாசிப்பதற்கான அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார் .

 பியானோ வாசிக்கும்  காட்சிகளில் அலிக்கு மாற்றாக கிரிஸ் போவர்ஸின் கைகளே பயன்படுத்தப்பட்டன.

இப்படத்தின் பாடல்களைத் தேர்வு செய்வதில் புகழ்பெற்ற பாடகர் ராபர்ட் பிளான்ட் முக்கியப் பங்காற்றினார். அவர் பரிந்துரைத்த பல அரிய பாடல்கள் படத்தின் பின்னணியில் இடம்பெற்றுள்ளன. 

குறிப்பாக 1950 மற்றும் 1960 களின் மறக்கப்பட்ட பல இசைக்கோர்ப்புகளைக் குறைந்த செலவில் படக்குழுவினர் பயன்படுத்தினர்.

 படத்தின் இறுதியில் வரும் கருப்பின இசை விடுதிக் காட்சியில் சோபின் எனும் இசைமேதையின் வின்டர் விண்ட் எனும் இசைக்கோர்ப்பு வாசிக்கப்பட்டது. 

இது படத்தின் அதிகாரப்பூர்வ இசைத்தொகுப்பில் இடம்பெறவில்லை. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இப்படத்தை மிகவும் ரசித்து ஐந்து முறை பார்த்ததாகவும் "புட்ச் காசிடி அண்ட் சண்டான்ஸ் கிட்" படத்திற்குப் பிறகு இதுவே அவருக்குப் பிடித்த நண்பர்களைப் பற்றிய திரைப்படம் என்றும் கூறியுள்ளார்.

நிஜ வாழ்க்கையில் டோனி லிப்பின் குடும்ப உறுப்பினர்கள் பலர் இப்படத்தில் கௌரவத் தோற்றங்களில் நடித்துள்ளனர். 

டோனியின் மகன் நிக் வாலெலோங்கா இதில் ஆகி எனும் மாஃபியா பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் டோனியின் மற்றொரு மகனான பிராங்க் ஜூனியர் தனது சொந்த சித்தப்பா ரூடி வாலெலோங்காவாகத் திரையில் தோன்றியுள்ளார்.

 படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரையன் கியூரி பனிப்புயலின் போது உதவும் காவலர் பாத்திரத்தில் நடித்துள்ளார். 

டான் ஷெர்லியின் செல்பிஸ்ட் யூரி தேத் எனும் நிஜக் கதாபாத்திரத்திற்குப் பதிலாக ஓலெக் எனும் கற்பனைக் கதாபாத்திரம் படத்தில் சேர்க்கப்பட்டது. 

டான் ஷெர்லியின் குடும்பத்தினர் கதையில் சில மாற்றங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டாலும் மஹர்ஷாலா அலி அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டதுடன் தனக்கு வழங்கப்பட்ட தகவல்களைக் கொண்டு சிறந்த பங்களிப்பை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் முதலில் ஃபோகஸ் ஃபீச்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்தன பின்னர் பார்டிசிபென்ட் மீடியா நிறுவனம் 23 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கியது. 

படத்தின் இயக்குநர் பீட்டர் ஃபாரெல்லி இந்தப் படைப்பை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்குத் திரையிட்டுக் காட்டினார். படத்தின் தரம் மற்றும் உணர்ச்சிகரமான கதை சொல்லலில் ஈர்க்கப்பட்ட ஸ்பீல்பெர்க் இதனை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் விநியோகம் செய்ய உதவினார். 

91 ஆவது அகாடமி விருதுகளில் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றதன் மூலம் சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை இன்றி அந்த விருதைப் பெற்ற ஐந்தாவது திரைப்படம் என்ற வரலாற்றுப் பெருமையை இப்படம் பெற்றது. 

இதற்கு முன்னர் "விங்ஸ் கிராண்ட் ஹோட்டல்", "டிரைவிங் மிஸ் டெய்சி" மற்றும் "ஆர்கோ" ஆகிய படங்கள் மட்டுமே இச்சாதனையைச் செய்திருந்தன.

திரைப்படத்தின் விளம்பரங்களுக்காக மட்டும் சுமார் 37.5 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன.

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஆரம்பத்தில் மந்தமாகத் தொடங்கினாலும் விருதுகளுக்கான பரிந்துரைகள் மற்றும் ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் இப்படம் நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

 குறிப்பாக ஆஸ்கார் விருது வென்ற பிறகு இப்படத்தின் திரையரங்குகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கப்பட்டு வசூலில் 121 சதவீதம் வளர்ச்சியை எட்டியது. 

இது 2011 ஆம் ஆண்டின் த "கிங்ஸ் ஸ்பீச் " படத்திற்குப் பிறகு ஒரு ஆஸ்கார் வெற்றிப் படத்திற்குப் கிடைத்த மிகப்பெரிய வசூல் உயர்வாகும்.

சீனாவில் இப்படம் 70 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து டைட்டானிக் படத்திற்கு அடுத்தபடியாக அங்கு அதிக வசூல் செய்த சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்ற இரண்டாவது திரைப்படம் என்ற இடத்தைப் பிடித்தது. 

ஜப்பான் பிரான்ஸ் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது.

 விமர்சன ரீதியாக 2025 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்ட 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த  திரைப்படங்கள் பட்டியலில் வாசகர்களின் விருப்பத் தேர்வாக இப்படம் 264 ஆவது இடத்தைப் பிடித்தது.

 ஆப்பிரிக்க அமெரிக்க இசைக்கலைஞர் குயின்சி ஜோன்ஸ் டான் ஷெர்லியைத் தனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும் என்றும் மஹர்ஷாலா அலி அந்தப் பாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார். 

டான் ஷெர்லியின் உதவியாளராக நடித்த இக்பால் தேபா மற்றும் தயாரிப்பு நிர்வாகியாக நடித்த பி.ஜே. பைர்ன் போன்ற நடிகர்கள் இப்படத்தின் உண்மைத் தன்மையைக் சிலாகித்தனர்.

========================

படத்தின் கதை:-

1962 ஆம் ஆண்டு நியூயார்க்கின் பிராங்க்ஸ் பகுதியில் இத்தாலிய அமெரிக்கரான டோனி லிப் (விக்கோ மார்டென்சன்) தான் வேலை செய்த கோப்பகபானா இரவு விடுதி புதுப்பித்தல் பணிகளுக்காக மூடப்பட்டதால் வருமானத்திற்கு வழியின்றித் தவிக்கிறார். 

இந்தச் சூழலில் ஒரு கார் ஓட்டுநர் வேலைக்கான நேர்காணலில் அவர் கலந்து கொள்கிறார். அங்கு அவர்  டான் ஷெர்லி (மஹர்ஷாலா அலி) எனும் ஒரு வசதிமிக்க பண்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்க பியானோ இசைக் கலைஞரை சந்திக்கிறார் .

 அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் ஆழமான தெற்கு மாகாணங்களில் எட்டு வாரங்கள் நடைபெறவுள்ள இசைப் பயணத்திற்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் காரைச் செலுத்தவும் ஒரு வலிமையான மனிதராக டோனியை டான் ஷெர்லி தேர்வு செய்கிறார்.

 டோனியின் நற்பெயர் மற்றும் விசுவாசத்தை அறிந்து அவரைப் பணியமர்த்தும் டான் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று மீண்டும் நியூயார்க் திரும்புவதாகத் திட்டமிட்டுப் பயணத்தைத் தொடங்குகிறார். 

டானின் இசை நிறுவனம் டோனியிடம் தி நீக்ரோ மோட்டாரிஸ்ட் கிரீன் புக் எனும் கையேட்டை வழங்குகிறது.

 இது ஜிம் க்ரோ சட்டங்கள் அமலில் இருந்த அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் கருப்பின மக்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கும் உணவருந்துவதற்கும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் முகவரிகளைக் கொண்ட ஒரு வரலாற்று ஆவணம்.

பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில் டோனியின் முரட்டுத்தனமான பேச்சு மற்றும் நாகரிகமற்ற பழக்கவழக்கங்கள் டானுக்கு எரிச்சலைத் தருகின்றன.

 அதேபோல டானின் அதிகப்படியான ஒழுக்கமும் கண்டிப்பும் டோனிக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துகின்றன. 

ஆனால் தெற்கு நோக்கி நகர நகர மேடையில் டான் வெளிப்படுத்தும் அபாரமான இசைத்திறமையைக் கண்டு ஓட்டுனர் டோனி வியந்து போகிறார்,மரியாதை கொள்கிறார்.

 அதே சமயம் மேடைக்கு வெளியே டான் சந்திக்கும் கொடூரமான இனவெறிப் பாகுபாடுகள் மற்றும் அவமானங்களைக் கண்டு டோனி மிகுந்த ஆத்திரமும் வேதனையும் அடைகிறார்.

 கென்டக்கி மாநிலத்தின் லூயிஸ்வில் பகுதியில் ஒரு மதுக்கடையில் வெள்ளை இனத்தவர்கள் டானை அடித்துத் துன்புறுத்தி அவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்போது டோனி அங்கே புகுந்து அவரை மீட்டு வருகிறார். 

இனிமேல் தான் இல்லாமல் டான் எங்கும் தனியாகச் செல்லக் கூடாது என்று அவர் அன்புக் கட்டளையிடுகிறார்.

இந்தப் பயணத்தின் ஊடாக டோனி தனது மனைவி டோலோரஸ்ஸுக்கு (லிண்டா கார்டெல்லினி)  எழுதும் கடிதங்கள் மிகவும் சாதாரணமாக இருப்பதை உணரும் டான் அவற்றைத் திருத்தி மிகவும் ஆழமான உணர்ச்சிகரமான மற்றும் கவித்துவமான கடிதங்களாக மாற்ற பின்னின்று உதவுகிறார். 

இது டோனியின் குடும்ப வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

அதேபோல் டான் தனது சகோதரரை விட்டுப் பிரிந்து தனிமையில் இருப்பதைக் கண்ட டோனி அவரை மீண்டும் உறவுகளுடன் இணைய ஊக்குவிக்கிறார்.

 ஒரு கட்டத்தில் டான் ஒரு பொதுக் கழிப்பறையில் ஒரு வெள்ளை இன ஆணிடம் பாலியல் ரீதியாகத் தொடர்பு கொண்டதாகக் காவல்துறையிடம் சிக்கியபோது டோனி எந்தத் தயக்கமும் காட்டாமல் காவலர்களுக்குப் பணம் கொடுத்து அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருகிறார்.

மிசிசிப்பி மாகாணத்தில் ஒரு இரவு நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கருப்பின மக்கள் நடமாடக் கூடாது எனும் விதியுள்ள சன்டவுன் டவுன் பகுதியில் இவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். 

அங்கே டோனி ஒரு காவலரைத் தாக்கியதால் சிறையில் இருவரும் அடைக்கப்படுகிறார்கள்.

 அப்போது டான் தனது வழக்கறிஞரை அழைப்பதாகக் கூறி அப்போதைய அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ராபர்ட் கென்னடியைத் தொடர்பு கொண்டு மேலிடத்து அழுத்தத்தின் மூலம் விடுதலையாகிறார். 

இது இருவருக்கும் இடையே ஒரு பெரிய வாக்குவாதத்தை உருவாக்குகிறது. தகுதியும் திறமையும் இருந்தும் தன் சொந்த இனத்தவராலும் வெள்ளை இனத்தவராலும் முழுமையாக ஏற்கப்படாத தனது தனிமை மற்றும் அடையாளச் சிக்கலை டான் கண்ணீருடன் டோனியிடம் வெளிப்படுத்துகிறார். 

அந்த மழையிரவில் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சமரசம் அடைகிறார்கள்.

இறுதியாக அலபாமாவின் பர்மிங்காம் நகரில் தனது இறுதி இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டிய நாட்டுப்புற கிளப்பில் டான் அங்கிருந்த உணவகத்தில் நுழையத் தடை விதிக்கப்படுகிறார். 

அவர் அங்குள்ள மேடையில் இசைக்கலாம் ஆனால் அங்கேயே உணவருந்தக் கூடாது என்ற மேலாளர் பிரையன் ஸ்டெபனெக்  நிபந்தனையை டான் எதிர்க்கிறார். 

டோனி அந்த மேலாளரை மிரட்டினாலும் டான் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்க முடிவு செய்கிறார். 

இது டானின் இசை ஒப்பந்தத்தைப் பாதிக்கும் என்றாலும் டோனி தனது நண்பனின் கௌரவத்திற்காக அந்த முடிவை ஆதரிக்கிறார்.

 அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறி ஒரு சாதாரண கருப்பின விடுதிக்குச் சென்று அங்குள்ள இசைக்கலைஞர்களுடன் இணைந்து மிக உற்சாகமாகப் பியானோ வாசிக்கிறார்கள்.

அங்கிருந்து அவர்கள் நியூயார்க்  திரும்பும்போது கடும் பனிப்புயலில் சிக்கிக் கொள்கிறார்கள். வழியில் ஒரு காவலர் அவர்களை நிறுத்தும்போது மீண்டும் ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறார்கள்.

 ஆனால் அந்தக் காவலர் அவர்களின் வாகனத்தின் டயர் பஞ்சராக இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு உதவி செய்து பாதுகாப்பான பயணத்திற்கு வாழ்த்துக் கூறுகிறார். 

கடும் சோர்வடைந்த  டோனி உறங்க டான் காரைச் செலுத்தி கிறிஸ்துமஸ் இரவு அன்று டோனியின் வீட்டிற்கு சொன்னபடியே சென்று சேர்க்கிறார். 

டோனி டானைத் தனது குடும்ப கிருஸ்துமஸ் விருந்துக்கு அழைத்தாலும் டான் தயக்கத்துடன் மறுத்துவிட்டுத் தனது மாளிகைக்குச் செல்கிறார். 

ஆனால் அந்தத் தனிமை அவரை வாட்ட மீண்டும் அவர் டோனியின் வீட்டிற்குத் திரும்புகிறார். அங்கு டோனியின் குடும்பத்தினர் டான் ஷெர்லியை மிகுந்த அன்புடன் வரவேற்றுத் தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்கிறார்கள். 

நிஜ வாழ்க்கையில் டான் தொடர்ந்து பல இசைப் படைப்புகளை உருவாக்கினார், டோனி மீண்டும் கோப்பகபானாவில் பணியில் சேர்ந்தார். 

இவர்கள் இருவரும் 2013 ஆம் ஆண்டு சில மாத இடைவெளியில் இறக்கும் வரை பிரிக்க முடியாத சிறந்த நண்பர்களாக வாழ்ந்தார்கள் என்ற செய்திக் குறிப்புடன் படம் நிறைகிறது.

கிரீன் புக் திரைப்படம் ஒரு மனிதனின் நிறம் அல்லது அவனது சமூக அந்தஸ்து ஆகியவற்றைக் கடந்து இரு வேறு துருவங்களாக இருக்கும் மனிதர்களுக்கிடையிலான புரிதலையும் நட்பையும் மிக ஆழமாகப் பேசுகிறது.

 திறமைக்கும் தகுதிக்கும் இனம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் அதே வேளையில் வெறுப்புணர்வு என்பது பெரும்பாலும் அறியாமையாலேயே பிறக்கிறது என்பதை டோனி லிப் மற்றும் டான் ஷெர்லி இடையிலான உறவு நிரூபிக்கிறது. 

1960 களின் அமெரிக்காவில் நிலவிய கடுமையான இனவெறிச் சூழலில் ஒரு வெள்ளை இனத்தவர் கருப்பினத்தவருக்கு ஓட்டுநராகச் செல்வது என்பது வெறும் வேலையாகத் தொடங்கினாலும் அது இறுதியில் ஒரு தார்மீகப் போராட்டமாக உருவெடுக்கிறது. 

சமூகத்தில் நிலவும் ஆழமான பாரபட்சங்களை வேரறுக்க சட்டங்களை விடவும் மனிதர்களுக்கு இடையே ஏற்படும் நேரடித் தொடர்பும் பகிரப்படும் அனுபவங்களுமே வலிமையானவை என்பதை இப்படம் உணர்த்துகிறது.

டான் ஷெர்லி எனும் கதாபாத்திரம் தனது அடையாளத்தைத் தேடி அலைவது ஒரு முக்கியமான செய்தியை முன்வைக்கிறது.

 அவர் தனது கருப்பின மக்களுடன் முழுமையாக இணைய முடியாமலும் வெள்ளை இனத்தவர்களால் ஒரு கலைப் பொருளாக மட்டுமே மதிக்கப்பட்டு தனிப்பட்ட முறையில் புறக்கணிக்கப்படுவதும் சமூகத்தில் நிலவும் இரட்டைத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

 கண்ணியம் என்பது ஒருவன் தன்னைத் தானே தற்காத்துக் கொள்வதில் இருக்கிறது என்பதையும் வன்முறையை விடவும் அமைதியான உறுதியான எதிர்ப்பு என்பது மிக வலிமையானது என்பதையும் டான் ஷெர்லியின் நடத்தைகள் வழி உணரலாம். 

அதேபோல் டோனி லிப் ஆரம்பத்தில் கொண்டிருந்த முன்முடிவுகள் டானின் திறமையையும் அவர் எதிர்கொள்ளும் வலிகளையும் காணும்போது மாறத் தொடங்குகிறது. 

இது ஒரு மனிதன் தனது குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரும்போது உலகை எவ்வளவு விசாலமாகப் பார்க்க முடியும் என்பதற்கான சான்றாகும்.
இறுதியில் இத்திரைப்படம் தனிமை என்பது எவ்வளவு பெரிய சாபம் என்பதையும் அன்பு மற்றும் அரவணைப்பு ஒரு மனிதனின் வாழ்வை எப்படி மாற்றும் என்பதையும் காட்டுகிறது. 

டான் ஷெர்லி தனது வசதியான மாளிகையில் தனித்து வாழ்வதை விட டோனியின் எளிய குடும்பத்தில் ஒருவராக இணைவதை விரும்புவது சக மனிதர்களுடனான பிணைப்பின் மேன்மையை விளக்குகிறது.

 நண்பனுக்காகத் தனது வேலையையோ அல்லது வாய்ப்புகளையோ இழக்கத் துணியும் டோனியின் குணம் உண்மையான நட்பு என்பது நிறம் மற்றும் அதிகார வர்க்கத்தை விட மேலானது என்பதைப் பறைசாற்றுகிறது.

 பாகுபாடுகள் நிறைந்த உலகில் ஒருவரையொருவர் மாற்றிக் கொள்வதை விட ஒருவரையொருவர் புரிந்து கொள்வதே உலகத்தை மாற்றும் முதல் படி எனும் உன்னத செய்தியை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஆஸ்கர் (67) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)