ரூம் Room திரைப்படம் 2015 ஆண்டு வெளியானது.
லென்னி ஆபிரகாம்சன் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு வாழ்வாதாரப் போராட்ட பின்னணியைக் கொண்ட உளவியல் சார்ந்த நாடகத் திரைப்படம்.
ஏழு ஆண்டுகள் ஒரு சிறிய அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட ஒரு இளம் பெண் மற்றும் அதே அறையிலேயே பிறந்து வளர்ந்த அவளது ஐந்து வயது மகனின் கதையை இந்தத் திரைப்படம் விவரிக்கிறது.
அவர்கள் இருவரும் அங்கிருந்து எவ்வாறு தப்பிக்கிறார்கள், அதற்குப் பிறகு அந்தச் சிறுவன் முதல் முறையாக வெளி உலகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதை இந்தத் திரைப்படம் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கிறது.
ரூம் திரைப்படத்தின் அடிநாதமாக விளங்குவது மனிதனின் அசாத்தியமான வாழ்வாதாரப் போராட்டமும், எல்லையற்ற தாய் பாசமும் ஆகும்.
மிகக் கொடூரமான மற்றும் கடுமையான சூழ்நிலையிலும் ஒரு தாய் தனது குழந்தையைப் பாதுகாப்பதற்காகக் காட்டும் உறுதியும் அர்ப்பணிப்பும் தான் இந்தத் திரைப்படத்தின் மையக்கருத்தாக அமைகிறது.
சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரு சிறிய அறைக்குள்ளேயே தனது மகனுக்கு ஒரு அழகான கற்பனை உலகத்தை உருவாக்கி, அவனுக்குப் பயம் தெரியாமல் வளர்க்கும் தாயின் போராட்டம் பார்ப்பவர் நெஞ்சை நெகிழச் செய்கிறது.
அதே நேரத்தில், இந்தத் திரைப்படம் வெறும் சிறைபிடிப்பைப் பற்றி மட்டும் பேசாமல், அந்தச் சிறையிலிருந்து தப்பிய பிறகு வெளி உலகிற்கு வரும்போது ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றங்களையும் ஆழமாகப் பேசுகிறது.
புதிய சூழலை எதிர்கொள்ளும் போது ஒரு சிறுவனின் பார்வையில் உலகம் எப்படி இருக்கிறது என்பதையும், இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்க ஒரு பெண் சந்திக்கும் மனப் போராட்டங்களையும் படம் மிக எதார்த்தமாக விவரிக்கிறது.
எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் மனித மனம் கொண்டிருக்க வேண்டிய நம்பிக்கையையும், அன்பின் மூலமாக எந்தவொரு அதிர்ச்சியிலிருந்தும் மீண்டு வர முடியும் என்ற வாழ்வியல் உண்மையையும் இந்தத் திரைப்படம் தனது அடிநாதமாகக் கொண்டு இயங்குகிறது.
இத்திரைப்படத்தில் பிரீ லார்சன் மற்றும் ஜேக்கப் ட்ரெம்ப்ளே ஆகிய இருவரின் நடிப்பு உலகளவில் உள்ள சினிமா விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
தாய் மற்றும் மகனின் கதாபாத்திரங்களில் அவர்கள் தங்களின் மிகச்சிறந்த மற்றும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்குனர் லென்னி ஆபிரகாம்சன் கதையின் தீவிரத்தன்மை மாறாமல், பார்ப்பவர்களைக் கவரும் வகையில் மிக நேர்த்தியாகவும் அழுத்தமாகவும் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ஒரு சிறிய அறைக்குள்ளேயே நடக்கும் காட்சிகளை மிகத் துல்லியமாகப் படம்பிடித்து பார்வையாளர்களுக்கு அந்த இடத்தின் நெருக்கடியை உணர்த்தியுள்ளார்.
டேனி கோஹன் இந்தத் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு சிறிய எல்லைக்குட்பட்ட அறைக்குள் கேமராவைக் கையாள்வது சவாலானது என்றாலும், அங்குள்ள சூழ்நிலையையும் உணர்ச்சிகளையும் மிகத் தத்ரூபமாகத் தனது ஒளிப்பதிவின் மூலம் அவர் திரையில் கொண்டுவந்துள்ளார்.
இத்திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளையும் பாராட்டுகளையும் வென்றுள்ளது. ஆஸ்கார் எனப்படும் எண்பத்தெட்டாவது அகாடமி விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் இது பரிந்துரைக்கப்பட்டது.
இதில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த பிரீ லார்சன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றார். மேலும் அவர் பாஃப்டா விருது, கோல்டன் குளோப் விருது மற்றும் ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளையும் பெற்றார்.
இது தவிர, ஒன்பது கனடியன் ஸ்கிரீன் விருதுகளையும், ஏழு ஐரிஷ் ஃபிலிம் மற்றும் டெலிவிஷன் விருதுகளையும் இந்தத் திரைப்படம் அள்ளிக் குவித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதிய எம்மா டோனோகு, தனது நாவல் புத்தகமாக வெளியாவதற்கு முன்பே அதன் திரைக்கதை வடிவத்தை எழுதி முடித்துவிட்டார்.
புத்தகத்தைப் படித்துவிட்டு அதன் கதையால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் லென்னி ஆபிரகாம்சன், எழுத்தாளர் எம்மாவுக்கு பத்து பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட ரசிகர் கடிதத்தை எழுதினார்.
அந்தக் கடிதத்தில் கதையைப் பற்றி அவர் புரிந்துகொண்ட விதம் எம்மாவைக் கவர்ந்ததால், அவரே இந்தத் திரைப்படத்தை இயக்குவதற்கு முழுச் சம்மதம் தெரிவித்தார்.
முதன்மைப் பாத்திரத்தில் நடித்த பிரீ லார்சன், தனது கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்குவதற்காகத் தீவிரமான தயாரிப்புகளில் ஈடுபட்டார்.
அதிர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய நிபுணர்களுடன் கலந்தாலோசித்த அவர், கடுமையான உணவு முறையைப் பின்பற்றித் தனது எடையைக் குறைத்தார்.
மேலும், ஏழு ஆண்டுகள் அறையிலேயே அடைபட்டிருக்கும் பெண்ணின் வெளிறிய தோற்றத்தைப் பெறுவதற்காகப் பல மாதங்கள் சூரிய ஒளியே தன் மீது படாதவாறு வீட்டிற்குள்ளேயே வாழ்ந்து காட்டினார்.
ஐந்து வயதுச் சிறுவனாக நடித்த ஜேக்கப் ட்ரெம்ப்ளேவுக்கு திரைக்கதை முழுவதையும் வாசித்துக் காட்டாமல், படப்பிடிப்பின் போது ஒவ்வொரு காட்சியையும் அவருக்குப் புரியும் வகையில் விவரித்தே நடிக்க வைத்தனர்.
கதையின் கொடூரமான பின்னணி தெரியாமல், அவர் ஒரு மகிழ்ச்சியான குழந்தையாகவே அந்தப் பாத்திரத்தில் நடித்தார்.
படத்தில் அவர் நீண்ட தலைமுடியுடன் தோன்றுவதற்காக மனித முடிகளால் செய்யப்பட்ட விசேஷமான விக்கைப் பயன்படுத்தினார்.
படப்பிடிப்பிற்காக டொராண்டோவில் உள்ள பினவுட் ஸ்டுடியோவில் பதினொன்றுக்கு பதினொன்று அடி என்ற மிகச் சிறிய அளவில் ஒரே ஒரு அறை செட் மட்டுமே அமைக்கப்பட்டது.
அந்தச் சிறிய இடத்திற்குள் கேமரா மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் நுழைந்து வேலை செய்வது பெரும் சவாலாக இருந்தது. இதற்காக அந்த அறையின் ஒவ்வொரு பகுதியையும் எளிதாகக் கழற்றி மாட்டும் வகையில் வடிவமைத்தனர்.
கேமரா லென்ஸ் எப்போதும் அறைக்குள்ளேயே இருக்குமாறு அமைத்து, ஒரே நேரத்தில் எட்டு கேமராமேன்கள் வரை அந்தச் சிறிய செட்டிற்குள் அமர்ந்து காட்சிகளைப் படம்பிடித்தனர்.
படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட பல விளையாட்டுப் பொருட்களை நடிகர்களே நேரடியாகத் தயாரித்து அந்தச் செட்டை அலங்கரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படத்திற்குத் தேவையான நிதி முதலீட்டைப் பெறுவதில் எழுத்தாளர் எம்மா டோனோகு முக்கியப் பங்கு வகித்தார்.
அவர் கனடா நாட்டுப் குடியுரிமை பெற்றவர் என்பதால், கனடா அரசாங்கம் மற்றும் அங்குள்ள தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுத் தந்தார்.
அமெரிக்காவை விட கனடாவில் படப்பிடிப்பை நடத்தினால் அதிக நாட்கள் திட்டமிட்டு, கூடுதல் பட்ஜெட்டில் தரமாகப் படத்தை உருவாக்கலாம் என்று தயாரிப்பாளர் டேவிட் கிராஸ் மற்ற ஐரிஷ் கூட்டுத் தயாரிப்பாளர்களைச் சம்மதிக்க வைத்தார்.
கதாநாயகி பிரீ லார்சன் மற்றும் சிறுவன் ஜேக்கப் ட்ரெம்ப்ளே ஆகிய இருவருக்கும் இடையே திரையில் நிஜமான தாய்-மகன் போன்ற பிணைப்பு தேவைப்பட்டது.
இதற்காகப் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அவர்கள் இருவரும் மூன்று வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து ஒன்றாக நேரத்தைச் செலவழித்து தங்களது நெருக்கத்தை வளர்த்துக் கொண்டனர்.
ஆனால், பாட்டியாக நடித்த ஜோன் ஆலன் டொராண்டோவிற்குப் தாமதமாகவே வந்தார். சிறுவன் ஜேக்கப் தன்னிடம் அதிக நெருக்கம் காட்டிவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார், ஏனெனில் கதையின்படி சிறுவன் வெளி உலகிற்கு வந்த பிறகே பாட்டியை முதன்முதலில் பார்க்கிறான் என்பதால் அந்த அந்நியத்தன்மை நடிப்பில் இயல்பாக வர வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ஒளிப்பதிவாளர் டேனி கோஹன் இந்தத் திரைப்படத்திற்காக ரெட் எபிக் டிராகன் கேமரா மற்றும் பானவிஷன் ப்ரிமோஸ் லென்ஸைப் பயன்படுத்தினார்.
அறைக்குள் இருக்கும் காட்சிகளுக்கு ஃப்ளோரசன்ட் விளக்குகளைப் போன்ற ஒளி அமைப்பை உருவாக்கி, அது ஒரு தனித்துவமான மற்றும் யதார்த்தமான காட்சித் தன்மையைத் தரும்படி பார்த்துக் கொண்டார்.
சிறிய அறைக்குள் ஐந்து வாரங்கள் தங்கிப் படப்பிடிப்பை முடித்த ஒட்டுமொத்தக் குழுவினரும், வெளி உலகக் காட்சிகளைப் படம்பிடிப்பதற்காக வெளியே வந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால், டொராண்டோவின் கடுமையான குளிர் காலநிலை, போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் கூட்டத்திற்கு இடையே படப்பிடிப்பு நடத்துவது அவர்களுக்குப் புதிய சவாலாக அமைந்தது.
படத்தின் இறுதி காட்சிக்காக மீண்டும் அந்த அறை செட்டிற்குள் ஒட்டுமொத்தக் குழுவும் சென்றபோது, கதையின் நாயகனைப் போலவே ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் அந்த அறை முன்பை விட மிகவும் சிறியதாகத் தோன்றியது.
படத்தொகுப்பாளர் நாதன் நியூஜென்ட் டப்ளின் நகரில் ஐந்து மாதங்கள் தங்கிப் படத்தொகுப்பு வேலைகளைச் செய்தார்.
சிறுவன் ஜேக்கப் ஒவ்வொரு வசனத்தையும் பலவிதமான உணர்ச்சிகளில் நடித்துக் காட்டியிருந்ததால், இயக்குனர் லென்னியும் நாதனும் இணைந்து அந்தப் பலதரப்பட்ட காட்சிகளை மிக நேர்த்தியாகத் தேர்ந்தெடுத்து, படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளைச் செதுக்கினர்.
படத்தில் நடித்த நடிகர்கள் பல காட்சிகளில் தங்களின் சொந்த வசனங்களை அப்படியே உள்வாங்கி தன்னிச்சையாகப் பேசினர் .
எழுத்தாளர் எம்மா டோனோகு எழுதிய அசல் வசனங்களை விட, நடிகர்கள் தங்களின் இயல்பான பேச்சுவழக்கில் பேசிய சில வார்த்தைகள் மிகச் சிறப்பாக இருந்ததால், எம்மா அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு திரைப்படத்தின் இறுதி வடிவத்தில் சேர்த்துக் கொண்டார்.
கதாநாயகி பாத்திரத்திற்காகத் தொடக்கத்தில் எம்மா வாட்சன், ரூனி மாரா, ஷைலீன் வூட்லி மற்றும் மியா வாசிகோவ்ஸ்கா போன்ற முன்னணி உலகளாவிய நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
ஆனால், இயக்குனர் லென்னியின் உதவியாளர் ஒருவர் ஷார்ட் டெர்ம் 12 என்ற திரைப்படத்தில் பிரீ லார்சனின் நடிப்பைப் பார்க்குமாறு பரிந்துரைத்தார்.
அந்தப் படத்தில் அவரது அசாத்திய நடிப்பைக் கண்ட பிறகே, லென்னிக்கு இவர் தான் இந்த பாத்திரத்திற்குப் பொருத்தமானவர் என்ற இறுதி முடிவு கிடைத்தது.
அதேபோல், வில்லன் பாத்திரமான ஓல்ட் நிக் கதாபாத்திரத்திற்காக முதலில் ஆடிஷன் செய்தவர் கனடிய நடிகர் டாம் மெக்காமஸ்.
ஆனால் அவரது தோற்றமும் நடிப்பும் வில்லன் பாத்திரத்தை விட, கதையின் பிற்பாதியில் வரும் தாயின் புதிய கணவரான லியோ பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியதால், இயக்குனரால் அவர் அந்த நேர்மறையான கதாபாத்திரத்திற்கு மாற்றப்பட்டார்.
படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய நாதன் நியூஜென்ட், படத்தொகுப்புடன் நின்றுவிடாமல் இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட இயக்குனராகவும் (பொறுப்பேற்றுப் பணிபுரிந்தார்.
இதனால் முக்கியக் காட்சிகளுக்குத் தேவையான பிற காட்சிகளைப் படம்பிடிப்பதிலும் அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது.
திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் டொராண்டோவில் படம்பிடிக்கப்பட்டாலும், அவை அனைத்தும் அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள அக்ரான் நகரைப் போன்றே தோற்றமளிக்கும் வகையில் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டன.
இறுதியாக, வெறும் முப்பத்தைந்து நாட்களிலேயே (நவம்பர் பத்து முதல் டிசம்பர் பதினைந்து வரை) இந்த உலகத்தரம் வாய்ந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் மிக நேர்த்தியாக நடத்தி முடிக்கப்பட்டது.
==============================
படத்தின் கதை:-
ஜாய் என்ற 27 வயது இளம் பெண், தனது பதினேழு வயதில் ஓல்ட் நிக் என்ற கொடூரமான மனிதனால் ஏமாற்றிக் கடத்தப்பட்டு, அவனது வீட்டின் பின்புறமிருந்த ஒரு சிறிய பூட்டப்பட்ட கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளாள்.
அந்த அறையிலேயே பிறந்து வளர்ந்த ஐந்து வயது சிறுவன் தான் ஜாக். ஓல்ட் நிக், ஜாயை வன்புணர்வு செய்ததால் பிறந்த குழந்தை அவன். வெளி உலகமே தெரியாமல், சூரிய ஒளியைக் கூட நேரடியாகப் பார்க்க முடியாமல் ஒரு சிறிய கூரை ஜன்னல் வழியாக மட்டுமே வானத்தைப் பார்த்து, ஊட்டச்சத்து குறைபாட்டோடு தங்களது நாட்களை நகர்த்துகிறார்கள்.
இங்குதான் ஜாயின் விசித்திரமான தியாகப் பொய் தொடங்குகிறது. ஐந்து வயது ஜாக்கிற்கு, வெளி உலகம் என்ற ஒன்று இருப்பதே தெரியாது என்பதால், அந்த அறை மட்டும்தான் உலகம் என்று அவன் நினைக்கிறான்.
ஜாய் அவனிடம், தொலைக்காட்சியில் காட்டும் மனிதர்கள், மரங்கள் எல்லாமே பொம்மை என்றும், இந்த அறை மட்டும்தான் நிஜம் என்றும் பொய் சொல்லி வளர்க்கிறாள்.
ஒருவேளை ஜாக்கிற்குத் தான் ஒரு கைதியாக அடைபட்டிருப்பது தெரிந்தால், அவனது பிஞ்சு மனம் உடைந்துவிடும், அவன் மகிழ்ச்சியாக வளர வேண்டும் என்ற ஒரு தாயின் பேரன்பே இந்தத் தியாகப் பொய்க்குக் காரணம்.
ஆனால், ஒரு கட்டத்தில் ஓல்ட் நிக்கிற்கு வேலை போய்விடுவதால், இனி உங்களுக்கு உணவு, மின்சாரம் தருவது கஷ்டம் என்று மிரட்டுகிறான்.
தங்களை அவன் பட்டினியிட்டு கொன்றுவிடுவான் அல்லது ஆபத்து நேரும் என்பதை உணர்ந்த ஜாய், எப்படியாவது தப்பிக்க வேண்டும் எனத் துணிகிறாள்.
இதற்காக ஜாக்கிற்குப் பலத்த காய்ச்சல் வந்து அவன் இறந்துவிட்டதாக ஓல்ட் நிக்கை நம்ப வைக்கிறாள்.
ஜாக்கைப் பிணமாக பாவித்து ஒரு பாயில் சுருட்டி வைக்க, ஓல்ட் நிக் அந்தப் பிணத்தை அப்புறப்படுத்தத் தனது பிக்கப் டிரக் வண்டியின் பின்புறம் போட்டு எடுத்துச் செல்கிறான்.
வண்டி வேகம் குறையும் போது, ஜாய் சொல்லிக் கொடுத்தபடி ஜாக் அந்தப் பாயில் இருந்து உருண்டு வெளியே குதித்து, சாலையில் சென்ற ஒருவரிடம் உதவி கேட்க, போலீஸார் வந்து ஜாயையும் மீட்கிறார்கள்.
ஓல்ட் நிக் கைது செய்யப்படுகிறான்.
நரகத்தில் இருந்து தப்பித்து வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று நாம் நினைப்போம், ஆனால் நிஜப் போராட்டம் அங்கிருந்துதான் தொடங்குகிறது.
பிறந்தது முதல் ஒரு சிறிய அறைக்குள்ளேயே இருந்த ஜாக்கிற்கு, இந்த பிரம்மாண்டமான வெளி உலகம், வீடுகள், மனிதர்கள் எல்லாமே பயத்தை ஏற்படுத்துகின்றன.
அவனுக்குப் பழைய அறைதான் பாதுகாப்பான இடமாகத் தோன்றுகிறது. மறுபுறம், ஏழு வருடங்கள் கழித்துத் தனது வீட்டிற்கு வரும் ஜாய்க்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவளது பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டனர், அவளது தந்தை, ஓல்ட் நிக்கின் ரத்தத்தில் பிறந்த ஜாக்கை தனது பேரனாகப் பார்க்க மறுத்து ஒதுங்குகிறார்.
பணத் தேவைக்காக ஜாய் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்கிறாள். அங்கு அந்தத் தொகுப்பாளர், குழந்தை பிறந்தவுடனேயே அதை ஓல்ட் நிக்கிடம் கொடுத்து வெளியில் அனுப்பியிருக்கலாமே, ஏன் அறைக்குள்ளேயே சுயநலமாக வைத்திருந்தீர்கள் என்று கேள்வி எழுப்ப, ஜாய் குற்ற உணர்ச்சியில் உடைகிறாள்.
தன் மகனின் வாழ்க்கையைத் தானே கெடுத்துவிட்டோமோ என்ற மன உளைச்சலில் தற்கொலைக்கும் முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.
ஜாய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, ஜாக் தனது பாட்டி மற்றும் புதிய தாத்தாவின் அன்பால் மெதுவாக வெளி உலகிற்குப் பழகுகிறான்.
விலங்குகளோடும், சக குழந்தைகளோடும் விளையாடத் தொடங்குகிறான். தனது தாய்க்குத் தன் தலைமுடியை வெட்டி அனுப்பி, அவளுக்குத் தைரியம் ஊட்டுகிறான்.
ஜாய் குணமடைந்து வந்ததும், ஜாக்கின் ஆசைப்படி போலீஸ் காவலுடன் அவர்கள் சிறைபட்டிருந்த அந்த அறைக்கு மீண்டும் செல்கிறார்கள்.
இப்போது கதவுகள் திறந்து கிடக்கின்றன. அந்த அறைக்குள் நின்ற ஜாக், அம்மா, இந்த அறை இவ்வளவு சின்னதா, சுவர்கள் எல்லாம் சுருங்கிவிட்டதா என்று கேட்கிறான். மனித மனம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்போது அதுவே பெரிய உலகமாகத் தெரியும், ஆனால், சுதந்திரக் காற்றைச் சுவாசித்து, பரந்த உலகத்தைப் பார்த்துவிட்ட பிறகு, பழைய அடிமைத்தனத்தின் தடயங்கள் மிகச் சிறியதாக, அர்த்தமற்றதாக மாறிவிடும் என்ற வாழ்வியல் தத்துவத்தை இது உணர்த்துகிறது.
அவர்கள் இருவரும் அந்த அறைக்கு விடைபெறுதல் கூறிவிட்டு, தங்களது புதிய வாழ்க்கையை நோக்கி நகர்வதோடு படம் நிறைவடைகிறது.
இது வெறும் கடத்தல் கதையல்ல, துன்பங்களை வென்று மனித மனம் எப்படி மறுபடி வாழத் தொடங்குகிறது என்ற நம்பிக்கையின் கதை.
ரூம் திரைப்படம் நமக்குக் கடத்தும் மிக முக்கியமான செய்தி , இயல்பு வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒட்டுமொத்த சுதந்திரமும் பறிக்கப்படும் ஒரு பேரழிவை மனிதன் சந்தித்தாலும், அவனால் அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதுதான்.
துன்பங்கள் நிறைந்த ஒரு சூழலில் இருந்து உடல்ரீதியாகத் தப்பித்து வெளியே வருவது மட்டுமே விடுதலை கிடையாது.
மனரீதியாக அந்தப் பழைய கசப்பான நினைவுகளில் இருந்து விடுபட்டு, புதிய சூழலுக்குப் பழகி மாறுவதுதான் உண்மையான விடுதலை என்பதை இத்திரைப்படம் உணர்த்துகிறது.
சுற்றியிருக்கும் உலகம் எவ்வளவு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருந்தாலும், அதை நாம் எதிர்கொள்ளும் விதம் நம்முடைய மனப்பக்குவத்தைப் பொறுத்தது என்ற செய்தியை இது சொல்கிறது.
பிறர் நமக்கு இழைத்த அநீதியையோ அல்லது நம் வாழ்வில் இழந்த வருடங்களையோ நினைத்துக்கொண்டே இருந்தால் நம்மால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது.
நம்மை நேசிப்பவர்களின் அன்பும் ஆதரவும் இருந்தால், எத்தகைய பெரிய மன அழுத்தத்திலிருந்தும், குற்ற உணர்ச்சியிலிருந்தும் ஒரு மனிதன் மீண்டு வர முடியும் என்ற ஆழமான வாழ்வியல் உண்மையை இத்திரைப்படம் நமக்கு மிக எளிமையாகப் புரிய வைக்கிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்