1986 ஆம் ஆண்டு வெளியான 'த நேம் ஆஃப் த ரோஸ்' The Name of the Rose , இடைக்கால ஐரோப்பாவின் இருண்ட காலத்தை பின்னணியாகக் கொண்ட விறுவிறுப்பான மர்மத் திரைப்படம்.
1327-ஆம் ஆண்டில், ஒரு அத்துவான மடாலயத்தில் மர்மமான முறையில் இறந்து கிடக்கும் துறவிகளின் மரணங்களைப் புலனாய்வு செய்ய வரும் வில்லியம் ஆஃப் பாஸ்கர்வில் என்ற புத்திஜீவி துறவியைச் சுற்றி கதை நகர்கிறது.
மத அடிப்படைவாதம், அறிவுத் தேடல் மற்றும் அதிகார மையங்களுக்கு இடையிலான மோதலை, ஒரு த்ரில்லர் பாணியில் இத்திரைப்படம் காட்சிப்படுத்துகிறது.
வில்லியம் தனது கூர்மையான தர்க்க அறிவைக் கொண்டு அந்த மடாலயத்தின் ரகசியங்களை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் சாராம்சம். குறிப்பாக, சீன் கானரியின் கம்பீரமான நடிப்பும், மடாலயத்தின் மர்மமான சூழலும் பார்வையாளர்களைக் கதையோடு ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்தத் திரைப்படத்தின் அடிநாதம் அதிகாரத்திற்குத் தலைவணங்க மறுக்கும் அறிவுத்தேடலுக்கும், மதத்தின் பெயரால் உண்மையை மூடி மறைக்கும் அதிகார மையங்களுக்குமான மோதல் ஆகும்.
உண்மையைத் தேடும் பகுத்தறிவுக்கும் (Reason), அச்சத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மதக் குருட்டுத்தனத்திற்கும் (Fanaticism) இடையிலான இந்தப் போராட்டம், மனிதனின் அறிவுச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
ஒரு நூலகத்தையே போர்க்களமாக மாற்றி, "அறிவே ஆபத்து" என்று கருதும் மூடநம்பிக்கைக்கு எதிராக, "கேள்வி கேட்பதே மனித வாழ்வின் அறம்" என்பதை வில்லியம் ஆஃப் பாஸ்கர்வில் கதாபாத்திரம் உரக்கச் சொல்வதே இப்படத்தின் ஆன்மா.
இத்திரைப்படத்தை செவ்வியல் படைப்பாக மாற்றியதில் அதன் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு அளப்பரியது.
நாவலின் அடர்த்தியான தத்துவத் தேடலைத் துப்பறியும் களத்திற்குள் கொண்டு வந்த திரைக்கதை, பார்வையாளர்களைப் படத்தோடு இறுக்கமாகப் பிணைத்தது.
வில்லியம் கதாபாத்திரத்தில் நடிக்க சீன் கானரி தேர்வானது ஒரு அற்புத முடிவாக அமைந்தது, அந்தப் பாத்திரத்தின் கம்பீரத்தையும், அதன் அறிவுசார் மென்மையையும் அவர் தனது கண்கள் வழியாகவே கடத்தினார்.
ஜீன்-ஜாக் அன்னாட்டின் இயக்கத்தில் மடாலயத்தின் ஒவ்வொரு கல்லும் ஒரு மர்மத்தைப் பேசுவது போல் அமைக்கப்பட்டிருந்தது படத்தின் மிகப்பெரிய வெற்றி.
ஒளிப்பதிவில், டோனினோ டெல்லி கோலியின் கேமரா நுணுக்கம் அபாரமானது; மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்தங்களின் ஒளியில் மட்டுமே படம்பிடிக்கப்பட்ட காட்சிகள், 14-ஆம் நூற்றாண்டின் இருண்ட காலத்தை அப்படியே நம் கண்முன் நிறுத்தின.
ஜேம்ஸ் ஹார்னரின் இசை, கதையின் மர்மத்தையும் மதத்தின் புனிதத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கியது.
மேக்கப் கலைஞர் துறவிகளின் தோற்றத்தை மிகவும் தத்ரூபமாகக் காட்டியது, பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு வரலாற்று ஆவணப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது.
சிறந்த ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பிற்காக பாஃப்டா (BAFTA) உள்ளிட்ட உயரிய விருதுகளைப் படம் வென்றது.
படத்தின் பிரம்மாண்டமான நூலக அரங்கு, நவீன தொழில்நுட்பங்கள் இன்றி மிக நுணுக்கமாகக் கட்டப்பட்ட ஒரு கலைப்படைப்பு. கடும் குளிரிலும், பல மாதங்கள் தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டுப் பணியாற்றிய கலைஞர்களின் அர்ப்பணிப்பு, இன்றுவரை இத்திரைப்படத்தை உலகத் தரமான ஒரு மர்மக் காவியமாகத் தக்கவைத்துள்ளது.
இந்தத் திரைப்படத்தின் பெயர், கதையின் இறுதியில் வில்லியம் ஆஃப் பாஸ்கர்வில் சொல்லும் லத்தீன் மொழியிலான ஒரு பழமொழியிலிருந்து உருவானது: "Stat rosa pristina nomine, nomina nuda tenemus". இதன் பொருள், "பழைய ரோஜா அதன் பெயரில் மட்டுமே வாழ்கிறது, நம்மிடம் இருப்பது பெயர்கள் மட்டுமே" என்பதாகும்.
இதன் ஆழமான அர்த்தம் என்னவென்றால், காலம் மாறும்போது ஒரு விஷயத்தின் உண்மையான வடிவம், சாராம்சம் மற்றும் அதன் இருப்பு அழிந்து விடுகிறது; இறுதியில் நம்மிடம் எஞ்சுவது அந்தப் பொருளைக் குறிக்கும் ஒரு வெறும் 'பெயர்' மட்டுமே. அழிந்துபோன அந்தப் பிரம்மாண்டமான நூலகம், மறைந்துபோன பண்டைய ஞானம் மற்றும் வில்லியம் கண்டறிந்த உண்மைகள் அனைத்தும் காலப்போக்கில் மறைந்து போகக்கூடும், ஆனால் அதைப் பற்றிய நினைவும், அந்தப் பெயரும் மட்டுமே வரலாற்றில் எஞ்சியிருக்கும் என்பதை இது உணர்த்துகிறது. சுருக்கமாகச் சொன்னால், மனித அறிவு மற்றும் வரலாற்றின் தற்காலிகத் தன்மையைச் சுட்டிக்காட்டவே உம்பெர்டோ ஈக்கோ இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தார்.
============================
படத்தின் கதை:-
14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தர்க்க அறிவும் கூர்மையான புலனாய்வுத் திறனும் கொண்ட பிரான்சிஸ்கன் துறவி வில்லியம் ஆஃப் பாஸ்கர்வில் (சீன் கானரி) மற்றும் அவரது சீடர் அட்சோ ஆஃப் மெல்க் (கிறிஸ்டியன் ஸ்லேட்டர்) ஆகியோர், வடக்கு இத்தாலியிலுள்ள ஒரு செல்வாக்கு மிக்க பெனடிக்டின் மடாலயத்தை அடைகின்றனர்.
அந்த மடாலயத்தில் ஒரு முக்கியமான திருச்சபை மாநாடு நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இளம் ஓவியர் ஒருவரின் மர்மமான மரணம் நிகழ்ந்திருந்தது.
அது தற்கொலை என்று மடாலய நிர்வாகம் நம்பினாலும், வில்லியம் தனது அறிவியல்பூர்வமான பார்வையால் அது கொலை என்பதை உறுதி செய்கிறார்.
மடாலயத்தின் அபாட் (மைக்கேல் லான்ஸ்டேல்) இக்கொலைகளை விசாரிக்க வில்லியமிற்கு அனுமதி வழங்குகிறார்.
விசாரணை தொடரும் நாட்களில், மடாலயத்தில் மேலும் சில விசித்திரமான மரணங்கள் நிகழ்கின்றன.
வில்லியமும் அட்சோவும் சால்வடோர் (ரான் பெர்ல்மேன்) என்ற கூனல் விழுந்த துறவியையும், அவரது பாதுகாவலர் ரெமிஜியோ டா வராகினையும் (ஹெல்முட் குவால்டிங்கர்) சந்திக்கின்றனர்.
சால்வடோரின் பேச்சில் வெளிப்பட்ட ‘பெனிடென்சியாஜிட்’ (Penitenziagite) என்ற சொல்லை வைத்து, அவர்கள் இருவரும் ஒரு காலத்தில் மதத்துரோகக் குழுவில் இருந்தவர்கள் என்பதை வில்லியம் கண்டறிகிறார்.
அதே சமயம், மடாலயத்திற்குள் உணவிற்காகப் புகுந்த ஒரு இளம் பெண்ணுடன் (வலென்டினா வர்காஸ்) அட்சோ சந்திக்கும் சூழல் ஏற்பட்டு, அவன் அவளுடன் உடலுறவு கொள்கிறான்.
இது அட்சோவின் ஆன்மீகப் போராட்டத்திற்குத் தொடக்கமாக அமைகிறது.
கொல்லப்பட்ட துறவிகளின் விரல்களும் நாவுகளும் கருப்பாக இருப்பதை உற்று நோக்கும் வில்லியம், ஏதோ ஒரு மர்மமான புத்தகம் மரணங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதை ஊகிக்கிறார்.
கொலைகளைச் செய்பவன் ‘சாத்தான்’ என்று பிறர் நம்பியிருக்க, வில்லியமும் அட்சோவும் மடாலயத்தின் கோபுரத்தில் அமைந்துள்ள சிக்கலான, பிரம்மாண்டமான ரகசிய நூலகத்திற்குள் நுழைகிறார்கள்.
அங்கு அரிஸ்டாட்டில் போன்ற மேதைகளின் பல அறிய நூல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறார்கள்.
ஆனால், இந்தக் கலை, நகைச்சுவை மற்றும் தர்க்கம் சார்ந்த அறிவு கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளுக்கு ஆபத்தானது என்று கருதி அவை மறைக்கப்படுகின்றன.
அதே நேரத்தில், திருச்சபையின் விசாரணையாளரான பெர்னார்டோ குய் (எஃப். முர்ரே ஆபிரகாம்) மடாலயத்திற்கு வருகை தருகிறார்.
அவர் கொலைகளுக்குப் பின்னால் இருப்பவர்களை விட, மதத்துரோகிகளைக் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
சால்வடோர் மற்றும் அந்தப் பெண்ணைப் பிடித்து, ஒரு கறுப்புப் பூனை மற்றும் கோழியை வைத்துக் கொண்டு, அவர்கள் சாத்தானுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சித்திரவதை செய்கிறார்.
சால்வடோர் வலி தாங்க முடியாமல் தவறான ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்.
விசாரணை மன்றத்தில், வில்லியம் அந்தப் படுகொலை செய்பவர் கிரேக்க மொழி தெரிந்தவராகத்தான் இருக்க முடியும் என்றும், கல்வி அறிவற்ற ரெமிஜியோவால் அது முடியாது என்றும் வாதிடுகிறார்.
இருப்பினும், பெர்னார்டோ குய் ரெமிஜியோவைத் துன்புறுத்தி வில்லியமுக்கு எதிராக வாக்குமூலம் பெறுகிறார்.
இறுதியில், நூலகத்தின் ரகசியத்தைத் துப்புத்துலக்கும் வில்லியம், மடாலயத்தின் மிக மூத்த துறவியான ஜார்ஜ் ஆஃப் பர்கோஸை (ஃபியோடர் ஷாலியாபின் ஜூனியர்) சந்திக்கிறார்.
ஜார்ஜ் தான் அந்தத் தொடர் கொலைகளுக்குக் காரணம். அவர் அரிஸ்டாட்டிலின் 'கவிதை இயல்' இரண்டாம் பாகத்தை வைத்திருக்கிறார்.
அதில் சொல்லப்பட்டுள்ள பகடி நகைச்சுவை, மனிதர்களை இறைபக்தியில் இருந்து திசைதிருப்பும் என்று அவர் தீவிரமாக நம்புகிறார்.
அந்தப் புத்தகத்தின் பக்கங்களில் கடும் விஷத்தைத் தடவி வைத்திருப்பதால், அதைத் தொட்டுப் படிப்பவர்கள் விரலை எச்சில் தொட்டு திருப்புகையில் விஷம் உட்சென்று உயிரிழக்கிறார்கள்.
உண்மையைச் சொல்ல வில்லியம் வற்புறுத்தும்போது, குட்டு வெளிப்பட்டதை அறிந்து கலவரமுற்ற ஜார்ஜ் கோபமடைந்து கையில் இருந்த மெழுகுவர்த்தியை வீச, தீ மளமளவென நூலகம் முழுவதும் பரவுகிறது.
வில்லியம் முக்கியமான சிலநூல்களை தீயிலிருந்து காப்பாற்றுகிறார்,
ஆனால் அந்த விஷம் தோய்ந்த புத்தகமும் ஜார்ஜும் நூலகத்தோடு அழிந்து போகின்றனர்.
அதே நேரத்தில், சால்வடோர் மற்றும் ரெமிஜியோ தீயில் எரிக்கப்படுகிறார்கள்.
அந்தப் அடைக்கலம் புகுந்த பெண் தீயில் ஜார்ஜ் ஆதரவாளர்களால் எரிக்கப்படவிருந்தபோது, குழப்பத்தைப் பயன்படுத்தி உள்ளூர் விவசாயிகள் புகுந்து அவளை மீட்கின்றனர்.
பெர்னார்டோ குய் தீயில் இருந்து தப்பித்துச் செல்லும்போது மக்கள் அவரது வண்டியைப் பள்ளத்தாக்கில் தள்ளி அவரை கொல்கின்றனர்.
வில்லியமும் அட்சோவும் அங்கிருந்து புறப்படுகிறார்கள். வழியில் அந்தப் பெண் அட்சோவை மீண்டும் காண, அட்சோ அவளைத் தன்னுடனேயே வர அழைக்க நினைத்தாலும், வில்லியமுடன் தனது பயணத்தைத் தொடர்கிறான்.
பல ஆண்டுகள் கழித்து, முதியவரான அட்சோ, வில்லியமிடமிருந்து தான் கற்ற பாடங்களே தன் வாழ்வின் சிறந்த அறிவு என்றும், அந்தப் பெண் தன் வாழ்வின் ஒரே காதல் என்றும் நினைவுகூருகிறான்.
அறிவை ஒடுக்க நினைக்கும் மதவெறி கண்மூடித்தனத்தை விட, உண்மையை நோக்கிச் செல்லும் பகுத்தறிவே மேலானது என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
உம்பெர்டோ ஈக்கோவின் இந்த நாவலும் அதன் திரை வடிவமும் மனித வரலாற்றின் அறிவுசார் போராட்டத்தை வெவ்வேறு தளங்களில் பதிவு செய்துள்ளன. நாவலின் அடிநாதமாக விளங்கும் செமிட்டிக் குறியீட்டியல் (Semiotics) ஆய்வுகள், இடைக்கால மத-அரசியல் அதிகாரப் போட்டிகள் மற்றும் வில்லியமின் தத்துவார்த்த தேடல்கள், வாசகனை ஒரு தனி உலகத்திற்கே அழைத்துச் செல்லும்.
நாவல் என்பது ஒரு மனிதனின் ஆன்மீக மற்றும் அறிவுப்பூர்வமான பரிணாம வளர்ச்சியாக விரிகிறது. அட்சோவின் முதுமைக்கால நினைவுகள், தான் வில்லியமிடமிருந்து கற்ற தர்க்க அறிவு மற்றும் வாழ்வின் மீதான பார்வை, காலத்தை வென்று நிற்கும் ஒரு அனுபவமாக நாவலில் செதுக்கப்பட்டிருக்கும்.
திரைப்படம் நாவலின் இந்த அதீத அறிவுத்தளத்தை மர்மம் மற்றும் த்ரில்லர் என்ற சுவாரஸ்யமான சட்டகத்திற்குள் சுருக்கி, ஒரு காட்சி விருந்தாக வழங்குகிறது.
தத்துவ விவாதங்களின் ஆழம் குறையக்கூடும் என்றாலும், காட்சிப்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு, இசை மற்றும் கதாபாத்திரங்களின் அசாத்திய நடிப்பு நாவலின் உயிர்நாடியை அப்படியே பிரதிபலிக்கிறது.
மூலநாவல் ஆங்கிலத்தில் வாசிப்பவருக்குப் புதிய புதிய சிந்தனைகளையும், ஆழமான தத்துவப் பயணத்தையும் பரிசளிக்கிறது என்றால், திரைப்படம் அதன் மர்மமான முடிச்சுகளையும் விறுவிறுப்பையும் உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறது.
மூல ஆங்கில நாவல் ஒரு அறிவுப்பூர்வமான தேடல், திரைப்படம் ஒரு அதிரடியான அனுபவம்,இவை இரண்டுமே "அறிவே பேராயுதம்" என்பதை வெவ்வேறு மொழிகளில் உலகிற்கு உரக்கச் சொல்லும் உன்னதமான படைப்புகள்.
#கீதப்ப்ரியன்இங்லிஷ்க்ளாஸிக்க்