'Gone with the Wind' (1939) திரைப்படம் வெளியாகி 86 ஆண்டுகள் ஆகிறது, அமெரிக்க திரைப்பட வரலாற்றில் இப்படம் ஒரு பிரம்மாண்டமான சாதனையாகக் கருதப்படுகிறது.
இது நீண்ட காலம் உலகிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாகத் திகழ்ந்தது.
இத்திரைப்படத்தின் முதல் மற்றும் முக்கியமான சிறப்பு, அதன் காவியத் தயாரிப்புத் தரம்தான். அமெரிக்க உள்நாட்டுப் போரின் முழு வீச்சையும் காட்சிப்படுத்த, ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் மற்றும் நுணுக்கமான வரலாற்றுச் அரங்குகள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டன.
அக்காலத்தின் அரிதான டெக்னிகலர் (Technicolor) வண்ணத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. டாரா என்ற ஊரின் செம்மண், நாயகி ஸ்கார்லெட் அணியும் உடைகள், அட்லாண்டாவின் தீப்பிழம்புகள் ஆகியவை கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் அமைந்தன.
இந்த வண்ணச் செழுமை, பார்வையாளர்களுக்குப் புதிய காட்சி அனுபவத்தைத் தந்தது.
அட்லாண்டா நகரம் தீக்கிரையாகும் காட்சிக்காக, படத்தின் படமாக்கம் முடிந்த பழைய அரங்குகள் எரிக்கப்பட்டுப் படமாக்கப்பட்டது.
இது, ஒரு காவியத்தின் வீழ்ச்சியையும் போரின் பேரழிவையும் திரையில் அழுத்தமாக உணர வைத்தது.
மார்கரெட் மிட்செல்லின் சிக்கலான கதாபாத்திரங்களுக்கு, நடிகர்கள் வழங்கிய உயிரோட்டமான நடிப்புதான் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு அடித்தளம்.
கதையின் நாயகி ஸ்கார்லெட் (விவியன் லே) கதாபாத்திரம் அபாரமானது, சுயநலம், வஞ்சகம், தைரியம் மற்றும் காதலுக்கான ஏக்கம் போன்ற அத்தனை முரண்பாடான உணர்வுகளையும் விவியன் லே திறம்பட வெளிப்படுத்தினார்.
இந்த பாத்திரத்தை இன்றும் வேறு யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவரது நடிப்பு ஆழமாகப் பதிந்தது.
கதையின் நாயகன் ரெட் பட்லர் (கிளார்க் கேபிள்):கதாபாத்திரத்தில் ரெட்டின் ஆணவம், நகைச்சுவை உணர்வு மற்றும் ஸ்கார்லெட் மீதான ஆழமான, மறைக்கப்பட்ட அன்பு ஆகியவற்றைக் கிளார்க் கேபிள் கச்சிதமாக வெளிப்படுத்தினார்.
இறுதிக் காட்சியில் ஒலிக்கும் "I don't give a damn" என்ற வசனம், சினிமா வரலாற்றில் நிலைபெற்றது.
இக்கதை, அடிமை முறையின் அடித்தளத்தில் அமைந்த தென்னகப் பண்ணையார்களின் 'பழைய வாழ்க்கை முறையை' ஒரு கவர்ச்சியான, ஏங்கத்தக்க ஒன்றாகச் சித்தரிக்கிறது.
இது, வரலாற்று ரீதியாகப் பல விமர்சனங்களுக்கு உள்ளான ஒரு முரண்பட்ட அணுகுமுறையாகும்.
இருப்பினும், நாயகி ஸ்கார்லெட் தன் குடும்பத்தைப் பாதுகாக்க எந்த வரம்பையும் மீறிப் போராடுவதும், பணம் தேடுவதில் அவள் காட்டும் தீராத வேட்கையும், அமெரிக்கச் சமூகத்தில் பிழைப்பிற்காக மக்கள் மேற்கொள்ளும் தீவிரமான போராட்டத்தின் ஒரு பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்தத் திரைப்படம், அமெரிக்க மற்றும் உலகப் பொதுமக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. போரின் பின்னணியில் அமைந்த சிக்கலான காதல் கதைகளுக்கு இத்திரைப்படம் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தது.
அமெரிக்காவில் தென்னக மாகாணங்களின் பண்ணையார் சகாப்தத்தின் வீழ்ச்சியையும், ஸ்கார்லெட் என்ற பெண்ணின் தனிப்பட்ட உணர்வுப்பூர்வமான வளர்ச்சியையும் அழுத்தமாகப் பதிவு செய்த இக்காவியம், இன்றும் காதல், இழப்பு மற்றும் மீண்டு வரும் ஒரு பெண்ணின் சாகசப் போராட்டத்தைப் பேசும் காவியமாக மிளிர்கிறது.
படத்தின் கதை;-
அமெரிக்க உள்நாட்டுப் போரின் மிகவும் கொந்தளிப்பான காலத்தைப் பின்னணியில் படம் துவங்குகுறது, ஸ்கார்லெட் ஓ'ஹாரா என்ற வசீகரமான, பிடிவாதமான வெள்ளையினப் பெண்ணின் நீண்ட நெடிய போராட்டக் கதைக்குள் நாம் பயணிக்கிறோம்.
ஜார்ஜியாவின் செழிப்பான டாரா என்ற பச்சை பசுமையான பண்ணையில், ஒரு ராணியைப் போல வாழ்கிறாள் பதினாறு வயது ஸ்கார்லெட் (படையப்பா நீலாம்பரி போல).
அவளது ஒரே குறிக்கோள், தன் கனவுக் காதலன் ஆஷ்லி வில்க்ஸைத் தன்வசப்படுத்துவதுதான். ஆனால், ஆஷ்லி அவளை இதமாக மறுத்து,அவளை விட மென்மையான பணிப்பெண் மெலனி ஹாமில்டனை (படையப்பா வேதவள்ளி போல) மணக்க முடிவு செய்கிறார், ஸ்கார்லெட்டின் காதல் கனவு சிதறுகிறது.
இந்தக் கோபத்தின் உச்சத்தில், அதே ஆடம்பர விருந்தில் ஒன்றில் சாமர்த்தியசாலியான ரெட் பட்லர் என்பவன் அவளை இகழ்ச்சியுடன் கவனிக்கிறான். ஆஷ்லிக்கு எரிச்சலை ஏற்படுத்த வேண்டி, ஸ்கார்லெட் உடனடியாக மெலனியின் சகோதரனை வலையில் வீழ்த்தி அவசர அவசரமாக மணக்கிறாள்.
ஆனால், விதி வேறு விதமாகச் நிந்தித்தது; கணவன் விரைவில் அம்மை நோயால் இறந்து போகிறான், ஸ்கார்லெட் கைக்குழந்தையுடன் இளம் விதவையாகிறாள். கருப்பு கவுன் விதவைக் கோலம் அவளுக்குச் கொடுஞ்சிறை போல் இருக்கிறது, அவள் இளைப்பாற அட்லாண்டாவிற்குச் செல்கிறாள்.
அங்கே, அவள் போரை ஒரு வீண் முயற்சி எனக் கருதுகிற ரெட் பட்லர் என்ற போர்க்கால ஆதாய வியாபாரியுடன் நெருங்கிப் பழகுகிறாள்.
ரெட், சட்டவிரோதமாகப் பொருள் கடத்திப் பெரும் செல்வந்தனாக வளர்ந்தவன். அவனது கேலிப் பேச்சு ஸ்கார்லெட்டின் விதவைக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிய, இருவரும் கைகோர்த்து சபையில் நடனமாடி சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகின்றனர்.
போர் இன்னும் உக்கிரமாகிறது, எதிரிப் படைகள் அட்லாண்டாவைச் சுற்றி வளைக்கின்றன. மெலனிக்கு அப்போது பிரசவ வலி எடுக்கிறது, அனுபவமற்ற ஸ்கார்லெட்டும் இளம் அடிமைப் பெண் பிரிஸ்ஸியும் மட்டும் உடன் இருந்து உதவுகின்றனர்.
குழப்பமான அந்தச் சூழலில், மெலனி குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். நகரத்தின் எல்லையில் இருந்து ஸ்கார்லெட்டை அவளது பண்ணை நிலமான டாராவிற்கு அழைத்துச் செல்ல உதவுகிறான் ரெட், அங்கே திடீரென "இந்த உக்கிரமான போரில் நானும் சேர்ந்து தேசத்துக்கு போராடப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு சடுதியில் பிரிந்து செல்கிறான்.
பண்ணை நிலம் டாராவிற்குத் போராட்டங்களுக்குப் பின் திரும்புகிறாள் ஸ்கார்லெட், அங்கே தன் தாய் இறந்துவிட்டதையும், அப்பா மனநலம் பாதிக்கப்பட்டு, பண்ணை முழுவதுமாக எதிரிகளால் சூறையாடப்பட்டு, அடிமைகள் அனைவரும் சிதறி ஓடிவிட்டதையும் கண்ணுருகிறாள்.
அவளது உயிர்வாழ்தலுக்கான வேட்கை அங்கே தான் அப்போதுதான் கொழுந்துவிடுகிறது; அவள் டாரா பண்ணை நிலத்தில் கஷ்டப்பட்டு உழைக்கிறாள், அத்துமீற வந்த எதிரி வீரனைச் சுட்டுக் கொல்கிறாள்.
இந்த உக்கிரப் போரிலிருந்து திரும்பிய ஆஷ்லி,பெரும் போர் அதிர்ச்சியுடனும் இலட்சியங்களை இழந்தவனாகவும் இருக்கிறான்.
டாரா பண்ணை மீண்டு வரத் தொடங்கியபோதும், அரசாங்கம் விதித்த வரிப் பளு அவளை மீண்டும் சிக்கலில் ஆழ்த்துகிறது. பெரும்பணம் தேவைப்பட்டதால், தன் பழைய திரைச்சீலையிலிருந்து தைத்த கவர்ச்சியான உடையுடன் சிறையில் போர்க்கைதியாக இருந்த ரெட்டைப் பார்க்கச் செல்கிறாள், ஆனால் அவளுக்கு பணம் கிடைக்கவில்லை.
ஏமாற்றத்துடன் திரும்பிய அவள், தன் தங்கை சூலனை மணக்கவிருந்த, பணக்கார வியாபாரி ஃபிராங்க் கென்னடியைத் தந்திரமாகத் தன் வலையில் வீழ்த்துகிறாள், இரண்டே வாரங்களில் மணம் முடிக்கிறாள்.
அவனது அதீத பணத்தால் அரசின் பண்ணை வரியைக் கட்டிவிடுகிறாள், தனக்கே உரித்தான ஒரு மர ஆலையைத் தொடங்கி, வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தத் தொடங்குகிறாள்.
இது சமூகத்தில் அவளுக்குப் பரத்தை என்ற பெரும் பழியை ஏற்படுத்துகிறது. ஒருநாள், ஆலைக்குச் சென்று திரும்பும்போது, அவள் கொள்ளையர்களால் சுற்றிவளைத்து தாக்கப்படுகிறாள்,
அவளை பிக் சாம் என்ற முன்னாள் பண்ணை ஊழியன் காப்பாற்றுகிறான். இந்த சம்பவத்திற்குப் பழிவாங்குகிறேன் என்று சென்ற கணவர் ஃபிராங்க், அங்க நடந்த சண்டையில் கொல்லப்பட்டார்.
இப்போது ,
மூன்றாவது முறையாக விதவையான ஸ்கார்லெட்டை, ரெட் பட்லர் உடனடியாக மணக்கிறான்.
அவர்களுக்குப் பிறந்த மகள், செல்லமாக பான்னி ப்ளூ என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறாள்.
ரெட் பாணி மீது உயிரையே வைத்திருக்கிறான். ஆனால், ஸ்கார்லெட் இன்னும் ஒருதலை காதலன் ஆஷ்லியின் பிம்பத்திலேயே வாழ்ந்ததால், ரெட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கிறாள், அவனுடன் இணங்கி வாழாமல் தனி அறையில் தூங்குகிறாள். இதனால் அவர்கள் உறவு சிதைகிறது.
ஆஷ்லியும் ஸ்கார்லெட்டும் நெருங்கிப் பழகியதாக சுற்றத்தில் வதந்தி பரவுகிறது. கோபத்தின் உச்சியில் இருந்த ரெட் இதைக் கேட்டு , ஸ்கார்லெட்டை வலுக்கட்டாயமாக அவளது படுக்கையறைக்கு அழைத்துச் சென்று அவளுடன் உறவு கொள்கிறான்.
இந்த வன்கலவியால் ஸ்கார்லெட் கர்ப்பமாகிறாள், ஒருமுறை ரெட்டுடன் ஏற்பட்ட சண்டையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவள் கருக்கலைந்து , எலும்புகளை உடைத்துக் கொள்கிறாள்.
ரெட் மனம் நொந்து, மெலனியிடம் அவள் கணவன் ஆஷ்லி மீதான தன் பொறாமையை ஒப்புக்கொள்கிறான்.
சில நாட்களிலேயே, அவர்கள் செல்ல மகள் பாணி குதிரை விபத்தில் கழுத்து உடைந்து கோரமாக இறந்துபோகிறாள்.
இந்தத் துயரங்களுக்கு நடுவில், ஸ்கார்லெட்டிற்கு ஆறுதலாக இருந்த மெலனி, இரண்டாவது பிரசவத்தில் சிக்கலால் இறந்துபோனாள்.
ஆஷ்லியைத் ஆறுதல் சொல்லித் தேற்றும் வேளையில்தான், ஸ்கார்லெட்டிற்கு ஒரு பெரிய உண்மை உரைக்கிறது: தான் உண்மையில் ஆஷ்லியை நீண்ட காலத்திற்கு முன்பே மறந்துவிட்டாலும் அதை விளங்கிக் கொள்ள இத்தனை நாளாகியுள்ளது , தனக்குச் சவால் விடுத்து, எப்போதும் உறுதுணையாக நின்ற ரெட் பட்லரைத்தான் உண்மையாகக் காதலிக்கிறன் என்பதே இப்போது தான் உரைக்கிறது என்றும் உணர்ந்து அதிர்ச்சி அடைகிறாள்.
புத்தம் புதிய காதலுடன் ரெட்டிடம் அவள் ஓடி வருகிறபோது, அவளது திடீர் காதலுக்கு இப்போது எந்தப் பயனும் இல்லை என்று ரெட் முடிவு செய்திருந்தான்.
"உன்மீதான என் காதல் செத்துவிட்டது" என்று சொன்ன ரெட், மெலனியின் மரணத்தால் தான் மிகவும் உடைந்ததாகவும், தனது இளமையில் அறிந்த தெற்கின் அமைதியான கண்ணியத்தைத் தேடி அட்லாண்டாவை விட்டு வெளியேறப் போவதாகவும் எடுத்த முடிவைச் சொல்கிறான்.
ஸ்கார்லெட், "நான் உன் காதலை திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும்?" என்று கெஞ்சி அழும் போது, ரெட், "மை டியர், உன் இழப்பு எனக்கு துச்சம் " My dear, I don't give a damn என்ற உலகப் புகழ் பெற்ற வசனத்தை பேசிவிட்டு மாடிக்குச் சென்று விடுகிறான்.
காதல் துயரத்தில் மூழ்கிய ஸ்கார்லெட், தன் இந்த தோல்வியை ஏற்க மறுக்கிறாள், "நாளை ஒரு புதிய நாள்" என்ற நம்பிக்கையுடன் ரெட்டை மீண்டும் வெல்வதற்கான முடிவை எடுத்தவள்,தன் பண்ணையான டாராவிற்குத் திரும்பிச் செல்கிற தருணத்தில் படம் நிறைகிறது.
'Gone with the Wind' (1939) திரைப்படம், அதன் பிரம்மாண்டமான கலைத் தயாரிப்பினால் , தொழில் நுட்பம், நடிப்பு, இயக்கம் ஆகியவற்றால் அமெரிக்க சினிமா அகராதியாகத் திகழ்கிறது. விக்டர் ஃப்ளெமிங்கின் சிறப்பான இயக்கத்தில், உள்நாட்டுப் போரின் கொந்தளிப்பும் ஸ்கார்லெட்டின் அகப் போராட்டமும் ஒருசேர இப்படைப்பில் கையாளப்பட்டன.
நடிகர்களின் நடிப்பில் , விவியன் லேயின் ஸ்கார்லெட் கதாபாத்திரம், வஞ்சகம், கவர்ச்சி, பிடிவாதம் என உணர்ச்சிகளின் முழு வீச்சையும் காட்டியது; அதேபோல, கிளார்க் கேபிளின் ரெட் பட்லர் கதாபாத்திரம் ஆணவம், துணிவு, மற்றும் மறைக்கப்பட்ட அன்பு ஆகியவற்றின் கலவையாக உச்சம் தொட்டது.
அவர்கள் இருவருக்கும் திரையில் ஏற்பட்ட பொருத்தம் மறக்க முடியாதது. டெக்னிகலர் தொழில்நுட்பத்தின் புரட்சிகரமான வண்ணப் பயன்பாட்டிற்கு, எர்னஸ்ட் ஹாலரின் ஒளிப்பதிவு உயிர் கொடுத்தத, டாராவின் செம்மண்ணும், அட்லாண்டாவின் தீப்பிழம்புகளும் சினிமா ஓவியங்களாகவே மாறின.
மேக்ஸ் ஸ்டெய்னரின் கம்பீரமான இசை, காவியத்தின் உணர்ச்சிப் பெருக்குக்கும், அதன் பிரம்மாண்டமான காட்சி அமைப்பிற்கும் சரியான பின்னணியாக அமைந்தது.
இத்தனை சிறப்புகளால்தான், இத்திரைப்படம் பத்து ஆஸ்கர் விருதுகளை அள்ளியது, சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் ஆகியவை அடங்கும் அள்ளி, இன்றுவரை அமெரிக்க சினிமாவின் ஒரு மகத்தான அடையாளச் சின்னமாகவே போற்றப்படுகிறது.