பஞ்சவடி பாலம் Panchavadi Paalam 1984

ஒரு பாலம் கட்டப்படுவதற்கு முன் அது எத்தனை பேரின் கனவுகளையும் அரசியலையும் ஆசைகளையும் சுமக்கிறது?ஊழலுக்கு தீனிபோடுகிறது?

 கட்டப்பட்ட பிறகு அது  பாலமாகத்தான் இருக்கிறதா?மக்களுக்கு  பயனுள்ளதாக இருக்கிறதா?

 1984-ல் வெளியான கே. ஜி. ஜார்ஜின் பஞ்சவடி பாலம் இந்தக் கேள்விகளை நேரடியாகக் கேட்காமல், அரசியல் நையாண்டியின் கூர்மையான மொழியில் பார்வையாளருக்குள் எழுப்பும் திரைப்படம். 

வெறும் அரசியல்வாதிகளை கேலி செய்யும் நகைச்சுவைப் படமாக இதை அணுகிவிட்டால், அதன் உண்மையான தனித்துவத்தைத் தவறவிட நேரிடும். 

பொதுவாழ்க்கை, அதிகாரம், பதவி, ஊழல், தனிப்பட்ட பெருமை ஆகியவை ஒன்றோடொன்று கலந்துவிடும்போது உருவாகும் அபத்தத்தை மிக எளிமையாகவும் அதே நேரத்தில் மிகக் கடுமையாகவும் இந்தப் படம் அணுகுகிறது.

கே. ஜி. ஜார்ஜின் இயக்கத்தின் மிகப்பெரிய சிறப்பு, அவர் அரசியல் நையாண்டியைப் பிரசங்கமாக மாற்றாமல் இருப்பதுதான்.

 பார்வையாளரிடம் “இது தவறு” என்று நேரடியாகச் சொல்லுவதற்குப் பதிலாக, மனிதர்களின் செயல்பாடுகளையும் அதிகாரத்தின் இயல்பையும் பார்த்து அவர்களே சிரிக்கவும் சிந்திக்கவும் இடமளிக்கிறார்.

 அதனால் படத்தின் நகைச்சுவை மேலோட்டமான கேலியாகத் தோன்றாமல், சமூகத்தின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மாறுகிறது. 

அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், அதிகாரத்தைச் சுற்றி இயங்கும் மனிதர்களின் மனநிலையும் இந்த நையாண்டிக்குள் வருகிறது.

திரைக்கதை அமைப்பிலும் இந்தக் கட்டுப்பாடு தெரிகிறது. வேலூர் கிருஷ்ணன்குட்டியின் பாலம் அபகடத்தில் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதையில், அரசியல் சூழலை மிகைப்படுத்தியும் அதே நேரத்தில் நம்பத்தகுந்ததாகவும் காட்டும் அணுகுமுறை இருக்கிறது. 

கற்பனையான சூழல் என்ற உணர்வு இருந்தாலும், அதில் வெளிப்படும் மனிதர்களின் ஆசை, பதவி மீதான பற்றுதல், அரசியல் கணக்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தும் மனோபாவம் ஆகியவை மிகவும் பரிச்சயமானவையாகத் தோன்றுகின்றன. அதுவே நையாண்டிக்கு வலிமை தருகிறது.

துஷாசன குருப்பு (பரத் கோபி), சிகண்டி பிள்ளை (நெடுமுடி வேணு), ஈசாக் தரகன் (திலகன்) போன்ற கதாபாத்திரங்கள் வெறும் தனிநபர்களாக மட்டும் வடிவமைக்கப்படவில்லை.

 ஒவ்வொருவரின் பெயரும், நடையும், பேச்சும், அரசியல் அணுகுமுறையும் படத்தின் நையாண்டித் தன்மையை மேலும் கூர்மையாக்குகின்றன.

 புராணப் பெயர்களை சாதாரண அரசியல் சூழலுடன் இணைத்திருப்பதும் படத்தின் நகைச்சுவை மொழியின் தனித்துவமான பகுதியாகிறது.

 கதாபாத்திரங்கள் மிகைப்படுத்தப்பட்டவர்களாகத் தோன்றினாலும், அவர்கள் வெளிப்படுத்தும் மனித குணங்கள் முற்றிலும் நிஜமானவை என்பதால் நகைச்சுவைக்குள் ஒரு சிறிய அசௌகரியமும் உருவாகிறது.

நடிப்பில், பரத் கோபி தலைமையிலான நடிகர் குழு இந்த நையாண்டியின் நுணுக்கத்தை மிகச் சிறப்பாகத் தாங்குகிறது. 

ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான உடல்மொழி, பேச்சு நடை, முகபாவனை ஆகியவற்றுடன் உருவாகிறது.

 நெடுமுடி வேணுவின் சிகண்டி பிள்ளை கதாபாத்திரத்தில் காணப்படும் சூழ்ச்சி கலந்த நகைச்சுவையும், திலகனின் ஈசாக் தரகனில் காணப்படும் அரசியல் எதிர்வினையும்,  அரசியல்வாதியின் மனைவி பேராசைக்காரி ஸ்ரீவித்யா சுகுமாரி, ஜகதி ஸ்ரீகுமார், ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோரின் பங்களிப்பும் படத்தின் உலகத்தை உயிரோட்டமாக்குகின்றன.

 இங்கே நகைச்சுவை தனித்தனி வசனங்களில் மட்டும் இல்லை; நடிகர்கள் கதாபாத்திரங்களாக வாழும் விதத்திலேயே அது உருவாகிறது.

ஒளிப்பதிவில் ஷாஜி என். கருணின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அரசியல் நையாண்டி என்பதால் எல்லாவற்றையும் வசனங்களால் விளக்க வேண்டிய அவசியத்தை திரைப்படம் ஏற்றுக்கொள்ளவில்லை.

 காட்சிகளின் அமைப்பு, மனிதர்கள் இருக்கும் விதம், பொதுவிடங்களின் தோற்றம் ஆகியவற்றின் வழியாகவே அந்த உலகம் பார்வையாளருக்கு அறிமுகமாகிறது. 

இதனால் திரைப்படம் ஒரு மேடை நாடகத்தைப் போல வெறும் உரையாடல்களின் தொகுப்பாக மாறாமல், தனக்கென ஒரு காட்சிமொழியை உருவாக்குகிறது.

எம். என். அப்புவின் படத்தொகுப்பும் இந்த நையாண்டியின் ஓட்டத்திற்கு துணைபுரிகிறது. 

நகைச்சுவை காட்சிகளுக்கு இடையில் தேவையற்ற நீட்டிப்பு இல்லாமல், காட்சிகளின் தாக்கத்தைத் தக்கவைக்கும் வேகம் படத்திற்கு இருக்கிறது. அதே நேரத்தில் கதை சொல்லும் வேகம் வெறும் சிரிப்பைத் தொடர்ந்து உருவாக்குவதற்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை.

 ஒரு காட்சியின் அபத்தம் பார்வையாளருக்குள் பதிய வேண்டிய அளவுக்கு இடமும் கொடுக்கப்படுகிறது.

எம். பி. ஸ்ரீனிவாசனின் இசையும் சவ்வாலூர் கிருஷ்ணன்குட்டியின் பாடல்வரிகளும் திரைப்படத்தின் காலச்சூழலுக்கும் நையாண்டி உணர்வுக்கும் பொருந்துகின்றன. 

இசை காட்சிகளை வெறுமனே அலங்கரிப்பதற்காக பயன்படுத்தப்படாமல், படத்தின் ஒட்டுமொத்த மனநிலைக்கு துணை செய்கிறது. ஒலியும் காட்சியும் ஒன்றாகச் செயல்படுவதால் திரைப்படத்தின் அரசியல் நகைச்சுவைக்கு தனியான தாளம் கிடைக்கிறது.

கலை இயக்கம், உடைகள், கிராமப்புறச் சூழல் ஆகியவையும் படத்தின் உலகத்தை நம்பத்தகுந்ததாக உருவாக்குகின்றன. 

இவை கண்கவர் அலங்காரமாக முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. 

கதாபாத்திரங்கள் வாழும் சமூகச் சூழலை இயல்பாக உருவாக்குவதற்கான கருவிகளாகவே செயல்படுகின்றன. 

இதுவே திரைப்படத்தின் நையாண்டியை மேலும் நிஜமானதாக உணரச் செய்கிறது.

1984-ம் ஆண்டின் கேரள அரசியல் மற்றும் சமூகச் சூழலைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும், திரைப்படத்தின் பார்வை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அடைந்து போகவில்லை.

 அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டி, பொதுப்பணிகளில் அரசியல் தலையீடு, தனிப்பட்ட புகழுக்கான ஆசை, அதிகாரத்தைச் சுற்றி உருவாகும் நலன்கள் போன்றவை எந்தக் காலத்திலும் பொருந்தக்கூடிய மனித நடத்தைகளாக இருப்பதால், படம் பழையதாகத் தோன்றுவதில்லை. இதுவே அதன் நீண்ட ஆயுளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

திரைப்படத்தின் மிகப்பெரிய தனித்துவம், அது சிரிக்க வைக்கும் காட்சிகளுக்குள் சங்கடமான உண்மைகளை மறைத்து வைப்பதுதான்.

 பார்வையாளர் ஒரு தருணத்தில் சிரிக்கிறார்; அதே விஷயத்தைப் பற்றி சிறிது நேரம் யோசிக்கும்போது அந்தச் சிரிப்புக்குள் இருக்கும் கசப்பு புரிகிறது. 

நல்ல அரசியல் நையாண்டி செய்ய வேண்டியது இதுதான். அது கோபமாகப் பேசாமல் கோபத்தை உருவாக்க வேண்டும்; அறிவுரை வழங்காமல் கேள்விகளை எழுப்ப வேண்டும்.

இன்றும் பஞ்சவடி பாலம் கேரளப் பொதுவாழ்வில் அரசியல் ஊழல், நிர்வாக அலட்சியம் மற்றும் அபத்தமான பொதுக்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒரு கலாச்சார உவமையாகப் பயன்படுத்தப்படுவது, திரைப்படத்தின் தாக்கம் அதன் வெளியீட்டு காலத்தைத் தாண்டிச் சென்றிருப்பதைக் காட்டுகிறது. 

குறிப்பாக பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் தொடர்பான ஊழல் அல்லது கட்டுமானக் குறைபாடுகள் பற்றிய பொது விவாதங்களில் “பஞ்சவடி பாலம்” என்ற பெயர் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மலையாளத் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த அரசியல் நையாண்டிப் படங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது என்பதும், மலையாளத் திரையுலகில் இந்த வகை திரைப்படங்களுக்கு முன்னோடியாக அமைந்த படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது என்பதும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

பஞ்சவடி பாலம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதற்குக் காரணம் அதன் நகைச்சுவை மட்டும் அல்ல. சிரித்துக்கொண்டே ஒரு சமூகத்தின் அரசியல் மனநிலையைப் பார்க்கச் செய்யும் திறன்தான் அதன் உண்மையான பலம். 

இந்தப் படத்தின் மனிதர்களையும் அவர்களின் அரசியல் உலகத்தையும் எந்தவித முன் எதிர்பார்ப்புமின்றி நேரில் அனுபவிப்பதே சிறந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு திரைப்படம் இன்றும் பொருத்தமாகத் தோன்றுகிறது என்றால், அது காலம் மாறவில்லை என்பதற்காக மட்டுமல்ல; மனிதர்களின் அதிகார ஆசையும் அரசியலின் அபத்தங்களும் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கின்றன என்பதை  மிகத் துல்லியமாக இப்படைப்பு புரிந்துகொண்டிருக்கிறது என்பதற்காகவும் தான்.

===============================
படத்தின் கதை:-

ஐராவதிக்குழி என்ற கற்பனை  கிராமத்தில் துஷாசன குருப்பு (பரத் கோபி) ஊர் தலைவராக இருக்கிறார். பதவி இருக்கிறது, அரசியல் செல்வாக்கு இருக்கிறது; ஆனால் அதைவிட முக்கியமாக, தனது பெயர் எப்படியாவது ஒரு பெரிய பொதுப்பணியுடன் சேர்ந்து வர வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. 

கிராமத்தில் ஏற்கெனவே ஒரு பாலம் நன்றாகவே பயன்பாட்டில் இருக்கிறது. 

மக்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு அது போதுமானதாக இருந்தாலும், துஷாசன குருப்புவுக்கு அது போதவில்லை.

 ஏனென்றால் அந்தப் பாலம் அவருடைய பெயரைச் சொல்லவில்லை. ஆகவே நன்றாக இருக்கும் பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் ஒன்றைக் கட்டினால் எப்படி இருக்கும் என்று அவர் யோசிக்கிறார்.

இந்த உயர்ந்த எண்ணத்துக்கு துணையாக இருப்பவர் சிகண்டி பிள்ளை (நெடுமுடி வேணு). துஷாசன குருப்புவின் வலதுகரமான அவர், நேரான வழியில் செல்வதைவிட வளைந்து செல்வதில்தான் அரசியலின் சுவை இருப்பதாக நினைப்பவர். 

குருப்புவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஏற்கெனவே இருக்கும் பாலத்தை இடிக்கும் திட்டம் உருவாகிறது.

 பயன்பாட்டில் இருக்கும் பாலத்தை ஏன் இடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தாலும், அரசியலில் ஒரு கேள்விக்கு பதில் தேவைப்படுமா? புதிய பாலம் கட்ட வேண்டும் என்பதே பதிலாகி விடுகிறது.

ஆனால் இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஈசாக் தரகன் (திலகன்) அப்படியே விட்டுவிடவில்லை. 

துஷாசன குருப்புவின் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுடன், அதே வாய்ப்பைப் பயன்படுத்தி கிராமத் தலைவர் பதவியையும் கைப்பற்ற வேண்டும் என்ற அரசியல் கணக்கும் அவரிடம் இருக்கிறது. 

இதனால் பாலம் என்பது இனி மக்கள் ஆற்றைக் கடக்கப் பயன்படும் சாதாரணப் பொருள் அல்ல; ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் பாலமாகவும் மாறுகிறது.

இறுதியில் இரு தரப்பினரும் ஊழல் செய்து  பணம் சம்பாதிப்பதில்  சமரசத்துக்கு வருகின்றனர்,கை கோர்க்கின்றனர். 

ஏற்கெனவே இருக்கும் பாலத்தைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம்; புதிய பாலத்தை வெகு தொலைவில் வேறு இடத்தில் கட்டிவிடலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

 ஆனால் அங்கே பாலம் கட்டிவிட்டால் மக்கள் எப்படி செல்வார்கள்? அதற்கும் அரசியல் ஒரு அழகான தீர்வைக் கண்டுபிடிக்கிறது. 

பாலம் இருக்கும் இடத்துக்குச் செல்ல புதிய சாலையும் கட்ட வேண்டும். ஆகவே ஒரு பாலத்துடன் சேர்த்து ஒரு சாலையும் கிடைக்கிறது.

 மக்கள் கேட்டார்களா என்பது வேறு விஷயம்; ஆனால் பொதுப்பணி கிடைத்துவிட்டதே என்பதுதான் முக்கியம்.

அதன்பின் பாலத்துக்கான ஒப்பந்தம் ஒருவருக்கும், சாலைக்கான ஒப்பந்தம் இன்னொருவருக்கும் வழங்கப்படுகிறது.

 இருவரும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள். இதில் ஒருவர் ஆளும் கட்சியின் ஆதரவாளர்; மற்றொருவர் எதிர்க்கட்சியின் ஆதரவாளர்.

 இப்போது அரசியலிலும் சமநிலை, ஒப்பந்தங்களிலும் சமநிலை. பாலம் ஒரு தரப்புக்கு, சாலை இன்னொரு தரப்புக்கு. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய வகையில் பொதுப்பணியும் அரசியலும் ஒன்றுக்கொன்று கைகோர்க்கின்றன.

புதிய பாலம் ஒருவழியாக கட்டி முடிகிறது. அதைத் திறந்து வைக்கும் நாளும் சாதாரண நாளாக இருக்க முடியாது. 

அதே நாளில் துஷாசன குருப்புவின் மகளின் திருமணமும் நடைபெறுகிறது. அதுவும் யாருடன் தெரியுமா? அந்தப் பாலத்தைக் கட்டிய ஒப்பந்தக்காரருடன்தான். 

ஆகவே ஒரே நாளில் திருமணமும் பாலத் திறப்பும் நடைபெறுகின்றன. அரசியல்வாதிக்கு குடும்ப நிகழ்ச்சியும் பொதுப்பணியும் ஒன்றாக வந்தால் அதைவிடச் சிறந்த ஏற்பாடு வேறு என்ன இருக்க முடியும்?

திருமணத்துக்கு ஏராளமானவர்கள் வருகிறார்கள். பொதுப்பணித்துறை அமைச்சரும் வருகிறார்.

 இப்போது பாலத்துக்கு அதிகாரப்பூர்வமான முக்கியத்துவமும் கிடைத்துவிட்டது.

 திருமணத்துக்கு வந்தவர்கள் புதிய பாலத்தின் மீது நடந்து செல்கிறார்கள். ஒருவருக்குப் பிறகு ஒருவர் அல்ல; பலரும் ஒன்றாக அதன்மீது செல்கிறார்கள். அப்போதுதான் அந்தப் பாலம் தனது திறனை வெளிப்படுத்துகிறது.

அது மக்களை மறுகரைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவர்களுடன் சேர்ந்து கீழே விழுகிறது. 

மக்கள் நடந்து கொண்டிருக்கும்போதே பாலம் இடிந்து விழுகிறது. அந்த விபத்தில் உடல் ஊனமுற்ற காத்தவராயன் (ஸ்ரீனிவாசன்) உயிரிழக்கிறார். 

இத்தனை ஏற்பாடுகளுக்கும், அரசியல் கணக்குகளுக்கும், ஒப்பந்தங்களுக்கும், திறப்பு விழாவுக்கும் முடிவில் கிடைப்பது ஒரு உடைந்த பாலமும் ஒரு உயிரிழப்பும்.

கதை முடியும் நேரத்தில், பின்னணியில் அந்த உடைந்த பாலம் கிடக்கிறது. ஒருவருடைய பெயரை கல்வெட்டில்  பதிக்க வேண்டும் என்ற ஆசையில் தொடங்கிய திட்டம், ஏற்கெனவே நன்றாக இருந்த பாலத்தைத் தாண்டி, புதிய பாலம், புதிய சாலை, புதிய ஒப்பந்தங்கள், அரசியல் சமரசங்கள், திருமண விழா, அமைச்சரின் வருகை என பெரிதாக வளர்கிறது.

 இறுதியில் அந்தப் பாலத்தின் மீது மக்கள் நடக்கத் தொடங்கியவுடனேயே அது இடிந்து விழுகிறது; காத்தவராயன் உயிரிழக்கிறார். இவ்வளவு பெரிய ஏற்பாட்டின் இறுதிப் பயனாக, அங்கே நிற்க வேண்டிய பாலத்திற்குப் பதிலாக, உடைந்த பாலமே மிஞ்சுகையில் படம் நிறைகிறது.

கே. ஜி. ஜார்ஜின் தொடர் வெற்றிகளான யவனிகா (1982), லேகாயுடே மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (1983), ஆதமின்டே வாரியெல்லு (1984) ஆகியவற்றுக்குப் பிறகு, அவர் அரசியல் நையாண்டியைத் தேர்ந்தெடுத்து உருவாக்கிய படமே பஞ்சவடி பாலம். இது மலையாளத்தின் ஆரம்பகால முக்கிய அரசியல் நையாண்டிப் படங்களில் ஒன்று.

வேலூர் கிருஷ்ணன்குட்டியின் பாலம் அபகடத்தில் படைப்பைத் தழுவி, கே. ஜி. ஜார்ஜ் மற்றும் கேலிச்சித்திரக் கலைஞர் ஏசுதாசன் இணைந்து திரைக்கதை அமைத்தனர். அதனால் படத்தின் நகைச்சுவையில் கேலி, நையாண்டி, கூர்மையான சமூகக் கவனிப்பு ஆகியவை ஒன்றாகக் கலந்துள்ளன.

படத்திற்காகவே ஒரு உண்மையான பாலம் கட்டப்பட்டது. இதனால் பஞ்சவடி பாலம் கே. ஜி. ஜார்ஜின் அதிக செலவில் உருவான படமாக அமைந்தது.

படத்தின் முக்கியக் காட்சிக்காக கட்டப்பட்ட தற்காலிகப் பாலம் மிகவும் வலிமையாக இருந்ததால், திட்டமிட்டபடி தானாக இடியவில்லை. எனவே கலை இயக்குநரும் குழுவினரும் அதை நேரடியாக வெட்டி உடைத்தனர். பாலம் இடியும் காட்சி ஐந்து கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது.

அரசியல் ஊழல், நிர்வாக அலட்சியம், அபத்தமான பொதுப்பணித் திட்டங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் நையாண்டி உவமையாக “பஞ்சவடி பாலம்” என்ற பெயர் பின்னாளில் கேரளப் பொதுவாழ்வில் நிலைத்தது.

ஒரு நையாண்டிப் படத்துக்காக உண்மையிலேயே பாலம் கட்டி, அதைத் திரைப்படத்துக்காகவே உடைத்தது — இதுவே பஞ்சவடி பாலத்தின் தயாரிப்பு வரலாற்றில் நறுக்கென நினைவில் நிற்கும் மிகப்பெரிய சுவாரஸ்யம்.

#கீதப்ப்ரியன்மலையாளம்க்ளாஸிக்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (156) கமல்ஹாசன் (130) மலையாளம் (88) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)