தி கிரேட் கேட்ஸ்பி The Great Gatsby திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது.
பாஸ் லுஹ்ர்மன் இயக்கிய இத்திரைப்படம் வரலாற்று காதல் நாடக வகையைச் சேர்ந்த படைப்பு.
எப். ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டு எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கதை 1920களின் அமெரிக்க ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் பேராசைக்கு மத்தியில் நடக்கும் ஒருதலைக் காதலைப் பற்றி விவரிக்கிறது.
இத் திரைப்படத்தின் அடிநாதம் அடைய முடியாத ஒரு பழைய காதலுக்காகவும், போலி அந்தஸ்திற்காகவும் ஒரு மனிதன் நடத்தும் அவலமான போராட்டமே ஆகும்.
அமெரிக்கக் கனவு எனப்படும் செல்வச் செழிப்பின் உச்சத்தைத் தொட்டாலும், கடந்த காலத்தை மீட்டெடுக்க நினைக்கும் கேட்ஸ்பியின் தீராத ஆசையும், அவனது அதீத நம்பிக்கையுமே இக்கதையை வழிநடத்துகிறது.
ஆடம்பரமான விருந்துகள், வஞ்சகம், பேராசை நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில், உண்மையான காதல் என்ற மாயையை நோக்கி ஓடும் கேட்ஸ்பியின் ஏமாற்றமும், இறுதியில் அவனுக்கு நேரும் துயரமான முடிவுமே இந்த ஒட்டுமொத்த கதையின் ஆழமான கருப்பொருளாக விளங்குகிறது.
படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த லியோனார்டோ டிகாப்ரியோ தனது வசீகரமான நடிப்பால் கேட்ஸ்பி பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
அவருடன் நடித்த டோபி மாகுவேர் மற்றும் கேரி முல்லிகன் ஆகியோரும் தங்களின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்குனர் பாஸ் லுஹ்ர்மன் நவீன இசையையும் முப்பரிமாண தொழில்நுட்பத்தையும் நாவலின் கதையோடு கலந்து மிகவும் பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சைமன் டுகான் செய்துள்ள ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் வண்ணமயமாகவும் கண்களைக் கவரும் விதத்திலும் காட்சிப்படுத்தியுள்ளது.
இத்திரைப்படம் அதன் சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளுக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றதுடன் ஆஸ்திரேலிய மற்றும் பிரிட்டிஷ் அகாடமி விருதுகளையும் வாரிக்குவித்தது.
இத்திரைப்படத்தின் காட்சிகளை மேலும் மெருகூட்ட இயக்குனர் பாஸ் லுஹ்ர்மன் இதனை முப்பரிமாண அதாவது 3D தொழில்நுட்பத்தில் படமாக்க முதலில் திட்டமிட்டு பட்டறை நடத்தினார்.
நியூயார்க் பின்னணியைக் கொண்ட இக்கதையின் முதன்மைப் படப்பிடிப்பு முழுவதும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலேயே படமாக்கப்பட்டது.
அங்குள்ள செயின்ட் பேட்ரிக் செமினரி என்ற கல்லூரி கட்டிடம் கேட்ஸ்பியின் பிரம்மாண்ட மாளிகையாக மாற்றப்பட்டபோது, அந்தப் பகுதியில் இருந்த பனை மரங்கள் அனைத்தும் நியூயார்க் லாங் ஐலாண்ட் தோற்றத்தைக் கெடுக்காமல் இருக்க பின்னாடி கணினி கிராபிக்ஸ் மூலம் டிஜிட்டலாக நீக்கப்பட்டன.
ஆஷஸ்வேலி சாம்பல் பள்ளத்தாக்கான வறண்ட நிலப்பரப்பு சிட்னியின் பால்மெய்ன் பகுதியில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டது.
இதற்காக பயன்படுத்தப்பட்ட ரெட் எபிக் டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் ஜெய்ஸ் அல்ட்ரா பிரைம் லென்ஸ்கள் படத்தின் ஒவ்வொரு பிரேமையும் ஓவியம் போல மாற்றுவதற்குக் காரணமாக அமைந்தன.
இத்திரைப்படத்தின் இசையை உருவாக்குவதற்காக பிரபல பாப் பாடகர் ஜெய் இசட் மற்றும் தி புல்லிட்ஸ் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டனர்.
கதையின் காலமான 1922 ஆம் ஆண்டின் கிளாசிக் ஜாஸ் இசையையும், நவீன கால ஹிப் ஹாப் மற்றும் மின்னணு இசையையும் ஒன்றாகக் கலந்து ஒரு புதிய உலகத்தை உருவாக்க இயக்குனர் விரும்பினார்.
இப்படத்தின் முக்கிய பாடலான யங் அண்ட் பியூட்டிஃபுல் என்ற பாடலை இயக்குனர் பாஸ் லுஹ்ர்மன் மற்றும் பாடகி லானா டெல் ரே ஆகிய இருவரும் இணைந்தே எழுதினர்.
படத்தின் மற்றொரு முக்கிய பாடலான ஓவர் தி லவ் என்ற பாடலில் நாவலின் மிக முக்கிய குறியீடான க்ரீன் லைட் என்ற வார்த்தையை ஃபாரன்ஸ் அண்ட் தி மெஷின் குழுவினர் தங்களின் வரிகளில் சாதுரியமாகப் பயன்படுத்தினர்.
தி எக்ஸ் எக்ஸ் என்ற இசைக்குழுவினர் தங்களின் விரக்தியை வெளிப்படுத்தும் ஒரு பாடலுக்காக 60 பேர் கொண்ட மாபெரும் ஆர்கெஸ்ட்ரா குழுவைப் பயன்படுத்தி இசையமைத்தனர்.
புகழ்பெற்ற பாடகி பியான்சே மற்றும் ஆண்ட்ரே 3000 இணைந்து பாடிய பேக் டு பிளாக் என்ற ரீமேக் பாடலில் முற்றிலும் புதிய வகையான மின்னணு நடன இசை வடிவம் புகுத்தப்பட்டது.
இத்திரைப்படத்தின் ஆரம்பகட்ட உருவாக்கத்தின்போது, சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த நிலையை மாற்றி, வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் நிதியுதவி மற்றும் உலகளாவிய விநியோக உரிமையைக் கைப்பற்றியது.
படத்தில் டாம் புக்கானன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பிரபல நடிகர் பென் அஃப்லெக் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார், ஆனால் ஆர்கோ என்ற தனது சொந்தப் படத்தின் பணிகளால் ஏற்பட்ட நேர நெருக்கடி காரணமாக அவர் இதிலிருந்து விலக நேர்ந்தது.
அதேபோல ஜார்டன் பேக்கர் என்ற துணை கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போது, இயக்குனர் பாஸ் லுஹ்ர்மன் அதனை ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் நாடகப் பாத்திரத்தோடு ஒப்பிட்டு இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு மிகத் தீவிரமாக ஆய்வு செய்து புதுமுக நடிகையான எலிசபெத் டெபிக்கியைத் தேர்வு செய்தார்.
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன், மேயர் வுல்ஃப்ஷைம் என்ற பாத்திரத்தின் மூலம் தனது முதல் ஹாலிவுட் அறிமுகத்தைப் பெற்றார்.
இயக்குனர் மீது கொண்ட நட்பு மற்றும் மரியாதை காரணமாக இந்தத் திரைப்படத்தில் அவர் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் முற்றிலும் இலவசமாக நடித்துக் கொடுத்தார்.
இத்திரைப்படத்தின் நாயகி டெய்சி கதாபாத்திரத்திற்கான தேர்வு நடந்தபோது ஸ்கார்லெட் ஜோஹான்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர், ஆனால் ஜோஹான்சன் வேறொரு படத்தின் ஒப்பந்தம் காரணமாக இதிலிருந்து விலகினார்.
பின்னர் நியூயார்க்கில் நடந்த ஆடிஷனில் கேரி முல்லிகன் நடித்த காட்சிகளை சோனி பிக்சர்ஸ் அதிகாரிகளுக்கு இயக்குனர் காட்டியபோது அவர்கள் மிகவும் கவரப்பட்டனர்.
இதையடுத்து கேரி முல்லிகன் ஒரு விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் இருந்தபோது, அவருக்கு நேரடியாக தொலைபேசியில் அழைத்து ஹலோ டெய்சி புக்கானன் என்று கூறி இயக்குனர் வாய்ப்பை உறுதிப்படுத்தியதும் அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
ஆடை வடிவமைப்பில் 1920களின் உண்மையான ஆடை வரலாற்றை மாற்றி, நவீன 2010களின் கவர்ச்சியான பாணிக்கு ஏற்ப உடைகள் வடிவமைக்கப்பட்டன.
குறிப்பாக அந்த காலத்து தட்டையான மார்பு ஆடை வடிவமைப்பிற்கு மாறாக, டெய்சிக்கு புஷ் அப் பிரா போன்ற ஆடைகள் பயன்படுத்தப்பட்டது ஆடை வரலாற்று ஆசிரியர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
புரூக்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் ஆண்களுக்கான பிரத்யேக ஆடைகளையும், டிஃப்பனி அண்ட் கோ நிறுவனம் சுமார் 8,75,000 டாலர் மதிப்புள்ள பிளாட்டின வைர மோதிரம் உட்பட ஏழு ஆடம்பர நகைகளையும் படத்திற்காக பிரத்யேகமாக தயாரித்து வழங்கின.
திரைப்படத்தின் திரைக்கதையை எழுதிய பாஸ் லுஹ்ர்மன் மற்றும் கிரெய்க் பியர்ஸ் ஆகிய இருவரும் நாவலின் அசல் கதையிலிருந்து ஐந்து முக்கிய மாற்றங்களைச் செய்தனர்.
நாவலில் இல்லாதவாறு, கதையை விவரிக்கும் நிக் கேரவே ஒரு மனநல காப்பகத்திலிருந்து கேட்ஸ்பியைப் பற்றிய நினைவுகளை எழுதுவது போலவும், கேட்ஸ்பியின் மரணம் தனது காதல் வெற்றியடைந்துவிட்டது என்ற நம்பிக்கையோடு நிகழ்வது போலவும் திரைக்கதையை சுவாரஸ்யமாக மாற்றியமைத்தனர்.
படத்தின் தொடக்கக் காட்சியானது சிட்னி ஒலிம்பிக் மைதானத்திற்கு அருகில் உள்ள ரிவெண்டெல் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் மனநலப் பிரிவின் கட்டிடத்தில் படமாக்கப்பட்டது.
ஜே கேட்ஸ்பியாக நடித்த லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் நிக் கேரவேயாக நடித்த டோபி மாகுவேர் ஆகிய இருவரும் நிஜ வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், திஸ் பாய்ஸ் லைஃப் மற்றும் டான்ஸ் ப்ளம் ஆகிய படங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து நடித்த மூன்றாவது படமாக இது அமைந்தது.
படத்தின் இறுதி உருவாக்கத்திற்குப் பின், படத்தின் ஒரு காட்சியில் லியோனார்டோ டிகாப்ரியோ தனது கையில் மதுக்கோப்பையை ஏந்தி வாழ்த்து தெரிவிப்பது போன்ற ஒரு ஸ்டில் புகைப்படம் இணையதளங்களில் உலகப் புகழ்பெற்ற போஸாக மாறி இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது.
1974 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான 'தி கிரேட் கேட்ஸ்பி' திரைப்படம், ஜாக் கிளேட்டன் இயக்கத்தில், பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலாவின் திரைக்கதையில் ஒரு உன்னதமான காதல் காவியமாக உருவானது.
இத்திரைப்படத்தில் ஜே கேட்ஸ்பி கதாபாத்திரத்தில் ராபர்ட் ரெட்ஃபோர்டும், டெய்சி புக்கானனாக மியா ஃபாரோவும், நிக் கேரவேயாக சாம் வாட்டர்ஸ்டனும் நடித்திருந்தனர்.
2013 ஆம் ஆண்டின் இப்பதிப்பில் இருந்த அதீத பிரம்மாண்டம், அதிவேக எடிட்டிங் மற்றும் நவீன இசை ஆகியவற்றுக்கு முற்றிலும் மாறாக, இந்த 1974 ஆம் ஆண்டு பதிப்பானது 1920-களின் காலக்கட்டத்தை மிகவும் நிதானமாக, இயல்பான ஒளியமைப்புடன், மிக நேர்த்தியான நளினத்துடன் திரையில் கடத்தியது.
ஆடம்பர பார்ட்டிகள் மற்றும் ஜாஸ் இசையின் பின்னணியில் அமெரிக்கக் கனவின் போலித்தன்மையை இப்படம் ஆழமாக விவரித்தது.
விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், இப்படத்தின் அசாத்தியமான காஸ்டியூம் டிசைன் மற்றும் மியூசிக் ஸ்கோர் ஆகியவற்றிற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை அன்று வென்று சாதனை படைத்தது.
============================
படத்தின் கதை:-
நிக் கேரவே (டோபி மாகுவேர்) என்ற இளைஞன் கடந்த கோடைக் காலத்தில் நியூயார்க் நகரில் தான் கண்ட மனிதர்களின் பேராசை, வஞ்சகம் மற்றும் போலி வர்க்கப் பெருமையால் மனரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ஒரு மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்படுவதிலிருந்து இத்திரைப்படம் தொடங்குகிறது.
(அசல் நாவலில் நிக் நேரடியாகத் தனது கடந்த கால நினைவுகளை வாசகர்களிடம் விவரிப்பான்; ஆனால், திரைப்படத்திலோ அவன் அங்குள்ள மருத்துவரின் அறிவுரைப்படி, தன் மனபாரத்தைக் குறைப்பதற்காகத் தன் நினைவுகளை ஒரு கதையாகத் தன் கைகளால் எழுதத் தொடங்குவது போல ஒரு முக்கியக் கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.)
1922 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில், அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியைச் சேர்ந்த முதலாம் உலகப் போரின் வீரனான நிக், பத்திர விற்பனையாளராக வேலை தேடி நியூயார்க்கின் லாங் ஐலாண்டில் உள்ள வெஸ்ட் எக் கிராமத்தில் ஒரு சிறிய வாடகை வீட்டில் குடியேறுகிறான்.
அவனது வீட்டிற்கு மிக அருகில்தான், வாரம் முழுவதும் ஆயிரக்கணக்கான மனிதர்களை வரவழைத்து ஆடம்பரமாகப் பெரும் மாலை நேர விருந்துகளை நடத்தும், ஜே கேட்ஸ்பி (லியோனார்டோ டிகாப்ரியோ) என்ற மர்மமான மல்டி-மில்லியனரின் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற மாளிகை அமைந்துள்ளது.
(நாவலில் கேட்ஸ்பி யாரென்றே தெரியாமல் அவனுடன் சில நிமிடங்கள் சாதாரண உரையாடலை முடித்த பிறகே நிக் அவன் யார் என்பதைப் புரிந்து கொள்வான்.)
ஆனால் திரைப்படத்திலோ, பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகக் கேட்ஸ்பி பெரும் ஒளிவெள்ளத்திற்கும் பட்டாசு வெடிப்புகளுக்கும் நடுவே, ஜார்ஜ் கெர்ஷ்வினின் புகழ்பெற்ற இசை பின்னணியில் ஒலிக்க, மிகவும் கம்பீரமான முறையில் ஒரு பிரம்மாண்ட அறிமுகத்தோடு நிக் முன்னால் நேரடியாகத் தோன்றித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.
ஒரு மாலைப் பொழுதில், நிக் பாரம்பரியச் செல்வந்தர்கள் வாழும் ஈஸ்ட் எக் பகுதிக்குச் சென்று, தனக்குத் தூரத்து உறவினரான டெய்சி புக்கானன் (கேரி முல்லிகன்) மற்றும் அவளது கணவனான டாம் புக்கானன் (ஜோயல் எட்கர்டன்) ஆகியோரை அவர்களது மாளிகையில் சந்திக்கிறான்.
டாம், நிக்கின் கல்லூரித் தோழனும் முன்னாள் கால்பந்து நட்சத்திரமும் ஆவான்.
அங்கு, நிக் டெய்சியின் சிறு வயதுத் தோழியும், கோல்ஃப் சாம்பியனுமான ஜார்டன் பேக்கர் (எலிசபெத் டெபிக்கி) என்ற திமிர்பிடித்த இளம்பெண்ணைச் சந்திக்கிறான்.
டாமிற்கு மிர்ட்டல் வில்சன் (ஐஸ்லா ஃபிஷர்) என்ற பெண்ணுடன் கள்ள உறவு இருப்பதையும், அவள் "சாம்பல் பள்ளத்தாக்கு" (Valley of Ashes) எனப்படும் குப்பைகள் கொட்டும் வறுமையான பகுதியில் வசிப்பதையும் ஜார்டன் நிக்கிடம் ரகசியமாகக் கூறுகிறாள்.
(அசல் நாவலில் நிக் கேரவே மற்றும் ஜார்டன் பேக்கர் ஆகிய இருவருக்கு இடையே ஒரு தெளிவான காதல் ஊடாட்டமும் ஈர்ப்பும் இயல்பாக வளர்வதை நாம் காணலாம்.)
ஆனால் திரைப்படத்திலோ, நிக் முழுக்க முழுக்க கேட்ஸ்பியின் பிரம்மாண்ட உலகத்திலும் அவனது தூய்மையான காதலிலும் மயங்கிப் போய்விடுவதால், அவனால் ஜார்டனின் காதலைப் பெரிதாகக் கவனிக்க முடியாமல் அது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது.
அன்று இரவு, நிக் தன் வீட்டுப் புல்வெளியில் கேட்ஸ்பி தனியாக நின்று, ஆற்றின் மறுபுறம் டெய்சியின் படகுத்துறையில் இருந்து வரும் பச்சை நிற ஒளியை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை முதன்முதலாகக் காண்கிறான்.
கேட்ஸ்பி ஏன் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறான், எதற்காக வாரம் முழுவதும் பார்ட்டி நடத்துகிறான் என்றால், அதற்குப் பின்னால் அவனது தீராத காதல் இருக்கிறது.
ஐந்து வருடங்களுக்கு முன்பு அவனும் டெய்சியும் காதலித்தபோது கேட்ஸ்பி ஏழையாக இருந்ததால் அவளை அடைய முடியவில்லை.
இப்போது பெரும் செல்வத்தைச் சேர்த்து அவளை எப்படியாவது ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே அவளது வீட்டிற்கு நேர் எதிரே மாளிகை கட்டி அவன் காத்துக்கொண்டிருக்கிறான்.
சில நாட்களுக்குப் பிறகு, நிக் டாமோடு ரயிலில் நியூயார்க் நகரத்திற்குச் செல்லும்போது, வழியில் மெக்கானிக் ஜார்ஜ் பி வில்சன் (ஜேசன் கிளார்க்) மற்றும் அவனது மனைவி மிர்ட்டலின் கேரேஜில் நிறுத்துகிறார்கள்.
மிர்ட்டலும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, மூவரும் நியூயார்க்கில் டாம் அவளுடனான ரகசியக் சந்திப்புகளுக்காக வாடகைக்கு எடுத்துள்ள ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்புக்குச் செல்கிறார்கள்.
அங்கு நடக்கும் பார்ட்டியின் இறுதியில், மிர்ட்டல் டெய்சியின் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்ல, ஆத்திரமடைந்த டாம் அவளது முகத்தில் அடித்து மூக்கை உடைக்கிறான்.
பின்னர் ஜூலை மாத இறுதியில், நிக்கூம் கேட்ஸ்பியும் ஒரு ரகசிய மதுக்கடையில் மதிய உணவு அருந்தும்போது, கேட்ஸ்பியின் நிழல் உலகத் தொழில்களுக்குத் துணையாக இருக்கும் மேயர் வுல்ஃப்ஷைம் (அமிதாப் பச்சன்) என்ற மாஃபியா மனிதனை நிக் சந்திக்கிறான்.
( நாவலின் பின்னணியில் வுல்ஃப்ஷைம் கதாபாத்திரம் கடுமையான யூத எதிர்ப்புச் சாடல்களுடனும் இனவெறி சாயல்களுடனும் சித்தரிக்கப்பட்டிருக்கும்)
ஆனால் திரைப்படத்தில், அமிதாப் பச்சன் போன்ற உலகறிந்த ஒரு உன்னத கலைஞர் இக்கதாபாத்திரத்தை ஏற்கும்போதும், சமகால ரசிகர்களின் உணர்வுகளைக் கருத்தில் கொள்ளும்போதும், அந்த சர்ச்சைக்குரிய சாடல்கள் திரைக்கதையில் முற்றிலும் நீக்கப்பட்டு, ஒரு சக்திமிகுந்த மாஃபியா மனிதனாக மட்டுமே அவர் நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டார்.
கேட்ஸ்பி நிக்கின் உறவைப் பயன்படுத்தி, டெய்சியை நிக்கின் சிறிய வீட்டில் ஒரு தேநீர் விருந்திற்கு வரவழைத்து, ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவளை மீண்டும் சந்தித்தவன், தங்களின் பழைய காதலைப் புதுப்பித்துக் கொண்டு ஒரு கள்ள உறவைத் தொடங்குகிறான்.
செப்டம்பர் மாதத்தில், டாமின் முன்னிலையிலேயே டெய்சி கேட்ஸ்பியிடம் அலாதியான நெருக்கத்தைக் காட்ட, டாம் இவர்களின் கள்ள உறவை கண்டுபிடித்துவிடுகிறான்.
பின்னர், பிளாசா ஹோட்டலின் அறையில் சந்தித்த, கேட்ஸ்பியும் டாமும் இதைப் பற்றிக் கடுமையாக வாக்குவாதம் செய்கிறார்கள்.
தான் டாமை ஒருபோதும் காதலிக்கவில்லை என்று டெய்சி வாயால் சொல்லும்படி கேட்ஸ்பி வற்புறுத்துகிறான்.
ஆனால் டெய்சியோ, தான் டாம் மற்றும் கேட்ஸ்பி ஆகிய இருவரையுமே காதலிப்பதாகக் கூற, இந்த பாலிகமி உறவு இருவருக்குமே ஏமாற்றத்தை அளிக்கிறது.
கேட்ஸ்பி ஒரு ஏமாற்றுக்காரன் என்றும், அவனது பணம் அனைத்தும் சட்டவிரோதமாக மதுக் கடத்தல் செய்ததன் மூலம் வந்தது என்றும் டாம் அனைவர் முன்னிலையிலும் அம்பலப்படுத்தியவுடன், டெய்சி டாமோடு வாழவே முடிவெடுக்கிறாள்.
இவர்கள் காரில் ஈஸ்ட் எக் பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது, கடும் மன உளைச்சலில் இருக்கும் டெய்சி காரை ஓட்டுகிறாள்.
அப்போது எதிர்பாராதவிதமாக, சாலையில் ஓடிவரும் கணவன் டாமின் கள்ளக்காதலி மிர்ட்டல் மீது கார் மோதிவிடுகிறது, அவள் சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகிறாள்.
ஆனால், இந்த பழியைத் தன் மீது போட்டுக்கொண்டு காதலி டெய்சியைக் காப்பாற்ற நினைக்கிறான் கேட்ஸ்பி.
வஞ்சகம் கொண்ட டாம், மிர்ட்டலின் கணவனான ஜார்ஜிடம் சென்று, மிர்ட்டலைக் கொன்றது கேட்ஸ்பிதான் என்றும் அவன்தான் அவளது கள்ளக்காதலன் என்றும் பொய் சொல்லி அவனது ஆத்திரத்தைத் தூண்டிவிடுகிறான்.
இறுதியில், பழிவாங்கத் துடிக்கும் ஜார்ஜ், கேட்ஸ்பியின் மாளிகைக்குள் ரகசியமாக நுழைந்து அவன் நீச்சல் குளத்தில் இருக்கும்போது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானுமே தற்கொலை செய்துகொள்கிறான்.
( நாவலில் கேட்ஸ்பி மரணிக்கும்போது அவனது காதல் பற்றிய ஒருவித தெளிவற்ற, துயரமான நிலை மட்டுமே இருக்கும்)
ஆனால் இத் திரைப்படத்திலோ, அங்கு ஒரு மிக முக்கிய முரண்பாடான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கேட்ஸ்பி நீச்சல் குளத்தில் காதலி டெய்ஸிக்கு காத்துக்கொண்டிருக்கும்போது தன்னைத் தேடி வரும் தொலைபேசி அழைப்பு டெய்சியினுடையதுதான் என்றும், அவளது கணவனைத் துறந்துவிட்டு அவள் தன்னுடன் தான் இனி வாழப்போகிறாள் என்றும் அவன் தவறாக நினைத்துக் கொள்கிறான்.
தன் காதல் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டது என்ற மாபெரும் நம்பிக்கையுடனும், முகத்தில் ஒரு புன்னகையுடனும் அவன் மரணத்தைத் தழுவுகிறான்.
ஆனால் உண்மையில், அந்தத் தொலைபேசி அழைப்பைச் செய்தது டெய்சி அல்ல, அவனது ஒரே உண்மையான நண்பனான நிக் கேரவே தான்,துரோகியாகி இதை செய்துள்ளான்.
கேட்ஸ்பி இறந்த பிறகு அவனது தந்தை ஹென்றி காட்ஸ் இறுதிச்சடங்கிற்கு வருகிறார், ஆனால் அந்த ஆடம்பர விருந்துகளுக்கு வந்த ஒரு நபர் கூட அங்கே வரவில்லை.
செல்வமும் போலி அந்தஸ்தும் நிறைந்த மனிதர்களின் சுயநலத்தையும், டெய்சியின் துரோகத்தையும் கண்டு முற்றிலும் வெறுத்துப்போன நிக் நியூயார்க்கை விட்டு வெளியேறி, மனநலக் காப்பகத்தில் அமர்ந்து கேட்ஸ்பியின் கதையை எழுதி முடித்து, அதற்கு 'தி கிரேட் கேட்ஸ்பி' என்று பெயரிடுகையில் படம் நிறைகிறது.
இத்திரைப்படம் நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான செய்தி , எவ்வளவு பெரிய செல்வமும் போலி அந்தஸ்தும் ஒரு மனிதனிடம் இருந்தாலும், கடந்த காலத்தை ஒருபோதும் பணத்தால் விலைக்கு வாங்க முடியாது என்பதுதான்.
அமெரிக்கக் கனவு எனப்படும் உலகியல் ரீதியான பொருள் சேர்க்கும் பேராசை, மனிதர்களின் அசல் உணர்வுகளையும் உன்னதமான காதலையும் எவ்வாறு சிதைத்து விடுகிறது என்பதை இது நுட்பமாக படம் பிடித்துக் காட்டுகிறது.
கேட்ஸ்பி தன் காதலை அடைவதற்காகவே சட்டவிரோத வழிகளில் பெரும் செல்வந்தனாக மாறுகிறான். ஆனால், அவன் வாரி இறைத்த ஆடம்பரப் பார்ட்டிகளில் மது அருந்தி மகிழ்ந்த மனிதர்களில் ஒருவர்கூட, அவனது இறுதிப் பயணத்தில் துணையாக நிற்க வரவில்லை.
இந்த உலகம் எவ்வளவு சுயநலமானது மற்றும் போலித்தனமானது என்பதை அவனது தனிமை நமக்கு உணர்த்துகிறது.
அதே நேரத்தில், வஞ்சகம் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் கேட்ஸ்பியின் காதல் தூய்மையானதாக இருந்தாலும், மறைந்துபோன கடந்த காலத்தை மீட்டெடுக்க நினைக்கும் அவனது அதீத நம்பிக்கையும், பிடிவாதமும் இறுதியில் அவனையே அழித்துவிடுகிறது.
போலி அந்தஸ்தைத் துரத்தும் மனிதர்களின் உலகில், உண்மையான பாசத்திற்கும் நேர்மைக்கும் இடமில்லை என்ற கசப்பான யதார்த்தத்தையே நிக் கேரவேயின் விரக்தியின் மூலம் இத்திரைப்படம் நமக்கு ஆழமான செய்தியாகச் சொல்லிச் செல்கிறது.
#ஆஸ்கர்இரண்டாம்நூறு
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்