போரின் பயங்கரமும், ஆபத்தான சூழலும் மனித மனதிற்குள் எந்த மாதிரியான உளவியல் மாற்றங்களை உண்டாக்கும் என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
பயமும் பதற்றமும் நிறைந்த ஒரு சூழலைத் தன் அன்றாட வேலையாக ஏற்றுக்கொள்ளும் ஒருவனுக்கு, ஆபத்தே ஒரு போதையாக மாறினால் என்னவாகும்?
இத்தகைய ஆழமான கேள்விகளையும், போர்க்களத்தின் உண்மையான முகத்தையும் எவ்விதப் புனைவுகளும் இன்றி அதிர வைக்கும் அனுபவமாகத் தருகிறது 'தி ஹர்ட் லாக்கர்' (The Hurt Locker) 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.
'தி ஹர்ட் லாக்கர்' அமெரிக்க ராணுவத்தில் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பழைய வட்டார வழக்குச் சொல்லாகும்.
வியட்நாம் போர்க் காலத்திலிருந்தே படைவீரர்களின் உரையாடலில் புழக்கத்தில் இருக்கும் இந்தத் தொடருக்கு, மிதமிஞ்சிய காயம், கடுமையான வலி அல்லது மீள முடியாத பேரழிவு ஏற்படும் இடம் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
போர்க்களத்தில் ஒரு வீரர் வெடிப்பிலோ அல்லது தாக்குதலிலோ சிக்கி மிக மோசமாகக் காயமடைந்து உயிருக்குப் போராடும் நிலையை அடைந்தால், அவரை 'ஹர்ட் லாக்கருக்கு அனுப்பிவிட்டார்கள்' என்று குறிப்பிடுவது ராணுவ வழக்கமாக இருந்தது.
இத்திரைப்படத்தில் இந்த தலைப்பு வெறும் உடல் சார்ந்த காயங்களை மட்டும் குறிக்காமல், வீரர்களின் ஆழமான மன உளைச்சலையும் குறிக்கும் படிமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் வீரர்கள் ஒவ்வொரு நொடியும் மரணத்தின் விளிம்பில் நின்று பணியாற்றுகிறார்கள்.
எந்த நொடியிலும் தங்களின் வாழ்க்கை முடிந்துபோகலாம் என்ற உச்சகட்ட பயமும், அந்த ஆபத்தான சூழல் அவர்களுக்குள் ஏற்படுத்தும் சொல்ல முடியாத உளவியல் அழுத்தமும் அவர்களை ஒரு முடக்க நிலைக்குத் தள்ளுகிறது. இத்தகைய ஆபத்தும் வேதனையும் நிறைந்த மனநிலையை உணர்த்துவதற்காகவே இயக்குநர் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஈராக் போரின் பின்னணியில் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் ராணுவப் படைப்பிரிவின் பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம், வழக்கமான ஹாலிவுட் போர்ப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பார்வையாளர்களை நேரடியாகப் போர்க்களத்தின் மையப்பகுதிக்கு அழைத்துச் செல்கிறது.
இயக்குநர் காத்தரின் பிகெலோவின் மேதைமைதான் இந்தத் திரைப்படத்தின் மிகப்பேரிய பலம்.
போரை ஒரு அரசியல் ரீதியான களமாகவோ அல்லது வழக்கமான தேசபக்திச் பிரச்சாரமாகவோ அணுகாமல், களத்தில் நிற்கும் வீரர்களின் தனிப்பட்ட மனப்போராட்டமாகவும் உணர்ச்சிப் போராட்டமாகவும் மட்டுமே அவர் காட்டியுள்ளார்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மார்க் போல் எழுதிய திரைக்கதை, எவ்விதச் செயற்கைத் தனமும் இன்றி அதிமுக்கியத்துவத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆபத்தான சூழல் நிலவும்போது, அங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் எத்தகைய படபடப்பை உருவாக்கும் என்பதைப் பார்வையாளர்கள் தங்கள் சொந்த அனுபவமாக உணரும் வகையில் கதை சொல்லும் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கதாபாத்திரங்களின் உருவாக்கம் இத்திரைப்படத்திற்கு அளப்பரிய ஆழத்தைச் சேர்க்கிறது. முக்கியக் கதாபாத்திரத்தில் வரும் வில்லியம் ஜேம்ஸ் (ஜெரெமி ரென்னர்), ஆபத்தைப் பொருட்படுத்தாத துணிச்சலும், வெடிகுண்டுகளைக் கையாளுவதில் தனித்துவமான அணுகுமுறையும் கொண்டவராக மிளிர்கிறார்.
அவருக்கு ஈடாக, விதிகளையும் பாதுகாப்பையும் முதன்மையாகக் கருதும் ஜே. டி. சான்போர்ன் (அந்தோனி மேக்கி), மன உளைச்சலாலும் குற்ற உணர்ச்சியாலும் தவிக்கும் ஓவன் எல்ட்ரிட்ஜ் (பிரியன் கெராக்டி) ஆகிய கதாபாத்திரங்கள் ராணுவத்திற்குள் இருக்கும் வெவ்வேறு மனித இயல்புகளைப் பிரதிபலிக்கின்றன.
இவர்கள் மூவருக்கும் இடையேயான கருத்தியல் மோதல்களும், பதற்றமான சூழலில் அவர்கள் இணைந்து செயல்படும் விதமும் கதாபாத்திரங்களின் அழுத்தமான நடிப்பால் மேலும் மிளிர்கின்றன.
தொழில்நுட்ப ரீதியாக இத்திரைப்படம் உலகத் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் என்றே சொல்லலாம்.
ஒளிப்பதிவாளர் பாரி ஆக்ராய்டின் கச்சிதமான கேமரா நகர்வுகள், போர்க்களத்தில் நாமே நேரில் நிற்பது போன்ற உணர்வைத் தருகின்றன. பல கேமராக்களைப் பயன்படுத்தி, ஒரே சம்பவத்தை வெவ்வேறு கோணங்களில் படமாக்கியிருப்பது காட்சிகளின் தீவிரத்தை உயர்த்துகிறது.
அதேபோல, பாப் முராவ்ஸ்கி மற்றும் கிறிஸ் இன்னிஸ் ஆகியோரின் படத்தொகுப்பு, தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்து, ஹிட்ச்காக் பாணி உச்சக்கட்ட பதற்றத்தை ஒவ்வொரு காட்சியிலும் தடையின்றித் தக்கவைக்கிறது.
ஒலியமைப்பாளர் பால் என். ஜே. ஓட்டோசனின் ஒலி வடிவமைப்பு, சுற்றியிருக்கும் நிசப்தத்தையும், மெல்லிய அதிர்வுகளையும் கூட மிகத் தெளிவாகப் பதிவு செய்து, பார்வையாளரின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது.
அரபு நாட்டின் ஜோர்டான் பகுதியில், உண்மையான ஈராக் எல்லைக்கு மிக அருகில், சுட்டெரிக்கும் கடும் வெப்பத்தில் படமாக்கப்பட்டிருப்பது இதன் இயல்புத்தன்மைக்குச் சான்றாக அமைகிறது.
உண்மையான அகதிகளைப் பின்னணி நடிகர்களாகப் பயன்படுத்தியதும், ராணுவ சீருடைகள் மற்றும் வெடிகுண்டு உடைகளின் துல்லியமான பயன்பாடும் படத்திற்கு மேலும் நம்பகத்தன்மையை வழங்குகின்றன.
போரின் வடுக்கள், மனித உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் மற்றும் மரணத்தின் நிழலில் வாழும் மனிதர்களின் உளவியல் சார்ந்த உண்மைகளை இத்திரைப்படம் மிகவும் கூர்மையாக விவாதிக்கிறது.
உலகளவில் விமர்சகர்களின் பேராதரவைப் பெற்ற இத்திரைப்படம், ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை உள்பட ஆறு முக்கிய விருதுகளை அள்ளிக் குவித்தது.
ஆஸ்கர் வரலாற்றிலேயே சிறந்த இயக்குநர் விருதை வென்ற முதல் பெண் இயக்குநர் என்ற வரலாற்றுச் சாதனையை காத்தரின் பிகெலோ இதன் மூலம் படைத்தார்.
அமெரிக்க தேசிய திரைப்படப் பதிவேட்டிலும் பாதுகாக்கப்பட வேண்டிய கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த படமாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
'தி ஹர்ட் லாக்கர்' என்பது வெறும் திரைப்படமல்ல;
அது பார்வையாளர்களின் நரம்புகளை முறுக்கேற்றும் ஒரு அழுத்தமான அனுபவம்.
போரின் உண்மையான தீவிரத்தையும், ஆபத்தின் மத்தியில் மனித மனம் எடுக்கும் விசித்திரமான வடிவத்தையும் உணர்ந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாகத் தவறவிடக் கூடாத ஒரு காவிய படைப்பு இது.
திரைமுன்னால் அமரும் உங்களை, கடைசி நொடி வரை இருக்கையின் நுனியிலேயே வைத்திருக்கும் வல்லமை இதற்கு உண்டு.
===============================
படத்தின் கதை:-
ஈராக் போரின் இரண்டாம் ஆண்டின் போது, அமெரிக்க ராணுவத்தின் வெடிபொருள் அகற்றும் படைப்பிரிவான 'பிராவோ கம்பெனி'யின் ஒரு குழு ஈராக்கில் செயல்பட்டு வருகிறது.
அந்தப் படையில் உள்ள எக்ஸ்ப்ளோசிவ் ஆர்ட்னன்ஸ் டிஸ்போசல் (EOD) குழுவினர், வீதியோரம் வைக்கப்பட்டிருந்த ஒரு வெடிபொருளை (IED) அடையாளம் கண்டு, அதை ஒரு ரோபோ மூலமாகச் செயலிழக்கச் செய்ய முயற்சிக்கின்றனர்.
ஆனால், அந்த ரோபோவில் வெடிபொருளை வெடிக்க வைக்கும் முதன்மைப் பொருளைச் சுமந்து செல்லும் சிறிய வண்டி திடீரென பழுதடைந்து முடங்குகிறது.
இதனால் வேறு வழியின்றி, அந்தப் படையின் தலைவரான ஸ்டாஃப் செர்ஜண்ட் மேத்யூ தாம்சன் (கை பியர்ஸ்) ஆபத்தான அந்த வெடிபொருளைத் தனது கையாலேயே நேரில் சென்று வைக்கத் தொடங்குகிறார்.
அவர் அதை வைத்துக்கொண்டிருக்கும் போதே, தூரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த ஒரு ஈராக்கிய கிளர்ச்சியாளன் தனது கைப்பேசியைப் பயன்படுத்தி அந்த வெடிபொருளைத் தூரத்திலிருந்தே வெடிக்கச் செய்கிறான்.
இந்தத் திடீர் வெடிப்பில் தாம்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்கிறார். அவருடன் ரோந்துப் பணியில் இருந்த ஸ்பெஷலிஸ்ட் ஓவன் எல்ட்ரிட்ஜ் (பிரியன் கெராக்டி), கைப்பேசியை வைத்திருந்த அந்த நபரைச் சுட்டுக்கொல்லத் தவறியதால் தான் தாம்சன் இறந்தார் என்று கருதி, விபரீதமான குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார்.
இறந்துபோன தாம்சனுக்குப் பதிலாக, புதிய தலைவராக செர்ஜண்ட் ஃபர்ஸ்ட் கிளாஸ் வில்லியம் ஜேம்ஸ் (ஜெரெமி ரென்னர்) அந்தப் படைப்பிரிவுக்கு வருகிறார்.
அவர் வெடிபொருள்களைக் கையாளுவதில் மிகவும் வித்தியாசமான மற்றும் ஆபத்தான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார்.
வெடிபொருள்களைச் செயலிழக்கச் செய்யும் போது பாதுகாப்புக் கருவிகளைவிடத் தனது சொந்தக் கைகளையே அதிகம் நம்புகிறார்.
மேலும், தான் என்ன செய்யப்போகிறேன் என்பதைத் தனது சக வீரர்களிடம் முன்கூட்டியே தெளிவாகத் தெரிவிப்பதில்லை. இதனால், அவருடன் பணியாற்றும் செர்ஜண்ட் ஜே. டி. சான்போர்ன் (அந்தோனி மேக்கி) என்பவருடன் ஜேம்ஸுக்குத் தொடர்ச்சியாக மோதல்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படுகின்றன.
ஒருமுறை, ஒரு வெடிபொருளை அணுகிச் செல்லும்போது சான்போர்னின் பார்வையை மறைக்கும் வகையில் ஜேம்ஸ் புகை குண்டுகளைப் வீசி எறிகிறார்.
பின்னர், அருகில் இருக்கும் ஒரு ஈராக்கிய கிளர்ச்சியாளன் 9-வோல்ட் பேட்டரியைப் பயன்படுத்தி அதை வெடிக்க வைப்பதற்குச் சில நொடிகள் மட்டுமே இருந்த நிலையில், ஜேம்ஸ் அந்த வெடிபொருளைத் திறம்படச் செயலிழக்கச் செய்கிறார்.
மற்றொரு சம்பவத்தில், சிக்கலான அமைப்பைக் கொண்ட ஒரு கார் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய ஜேம்ஸ் பிடிவாதமாக முயற்சிக்கிறார்.
அதற்கு அதிக நேரம் ஆகிறது என்றும், அது ஆபத்தானது என்றும் சான்போர்ன் கண்டித்துக் கூறுகிறார். ஆனால் ஜேம்ஸ், சான்போர்னின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தனது ஹெட்செட்டைக் கழற்றி எறிந்துவிட்டுத் தனது முடிவிலேயே தீவிரமாக இருக்கிறார்.
ஜேம்ஸின் இந்தத் தன்னிச்சையான மற்றும் ஆபத்தான நடத்தை சான்போர்னுக்குப் பெரும் கவலையையும் அச்சத்தையும் அளிக்கிறது.
இதனால் ஒரு நாள், முகாமிற்கு வெளியே பயன்படுத்தப்படாத வெடிபொருள்களை வெடித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, ஜேம்ஸை 'பிராக்கிங்' முறையில் (தற்செயலான விபத்து போலக் காட்டி சக வீரரைக் கொல்வது) கொன்றுவிடலாமா என்று சான்போர்ன் எல்ட்ரிட்ஜிடம் வெளிப்படையாகவே ஆலோசிக்கிறார்.
பணி முடிந்து அவர்கள் தங்கள் ராணுவ முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில், ஒரு எஸ்.யு.வி காரின் டயர் பஞ்சராகி நிற்பதையும், அதைச் சுற்றி ஈராக்கிய உடையில் ஐந்து ஆயுதம் ஏந்திய நபர்கள் இருப்பதையும் காண்கிறார்கள்.
ஆரம்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவினாலும், அவர்கள் அனைவரும் தங்களுக்கு ஆதரவான பிரிட்டிஷ் தனியார் ராணுவ படையினர் என்பதை ஜேம்ஸ் அறிந்துகொள்கிறார்.
அவர்களுக்கு உதவியாக டயரை மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், திடீரென எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு (ஸ்னைப்பர் ஃபயர்) இலக்காகிறார்கள்.
இந்தத் தாக்குதலில் பிரிட்டிஷ் படையினர் மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்படுகிறார்கள்.
உடனே ஜேம்ஸும் சான்போர்னும் நிலைமையைக் கையிலெடுத்து, எதிரிகளை நோக்கியத் தாக்குதலைத் தொடங்குகிறார்கள். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மூவரைச் சுட்டுக் கொல்கிறார்கள்.
அதே நேரத்தில், அவர்களின் நிலையை மறைமுகமாகத் தாக்க முயன்ற நான்காவது கிளர்ச்சியாளனை எல்ட்ரிட்ஜ் சுட்டுக் கொல்கிறார்.
இதனிடையே, ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அங்கு ஒரு சிறுவனின் உடலில் வெடிபொருள்கள் தைக்கப்பட்டு 'பாடி பாம்' ஆக மாற்றப்பட்டிருப்பதை ஜேம்ஸ் கண்டுபிடிக்கிறார்.
அந்தச் சிறுவன், ராணுவ முகாமிற்கு வெளியே டிவிடி விற்றும் கால்பந்து விளையாடிக்கொண்டும் இருக்கும் பெக்காம் (கிறிஸ்டோபர் சயேக்) என்ற ஈராக்கியச் சிறுவன் என ஜேம்ஸ் தவறாக நம்புகிறார்.
அங்கு நடக்கும் வெளியேற்றப் பணியின் போது, முகாமின் மனநல மருத்துவராகவும் எல்ட்ரிட்ஜின் ஆலோசகராகவும் இருக்கும் லெப்டினன்ட் கர்னல் ஜான் கேம்ப்ரிட்ஜ் (கிரிஸ்டியன் கமார்கோ) எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு வெடிப்பில் உயிரிழக்கிறார்.
இது எல்ட்ரிட்ஜை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. சிறுவன் பெக்காமின் மறைவால் உடைந்த ஜேம்ஸ், அந்தச் சிறுவனின் உடலை வைத்துச் சதி செய்தவர்களைக் கண்டுபிடிக்க நினைக்கிறார்.
அதனால், முகாமில் இருந்து யாருக்கும் தெரியாமல் இரவில் திருட்டுத்தனமாக வெளியேறுகிறார்.
பெக்காமின் கூட்டாளி எனச் சந்தேகிக்கப்படும் ஒருவனைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, பெக்காமின் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கட்டாயப்படுத்துகிறார்.
ஆனால், அவன் ஜேம்ஸை ஒரு சம்பந்தமில்லாத ஈராக்கிய பேராசிரியரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறான். ஆபத்தை உணர்ந்த ஜேம்ஸ் அங்கிருந்து தப்பித்து முகாமிற்கு வந்து சேர்கிறார்.
அடுத்ததாக, ஒரு டேங்கர் லாரி வெடிக்கப்பட்ட இடத்திற்கு அழைக்கப்பட்ட ஜேம்ஸ், வெடிபொருளைச் செயலிழக்கச் செய்த கையோடு நின்றுவிடாமல், அதற்கு காரணமான கிளர்ச்சியாளர்களை அருகிலேயே தேடிப் பிடிக்க முடிவு செய்கிறார்.
சான்போர்ன் அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். இருப்பினும் ஜேம்ஸ் தனியாகத் தேடுதல் வேட்டையைத் தொடங்கவே, சான்போர்னும் எல்ட்ரிட்ஜும் வேறு வழியின்றி அவரைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள்.
தேடுதலின் போது அவர்கள் தனித்தனியாகப் பிரிய நேரிடுகிறது. அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் எல்ட்ரிட்ஜைப் பிடித்துக் கடத்திச் செல்கிறார்கள்.
ஜேம்ஸும் சான்போர்னும் உடனடியாகச் செயல்பட்டுப் போராடி எல்ட்ரிட்ஜை மீட்கிறார்கள்.
ஆனால், அந்தப் மோதலின் போது எல்ட்ரிட்ஜின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பலத்த காயமடைகிறார். மறுநாள் காலையில், இறந்துவிட்டதாக ஜேம்ஸ் நினைத்த சிறுவன் பெக்காம் உயிருடனும் நலமாகவும் ஜேம்ஸை அணுகுகிறான்.
ஆனால், ஜேம்ஸ் அவனைக் கண்டுகொள்ளாமல் மௌனமாக அவனைக் கடந்து சென்றுவிடுகிறார்.
காலில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் போது, எல்ட்ரிட்ஜ் கோபத்துடன் தான் காயமடைந்ததற்கு ஜேம்ஸின் பொறுப்பற்ற முடிவே காரணம் என்று அவர் மீது பழியைச் சுமத்துகிறார்.
அவர்களின் களம் சார்ந்த பணி முடியும் நாளுக்கு முதல் நாள், ஒரு மனிதனின் விருப்பத்திற்கு மாறாக அவனது உடலில் பூட்டப்பட்டிருந்த வெடி குண்டு உடையைச் செயலிழக்கச் செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு வருகிறது.
ஜேம்ஸ் அந்த மனிதனைக் காப்பாற்றப் போராடுகிறார். ஆனால், வெடிகுண்டின் டைமர் முடிவதற்குள் அதன் பூட்டுகளை வெட்டி அகற்ற முடியாததால், வேறு வழியின்றி அந்த மனிதனைக் கைவிட்டுவிட்டு அவர்கள் தப்பித்து ஓட வேண்டியதாகிறது.
அந்த மனிதன் வெடித்துச் சிதறுகிறான். இந்த மரண விளிம்பு அனுபவத்தால் சான்போர்ன் மிகவும் மனமுடைந்து போகிறார்.
தான் இறந்தால் தனது பெற்றோரைத் தவிர வேறு யாரும் அழுவதற்குக் கூட ஆளில்லை என்று வருந்தும் சான்போர்ன், ஒரு மகனைப் பெற்றெடுத்து குடும்பத்தோடு வாழ விரும்புவதால், இந்த ராணுவச் சேவையிலிருந்து விலக விரும்புவதாக ஜேம்ஸிடம் கூறுகிறார்.
பிராவோ கம்பெனியின் சேவைக்காலம் முடிவடைந்ததும், ஜேம்ஸ் அமெரிக்காவிற்குத் திரும்பி தனது முன்னாள் மனைவி கானி (இவாஞ்சலின் லில்லி) மற்றும் அவர்களின் கை குழந்தையுடன் வசித்து வருகிறார்.
இருப்பினும், வீட்டில் இருக்கும் சாதாரண, அமைதியான சிவிலியன் வாழ்க்கை அவருக்கு எந்தவித மனநிறைவையும் அளிக்கவில்லை;
அது அவருக்கு சலிப்பூட்டுகிறது. ஒரு நாள், தான் உண்மையிலேயே நேசிக்கும் ஒரே விஷயம் போரும் அதன் ஆபத்துகளும் மட்டும்தான் என்று தனது குழந்தையிடம் ஜேம்ஸ் மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து, சிவிலியன் வாழ்க்கையைத் துறந்து, 'டெல்டா கம்பெனி' என்ற புதிய படைப்பிரிவுடன் மீண்டும் ஒரு வருட காலப் போர்ப் பணிக்காக ஈராக்கிற்குத் திரும்புகையில் படம் நிறைகிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு
#கீதப்ப்ரியன்ஹாலிவுட்