ரோமா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. ஆஸ்கார் விருது பெற்ற புகழ்பெற்ற இயக்குநர் அல்போன்சோ குவாரன் (Alfonso Cuarón) இப்படத்தை இயக்கியுள்ளார். இது அவரது சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மிகச்சிறந்த கலைப்படைப்பாகும்.
மெக்சிகோ நகரத்தின் நடுத்தர வர்க்கக் குடியிருப்பில் 1970 களின் தொடக்கத்தில் ஒரு பணிப்பெண்ணின் வாழ்வை மிக நெருக்கமான சித்திரமாக இப்படம் முன்வைக்கிறது.
ஒரு தேசத்தின் அரசியல் மாற்றங்களையும் ஒரு குடும்பத்தின் சிதைவையும் ஒரே புள்ளியில் இணைத்து ஒரு காவியத் தன்மையுடன் கதை தொடங்குகிறது.
மொழிகளைக் கடந்து மானுட உணர்வுகளின் உலகளாவிய மொழியைப் பேசுவதால் இது உலக சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.
மிக நுணுக்கமான வாழ்வியல் பதிவுகளை ஒரு கலைப் படைப்பாக மாற்ற முடியும் என்பதை உலகிற்கு மெய்ப்பித்துக் காட்டியது.
வெறுமனே ஒரு பெண்ணின் துயரத்தைச் சொல்லாமல் அவள் சார்ந்திருக்கும் சமூகத்தின் வர்க்க முரண்பாடுகளையும் அதிகாரப் படிநிலைகளையும் இப்படம் விமர்சிக்கிறது.
இப்படத்தின் அடிநாதம் மௌனமான தாங்குதிறன் மற்றும் அதிகாரமற்றவர்களின் ஆதிக்கமற்ற அன்புமே ஆகும். சமூகம் ஒரு பெண்ணை அவளது வர்க்கம் மற்றும் இன அடையாளத்தைக் கொண்டு மதிப்பிட்டாலும் அந்தப் பெண் தனக்குள் கொண்டிருக்கும் எல்லையற்ற கருணையே இவ்வுலகைத் தாங்கிப் பிடிக்கிறது என்பதை இந்தப் படம் அடிநாதமாகக் கொண்டுள்ளது.
கிளியோ என்ற கதாபாத்திரம் ஒருபோதும் உரத்துப் பேசுவதில்லை அல்லது தன் உரிமைகளுக்காகப் போராடுவதில்லை. ஆனால் அந்த வீட்டின் ஒவ்வொரு அசைவிலும் அவளது உழைப்பும் மௌனமான இருப்பும் கலந்திருக்கிறது.
ஒரு பக்கம் மெக்சிகோ தேசமே அரசியல் ரீதியாகவும் வன்முறை ரீதியாகவும் கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது கிளியோவின் உலகம் தன் அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பதிலேயே சுழல்கிறது.
இந்த அமைதியான அர்ப்பணிப்புதான் சிதைந்து போகும் ஒரு குடும்பத்தை மீண்டும் ஒட்டவைக்கும் சக்தியாக மாறுகிறது.
மேலும் இந்தப் படைப்பு இருப்பு மற்றும் மறைவு ஆகியவற்றின் முரண்பாடுகளைத் தொட்டுச் செல்கிறது.
அன்டோனியோ அந்த வீட்டின் தலைவராக இருந்தும் அவரது பிரிவு அக்குடும்பத்தை நிலைகுலையச் செய்யவில்லை. மாறாக அதிகாரமோ அந்தஸ்தோ இல்லாத கிளியோவின் இருப்புதான் அக்குடும்பத்தை முற்றிலுமாக அழிந்துவிடாமல் காக்கிறது.
ஒரு குழந்தையின் மரணத்தையும் ஒரு தந்தையின் துரோகத்தையும் ஒரு பெண் எப்படித் தன் மௌனத்தாலேயே எதிர்கொண்டு மீள்கிறாள் என்பதுதான் இப்படத்தின் ஆன்மா.
தாய்மை என்பது வெறும் உயிரியல் சார்ந்தது மட்டுமல்ல அது ஒரு பாதுகாக்கும் உணர்வு என்பதையும் இப்படம் நுணுக்கமாக உணர்த்துகிறது.
தனக்குப் பிறக்கவிருந்த குழந்தையை இழந்த கிளியோ பிறிதொரு தாயின் குழந்தைகளைக் காக்கத் தன் உயிரைப் பணயம் வைக்கும்போது அவள் ஒரு உன்னதமான நிலையை அடைகிறாள்.
இந்தத் தியாகமும் அதன் வழியே கிடைக்கும் மன விடுதலையுமே இப்படத்தின் ஆழமான தத்துவமாக ஒளிர்கிறது. சுருக்கமாகச் சொன்னால் ஆர்ப்பாட்டமில்லாத அன்பின் வழியே ஒரு பெண் அடையும் அக எழுச்சியே ரோமா படத்தின் அடிநாதம்.
மௌனமான காட்சிகளின் வழியாகவே ஆழமான அரசியல் கருத்துகளைக் கடத்தும் பாணி இதன் தனிச்சிறப்பு.
ஒரு இயக்குநராகத் திரைக்கதை வசனம் மற்றும் படத்தொகுப்பு என அனைத்துத் துறைகளிலும் தனது முழுமையான ஆளுமையைச் செலுத்தி ஒரு செழுமையான படைப்பை உருவாக்கியுள்ளார்.
கறுப்பு வெள்ளை வண்ணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்ட விதம் ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது.
மிக நீண்ட காட்சிகளும் கேமரா நகரும் விதமும் பார்வையாளர்களை அந்த 1970 களின் மெக்சிகோ தெருக்களுக்குள் நேரடியாக அழைத்துச் செல்கின்றன.
நெட்ஃபிக்ஸ் தளத்தின் மூலம் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்த இப்படம் திரையரங்கு வெளியீடு மற்றும் ஓடிடி தளம் ஆகியவற்றுக்கு இடையிலான விவாதங்களைப் புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றது.
உலகளாவிய விநியோக முறையில் இது ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது.
யலிட்சா அபாரிசியோ கிளியோ எனும் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.
எந்தவித நடிப்புப் பயிற்சியும் இன்றி அவர் வெளிப்படுத்திய நுட்பமான உணர்வுகள் கதாபாத்திரத்திற்கு ஒரு நம்பகத்தன்மையை வழங்கின.
மற்ற நடிகர்களும் அக்குடும்பத்தின் உறுப்பினர்களாகவே மாறித் திரையில் உலவுகின்றனர்.
படத்தில் தனித்தனியாக இசைக்கோர்ப்புகள் எதுவும் கிடையாது. மாறாக அந்தச் சூழலில் கேட்கும் தெருவோரச் சத்தங்கள் வானொலிப் பாடல்கள் மற்றும் இயற்கை ஒலிகளே ஒரு இசைக்கருவியாக மாறிப் படத்திற்குத் தேவையான உணர்ச்சிகளை ஊட்டுகின்றன.
இப்படம் சிறந்த இயக்குநர் சிறந்த ஒளிப்பதிவு சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்தது.
வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவின் உயரிய விருதான கோல்டன் லயன் உட்பட உலகெங்கிலும் பல நூறு அங்கீகாரங்களைத் தன்வசப்படுத்தியது.
ரோமா திரைப்படத்தின் உருவாக்கத்தில் மறைந்திருக்கும் பல சுவாரசியமான தகவல்கள் இப்படத்தின் கலை நேர்த்தியைப் பறைசாற்றுகின்றன.
இயக்குனர் அல்போன்சோ குவாரன் தனது பால்ய கால நினைவுகளை அப்படியே திரையில் கொண்டு வர விரும்பினார். இதற்காக அவர் தனது குடும்பத்தினர் வளர்த்த அதே போன்ற நாய் மற்றும் 1970 களில் அவர்கள் பயன்படுத்திய உண்மையான தளவாடப் பொருட்கள் பலவற்றைத் தேடிப் பிடித்து இப்படத்தில் பயன்படுத்தினார்.
படத்தின் நாயகி யலிட்சா அபாரிசியோ இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றவர். அவருக்கு நடிப்பில் எந்த முன் அனுபவமும் கிடையாது.
உண்மையில் அவரது தோழிதான் இந்த வாய்ப்புக்காகச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் தோழி கர்ப்பமாக இருந்ததால் யலிட்சா அந்த நேர்காணலுக்குச் சென்றார். அங்குதான் அவர் கிளியோ கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
யலிட்சாவுக்குத் திரைக்கதை முழுமையாகத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
காட்சிகள் ஒவ்வொன்றையும் வரிசைப்படி படமாக்கினார் இயக்குனர்.
நடிகர்களுக்கு அன்றைய தினம் என்ன நடக்கப்போகிறது என்பது முன்கூட்டியே தெரியாது. இது அவர்களின் உணர்ச்சிகள் இயல்பாக வெளிப்பட உதவியது.
உதாரணமாகக் கிளியோவுக்குப் பிறக்கும் குழந்தை இறந்துவிட்டது என்ற செய்தி யலிட்சாவுக்குப் படப்பிடிப்பின் போதுதான் நிஜமாகத் தெரியவந்தது.
எனவே அங்கு அவர் வெளிப்படுத்திய அழுகை மிகவும் யதார்த்தமான ஒன்றாக அமைந்தது.
படப்பிடிப்பின் போது ஒரு மிகப்பெரிய சவால் எதிர்கொள்ளப்பட்டது.
மெக்சிகோ நகரத்தின் முக்கியமான தெருக்களை 1970 களில் இருந்தது போல மாற்றியமைக்க வேண்டியிருந்தது.
இதற்காக ஒரு கிலோமீட்டர் நீளத்திற்குப் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டது. பழைய கடைகள் விளம்பரப் பலகைகள் மற்றும் அக்கால வாகனங்கள் என அனைத்தும் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டன.
ஒளிப்பதிவை இயக்குனரே கவனித்துக் கொண்டார். பொதுவாகக் கறுப்பு வெள்ளை படங்கள் பழைய காலத்து கேமராக்களில் எடுக்கப்படும்.
ஆனால் குவாரன் மிக நவீனமான 65 எம்எம் டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தினார். இதன் மூலம் மிகத் தெளிவான அதே சமயம் பழைய காலத்து உணர்வைத் தரும் காட்சிகளை அவர் உருவாக்கினார்.
இப்படத்தின் சத்தங்கள் கூட மிகவும் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு திசையிலிருந்தும் வரும் ஒலிகளைத் தனித்தனியாகப் பதிவு செய்து பார்வையாளர்கள் அந்த இடத்திலேயே இருப்பதை போன்ற உணர்வைத் தந்தது இந்தத் தொழில்நுட்பம்.
நடிகர்கள் மட்டுமன்றி ஒளிப்பதிவு மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்குக் கூட முழுமையான கதையை சொல்லவில்லை இயங்குனர்.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்புதான் அந்தந்தக் காட்சிக்கான வசனங்கள் மற்றும் தகவல்கள் நடிகர்களுக்குத் தனித்தனியாக வழங்கப்பட்டன.
இது நடிகர்களிடையே ஒரு உண்மையான குழப்பத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி அதைத் திரையில் பிரதிபலிக்கச் செய்தது.
கடற்கரையில் குழந்தைகளைக் காப்பாற்றும் அந்த முக்கியமான காட்சியில் யலிட்சா அபாரிசியோ உண்மையில் மிகுந்த அச்சத்துடன் நடித்தார்.
நிஜ வாழ்க்கையில் அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் அந்த ஆக்ரோஷமான அலைகளுக்குள் இறங்கியபோது அவர் வெளிப்படுத்திய பதற்றம் நடிப்பு அல்ல.
அது ஒரு உயிருக்குப் போராடும் மனிதனின் இயல்பான எதிர்வினை. அந்தக் காட்சியை ஒரே நீண்ட ஷாட் முறையில் எடுத்து முடித்தவுடன் ஒட்டுமொத்தக் குழுவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்.
படத்தின் ஒலி வடிவமைப்பு மிகவும் சிக்கலானது. டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு சத்தத்தையும் அதன் திசைக்கேற்ப வடிவமைத்தனர்.
வீட்டின் ஒரு அறையில் பேசும் சத்தம் மற்றொரு அறையில் எப்படித் தூரமாகக் கேட்குமோ அவ்வாறே ஒலிகள் பிரிக்கப்பட்டன. இதற்காகச் சாதாரணப் படங்களை விடச் சத்தத்தைப் பதிவு செய்ய மிக அதிகக் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பின்னணி இசை இல்லாத சூழலில் இந்த இயற்கை ஒலிகளே படத்திற்கு ஒரு ஜீவனைக் கொடுத்தன.
இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான பொருட்கள் இயக்குநரின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவை.
அவரது உடன்பிறந்தவர்களிடமிருந்து பழைய ஆடைகள் மற்றும் புகைப்படங்களை வாங்கி அதைப் போலவே அச்சு அசலாகப் புதிய பொருட்களை உருவாக்கினர்.
படத்தின் ஒரு காட்சியில் வரும் முதியவர் உண்மையில் மெக்சிகோவின் புகழ்பெற்ற தற்காப்புக் கலை நிபுணர் ஆவார். அவர் படத்தில் ஒரு சவாலான உடற்பயிற்சியைச் செய்யும் காட்சி எந்தவிதத் தொழில்நுட்ப உதவியும் இன்றி நேரடியாகப் படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பின் போது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமும் நிகழ்ந்தது. ஒரு தெருவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த உள்ளூர் அதிகாரிகளுக்கும் படக்குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் சில தொழில்நுட்பக் கலைஞர்கள் காயமடைந்தனர் சில உபகரணங்கள் சேதமடைந்தன. இவ்வளவு தடைகளையும் கடந்து உருவான இப்படம் ஆஸ்கார் விருதுக்குச் சென்ற முதல் நெட்ஃபிக்ஸ் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.
இது இணையவழித் திரைத்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
திரைப்படத்தின் முடிவில் வரும் நன்றி குறிப்பு பகுதியில் லிப்போ எனும் பெயரைக் காணலாம்.
இது அல்போன்சோ குவாரனின் பால்ய காலத்தில் அவரது வீட்டில் பணிபுரிந்த லிபோரியா ரோட்ரிக்ஸ் என்பவரைக் குறிக்கும்.
இந்தப் படத்தின் முழுக் கதையும் அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதுடன் குவாரன் தனது குழந்தைப் பருவத்தில் தனக்குத் தாய்க்கு நிகராக அன்பைச் சொரிந்த அந்தப் பெண்ணிற்குச் செய்த ஒரு சமர்ப்பணமாகவே இதைக் கருதினார்.
படப்பிடிப்பு நடந்த வீடு இயக்குநரின் உண்மையான வீட்டின் நேரெதிரே அமைந்திருந்த ஒரு கட்டிடம். குவாரன் தனது சொந்த வீட்டைப் பயன்படுத்த விரும்பினார் ஆனால் பல தசாப்தங்களில் அந்த வீடு நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டதால் அதன் பழைய தோற்றத்தை மீட்க முடியவில்லை.
எனவே அதற்கு நேர் எதிரே இருந்த வீட்டைத் தேர்வு செய்து தனது நினைவுகளில் இருந்த தனது பழைய வீட்டைப் போலவே அதன் உட்புறத்தை முழுமையாக மாற்றியமைத்தார்.
ஒளிப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட நவீன கேமராக்கள் மிகத் துல்லியமான காட்சிகளைப் பதிவு செய்தன. வழக்கமாக வரலாற்றுத் திரைப்படங்கள் ஒருவித மங்கலான அல்லது பழைய உணர்வைத் தரும் வகையில் எடுக்கப்படும். ஆனால் குவாரன் கடந்த காலத்தை மிகத் தெளிவாகவும் இன்றைய காலத்தைப் போலவும் காட்ட விரும்பினார்.
இதற்காக அவர் கறுப்பு வெள்ளை வண்ணத்தைத் தேர்வு செய்தாலும் அதன் தரம் மிக உயர்ந்ததாக இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.
படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு நெட்ஃபிக்ஸ் நிறுவனம் இப்படத்தை வாங்கியது. ஒரு இணையத் தளம் தயாரித்த படம் ஆஸ்கார் போன்ற உயரிய விருதுகளுக்குத் தகுதியானதா என்ற விவாதம் ஹாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அளவில் வெடித்தது.
புகழ்பெற்ற இயக்குநர்கள் கூட இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் இந்தப் படைப்பின் தரம் அந்த எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கி உலக அளவில் அங்கீகாரம் பெற்றது.
மெக்சிகோவில் இப்படம் வெளியான போது அது ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள வீட்டு வேலை செய்யும் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பு குறித்துப் பெரிய அளவில் விவாதங்கள் தொடங்கின.
படத்தின் நாயகி யலிட்சா அபாரிசியோ ஒரு சாதாரணப் பெண்ணிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பழங்குடியினப் பெண் என்ற நிலையை அடைந்தது உலகெங்கிலும் உள்ள விளிம்புநிலை மக்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையாக அமைந்தது.
அதன் மூலம் ஒரு கலைப்படைப்பு வெறும் பொழுதுபோக்கையும் தாண்டி ஒரு சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப முடியும் என்பதை இப்படம் நிரூபித்தது.
===========================
படத்தின் கதை:-
மெக்சிகோவின் கொலோனியா ரோமா பகுதியில் 1970 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடக்கும் உணர்ச்சிகரமான வாழ்வியல் பதிவே இந்தத் திரைப்படம்.
கதையின் நாயகி கிளியோ (யலிட்சா அபாரிசியோ) அந்த வீட்டில் தங்கி வேலை செய்யும் ஒரு மிஸ்டெக் பழங்குடியினப் பெண்.
அதிகாலையில் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்வது முதல் குழந்தைகளைத் தயார் செய்வது வரை அக்குடும்பத்தின் அச்சாணியாக அவள் இருக்கிறாள்.
அன்டோனியோ (பெர்னாண்டோ கிரெடியாகா) ஒரு மருத்துவர். அவர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியே செல்வதாகக் கூறினாலும் உண்மையில் அவர் தன் குடும்பத்தைப் புறக்கணித்து வேறொரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார்.
அவரது மனைவி சோபியா (மரினா டி தவீரா) கணவனின் பிரிவால் ஏற்படும் வேதனையை மறைத்துக் கொண்டு நான்கு குழந்தைகளையும் தன் தாயார் தெரஸாவையும் (வெரோனிகா கார்சியா) கவனித்துக் கொள்கிறார்.
பணிப்பெண் கிளியோ, பெர்மின் (ஜார்ஜ் ஆண்டோனியோ குவெரெரோ) என்ற இளைஞனை நம்பி உடல்ரீதியாக நெருக்கமாகிறாள். ஒரு சினிமா தியேட்டரில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவள் அவனிடம் சொல்லும் அதே தருணத்தில் சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறிவிட்டுப் பெர்மின் அங்கிருந்து தப்பி ஓடுகிறான்.
அதன்பின் அவன் அவளைச் சந்திக்கவே இல்லை. திக்கற்று நின்ற கிளியோவுக்கு சோபியா அடைக்கலம் தருகிறாள்.
சோபியாவே அவளைத் தன் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறந்த சிகிச்சை கிடைக்க வழி செய்கிறாள்.
ஒரு கட்டத்தில் பெர்மின் இருக்கும் இடத்தை அறிந்து கிளியோ அவனைச் சந்திக்கச் செல்கிறாள். அங்கே அவன் ஒரு துணை ராணுவப் பயிற்சி முகாமில் தீவிரமாகப் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறான்.
அவனைச் சந்தித்து கருவுற்றதை முறையிடும்போது அவன் கிளியோவை மிகக் கேவலமாகப் பேசி மிரட்டி அனுப்பிவிடுகிறான்.
கிளியோவின் பிரசவ காலம் நெருங்கும் வேளையில் ஒருநாள் தெரஸா அவளை அழைத்துக்கொண்டு குழந்தைக்குத் தொட்டில் வாங்க கடைக்குச் செல்கிறார்.
அப்போது வெளியே மெக்சிகோ வரலாற்றில் கறுப்பு தினமாகக் கருதப்படும் கார்பஸ் கிறிஸ்டி படுகொலை நிகழ்கிறது. மாணவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள்.
வன்முறையாளர்கள் கடைக்குள் புகுந்து ஒரு மாணவனைச் சுட்டுக் கொல்கிறார்கள். அந்தக் கும்பலில் ஒருவனாக இவளை ஏமாற்றிய பெர்மின் கையில் துப்பாக்கியுடன் நிற்கிறான்.
அவன் கிளியோவைப் பார்த்துத் துப்பாக்கியை நீட்டி மிரட்டிவிட்டுச் செல்கிறான்.
இந்தக் கொடூரமான அதிர்ச்சியில் கிளியோவுக்கு அங்கேயே பனிக்குடம் உடைகிறது.
சாலைகளில் நிலவிய கலவரத்தாலும் நெரிசலாலும் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஏமாற்றும் கணவன் அன்டோனியோ தென்படுகிறார்.
அவர் பணிப்பெண் கிளியோவுக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்துவிட்டு நழுவிச் செல்கிறார்.
இறுதியில் கிளியோ ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். ஆனால் அந்தப் பிஞ்சு உயிர் கருவிலேயே பிரிந்து போனதால் குழந்தை உயிரற்று பிறக்கிறது.
தன் மார்போடு அணைக்க வேண்டிய குழந்தையைச் சடலமாகப் பார்க்கும் கிளியோவின் கதறல் பார்ப்பவர் நெஞ்சை உறையச் செய்கிறது.
இந்நிலையில் சோபியாவின் கணவன் அன்டோனியோ தன் உடமைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுகிறான்.
அந்தத் துயரத்திலிருந்து குழந்தைகளை மாற்றச் சோபியா அவர்களைத் துக்ஸ்பான் கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.
அங்கே கிளியோவும் உடன் செல்கிறாள். சோபியா தன் குழந்தைகளிடம் தந்தை இனி வரப்போவதில்லை என்ற உண்மையைச் சொல்கிறாள்.
கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவர் கடல் அலையின் சீற்றத்தில் சிக்கித் தத்தளிக்கிறார்கள்.
பணிப்பெண் கிளியோவுக்கு நீச்சல் தெரியாது என்றாலும் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ஆக்ரோஷமான அலைகளுக்குள் இறங்கிப் போராடி இரு குழந்தைகளையும் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வருகிறாள்.
அனைவரும் கிளியோவை அணைத்துக் கண்ணீர் வடிக்கிறார்கள். அப்போதுதான் கிளியோ தான் உண்மையில் தன் அந்த குழந்தை பிறப்பதையே விரும்பவில்லை என்று தன் உள்ளுக்குள் இருந்த குற்ற உணர்ச்சியை உரக்கச் சொல்லி அழுகிறாள்.
அன்டோனியோ இல்லாத அந்த வீடு இப்போது வெற்றிடமாகத் தெரிந்தாலும் சோபியாவும் கிளியோவும் ஒருவருக்கு ஒருவர் துணையாக அக்குடும்பத்தை வழிநடத்தத் தயாராகிறார்கள்.
கிளியோ மீண்டும் தனது அன்றாட வேலைகளைத் தொடங்குகிறாள். வீட்டின் மாடிப் படிக்கட்டுகளில் துணிகளைத் துவைக்க அவள் ஏறிச் செல்லும்போது மேலே வானத்தில் ஒரு விமானம் கடந்து செல்கிறது.
வாழ்க்கை எத்தனையோ இழப்புகளையும் வலிகளையும் தந்தாலும் அது அதன் போக்கில் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்திப் படம் நிறைவடைகிறது.
ரோமா திரைப்படம் சொல்லும் செய்தி மிகவும் தெளிவானது. சமூகம் மக்களை வர்க்கம், சாதி மற்றும் அதிகார படிநிலைகளால் பிரித்து வைத்திருந்தாலும், துயரம் வரும்போது அந்தப் பிரிவினைகள் அர்த்தமற்றதாகிவிடுகின்றன என்பதே இப்படம் முன்வைக்கும் பிரதான செய்தி.
ஆண்களால் கைவிடப்படும் இரண்டு பெண்கள் வெவ்வேறு பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிக்கும் இடத்தில்தான் வாழ்வின் பிடிமானம் இருக்கிறது.
பணம் படைத்த சோபியாவாக இருந்தாலும், ஏழ்மையில் இருக்கும் கிளியோவாக இருந்தாலும், ஏமாற்றப்படும்போது இருவருமே சமமாகவே பாதிக்கப்படுகிறார்கள்.
இதையே சோபியா கிளியோவிடம் ஒரு காட்சியில் நாம் பெண்கள் எப்போதும் தனியாகவே விடப்படுகிறோம் என்று அழுத்தமாகச் சொல்லுவார்.
நாம் செய்யும் கடமை என்பது வெறும் ஊதியத்திற்காக மட்டுமல்ல, அது ஒரு ஆழமான அன்பின் வெளிப்பாடு என்பதையும் இப்படம் உணர்த்துகிறது.
கிளியோ அந்த வீட்டின் குழந்தைகளைத் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் கடலில் இறங்கிக் காப்பாற்றுவது, மனித உறவுகள் ஒப்பந்தங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதைச் சொல்கிறது.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், சமூகத்தில் நடக்கும் பெரிய கலவரங்களும் அரசியல் மாற்றங்களும் எப்போதும் கிளியோ போன்ற எளிய மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கனவுகளையும் தான் பலி வாங்குகின்றன என்ற கசப்பான உண்மையை இப்படம் உரக்கச் சொல்கிறது.
இறுதியில், இழப்புகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், மனிதர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும் என்ற எளிய ஆனால் வலிமையான செய்தியை இப்படம் பதிவு செய்கிறது.