Lolita (1962 film)
விளாடிமிர் நபோகோவ் எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய "லொலிடா" (1962) திரைப்படம், காலத்தை வென்று நிற்கும் ஒரு மகத்தான படைப்பு . இது சர்ச்சைக்குரிய காதல் கதையாக மட்டும் இல்லாமல், மனித மனதின் இருண்ட ஆழங்களையும், ஒழுக்கச் சிதைவுகளையும், பார்ப்பவர்களின் உளவியலோடு விளையாடிச் சித்தரித்த ஒரு நுட்பமான கலைப்படைப்பாகத் திகழ்கிறது.
பேராசிரியர் ஹம்பர்ட், க்வில்டியைச் சுட்டுக் கொல்லும் காட்சியுடன் திரைப்படத்தைத் தொடங்கும் உத்தி, வியக்கத்தக்கது. இந்தக் கதை சொல்லும் பாணியானது, பார்ப்பவர்களை 'ஏன் இந்தக் கொலை?' என்ற கேள்வியுடன், ஒரு துப்பறியும் மனநிலையுடன் கதைக்குள் இழுத்துச் செல்கிறது.
ஆரம்பத்திலேயே ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, திரைப்படம் முழுவதும் அந்த விறுவிறுப்பு சற்றும் குறையாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குநர்.
குப்ரிக் இந்தப் படைப்பை இயக்கிய விதம், தணிக்கைக் குழுவின் கெடுபிடிகள் இருந்த போதும், முறையற்ற காதல் என்ற மையக்கருத்தை வெளிப்படையான காட்சிகள் இல்லாமல், வெறும் சைகைகள், வசனங்கள், குறியீடுகள் மற்றும் காட்சிகளின் மூலமாக மட்டுமே அந்தக் கூடாகாமத்தை உணர்த்தியது, அவரது உன்னதமான சாமர்த்தியத்தைக் காட்டுகிறது.
படத்தின் தொடக்கக் காட்சியில், டொலோரஸின் பாதங்களுக்கு அரைக்கிழவரான ஹம்பர்ட் நகப்பூச்சு போடும் காட்சி, எந்த வசனமும் இல்லாமலேயே, இந்தப் படைப்பு ஒரு சிக்கலான, முறையற்ற உறவைப் பேசுகிறது என்பதைப் பார்வையாளனுக்குப் புரிய வைத்துவிடுகிறது.
ஹம்பர்ட்டின் உள்ளுக்குள் இருக்கும் எண்ணங்களை, பின்னணிக் குரல் மூலம் திரையில் ஒலிபரப்பி, அவரது சிதைந்த மனதின் வலிகளையும், குழப்பங்களையும் பார்ப்பவர்கள் அறியச் செய்கிறது ஒரு உன்னதமான உத்தி.
ஜேம்ஸ் மேசன் (ஹம்பர்ட்) தனது நடிப்பால் பேராசிரியரின் ஊசலாடும் மனதைச் சரியாகப் பிரதிபலித்தார். அவர் ஒருபுறம் நல்லவர் போலத் தோன்றினாலும், உள்ளுக்குள் ஒருவித வெறித்தனத்துடன் போராடும் மனிதராக, நம் அனுதாபத்தையும் அதே சமயம் வெறுப்பையும் ஒருசேரத் தூண்டினார்.
சூ லியான் (லோலிதா), அப்பாவிச் சிறுமிக்கும், துடுக்கான இளம் பெண்ணின் கவர்ச்சிக்கும் இடையில் மாறி மாறி வரும் நடிப்பால், ஹம்பர்ட்டின் குழப்பத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
பீட்டர் செல்லர்ஸ் (க்வில்டி), பல மாறுவேடங்களில் வந்து ஹம்பர்ட்டை மனரீதியாகத் துன்புறுத்தும் ஒரு வினோதமான கதாபாத்திரமாக நடித்து, பார்வையாளனுக்கு ஒருவிதமான மன இறுக்கத்தை ஏற்படுத்தினார்.
இந்தப் படம் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட ஒளிப்பதிவு, கதையின் மையமான 'மனதின் இருள்' மற்றும் அன்றைய சமூகத்தின் ஒழுக்கச் சிதைவை மேலும் ஆழப்படுத்தியது.
படத்தில் வரும் தங்கும் விடுதி அறைகள் மற்றும் அமெரிக்கப் புறநகர்ப் பகுதிகள் அனைத்தும் ஒரு சலிப்பு மற்றும் வெறுமையின் உணர்வைக் கொடுத்தன.
ஹம்பர்ட் மற்றும் லோலிடாவின் நெருக்கமான முகத்தோற்றக் காட்சிகள், அவர்களின் மன அழுத்தத்தையும், உணர்வுகளின் சிக்கலையும் நமக்குப் புரிய வைத்தன.
நெல்சன் ரிடில் அமைத்த இசை, கதைக்கு ஒரு சோகமான நகைச்சுவையையும், அதே சமயம் மனதைக் குடையும் உளவியல் பதற்றத்தையும் வழங்கியது.
பேராசிரியர் ஹம்பர்ட்டின் கதையைச் சொல்லி, குப்ரிக், பார்ப்பவர்கள் அவரவர் மனசாட்சி மற்றும் தார்மீக எல்லைகளைப் பற்றி யோசிக்க வைக்கிறார். க்வில்ட்டியின் மரணத்தில் தொடங்கி, ஹம்பர்ட்டின் தோல்வியில் முடிவடையும் இந்தத் திரைப்படம், வெறும் பாலியல் இச்சை பற்றியது அல்ல; அது ஆசையின் சிறை, இழப்பின் வலி, மற்றும் பாவத்தின் சுமை ஆகியவற்றை கருப்பு வெள்ளையில் செதுக்கிய ஒரு கவிதைச் சிற்பம்!
குப்ரிக் ஒருபோதும் காலாவதியாகாத மனித உணர்வுகளின் சிக்கல்களை நிதானத்துடனும், கூர்மையுடனும் அணுகியதே, இந்தப் படைப்பு இன்றும் புதிதாகத் தெரிவதற்குக் காரணமாகும்.
படத்தின் கதை:-
ரஷ்ய எழுத்தாளர் விளாடிமிர் நபோகோவ் ஆங்கிலத்தில் எழுதிய இந்த நாவலின் கதை, ஹம்பர்ட் ஹம்பர்ட் என்ற ஒரு கல்லூரிப் பேராசிரியரின் ஆழமான மனப் புதிரைச் சொல்கிறது.
ஹம்பர்ட், 1910ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தவர். அவரது இளமைக் காலத்தின் மிக முக்கியமான நிகழ்வு, பிரெஞ்சு ரிவியரா கடற்கரைப் பகுதியில் வாழ்ந்தபோது, அன்னபெல் லீ என்ற தனது பன்னிரண்டு வயதுச் சிறு தோழியுடன் கொண்ட ஆத்மார்த்தமான காதல் தான்.
அந்தக் காதல், பூ மலர்வதற்கு முன்பே, துரதிர்ஷ்டவசமாக அன்னபெல் 'டைஃபஸ்' என்ற நோயால் திடீரென்று மறைந்ததால், முழுமை அடையாமலேயே முறிந்து போனது.
இந்தக் கடுமையான இழப்பு ஹம்பர்ட்டின் மனதின் அடித்தளத்தையே மாற்றிவிட்டது. அதன் விளைவாக, ஒன்பது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட, அழகும் கவர்ச்சியும் நிறைந்த சிறுமிகள் மீது அவருக்குத் தாங்க முடியாத ஒருவித ஈர்ப்பு உண்டானது.
இந்தச் சிறுமிகளை அவர் நிம்பெட் என்ற தனித்துவமான பெயரால் அழைத்தார்.
கல்வி மற்றும் கல்லூரிக் காலத்தை முடித்த பிறகு, ஹம்பர்ட் பிரெஞ்சு இலக்கியத்தைக் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், மனச்சோர்வு மற்றும் சிக்கல்களால் சில காலம் மனநல மருத்துவமனைகளின் நிழலிலும் அவர் இருக்க நேரிட்டது.
வாலேரியா என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்ட போதும், அவள் வேறு ஒரு ஆடவர் மீது நாட்டம் கொண்டு விலகிச் சென்றதால், அந்தக் குடும்ப வாழ்க்கை கசப்பான முடிவைச் சந்தித்தது.
இந்தத் தோல்விகளுக்குப் பிறகு, இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சற்று முன்பு, ஹம்பர்ட் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.
1947ஆம் ஆண்டு, தனது எழுத்துப்பணிகளை அமைதியாகத் தொடர எண்ணி, ராம்ஸ்டேல் என்ற ஒரு சிறிய நகரத்திற்குச் வந்தார். அங்கு அவர் தங்க நினைத்த வீடு எதிர்பாராத விதமாகக் தீ விபத்தில் எரிந்ததால், புதிய வாடகை இடத்தை நாடினார்.
அப்போதுதான், சார்லட் ஹேஸ் என்ற ஒரு விதவைப் பெண்ணின் வீட்டைப் பார்க்கிறார். அவள் தனது வீட்டில் ஒரு பகுதியை உள்வாடகைக்கு எடுத்துத் தங்குமாறு அன்புடன் கேட்கிறாள். முதலில் தயக்கம் காட்டிய ஹம்பர்ட், சார்லட் தன்னுடைய தோட்டத்திற்கு அவரை அழைத்துச் சென்றபோது அங்கிருந்த காட்சியைக் கண்டு ஸ்தம்பித்துப் போனார். அங்கு, பன்னிரண்டு வயதுச் சிறுமியான அவளது மகள் டொலோரஸ் ஹேஸ், சூரிய ஒளியில் இதமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
ஹம்பர்ட் அவளைப் பார்த்த கணமே, தனது இளமைக் காதலியான அன்னபெல் லீயின் சாயலைக் கண்டது போல் உணர்ந்தார். இவள்தான் தான் தேடிய நிம்பெட் என்று அவர் உள்ளுக்குள் மகிழவே, உடனே அந்த வீட்டிலேயே தங்க முடிவு செய்கிறார்.
அவளை அவர் மனதிற்குள் லோலிட்டா என்று கொஞ்சலாக அழைத்தார்.
அந்த வீட்டில் வசித்துக் கொண்டிருந்த ஹம்பர்ட், தனது ஆசைகளை வெளியே காட்டாமல், லோலிட்டாவுடன் சிறிய சிறிய ஸ்பரிசங்கள் மற்றும் பார்வைகளால் மட்டுமே தனது ஏக்கத்தைத் தணித்துக் கொண்டார்.
லோலிட்டாவை தாய் சார்லட் ஹேஸ் கோடைக்கால முகாமிற்குச் வலுக்கட்டாயமாக அனுப்பிய நேரத்தில், சார்லட் ஹேஸ், ஹம்பர்ட்டுக்கு ஒரு காதலுடன் கூடிய எச்சரிக்கை கடிதம் ஒன்றைக் கொடுக்கிறாள்.
அதில், தன்னைக் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உறுதியாகக் கேட்கிறாள். லோலிட்டாவின் வளர்ப்புத் தந்தையாக மாறும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது என்று நினைத்து மனதுக்குள் பூரித்த ஹம்பர்ட், சார்லட்டைத் திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு, ஒருநாள் இரவு ஹம்பர்ட் சார்லட் மற்றும் லோலிட்டா இருவருக்கும் தூக்க மருந்தைக் கலந்து கொடுத்துவிட்டு, லோலிட்டாவுடன் தனது ஆசையை நிறைவேற்றத் திட்டமிடுகிறார். ஆனால், லோலிட்டா கோடைகால முகாமில் இருந்த சமயத்தில், சார்லட், ஹம்பர்ட் லோலிட்டாவை ஆசைப்பட்டதும், தன்னைக் குறித்து வெறுப்புடன் எழுதிய ரகசிய நாட்குறிப்புகளைப் படித்து விடுகிறாள்.
இந்த உண்மையை அறிந்த சார்லட், லோலிட்டாவை அழைத்துக்கொண்டு ஓடிப் போகவும், தனது தோழிகளுக்கு இந்தக் கொடுமைகளை வெளிப்படுத்தவும் முடிவெடுத்தாள். அந்தக் கடிதங்களை அனுப்ப வெளியே புறப்பட்டபோது, எதிர்பாராத விதமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஒருவனால் மோதப்பட்டு சார்லட் பரிதாபமாக உயிரிழக்கிளாள்.
ஹம்பர்ட் உடனடியாக அந்தக் கடிதங்கள் அனைத்தையும் கைப்பற்றி அழித்து விடுகிறார்.
சார்லட்டின் மரணத்திற்குப் பிறகு, கோடைகால முகாமில் இருந்த லோலிட்டாவை அழைத்து வந்த ஹம்பர்ட், அவளது அம்மா கடுமையான நோயால் மருத்துவமனையில் இருக்கிறார் என்று பொய் சொல்லித் தன்னுடன் அழைத்து வருகிறார்.
பின்னர், இருவரும் ஒரு பயணவழி விடுதிக்குச் செல்கின்றனர். அங்கு ஹம்பர்ட் சத்து மாத்திரை என்று சொல்லி லோலிட்டாவுக்குத் தூக்க மருந்து கொடுக்கிறார்.
இரவு அறைக்குத் திரும்பிய போது, லோலிட்டா முழுமையாகத் தூங்கவில்லை என்று அறிந்ததும், அவளைத் தொட அஞ்சி, கற்பனையுடனே அந்த இரவைக் கழித்தார். அடுத்த நாள் காலையில், லோலிட்டா கோடைகால முகாமில் தனக்கு ஒரு பெரிய வயது ஆணுடன் ஏற்பட்ட மோசமான உடல் உறவைப் பற்றி ஹம்பர்ட்டிடம் சொல்கிறாள். அது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறுகிறாள். அதன் பிறகு, லோலிட்டாவே ஹம்பர்ட்டை வசியப்படுத்துகிறாள , இருவரும் உடல் உறவு கொள்கின்றனர். பயணவழி விடுதியில் இருந்து வெளியேறியதும், ஹம்பர்ட் லோலிட்டாவிடம் தாய் சார்லட் உண்மையிலேயே இறந்துவிட்டாள் என்ற கசப்பான உண்மையைச் சொல்கிறார்.
அதன் பிறகு, அவளை ஆறுதல்படுத்த இருவரும் அமெரிக்கா முழுவதும் காரில் ஒரு நீளமான பயணத்தைத் தொடங்கினர். இரவும் பகலும் கார் ஓட்டி, பல சிறிய தங்கும் விடுதிகள் மற்றும் வாடகை வீடுகளில் தங்கி இன்பம் துய்க்கின்றனர்.
லோலிட்டா தாயை இழந்த துயரில் இரவுகளில் வருந்தி அழுதாலும், ஹம்பர்ட் அவளைப் பரிசுகள், பணம் கொடுத்துச் சமாதானப்படுத்தித் தன் கட்டுப்பாட்டில் வைத்து உறவு கொண்டார்.
இறுதியாக, பியர்ட்ஸ்லி என்ற ஒரு சிறு ஊரில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறுகின்றனர் , லோலிட்டாவை அங்குள்ள பள்ளியில் சேர்க்கிறார். ஹம்பர்ட் தன்னை அவளது தந்தையாகவே ஊரில் எல்லோரிடமும் காட்டிக் கொண்டார். லோலிட்டாவின் தோழிகள், கொண்டாட்டங்கள் என எங்கும் செல்லவிடாமல் அனைத்தையும் ஹம்பர்ட் கடுமையாகக் கட்டுப்படுத்தினார்.
ஒருநாள் பள்ளி நாடகத்தில் லோலிட்டாவை நடிக்க அனுமதித்தபோது, நாடகத்துக்கு முந்தைய நாள், லோலிட்டா ஹம்பர்ட்டுடன் சண்டை போட்டு, அவர் தான் தன் அம்மாவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டி வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். அவளைக் தேடிக் கண்டுபிடித்த ஹம்பர்ட், மீண்டும் சாலைப் பயணம் செய்ய விரும்பிய லோலிட்டாவின் விருப்பத்தை ஏற்றுக் கொள்கிறார்,படிப்பு தடைபடுகிறது. ஆனால், இந்தப் பயணத்தின் போது யாரோ தொடர்ந்து தங்களைப் பின்தொடர்வது போல் ஹம்பர்ட்டுக்கு சந்தேகம் எழுந்தது. கலரடோ மலைப்பகுதியில், லோலிட்டா கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவள்,உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு ஒருநாள் இரவு, தன்னை லோலிட்டாவின் மாமா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு மர்மமான மனிதன், அவளை மருத்துவமனையிலிருந்து சாமர்த்தியமாகக் கடத்திச் சென்றுவிடுகிறான்.
அதன் பிறகு, சுமார் இரண்டு ஆண்டுகள், ஹம்பர்ட் ரிட்டா என்ற மது அருந்தும் இளம் பெண்ணுடன் சிறிது காலம் வாழ்ந்து வருகிறார். அப்போது, எதிர்பாராத விதமாக லோலிட்டாவிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில், அவள் ரிச்சர்ட் என்ற ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்குப் பண உதவி செய்ய வேண்டும் என்றும்
கேட்டிருக்கிறாள்.
அதிர்ச்சியும் துயரமும் அடைந்த ஹம்பர்ட், ஒரு கைத்துப்பாக்கியுடன் அவளது வீட்டைத் தேடிச் சென்றார். அங்கு லோலிட்டா, தன்னை மருத்துவமனையில் இருந்து கடத்திப் போனது, பிரபல நாடக ஆசிரியர் க்ளேர் க்வில்டி என்பவர் என்றும், அவர் தன்னைக் காதலிப்பது போல் நடித்து, அவர் இயக்கிய சுயாதீன ஆபாசத் திரைப்படங்களில் நடிக்க வற்புறுத்தியதாகவும்,இவள் நடிக்க மறுத்ததால் தன்னைத் துரத்திவிட்டதாகவும் உண்மைகளைச் சொன்னாள். லோலிட்டாவின் துயர நிலையை உணர்ந்த ஹம்பர்ட், இப்போதுதான் அவளை உண்மையாக, தூய்மையாக நேசித்ததை உணர்ந்தார்,தழுதழுக்கிறார். தன்னுடன் வருமாறு ஹம்பர்ட் கெஞ்சிக் கேட்க அவள் மறுத்துவிடுகிறாள்.
ஹம்பர்ட், லோலிட்டாவிற்கு,அவள் தாயின் வீட்டை விற்று ஈட்டிய, அவளுக்கு விபத்து இழப்பீடாக கிடைத்த 13000$ பணத்தை முழுவதுமாக கொடுத்துவிடுகிறார், அங்கிருந்து க்வில்டியின் வீட்டிற்குச் செல்கிறார். க்வில்டி அங்கே குடித்து வெறித்த நிலையில் இருக்கிறான். ஹம்பர்ட் அவனுடன் சண்டையிட்டு, துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஹம்பர்ட், சிறையில் தனது இறுதிக் கருத்துக்களை ஒரு நாட்குறிப்பில் எழுதுகிறார். தான் லோலிட்டாவை ஆழமாக நேசித்ததாகவும், தனது கதை அவள் இறந்த பிறகுதான் உலகிற்கு வெளிவர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடுகிறார்.
சிறையில் இருந்த ஹம்பர்ட், இறுதியில் இதய நோயால் இறந்துபோகிறார். அதன் பிறகு, லோலிட்டாவும் 1952ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, சில காலத்திலேயே இறந்துவிட்டதாக தெரிய வருகையில் படம் நிறைகிறது.
ஸ்டான்லி குப்ரிக்கின் "லோலிடா" (1962) திரைப்படம், விளாடிமிர் நபோகோவின் புதினத்தை எடுத்தாளும் போது, வெறுமனே ஒரு சர்ச்சைக்குரிய கதையைச் சொல்லாமல், மனித மனதின் இருண்ட ஆழங்களை ஊடுருவிப் பார்த்த ஒரு தலைசிறந்த படைப்பு. க்வில்ட்டியைக் கொன்ற காட்சியுடன் கதையைத் தொடங்கும் குப்ரிக்கின் பின்னோக்கிச் செல்லும் உத்தி, பார்ப்பவர்களைக் கேள்வி கேட்டு, நாடகத் தன்மையை ஆரம்பத்திலேயே ஏற்றிவிடுகிறது. அன்றைய கடுமையான தணிக்கை விதிகளை மீறாமல், பாலியல் உணர்வுகளை வெளிப்படையான காட்சிப்படுத்தலுக்குப் பதிலாக, சைகைகள், குறியீடுகள் மற்றும் நடிகர்களின் நுணுக்கமான முகபாவனைகள் மூலமாக உணர்த்தியதில்தான் குப்ரிக்கின் இயக்கம் தனித்து நிற்கிறது. நகப்பூச்சுக் காட்சி போன்ற ஆரம்பக் குறியீடுகள், இச்சையுடன் கூடிய உறவின் சிக்கலை உடனடியாகப் பார்ப்பவர் மனதில் பதிய வைக்கின்றன. ஜேம்ஸ் மேசன் ஹம்பர்ட்டின் இரட்டை மனநிலையையும், பீட்டர் செல்லர்ஸ் க்வில்ட்டியின் வினோதமான உளவியல் தொந்தரவையும் நடிப்பில் வெளிப்படுத்திய விதம், இந்தப் படைப்பு ஒரு சினிமா பாடநூலாகப் பார்க்கப்படக் காரணம். மேலும், கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டதன் மூலம், கதையின் மையக்கருவான 'மனதின் இருள்' மற்றும் அன்றைய சமூகத்தின் ஒழுக்கச் சிதைவு ஆகியவற்றை குப்ரிக் மேலும் ஆழப்படுத்தினார். சுருங்கச் சொன்னால், இந்தத் திரைப்படம் ஆசையின் சிறை, இழப்பின் வலி, மற்றும் பாவத்தின் சுமை ஆகியவற்றை கருப்பு வெள்ளையில் செதுக்கிய ஒரு கவிதைச் சிற்பம் என்பதால், சினிமா ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத ஒரு படைப்பாகும்.