ஒரு நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மனிதநேயச் செயல்கள் எப்போதும் மேடைகளிலும் நினைவுச் சின்னங்களிலும் பதிவு செய்யப்படுகிறதா?
சில நேரங்களில், அவை எந்தப் புகழையும் எதிர்பார்க்காத சாதாரண மனிதர்களின் அமைதியான துணிச்சலுக்குள் மறைந்து கிடக்கின்றன.
அந்த மறைக்கப்பட்ட மனிதநேயத்தைத் தேடிப் பயணிக்கும் ஆவணப்படம்தான் ஓரன் ஜேக்கபி இயக்கிய My Italian Secret: The Forgotten Heroes. மை இத்தாலியன் சீக்ரெட்: தி ஃபார்காட்டன் ஹீரோஸ்.
இரண்டாம் உலகப் போரின் கொடூரமான காலப்பின்னணியை எடுத்துக்கொண்டாலும், இது வெறும் போர் வரலாற்றைச் சொல்லும் திரைப்படமாக நின்றுவிடாமல், அச்சத்தின் மத்தியில் மனிதன் எதைத் தேர்ந்தெடுக்கிறான் என்ற ஆழமான கேள்வியை முன்வைக்கிறது.
இந்தப் படத்தின் மிகப் பெரிய தனித்துவம் அதன் பார்வையில்தான் இருக்கிறது. வரலாற்றின் மிகக் கொடூரமான காலகட்டத்தைப் பற்றிப் பேசும்போது, பெரும் அரசியல் தலைவர்களையும் போர்க்களங்களையும் மையப்படுத்துவதற்குப் பதிலாக, உயிரைக் காப்பாற்ற முன்வந்த மனிதர்களின் நினைவுகளையும் அனுபவங்களையும் முன்னிறுத்துகிறது.
வயது முதிர்ந்த நிலையில் இத்தாலிக்குத் திரும்பும் யூத உயிர் பிழைத்தவர்களின் நினைவுகள், அவர்களுக்கு ஒருகாலத்தில் அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்திய இடங்களுடன் மீண்டும் அவர்களை எதிர்கொள்ளச் செய்கின்றன.
இதனால் வரலாறு என்பது புத்தகத்தில் படிக்கப்படும் தொலைதூரச் சம்பவமல்ல; மனிதர்களின் நினைவுகளில் இன்னும் உயிருடன் இருக்கும் அனுபவம் என்ற உணர்வு உருவாகிறது.
இயக்குநர் ஓரன் ஜேக்கபி, ஆவணப்படத்தை ஒரே கோணத்தில் நகர்த்தாமல் பல்வேறு குரல்களையும் நினைவுகளையும் ஒன்றிணைக்கிறார்.
இசபெல்லா ரோசெல்லினியின் குரல் படத்திற்கு ஒரு அமைதியான, சிந்தனைமிக்க தன்மையை வழங்குகிறது.
காப்பகக் காட்சிகள், நேர்காணல்கள் மற்றும் நாடகமயமாக மீளுருவாக்கப்பட்ட காட்சிகள் இணைந்து கடந்த காலத்தை பார்வையாளருக்கு அருகில் கொண்டு வருகின்றன.
குறிப்பாக, உண்மையான மனிதர்களின் சாட்சியங்களுடன் காட்சிப்படுத்தப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் சேரும்போது, ஒரு காலகட்டத்தின் மனிதநேய பரிமாணம் தெளிவாக உணரப்படுகிறது.
இந்த ஆவணப்படத்தின் மைய ஆளுமையாக இடம்பெறும் ஜினோ பார்தாலி (ராபர்ட் லோஜியா குரல்) என்ற சைக்கிள் வீரர், திரைப்படத்தின் தனித்துவமான மனிதநேயப் பார்வைக்கு முக்கியமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
விளையாட்டு உலகில் புகழ்பெற்ற ஒருவரின் வாழ்க்கையை வெறும் விளையாட்டு சாதனைகளின் வழியாக அணுகாமல், புகழ், அதிகாரம், அரசியல் அழுத்தம் ஆகியவற்றுக்கு நடுவே தனிமனித மனசாட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கேட்கிறது படம்.
அவரைப் பற்றிய காப்பகப் பதிவுகளும், அவருடைய மகன் ஆண்ட்ரியாவுடனான நேர்காணலும், வரலாற்றுப் பாத்திரத்தை ஒரு தொலைதூரச் சிலையாக அல்லாமல் மனிதராக உணரச் செய்கின்றன.
அதேபோல், ரோமில் உள்ள ஃபதேபெனெஃப்ராட்டெல்லி மருத்துவமனையுடன் தொடர்புடைய டாக்டர் ஜியோவானி போர்ரோமியோவின் பங்கு, மனிதநேயம் எந்த அளவுக்கு படைப்பாற்றலுடனும் துணிச்சலுடனும் செயல்பட முடியும் என்பதை உணர்த்தும் வகையில் படத்தில் இடம்பெறுகிறது.
மத நிறுவனங்களுடன் தொடர்புடைய பலரும் ஆபத்தான சூழ்நிலைகளில் மனித உயிர்களைப் பாதுகாக்க முனைந்ததை ஆவணப்படம் நினைவூட்டுகிறது.
இதன் மூலம், நல்லது மற்றும் தீமை என்ற எளிய இரு முனைகளுக்குள் வரலாற்றை அடைத்து விடாமல், தனிமனிதத் தேர்வுகளின் முக்கியத்துவத்தை படம் வலியுறுத்துகிறது.
திரைப்படத்தின் கதையாடல் முறை பாரம்பரியமான ஆவணப்பட வடிவத்தையும் தனிப்பட்ட நினைவுகளையும் இணைக்கிறது. உயிர் பிழைத்தவர்களின் நேர்காணல்கள் வெறும் வரலாற்றுத் தகவல்களாகப் பயன்படுத்தப்படவில்லை;
அவை நினைவு, பயம், இழப்பு, நன்றியுணர்வு போன்ற மனித உணர்வுகளுக்கான கதவுகளாக அமைகின்றன. இதனால், பார்வையாளர் ஒரு சம்பவத்தை அறிந்துகொள்வதைவிட, அந்தக் காலத்தை அனுபவித்த மனிதர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்.
ஒளிப்பதிவிலும் படத்தொகுப்பிலும் காப்பகப் பொருட்களுக்கும் புதிய காட்சிகளுக்கும் இடையே உருவாக்கப்படும் தொடர்பு குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தின் உண்மையான பதிவுகளும் நாடகமயமாக மீளுருவாக்கப்பட்ட காட்சிகளும் ஒன்றுக்கொன்று துணையாக அமைகின்றன. இதனால் வரலாற்றுச் சூழல் காட்சிப்பூர்வமாக உயிர்ப்படுகிறது.
ஒரு குழந்தையின் நினைவு, ஒரு குடும்பத்தின் அனுபவம், ஒரு மறக்கப்பட்ட உதவி, ஒரு மனிதனின் அமைதியான துணிச்சல்—இவை அனைத்தும் சேர்ந்து வரலாற்றின் அதிகாரப்பூர்வப் பதிவுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு உலகத்தைத் திறக்கின்றன.
திரைப்படத்தின் தலைப்பில் இடம்பெறும் “மறக்கப்பட்ட ஹீரோக்கள்” என்ற கருத்தே இதன் மைய உணர்வை வெளிப்படுத்துகிறது.
வீரத்திற்குத் தேவையானது எப்போதும் ஆயுதமோ பதக்கமோ புகழோ அல்ல; சில நேரங்களில் ஆபத்தை அறிந்தபடியே இன்னொருவரின் உயிரை முக்கியமாகக் கருதும் மனசாட்சிதான் உண்மையான வீரத்தின் அளவுகோல் என்பதை படம் சிந்திக்க வைக்கிறது.
குறிப்பாக, யூதர்களைக் காப்பாற்ற இத்தாலியர்களும் கத்தோலிக்க மதகுருமார்களும் மேற்கொண்ட முயற்சிகளை நினைவுபடுத்துவதன் மூலம், வரலாற்றின் இருண்ட காலத்திலும் மனிதநேயம் முற்றிலும் அழிந்துவிடவில்லை என்பதை திரைப்படம் வலியுறுத்துகிறது.
இசபெல்லா ரோசெல்லினியின் விவரிப்பு குரலும் ராபர்ட் லோஜியாவின் பார்தாலி தொடர்பான குரல் வடிவமும் படத்தின் நினைவுச் சாயலை வலுப்படுத்துகின்றன.
அதேவேளை, உண்மையான உயிர் பிழைத்தவர்களும் மீட்பாளர்களின் குடும்பத்தினரும் பேசும் தருணங்களே படத்தின் உணர்ச்சிச் சக்திக்கு முக்கிய ஆதாரமாக அமைகின்றன.
நடிப்பு மையமாக இருக்கும் புனைகதைத் திரைப்படத்தைப் போல இங்கு நடிகர்களின் செயல்பாடு முக்கியமல்ல; உண்மையான மனிதர்களின் முகங்களும் குரல்களும் தாமே திரைப்படத்தின் உணர்ச்சி மொழியாக மாறுகின்றன.
உலகளாவிய அளவில், ஹாலிவுட் ரிப்போர்டர் இதை நெகிழ்ச்சியூட்டும் மற்றும் ஹாலோகாஸ்ட் தொடர்பான ஆவணப்படங்களின் தொகுப்பில் மதிப்புமிக்க சேர்க்கை எனப் பாராட்டியது.
லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், காப்பகக் காட்சிகள், மீளுருவாக்கங்கள் மற்றும் குடும்பத்தினருடனான நேர்காணல்கள் பயனுள்ள முறையில் இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.
இது மிகத் துல்லியமான வரலாற்று காலவரிசையை உருவாக்குவதைவிட, மறைந்து போகும் நினைவுகளை மீட்டெடுப்பதில் அதிக அக்கறை கொண்ட படைப்பு.
2014-ல் வெளியான இந்த 92 நிமிட ஆவணப்படம், இரண்டாம் உலகப் போரின் வரலாற்றை மட்டுமல்ல, மனிதநேயத்தின் வரலாற்றையும் நினைவுபடுத்துகிறது.
குறிப்பாக, அதிகாரத்துக்கு எதிராக தனிமனித மனசாட்சி எவ்வாறு நிற்க முடியும், அச்சம் நிறைந்த சூழலில் பிறருக்காக ஆபத்தை ஏற்றுக்கொள்வது என்றால் என்ன, ஒரு சமூகத்தின் நினைவில் வீரர்கள் எவ்வாறு மறைந்து போகிறார்கள் போன்ற கேள்விகளை பார்வையாளருக்குள் விதைக்கிறது.
மை இத்தாலியன் சீக்ரெட்: தி ஃபார்காட்டன் ஹீரோஸ் பார்க்கப்பட வேண்டிய திரைப்படம் என்பதற்குக் காரணம் அதன் வரலாற்றுப் பின்னணி மட்டுமல்ல. மனிதநேயம் என்பது பெரிய வார்த்தைகளில் அல்ல, ஆபத்தான தருணங்களில் எடுக்கப்படும் தனிப்பட்ட முடிவுகளில் வெளிப்படுகிறது என்பதை நினைவூட்டுவதுதான் இதன் உண்மையான பலம்.
வரலாற்றில் பெயர் பதியாமல் போனவர்களின் துணிச்சலையும், உயிர் பிழைத்தவர்களின் நினைவுகளையும் ஒரே திரையில் இணைக்கும் இந்த ஆவணப்படம் முடிந்த பிறகும் ஒரு கேள்வியை மனதில் விட்டுச் செல்கிறது:
மிகவும் இருண்ட காலத்திலும், இன்னொருவருக்காக மனிதனாக இருப்பதைத் தேர்ந்தெடுக்கும் துணிச்சல் நம்முள் இருக்கிறதா?
==============================
ஆவணபடத்தின் உள்ளடக்கம்:-
இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் நாஜிப் படைகளின் அச்சுறுத்தல் அதிகரிக்கிறது. குறிப்பாக 1943-ல் ஜெர்மனி இத்தாலியை ஆக்கிரமித்த பிறகு, அந்நாட்டில் வாழும் யூதர்கள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கிறார்கள்.
கைது, துரத்தல், பிரிவு மற்றும் உயிரிழப்பு ஆகிய அச்சங்களுக்கிடையில், பல யூதக் குடும்பங்கள் தங்களுடைய அடையாளத்தை மறைத்து உயிர் பிழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்தச் சூழலில், சில சாதாரண இத்தாலியர்களும் முக்கியமான சமூகப் பிரமுகர்களும் தங்கள் உயிரையே ஆபத்தில் வைத்து யூதர்களைக் காப்பாற்ற முன்வருகிறார்கள்.
பல ஆண்டுகள் கழித்து, அந்தக் காலத்தில் உயிர் பிழைத்த யூதர்கள் முதுமைப் பருவத்தில் மீண்டும் இத்தாலிக்குத் திரும்புகிறார்கள்.
அவர்கள் சிறுவயதில் பயத்துடன் மறைந்திருந்த இடங்களையும், தங்களுடைய குடும்பத்தினரிடமிருந்து பிரிந்திருந்த சூழல்களையும், உயிருடன் தப்பிப்போவதற்காக அனுபவித்த அச்சங்களையும் நினைவுகூர்கிறார்கள்.
அவர்கள் பார்த்த இடங்கள் இப்போது மாறியிருந்தாலும், அந்த இடங்களுடன் இணைந்திருந்த பழைய நினைவுகள் அவர்களுக்குள் உயிருடன் இருக்கின்றன.
ஒருகாலத்தில் தங்களுடைய வாழ்க்கையின் மிகக் கொடூரமான அனுபவங்களுக்குச் சாட்சியாக இருந்த இடங்களை மீண்டும் பார்ப்பதன் மூலம், அவர்கள் கடந்த காலத்தை நினைவுகூர்கிறார்கள்.
இந்த மீட்புப் பணிகளில் பல்வேறு இத்தாலியர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களில் ரோமன் கத்தோலிக்க மதகுருமார்களும் இருக்கிறார்கள்.
நாஜிப் படைகளிடம் சிக்காமல் யூதர்களை மறைத்து வைத்திருப்பது மிகப்பெரிய ஆபத்தான செயல் என்பதால், அவர்களுக்கு உதவியவர்கள் தங்களுடைய உயிரையும் குடும்பத்தினரின் பாதுகாப்பையும் ஆபத்தில் விடுகிறார்கள்.
இந்த மனிதர்களில் குறிப்பிடத்தக்கவராக சைக்கிள் பந்தய வீரர் ஜினோ பார்தாலி (ராபர்ட் லோஜியா) இடம்பெறுகிறார்.
ஜினோ பார்தாலி அப்போது இத்தாலியின் புகழ்பெற்ற சைக்கிள் வீரராக இருக்கிறார். இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி, பார்தாலியை பாசிசக் கொள்கைகளுக்கு ஏற்ற இத்தாலியரின் முன்மாதிரியாகக் கருதுகிறார்.
ஆனால் பார்தாலி பாசிசத்தை ஏற்றுக்கொள்வதில்லை; குறிப்பாக யூதர்களுக்கு எதிரான பாகுபாட்டுக் கொள்கைகளையும் எதிர்க்கிறார்.
இதனால், வெளிப்படையாக ஒரு புகழ்பெற்ற விளையாட்டு வீரராக அறியப்பட்டிருந்தாலும், போர்க்காலத்தில் அவர் வேறு ஒரு ஆபத்தான பணியிலும் ஈடுபடுகிறார்.
புளோரன்ஸ் நகரின் பேராயர் எலியா டல்லா கோஸ்டாவின் வேண்டுகோளின்படி பார்தாலி யூதர்களுக்கு உதவும் ரகசியப் பணியில் ஈடுபடுகிறார்.
அவர் சைக்கிளில் இத்தாலியின் பல பகுதிகளுக்குச் செல்கிறார். வெளிப்படையாகப் பார்க்கும்போது, அவர் போட்டிகளுக்கான பயிற்சிக்காகச் சைக்கிளில் தினமும் 200 மைல்கள பயணம் செய்வதாகத் தோன்றுகிறது.
அந்தப் பயணத்தை மறைப்பாகப் பயன்படுத்தி, மறைத்து வைக்கப்பட்டிருந்த யூதர்களுக்குத் தேவையான போலி பாஸ்போர்ட் உருவாக்கத்துக்கு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் செல்கிறார்.
இவ்வாறு சைக்கிள் பயிற்சி என்ற பெயரில் மேற்கொள்ளும் பயணங்கள், உண்மையில் உயிர் ஆபத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உதவும் ரகசியப் பணியாக மாறுகின்றன.
இந்தச் செயல்பாடுகள் பார்தாலிக்கே மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தினருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
அவர் பிடிபட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் அவருடைய சொந்த உயிரை மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தின் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.
இருந்தாலும் அவர் இந்த உதவியைத் தொடர்கிறார். போருக்குப் பிறகும் பார்தாலி தனது போர்க்காலச் செயல்களைப் பற்றி பேசுவதில்லை.
தனது குடும்பத்தினரிடம்கூட அந்தச் செயல்களை வெளிப்படுத்தாமல் இருக்கிறார். வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் மட்டுமே அவர் அவற்றைப் பற்றி பேசத் தொடங்குகிறார்.
பார்தாலி உதவிய குடும்பங்களில் ஒன்றாக ஜார்ஜியோ கோல்டன்பெர்க்கின் குடும்பமும் இடம்பெறுகிறது.
ஜார்ஜியோ கோல்டன்பெர்க் தனது குடும்பம் போர்க்காலத்தில் அனுபவித்தவற்றைப் பற்றி பேசுகிறார்.
இதன் மூலம், பார்தாலியின் ரகசிய உதவி வெறும் ஆவணங்களில் பதிவான செயல் அல்ல; உண்மையான குடும்பங்களின் உயிர் பிழைப்புடன் நேரடியாகத் தொடர்புடையது என்பது வெளிப்படுகிறது.
ரோமில், டைபர் தீவில் அமைந்துள்ள கத்தோலிக்க ஃபதேபெனெஃப்ராட்டெல்லி மருத்துவமனையிலும் யூதர்களைக் காப்பாற்றுவதற்கான வேறு ஒரு முயற்சி நடைபெறுகிறது.
அந்த மருத்துவமனையின் நிர்வாகியாக இருக்கும் டாக்டர் ஜியோவானி போர்ரோமியோ, யூதர்களை மறைத்து வைப்பதற்காக ஒரு தனிப்பட்ட வார்டை ஏற்படுத்துகிறார்.
நாஜிப் படையினர் அந்த இடத்தைத் தேடாமல் இருப்பதற்காக, அங்கு அனுமதிக்கப்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
நோய் தொற்றும் என்ற அச்சம் ஏற்படுவதால், நாஜிப் படையினர் அந்த வார்டுக்குள் நுழையாமல் இருப்பார்கள் என்ற நோக்கத்திலேயே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
இவ்வாறு ஒரு மருத்துவமனையே ஆபத்தில் இருக்கும் மனிதர்களுக்கு பாதுகாப்பான மறைவிடமாக மாற்றப்படுகிறது.
இந்தப் பின்னணியில் சார்லட் ஹாப்ட்மேனின் நினைவும் இடம்பெறுகிறது. முதிய வயதை அடைந்திருக்கும் சார்லட், சிறுமியாக இருந்தபோது தனது பெற்றோருடன் நாஜிகளிடமிருந்து தப்பித்து வாழ வேண்டிய சூழலை அனுபவித்தவர்.
அவர்களின் மீட்புப் பயணத்தில் கலாப்ரியா (Calabria), வெனிஸ் மற்றும் மார்கே ஆகிய இத்தாலியப் பகுதிகள் தொடர்புடையவையாக இருக்கின்றன.
மார்கே பகுதியில் அவர்கள் மறைந்து வாழ்வதற்கு ஒரு முழு கிராமமே உதவுகிறது. ஜெர்மன் படைகளால் கண்டுபிடிக்கப்பட்டால் ஏற்படக்கூடிய ஆபத்து தெரிந்திருந்தும், அந்தக் கிராம மக்கள் அவர்களுக்குத் தங்குமிடம் வழங்குவதில் ஒன்றிணைகிறார்கள்.
இவ்வாறு ஒரே ஒரு மனிதரின் உதவியை மட்டும் மையப்படுத்தாமல், பல்வேறு இத்தாலியர்களின் செயல்கள் ஒன்றோடொன்று இணைகின்றன.
சிலர் வீடுகளில் யூதர்களை மறைத்து வைக்கிறார்கள்; சிலர் மத நிறுவனங்களின் பாதுகாப்பைப் பயன்படுத்துகிறார்கள்;
சிலர் தங்கள் தொழில் அல்லது சமூக நிலையை மறைப்பாகப் பயன்படுத்தி உதவுகிறார்கள். இவர்களில் ஒவ்வொருவருக்கும் நாஜிப் படைகளிடம் சிக்கினால் கடுமையான ஆபத்து இருக்கிறது.
இருந்தபோதிலும், தங்களிடம் பாதுகாப்புக்காக வந்தவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
இந்த மீட்புச் செயல்களின் பரவலான விளைவாக, இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் வாழ்ந்த யூதர்களில் சுமார் எண்பது சதவீதம் பேர் உயிர் பிழைக்க முடிந்ததாகத் படம் குறிப்பிடுகிறது.
பார்தாலி மட்டும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான யூதர்களுக்கும் பாசிச எதிர்ப்புப் போராளிகளுக்கும் உதவியதாகக் கூறப்படுகிறது.
பார்தாலியின் போர்க்காலச் செயல்களுக்கு அவருடைய வாழ்க்கைக்காலத்தின் இறுதிப் பகுதியில் மட்டுமே வெளிப்படையான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்குகிறது.
2013-ல், இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களுக்கு உதவியதற்காக யாத் வாஷெம் அமைப்பு அவரை The righteous among the nations “நாடுகளிடையே நீதிமான்கள்” என்ற கௌரவத்துக்கு தேர்ந்தெடுக்கிறது.
இதன் மூலம் பல ஆண்டுகள் ரகசியமாகவே இருந்த அவரது போர்க்கால உதவி அதிகாரப்பூர்வமான வரலாற்று அங்கீகாரத்தைப் பெறுகிறது.
திரைப்படம் இந்த வரலாற்றை உயிர் பிழைத்தவர்களின் நினைவுகள், அவர்களுடைய குடும்பங்களின் சாட்சியங்கள், மீட்பாளர்களின் உறவினர்களுடனான நேர்காணல்கள், பழைய காப்பகக் காட்சிகள் மற்றும் நாடகமயமாக மீளுருவாக்கப்பட்ட காட்சிகள் ஆகியவற்றின் மூலம் பதிவு செய்கிறது.
இசபெல்லா ரோசெல்லினி திரைப்படத்தை விவரிக்கிறார்; பார்தாலியின் வார்த்தைகள் ராபர்ட் லோஜியாவின் குரலில் ஒலிக்கின்றன. பார்தாலியின் மகன் ஆண்ட்ரியாவும் தனது தந்தையைப் பற்றிப் பேசுகிறார்.
இவ்வாறு திரைப்படம், நாஜி ஆக்கிரமிப்பின் கீழ் அச்சத்துடன் வாழ்ந்த இத்தாலிய யூதர்களின் அனுபவங்களையும், அவர்களை மறைத்து காப்பாற்றிய இத்தாலியர்களின் துணிச்சலையும் ஒன்றாகப் பதிவு செய்கிறது.
ஒருபுறம் உயிர் பிழைத்தவர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் கடந்த காலத்தை நினைவுகூர்கிறார்கள்; மறுபுறம், அவர்களுக்கு உதவியவர்களின் செயல்கள் அவர்களுடைய குடும்பத்தினரின் நினைவுகள் மற்றும் காப்பகப் பதிவுகள் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வருகின்றன.
குறிப்பாக ஜினோ பார்தாலி, டாக்டர் ஜியோவானி போர்ரோமியோ, சார்லட் ஹாப்ட்மேனின் குடும்பத்துக்கு உதவியவர்கள் மற்றும் பல பெயரற்ற இத்தாலியர்கள் ஆகியோரின் செயல்கள், போர்க்கால இத்தாலியில் நடந்த மீட்பு முயற்சிகளின் பல்வேறு வடிவங்களை வெளிப்படுத்துகின்றன.
போருக்குப் பிறகு பல ஆண்டுகள் பேசப்படாமல் இருந்த இந்தச் செயல்கள், உயிர் பிழைத்தவர்களின் நினைவுகளாலும் அவர்களுடைய குடும்பங்களின் சாட்சியங்களாலும் மீண்டும் பதிவு செய்யப்படுகின்றன.
தங்கள் உயிரையும் குடும்பத்தின் பாதுகாப்பையும் ஆபத்தில் வைத்து மற்றவர்களைப் பாதுகாத்தவர்களின் செயல்கள் வரலாற்றில் மறைந்து போகாமல் இருக்க, அந்த நினைவுகள் திரைப்படத்தின் வழியாக ஒன்றிணைக்கப்படுகின்றன.
அந்த வகையில், போர்க்காலத்தில் உயிர் பிழைத்தவர்களையும் அவர்களை காப்பாற்றியவர்களையும் இணைக்கும் நினைவுப் பதிவாக இந்தக் கதை நிறைவடைகிறது.
#கீதப்ப்ரியன்ஆவணப்படம்