எழுத்தாளன், கட்டிடக்கலைஞர் பின்னணியில் சென்னையில் பத்து வருடங்கள் அமீரகத்தில் பதினைந்து வருடங்கள் பணியில் இருந்தேன், தற்போது ஏழு வருடங்களாக சென்னையில் கட்டிடக்கலை வாஸ்து ஃபெங் ஷூய் வடிவமைப்பாளராக DFD Dial for Design என்ற online design சேவையைத் துவக்கி கட்டிடக்கலை வாஸ்து ஃபெங்ஷூய் குறித்த சிறப்பு ஆலோசனைகள் வரைபடங்கள் வழங்கி வருகிறேன் .
ஓய்வில் அரிய உலக சினிமாக்களையும், கலை, சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியம், வாஸ்து,கட்டுமானத்துறை கட்டிடக்கலை பற்றி அதிகம் எழுதுகிறேன்.
கமல்ஹாசன் அவள் ஒரு தொடர்கதையின் ஐந்து மறு ஆக்கங்களில் நான்கில் பங்களித்திருக்கிறார்.
1.தமிழில் அவள் ஒரு தொடர்கதை 1974 மாடி வீட்டு விகடகவி 2.தெலுங்கில் அந்துலேனிகதா 1976 நல்லுள்ளம் கொண்ட அலுவலக முதலாளி 3.வங்காளத்தில் கொபிதா 1977 மாடி வீட்டு விகடகவி 4.ஹிந்தியில் ஜீவன் தாரா 1982 கால்ஷீட் கெடுபிடியால ஒருகதாபாத்திரமும் செய்ய இயல வில்லை 5.கன்னடத்தில் பெங்கியாலி ஹரலிட ஹூவு 1983 பேருந்து நடத்துனர் கதாபாத்திரம்.
பெங்கியாலி ஹரலிட ஹூவு [Benkiyalli Aralida Hoovu] [1983]அவள் ஒரு தொடர்கதை [1974] வெளியாகி சுமார் 9 வருடம்
கழித்து கன்னடத்தில் கவிதா என்னும் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை சுஹாசினியை
வைத்து கே.பாலசந்தர் இயக்கிய படம்,
இதில் தமிழில் திடீர் கண்ணையா செய்த 23 பி பேருந்து நடத்துனர்
கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்தார். கமல்ஹாசனும் சுஹாசினியும் சிற்றப்பா, மகள்
உறவு முறை என்று நமக்குத் தெரியும், இந்திய சினிமாவில் இப்படத்தில் தான்
இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழில் கவிதா [சுஜாதா] நடத்துனரிடம் ஒரு ஜெமினி ப்ளீஸ்
என்பார்,கன்னடத்தில் பெங்களூருவின் 14 ஆம் நம்பர் பேருந்தில் பயணிக்கும்
கவிதா [சுஹாசினி] ,பேருந்து நடத்துனரிடம் ஒரு விதான் சவுதா [Vidhana
Soudha ] ப்ளீஸ்!!! என்று கண்டிப்புடன் கேட்பார்,
அதிகப்பிரசங்கி நடத்துனர் அத்துடன் தன் எல்லையை உணர்ந்தவர் பேச்சை நிறுத்திவிட்டு டிக்கட் கொடுத்து விட்டு நகர்வார்.
அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் கதாசிரியர் எம்.எஸ்.பெருமாள். அமரர்
சுகி.சுப்பிரமணியன் அவர்களின் மகனும். சுகி.சிவம் அவர்களின் மூத்த
சகோதரரும் ஆவார். சென்னை தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், வெவ்வேறு
மாநில தொலைக்காட்சி நிலைய இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரின் மூலக்கதையை உரிமை வாங்கி அவள் ஒரு தொடர்கதை என்று திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் கே.பாலசந்தர்.
பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் நாயகி கவிதா , அவளுக்கு
வீட்டில் சட்டாம்பிள்ளை, சாலையில் செல்கையில் திமிர் பிடித்தவள், 23 பி
[பெசண்ட் நகர் -அயனாவரம்] பேருந்துக்கு அவள் காத்திருக்கையில் பெரிய
சண்டைக்காரி, பேருந்துக்குள் ரொம்ப அகம்பாவம் பிடித்தவள், அலுவலுகத்துள்
நுழைகையில் ரொம்ப கர்வம் பிடித்தவள்.என்று ஒரு மணி நேரத்துக்குள்ளாக ஐந்து
முறை நாமகரணம் சூட்டப்படுகிறாள்.
இப்படத்தில் சுஜாதா அறிமுகம்,அவரின் பக்கத்து அலுவலகத் தோழியான ஜெயலட்சுமி என்கிற ஃபடாஃபட் ஜெயலட்சுமி அறிமுகம்,ஜெயகாந்தனின் படைப்புகளில் சதா மூழ்கிக் கிடக்கும் அவரின் விதவைத் தாயார் புஷ்பா அறிமுகம், சுஜாதாவின் அண்ணியான வினோதினி அறிமுகம்.
நடிகர்களில் சுஜாதாவின் பொருப்பற்ற குடிகார சகோதரனான ஜெய்கணேஷ் அறிமுகம்,சுஜாதாவின் அலுவலகத்தில் பெண் பித்து கொண்ட மேலாளரான மலையாள சினிமாவின் குணச்சித்திர நடிகர் எம்.ஜி.சோமன் இதில் அறிமுகம்,சுஜாதாவின் வங்காளத்தைச் சேர்ந்த அலுவலக நிர்வாகியாக கோகுல் நாத் இதில் அறிமுகம்.
தவிர நடிகர் ராஜேஷ் இதில் ராஜேஷ்குமார் என்ற பெயரில் அறிமுகம்,இவரது கதாபாத்திரம் மிகவும் சிறியது,சுஜாதா குடியிருக்கும் தெருவாசி,அரசுக்கு சாக்கடை அடைப்பு நீக்க பெட்டீஷன் எழுதிப் போட பெயரும்,கையொப்பமும் கேட்க வீட்டுக்கு வருவார்,அங்கே சுஜாதாவின் அண்ணி ,ஜெய்கணேஷின் பெயரை கொடுக்க,சுஜாதா அவனே தண்டச்சோறு என்று,அந்த விண்ணப்பத்தை வாங்கி பெயரை அடித்து தன் பெயரை எழுதி அவரிடம் தர,அதை வாங்கிச் செல்வார் ராஜேஷ் ,
ராஜேஷுக்கு 5 வருடங்கள் கழித்தே பி.வி.பாலகுரு இயக்கத்தில் கன்னிப் பருவத்திலே படத்தில் கதாநாயகனாக அறிமுகம் கிடைத்தது.அதன் பின்னர் பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் [1981]படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாகவும்,அச்சமில்லை அச்சமில்லை[1984] படத்தில் அரசியல்வாதி உலகநாதனாகவும் அருமையான கதாபாத்திரங்களில் நடித்தார் ராஜேஷ்.
இயக்குனர் பாலசந்தரிடம் ஒரு கொள்கை,நல்ல கலைஞர்களுக்கு தன் முதல் அறிமுகத்தில் வசனமோ பெரிய கதாபாத்திரமோ அமையாமல் போனால் மீண்டும் அடுத்த படத்தில் அவர்களை அறிமுகம் செய்வார். ரமேஷ் அர்விந்திற்கு அப்படி ஆனது,அவர் புன்னகை மன்னன் படத்திலேயே நடன வகுப்பில் மாணவராக நடித்தது,அவரது காட்சிகள்,வசனங்கள் நீளம் கருதி வெட்டப்பட்டன,எனவே அவரை அதே 1986 ஆம் ஆண்டு கன்னடத்தில் தன்னுடைய சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தின்
ரீமேக்கான சுந்தர ஸ்வபனகலு படத்தில் சிவகுமார் செய்த மூன்று பெண்கள்
இருக்கும் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் கதாபாத்திரத்தில் நடிக்க
வைத்தார்.அதன் பின்பு ரமேஷ் அரவிந்த் கன்னடத்தில் பிரபல கதாநாயகனானார்.
அதே போலவே அழகன் படத்தில் யுவராணிக்கும் இது நேர்ந்தது,அப்படத்தில் டைட்டில் கார்ட் எல்லாம் பலமாக இருக்கும், இவர் மதுபாலாவின் தோழி, மதுபாலா இவரிடம் பேசும் வசனத்துக்கு சிரிக்க மட்டும் செய்வார்,மேலும் சில டைட் க்ளோஸ் அப்கள் மட்டும் உண்டு. ஆனால் அவரை மீண்டும் தன் ஜாதிமல்லி படத்தில் வினித்துடன் மாஸ்கோ / பெர்லின் என்று குறும்பு கொப்பளிக்கும் ஜோடியாக மீள் அறிமுகம் செய்தார்.
கமல்ஹாசன் இதில் விகடகவி, ஊரைவிட்டு நகரம் வந்து வாய்ப்பு தேடுபவர், சுஜாதாவின் வீட்டு மாடியில் தங்கி வாய்ப்பு தேடுவார்.இதில் இவர் சுஜாதாவின் தங்கை கைம்பெண்ணான ஸ்ரீப்ரியாவை ஒரு தலைக்காதல் செய்வார் , அவருக்கு இது புரிந்தாலும் அவர் மிகவும் சூட்டிகையானவர்,நல்ல பொருளாதார சூழலில் இருக்கும் விஜயகுமாரை விரும்பி ,விரும்ப வைத்து மணப்பார்.
அத்திருமணத்தில் தான் கடவுள் அமைத்து வைத்த மேடை என்னும் பாடலில் கமல்ஹாசனின் விகடகவி அரங்கேற்றமும் மங்களமும்,அத் திருமணத்தின் பின்னர் கமல்ஹாசன் யதார்த்த சூழ் நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்வார், புருஷலட்சணமாக ஒரு வேலையும் தேடிக்கொண்டு,பாகவதர் க்ராப், விபூதிம் சந்தன, குங்குமப் பொட்டு, வட்டக்கண்ணாடி,ஜிப்பாவுக்கு முழுக்கு போட்டு விடுவார்.
இது கமல் என்றதால் தான் இதை சொல்ல வேண்டியிருக்கிறது, ஒரு காட்சியில் யாரும் லாஜிக், கண்டின்யூட்டி பார்க்காமல் விட்டு விட்டனரோ என எண்ண வைக்கும்,
காதலில் தோல்வியுற்ற கமல்ஹாசனுக்கு, காதலன் விஜயகுமாரை தன் தங்கைக்கு விட்டுக் கொடுத்த சுஜாதா , எம்.ஜி.சோமன் என்னும் கயவனால் ஏமாற்றப்பட்டு,தன் அம்மாவையும் இழந்த தன் தோழி ஃபடாஃபட் ஜெயலட்சுமிக்கு அன்று சீவி சிங்காரித்து ,சேலையுடுத்தி எலிஜிபிள் பேசிலர் கமலுக்கு ஒரு பெருமாள் கோவிலில் வைத்து அறிமுகம் செய்வார்,
மூலவர் நரசிம்மருக்கு அருமையாக அங்கே தீபாராதனை நடக்கும்,கமல் நெற்றி நிறைய விபூதிப் பட்டையும், குங்குமப்பொட்டும் வைத்துக்கொண்டு பெருமாளை மிக அருமையாக சேவிப்பார். நமக்கு நம்மையறியாமல் சிரிப்பு வரும்.
இப்படத்தில் வரும் பேருந்து நடத்துனர் பாத்திரம் மிக முக்கியமானது, கவிதா தினசரி ஜெமினிக்கு தன் அலுவலகம் சென்று வருவார்,அந்த தடத்தின் நடத்துனர் திடீர் கண்ணையா, இப்படத்தில் அறிமுகம், சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக்
குழுக்களில் நடித்துள்ளார். சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி
தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டே திரைப்படங்களில் நடித்து வந்தார் . இவர் ஏற்கனவே சினிமாவில் என்னத்த கண்ணையா இருந்ததாலும் இவர் நடித்த நாடகங்களில் இவர் திடீர் திடீர் எனத் தோன்றி அசரீரி போல வசனம் பேசுவாராம்,அதனாலும் இவருக்கு பாலசந்தர் திடீர் கண்ணையா என்று அறிமுகம் செய்தாராம்.
இவர் பாலசந்தரின் முத்தான அறிமுகமாவார், அதன் பின்னர் அபூர்வ ராகங்கள், ஏட்டிக்குப் போட்டி, என்ன பெத்த ராசா, வெள்ளை ரோஜா,
ப்ரியா, அபூர்வ சகோதரர்கள், போக்கிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும்
நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளாராம்.அவர் சென்ற 2013 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். [என்னத்த கண்னையாவும் மறைந்து விட்டார்.]
கமல்ஹாசனுக்கும் திடீர் கண்ணையாவுக்கும் ஒரு நெருங்கியத் தொடர்பு இருக்கிறது,இதே பேருந்து நடத்துனர் வேடத்தை 1983 ஆம் ஆண்டு பாலசந்தர் கன்னடத்தில் சுஹாசினியை மைய கதாபாத்திரமாக வைத்து இயக்கிய Benkiyalli Aralida Hoovu படத்தில் கமல் ஹாசன் நடித்தார்.ஒரு காமெடி நடிகர்/குணச்சித்திர நடிகர் செய்த கதாபாத்திரம் தானே என்று அதை புறம் தள்ளவில்லை. தவிர அந்த நடத்துனர் கதாபாத்திரம் அதிகம் படித்திராதவர்,
நாயகி கவிதாவின் அறிவை,அவரின் நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை, அஞ்சாமை ஆகியவற்றை சிலாகிக்கும் கதாபாத்திரம்,ஆர்வக்கோளாறில் அவர் சுஜாதாவிடம் எதேனும் அதிகப் பிரசங்கித்தனமாக கேட்டாலும் சுஜாதா அதற்கு பதில் சொல்லாமல் “ஒரு ஜெமினி ப்ளீஸ்” என்பார்,அவரும் தன் லிமிட்டைப் புரிந்து உடனே டிக்கெட் தந்து விட்டு நகரும் நுட்பமான கதாபாத்திரம். இதை கமல் தோன்றியதால் அவருக்கு முந்தே பண்ணி என்று ஒரு பாடல் வைக்கவும் வேண்டியதாயிற்று.அப்பாடலை இங்கே பாருங்கள்.இதை பேருந்து நடத்துனர் ரஜினிகாந்துக்கு அற்பணித்திருப்பார் கமல்ஹாசனும் பாலசந்தரும்.
சுஜாதாவின் தங்கையான ஸ்ரீப்ரியா 1973 ஆம் வருடம் முருகன் காட்டிய வழி என்னும் படத்தில் அறிமுகமாகிவிட்டாலும்,பாலசந்தரின் இந்த மீள் அறிமுகம் தான் அவருக்கு புதிய பாதையை அமைத்துத் தந்தது,இவரின் விதவைப் பெண் பாரதி கதா பாத்திரத்தை ஒரு அறுந்த பட்டம் என்றே தன் வாய்ஸ் ஓவரில் அறிமுகம் செய்வார் பாலசந்தர்,
அதற்கேற்ப கட்டி படங்க்[Kati Patang] என்னும் படத்தில் நடிகை ஆஷா பரேக் பாடும் நா கோயி உமங் ஹேய்ன், என்னும் பாடலை அடிக்கடி இவர் தையல் மெஷினில் தைத்துக் களைக்கையில் நெட்டி முறித்துப் பாடுவார்.
Kati Patang [அறுந்த பட்டம்] 1970 படத்தில் எல்லாமே மிக அருமையான பாடல்கள் குறிப்பாக இந்த Na Koi Umang Hai பாடலை மிகவும் சிலாகித்த கே.பாலசந்தர் தன் அவள் ஒரு தொடர்கதை 1974 படத்தில் ஸ்ரீப்ரியா செய்த பாரதி என்னும் கைம்பெண் கதாபாத்திரம் அடிக்கடி தனிமையில் உருகிப் பாடும் பாடலாக இதை வைத்தார்.
ஸ்ரீப்ரியாவின் வேண்டுகோளுக்கு இணங்க மாடியில் வசிக்கும் விகடகவி கமல் இப்பாடலை மிக அருமையாகப் பாடுவார். ஒருமுறை கைம்பெண்ணான தான் விஜயகுமார் கொடுத்த மல்லிகைச்சரத்தை சூடிக்களைந்ததால் மிகவும் குற்ற உணர்வு கொண்டிருப்பார்,கிணற்றடியில் போய் நீரிறைத்து குளிப்பார்.அப்படியும் சமாதானமாகாமல் ஸ்ரீப்ரியா கமலிடம் உன்னைச் சொல்லிக்குற்றமில்லை என்னும் பாடலை தன் குற்ற உணர்வு நீங்க பாடச் சொல்லிக் கேட்க ,கமல் அதைப் பாடியபின் கொசுறாக வழக்கமாகப் பாடும் Na Koi Umang Hai பாடலை சேர்த்துப் பாடி அவரின் குற்ற உணர்வை இன்னும் அதிகப்படுத்துவார்.அட்டகாசமான இடம் அது
அந்த பாடலை இங்கே பாருங்கள். https://www.youtube.com/watch?v=JB_4xapDKlk&sns=fb
அவள் ஒரு தொடர்கதை படத்தின் கேரக்டர் மேப் இது ,இந்திய சினிமா வரலாற்றிலேயே இப்படம் 3 முறை ஒரே இயக்குனரால் மூன்று வெவ்வேறு மொழிகளில் இயக்கப்பட்ட படம் இது, இரு முறை வேறு இயக்குனரால் இரு வேறு மொழிகளில் இயக்கப்பட்ட படம் இது.
கதாபாத்திரங்கள்
அவள் ஒரு
தொடர்கதை 1974 [தமிழ்]
அந்துலேனிகதா
1976 [தெலுங்கு]
கபிதா 1977 [வங்காளம்]
ஜீவன்தாரா 1982
[ஹிந்தி]
Benkiyalli
Aralida Hoovu 1983 கன்னடம்
மூத்தவள் கவிதா
சுஜாதா
ஜெயப்ப்ரதா
மாலாசின்ஹா
ரேகா
சுஹாசினி
அண்ணன் மூர்த்தி
ஜெய்கணேஷ்
ரஜினிகாந்த்
Anil
Chatterjee
Raj
Babbar
ராஜீவ்
அம்மா
லீலாவதி
லீலாவதி
Shamita
Biswas
Sulochana
Latkar
லீலாவதி
காதலன் திலக்
விஜயகுமார்
பிரசாத்
பாபு
Ranjit
Mallick
Kanwaljeet Singh
Jai Jagadish
விதவைத் தங்கை பாரதி
ஸ்ரீப்ரியா
ஸ்ரீப்ரியா
Sandhya
Roy
Madhu Kapoor
அச்சமில்லை
அச்சமில்லை புகழ் பவித்ரா
மாடி வீட்டு விகடகவி
கமல்ஹாசன்
நாராயண
ராவ்
கமல்ஹாசன்
Amol
Palekar
ராமகிருஷ்ணா
நாகரீகத் தோழி
ஃபடாஃப்ட்
ஜெயலட்சுமி
ஃபடாஃப்ட்
ஜெயலட்சுமி
ப்ரேமா
நாராயண்
ஸிம்பிள்
கபாடியா
Vijayalakshmi
Singh
சபலப்பேர்வழி மேனேஜர்
எம்.ஜி.சோமன்
Samit
Bhanja
Suresh
Chatwal
தப்புத்தாளங்கள்
புகழ் சுந்தர் ராஜ்
நல்லிதயம் கொண்ட நிர்வாக இயக்குனர்
கோகுல்நாத்
கமல்ஹாசன்
Satindra Bhattacharya
Rakesh Roshan
சரத்பாபு
பேருந்து நடத்துனர்
திடீர் கன்னையா
Narayan Rao
Debnath Chatterjee
Karan
Razdan
கமல்ஹாசன்
அவள் ஒரு தொடர்கதை [1974] படத்தில் ஒரு குறையாக வாணிஜெயராம் அவர்கள் ஒரு பாடலும் பாடவில்லை. கவிஞரின் மகோன்னதமான வரிகளில் எம்.எஸ்.வி இசையில் இப் பாடலை பி.சுசீலா அவர்கள் பாடி அசத்தினார்கள்.கே.பாலசந்தர்.எம்.எஸ்.வி.கவிஞர் கண்ணதாசன் கூட்டணியில் வாணி ஜெயராம் இணைந்தது 1973 ஆம் ஆண்டின் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் தான். அப்படத்தில் மலர்போல் சிரிப்பது பதினாறு என்னும் பாடல் மிக அழகான பாடல்.அப்பாடலை இங்கே கேளுங்கள்.https://www.youtube.com/watch?v=aZU2T3O7u1c
படத்தில் மிக அழகான பாடல் இது,ஸ்ரீப்ரியாவை விஜயகுமார் புரட்சித் திருமணம் செய்து கொள்வார்,அவரை இரு தினங்களிலேயே அவருடைய தாம்பரம் வீட்டிற்கு குடி போகச் சொல்லிவிடுவார்.சுஜாதாவின் காதலனான விஜயகுமார் மனம் வருந்தி ஏன் என்று கேட்டவர்,கட்டில் சத்தம் சலனப்படுத்துகிறது,நானும் ஒரு பெண் தானே?என்பார்.விஜயகுமார் அடுத்த காட்சியில் தாம்பரத்தில் இருப்பார். சில மாதம் கழித்தே ஸ்ரீப்ரியாவை சுஜாதாவின் வீட்டிற்கு அழைத்து வருவார் விஜயகுமார்.
அங்கே ஸ்ரீப்ரியா கருத்தரித்த செய்தி அனைவருக்கும் பகிரப்படும்,அக்காவைப் பார்க்க அப்படி வெட்கம் கொள்வார் ஸ்ரீப்ரியா,அக்காவின் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டவரை சுஜாதா போய் கேலி செய்வார்.பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்ற கேள்வி வருகையில் ,அவருக்கு குட்டி திலக் தான் வேண்டுமாம் தங்கை, சொல்ல, ஏன் குட்டி கவிதாவாக இருக்கக் கூடாதா? என்றவர்,பதட்டமான விஜயகுமாரின் கண்ணைப் நொடியில் பார்த்து என்ன காரியம் செய்து விட்டோம்!!! என்று பதைபதைத்து ,எந்நேரமும் உன்னையே நினைக்கிறேனா,அதுதான் பாரதியை , கவிதா என்று சொல்லிவிட்டேன் என்று சமாளிப்பார். மிக அருமையான காட்சி அது.அடுத்த காட்சியில் வளைகாப்பு வைபவம் நடைபெறும்,அதில் வரும் கவிஞரின் பூடகமான சூழலைச் சொல்லும் வரிகளை உற்று நோக்குங்கள்.இப்பாடலை பி.சுசிலா பாடியிருப்பார்.
இப்பாடலை இங்கே பாருங்கள். https://www.youtube.com/watch?v=hhRiJ_8AkJI
"ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்! அழகுமலர் அன்னையென ஆனாள்! ஆதரிப்பாள் தென்மதுரை மீனாள்"
"தேடுதடி என்விழிகள் செல்லக்கிளி ஒன்று-சிந்தையிலே நான் வளர்த்த கன்று-உன் வயிற்றில் பூத்ததடி இன்று"!
"மந்திரத்தில் மயங்குகிறாள் சந்தனத்தைப் பூசு-மல்லிகைப்பூ விசிறி கொண்டு வீசு-அவள் மணவாளன் கதைகளையே பேசு"
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கதையின் நாயகன் நாயகியை அலர்மேலுமங்கை மற்றும் உற்சவமூர்த்தியாக வரித்து இப்படத்திலும் பாடல் இயற்றியிருப்பதைப் பாருங்கள், எத்தனை அழகாக இப்பாடலை முடித்திருக்கிறார்.
தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை
தரும தரிசனத்தை தேடுகின்றான்,தேடுகின்றான்,தேடுகின்றான்,
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?
அவர் அபூர்வ ராகங்கள் படத்தில் கேள்வியின் நாயகனே பாடலிலும் இதே உவமையைத் தொட்டிருப்பார்.
படத்தில் நாயகி சுஜாதா பாடும் கண்ணிலே என்ன உண்டு பாடலை ஜானகி அவர்கள் பாடியிருப்பார்,மிக அருமையான பாடல்,அதன் படமாக்கம்.
அப்பாடலை இங்கே பாருங்கள் https://www.youtube.com/watch?v=cQ7tWwPwgto