ஆனால், அந்த வளர்ச்சியின் பின்னால் ஒளிந்திருந்த ஆன்ம வறட்சியையும், போலித்தனத்தையும் மிகத் துல்லியமாகத் தோலுரித்துக் காட்டிய ஒரு மிரட்டலான சினிமாப் படைப்பு தான் அமெரிக்கன் சைக்கோ' American Psycho (2000).
பிரெட்டன் ஈஸ்டன் எலிஸின் புகழ்பெற்ற நாவலைத் தழுவி உருவான இப்படம், வெறும் குற்றப் பின்னணி கொண்ட திரில்லர் மட்டுமல்ல, மாறாக, இன்றைய நவீன நுகர்வுக் கலாச்சாரத்தின் மீது வீசப்பட்ட ஒரு சாட்டையடி.
புதின ஆசிரியர் பிரெட்டன் ஈஸ்டன் எலிஸின் சொந்த அனுபவங்கள் மற்றும் 1980-களில் வோல் ஸ்ட்ரீட் பகுதியில் நிலவிய தீவிரமான நுகர்வுக் கலாச்சாரம், பேராசை மற்றும் கார்ப்பரேட் உலகின் போலித்தனம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நாவலின் மூலக்கதை உருவாக்கப்பட்டது.
மேரி ஹாரன் மற்றும் குனிவெர் டர்னர் இணைந்து எழுதிய திரைக்கதை, புத்தகத்தில் இருந்த மிகக்கடுமையான மற்றும் திகிலூட்டும் சில விவரங்களைக் குறைத்து, அதே நேரத்தில் கதை சொல்லலில் உள்ள உளவியல் குழப்பத்தையும் நையாண்டியையும் சமமாகப் பேணும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தது.
இயக்குநர் மேரி ஹாரன் நடிகர்களிடம் இருந்து மிகத் துல்லியமான வெளிப்பாடுகளைப் பெற்றார்.
குறிப்பாகக் கிரிஸ்டியன் பேலிடம் கார்ப்பரேட் அதிகாரத்தின் திமிரையும், மனநோயின் வெளிப்பாடுகளையும் இருவேறு துருவங்களாகச் சமன் செய்து நடிக்க வைப்பதில் தனிப்பட்ட கவனம் செலுத்தியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரெய் பல்தாக்கியூ ஒளிப்பதிவை மிகவும் நேர்த்தியாகக் கையாண்டுள்ளார்.
பகல் நேரத்தில் வரும் காட்சிகளில் வால் ஸ்ட்ரீட்டின் குளிர்ச்சியான, பளபளப்பான பெருநகர அழகையும், இரவு நேரக் காட்சிகளில் பேட்மேனின் மனதின் இருட்டைப் பிரதிபலிக்கும் வகையில் ஒளியையும் நிழலையும் கையாண்டு படத்திற்குத் தனித்துவமான காட்சிக் கட்டமைப்பைக் கொடுத்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜான் கேல் 1980-களின் பாப் இசைச் சூழலையும், படத்தின் பதற்றமான தருணங்களுக்குத் தேவையான அழுத்தமான பின்னணி இசையையும் வழங்கி மன உளைச்சலூட்டும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இப்படம் 'டாடோர் திரைப்பட விழா' மற்றும் 'கட்டலோனியா சர்வதேசத் திரைப்பட விழா' ஆகியவற்றில் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநர் பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றதுடன், கிரிஸ்டியன் பேலின் அசாத்திய நடிப்பிற்காக 'எம்பயர் விருது' மற்றும் 'சடன் விருது' உள்ளிட்ட பல முக்கியப் பிரிவுகளில் பரிந்துரைகளையும் சில புகழ்பெற்ற விமர்சகர் சங்க விருதுகளையும் வென்றது.
அமெரிக்காவின் பொருளாதாரம் உச்சத்தில் இருந்த 1980-களில், பணமும் புகழும் மட்டுமே மனிதனின் வெற்றியைத் தீர்மானித்த காலகட்டத்தில் உருவான பேராசை, போலித்தனம் மற்றும் அகந்தையின் உச்சம் தான் இப்புதினத்தின் அடிநாதம்.
வெளியே சுத்தமான ஆடைகள், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கையுடன் வலம்வரும் உயர்வர்க்கத்து மனிதர்களின் அக உலகத்தில், மனிதநேயம் முற்றிலும் செத்துப்போய் வறண்டு போயிருப்பதையும், ஆன்மாவே இல்லாத இயந்திரத்தனமான வாழ்க்கையை அவர்கள் வாழ்வதையும் இப்படைப்பு தோலுரித்துக் காட்டுகிறது.
ஒருவர் கொலைகாரனாகவே மாறினாலும், சக மனிதனின் மீது யாருக்கும் அக்கறையோ கவனமோ இல்லாத இந்தச் சமூகத்தில், "பணமும் பொருளாதார வெற்றியும் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும்" என்ற பொய்யான நம்பிக்கையே எல்லோரையும் இயக்குகிறது என்பதைப் நறுக்கென படைப்பில் சாடியுள்ளனர்.
வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கியாளரான பேட்ரிக் பேட்மேன், வெளித்தோற்றத்தில் எதை வேண்டுமானாலும் விற்றுவிடக்கூடிய நேர்த்தி, விலை உயர்ந்த பிராண்டட் ஆடைகள், கணக்கிட்டுக் கட்டிய உடல்வாகு என அனைத்திலும் பரிபூரணமானவன்.
ஆனால் அவனது அக உலகமோ ரத்தமும் சதையுமான கொடூரக் குற்றங்களால் நிரம்பியுள்ளது. பகலில் கார்ப்பரேட் உலகின் பகட்டு மனிதன், இரவில் மனிதாபிமானமற்ற கொலையாளி.
இயக்குநர் இந்தப் படத்தின் மூலம் பார்வையாளர்களை ஒரு உளவியல் பிரமைக்கு அழைத்துச் செல்கிறார்.
பேட்மேன் செய்யும் கொடூரமான கொலைகளை விட, அவனுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களுக்கு அவனது உண்மையான முகம் எப்போதுமே புரியாமல் போவதும், ஒருவருக்கொருவர் பெயரைக் கூட மாற்றி அழைத்துக் கொள்வதும் சமூகத்தின் இயந்திரத்தனமான போக்கைக் காட்டுகிறது.
இங்கே யார் கொலைகாரன், யார் குற்றவாளி என்பதைவிட, மனிதர்கள் அனைவரும் தங்களது உணர்வுகளைத் தொலைத்துவிட்டுப் பணத்தின் பின்னால் ஓடும் இயந்திரங்களாக மாறிவிட்டனர் என்பதே ஆழமான வலியைத் தருகிறது.
படத்தில் பேட்ரிக் பேட்மேனாக நடித்த கிரிஸ்டியன் பேல் தனது வாழ்க்கையின் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ஒருபுறம் கார்ப்பரேட் திமிரும், மறுபுறம் வெறிபிடித்த சைக்கோத் தனமும் கொண்ட முகபாவனைகளை அவர் வெளிப்படுத்திய விதம் சிலிர்க்க வைக்கிறது.
குறிப்பாக, கண்ணாடியின் முன் நின்று தன்னைத் தானே ரசித்துக் கொள்ளும் காட்சிகளிலும், நண்பர்களுடன் பிஸினஸ் கார்டுகளை ஒப்பிட்டுப் பெருமை பேசும் காட்சிகளிலும் அவரது இயல்பான நடிப்பு மிரட்டலாக இருக்கும்.
அவருடன் நடித்த ஜாரெட் லெட்டோ , ரீஸ் விதர்பூன் , வில்லெம் டஃபோ போன்ற முன்னணி நடிகர்களின் பங்களிப்பும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது.
இப்படம் வெளிவந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், இது இன்றைக்கும் பொருத்தமானதாக இருப்பதற்குக் காரணம், இதன் விமர்சனப் பார்வைதான். இன்று நாம் வாழும் சமூகத்திலும் தோற்றமும் பணபலமும் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பைத் தீர்மானிக்கின்றன.
மனிதர்களின் மன உளைச்சல்களும், தனிமைச் சூழல்களும் யாரிடமும் வெளிப்படுத்த முடியாமல் போகும்போது உருவாகும் வெடிப்புகளை இப்படம் கண்ணாடியைப் போல நம் கண்முன்னே நிறுத்துகிறது.
ஒரு சாதாரணத் திரில்லர் படமாகத் தொடங்கி, பார்வையாளர்களின் மனதை உலுக்கும் ஒரு உளவியல் அனுபவமாக மாறி, இறுதியில் THIS IS NOT AN EXIT என்ற வாசகத்துடன் முடிகிற இப்படம், மனித ஆன்மாவின் இருண்ட அறைகளுக்குள் நம்மைப் பயணிக்க வைக்கும் ஒரு காவியத் தரமான கலைப்படைப்பு. பார்க்க வேண்டிய, சிந்திக்க வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத சினிமா அனுபவம்.
படத்தின் கதை:-
1989-ஆம் ஆண்டு. அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் வோல் ஸ்ட்ரீட் பங்குச்சந்தை உச்சத்தில் இருந்த காலம்.
அங்கே இன்வெஸ்ட்மெண்ட் பேங்கராக வேலை பார்க்கும் பேட்ரிக் பேட்மேன் (கிரிஸ்டியன் பேல்) வாழ்க்கையைச் சொல்லும் கதை இது.
பகலில் பெரிய பணக்காரர்களுடன் சுற்றிக் கொண்டு, ஆடை அலங்காரம், கம்பெனிப் பேச்சு என்று வலம் வரும் இவன், இரவில் கொடூரமான தொடர் கொலைகளைச் செய்யும் ஒரு சைக்கோவாக மாறுகிறான்.
இப்படிப்பட்ட அவனது இரட்டை வாழ்க்கையை அவனது சொந்த குரலிலேயே படம் பிடித்துக் காட்டுகிறது கதை.
வெள்ளிக்கிழமை இரவு வந்துவிட்டாலே இவனும் இவனது சக ஊழியர்களான டிமதி பிரைஸ் (ஜஸ்டின் தெரோக்ஸ்), கிரெய்க் மெக்டெர்மாட் (ஜோஷ் லூகாஸ்), டேவிட் வான் பாட்டன் (பில் சேஜ்), லூயிஸ் கராத்தர்ஸ் (மேட் ரோஸ்) மற்றும் மாக்பஸ் ஹால்பெர்ஸ்ட்ராம் (அந்தனி லெம்கே) ஆகியோரும் சேர்ந்து பார்ட்டிகளுக்குப் போகிறார்கள்.
அங்கே போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது, மற்றவர்களின் ஆடைகளைக் கிண்டல் செய்வது, ஃபேஷன் பற்றிப் பேசுவது என்று களிப்பாய் இருக்கிறார்கள்.
இவனுக்கு ஈவ்லீன் வில்லியம்ஸ் (ரீஸ் விதர்பூன்) என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அவனிடம் காதலே இல்லை,தன் செகரட்டரியாக வேலை பார்க்கும் ஜீன் (குளோ செவிக்னி) மீது மட்டும் இவனுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உள்ளது.
கதை முழுவதும் யார் முகமூடி போட்டுக் கொண்டு யார் பேசுவது என்றே தெரியாத அளவுக்கு ஆட்கள் மாறி மாறி வருகிறார்கள்.
இதனால் பேட்மேன் சொல்வது உண்மையா அல்லது இவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ற குழப்பம் நமக்கு வருகிறது.
தன் அழகையும் உடலமைப்பையும் பேணுவதில் இவன் மிகத் தீவிரமாக இருக்கிறான்.
ஒரு நாள் தன் சக ஊழியரான பால் ஆலன் (ஜாரெட் லெட்டோ) இவனை விட சற்றே அழகிய விலைஉயர்ந்த பிஸ்னஸ்கார்ட் அச்சடித்ததை தாங்காமல் கொன்றுவிடுகிறான்.
பேட்ரிக் பேட்மேன் (கிரிஸ்டியன் பேல்) தனது சக ஊழியர்களான டிமதி பிரைஸ் (ஜஸ்டின் தெரோக்ஸ்), கிரெய்க் மெக்டெர்மாட் (ஜோஷ் லூகாஸ்), டேவிட் வான் பாட்டன் (பில் சேஜ்) மற்றும் பால் ஆலன் (ஜாரெட் லெட்டோ) ஆகியோரிடம் தன் புதிய விசிட்டிங் கார்டைப் பெருமையுடன் காட்டுகிறான்.
தான் வைத்திருக்கும் 'தந்தம்' (Bone) நிறக் கார்டும், அதில் பொறிக்கப்பட்டுள்ள 'சிலியன் ரெயில்' (Silian Rail) எழுத்துருவும் உலகத்திலேயே மிகச் சிறந்தது என்று அவன் மனதுக்குள் திளைத்துக் கொண்டிருக்கும் போது, மற்றவர்கள் அதை விடச் சிறந்த கார்டுகளை வரிசையாக மேசையில் வீசுகிறார்கள்.
குறிப்பாக, பால் ஆலன் எடுத்துக் காட்டும் விசிட்டிங் கார்டின் எக்பெல் நிறம், நேர்த்தியான தடிமன் மற்றும் அதில் உள்ள வாட்டர்மார்க் ஆகியவற்றைப் பார்த்தவுடன் பேட்மேனுக்குப் பொறாமையும் ஆத்திரமும் தலைக்கேறுகிறது.
தன் மேலதிகாரியிடமும் சக ஊழியர்களிடமும் தான் எப்போதுமே உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்ற அவனது வெறிக்கு, அந்தச் சிறிய விசிட்டிங் கார்டு ஒரு பெரும் அடியாக விழுகிறது.
தன்னை விடச் சிறந்த கார்டை வைத்திருக்கும் பால் ஆலன் மீது அவனுக்கு ஏற்படும் இந்த ஆழ்ந்த பொறாமையும் அவமானவுமே, அவனைக் கொடூரமான முறையில் கொலை செய்வதற்கான உளவியல் அடிப்படையாக மாறுகிறது.
தன் சக ஊழியரின் அந்தத் துச்சமான மேன்மைப் புன்னகையைத் தாங்க முடியாமல், தன் சொந்த மனச்சிதைவின் உச்சத்தில் பால் ஆலனைத் தீர்த்துக்கட்ட அந்த விசிட்டிங் கார்டு பொறாமையே வித்திடுகிறது.
அதன் பிறகு அவனது அப்பார்ட்மெண்டையே தன் கொலைகளைச் செய்யும் இடமாக மாற்றுகிறான்.
ஆரம்பத்தில் கத்தியால் குத்துவது போல ஆரம்பிக்கும் இவனது வெறி, போகப் போக எல்லை மீறிப் போய் விபரீதமாகிறது.
பெண்களைத் துன்புறுத்துவது, சித்திரவதை செய்வது, உடலைச் சிதைப்பது என்று இவனது வன்செயல்கள் மிகவும் கொடூரமாக வளர்கின்றன.
தான் செய்யும் கொலைகளைப் பற்றிச் சக ஊழியர்களிடம் வெளிப்படையாகவே பேசுகிறான்.
ஆனால், இவன் எதையோ விபலீதமாக சொன்னால், இவர்கள் எதையோ தப்பாகப் புரிந்துகொண்டு சிரிக்கிறார்கள்.
உதாரணமாக, இவன் "கொலைகளும் மரணதண்டனைகளும்" (murders and executions) என்று சொன்னால், இவர்கள் அதை "கம்பெனி இணைப்புகளும் கையகப்படுத்தல்களும்" (mergers and acquisitions) என்று தப்பாகப் புரிந்துகொள்கிறார்கள்.
தன் வழக்கறிஞர் ஹரால்டு கார்ன்ஸிடமும் (ஸ்டீபன் போகார்ட்) இவன் தன் குற்றங்களைச் சொல்லி போனில் அழுகிறான்.
கோர்ட்னி ராவ்லின்சன் (சமந்தா மாத்திஸ்), அவளது தோழி வாண்டன் (கேத்தரின் பிளாக்), மற்றும் சாலையில் அடிபடும் ஏழை மனிதன் (ரெக் இ. கேதே) போன்றோரும் இவன் வழியில் வருகிறார்கள்.
ஒரு கட்டத்தில் சாலையில் போகிறபோக்கிலெல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளுகிறான்.
போலீசும் ஹெலிகாப்டரில் வந்து துரத்துகிறது. தப்பித்து அலுவலகத்திற்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் இவன், வழக்கறிஞரின் போனில் தான் செய்த எல்லா கொலைகளையும் ஒப்புக்கொண்டு தகவல் பதிவு செய்கிறான்.
நாட்கள் கழித்து, தான்கொன்றவர்களின்
உடல்களை குவித்து வந்த அதே பால் ஆலனின் அப்பார்ட்மெண்டிற்குப் போய் பார்க்கிறான்.
அங்கே அழுகிய நாற்றம் இருக்கும் என்று இவன் எதிர்பார்த்தால், வீடு பளபளவென்று புதிது போல சுத்தமாக இருக்கிறது.
அழுகல் வாடைக் வராமல் இருக்க வீடு முழுக்கப் பூக்களை வைத்து அழகுபடுத்தியிருக்கிறார்கள்.
அங்கே வரும் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் (பட்ரிசியா கேஜ்), "நீ விளம்பரம் பார்த்தா இங்கு வந்தாய்?" என்று அவனைத் திட்டித் துரத்திவிடுகிறாள்.
அந்த வீட்டின் விலை குறைந்துவிடக் கூடாது என்பதற்காகப் பெரிய இடத்துக்காரர்கள் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டார்கள் என்பது இதன் மூலம் நமக்குப் புரிகிறது.
இவனது மனநிலை முற்றிலும் பாதிக்கப்படுகிறது. டிவி பேட்டி அளிப்பதைப் பார்ப்பது, பார்க் பெஞ்சு தன்னைத் துரத்துவது போன்ற விசித்திரமான பயங்கரக் கனவுகளிலும் பிரமைகளிலும் மாட்டிக்கொள்கிறான்.
கடைசியில் வழக்கறிஞர் கார்ன்ஸை நேரில் சந்தித்து, "நான் போனில் கொலை செய்ததாகச் பேசி அனுப்பி சொன்னேனே ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்கிறான்.
ஆனால் கார்ன்ஸோ அதைப் கேட்டுவிட்டு ஒரு பெரிய ஜோக் போலச் சிரிக்கிறான். அதுமட்டுமின்றி, "நீயெல்லாம் ஒரு கொலைகாரனா? கோழை மாதிரி இருக்கிற நீயெல்லாம் இதைச் செய்திருக்கவே முடியாது!" என்கிறான்.
மேலும், "பால் ஆலனை நான் லண்டனில் சில நாட்களுக்கு முன்புதான் இரண்டு முறை சந்தித்து இரவு உணவு சாப்பிட்டேனே!" என்று சொல்லி அவனை மேலும் குழப்புகிறான்.
கதை எப்படித் தொடங்குதோ அதே மாதிரி முடிகிறது. மீண்டும் அதே வெள்ளிக்கிழமை இரவு, அதே ஜாலியான கிளப். அங்கே நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு எதையோ பேசிக்கொண்டிருக்கிறான் பேட்மேன்.
"பொருளாதாரத்தில் ஜெயித்தால் தான் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்" என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
அப்பொழுது பாரில் இருக்கும் டிவியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷின் பதவியேற்பு விழாவும், ரொனால்ட் ரீகனின் பழைய உரையும் ஓடிக்கொண்டிருக்கிறது.
கதையின் இறுதியில், பாரின் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு பலகையில், மற்ற எழுத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் பெரிய எழுத்துக்களில் ஒரு வாசகம் மட்டும் மின்னிக் கொண்டிருக்கிறது:
"THIS IS NOT AN EXIT" இது இங்கிருந்து தப்பியோடுவதற்கான வழி இல்லை / இதற்கு முடிவு கிடையாது என சூசகமாக உரைக்கிறது.
பணமும் பொருளாதார வளர்ச்சியும் மட்டுமே மனிதனின் மகிழ்ச்சியையும் மதிப்பையும் தீர்மானிக்க முடியாது; மனிதநேயம் அற்ற, இயந்திரத்தனமான சமூகத்தில் வாழும் மனிதர்களின் ஆன்மா பேராசை மற்றும் போலித்தனத்தால் எப்போதோ இறந்துவிட்டது என்பதே இப்படைப்பின் அழுத்தமான செய்தியாகும்.
#கீதப்ப்ரியன்இங்ஙிஷ்க்ளாஸிக்