ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது பெரிய சாதனைகளா, இல்லை அவனைச் சுற்றியிருக்கும் சில அன்பான மனிதர்களா?
இந்தக் கேள்வியை வெளிப்படையாகக் கேட்காமல், மனதுக்குள் மெதுவாக எழச் செய்யும் திரைப்படம் பத்மராஜனின் “மூணாம்பக்கம்”.
1988-ல் வெளியான இந்த மலையாளத் திரைப்படம், மிகப் பெரிய சம்பவங்களையோ பரபரப்பான திருப்பங்களையோ முன்னிறுத்தாமல், மனித உறவுகளின் மீது வாழ்க்கை எவ்வளவு ஆழமாகச் சார்ந்திருக்கிறது என்பதை நுட்பமாக அணுகுகிறது.
கடற்கரை, பழைய வீடு,தோப்பு,குளம், கடல்,உப்பளம்,வட்டப்பாறை கோட்டை, இயற்கை, மனிதர்களின் அன்றாடப் பழக்கம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் உலகம் ஆரம்பத்திலேயே பார்வையாளரை அந்தச் சூழலுக்குள் அழைத்துச் செல்கிறது.
பத்மராஜனின் இயக்கத்தின் மிகப்பெரிய சிறப்பு, கதையை அவசரப்படுத்தாமல் மனிதர்களை முதலில் நமக்கு அறிமுகமானவர்களாக மாற்றுவதுதான்.
தம்பி என்ற பெயர்கொண்ட அப்பூப்பன் (திலகன்), பாச்சு (ஜெயராம்), பத்ரா (கீர்த்தி சிங்), லோபஸ் (ரஹ்மான்), ரஞ்சித் மேனன் (அசோகன்), கிருஷ்ணன்குட்டி (அஜயன்), கவலா (ஜகதி ஸ்ரீகுமார்) என ஒவ்வொருவரும் வெறும் கதாபாத்திரங்களாக இல்லாமல் தனித்தனி குணநலன்களுடன் உருவாக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கிடையேயான அன்பு, நட்பு, நெருக்கம் ஆகியவை உரையாடல்களால் மட்டும் நிறுவப்படுவதில்லை;
அவர்கள் ஒருவருடன் ஒருவர் பழகும் விதம், வீட்டில் இயல்பாகக் கலக்கும் விதம், அவர்களுடைய சிறிய செயல்கள் ஆகியவற்றின் வழியாக உறவுகளின் தன்மை புரியவைக்கப்படுகிறது.
அதனால் பார்வையாளர் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்குள் அவர்களுடன் உணர்வுபூர்வமாக இணைந்துவிடுகிறார்.
திரைக்கதையின் இன்னொரு வலிமை அதன் பொறுமை. திரைப்படம் ஒரே ஒரு சம்பவத்தைச் சுற்றி மட்டும் இயங்காமல், அந்தச் சம்பவத்தைச் சுமக்கக்கூடிய மனித உலகத்தை முதலில் உருவாக்குகிறது.
இதனால் கதையின் ஒவ்வொரு மனிதருக்கும் பின்னால் ஒரு வாழ்க்கை இருப்பதை உணர முடிகிறது. பத்ராவின் குடும்பச் சூழல், அப்பூப்பனின் தனிமை, பாச்சுவின் நட்பு வட்டம், வீட்டைச் சுற்றி உருவாகியிருக்கும் மனித உறவுகள் ஆகியவற்றை பத்மராஜன் மிக இயல்பாக இணைக்கிறார்.
எதையும் செயற்கையாக விளக்குவதற்குப் பதிலாக, காட்சிகளின் இயல்பான ஓட்டத்திலேயே பார்வையாளரை அந்த உலகத்துக்குள் கொண்டு செல்கிறார்.
பாச்சுவாக ஜெயராம் காட்டும் இளமைத் துடிப்பும் இயல்பான குறும்பும், அப்பூப்பனாக திலகன் வெளிப்படுத்தும் பாசமும் நெருக்கமும் படத்தின் உணர்ச்சித் தளத்தை வலுப்படுத்துகின்றன.
குறிப்பாக அப்பூப்பன் என்ற கதாபாத்திரம் வெறும் வயதான குடும்பத் தலைவராக எழுதப்படவில்லை. தனிமை, நினைவு, பாசம், எதிர்பார்ப்பு, அன்புக்காக ஏங்கும் மனம் ஆகிய பல அடுக்குகள் அவருக்குள் இருக்கின்றன.
திலகனின் நடிப்பில் இந்த அடுக்குகள் உரத்த வசனங்களாக வெளிப்படாமல், பார்வை, முகபாவனை, உடல் மொழி, மௌனம் ஆகியவற்றின் வழியாக வெளிப்படுகின்றன. இதுவே அவரது நடிப்பை மிகவும் நம்பகமானதாக மாற்றுகிறது.
ஜெயராமின் பாச்சுவில் இருக்கும் உற்சாகம் திரைப்படத்தின் ஆரம்ப உணர்வை இலகுவாக வைத்திருக்கிறது.
நண்பர்களுடன் இருக்கும் காட்சிகளில் அவருடைய இயல்பான நடிப்பு கதாபாத்திரத்தை செயற்கையான கதாநாயகனாக இல்லாமல், நமக்குத் தெரிந்த ஒரு இளைஞனாக மாற்றுகிறது.
பத்ராவாக கீர்த்தி சிங் வெளிப்படுத்தும் மென்மையான உணர்வுகளும், துணைக் கதாபாத்திரங்களில் வரும் நடிகர்களின் இயல்பான பங்களிப்பும் சேர்ந்து ஒரு முழுமையான மனிதச் சூழலை உருவாக்குகின்றன.
திரைப்படத்தின் காட்சியமைப்பு இந்த மனித உலகத்திலிருந்து தனியாக நிற்பதில்லை. கடற்கரைப் பகுதியின் இயற்கை, பழமையான மூதாதையர் வீடு, குளம், மரங்கள், வயல்கள், மணல், கடல், உப்புக் குவியல்கள், கோட்டை, இடிபாடுகள் ஆகியவை வெறும் பின்னணிக் காட்சிகளாகப் பயன்படுத்தப்படவில்லை.
மனித வாழ்க்கை நடைபெறும் இடங்களாக அவை மாறுகின்றன. குறிப்பாக கடலும் மனிதர்களும் இடையேயான காட்சித் தொடர்பு மிகவும் கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அமைதியாகத் தோன்றும் இயற்கையின் பிரம்மாண்டத்துக்கு முன்னால் மனிதர்கள் எவ்வளவு சிறியவர்கள் என்பதை படம் நேரடியாகச் சொல்லாமல் காட்சிகளின் மூலமாக உணர்த்துகிறது.
கன்னியாகுமரி ,கொளச்சல் வட்டப்பாறை கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் இந்த இயற்கை உணர்வுக்கு முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றன.
கொளச்சல் பகுதியில் உள்ள மூதாதையர் வீடும், வட்டக்கோட்டையில் படமாக்கப்பட்ட கோட்டைச் சம்பந்தமான காட்சிகளும் படத்தின் உலகத்தை செயற்கையான திரைப்படத் தளமாகத் தோன்றவிடாமல் இயற்கையான வாழ்விடமாக மாற்றுகின்றன.
படத்தொகுப்பிலும் இதே அபாரமான ஒழுங்கு தெரிகிறது. திரைப்படம் பார்வையாளரை தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்கும் வேகமான வெட்டுக்களை நாடுவதில்லை.
காட்சிகளுக்குத் தேவையான இடத்தை அழுந்த வழங்குகிறது. இதனால் மனிதர்களின் முகங்களையும் மௌனங்களையும் சூழலையும் கவனிக்க முடிகிறது. திரைப்படத்தின் உணர்ச்சி வலிமை உரையாடல்களிலிருந்து மட்டும் வராமல், ஒரு காட்சி எவ்வளவு நேரம் திரையில் நீடிக்கிறது, ஒரு இடம் எவ்வளவு நேரம் நம்முன் இருக்கிறது என்பதிலிருந்தும் உருவாகிறது.
இந்தப் படத்தின் தனித்துவமான வலிமைகளில் ஒன்றாக இசைஞானி இளையராஜாவின் இசை அமைகிறது. பாடல்கள் கதையை நிறுத்தி தனியாகக் காட்சிப்படுத்தப்படும் இசைத் துண்டுகளாக இல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்ச்சி உலகத்துடன் இணைகின்றன.
“உணருமீ கானம்” பாடல் நினைவையும் ஏக்கத்தையும் மென்மையாகத் தூண்டும் தன்மை கொண்டது. அதன் இசைத் தொடக்கம் முதலே ஒரு பழைய நினைவின் வாசனையை உருவாக்குகிறது.
பாடலின் மெட்டு இனிமையாக இருந்தாலும் அதன் அடியில் ஒரு மெல்லிய சோக நிழல் இருப்பதால், அது வெறும் இனிமையான பாடலாக நின்றுவிடாமல் படத்தின் உணர்ச்சிச் சூழலோடு ஊன்றிக் கலக்கிறது.
ஜி. வேணுகோபால் குரலில் அந்தப் பாடலின் மென்மையும் ஏக்கமும் மேலும் வலுப்பெறுகின்றன.
“தாமரக்கிளி பாடுன்னு” காதல் பாடல் முற்றிலும் வேறுபட்ட உணர்வை வழங்குகிறது. பாச்சு மற்றும் பத்ரா தொடர்பான காதல் உணர்வுகளுக்கு ஏற்ற இலகுவான டூயட் பாடலாக அது அமைந்துள்ளது.
கே. எஸ். சித்ரா, எம். ஜி. ஸ்ரீகுமார், இளையராஜா ஆகியோரின் குரல்கள் பாடலுக்கு இளமைத் தன்மையை அளிக்கின்றன.
இதனால் திரைப்படத்தின் மனித உறவுகளுக்குள் இருக்கும் மகிழ்ச்சியான பரிமாணம் இயல்பாக வெளிப்படுகிறது.
ஆனால் இந்தப் படத்தின் இசையின் உண்மையான சிறப்பு பாடல்களைக் கடந்தே இருக்கிறது. இளையராஜாவின் பின்னணி இசை காட்சிகளின் உணர்ச்சியை கட்டளையிடுவதற்குப் பதிலாக அதை மெதுவாக வழிநடத்துகிறது.
நம்பிக்கை, காத்திருப்பு, பதற்றம், நினைவு, தனிமை போன்ற உணர்வுகள் காட்சிகளின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதில்லை.
இசை அவற்றின் பின்னால் அமைதியாக நகர்கிறது. குறிப்பாக கடல் சார்ந்த காட்சிகளில் பின்னணி இசையும் இயற்கை ஒலிகளும் இணையும் விதம் பார்வையாளரை அந்த இடத்தின் மனநிலைக்குள் இழுக்கிறது.
இந்தப் படத்தின் பின்னணி இசையைத் தனியாகக் கேட்டாலும் அதன் உணர்ச்சிச் சூழலை உணர முடியும் என்பதே அதன் வலிமை.
ஒலியமைப்பிலும் கடலின் இருப்பு முக்கியமானது. அலைகளின் ஓசை, காற்றின் சத்தம், இயற்கையின் அமைதி ஆகியவை வெறும் சுற்றுப்புற ஒலிகளாக இல்லாமல் திரைப்படத்தின் உணர்ச்சித் தளத்தின் ஒரு பகுதியாக மாறுகின்றன.
மனிதர்கள் பேசாத தருணங்களிலும் ஒலி தொடர்ந்து ஒரு உணர்வை உருவாக்குகிறது. இதனால் சில காட்சிகளில் வசனத்தைவிட இயற்கையின் ஒலியே அதிகமாகப் பேசுகிறது.
வேணுவின் ஒளிப்பதிவு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. கடல், மணல், உப்பு மேடுகள், வயல்கள், மரங்கள், குளம், பழமையான வீடு, கோட்டை, இடிபாடுகள் எனப் படத்தின் இயற்கைச் சூழலை அவர் வெறும் அழகுக்காகப் பதிவு செய்யவில்லை;
அந்தச் சூழலுக்குள் மனிதர்கள் வாழும் விதத்தையும், அவர்களின் உறவுகளையும் உணரக்கூடிய வகையில் காட்சிகளாக மாற்றுகிறார்.
குறிப்பாக கடல் இந்தப் படத்தில் ஒரு சாதாரண இயற்கைக் காட்சியாகத் தெரியாமல், மனிதர்களின் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் சக்தியாகத் தோன்றுவதற்கு ஒளிப்பதிவு பெரிதும் துணைபுரிகிறது.
மனிதர்கள் சிறியவர்களாகவும், அவர்களைச் சுற்றியிருக்கும் இயற்கை அளவிட முடியாததாகவும் தோன்றும் காட்சியமைப்பு படத்தின் உணர்வை ஆழப்படுத்துகிறது.
அதே நேரத்தில், வேணு மனிதர்களின் முகங்களையும் உடல்மொழியையும் இயற்கையின் பரந்த வெளிகளுடன் சமநிலைப்படுத்துகிறார்.
பழமையான வீட்டின் அறைகளுக்குள் இருக்கும் நெருக்கமும், கடற்கரையின் திறந்த வெளியில் உருவாகும் தனிமை உணர்வும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட காட்சி அனுபவத்தைத் தருகின்றன.
அதனால் படம் ஒரு கதையை மட்டும் பார்க்கும் அனுபவமாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் வாழும் மனிதர்களின் உலகத்தை நேரில் உணரும் அனுபவமாக மாறுகிறது.
வேணுவின் ஒளிப்பதிவின் சிறப்பு இதுதான்: காட்சிகளை அழகாகக் காட்டுவதைக் கடந்து, அந்தக் காட்சிகளுக்குள் ஒரு உணர்வை உருவாக்குவது.
கலை இயக்கமும் இதே இயல்பைத் தொடர்கிறது. பழைய வீடு, அதன் பொருட்கள், சுற்றியுள்ள நிலப்பரப்பு, கடற்கரைச் சூழல் ஆகியவை அந்த வாழ்க்கையின் காலப்பின்னணியை நம்பகமாக உருவாக்குகின்றன.
ஆடை வடிவமைப்பும் கதாபாத்திரங்களை அலங்கரிப்பதற்காக அல்லாமல் அவர்கள் வாழும் சமூகச் சூழலுக்குப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.
இதனால் படம் ஒரு குறிப்பிட்ட காலத்தையும் இடத்தையும் சேர்ந்த மனிதர்களின் வாழ்க்கையாகத் தோன்றுகிறது.
பத்மராஜனின் திரைப்பட மொழியில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், பெரிய தத்துவங்களைச் சிறிய மனிதத் தருணங்களின் வழியாகச் சொல்வது. இந்தப் படமும் மரணம், வாழ்க்கையின் நிலையற்ற தன்மை, மனித உறவுகளின் சார்பு, தனிமை, அன்பின் தேவை, எதிர்பார்ப்பு, இயற்கையின் முன் மனிதனின் இயலாமை போன்ற விஷயங்களைப் பேசுகிறது.
ஆனால் இவை எதுவும் நீண்ட அறிவுரைகளாக மாறுவதில்லை. கதாபாத்திரங்களின் இயல்பான வாழ்க்கையிலேயே அவை ஊடுருவுகின்றன.
அதனால்தான் இந்தத் திரைப்படம் வழக்கமான கண்ணீர் வரவழைக்கும் சோகப் படமாகத் தோன்றுவதில்லை. உணர்ச்சியைப் பெரிதாக்குவதற்காக நீண்ட அழுகைக் காட்சிகளையோ மிகையான வசனங்களையோ நம்பாமல், மனிதர்களின் மனதுக்குள் ஏற்படும் சிறிய மாற்றங்களையே நம்புகிறது.
பார்வையாளரை அழ வைக்க வேண்டும் என்று படம் முயற்சி செய்வதில்லை; மனித உறவுகளின் மதிப்பை உணரச் செய்கிறது. அதுவே அதன் தாக்கத்தை இன்னும் ஆழமாக்குகிறது.
படத்தின் மற்றொரு சிறப்பு, மனிதர்களை நல்லவர்–கெட்டவர் என்ற எளிய பிரிவுக்குள் அடைக்காமல் அவர்களுடைய தனிமை மற்றும் தேவைகளின் அடிப்படையில் பார்க்கிறது.
அப்பூப்பன், பத்ரா, நளினி, கவலா, பத்ராவின் தாத்தா, பாச்சுவின் நண்பர்கள் என ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு இழப்பு அல்லது வெற்றிடம் இருக்கிறது.
ஆனால் அவர்கள் அந்த வெற்றிடங்களோடு வாழ்வதற்கான உறவுகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த அணுகுமுறையால் படம் ஒரு குடும்பக் கதையைத் தாண்டி, மனிதர்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு தாங்கிக்கொண்டு வாழ்கிறார்கள் என்பதற்கான நுட்பமான பதிவாக மாறுகிறது.
உலகளாவிய அளவில் கிடைத்த விமர்சன வரவேற்பும் இந்தப் படத்தின் நீடித்த தாக்கத்தை உறுதிப்படுத்துகிறது.
விமர்சனங்களில் நடிகர் திலகனின் நடிப்பு குறிப்பாகப் பாராட்டப்பட்டது; திரைப்படத்தின் உணர்ச்சித் தாக்கமும் அதன் காட்சியமைப்பும் குறிப்பிடத்தக்கதாகப் பேசப்பட்டன.
வெளியான காலத்திலும் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவான “உணருமீ கானம்” பாடலுக்காக ஜி. வேணுகோபால் கேரள மாநில சிறந்த பாடகர் விருதைப் பெற்றார்.
“மூணாம்பக்கம்” பார்க்க வேண்டிய முக்கியமான காரணம் அதன் கதை மட்டுமல்ல; மனிதர்களின் வாழ்க்கையை அது எவ்வளவு நெருக்கமாகப் பார்க்கிறது என்பதுதான்.
ஒரு பழைய வீடு, சில மனிதர்கள், ஒரு கடற்கரை, சில உறவுகள், நினைவுகளோடு வாழும் மனிதர்கள்—இவற்றை வைத்தே பத்மராஜன் மனதில் நீண்ட நேரம் தங்கக்கூடிய திரைப்பட அனுபவத்தை உருவாக்குகிறார்.
இளையராஜாவின் இசையும் கடலின் ஒலியும் திலகனின் நுணுக்கமான நடிப்பும் பத்மராஜனின் கட்டுப்படுத்தப்பட்ட கதைசொல்லலும் ஒன்றாகச் சேரும்போது, படம் முடிந்த பிறகும் அதன் மனிதர்களும் அந்தக் கடற்கரையும் மனதில் தொடர்ந்து இருக்கின்றன.
பார்வையாளர் அந்த உலகத்துக்குள் நேரடியாகச் சென்று அனுபவிப்பதே இந்தப் படத்துக்குச் சரியான அணுகுமுறை. “மூணாம்பக்கம்” பார்க்கப்பட வேண்டிய திரைப்படம் மட்டுமல்ல; பார்த்த பிறகும் நம்முடைய உறவுகளைப் பற்றியும், நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மதிப்பைப் பற்றியும் அமைதியாகச் சிந்திக்க வைக்கும் திரைப்படம்.
===============================
படத்தின் கதை:-
தம்பி என்ற பெயர்கொண்ட அப்பூப்பன் (திலகன்) தன் எண்பதுகளில் கடற்கரைப் பகுதியில் இருக்கும் தனது மூதாதையர் வீட்டில் தனிமையாக வாழ்கிறார்.
இந்திய ரயில்வேயில் கணக்காளராகப் பணியாற்றி 1980களின் நடுப்பகுதியில் ஓய்வு பெற்ற அவர், ஏற்கெனவே தனது ஒரே மகனான ஜெயன் (வேணு நாகவள்ளி) என்பவரை இழந்திருக்கிறார்.
அந்த இழப்புக்குப் பிறகு அவருடைய உலகத்தில் எஞ்சியிருக்கும் மிக முக்கியமான உறவு பேரன் பாஸ்கர் என்கிற பாச்சு (ஜெயராம்). மருத்துவப் படிப்புக்காக பெங்களூரு மருத்துவக் கல்லூரியில் தங்கி இருக்கும் பாச்சுவை கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பூப்பன் நேரில் பார்த்திருக்கவில்லை.
அதனால் விடுமுறையில் பேரன் வருகிறான் என்ற செய்தியே அவருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாகிறது. மகனை இழந்த பிறகு தனது வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கையும் பாச்சுதான் என்பதால், அவனுடைய வருகையை அப்பூப்பன் ஆவலுடன் எதிர்பார்க்கிறார், அவன் நண்பர்களுக்காக புதிதாக நான்கு வெஸ்டன் கழிவறை கட்டுகிறார் .
பாச்சு தனது கல்லூரி நண்பர்களான லோபஸ் (ரஹ்மான்), ரஞ்சித் மேனன் (அசோகன்), கிருஷ்ணன்குட்டி (அஜயன்) ஆகியோருடன் அப்பூப்பனின் வீட்டுக்கு வருகிறான்.
இளைஞர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் நீண்ட காலமாக அமைதியாக இருந்த அந்தப் பழைய வீடு மீண்டும் சிரிப்பும் பேச்சும் விளையாட்டும் நிறைந்ததாக மாறுகிறது.
பேரனைப் பார்த்த மகிழ்ச்சியுடன் அப்பூப்பன் அவனுடைய நண்பர்களுடனும் இயல்பாகப் பழகுகிறார். பாச்சுவும் நண்பர்களும் வீட்டில் தங்குவது, அவர்களுடன் அப்பூப்பன் நேரம் செலவிடுவது, இளைஞர்களின் குறும்புகளையும் உற்சாகத்தையும் ரசிப்பது என அவரது தனிமையான வாழ்க்கைக்குள் மீண்டும் உயிரோட்டம் திரும்புகிறது.
பல ஆண்டுகளாகத் தன்னுள் அடங்கியிருந்த நினைவுகளுக்கும் அமைதிக்கும் நடுவே, பேரனின் வருகை அவருக்கு மீண்டும் ஒரு குடும்பம் தன்னுடன் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
பாச்சுவின் வாழ்க்கையில் பத்ரா (கீர்த்தி சிங்) மிகவும் நெருக்கமானவள். அவள் பாச்சுவின் காதலி மட்டுமல்லாமல், சிறுவயதிலிருந்தே அவனுடன் நெருக்கமாக வளர்ந்தவள்.
பத்ரா தனது பணிச்சுமை மிகுந்த மருத்துவர் பெற்றோர் இருவரிடமிருந்தும் பிரிந்து வாழ்கிறாள். அந்தத் தனிமையின் வெற்றிடத்தை அவளுடைய தாத்தாவான மருத்துவர் (சுராஜ்) அளிக்கும் அன்பும், பாச்சுவுடன் நீண்ட காலமாகத் தொடரும் நட்பும் காதலும் நிரப்புகின்றன.
அதனால் பாச்சுவின் வருகை அவளுடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை உருவாக்குகிறது. அவள் அப்பூப்பனுடனும் நெருக்கமாகப் பழகுகிறாள். அப்பூப்பனுக்கும் பத்ராவுக்கும் இடையே பாச்சுவின் மூலம் உருவான குடும்பத் தொடர்பு வலுப்பெறுகிறது.
அப்பூப்பனைச் சுற்றி வாழும் மற்றவர்களுக்கும் அவர்களுக்கென்று தனித்தனி வெற்றிடங்கள் இருக்கின்றன.
பாச்சுவின் தூரத்து சித்தி முறையான முதிர்கன்னி நளினி இவ்வீட்டில் வேலை செய்கிறாள்; அவளுடைய வாழ்க்கை அப்பூப்பன் அளிக்கும் ஆதரவையே பெரிதும் சார்ந்திருக்கிறது.
தனிமையில் வாழும் கவல (ஜகதி ஸ்ரீகுமார்) அந்த வீட்டுடன் இணைந்திருப்பதன் மூலம் தனக்கென ஒரு இடத்தையும் மனிதர்களுடன் சேர்ந்திருக்கும் உணர்வையும் பெற்றிருக்கிறார்.
பத்ராவின் தாத்தாவான மருத்துவரும் தான் கட்டிய மருத்துவமனை, குடும்பம், நண்பர்கள் ஆகியவற்றுடன் தொடர்ந்து உறவைப் பேணி வாழ்க்கையை முன்னெடுக்கிறார்.
இவ்வாறு ஒரே வீட்டைச் சுற்றி வாழும் இவர்கள் அனைவரும் ரத்த உறவுகளால் மட்டும் இணைந்தவர்கள் அல்ல; அன்பு, நட்பு, பழக்கம், உதவி, பாதுகாப்பு ஆகியவற்றால் ஒன்றுக்கொன்று துணையாக உருவாகியிருக்கும் ஒரு மனிதச் சூழலாக இருக்கிறது.
இந்த உலகத்தின் மையத்தில் பாச்சு இருக்கிறான். அப்பூப்பனுக்கு அவன் பேரன் மட்டுமல்ல; மகனை இழந்த பிறகு வாழ்க்கையைத் தொடர வைத்திருக்கும் முக்கியமான காரணம்.
பத்ராவுக்கு அவன் சிறுவயது முதல் தொடரும் அன்பான உறவு. பாச்சுவின் நண்பர்களுக்கு அவன் நெருங்கிய தோழன். நளினி, கவல போன்றவர்களும் இந்த இளைஞர்களின் வருகையால் உயிரோட்டம் பெறுகிறார்கள்.
அப்பூப்பனின் பழைய வீடு, குளம், மரங்கள், வயல்கள், கடற்கரை, மணல், கடலில் குவியும் உப்பு, கோட்டை, இடிபாடுகள் என சுற்றியுள்ள இயற்கை உலகமும் இந்த மனிதர்களின் அன்றாட வாழ்க்கையோடு கலந்திருக்கிறது.
அந்தக் கடல் அவர்களுக்கு விளையாடவும் மகிழவும் செல்லும் இடமாக இருக்கிறது. ஆனால் அதே கடல்தான் அவர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றப்போகிறது.
விடுமுறை நாட்களில் பாச்சுவும் அவனுடைய நண்பர்களும் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று கடலில் நீந்துகிறார்கள்.
கடலுக்குச் செல்வது அவர்களுடைய வழக்கமான பொழுதுபோக்காக மாறுகிறது. குறிப்பாக கடலில் நீந்த வேண்டும் என்பது நண்பர்களின் விருப்பமாக இருக்கிறது.
அந்த இளைஞர்களின் உற்சாகமான வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருக்கும் அப்பூப்பனுக்கு அது அவருடைய பேரனும் நண்பர்களும் மகிழ்ச்சியாக இருப்பதைக் காணும் இன்னொரு காரணமாக இருக்கிறது.
ஒருநாள் பாச்சுவும் லோபஸும் கடலில் நீந்திக்கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக இருவரும் கடலுக்குள் இழுக்கப்படுகிறார்கள்.
லோபஸ் போராடி வெளியேறிவிடுகிறான். ஆனால் பாச்சுவால் கரைக்குத் திரும்ப முடியவில்லை. அவன் கடலில் காணாமல் போகிறான்.
சில நிமிடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த பாச்சு திடீரெனக் கண்முன்னே இல்லாமல் போனதால் லோபஸும் மற்ற நண்பர்களும் அதிர்ச்சியடைகிறார்கள்.
அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நடந்த இந்தச் சம்பவம் அவர்களுடைய மனத்தில் பெரும் குற்றவுணர்வையும் உருவாக்குகிறது.
ஏனெனில் கடலுக்குச் சென்று நீந்த வேண்டும் என்று தொடர்ந்து விரும்பியவர்களே அவர்கள்.
பாச்சுவைக் கண்டுபிடிக்க காவல்துறையினரும் உள்ளூர் மக்களும் கடலில் தேடுதல் நடத்துகிறார்கள்.
கடலின் அடிஒழுக்குள்ள பல பகுதிகளில் தேடியும் அவனுடைய உடல் கிடைக்கவில்லை. பாச்சு உயிருடன் இருக்கிறானா, அலைகள் அவனை வேறு இடத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறதா, அல்லது அவன் ஏற்கெனவே இறந்துவிட்டானா என்பதற்கு யாரிடமும் உறுதியான பதில் இல்லை.
இந்தத் தெளிவின்மையே அடுத்த மூன்று நாட்களையும் கொடூரமான காத்திருப்பாக மாற்றுகிறது.
அந்தக் கடற்கரைப் பகுதியில் நிலவும் நம்பிக்கை ஒன்றும் இந்தக் காத்திருப்புடன் இணைகிறது.
கடல் ஒருவரை எடுத்துக்கொண்டால், மூன்றாம் நாளில் அவரது உடலைத் திருப்பிக் கரையில் சேர்க்கும் என்பதே அந்த நம்பிக்கை.
பாச்சுவின் உடல் கிடைக்காததால், அவன் இறந்துவிட்டான் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலை உருவாகிறது.
அதனால் சிலரிடம் அவன் உயிருடன் திரும்பிவிடக்கூடும் என்ற நம்பிக்கையும், இன்னும் சிலரிடம் அவன் இறந்துவிட்டான் என்ற அச்சமும் மாறி மாறி எழுகின்றன.
அப்பூப்பன் மட்டும் பாச்சு இறந்துவிட்டான் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.
மற்றவர்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்கிய நேரத்திலும் அவர் பாச்சு திரும்பி வருவான் என்ற நம்பிக்கையை விடுவதில்லை.
அதே நேரத்தில் தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஆறுதல்படுத்த வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்படுகிறது.
பாச்சுவின் தாய் பானு (ஜெயபாரதி), பாச்சுவின் நண்பர்கள், பத்ரா என அனைவரும் துயரத்தில் இருக்கும்போது, அப்பூப்பன் அவர்களைத் தேற்றுகிறார்.
ஆனால் அவருடைய மனத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை வெளியில் காட்டாமல் அந்த நம்பிக்கையைத் தாங்கிக்கொள்கிறார்.
இந்த மூன்று நாட்களில் பாச்சுவின் நண்பர்கள் கடற்கரையை விட்டு விலக முடியாமல் தவிக்கிறார்கள்.
தாங்கள்தான் அடிக்கடி கடலில் நீந்தச் சென்றவர்கள் என்பதால், பாச்சு கடலில் சிக்கியதற்கான குற்றவுணர்வு அவர்களைத் துரத்துகிறது.
ஒவ்வொரு காலையும் அவர்கள் கடற்கரைக்குச் செல்கிறார்கள். கடல் எதையாவது கரைக்கு கொண்டு வருகிறதா என்று தொலைவில் பார்த்துக்கொண்டே நிற்கிறார்கள்.
அங்கே அவர்களிடம் தொடர்ந்து கேட்கப்படும் ஒரே கேள்வி, “உடல் கிடைத்ததா?” என்பதுதான்.
அந்த வார்த்தையே அவர்களை வேதனைப்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் தேடுவது நண்பன் உயிருடன் திரும்புவான் என்ற நம்பிக்கையிலிருந்து, அவனுடைய உயிரற்ற உடலை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.
ஒருநாள் ரஞ்சித் கடலை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும்போது தொலைவில் ஏதோ ஒரு பொருள் மிதப்பதைப் பார்க்கிறான்.
அது பாச்சுவின் உடலாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பில் அவன் அவசரமாக அந்தத் திசையை நோக்கிச் செல்கிறான்.
அவனுடைய மனதில் ஒரே நேரத்தில் இரண்டு எண்ணங்கள் ஓடுகின்றன—பாச்சு உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையும், அவன் உடல் கிடைக்கப்போகிறது என்ற பயமும்.
ஆனால் அருகில் சென்ற பிறகுதான் அது பாச்சுவின் உடல் அல்ல, கடலில் மிதந்து வந்த ஒரு மரத்துண்டு என்பதை அறிகிறான். அந்தச் சிறிய நம்பிக்கையும் உடைந்து போகிறது.
இதே நேரத்தில் பத்ராவும் பாச்சுவுக்காகக் காத்திருக்கிறாள். பெற்றோரிடமிருந்து ஏற்கெனவே பிரிந்திருக்கும் அவளுடைய வாழ்க்கையில் பாச்சுவின் அன்பு ஒரு முக்கியமான ஆதரவாக இருந்ததால், அவன் காணாமல் போனது அவளுடைய தனிமையை இன்னும் பெரிதாக்குகிறது.
பாச்சு திரும்பி வருவான் என்று எதிர்பார்க்கும் அப்பூப்பனின் நம்பிக்கைக்கும், அவனை இழந்துவிட்டோமோ என்ற பத்ராவின் பயத்துக்கும் இடையே அந்த நாட்கள் நகர்கின்றன.
மூன்றாம் நாள் வருகிறது. கடல் இறுதியில் பாச்சுவைத் திருப்பிக் கொடுக்கிறது. ஆனால் உயிருடன் அல்ல; உடலாக.
பாச்சுவின் உடல் கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடைக்கிறது. கடலில் மூன்று நாட்கள் இருந்ததால் மீன்கள் கடித்து முகம் உருமாறி உடல் அழுகிய நிலையில் இருக்கிறது.
அதனால் உடலை உடனடியாக இறுதி அஞ்சலிக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. கடற்கரையிலேயே தென்னங்கீற்றுகளை வைத்து மறைப்பு ஏற்படுத்தி, அந்த மறைவுக்குள் பாச்சுவின் உடலை வைத்து பிரேதப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு அதே கடற்கரையில் நண்பர்களுடன் சிரித்தபடி நீந்திய இளைஞனின் உடல் இப்போது தென்னங்கீற்று மறைவுக்குள் பிரேதப் பரிசோதனைக்காகக் கிடப்பது அனைவரையும் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்துகிறது.
கடல் எடுத்துக்கொண்டதை மூன்றாம் நாள் திருப்பிக் கொடுக்கும் என்ற நம்பிக்கை நிறைவேறுகிறது; ஆனால் திரும்பி வந்தது பாச்சுவின் உயிரல்ல, அவனுடைய உடல் மட்டுமே.
பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு பாச்சுவின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அப்பூப்பனுக்கு இது தனது வாழ்க்கையில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த மகன் இழப்பின் மீது விழுந்த இன்னொரு பேரழிவாகிறது.
மகனை இழந்த பிறகு பேரனையே தனது வாழ்க்கையின் மையமாக வைத்திருந்த அவருக்கு, இப்போது அந்தப் பேரனையும் இழந்துவிட்ட நிலை ஏற்படுகிறது.
இருந்தாலும் அவர் சடங்குகளைச் செய்து முடிக்கிறார். பாச்சுவின் நண்பர்களும் அந்த இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்கள்.
அடுத்த நாள் நண்பர்கள் அங்கிருந்து புறப்படத் தயாராகிறார்கள். ஆனால் பாச்சுவை விட்டுச் செல்லும் முன், அவர்கள் கடைசியாக அவனுடன் சென்ற கடற்கரைக்குச் செல்கிறார்கள்.
பாச்சுவின் மரணத்துக்குக் காரணமான அதே கடல் அவர்களுக்கு முன்பாகப் பரந்து கிடக்கிறது. அவர்கள் பார்த்த அந்தக் கடலே இப்போது பாச்சுவின் நினைவாக மட்டுமே மாறியிருக்கிறது.
அப்போது அப்பூப்பன் சில புரோகிதர்களுடன் கடற்கரைக்கு வருகிறார். பாச்சுவுக்கான இறுதி சடங்கின் ஒரு பகுதியாக அங்கு பலி சடங்கை நிறைவேற்றுவதற்காக அவர் வந்திருக்கிறார்.
பலிச் சடங்கு நடைபெறுகிறது. அப்பூப்பன் இறுதியாக பாச்சுவுக்காக வைக்கப்பட்ட பலி உருண்டையை தனது கைகளில் எடுத்துக்கொள்கிறார்.
அந்தச் சிறிய உருண்டையை கையில் எடுத்த அந்தக் கணத்தில் அவரது நினைவில் உயிரோடு இருக்கும் பாச்சு தோன்றுகிறான்.
கடலில் உற்சாகமாக நீந்திய பேரன், நண்பர்களுடன் சிரித்த பேரன், தனது தனிமையான வாழ்க்கைக்குள் மீண்டும் மகிழ்ச்சியை கொண்டு வந்த பேரன் என பாச்சுவின் நினைவுகள் அவரைச் சூழ்கின்றன.
இப்போது அந்தப் பேரனுக்காக பலிச்சோற்றை எடுத்துக்கொண்டு நிற்க வேண்டிய நிலை அவருடைய மனதில் எஞ்சியிருந்த கடைசி நம்பிக்கையையும் உடைத்துவிடுகிறது.
இதுவரை பாச்சு திரும்பி வருவான் என்று நம்பிய அப்பூப்பனிடம் இப்போது அந்த நம்பிக்கையும் இல்லை.
மகனை இழந்த பிறகு பேரனையே தனது வாழ்க்கையின் காரணமாக வைத்திருந்த அவர், பேரன் இல்லாத உலகில் தனியாக வாழ வேண்டிய நிலையை எதிர்கொள்ள முடியாமல் போகிறார்.
பலிச்சோற்றை கையில் வைத்தபடியே அவர் கடலை நோக்கி மிகவேகமாக நடக்கத் தொடங்குகிறார். அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சியுடன் செய்வதறியாது அவரைப் பார்க்கிறார்கள்.
பாச்சுவின் உடலை எடுத்துக்கொண்ட அதே கடலுக்குள் அப்பூப்பனும் நுழைகிறார். தனது கையில் இருந்த பலிச்சோற்றுடன் தன்னை கடலுக்கு ஒப்படைத்துக் கொள்கிறார்.
அப்பூப்பனும் பாச்சுவும் இல்லாத நிலையில் அந்த வீட்டின் உயிரோட்டமே மறைந்து விடுகிறது. சில நாட்களுக்கு முன்பு பாச்சுவும் அவனுடைய நண்பர்களும் வந்ததால் சிரிப்பும் பேச்சும் நிறைந்திருந்த அந்தப் பழைய வீடு மீண்டும் வெறுமையாகிறது.
பாச்சுவின் நண்பர்கள் தங்களுடைய நண்பனை இழந்துவிட்ட நிலையில் புறப்படுகிறார்கள்.
பத்ரா தனது சிறுவயது முதல் தன்னுடன் இருந்த காதலையும் துணையையும் இழக்கிறாள். பாச்சுவின் தாய் பானு தனது மகனை இழந்த துயரத்துடன் நிற்கிறார்.
நளினிக்கும் கவலாவுக்கும் வாழ்க்கையில் தங்களுக்குத் துணையாக இருந்த அப்பூப்பனையும் இழந்த நிலை ஏற்படுகிறது.
அப்பூப்பனைச் சுற்றி உருவாகியிருந்த அந்த மனித உறவுகளின் உலகம் ஒரே நிகழ்வால் சிதறிப்போகிறது.
ஆனால் கடல் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. பாச்சுவையும் அப்பூப்பனையும் எடுத்துக்கொண்ட பிறகும் அலைகள் வழக்கம்போல கரையை நோக்கி வந்து மோதுகின்றன.
மணல் அப்படியே கிடக்கிறது. கோட்டையும் இடிபாடுகளும் அப்படியே நிற்கின்றன. கடல் தனது கொடூரத்தால் இரண்டு உயிர்களைப் பறித்திருந்தாலும் அதற்காக அதன் இயல்பு மாறவில்லை.
மனிதர்கள் உருவாக்கிய சிறிய உலகம்—சிரிப்பு, அன்பு, நட்பு, குடும்பம், எதிர்பார்ப்பு, காத்திருப்பு—மட்டுமே அழிந்துவிட்டது.
மனிதர்களின் இருப்பு அந்த இயற்கைக் காட்சிகளுக்கு அர்த்தம் கொடுத்திருந்தது; இப்போது அந்த மனித இருப்பே இல்லாமல் போயிருக்கிறது.
கடல் தொடர்ந்து அலைகளை வீசிக்கொண்டிருக்க, ஒருகாலத்தில் பாச்சுவின் சிரிப்பாலும் அப்பூப்பனின் அன்பாலும் உயிர்ப்புடன் இருந்த அந்த உலகம் மட்டும் நினைவாக மிஞ்ச படம் நிறைகிறது.
#கீதப்ப்ரியன்மலையாளம்க்ளாஸிக்