2022 ஆம் ஆண்டு வெளியான தி வேல் The Whale மகத்தான அமெரிக்க உளவியல் திரைப்படம் , சாமுவேல் டி ஹண்டர் எழுதிய மேடை நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட படைப்பு.
அதீத உடல் பருமன் கொண்ட ஆங்கில ஆசிரியர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் பிரிந்து சென்ற தன் மகளோடு மீண்டும் இணைய எடுக்கும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. இப்படம் மனித மனதின் குற்ற உணர்வு, மத நம்பிக்கை மற்றும் மீட்பு ஆகியவற்றைப் பற்றி மிக ஆழமாகப் பேசுகிறது.
இத்திரைப்படம் உலகளாவிய ரீதியில் பெரும் விவாதங்களை உருவாக்கியது.
பெண்டன் பிரேசர் மற்றும் ஹாங் சாவ் ஆகியோரின் நடிப்பு உலகத்தரம் வாய்ந்தது எனப் போற்றப்பட்டது.
உடல் பருமன் கொண்டவர்களின் வாழ்க்கையை இப்படம் சித்தரித்த விதம் குறித்து விமர்சனங்களும் எழுந்தன,இயக்குநர் அதற்கு, பொதுவாகப் பருமனானவர்கள் சினிமாவில் நகைச்சுவைக்காகவோ அல்லது வில்லன்களாகவோ மட்டுமே காட்டப்படுவதாகவும், தாம் அவர்களை ஒரு முழுமையான மனிதர்களாகக் காட்டவே முயற்சி செய்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.
இருப்பினும் அனுதாபத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு ஆழமான மானுடத் தேடலாகவே பல சினிமா மேதைகள் இதைக் கொண்டாடுகின்றனர்.
டாரன் அரோனோப்ஸ்கி இத்திரைப்படத்தை அற்புதமாக இயக்கியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கதையைப் படமாக்க அவர் முயற்சி செய்து வந்துள்ளார்.
சார்லி என்ற முதன்மைக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகரைத் தேடுவதிலேயே அவருக்குப் பல ஆண்டுகள் செலவாகின. இறுதியில் பெண்டன் பிரேசரின் பழைய நடிப்புத் திறனைக் கண்டு அவரைத் தேர்வும் செய்துள்ளார்.
அரோனோப்ஸ்கி இப்படத்தை ஒரு குறுகிய அறைக்குள் நடக்கும் கதையாக கச்சிதமாக திட்டமிட்டு அதன் உணர்ச்சிகளை மிக நெருக்கமாகப் படம்பிடித்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள நியூபர்க் பகுதியில் 2021 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தை அகாடமி ரேஷியோ எனப்படும் விகிதத்தில் படமாக்கியுள்ளனர்.
இது சார்லியின் முடக்கப்பட்ட வாழ்க்கையைத் திரையில் ஒரு நெருக்கமான உணர்வுடன் காட்ட உதவுகிறது.
பெண்டன் பிரேசர் சார்லியாக மாறுவதற்குத் தினமும் நான்கு மணி நேரம் ஒப்பனை செய்ய வேண்டியிருந்தது. சுமார் 136 கிலோ எடையுள்ள செயற்கை உடலமைப்பை அவர் அணிந்து நடித்தார்.
79 வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 2022 செப்டம்பர் 4 அன்று இப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது.
அங்கு திரையிடப்பட்ட பிறகு சுமார் ஆறு நிமிடங்கள் எழுந்து நின்று மக்கள் கைதட்டிப் பாராட்டினர். பின்னர் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. டிசம்பர் 9 ஆம் தேதி அமெரிக்காவில் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகிப் பின்னர் உலகம் முழுவதும் பரவலாகத் திரையிடப்பட்டது.
3 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான இப்படம் 57 மில்லியன் டாலர் வரை வசூலித்து சாதனை படைத்தது.
பெண்டன் பிரேசர் சார்லியாக வாழ்ந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். அவரது கண்களும் குரலும் ஒரு தந்தை படும் வேதனையை மிகச் சரியாகப் பிரதிபலித்தன.
சேடி சிங்க் கோபக்கார மகளாகவும் ஹாங் சாவ் ஒரு உண்மையான தோழியாகவும் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவர்களுடன் டை சிம்ப்கின்ஸ் மற்றும் சமந்தா மார்டன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு முழுமையான நியாயத்தை செய்துள்ளனர்.
இப்படத்திற்கு ராப் சைமன்சன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை கதையின் கனத்தையும் சார்லியின் மனப்போராட்டத்தையும் தாங்கிப் பிடிக்கும் விதமாக அமைந்துள்ளது.
ஒரு தனி அறைக்குள் நடக்கும் காட்சிகளுக்கு இசையின் மூலம் ஒரு பிரம்மாண்டமான உணர்வை அவர் சேர்த்துள்ளார். மேத்யூ லிபாடிக் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
95 வது அகாடமி விருதுகளில் பெண்டன் பிரேசர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.
மேலும் சிறந்த ஒப்பனை மற்றும் தலைமுடி அலங்காரத்திற்காகவும் இப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
ஹாங் சாவ் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் பரிந்துரையைப் பெற்றார். இவை தவிர பாஃப்டா மற்றும் கோல்டன் குளோப் போன்ற பல சர்வதேச விருது விழாக்களிலும் இப்படம் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
ஒரு மனிதன் தன் மரணத்தின் வாசலில் நின்றுகொண்டு தேடும் ஆத்மார்த்தமான மீட்பு மற்றும் மற்றவர்களிடம் அவன் காணும் மாறாத நன்மை ஆகும்,அதை திறம்பட பேசியது இப்படம்.
சார்லி தனது வாழ்க்கையில் செய்த தவறுகளாலும் இழப்புகளாலும் உருக்குலைந்து போயிருந்தாலும் தான் இறப்பதற்குள் தன் மகள் எல்லி ஒரு சிறந்த மனிதராக உருவெடுப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைத் தன் ஆன்மாவில் சுமந்து நிற்கிறார்.
புறத்தோற்றத்தைக் கண்டு உலகம் அருவருப்படைந்தாலும் ஒரு மனிதனுக்குள் இருக்கும் நேர்மையையும் ஈரத்தையும் அன்பு மட்டுமே கண்டறியும் என்பதை இப்படம் உரக்கச் சொல்கிறது.
இந்தக் கதையின் அடிநாதமாக விளங்குவது மனிதர்களுக்கிடையிலான உண்மையான தொடர்பு மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் அப்பட்டமான நேர்மை.
சார்லி தன் மாணவர்களிடமோ தன் மகளிடமோ எதிர்பார்ப்பது அறிவார்ந்த திறமைகளை அல்ல மாறாக அவர்களின் உள்ளத்தில் இருக்கும் கள்ளங்கபாடற்ற உண்மையைத்தான்.
அந்த உண்மைதான் ஒரு மனிதனை அவனது சுமைகளிலிருந்து விடுவித்து ஆன்மீக ரீதியாக உயர்த்திப் பிடிக்கிறது.
எல்லி எழுதிய மொபி டிக் கட்டுரை வெறும் எழுத்து அல்ல அது ஒரு தந்தையின் பார்வையில் தன் மகள் எவ்வளவு நேர்மையானவள் என்பதற்கான அத்தாட்சி.
இறுதியில் அன்பினால் வழங்கப்படும் மன்னிப்பும் பிறருக்குள் இருக்கும் நன்மையை அங்கீகரிப்பதும் தான் ஒரு மனிதனுக்குப் பேரின்பத்தைத் தருகிறது. சார்லி தனது இறுதித் தருணத்தில் எழுந்து நிற்பது என்பது ஈர்ப்பு விசையை வென்ற சாதனை அல்ல மாறாகத் தன் மகளின் அன்பைப் பெற்றுவிட்டதால் கிடைத்த ஒரு மகத்தான ஆன்ம விடுதலை.
ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கைவிட முடியாது என்பதும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மீட்புக்கான ஒளி ஒளிந்து கொண்டுள்ளது என்பதுமே இப்படத்தின் ஆழமான தத்துவமாகும்.
இத்திரைப்படம் 2009 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும் திரைப்படத்தில் இது 2016 ஆம் ஆண்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. கோவிட் தொற்று காலத்திற்கு முந்தைய காலத்தை காட்ட வேண்டும் என்பதற்காகவும் அப்போதைய குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் தேர்தலை தொலைக்காட்சியில் காட்டுவதற்காகவும் இந்த கால மாற்றம் செய்யப்பட்டது.
ஜேம்ஸ் கார்டன் நடிப்பில் டாம் ஃபோர்டு இயக்குவதாக இருந்த இப்படம் படைப்பு ரீதியான கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது.
பின்னர் ஜார்ஜ் குளூனி இப்படத்தை இயக்க பரிசீலித்தார் ஆனால் அவரும் இறுதியில் பின்வாங்கினார்.
பெண்டன் பிரேசர் அணிந்திருந்த செயற்கை பாகங்கள் 136 கிலோ எடையைக் கொண்டிருந்தன. அந்த எடையுடன் சார்லி கதாபாத்திரம் எப்படி நடப்பார் என்பதை அறிந்துகொள்வதற்காக நடன ஆசிரியர் ஒருவருடன் பல மாதங்கள் அவர் பயிற்சியும் மேற்கொண்டார்.
இப்படத்தில் வரும் லிஸ் கதாபாத்திரத்தில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஹாங் சாவ் நடித்ததால் அந்த கதாபாத்திரத்தின் பின்னணி மாற்றப்பட்டு அவர் ஒரு தத்தெடுக்கப்பட்ட மகளாகச் சித்தரிக்கப்பட்டார்.
லிஸ் கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் பச்சை குத்தப்பட்ட அடையாளங்கள் அனைத்தும் நடிகை ஹாங் சாவ் கொடுத்த ஆலோசனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.
மேடை நாடகத்தில் தாமஸ் கதாபாத்திரம் ஒரு மார்மன் மிஷனரியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது ஆனால் திரைப்படத்தில் அது ஒரு எவாஞ்சலிக்கல் கிறித்தவ மிஷனரியாக மாற்றப்பட்டது.
இப்படத்தின் இறுதிக் காட்சியில் சார்லி உண்மையில் நடக்கிறாரா இல்லையா என்பதைப் பார்வையாளர்களின் கற்பனைக்கே ஆசிரியர் விட்டுவிட்டார்.
இப்படத்தின் ஒளிப்பதிவு 4:3 என்ற அகாடமி விகிதத்தில் படமாக்கப்பட்டது சார்லியின் நெருக்கடியான வாழ்க்கை சூழலைத் திரையில் கச்சிதமாகக் காட்டியது.
பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் இத்தகைய கலைநயம் மிக்க படங்கள் வரவேற்பைப் பெறாது என்ற கருத்தை இப்படத்தின் வசூல் முறியடித்தது.
ரோட்டன் டொமாட்டோஸ் தளத்தில் இப்படம் 64 சதவீத அங்கீகாரத்தைப் பெற்றது. மெட்டாக்ரிடிக் தளம் இதற்கு 100க்கு 60 மதிப்பெண் வழங்கியது. ரிச்சர்ட் ரோப்பர் போன்ற பல முன்னணி விமர்சகர்கள் இப்படத்தை அந்த ஆண்டின் சிறந்த படமாகவும், பெண்டன் பிரேசரின் திரை வாழ்க்கையிலேயே சிறந்த நடிப்பாகவும் பாராட்டினர்.
இப்படத்தில் ஒரு இந்திய வம்சாவளி நடிகர் நடித்துள்ளார். அவரது பெயர் சத்யா ஸ்ரீதரன்
அவர் இப்படத்தில் டான் எனும் பீட்சா டெலிவரி செய்யும் நபராக நடித்துள்ளார். இவர் அமெரிக்காவில் பிறந்தவராக இருந்தாலும், இவரது பெற்றோர் 1980 களில் தென்னிந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள். சார்லி தினமும் ஆர்டர் செய்யும் பீட்சாவை அவரது வீட்டு வாசலில் கொண்டு வந்து வைக்கும் அந்த முக்கியமான கதாபாத்திரத்தை இவரே ஏற்று நடித்துள்ளார்.
கதையின் ஒரு திருப்பமாக, ஒருநாள் மழை பெய்யும் நேரத்தில் டான் தற்செயலாக சார்லியை நேருக்கு நேர் பார்த்துவிடுவார். அப்போது அவர் அடையும் அதிர்ச்சியும் அருவருப்பும் சார்லியின் மனநிலையை உலுக்கும் ஒரு முக்கியமான காட்சியாக அமைந்திருக்கும்.
சார்லியின் வாழ்க்கையில் அவரோடு நேரடியாகப் பேசாவிட்டாலும், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்த ஒரே வெளிநபராக இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
படத்தின் கதை:-
2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள மாஸ்கோ நகரில் சார்லி (பெண்டன் பிரேசர்) எனும் ஆங்கில ஆசிரியர் வசித்து வருகிறார். அவர் சாதாரண மனிதர் அல்ல, சுமார் அறுநூறு பவுண்டு எடை கொண்ட அதீத உடல் பருமன் உடையவர்.
அந்தத் தனி அறையே அவருக்கு சிறைச்சாலையாக இருக்கிறது. அங்கிருந்தபடியே கல்லூரி மாணவர்களுக்கு இணையம் வழியாகக் கட்டுரை எழுதக் கற்றுத் தருகிறார். ஆனால் தன் கோரமான உருவத்தைக் கண்டு மாணவர்கள் எள்ளி நகையாடுவார்கள் என்ற கூச்சத்தில் எப்போதும் தன் கணினியின் கேமராவை அணைத்தே வைத்திருப்பார்.
சார்லிக்கு லிஸ் (ஹாங் சாவ்) என்ற ஒரு தோழி இருக்கிறார். அவர் ஒரு செவிலியர். சார்லியின் உடலைப் பராமரிப்பதும் அவருக்குத் தேவையான உணவுகளை வாங்கித் தருவதும் இவர்தான். சார்லியின் இதயம் செயலிழக்கும் நிலையில் இருப்பதை அறிந்து அவரை மருத்துவமனைக்குச் செல்லுமாறு லிஸ் கெஞ்சுகிறார்.
ஆனால் தன்னிடம் காப்பீடு இல்லை, பணமும் இல்லை என்று கூறி சார்லி அதை மறுக்கிறார்.
இடையில் தாமஸ் (டை சிம்ப்கின்ஸ்) என்ற ஒரு இளம் மதப் போதகர் சார்லியைத் தேடி வருகிறார்.
சாகக் கிடக்கும் சார்லியின் ஆன்மாவை ரட்சிக்கப் போவதாக அவர் கூறுகிறார். அதே சமயம் சார்லி தினமும் இரவு பீட்சா ஆர்டர் செய்வதை ஒரு சடங்கு போல வைத்திருக்கிறார்.
பீட்சா கொண்டு வரும் டான் (சத்யா ஸ்ரீதரன்) வாசலில் உணவை வைத்துவிட்டுப் பணத்தை எடுத்துச் செல்வார். இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்வதில்லை. சார்லிக்கு ஒரு மிகப்பெரிய ஏக்கம் இருக்கிறது.
அது தன் மகள் எல்லியை (சேடி சிங்க்) மீண்டும் பார்க்க வேண்டும் என்பதுதான். எட்டாண்டுகளுக்கு முன்பு தன் மனைவி மேரியையும் (சமந்தா மார்டன்) மகளையும் தவிக்க விட்டுவிட்டு, ஆலன் என்ற தன் ஆண் மாணவருக்காக சார்லி வீட்டை விட்டு வெளியேறினார்.
இப்போது தன் மரணம் நெருங்குவதை உணர்ந்து மகளிடம் மன்னிப்பு கேட்கத் துடிக்கிறார்.
எல்லி இப்போது ஒரு திமிர் பிடித்த பதின்ம வயதுப் பெண்ணாக இருக்கிறாள். அவளிடம் தன் வங்கிக் கணக்கில் இருக்கும் ஒரு லட்சத்து இருபதாயிரம் டாலர் பணத்தையும் தருவதாகக் கூறி தன்னோடு நேரம் செலவிட சார்லி அழைக்கிறார்.
பணத்துக்காகச் சம்மதிக்கும் எல்லி, தன் பள்ளி வீட்டுப் பாடங்களை அப்பா செய்து தர வேண்டும் என்ற நிபந்தனையைப் போடுகிறாள். கதை நகர நகர பல இருண்ட ரகசியங்கள் அவிழ்கின்றன.
லிஸ் உண்மையில் அந்தத் திருச்சபைப் போதகரின் தத்தெடுக்கப்பட்ட மகள் என்பதும், சார்லியின் காதலனான ஆலன் அவளுடைய சகோதரன் என்பதும் தெரியவருகிறது.
மதக் கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட குற்ற உணர்வால் ஆலன் தற்கொலை செய்துகொண்டதால், அந்தத் துயரத்தை மறக்கவே சார்லி அளவுக்கதிகமாக உண்ணத் தொடங்கி இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஒருநாள் எல்லி சார்லியின் உணவில் தூக்க மாத்திரையைக் கலந்து விடுகிறாள். அவர் மயங்கியிருக்கும் போது அங்கு வரும் தாமஸுடன் கஞ்சா புகைக்கிறாள்.
அப்போது தாமஸ் தான் தன் சபையில் பணத்தைத் திருடிவிட்டு ஓடி வந்ததை ஒப்புக்கொள்கிறான். இதை எல்லி ரகசியமாகப் பதிவு செய்கிறாள். இதற்கிடையில் மேரி அங்கு வர, சார்லி தன் மகளுக்காக இவ்வளவு பணம் சேர்த்து வைத்திருப்பதை அறிந்து லிஸ் கடும் கோபம் கொள்கிறார்.
மருத்துவச் செலவுக்குப் பணம் இல்லை என்று தன்னிடம் பொய் சொன்னதற்காக அவர் வருந்துகிறார். அதே சமயம் பீட்சா கொண்டு வரும் டான் தற்செயலாக சார்லியைப் பார்த்துவிட்டு அருவருப்பில் முகம் சுளித்து ஓடுகிறார்.
உலகமே தன்னை வெறுப்பதாக உணரும் சார்லி, ஆத்திரத்தில் உணவுகளை அள்ளி உண்டு தன் உடலைச் சிதைத்துக் கொள்கிறார்.
இந்த மன உளைச்சலின் உச்சத்தில், சார்லி தன் மாணவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். அதில் பாடங்களைப் புறக்கணித்துவிட்டு, ஆபாசமான வார்த்தைகள் கலந்த கோபத்துடன், தனக்கு ஏதேனும் ஒரு உண்மையான விஷயத்தை எழுதி அனுப்புமாறு கூறுகிறார்.
இந்த விதிமீறல் காரணமாகப் பல்கலைக்கழகம் அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்குகிறது. தன் வாழ்வின் இறுதி வகுப்பில் மாணவர்களுக்குத் தன் முகத்தைக் காட்டிவிட்டு, இனி பட்டங்களும் கல்லூரியும் முக்கியமல்ல, நீங்கள் எழுதிய அந்த உண்மையான வார்த்தைகள்தான் முக்கியம் என்று கூறி தன் மடிக்கணினியை உடைக்கிறார்.
இறுதியில் எல்லி தன் தந்தையிடம் சண்டையிட வருகிறாள். அப்போது சார்லி அவள் எட்டாம் வகுப்பில் மொபி டிக் நாவலைப் பற்றி எழுதிய கட்டுரையை அவளிடம் காட்டுகிறார்.
அதுதான் அவர் வாசித்ததிலேயே மிகவும் நேர்மையான படைப்பு என்று கூறுகிறார். அந்தக் கட்டுரையை அவளை வாசிக்கச் சொல்கிறார்.
அவள் வாசிக்க வாசிக்க, எழவே முடியாத நிலையில் இருந்த சார்லி தன் மகள் மீதான அன்பினால் மட்டும் எழுந்து நிற்கிறார்.
ஒரு பெரும் ஒளி அவர் மேல் படர, தன் மகளின் அன்பைப் பெற்றுவிட்ட திருப்தியில் சார்லி காற்றில் மிதப்பது போல இந்த வாழ்வியல் காவியம் நிறைகிறது.
இப்படம் சொல்லும் செய்தி மிகவும் ஆழமானது, அது மனித ஆன்மாவின் மீட்பு மற்றும் மற்றவர்களிடம் நாம் காணும் நன்மையை மையமாகக் கொண்டது.
சார்லி தனது வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்தவர், தன் குடும்பத்தைப் பிரிந்தவர், தன் உடலைச் சிதைத்துக் கொண்டவர். ஆனால், மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டு அவர் தேடுவது ஒரே ஒரு விஷயத்தைத்தான், அதுதான் மீட்பு.
தான் வாழ்க்கையில் எத்தனையோ தோல்விகளைச் சந்தித்தாலும், தன் மகள் எல்லி ஒரு நல்ல மனிதராகத் திகழ்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவரிடம் இருக்கிறது.
எல்லி மற்றவர்களிடம் கோபமாகவும் வன்மத்தோடும் நடந்துகொண்டாலும், அவளுக்குள் ஒரு மனிதாபிமானம் இருக்கிறது என்பதை சார்லி தொடர்ந்து வலியுறுத்துகிறார்.
மனிதர்கள் ஒருவரை ஒருவர் கைவிட முடியாது என்பதும், ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மீட்புக்கான வாய்ப்பு எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதுமே இப்படத்தின் சாராம்சம்.
இந்தப் படம் உண்மை மற்றும் நேர்மையின் வலிமையைப் பேசுகிறது. சார்லி தன் மாணவர்களிடம் எதிர்பார்ப்பது கல்வியறிவு சார்ந்த மேதமை அல்ல, மாறாக அவர்களின் மனதிலிருந்து வரும் உண்மையான உணர்வுகளைத்தான்.
போலியான முகமூடிகளையும், சமூகக் கட்டுப்பாடுகளையும் தாண்டி, ஒரு மனிதன் எப்போது தன் அகத்தின் உண்மையை வெளிப்படுத்துகிறானோ, அப்போதுதான் அவன் முழுமை பெறுகிறான் என்பதை சார்லியின் இறுதி வகுப்பு நமக்கு உணர்த்துகிறது.
தன் உருவத்தைக் கண்டு உலகமே அருவருப்படைந்தாலும், தன் மகளின் பார்வையில் ஒரு நேர்மையான தந்தையாகத் தெரிய வேண்டும் என்று அவர் எடுக்கும் முயற்சி, அன்பினால் மட்டுமே ஒரு மனிதனை உயிருடன் வைத்திருக்க முடியும் என்பதைச் சொல்கிறது.
இறுதியில் சார்லி எழுந்து நடக்கும் அந்தத் தருணம், உடல் ரீதியான வெற்றி அல்ல, அது ஒரு ஆன்மீக விடுதலை. நாம் செய்த பிழைகளுக்கு மன்னிப்பு கிடைப்பதும், நாம் நேசிக்கும் ஒருவரால் நாம் அங்கீகரிக்கப்படுவதும் தான் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த சொர்க்கம் என்பதை இப்படம் மிக உருக்கமாகச் சொல்கிறது.