இயக்குனர் ஜோஷ் சஃப்டி இயக்கத்தில் 2025-ஆம் ஆண்டு வெளியான 'மார்ட்டி சுப்ரீம்', ஒரு சாதாரண விளையாட்டுப் படமாகத் தொடங்கினாலும், காலப்போக்கில் அது ஒரு மனிதனின் ஆன்மாவைத் தேடும் உலகத் தரம் வாய்ந்த சினிமாவாக உருவெடுக்கிறது.
1950-களின் நியூயார்க் பின்னணியில், மேஜைப் பந்து வீரர் மார்ட்டி ரெய்ஸ்மேனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம், ஒரு மனிதனின் அகங்காரம், வீழ்ச்சி மற்றும் மீண்டெழுதலை மிக நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இத்திரைப்படம் ஒரு மனிதனின் வெற்றி என்பது அவன் சூடிக்கொள்ளும் மகுடங்களில் இல்லை, மாறாக அவன் சந்திக்கும் வீழ்ச்சிகளிலிருந்து எழும் தன்மானத்திலும், தான் நேசிப்பவர்களுக்காகத் தன்னைச் செதுக்கிக்கொள்வதிலுமே அடங்கியிருக்கிறது என்பதை ஆழமாக உணர்த்துகிறது.
லட்சியம் என்ற பெயரில் ஒருவன் தன் வேர்களை மறந்து, குறுக்கு வழிகளில் பணத்தையும் புகழையும் தேடி அலைந்தாலும், இறுதிப் போராட்டம் என்பது எப்போதும் அவனது சுய மதிப்பைக் காப்பாற்றிக்கொள்வதில்தான் முடிகிறது.
மார்ட்டி மௌசரின் பயணம், திறமை என்பது வெறும் உடல் சார்ந்த விளையாட்டு மட்டுமல்ல, அது ஒருவனைச் சிதைக்கத் துடிக்கும் அதிகார வர்க்கத்தின் முன் தலைவணங்காத திமிராகவும் இருக்க வேண்டும் என்பதை உரக்கச் சொல்கிறது.
தனது தவறுக்காகவும் பணத்திற்காகவும் மற்றவர்களின் கேலிக்கும் எள்ளலுக்கும் ஆளாகத் துணியும் ஒரு கலைஞன், ஒரு கட்டத்தில் தன் ஆன்மாவின் குரலைக் கேட்டு பொங்கி எழுவதே இப்படத்தின் மையப்புள்ளியாகும்.
எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும், இறுதியில் ஒருவனுக்கு மன அமைதி என்பது அவனது அன்னையின் அணைப்பிலும், தான் உருவாக்கிய புதிய உயிரின் ஸ்பரிசத்திலும் மட்டுமே கிடைக்கிறது என்ற வாழ்வியல் உண்மையை இக்கதை பதிவு செய்கிறது.
வாழ்வின் பெரும் பகுதியை ஏமாற்றத்திலும், பொய்யான உறவுகளிலும் தொலைத்த ஒருவன், இறுதியில் நேர்மையான வழியில் தன் திறமையை நிலைநாட்டி, உடைந்த உறவுகளைத் தன் அன்பால் ஒட்ட வைக்கும்போதுதான் ஒரு முழுமையான மனிதனாகப் பிறக்கிறான் என்ற உன்னதமான கருத்தை இப்படம் முன்வைக்கிறது.
மார்ட்டி தனது மகனை முதன்முறையாகக் கையில் ஏந்தி அழுத அந்தத் தருணம், அவனது அனைத்துப் பாவங்களையும் கழுவி, ஒரு புதிய தொடக்கத்திற்கான நம்பிக்கையை பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.
150 நிமிட ஓட்டத்தில், இது ஒரு தனிமனிதனின் வரலாற்றை மட்டுமல்லாமல், அந்தச் சமூகத்தின் விழுமியங்களையும், ஒரு கலைஞனுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தையும் மேதமையுடன் விவரிக்கிறது.
அசுர வேகத்தில் நகரும் திரைக்கதையும், காட்சிக்குக் காட்சி மாறும் உணர்ச்சிப் போராட்டங்களும் இப்படத்தை உலக சினிமா ரசிகர்களிடையே ஒரு மைல்கல்லாக நிறுத்தியுள்ளன.
இயக்குநர் ஜோஷ் சஃப்டி, தனது சகோதரர் பென்னி இன்றித் தனியாக இயக்கிய தனது முதல் படத்திலேயே தனி முத்திரையைப் பதித்துள்ளார்.
1950-களின் நியூயார்க் தெருக்களை அப்படியே கண்முன்னே கொண்டுவந்ததில் ஜாக் ஃபிஸ்க்கின் கலை இயக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒளிப்பதிவாளர் டாரியஸ் கோண்ட்ஜி, இப்படத்தை 35 மிமீ பிலிம் சுருள்களில் படமாக்கி, அந்த காலத்திற்கே உரிய ஒரு தனித்துவமான நிறத்தையும், ஆழத்தையும் காட்சிகளுக்குக் கொடுத்துள்ளார்.
குறிப்பாக, மிக அருகாமையில் வைக்கப்பட்ட லென்ஸ்கள் மூலம் நடிகர்களின் முகத்தில் தோன்றும் மிகச்சிறிய உணர்ச்சிகளையும், தோலில் உள்ள தழும்புகளையும் கூடத் துல்லியமாகப் படம்பிடித்து, பார்வையாளர்களை அந்தச் சூழலுக்குள் இழுத்துச் செல்கிறார்.
60 முதல் 70 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம், ஏ24 நிறுவனத்தின் வரலாற்றிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட மற்றும் அதிக வசூல் செய்த படமாகவும் சாதனை படைத்துள்ளது.
மார்ட்டி மௌசராகத் தோன்றும் திமோதி சாலமே தனது திரைப் பயணத்தின் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஒரு மேஜைப் பந்து வீரனுக்கான உடல் மொழியைக் கற்க அவர் பல மாதங்கள் பயிற்சி எடுத்தது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
அவருடன் இணைந்து நடித்த க்வினெத் பேல்ட்ரோ, ஒரு முன்னாள் நடிகையாக அந்தப் பாத்திரத்தின் கம்பீரத்தையும் நளினத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, மில்டன் ராக்வெல்லாக வரும் தொழிலதிபர் கெவின் ஓ லியரி, தனது அதிகார மமதையால் மார்ட்டியைச் சிதைக்கும் காட்சிகளில் ஒரு மிரட்சியான நடிப்பைத் தந்துள்ளார்.
நடிகர் ஒடெஸா ஆசியன், டைலர் ஓகோன்மா, ஏபெல் ஃபெராரா போன்றோரின் பங்களிப்பு இந்தக் கதையின் ஒவ்வொரு பக்கத்திற்கும் உயிர் கொடுத்துள்ளது.
இப்படத்தின் ஆன்மாவாகத் திகழ்வது டேனியல் லோபாடின் இசை. 1980-களின் புகழ்பெற்ற பாடல்களையும், நவீன மின்னணு இசையையும் கலந்து அவர் உருவாக்கியுள்ள பின்னணி இசை, மார்ட்டியின் மனப் போராட்டங்களைச் செவிகளுக்கு உணர்த்துகிறது.
டிசம்பர் 25, 2025 அன்று அமெரிக்காவில் வெளியான இத்திரைப்படம், விமர்சகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், 157 மில்லியன் டாலர் வசூலை வாரிக்குவித்தது.
98-வது ஆஸ்கார் விருதுகளில் சிறந்த படம் உள்ளிட்ட ஒன்பது பரிந்துரைகளையும், 79-வது பாஃப்டா விருதுகளில் பதினொரு பரிந்துரைகளையும் பெற்று சாதனை படைத்தது.
திமோதி சாலமே தனது அபாரமான நடிப்பிற்காக கோல்டன் குளோப் மற்றும் கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகளை வென்று, உலக சினிமாவின் தற்போதைய தவிர்க்க முடியாத நாயகனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
இத்திரைப்படம் ஒரு விளையாட்டு வீரனின் வெற்றியை மட்டும் சொல்லாமல், அவன் சந்திக்கும் அவமானங்கள் மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை ஒரு காவியமாகப் படைத்துள்ளது.
மார்ட்டி தனது குழந்தையை ஏந்தும் அந்தக் கடைசித் தருணம், உலக சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒரு உணர்ச்சிகரமான காட்சியாக இன்றும் போற்றப்படுகிறது.
இயக்குநரும் அவரது குழுவினரும் இந்தத் திரைப்படத்தை உருவாக்குவதற்குச் சுமார் ஏழு ஆண்டுகள் உழைத்தனர். நாயகனாக நடித்த இளம் கலைஞர், மேஜைப் பந்து விளையாட்டில் நிபுணத்துவம் பெறுவதற்காக ஒலிம்பிக் வீரர்களிடம் பல மாதங்கள் பயிற்சி பெற்றார்.
1950-களின் நியூயார்க் நகரத்தை அப்படியே கண்முன்னே கொண்டுவர, அக்காலத்துச் செய்தித்தாள் நிறுவனங்களின் விநியோக வாகனங்கள் முதல், இடிக்கப்பட்ட பழைய விளையாட்டு அரங்குகள் வரை அனைத்தையும் வரைபடங்களின் உதவியுடன் மீண்டும் உருவாக்கினர்.
வீதிகளில் கிடக்கும் குப்பைகள் கூட நிஜமான அழுக்கைத் தரும் வகையில் நனைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன.
ஒளிப்பதிவில் பழங்கால லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டதால், நடிகர்களின் முகத்தில் உள்ள மிகச்சிறிய தழும்புகளும் பருக்களும் கூடத் திரையில் துல்லியமாகத் தெரிந்தன.
நாயகனின் முகத்தில் போடப்பட்ட செயற்கை ஒப்பனை எவ்வளவு தத்ரூபமாக இருந்ததென்றால், சக நடிகையே அதை நிஜமான முகப்பரு என்று நம்பி அவருக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கியது நடந்தது.
ஜப்பான் நாட்டில் நடந்த படப்பிடிப்பின் போது, மிகக் குறுகிய காலத்தில் அந்நாட்டுத் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு பிரம்மாண்டமான காட்சிகள் எடுக்கப்பட்டன.
ஒரு குறிப்பிட்ட காட்சியில், நாயகன் தனக்குப் பதிலாகப் பாடிடபுள் நபரைப் பயன்படுத்த மறுத்து, நிஜமாகவே அடியை ஏற்றுக்கொண்டு நடித்தார்.
அப்போது பயன்படுத்தப்பட்ட மரப்பலகை உடைந்ததால், உண்மையான பலகையைக் கொண்டே அக்காட்சி படமாக்கப்பட்டது.
படத்தின் பின்னணி இசையில் மின்னணு இசைக் கருவிகளும், புகழ்பெற்ற பழைய பாடல்களும் கலந்து ஒரு வித்தியாசமான உணர்வைத் தந்தன.
திரைப்படத்தின் முடிவைப் பற்றிப் பல விவாதங்கள் நடந்தன.
ஒரு முதியவர் தனது பேத்தியை இசை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வது போன்ற ஒரு முடிவும், வில்லன் கதாபாத்திரம் ஒரு இரத்தக் காட்டேரியாக மாறுவது போன்ற விசித்திரமான ஒரு முடிவும் ஆலோசிக்கப்பட்டன. ஆனால், இறுதியில் அவை தவிர்க்கப்பட்டு உணர்ச்சிகரமான ஒரு முடிவே இறுதி செய்யப்பட்டது.
பல காட்சிகள் படத்தின் வேகத்திற்காக எடிட்டிங் மேசையில் வெட்டப்பட்டன. இத்திரைப்படம் வணிக ரீதியாகப் பெரும் வெற்றி பெற்றது மட்டுமன்றி, இந்த ஆண்டின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாகப் பல அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டது.
படத்தின் கதை:-
1952-ஆம் ஆண்டு நியூயார்க் மாநகரின் சந்தடிகளுக்கு இடையே, மார்ட்டி மௌசர் (திமோதி சாலமே) தனது மாமா முரேயின் (லேரி "ராட்சோ" ஸ்லோமன்) காலணி விற்பனை கடையில் ஒரு சாதாரண விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார்.
ஆனால் அவரது இதயம் டேபிள் டென்னிஸ் விளையாட்டு மேஜையில்தான் இருக்கிறது. பிரிட்டிஷ் ஓபன் தொடரில் பங்கேற்று, புகழ்பெற்ற சாம்பியன் பெலா கிளெட்ச்கியை (கெசா ரோஹ்ரிக்) வீழ்த்தி, அமெரிக்காவிற்கு அந்த விளையாட்டின் பெருமையைக் கொண்டுவர வேண்டும் என்பதே மார்ட்டியின் லட்சியம்.
தனது நண்பன் தியோன் (லூக் மேன்லி) மற்றும் அவரது தொழிலதிபர் தந்தை கிறிஸ்டோபர் ஆகியோரிடம், தனது பெயரிலேயே ஆரஞ்சு நிற டேபிள் டென்னிஸ் பந்துகளைத் தயாரித்து விற்கும் யோசனையையும் அவர் முன்வைக்கிறார்.
இவர் திருமணமான தனது சிறுவயது தோழி ரேச்சல் மிஸ்லருடன் (ஒடெஸா ஆசியன்) மார்ட்டி ரகசியத் தொடர்பு வைத்துள்ளார். தனது லண்டன் பயணத்திற்காக 700 டாலர் பணத்தை மார்ட்டி கேட்க, அவரது தாய் ரெபெக்காவின் (பிரான் டிரெஷர்) நலனைக் கருதியும், மார்ட்டி வேலையில் நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் முரே பணத்தைத் தர மறுக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த மார்ட்டி, கடையின் பூட்டை உடைத்து, சக ஊழியர் லாயிடை (ரால்ப் கொலூசி) துப்பாக்கி முனையில் மிரட்டிக் கடையின் கஜானாவில் இருந்த பணத்தைத் திருடுகிறார்.
லண்டன் சென்றடைந்த மார்ட்டி, வீரர்களுக்கான சாதாரண தங்குமிடங்களை துளியும் மதிக்காமல் ஆடம்பரமான ரிட்ஸ் ஹோட்டலில் தங்குகிறார்.
அங்கு முன்னாள் நடிகையும் சமூக மேல்தட்டுப் பெண்ணுமான கே ஸ்டோனைச் (க்வினெத் பேல்ட்ரோ) சந்தித்து அவருடன் அதிக நெருக்கமாகிறார்.
மேலும் கே-வின் கணவரும் பேனா தயாரிப்பு நிறுவன அதிபருமான செல்வாக்கு மிக்க மில்டன் ராக்வெல்லை (கெவின் ஓ லியரி) சந்திக்கிறார். மார்ட்டி அரையிறுதியில் கிளெட்ச்கியைத் தோற்கடித்தாலும் கூட, இறுதிப் போட்டியில் ஸ்பாஞ்ச் ராக்கெட் பயன்படுத்தும் காதுகேளாத ஜப்பானிய வீரர் கோட்டோ எண்டோவிடம் (கோட்டோ கவாகுச்சி) தோல்வியடைகிறார்.
சில மாதங்களுக்குப் பிறகு, டோக்கியோவில் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக எண்டோவுக்கு எதிராக ஒரு கண்காட்சிப் போட்டியில் விளையாட ராக்வெல் மார்ட்டிக்கு வாய்ப்பளிக்கிறார்.
ஆனால் ஜப்பானிய ரசிகர்களைத் திருப்திப்படுத்த மார்ட்டி வேண்டுமென்றே தோற்க வேண்டும் என்று ராக்வெல் நிபந்தனை விதிக்க, மார்ட்டி அதை அநாகரிகமாக மறுக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த ராக்வெல், மார்ட்டியை ஒரு விளையாட்டு வீரனாக மதிக்காமல், ஹார்லெம் குளோப்ட்ரோட்டர்ஸ் குழுவுடன் வேடிக்கை காட்டும் ஒரு கோமாளி என்று சொல்லி அவமானப்படுத்துகிறார்.
நியூயார்க் திரும்பிய மார்ட்டி, மாமா கடையில் பணம் திருடியதற்காகக் கைது செய்யப்பட்டு பின் அங்கிருந்து தப்பிக்கிறார்.
கள்ள காதலி ரேச்சல் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அந்தக் குழந்தைக்கு மார்ட்டியே தந்தை என்றும் கூறுகிறாள்.
தனது நண்பரான டாக்ஸி ஓட்டுநர் வாலியுடன் (டைலர் ஓகோன்மா) ஒரு பாழடைந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் மார்ட்டிக்கு, ரிட்ஸ் ஹோட்டல் செலவுகளை மோசடியாகக் காட்டியதற்காக சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் 1,500 டாலர் அபராதம் விதித்துத் தடையும் விதிக்கிறது.
இவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் குளியல் தொட்டி உடைந்து கீழே விழ, அதனால் காயமடைந்த தாதா எஸ்ரா மிஷ்கின் (ஏபெல் ஃபெராரா), தனது நாய் மோசஸை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல மார்ட்டிக்கு பணம் தருகிறார்.
ஆனால் மார்ட்டி அந்த நாயுடன் நியூ ஜெர்சி சென்று சூதாட்டங்களில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிக்க முயல்கிறார். அங்கு ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் பங்க் தீப்பற்றி எரிய, அந்தச் சலசலப்பில் நாய் தப்பி ஓடிவிடுகிறது.
மீண்டும் நியூயார்க் வரும் ராக்வெல், கே ஸ்டோனின் கலைப்பயணத்தை மீண்டும் தொடங்க ஒரு நாடகத்திற்குத் திட்டமிடுகிறார்.
கே ஸ்டோனுடன் மீண்டும் இணையும் மார்ட்டி, அவரது விலை உயர்ந்த நெக்லஸைத் திருடுகிறார், ஆனால் அது போலி நகை என்று பிறகு தெரியவருகிறது.
இதற்கிடையில், தனது கணவர் ஐரா மிஸ்லர் (எமோரி கோஹன்) தன்னைத் தாக்கியதாகக் கூறி இவரிடம் வரும் ரேச்சலுக்காக, மார்ட்டி ஐராவைச் சென்று தாக்குகிறார்.
தியோனின் வீட்டில் தஞ்சம் புகும் இவர்கள், அங்கிருந்து காரைத் திருடிக்கொண்டு தப்பிச் செல்கின்றனர்.
காணாமல் போன நாயைக் கண்டுபிடித்து தந்து பணக்காரன் மிஷ்கினிடம் பணம் பறிக்க முயலும்போது, ஒரு விவசாயியின் (பென் ஜில்லெட்) துப்பாக்கிச் சூட்டில் இருந்து இவர்கள் லாவகமாக தப்பிக்கின்றனர்.
மார்ட்டியின் இந்த கீழான செயல்களால் தியோன் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார்.
ரேச்சல் தன்னை ஏமாற்றித் தனது கணவர் மீது பழி போட்டதை அறிந்த மார்ட்டி அவளைப் பிரிகிறார்.
இதனால் ரேச்சலும் அவளது கணவரால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாள்.
கே ஸ்டோனின் நாடகத் தொடக்க விழாவில் அவரிடம் மன்னிப்பு கேட்கும் மார்ட்டிக்கு, கே தன்னுடைய ஒரு உண்மையான விலையுயர்ந்த நெக்லஸை கொடுத்து உதவுகிறார்.
அதைக் கொண்டு அபராதத்தைக் கட்ட நினைக்கையில், காவல்துறையிடம் சிக்கி அந்த நகையையே லஞ்சமாகக் கொடுத்துத் தப்பிக்க வேண்டியதாகிறது.
இறுதியில் வேறு வழியின்றி, மீண்டும் ராக்வெல்லிடமே மார்ட்டி உதவி கேட்கிறார். ராக்வெல் விதிக்கும் மிகவும் அவமானகரமான நிபந்தனையை ஏற்றுக்கொண்டு ஜப்பான் செல்கிறார்.
ஜப்பானில், அபராதத்தைக் கட்டினாலும் போட்டியில் விளையாட முடியாது என்று மார்ட்டிக்குத் தெரிவிக்கப்படுகிறது.
திட்டமிட்டபடி கண்காட்சிப் போட்டியில் அவர் தோற்றாலும், மேடையில் அவரை ஒரு பன்றியை முத்தமிடச் சொல்லி ராக்வெல் அவமானப்படுத்த முயலும்போது, மார்ட்டி அந்தச் சதியை உடைத்து எண்டோவுடன் நேர்மையான முறையில் மோதி வெற்றி பெறுகிறார்.
ராக்வெல் கைவிட்ட நிலையில், அமெரிக்க ராணுவ வீரர்களின் உதவியுடன் நாடு திரும்பும் மார்ட்டி, தனது தாயைச் சந்திக்கிறார்.
மருத்துவமனையில் இருக்கும் ரேச்சலிடம் தனது காதலைச் சொல்லி, தனக்குப் பிறந்த மகனை முதல்முறையாகக் கையில் ஏந்தும்போது மார்ட்டி விம்மி அழுகையில் இப்படம் நிறைகிறது.