அனாடமி ஆஃப் தி ஃபால்

ஜஸ்டின் ட்ரைட்  ஆர்தர் ஹராரியுடன் இணைந்து எழுதி இயக்கிய "அனாடமி ஆப் எ ஃபால்" திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியான மிகச்சிறந்த பிரெஞ்சு சட்ட நாடகத் திரைப்படம். 

ஒரு நாவலாசிரியை தனது கணவரின் மர்மமான மரணத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளைக் களைந்து நிரபராதி என நிரூபிக்கப் போராடும் கதையை மையமாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

 சாண்ட்ரா ஹல்லர் ,ஸ்வான் அர்லாட் மற்றும் மைலோ மசாடோ கிரானர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் நவீன காலத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

உலக சினிமா வரலாற்றில் இத்திரைப்படம் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. குறிப்பாக 2020 களின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இது இடம்பிடித்துள்ளது. 

கான் திரைப்பட விழாவில் பால்ம் டி ஓர் விருதை வென்றதுடன் ஆஸ்கார் விருதுகளில் சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதினையும் தட்டிச் சென்றது. 

இத்திரைப்படம் 21 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த 100 திரைப்படங்களின் பட்டியலில் நியூயார்க் டைம்ஸ் போன்ற முன்னணி இதழ்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

 சர்வதேச அளவில் விமர்சகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் உலகெங்கிலும் 36 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்தது.

 இத்திரைப்படம் ஒரு வழக்கமான நீதிமன்ற வழக்கை மட்டும் விவரிக்காமல் ஒரு தம்பதியினரின் சிக்கலான உறவை மிகத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்கிறது.

 சாண்ட்ரா ஹல்லரின் நடிப்பு மிக நேர்த்தியாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருப்பதாகப் சினிமா விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர். 

ஒரு படைப்பாளிக்கும் அவரது நிஜ வாழ்க்கைக்கும் இடையிலான மெல்லிய கோட்டை இத்திரைப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது.

 அட்லாண்டிக் மற்றும் கார்டியன் போன்ற இதழ்கள் இத்திரைப்படத்தை ஒரு அறிவார்ந்த மற்றும் உணர்வுப்பூர்வமான படைப்பு என்று புகழ்ந்துள்ளன.

இயக்குநர் ஜஸ்டின் ட்ரைட் இத்திரைப்படத்தை மிக நுணுக்கமான முறையில் இயக்கியுள்ளார். 

ஒரு பெண்ணின் வெற்றியைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது மற்றும் ஒரு தம்பதிக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு எப்படி இருக்கிறது என்பதை அவர் தனது இயக்கத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

 குறிப்பாக நீதிமன்றக் காட்சிகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்படும் விதம் மிகவும் சுவாரஸ்யமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 விக்டோரியா மற்றும் சிபில் போன்ற படங்களுக்குப் பிறகு ஜஸ்டின் ட்ரைட்டின் திரைப்பயணத்தில் இது மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

 பிப்ரவரி 2022 இல் தொடங்கி மே மாதம் வரை பிரான்சின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.

 கிரெனோபில் மற்றும் சாவோய் போன்ற பனி சூழ்ந்த மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள தனிமையான வீடுகள் படத்தின் கதைக்களத்திற்கு வலு சேர்த்தன. 

சைன்டெஸ் என்ற இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் உண்மையான சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் நீதிமன்றக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

 ஒளிப்பதிவாளர் சைமன் பியூஃபில்ஸ் மற்றும் படத்தொகுப்பாளர் லாரன்ட் செனிச்சல் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் விறுவிறுப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இத்திரைப்படம் 2023 ஆம் ஆண்டு மே மாதம் கான் திரைப்பட விழாவில் முதன்முதலாகத் திரையிடப்பட்டது. பின்னர் பிரான்சில் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

 அமெரிக்காவில் நியான் நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியிட்டது. இணையதள ஓடிடி தளங்களிலும் மற்றும் ப்ளூ ரே வடிவிலும் இத்திரைப்படம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைச் சென்றடைந்தது.

 பிரான்சில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் ரசிகர்கள் இத்திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ரசித்துள்ளனர்.

நடிகர்களின் பங்களிப்பு இத்திரைப்படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தது. சாண்ட்ரா வொய்டராக நடித்த சாண்ட்ரா ஹல்லர் தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான மர்மம் மற்றும் வலிமை ஆகியவற்றை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.

 வழக்கறிஞராக நடித்த ஸ்வான் அர்லாட் மற்றும் பார்வை குறைபாடுள்ள மகனாக நடித்த மைலோ மசாடோ கிரானர் ஆகியோரின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது.

 மேலும் ஸ்னூப் என்ற நாயாக நடித்த மெஸ்ஸி என்ற நாய் கூட தனது பங்கிற்குப் பாராட்டுக்களைப் பெற்றது.

இசை இத்திரைப்படத்தில் ஒரு மிக முக்கியமான குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 50 சென்ட் எழுதிய பி.ஐ.எம்.பி என்ற பாடல் படத்தின் தொடக்கத்தில் வரும் காட்சிகளில் ஒருவிதமான பதற்றத்தையும் மர்மத்தையும் உருவாக்குகிறது.

 முதலில் ஜோலின் என்ற பாடலைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தாலும் பின்னர் காப்புரிமை காரணங்களால் இந்தத் தாளக் கட்டுடைய பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 படத்தின் அமைதிக்கும் இந்த உரத்த இசைக்கும் இடையிலான முரண் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது.

 இத்திரைப்படத்திற்கு ஏராளமான விருதுகள்  வந்து குவிந்தன. 76 வது கான் திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான பால்ம் டி ஓர் விருதை வென்ற மூன்றாவது பெண் இயக்குநர் என்ற பெருமையை ஜஸ்டின் ட்ரைட் பெற்றார். 

செசார் விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநர் உட்பட ஆறு விருதுகளை வென்றது. அகாடமி விருதுகளில் ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை வென்றது.

 இது தவிர கோல்டன் குளோப் மற்றும் பாஃப்டா போன்ற பல சர்வதேச விருதுகளையும் இத்திரைப்படம் தன்வசப்படுத்தியது.

அனாடமி ஆப் எ ஃபால் திரைப்படத்தின் அடிநாதம்  ஒரு மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவது மட்டுமல்லாமல் ஒரு மனித உறவின் சிதைந்த பக்கங்களை அதன் ஆழம் வரை சென்று பகுப்பாய்வு செய்வதாகும்.

 வெளிப்படையாகத் தெரியும் உண்மைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பல அடுக்குக் கதைகளை இத்திரைப்படம் நுணுக்கமாக அவிழ்க்கிறது. 

ஒரு கணவன் மற்றும் மனைவிக்கு இடையிலான அதிகாரப் போட்டி அவர்களின் படைப்புத்திறன் சார்ந்த பொறாமை மற்றும் ஒரு விபத்தினால் ஏற்பட்ட மாறாத குற்ற உணர்ச்சி ஆகியவையே இந்த முழு கதைக்கும் உயிர்நாடியாக விளங்குகின்றன.

உண்மை என்பது எப்போதும் ஒரு நேர்க்கோட்டில் இருப்பதில்லை என்பதை இப்படம் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

 நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் ஆதாரங்கள் ஒருவரது வாழ்நாள் முழுவதையும் தீர்மானிக்கப் போதுமானவை அல்ல என்பதைச் சாண்ட்ராவின் கதாபாத்திரம் வழியாக நாம் உணர முடிகிறது. 

குறிப்பாக ஒரு வெற்றிகரமான பெண் தன் உணர்ச்சிகளைத் தர்க்கரீதியாக வெளிப்படுத்தும்போது சமூகம் அவளைக் கையாளும் விதம் மற்றும் அவள் மீது சுமத்தப்படும் முன்முடிவுகள் ஆகியவை இப்படத்தின் மற்றொரு முக்கியக் கருப்பொருளாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தின் ஆன்மா  பார்வை குறைபாடுள்ள மகன் டேனியலின் மனப்போராட்டத்தில் குடி கொண்டுள்ளது. 

தனது தாயின் மீதான அன்பு மற்றும் தந்தையின் மரணம் குறித்த மர்மம் ஆகிய இரண்டுக்கும் இடையே அவன் தத்தளிக்கும் காட்சிகள் இப்படத்தின் போக்கைத் தீர்மானிக்கின்றன. 

ஒரு கட்டத்தில் முழுமையான உண்மை என்னவென்று தெரியாத நிலையில் எது உண்மையாக இருக்கக்கூடும் என்பதைத் தன் மனசாட்சியின்படி அவனே தீர்மானிக்கிறான். 

இது நீதி என்பது வெறும் சட்ட விதிகளால் மட்டும் வழங்கப்படுவதில்லை அது தனிமனித நம்பிக்கையையும் சார்ந்தது என்பதை உணர்த்துகிறது.

மொத்தத்தில் ஒரு விபத்து அல்லது கொலை என்பதைத் தாண்டி ஒரு குடும்பத்தின் அந்தரங்க அறைகளில் நிலவும் மெளனம் மற்றும் உரத்த சண்டைகளுக்குப் பின்னால் இருக்கும் வலியை இப்படம் படம் பிடித்துக் காட்டுகிறது. 

முடிவில் சான்ட்ரா விடுவிக்கப்பட்டாலும் அந்த வெற்றி ஒரு முழுமையான மகிழ்ச்சியைத் தருவதில்லை. இழந்த உறவுகளையும் சிதைந்த நம்பிக்கைகளையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத ஒரு யதார்த்தமான துயரமே இப்படத்தின் அடிநாதமாக எஞ்சி நிற்கிறது.

இப்படத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் மொழிகளுக்கு இடையே நிலவும் ஒருவிதமான போர் ஆகும். 

ஜெர்மன் பின்னணி கொண்ட சாண்ட்ரா மற்றும் பிரெஞ்சுக்காரரான சாமுவேல் ஆகிய இருவருக்கும் பொதுவான மொழியாக ஆங்கிலம் மட்டுமே அமைகிறது. 

இந்த மூன்றாவது மொழி அவர்களின் உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்தப் போதுமானதாக இல்லாததே பல மோதல்களுக்குக் காரணமாகிறது. 

ஒரு அந்நிய நாட்டில் தனது தாய்மொழி அல்லாத ஒரு மொழியில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் சாண்ட்ராவின் தவிப்பு ஒரு தனித்துவமான மன அழுத்தத்தை உருவாக்குகிறது.

இப்படத்தின் ஒளிப்பதிவு பாணி ஒரு ஆவணப்படத்தைப் போன்ற உணர்வைத் தரும் வகையில் மிக இயல்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக கேமரா கோணங்கள் சில நேரங்களில் ஒரு ஒற்றனைப் போல கதாபாத்திரங்களை மிக அருகாமையில் பின்தொடர்வது போன்ற உணர்வைத் தருகின்றன.

 ஜூம் லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்ட விதம் அந்த மலைப் பிரதேசத்தின் தனிமையையும் நீதிமன்றத்தின் இறுக்கத்தையும் பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு வருகிறது. 

பின்னணி இசை ஏதுமின்றி வெறும் இயற்கை சத்தங்கள் மற்றும் உரையாடல்களை மட்டுமே கொண்டு கதையை நகர்த்தியது இப்படத்தின் யதார்த்தத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

சாமுவேலின் கதாபாத்திரம் நேரடியாகக் காட்டப்படாமல் அவரது குரல் பதிவுகள் மற்றும் மற்றவர்களின் நினைவுகள் வழியாக மட்டுமே கட்டமைக்கப்படுவது ஒரு மிகப்பெரிய திரைக்கதை உத்தியாகும். 

அவர் ஒரு தோல்வியுற்ற எழுத்தாளராகவும் தனது மனைவியின் வெற்றியைக் கண்டு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார். 

அதே சமயம் சாண்ட்ரா தனது நாவல்களில் நிஜ வாழ்க்கையின் கசப்பான உண்மைகளைத் தழுவி எழுதுவது ஒரு எழுத்தாளரின் தார்மீகப் பொறுப்பு குறித்த விவாதத்தை எழுப்புகிறது.

 கற்பனைக்கும் நிஜத்திற்கும் இடையிலான அந்த மெல்லிய கோடு சிதைந்து போவதே இப்படத்தின் முக்கியத் திருப்பமாக அமைகிறது.

இறுதியாக ஸ்னூப் என்ற நாயின் கதாபாத்திரம் வெறும் செல்லப் பிராணியாக மட்டும் அல்லாமல் அந்த வீட்டின் மௌன சாட்சியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 டேனியல் தனது தந்தையின் தற்கொலை முயற்சியை உறுதிப்படுத்த நாயைப் பரிசோதனைக்கு உட்படுத்தும் காட்சி ஒரு சிறுவனின் முதிர்ச்சியையும் அவனது தர்க்கரீதியான தேடலையும் வெளிப்படுத்துகிறது.

 நீதிமன்றத்தில் மார்ஜ் என்ற பெண்மணி டேனியலுக்குச் சொல்லும் அறிவுரைகள் ஒரு குழந்தையின் பார்வையில் இந்த உலகம் எப்படி உண்மைகளைத் தேடுகிறது என்பதை மிக அழகாக விளக்குகிறது. 

இவை அனைத்தும் இப்படத்தை ஒரு சாதாரணத் திரைப்படத்திலிருந்து ஒரு தத்துவார்த்த அனுபவமாக மாற்றுகின்றன.

இப்படத்தின் தொடக்கத்தில் சாமுவேல் ஒலிக்கச் செய்யும் இசை வெறும் சத்தம் மட்டுமல்ல அது ஒரு அதிகாரப் போராட்டத்தின் வெளிப்பாடு ஆகும். 

தனது மனைவியின் சமீபத்திய புத்தக வெளியீட்டுக்கு பின்னான நேர்காணலைச் சிதைக்க அவர் தேர்ந்தெடுத்த அந்த இசை ஒரு வகை மறைமுக வன்முறையாகவே திரையில் கையாளப்பட்டுள்ளது. 

ஒரு படைப்பாளி மற்றுமொரு படைப்பாளியின் அமைதியைக் குலைக்கும் இந்த நுட்பமான தருணமே அந்த வீட்டின் சிதைந்த உறவுக்கு அச்சாரமாக அமைகிறது.

இப்படத்தின் படத்தொகுப்பு முறை ஒரு தனித்துவமான தர்க்கத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக நீதிமன்றக் காட்சிகளில் சாட்சிகள் பேசும்போது இடையில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் முழுமையாகக் காட்டப்படாமல் பாதியிலேயே துண்டிக்கப்படுகின்றன. 

இது பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான உண்மையை வழங்க மறுப்பதன் மூலம் அவர்களை ஒரு துப்பறியும் நிலைக்குத் தள்ளுகிறது. 

நினைவுகள் என்பவை எப்போதும் துண்டு துண்டாகவே இருக்கும் என்ற உண்மையை இந்தத் தொகுப்பு முறை மிகத் தத்ரூபமாகப் பிரதிபலிக்கிறது. 

மேலும் சாமுவேல் இறந்த அந்த மலை வீட்டின் கட்டிட அமைப்பு ஒரு வகையான சிறைச்சாலையைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் செங்குத்தான படிக்கட்டுகள் மற்றும் குறுகிய அறைகள் அந்தத் தம்பதியினருக்கு இடையே இருந்த இடைவெளியைக் காட்சிப்படுத்துகின்றன.

சாண்ட்ராவின் கதாபாத்திரம் ஒரு நாவலாசிரியராக இருப்பதால் அவர் தனது வாழ்க்கையையே ஒரு புனைவாக மாற்றும் வித்தை தெரிந்தவர். 

நீதிமன்றத்தில் அவர் அளிக்கும் விளக்கங்கள் பல நேரங்களில் ஒரு நாவலின் வரிகளைப் போலவே மிக நேர்த்தியாகவும் தர்க்கரீதியாகவும் செதுக்கப்பட்டுள்ளன. 

இது அவர் உண்மையிலேயே நிரபராதியா அல்லது ஒரு சிறந்த கதையை நீதிமன்றத்தில் உருவாக்கி உலவ விடுகிறாரா என்ற ஊசலாட்டத்தைப் பார்வையாளர்கள் மனதில் கடைசி வரை தக்க வைக்கிறது. 

ஒரு எழுத்தாளரின் கற்பனைத் திறன் அவருக்கு ஒரு கவசமாகவும் அதே சமயம் அவருக்கு எதிரான ஆயுதமாகவும் மாறுவது இப்படத்தின் மிகச்சிறந்த முரண் ஆகும்.

கடைசியாக இந்தத் திரைப்படத்தில் வரும் நீதிமன்றக் கண்காணிப்பாளர் மார்ஜ் என்ற கதாபாத்திரம் ஒரு குறியீடாகவே செயல்படுகிறது. 

அவர் டேனியலுக்கு வழங்கும் அந்த அறிவுரை என்பது ஒரு குழந்தைக்குச் சொல்லப்படும் ஆறுதல் மட்டுமல்ல அது ஒட்டுமொத்த மனித குலமும் தங்களுக்குத் தேவையான உண்மைகளை எப்படிக் கட்டமைத்துக் கொள்கிறது என்பதற்கான தத்துவம் ஆகும். 

ஒரு சம்பவம் நடந்த பிறகு அதன் சாட்சியங்கள் யாவும் சிதைந்து போகும்போது மிச்சமிருக்கும் தரவுகளைக் கொண்டு நமக்குச் சாதகமான அல்லது திருப்தியான ஒரு உண்மையை நாம் உருவாக்கிக் கொள்கிறோம். என்ற உண்மையை ஒரு புதிய கோணத்தில் முன்வைக்கிறது.

படத்தின் கதை:-

பிரான்ஸ் நாட்டின் கிரெனோபில் நகருக்கு அருகில் உள்ள ஒரு தனிமையான மலை வாசஸ்தலத்தில் இந்த கதை தொடங்குகிறது. 

புகழ்பெற்ற நாவலாசிரியரான சான்ட்ரா வொய்டர் (சான்ட்ரா ஹல்லர்) ஒரு மாணவியுடன் நேர்காணலில் இருக்கும்போது அவரது கணவர் சாமுவேல் மலேஸ்கி (சாமுவேல் தீஸ்) மேல்தளத்தில் மிக அதிக சத்தத்துடன் இசையை ஒலிக்கச் செய்கிறார்.

 இதனால் இடையூறு ஏற்பட்டு அந்த நேர்காணல் பாதியிலேயே முடிகிறது. அந்த மாணவி சென்ற பிறகு சான்ட்ராவின் பதினொரு வயது மகன் டேனியல் (மைலோ மசாடோ கிரானர்) தனது வழிகாட்டி நாயான ஸ்னூப்புடன் (மெஸ்ஸி) வெளியே நடைப்பயிற்சி செல்கிறான். 

டேனியல் பார்வை குறைபாடு உடையவன் . அவர்கள் இருவரும் வீடு திரும்பும்போது சாமுவேல் வீட்டு வாசலில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர்.

சாமுவேல் தற்செயலாக மேலிருந்து கீழே விழுந்து இறந்திருக்க வேண்டும் என்று சான்ட்ரா வாதிடுகிறார்.

 ஆனால் அவரது பழைய நண்பரும் வழக்கறிஞருமான வின்சென்ட் ரென்சி (ஸ்வான் அர்லாட்) இது தற்கொலையாக இருக்கலாம் என்று கருதுகிறார். 

இதற்கு முன்னால் சாமுவேல் மன அழுத்த மாத்திரைகளை நிறுத்தியபோது ஆஸ்பிரின் மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதை சான்ட்ரா நினைவுபூர்வமாக குறிப்பிடுகிறார். 

இருப்பினும் காவல்துறையின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றன.

 சாமுவேலின் தலையில் இருந்த காயம் அவர் கீழே விழுவதற்கு முன்பே ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

 மேலும் அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்ட ஒரு ஆடியோ பதிவும் ஆதாரமாக கிடைக்கிறது. 

டேனியல் சொல்லும் வாக்குமூலங்களும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் சான்ட்ரா மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு அவர் நீதிமன்றக் காவலுக்கு உள்ளாக்கப்படுகிறார்.

ஓராண்டுக்குப் பிறகு இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் தொடங்குகிறது. 

அரசு தரப்பு வழக்கறிஞர் (ஆண்டோயின் ரெய்னார்ட்ஸ்) சான்ட்ரா தனது கணவரை ஒரு கனமான பொருளால் தாக்கி மேலிருந்து தள்ளிவிட்டதாக வாதிடுகிறார்.

 ஆனால் சான்ட்ராவின் வழக்கறிஞரோ சாமுவேல் ஜன்னல் வழியாக விழுந்தபோது கீழே இருந்த ஒரு கொட்டகையில் தலை மோதி காயமடைந்ததாக கூறுகிறார்.

இந்த திரைப்படத்தில் வின்சென்ட் ரென்சி (ஸ்வான் அர்லாட்) வெறும் வழக்கறிஞராக மட்டுமல்லாமல் சான்ட்ராவின் பழைய நண்பராகவும் மிக முக்கியமான கதாபாத்திரமாகச் செயல்படுகிறார். 

சான்ட்ரா ஒரு இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கும்போது அவருக்கு முதலில் சட்ட ரீதியாகவும் மன ரீதியாகவும் தோள் கொடுப்பவர் இவர்தான். ஆரம்பத்திலிருந்தே சான்ட்ரா மீது ஒரு மென்மையான பிணைப்பை வெளிப்படுத்தும் வின்சென்ட் இந்த மரணம் ஒரு தற்கொலையாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று வாதிடுகிறார். 

சாமுவேல் இதற்கு முன்பே ஆஸ்பிரின் மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற வரலாற்றுத் தரவுகளைத் திரட்டி நீதிமன்றத்தில் சான்ட்ராவிற்குச் சாதகமான வாதங்களை முன்வைப்பதில் அவர் முனைப்பு காட்டுகிறார்.

ஒரு வழக்கறிஞராக அவர் தொழில்முறை சார்ந்த நேர்த்தியுடன் செயல்பட்டாலும் சான்ட்ராவுடனான அவரது பழைய நட்பு பல இடங்களில் வெளிப்படுகிறது. குறிப்பாக சான்ட்ரா தனது அந்தரங்க வாழ்க்கையை நீதிமன்றத்தில் வெளிப்படையாகப் பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது வின்சென்ட் அவருக்கு ஒரு பாதுகாப்பான அரணாகத் திகழ்கிறார். 

அரசு தரப்பு வழக்கறிஞர் சான்ட்ராவின் நாவல்களைக் கொலையுடன் ஒப்பிட்டுப் பேசும்போது அதைத் திறமையாகத் தடுத்து சான்ட்ராவின் படைப்புத் திறனுக்கும் அவரது நிஜ வாழ்க்கைக்கும் இடையே உள்ள இடைவெளியை வின்சென்ட் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

சாமுவேலுக்கும் சான்ட்ராவுக்கும் இடையிலான மோதல்கள் நிறைந்த ஆடியோ பதிவுகள் நீதிமன்றத்தில் ஒலிக்கப்படும்போது வின்சென்ட் ஒரு நண்பராகச் சங்கடப்பட்டாலும் வழக்கறிஞராக அந்தச் சத்தங்களுக்கு வேறு விளக்கங்களை அளித்து சான்ட்ராவைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

 சான்ட்ராவுக்கும் வின்சென்ட்டுக்கும் இடையே ஒரு காலத்தில் இருந்திருக்கக்கூடிய மெல்லிய காதல் அல்லது ஈர்ப்பு போன்ற உணர்வுகளையும் இப்படம் ஆங்காங்கே கோடிட்டுக் காட்டுகிறது. 

இறுதியில் சான்ட்ரா விடுவிக்கப்படுவதற்கு வின்சென்ட் காட்டிய சட்டப் போராட்டமும் அவர் சான்ட்ரா மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையுமே மிக முக்கியமான காரணியாக அமைகிறது.

விசாரணையின்போது சான்ட்ரா மற்றும் சாமுவேல் இடையே இருந்த கசப்பான உறவுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. 

டேனியலுக்கு பார்வை குறைபாடு ஏற்பட சாமுவேலின் கவனக்குறைவே காரணம் என்பதால் சான்ட்ரா அவர் மீது தீராத கோபத்தில் இருந்தது தெரியவருகிறது.

நீதிமன்றத்தில் ஒலிக்கப்பட்ட ஆடியோ பதிவில் சாமுவேல் சான்ட்ரா மீது பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார். 

சான்ட்ரா தனது எழுத்துக்களைத் திருடி நாவல் எழுதியதாகவும் பிறருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் சாமுவேல் குரல் பதிவில் குற்றம் சாட்டுகிறார். 

அந்த வாக்குவாதம் இறுதியில் வன்முறையாக மாறுகிறது. அந்த வன்முறையில் தான் சாமுவேலை அறைந்ததை ஒப்புக்கொள்ளும் சான்ட்ரா மற்ற சத்தங்கள் அனைத்தும் சாமுவேல் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதால் ஏற்பட்டவை என்று கூறுகிறார்.

 சான்ட்ரா ஒரு நாவலாசிரியர் என்பதால் தனது நிஜ வாழ்க்கையில் நடக்கும் மோதல்களையே கதையாக எழுதுபவர் என்றும் ஒரு நாவலில் கணவனைக் கொல்ல நினைக்கும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் என்றும் அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டுகிறார்.

இறுதி வாதங்களுக்கு முன்னால் மகன் டேனியல் மீண்டும் சாட்சியம் அளிக்க விரும்புகிறான்.

 நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் மார்ஜ் பெர்கர் (ஜென்னி பெத்) உதவியுடன் அவன் வீட்டில் தனியாக இருக்க முடிவு செய்கிறான். 

அப்போது ஒரு முக்கியமான உண்மையை அவன் கண்டறிகிறான். முன்பு தனது தந்தை தற்கொலைக்கு முயன்றபோது அவர் வாந்தி எடுத்ததை உண்ட நாய் ஸ்னூப் மயக்கமடைந்ததை அவன் நினைவு கூர்கிறான்.

 இதைச் சரிபார்க்க நாய்க்கு ஆஸ்பிரின் கொடுத்துப் பார்க்கிறான். அப்போது நாய் அதேபோல் மயக்கமடைவது அவனது தந்தை ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதை உறுதிப்படுத்துகிறது.

 உண்மையை எப்படிக் கண்டறிவது என்று மார்ஜிடம் அவன் கேட்கும்போது எது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை நீயே முடிவு செய் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் டேனியல் தனது தந்தை ஒருமுறை தன்னிடம் பேசிய விஷயத்தைக் கூறுகிறான். ஒருநாள் நாம் நேசிக்கும் நபர்கள் இறந்துவிடுவார்கள் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று சாமுவேல் கூறியதை டேனியல் தனது தந்தையின் தற்கொலை எண்ணமாக உணர்கிறான்.

 தனது தந்தை கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவன் உறுதியாகக் கூறுகிறான்.

 இந்த சாட்சியத்தின் அடிப்படையில் சான்ட்ரா குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறார்.

 வீட்டிற்குத் திரும்பும் சான்ட்ரா மற்றும் டேனியல் இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொள்கின்றனர்.

 இறுதியில் சான்ட்ரா தனது கணவரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு நாய் ஸ்னூப்புடன் உறங்கச் செல்கையில் படம்  நிறைவடைகிறது.

அனாடமி ஆப் எ ஃபால் திரைப்படம் ஒரு மரணத்தை ஆராய்வதன் வழியாக மனித உறவுகளின் ஆழமான மற்றும் சிக்கலான பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

ஒரு உண்மை என்பது புறநிலை ஆதாரங்களை மட்டும் சார்ந்தது அல்ல அது பார்ப்பவர்களின் பார்வையைப் பொறுத்து எப்படி மாறுகிறது என்பதை இப்படம் முதன்மையான செய்தியாகச் சொல்கிறது.

 நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் ஆடியோ பதிவுகள் மற்றும் சாட்சியங்கள் ஒரு தம்பதியினரின் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை மட்டுமே காட்டுகின்றன ஆனால் அந்த ஒரு பகுதியை வைத்துக்கொண்டு ஒருவரது முழு குணாதிசயத்தையும் தீர்மானிக்க முடியாது என்பதை இது உணர்த்துகிறது.

வெற்றிகரமான ஒரு பெண்ணின் ஆளுமை சமூகத்தால் எப்படி சந்தேகிக்கப்படுகிறது என்பதையும் இந்தத் திரைப்படம் நுணுக்கமாக விவரிக்கிறது. 

சான்ட்ரா தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதானமாகச் செயல்படுவது அவர் மீதான குற்றச்சாட்டை வலுவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

 இதன் மூலம் சமூகம் ஒரு பெண்ணிடமிருந்து எதிர்பார்க்கும் குறிப்பிட்ட நடத்தை முறைகளை இப்படம் கேள்வி கேட்கிறது. 

மேலும் கணவன் மனைவிக்கு இடையிலான பொறாமை மற்றுமொருவர் மீது சுமத்தப்படும் குற்ற உணர்ச்சி ஆகியவை ஒரு அழகான உறவை எப்படி மெல்ல மெல்லச் சிதைக்கும் என்பதையும் இது காட்டுகிறது.

இப்படத்தின் மிக முக்கியமான கட்டம் டேனியலின் மனமாற்றம் ஆகும். முழுமையான உண்மை என்னவென்று தெரியாத ஒரு குழப்பமான சூழலில் நாம் எதை உண்மையாக நம்ப வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்பதை அவனது கதாபாத்திரம் உணர்த்துகிறது.

 நீதி என்பது வெறும் சட்ட விதிகளால் மட்டும் வழங்கப்படுவதில்லை அது சில நேரங்களில் ஒரு தனிமனிதன் எடுக்கும் தார்மீக முடிவையும் சார்ந்து இருக்கிறது. 

இறுதியில் சான்ட்ரா விடுவிக்கப்பட்டாலும் அவர் இழந்த அமைதியும் அவர் சந்தித்த மனப்போராட்டமும் ஒரு வெற்றியைப் போன்ற உணர்வைத் தருவதில்லை. இது வாழ்க்கையின் கசப்பான யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (220) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)